2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

Income Tax rates for Mutual Fund Investments – Individuals – FY 2022-23 (AY 2023-24)

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாட்டின் பட்ஜெட் தாக்கலில் வருமான வரி விகிதங்கள் சார்ந்த மாற்றங்கள் நிறைய சொல்லப்பட்டிருந்தது. நடப்பு 2022-23ம் நிதியாண்டுக்கான வரி விகிதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds) மூலம் கிடைக்கப்பெறும் வருவாய்க்கான வரி விகிதங்களும் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பொறுத்தவரை உள்ளூர் முதலீட்டாளர்கள்(Resident) மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) என வரி விதிப்பு முறை தனித்தனியாக அமைந்துள்ளது. திட்டங்களின் அடிப்படையில் காணும் போது பங்கு சார்ந்த திட்டங்களுக்கும், பங்கு சாராத திட்டங்கள் என வரி விதிப்பு முறையும் வேறுபட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான, அதாவது 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி விகிதங்கள் குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) மற்றும் நீண்டகால மூலதன ஆதாயம்(Long term Capital Gains) என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இங்கே சொல்லப்படும் காலம்(Short or long term) என்பது வருமான வரி விகிதங்களுக்கான கணக்கீட்டு காலம் மட்டுமே, அவை ஒரு குறிப்பிட்ட திட்டங்களில் மேற்கொள்ளப்படும் காலமல்ல. எனவே நாம் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்யவிருந்தாலும், மூலதன ஆதாய  வரி என்பது நாம் நம் முதலீட்டை விற்பனை செய்யும் காலத்தினை பொறுத்து வரி விகிதங்கள் மாறுபடும்.

பொதுவாக பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் நாம் அதனை விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், ஒரு வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் சொல்லப்பட்டு வரி விதிக்கப்படும். இதுவே பங்கு சாராத திட்டங்களுக்கு(Debt Mutual Funds or other than Equity oriented schemes) முதலீடு செய்த மூன்று வருடத்திற்குள் விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், மூன்று வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும்.

எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்கையில் ஒவ்வொரு மாதாந்திர அல்லது வாராந்திர முதலீடும், வரி விகிதத்தை பொறுத்தவரை தனித்தனி முதலீடாக கருதப்படும். உதாரணமாக ஜனவரி மாதத்தில் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, சொல்லப்பட்ட முதலீட்டு தேதியிலிருந்து(ஜனவரி 5) கணக்கிடப்படும். இதுவே பிப்ரவரி மாதம் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு, தனி முதலீடாக கருதப்பட்டு அவை பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, காலத்தை சார்ந்து வரி விகிதங்கள் மாறுபடும். இந்த குழப்பங்கள் பெரும்பாலும் வரி சேமிப்பு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில்(ELSS) முதலீடு செய்வோருக்கு ஏற்படும்.

 ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை மட்டும்(Lumpsum investment) செய்யப்படும் முதலீடாக இருக்கும் நிலையில், முதலீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து விற்பனை தேதியை கணக்கிடுகையில் சிரமம் இருக்காது. எஸ்.ஐ.பி. முறையில் செய்யப்படும் முதலீட்டிற்கு மட்டும் இந்த கவனம் தேவை. எனினும், வரி கணக்கீட்டினை பொறுத்தமட்டில் இன்றைய நிலையில் பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்த கணக்கீட்டு அறிக்கையை முதலீட்டாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. எனவே வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த அறிக்கையை பயன்படுத்தி கொள்ளலாம்.

2018ம் ஆண்டுக்கு முன்பிருந்து, நீங்கள் பங்குகள் அல்லது பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகிறீர்களா ? (உங்களுக்கான பதிவு தான் இது)

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15 சதவீதமும், நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதமும் விதிக்கப்படும். நீண்டகால மூலதன ஆதாயத்தில் கிடைக்கப்பெறும் முதல் ரூ. 1 லட்சத்திற்கு வரி எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாயத்திற்கு மட்டுமே 10 சதவீத வரியாகும்.

மியூச்சுவல் பண்ட் – தனிநபர் வரி விகிதங்கள் – நிதியாண்டு 2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)

முதலீட்டு பிரிவு

தனிநபர் – உள்ளூர் முதலீட்டாளர் 

வெளிநாடு வாழ் இந்தியர் 

பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

15%

15%

நீண்டகால மூலதன ஆதாயம் 

10%*

10%*

பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

நீண்டகால மூலதன ஆதாயம் 

பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20%

10% – (பட்டியலிடப்படாத)

20% – (பட்டியலிடப்பட்ட மற்றும் பணவீக்க விகித சரிக்கட்டலுடன்)

வர்த்தக மதுரை | www.varthagamadurai.com

* ஒரு லட்சம் ரூபாய் வரையிலான(குறிப்பிட்ட நிதியாண்டில்) லாபத்திற்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை. ஒரு லட்சத்திற்கும் மேலான லாபத்திற்கு மட்டுமே 10 சதவீத வரி. 

இதுவே பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய  வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பின் அடிப்படையில்(Individual’s Income Tax Slab) அமைகிறது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக, பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு (Indexation Benefit) 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பணவீக்க விகிதத்திற்கான சரிக்கட்டல் மதிப்பை(Cost Inflation Index) ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.  

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும் (ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான தொகைக்கு) சொல்லப்பட்டுள்ளது. பங்கு சாராத திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பு அடிப்படையில் உள்ளது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதம் (பட்டியலிடப்படாத – Unlisted, No indexation benefit) மற்றும் 20 சதவீதமாக (Listed, With Indexation Benefit) சொல்லப்பட்டுள்ளது. 

முதலீட்டில் கிடைக்கப்பெறும் லாபத்திற்கு எவ்வளவு தொகையை வரியாக செலுத்த வேண்டுமென்பதை வரி ஆலோசகர் அல்லது பட்டய கணக்காளர்(Chartered Accountant) ஒருவரின் துணையுடன் கணக்கிடுவது நல்லது. 

கவனிக்க:

  • 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாத பட்ஜெட் அறிக்கையில், பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களின் வரி முறையில் சில மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் செய்துள்ளது. இந்த புதிய முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி, 2023 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.      
  • பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் எனும் போது, சிறிய பங்களிப்பில் பங்குகளை கொண்டிருந்தாலும் அவ்வகையான திட்டங்கள்  வரிச்சட்டத்தில் பங்கு சாராத திட்டமாகவே சொல்லப்படுகிறது. வரும் ஏப்ரல் 1, 2023 முதல் பங்கு சாராத திட்டங்களில், பங்குகளின் பங்களிப்பு 35 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், குறுகிய மற்றும் நீண்டகால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரம்பில் அமையும் என சொல்லப்பட்டுள்ளது.
  • இதுவே அத்திட்டத்தில் பங்குகளின் பங்களிப்பு 36 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை இருக்கும் பட்சத்தில், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பிலும், நீண்டகால மூலதன ஆதாய வரி என்பது பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20 சதவீதமாகவும் கூறப்பட்டுள்ளது. 
  • 65 சதவீதத்திற்கும் மேல் பங்குகளின் பங்களிப்பை கொண்டிருக்கும் திட்டங்கள், பங்கு சார்ந்த திட்டங்களின் வரி விதிப்பு மற்றும் முதலீட்டு கால முறையை(Holding period) போலவே கொண்டிருக்கும். அதாவது ஒரு வருடத்திற்குள்ளான குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும்(ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான) இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

Jyothy Labs Limited – Fundamental Analysis – Stocks

கேரள மாநிலத்தை சேர்ந்த திரு. எம்.பி. ராமச்சந்திரன் அவர்களால், கேரளாவை தலைமையிடமாக கொண்டு 1983ம் ஆண்டில் துவங்கப்பட்டது தான் ஜோதி லேப்ஸ் நிறுவனம் (Jyothy Laboratories). எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையில் தொழில் புரிந்து வரும் இந்நிறுவனம் ஆரம்பநிலையில் ஒரே ஒரு பொருளை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தது. இன்று ஆண்டுக்கு பில்லியன் ரூபாய் மதிப்பிலான வருவாயை கொண்டும், சுமார் 6,900 கோடி ரூபாய் சந்தை மதிப்பையும் கொண்ட நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

வீட்டு பராமரிப்பு, துணிமணிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பிரபல சொட்டு நீலமான, ‘உஜாலா’ உற்பத்திக்காக 1992ம் ஆண்டு சென்னையில் ஒரு உற்பத்தி ஆலையை துவக்கியது. துணிமணி பராமரிப்பில், ‘ Ujala, Henko, Mr.White மற்றும் More Light’ இதன் முக்கிய பிராண்டுகள். நாட்டின் துணிமணி பராமரிப்புக்கான பொருட்கள் பிரிவில், 81 சதவீத சந்தை மதிப்பை இந்நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் துணிமணி பராமரிப்பு பிரிவு மட்டும் 37 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில்(Dish Wash) இதன் ஒட்டுமொத்த வருவாயில் 38 சதவீதத்தையும், தனிநபர் பராமரிப்பு பிரிவில் 10 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில், ‘Exo, Prill’ இதன் முக்கிய பிராண்டுகள். இந்த துறையில் 11 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. இந்த பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் ஜோதி லேப்ஸ் வலம் வருகிறது.

தனிநபர் பராமரிப்பு பிரிவில், ‘Margo, Neem Active மற்றும் Fa’ இதன் பிரபல பிராண்டு பொருட்கள். வீட்டு பூச்சிக்கொல்லி சார்ந்த பொருட்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த பிரிவில் 21 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் வைத்துள்ளது. ‘Maxo கொசுவர்த்தி, T-Shine Cleaner, Maya ஊதுபத்திகள்’ ஆகியவை இதன் பிராண்டுகளாக உள்ளன. 

நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சேர, சரக்கு மேலாண்மை அமைப்பையும்(Freight Management System) இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நான்காம் தொழில் புரட்சியின் கீழ் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஜோதி லேப்ஸ் முதலீடு செய்துள்ளது. 

2007ம் ஆண்டு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜோதி லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டது. தற்போது நிறுவனத்தின் தலைமையிடமாக மும்பை உள்ளது. இத்துறையில் புதிதாக நுழையும் மற்றும் ஏற்கனவே சந்தையில் சிறந்து விளங்கும் துறை சார் நிறுவனங்களை இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2011ம் ஆண்டில் கென்கேல் இந்தியா(Henkel India) நிறுவனத்தை ஜோதி லேப்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.     

ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பிராண்டு பொருட்களுக்கு, பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், திரைப்பட துறையில் உள்ள நடிகைகள் ஷில்பா  ஷெட்டி மற்றும் மாதுரி தீக்சித் ஆகியோர் விளம்பர தூதர்களாக இருந்துள்ளனர். நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ரா. லட்சுமி நாராயணன் அவர்களும், நிர்வாக இயக்குனராக எம்.ஆர். ஜோதி அவர்களும் உள்ளனர். நாட்டின் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் இன்றளவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,196 கோடியாகவும், இயக்க லாபம்(Operating Profit) 248 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் சராசரியாக வருடத்திற்கு 12-15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 159 கோடி. செப்டம்பர் 2022 காலாண்டின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.1,428 கோடி. 

ஜோதி லேப்ஸ் நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக பங்குச்சந்தையில் உள்ளது. உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களிடம் 17 சதவீத பங்குகளும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடம் 13 சதவீத பங்குகளும் உள்ளது. கடன் தன்மை குறைவாகவும், பங்கு மூலதனம் மீதான வருவாய் 14 சதவீதமாக(5 வருட காலத்தில்) இருப்பதும் சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது.     

ஜோதி லேப்ஸ் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறைந்தபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.134 ஆகவும், அதிகபட்ச விலையாக 223 ரூபாய் வரையிலும் வர்த்தகமாகியுள்ளது. 2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு துவக்கத்தில் இந்த பங்கின் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு மற்றும் பணப்பாய்வு(Discounted Cash Flow) முறையில் மதிப்பிடும் போது, ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ. 130-160 என்ற சராசரியை பெறும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி –  4.4 சதவீதம்

2022ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி –  4.4 சதவீதம் 

India’s GDP growth of 4.4 Percent in Q4 (December Quarter) 2022

2022ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில்(Q3FY23) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் முதலீடு 8.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இவற்றில் தனியார் முதலீட்டு செலவினம் 61.6 சதவீதமாக இருக்கிறது. இது 2021-22ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டினை காட்டிலும் குறைவே. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தால், வங்கிகளின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தனியார் பங்களிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் அரசு தரப்பில் இம்முறையும் முதலீட்டு செலவினம் பெரிதாக இல்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் அரசின் பங்களிப்பு அதிகமாக இருந்தததை அடுத்து, கடந்த சில காலாண்டுகளாக அதனை குறைத்து வந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி 11.3 சதவீதமும், இறக்குமதி 10.9 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும், இதற்கு முந்தைய காலாண்டில் ஏற்றுமதி 12.3 சதவீதமாகவும், இறக்குமதி 25.9 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றிருந்தது.

உற்பத்தி துறை இரண்டாவது முறையாக இறக்கத்திலும், நிதி மற்றும் வீட்டுமனை துறை ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்த போதிலும், சற்று சுணக்கமாகவே காணப்பட்டுள்ளது. இது போன்ற மந்தநிலை போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துறையிலும் ஏற்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகள் ஏற்றம் பெற்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

நாட்டின் நுகர்வோர் செலவினம்(Consumer spending) டிசம்பர் 2022 காலாண்டில் ரூ. 24.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) நடப்பு  ஜனவரி மாத முடிவில் 11.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது பட்ஜெட் மதிப்பில் 68 சதவீதமாகும். 2022-23ம் நிதியாண்டுக்கான நாட்டின் நிதி பற்றாக்குறை இலக்கு 17.55 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.52 சதவீதம்

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.52 சதவீதம் 

India’s CPI Inflation rose to 6.52 Percent in the month of January 2023

கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் குறைந்து வந்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(Consumer Price Index – CPI) நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் 6.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும் சொல்லப்பட்ட பணவீக்க விகித அதிகரிப்பு கடந்த ஏப்ரல் 2022ல் (7.79%) காணப்பட்ட அளவை விட குறைவே. 2022ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்க விகிதம் 6.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் சில்லரை விலை அல்லது நுகர்வோர் விலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக இருக்கிறது. போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.59 சதவீத பங்களிப்பையும், சுகாதாரம் 5.89 சதவீதமும், கல்வி 4.46 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. வீட்டுமனை துறை 10.07 சதவீதத்தையும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதத்தையும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 6.53 சதவீத பங்களிப்பையும் நுகர்வோர் விலை பணவீக்கத்தில் கொண்டுள்ளது.

ஜனவரி 2022ம் மாதத்தில் உணவுப்பொருட்களின் விலை 5.94 சதவீதமாக அதிகரித்துள்ளதன் காரணமாக சொல்லப்பட்ட மாதத்தின் நுகர்வோர் விலை பணவீக்கமும் உயர்ந்துள்ளது. இது போல வீட்டுமனை 4.62 சதவீதமும், புகையிலை சார்ந்த பொருட்கள் 3.07 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஒளி மற்றும் எரிபொருட்கள், துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையில் பெருமளவில் மாற்றமில்லாமல் சற்று குறைந்துள்ளது.

சொல்லப்பட்ட ஜனவரி மாத பணவீக்க விகிதம், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவினை காட்டிலும் சற்று உயர்ந்துள்ளது. இதே மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவாக குறைந்துள்ளது. ஜனவரி மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.14 சதவீதமாக இருந்துள்ளது. இது கிராமப்புறங்களில் 6.48 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.55 சதவீதமாகவும் இருக்கிறது.

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம், மாநிலங்கள் வாரியாக காணும் போது அரியானா, ராஜஸ்தான், ஜம்மு-காஸ்மீர், டெல்லி, அசாம், திரிபுரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக உள்ளது. குறைவான அளவாக மத்திய பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஊக வணிகத்தில் நட்டமடையும் இந்திய பங்கு வர்த்தகர்கள் – செபியின் 2022ம் ஆண்டின் சிறப்பு அறிக்கை

ஊக வணிகத்தில் நட்டமடையும் இந்திய பங்கு வர்த்தகர்கள் – செபியின் 2022ம் ஆண்டின் சிறப்பு அறிக்கை 

Individual Traders engaged in Equity F&O Segment – SEBI Analysis Report 

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(Securities and Exchange Board of India) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மத்திய பொருளாதார மற்றும் கொள்கை பகுப்பாய்வு துறையின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஊக வணிக(Futures and Options) பிரிவில் 2022ம் நிதியாண்டில் தனிநபர் வர்த்தகர்கள் அடைந்த லாப-நட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியிருந்தது.

2022ம் நிதியாண்டில் சுமார் 45 லட்சம் தனிநபர் வர்த்தகர்கள் இந்திய பங்குச்சந்தை ஊக வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது 2019ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் 500 சதவீத வளர்ச்சி என்றும், 30 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 36 சதவீதமாக இருந்துள்ளது.

வர்த்தகத்தில் ஈடுபட்ட தனிநபர் பிரிவில் 80 சதவீதத்திற்கு மேல் ஆண்கள் என்றும், ஊக வணிகத்தில் ஈடுபடும் 10 நபர்களில் 9 பேர் நட்டமடைவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதாவது ஊக வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களில் 89 சதவீதம் பேர் தங்களது முதலீட்டை இழந்துள்ளனர். இவர்களது முதலீட்டு இழப்பு சராசரியாக 50,000 ரூபாய் வரை இருந்துள்ளது. 

2022ம் நிதியாண்டில் ஊக வணிகத்தில் லாபமீட்டியவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக இருந்த போதிலும், அவர்களது அதிகபட்ச சராசரி லாபம் ரூ.1.5 லட்சம் வரை இருந்துள்ளது. ஊக வணிகத்தில் Index Options பிரிவில் 89 சதவீதம் பேரும், Index Futures பிரிவில் 11 சதவீதம் பேரும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வயது பெரும்பாலும் 20-30 வயது வரம்பில் இருந்துள்ளது.

அதே வேளையில் Index Options பிரிவில் ஈடுபட்டிருந்த 89 சதவீதம் பேரில் 82 சதவீதம் பேர் தங்களது முதலீட்டை இழந்துள்ளனர். இந்த பிரிவில் வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டை ஒப்பிடும் போது 2022ம் ஆண்டு எட்டு மடங்கு உயர்ந்துள்ளது. Index Futures பிரிவில் ஈடுபட்டிருந்தவர்களில் 74 சதவீதம் பேரும்(சராசரி இழப்பு: ரூ. 1 லட்சம்), Stock Futures பிரிவில் 67 சதவீதம் பேரும்(சராசரி இழப்பு: ரூ. 2.1 லட்சம்) முதலீட்டில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த பிரிவில் லாபம் ஈட்டியவர்களின் சராசரி தொகை ரூ. 2.4 லட்சமாகும். இவர்களும் முதல் 5 சதவீத நிலையில் உள்ள Active Traders ஆவர்.

ஊக வணிகத்தில் லாபம் ஈட்டியவர்களில் பெரும்பாலானோர் தங்களது லாபத்தில் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணங்களுக்காக(Transaction cost) செலவளித்துள்ளனர். சொல்லப்பட்ட தனிநபர் வர்த்தகர்களில் இந்து கூட்டு குடும்பம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் அடங்குவர். ஊக வணிகத்தில் 2022ம் ஆண்டில் ஈடுபட்ட 45 லட்சம் வர்த்தகர்களில் பெருநகரங்களை சாராதோர்(Except Tier I & Tier II) எண்ணிக்கை மட்டும் 81 சதவீதமாக உள்ளது. திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் நாட்டின் முன்னிலையில் உள்ள முதல் 10 பங்கு தரகர்களிடம்(Brokers) இருந்து என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

How is the Sum assured(HLV) calculated for Term Insurance Plans ?

நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட ஆயுள் காப்பீட்டு(Life Insurance) நிறுவனங்கள் தற்போது உள்ளன. எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் தவிர அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களாகும். இன்றைய பொருளாதார வாழ்வில் காப்பீட்டின் தேவை குறித்து பலர் புரிந்து கொண்டிருந்தாலும், 2022ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை படி, 100ல் மூன்று பேர் மட்டுமே காப்பீட்டை எடுத்துள்ளனர். இந்த மூன்று பேர்களும் தங்களது வருமானத்திற்கு ஏற்ப(Income Replacement) காப்பீட்டு அளவை எடுத்துள்ளார்களா என கேட்டால், அது தான் இல்லை.

நம்மில் பெரும்பாலோர் காப்பீட்டு திட்டத்தை சேமிப்பாக கருதுவதால் தான், தங்களது வருமானத்தை போல பல மடங்குகளில் காப்பீட்டு அளவை தேர்ந்தெடுப்பதில்லை. குறைந்த தொகையில்(Premium) அதிக காப்பீட்டு அளவை ஏற்படுத்த இன்றைய நிலையில் டேர்ம் காப்பீட்டு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் அமையவில்லை எனலாம். 

காப்பீடு என்பது ஒரு சேமிப்பல்ல, அது ஒரு செலவு. நமது வாகனத்திற்கு, வீட்டிற்கு, தொழிலுக்கு எடுக்கப்படும் காப்பீட்டை போல தான் டேர்ம் காப்பீடு திட்டமும். “நான் கட்டிய ப்ரீமியத்தொகைக்கு முடிவில் என்ன கொடுப்பீர்கள் என டேர்ம் காப்பீட்டை நீங்கள் கேட்டால், நீங்கள் இல்லாத நிலையில் உங்களது வருமானத்திற்கு மாற்றாக உங்களது குடும்பத்தை பொருளாதார ரீதியாக நான் பாதுகாப்பேன்” என்பது தான்.

டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance) நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதில் கிடைக்கப்பெறுவதில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு டேர்ம் காப்பீடு திட்டத்தின் ப்ரீமியத்தொகையும் அதிகரித்து விட்டது, டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கான நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டது. இருப்பினும், அதன் தேவையை நாம் புரிந்து கொண்டு நமது வருமானத்திற்கு ஏற்றாற் போல, தேவையான காப்பீட்டு அளவை பெறுவது அவசியம். 

சமீபத்திய தரவின் படி, ஆயுள் காப்பீட்டை பெறுவோரில் மூன்றில் ஒருவர் மட்டுமே டேர்ம் காப்பீட்டு திட்டத்தை எடுத்துள்ளனர். டேர்ம் காப்பீடு திட்டத்தை எந்தளவில் பெறலாம் என்பதை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்(IRDAI) ஒப்புதல் படி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளது. பொதுவாக நமது வயது மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இது அமையும்.

வருமானத்திற்கான மாற்று முறை – Human Life Value(HLV):

ஒரு தனிநபரின் எதிர்கால வருவாயின் தற்போதைய மதிப்பு தான் HLV(Human Life Value). எதிர்காலத்தில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் மற்றும் அவர் இல்லாத காலத்தில் தனது குடும்பத்தில் உள்ளோரை பொருளாதாரம் சார்ந்து பாதுகாக்க தேவையான தொகையை இன்றைய மதிப்பில் கணக்கிட வேண்டும். 

HLV = (1 + Investment rate) / (1 + Increment or Income growth rate) – 1

Alternative and Simple in terms, HLV = (Annual Income of an Individual) / (ROI in the Market)

*ROI – Rate of Interest 

இதனை சுருக்கமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒருவரின் தற்போதைய ஆண்டு வருமானத்தின் மடங்குகளில் சொல்லப்படுகிறது. இதனை டேர்ம் காப்பீட்டை வழங்கும் நிறுவனங்களும் தங்களது தரவு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மடங்குகளின் எண்ணிக்கை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம். ஆனால் பெரும்பாலும் அவை ஒத்த அளவில் தான் இருந்துள்ளது. 

டேர்ம் காப்பீட்டு அளவை பெற தேவையான இரண்டு முக்கிய காரணிகள்:

  • ஒருவரின் வயது 
  • ஆண்டு வருமானம் (சில நேரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி வருமானம்)
  • இதர காரணிகள் – கடனையும் சேர்த்து ஆகும் ஆண்டு செலவு, முன்னர் எடுத்திருக்கும் காப்பீட்டின் அளவு(Existing Life Cover)

உதாரணத்திற்கு 30 வயது நிரம்பிய குமார் என்பவர் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாயை வருமானமாக கொண்டுள்ளார். 55 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பும் குமார், ஓய்வுக்கு முன்னரே தான் இறந்து விட்டால் தனது வருமானத்திற்கு நிகரான காப்பீட்டு அளவை தனது குடும்பத்திற்கு அளிக்க விரும்புகிறார். அப்படியெனில் தோராயமாக அவர் எடுத்து கொள்ள வேண்டிய டேர்ம் காப்பீட்டின் அளவு 1.15 கோடி ரூபாய்(Sum Assured or Coverage).

இங்கே நாம் குமாருக்கான கடன் தொகை எவ்வளவு, தனது குடும்ப உறுப்பினர்களின் நிதி இலக்குகளுக்கான எதிர்கால தொகை எவ்வளவு என்பதனை கணக்கில் கொள்ளவில்லை. இதனை கணக்கில் எடுக்கும் போது, காப்பீட்டு அளவு அதிகரிக்கலாம். 

HLV முறையை கொண்டு நாம் கணக்கிட்டாலும், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கென ஒருவருக்கு அதிகபட்சம் அனுமதிக்கப்பட வேண்டிய தொகையை கூறியுள்ளது. இந்த தொகை தனிநபர் ஒருவரின் வயது மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல மாறுபடும்.

டேர்ம் காப்பீட்டுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு (மடங்குகளில்):

வயது வரம்பு  மடங்குகள்* 
18 முதல் 35 வயது வரை  25
36 முதல் 40 வயது வரை  20
41 முதல் 45 வயது வரை  15
46 முதல் 50 வயது வரை  12
51 முதல் 55 வயது வரை  10
56 முதல் 65 வயது வரை  5

 

(* ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மாறுபடலாம்)

மேலே உள்ள தரவின் படி, குமாருக்கு அதிகபட்சமாக அவரது ஆண்டு வருமானத்தை போல, 25 மடங்குகளின் அளவில் காப்பீடு கிடைக்க கூடும். ( ரூ. 8 லட்சம் X 25 மடங்குகள் = 2 கோடி ரூபாய்)

கவனிக்க:

  • டேர்ம் காப்பீட்டை பெற இன்று பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தனிநபர் ஒருவரின் வருமான ஆதாரத்தை அவசியமான ஒன்றாக பார்க்கிறது. இதற்கான முக்கிய ஆவணமாக கடந்த சில வருடங்களின் வருமான வரி தாக்கல்(Income Tax Returns) ஆவணங்கள், கடந்த சில மாதங்களின் சம்பள விவரங்கள்(Pay Slips) மற்றும் கடந்த ஒரு வருடத்திற்கான வங்கி அறிக்கை(Bank Statement).
  • புகைப்பிடித்தல் / மதுப்பழக்கம் இருக்கும் நிலையில் அதற்கான ப்ரீமியத்தொகை அதிகரிக்கலாம். சில சமயங்களில் காப்பீட்டை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
  • டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அவசியமாகிறது. உடல்நலத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் ப்ரீமியத்தொகை அதிகரிக்கப்படலாம் அல்லது காப்பீடு நிராகரிக்கப்படலாம்.
  • ஏற்கனவே வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டேர்ம் காப்பீட்டை பெற்றிருந்தாலோ அல்லது காப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்தாலோ, தற்போதைய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பரிசீலனைக்கு பின்பு தான் காப்பீடு வழங்கலாமா, வேண்டாமா என்பதனை முடிவெடுக்கும்.
  • இன்று மாத சம்பளதாரர்களை விட, பெரும்பாலும் சுய தொழில் செய்பவர்களுக்கே டேர்ம் காப்பீடு நிராகரிக்கப்படுகிறது. இதற்கான காரணமாக சொல்லப்படுவது வருமானத்தின் விவரங்களை சரியாக பராமரிக்காமை அல்லது அதிக வருவாய் இருந்தும் முறையாக வருமான வரி தாக்கல் செய்யாதிருப்பது. 
  • டேர்ம் காப்பீட்டை இளவயதில்(சம்பாதிக்க ஆரம்பித்த சில வருடங்களில்) எடுக்கும் போது, அதற்கான ப்ரீமியத்தொகையும் அதிகரிக்கும். சரியான காப்பீட்டு அளவை சரியான நேரத்தில் அதிகரித்து கொள்வது அவசியம். தாமதமாக எடுக்கும் போது, உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் நமக்கான காப்பீட்டு அளவு கிடைக்காமல் போகலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ? 

Global Market Indices in the year 2022 – Returns %

2022ம் ஆண்டில் பல்வகை முதலீடுகளின்(Asset Classes) வளர்ச்சி விகிதத்தை காணும் போது, உலகளவில் அதிகபட்சமாக தங்கத்தின் மீதான முதலீடு 11 சதவீதமும், பெரு நிறுவனங்களின் பங்கு முதலீடு(Large Cap Equity) 3 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.5 சதவீதமும், தனியார் கடன் பத்திரங்கள் 2.7 சதவீதமும், அரசு பத்திரங்கள் 2.3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மாறாக நடுத்தர மற்றும் குறு நிறுவனங்களின் பங்கு முதலீடு இறக்கத்தை சந்தித்துள்ளன.

கடந்த பத்து வருட காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீடு 2015ம் ஆண்டை தவிர்த்து(-4.1 %) பார்க்கையில், அனைத்து வருடமும் ஏற்றத்தில் தான் முடிந்துள்ளன. தங்கத்தின் மீதான முதலீடு 2019 மற்றும் 2020ம் வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளன. உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் அதிகரித்துள்ளது.

பொதுவாக பொருளாதார மந்தநிலை காணப்படும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், மீண்டெழும் பொருளாதாரத்தில் தங்கத்தின் வருவாய் குறைவதும் இயல்பே. பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, பங்கு முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான ஏற்றம் காணப்படும்.   

2022ம் வருடத்தில் வளர்ந்த நாடுகளின் பங்குச்சந்தை முதலீடு பெரும்பாலும் இறக்கத்தையே சந்தித்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் முடிவில் அமெரிக்காவின் நாஸ்டாக்(Nasdaq) குறியீடு 33 சதவீதம் சரிந்துள்ளது. இந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப குறியீடு(FAANG) மட்டும் 40 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளது. ஜெர்மனியின் டாக்ஸ்(DAX) 12 சதவீதமும், ஜப்பானின் நிக்கி(Nikkei) 9 சதவீதமும், ஐரோப்பாவின் ஸ்டாக்ஸ்(Stoxx) 11 சதவீதமும் இறக்கத்தை சந்தித்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஐக்கிய ராச்சியத்தின் புட்சி(FTSE) குறியீடு மட்டும் ஒரு சதவீதம் என்ற அளவில் 2022ம் ஆண்டு ஏற்றம் பெற்றுள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் குறியீடுகள் 14 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்துள்ளன. அதிகபட்சமாக ரஷ்ய நாட்டின் பங்குச்சந்தை குறியீடு 39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தோனேசிய மற்றும் சிங்கப்பூர் நாட்டின் பங்குச்சந்தை குறியீடுகள் 4 சதவீதம் என்ற அளவில் ஏற்றமடைந்துள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்திய பங்குச்சந்தை மட்டுமே 5 சதவீதம் என்ற அளவில் ஏற்றம் பெற்று முதலிடத்தில் உள்ளது. நிப்டி (Nifty) தேசிய பங்குச்சந்தையில் உலோகத்துறை, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்(CPSE) மற்றும் தனியார் வங்கிகளின் குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேல் வருவாயை தந்துள்ளது. அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் குறியீடு 70 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

மாறாக, தகவல் தொழில்நுட்ப துறை 26 சதவீதமும், மருந்துத்துறை(Pharma) 11 சதவீதமும், ரியல் எஸ்டேட் குறியீடு 11 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களிடையே அதிகமாக புழங்கும் எப்.எம்.சி.ஜி.(FMCG) துறை 17 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2022ம் ஆண்டில் 52 சதவீதமும், கோல் இந்தியா 54 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ ஆகிய பங்குகளின் விலை 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளன. 

வரக்கூடிய காலம் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான நிலையாக இருப்பதால், பங்கு முதலீட்டில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும். நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாள தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

How is the Inflation and Interest rate playing in the Real Economy ? 

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட உலகளவிலான ஊரடங்கிற்கு பின்பு, உலக பொருளாதாரம் இந்த சுழற்சி முறையில்(Life Cycle) தான் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்க, அதனை அப்படியே பின்பற்றி வருகிறது உலக பொருளாதாரமும். கூடுதலாக உக்ரைன்-ரஷ்ய போர் மற்றும் சீன-தைவான் எல்லை பதற்றமும் அடங்கும். 

கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு(Economic Stimulus) அன்றைய நிலையை களைய பெரிதும் உதவியது. இருப்பினும் அதன் காரணமாக பணவீக்க விகிதமும் கடந்த சில காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதன் விளைவு தேவை-உற்பத்திக்குமான இடைவெளியில் தான் உள்ளது. இந்த இடைவெளியே பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு எடுத்து செல்லும். 

உலக பங்குச்சந்தைகளும், அரசு கடன் பத்திர சந்தைகளும் வரவிருக்கும் காலத்தில் ஆட்டம்(High Volatility) காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் நவீன பொருளாதாரத்தில் இது ஒரு சுழற்சி முறையே(Life Cycle). பணவீக்கம் உயர்ந்தால் அதனை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியின் வேலை தான். அதிகரித்து வரும் பொருட்களின் சந்தை விலையை மட்டுப்படுத்த, போடப்படுகிற கடிவாளம் தான் இந்த வட்டி விகித உயர்வு. 

வட்டி விகித உயர்வால் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி குறைந்து சந்தையில் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இதன் தாக்கம் தொழில் நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், பங்கு விலையும் சரியும்(அனைத்து நிறுவங்களுக்கும் பொருந்தாது). கடனில்லா நிறுவனங்களுக்கு வருவாய் குறைவு ஒரு பிரச்சனையில்லை, ஆனால் கடனை அதிகமாக கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு தான் இந்த சிக்கலே !

வங்கி வட்டி விகித உயர்வு, டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டை மேற்கொள்பவருக்கு வேண்டுமானால் வாய்ப்பாக அமையலாம். ஆனால் வங்கிகளில் கடன் வாங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தான் செலுத்த வேண்டிய வட்டி செலவு அதிகரித்து விடும். சொல்லப்போனால், டெபாசிட்தாரரருக்கும் இந்த வட்டி உயர்வு நீண்டகாலத்தில் பயன் தராது. 

பணவீக்கத்தை கட்டுப்படுத்திய பிறகு வங்கிகளின் வட்டி வருவாய் விகிதத்தையும் மத்திய வங்கி குறைத்து விடுமே. இதனை தான் நாம் தொழிலாளர்களின் பி.எப்.(Provident Fund), அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி வைப்பு நிதிகளில் காணலாம். பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த காலங்களில் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் அதிகமாகவும், மாறாக பணவீக்கம் குறையும் போது, சேமிப்புக்கான வட்டி விகிதமும் வெகுவாக குறைக்கப்படும். இதனை நாம் பெரும்பாலும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதற்கு பிறகான காலங்களில்(Economic Recession & Growth) காணலாம். 

இது ஒருபுறம் இருக்க, கடந்த காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாய், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடு என்று சொல்லப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வருடத்தின் பணவீக்க விகிதம் 7 சதவீதம் என எடுத்து கொண்டால், சேமிப்புக்கான வட்டி  விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். இதுவே வங்கி சேமிப்புக்கணக்குக்கான வட்டி விகிதத்தை சொல்லவே வேண்டாம்.  அதே வேளையில், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து காணப்படும். 

 பொதுவாக மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது, பெரும்பாலான வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதத்தை உடனே அதிகரித்து விடுவதுண்டு. மாறாக, நமது சேமிப்புக்கான வட்டி பெரும்பாலும் பணவீக்கத்திற்கு குறைவாக இருக்கும். இது போக கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியது இருந்தால், முடிவில் நிகர இழப்பு தான் !

எனவே வட்டி விகித உயர்வு காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய மற்றும் நீண்ட காலத்தில் குறைந்த வரி விகிதத்தில் அதிக வருவாயை ஏற்படுத்தும் முதலீட்டை கண்டறிவது அவசியம். அது போன்ற முதலீட்டு வாய்ப்புகள் தான் பரஸ்பர நிதிகளும்(Mutual Funds), பங்குச்சந்தைகளும். பங்குச்சந்தைக்கும், பரஸ்பர நிதிக்குமான ரிஸ்க் தன்மை என்பது வெவ்வேறு. சரியான நிதி இலக்கை ஏற்படுத்தி  விட்டு, அதற்கான முதலீட்டை துவக்கினால் போதுமானது. நீண்டகாலத்தில் உங்களது முதலீடு உங்களுக்காக உழைக்க தயாராகும்…!

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் 

Things to know before investing in Foreign Equities

இந்தியாவின் பங்குச்சந்தை மதிப்பு சுமார் 285 லட்சம் கோடி ரூபாய் (3.50 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு மட்டும் 77.90 லட்சம் கோடி ரூபாய் (தரவு: BSE India). இந்திய பங்குச்சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையை பெருமளவில் மேற்கொண்டதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் 2020ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை வீழ்ந்திருந்த போதும், அதற்கு பிறகான மீட்டெடுப்பில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 

கடந்த சில காலாண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து அதிகளவில் வெளியேறி இருந்தாலும், நமது சந்தை பெருமளவில் இறக்கம் காணவில்லை. இதற்கு முக்கிய காரணமாக உள்ளூர் முதலீடுகள் பெருகி வருவது தான். பின்டெக்(Fintech Apps) நிறுவனங்களின் பங்கு முதலீடு சார்ந்த விளம்பரங்கள், பரஸ்பர நிதிகளில் தொடர்ச்சியான முதலீடு, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, குறிப்பிடத்தக்க பங்கு சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த சேமிப்புகள் பங்குச்சந்தையை நோக்கி திரும்புதல் ஆகியவை நமது சந்தைக்கு பக்க பலமாக உள்ளது. 

பின்டெக் நிறுவனங்களின் பங்கு முதலீட்டு பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் புதிய உள்ளூர் முதலீட்டாளர்களை இந்திய பங்குச்சந்தைக்கு அதிகளவில் கொண்டு வந்துள்ளன என்பதனை நாம் மறுப்பதற்கில்லை. இவற்றையும் கடந்து சமீப காலங்களில் வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான தளங்களை பெரும்பாலான பங்கு தரகர்கள்(Stock Brokers) வழங்கி வருகின்றனர். இதனையே பங்குச்சந்தையில் நேரடி செயல்பாடுகளை கொண்டிருக்காத மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும்(Third Party Apps – Fintech Companies) அயல்நாட்டு பங்குகளை வாங்குவதற்கான வசதிகளை செய்து தந்துள்ளது.

இதன் மூலம் இந்திய உள்ளூர் முதலீட்டாளர்களும் கூகுள், ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பிரபலமான வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்க முடியும். உலகமயமாக்கலுக்கு பின்பு நமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்து வந்துள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் இணைய புரட்சி மூலம் நிதி முதலீடுகளை மேற்கொள்வதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஏதோவொரு கிராமத்தில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவில் வர்த்தகமாகும் ‘டெஸ்லா’ பங்கினை வாங்குவது இன்று அவ்வளவு சுலபம். 

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீத பங்களிப்பை கூட கொண்டிருக்காத நம் பங்குச்சந்தைக்கு, வெளிநாட்டு பங்குகளை வாங்குவது மிகவும் எளிமையாக இருந்தாலும், நாம் பங்குச்சந்தை சார்ந்த விழிப்புணர்வை ஓரளவு பெற்று விட்டோமா என்றால் அது தான் இல்லை. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் அத்தனை பேரும் லாபமீட்டுகிறார்களா என கவனித்தால், அந்த எண்ணிக்கை ஆயிரங்களில் மட்டுமே உள்ளது. இன்றும் சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியாத முதலீட்டாளர்கள் கோடிகளில் உண்டு. அப்படியிருக்கும் போது, வெறும் விளம்பர நோக்கில் பரிந்துரைக்கப்படும் அயல்நாட்டு பங்குகளை பற்றி நம்மால் புரிந்த கொள்ள முடியுமா, இல்லையெனில் பங்குச்சந்தையில் லாபமீட்டுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன ?

இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக பங்கு முதலீடு செய்பவர்களுக்கு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை புரிந்து கொள்வது சற்று கடினமான விஷயமே. நிறுவனத்தின் தொழில் ஆதாரம், நிதி அறிக்கைகள், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். 100 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் பங்குகள் இப்படியிருக்கும், 1000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகும் பங்குகள் இவ்வாறு விலை நகரும் என யாராலும் சந்தையில் கணிக்க இயலாது. அடுத்த 50 வருடங்களுக்கு இந்த துறை தான் சிறப்பாக செயல்படும் என உறுதியாக சொல்ல முடியாது. பிரபலமான பிராண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் சோடை போன வரலாறு உலகின் அனைத்து பங்குச்சந்தைகளுக்கும் உண்டு. இதனை களைய தான் பரஸ்பர நிதிகளின் மூலம் நீண்ட காலத்தில் முதலீடு செய்யுங்கள் என நிதி ஆலோசகர்களும், பொருளாதார வல்லுனர்களும் கூறி வருகின்றனர். பரஸ்பர நிதிகளில் பங்கு நிறுவனங்களை ஆராய்ந்து முதலீடுகளை மேற்கொள்ள பண்ட் மேலாளர்கள் உள்ளனர்.  

அப்படியிருக்கையில் அயல்நாட்டு பங்குகளில் ஏதோவொரு தளத்தின் வாயிலாக நேரடியாக பங்கு முதலீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை நாம் பார்ப்போம்.

  • மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை(Third Party Apps) கொண்டு வெளிநாட்டு பங்குகளை வாங்குவதில் உள்ள நம்பகத்தன்மை என்ன, ஒழுங்குமுறை ஆணையத்தின்(Regulators) கீழ் அந்த நிறுவனம் செயல்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த(Associates) அடிப்படையில் பரிந்துரைக்கிறார்களா ?
  • இன்று பெரும்பாலான தளங்கள்(Platforms) டீமேட் கணக்கு துவங்குவதற்கும், பங்குகளை வாங்குவதற்கும் கட்டணம் எதுவுமில்லை என சொன்னாலும், வெளிநாட்டு பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களை பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம்.
  • வாங்கிய வெளிநாட்டு பங்குகளை பின்னர் விற்பனை செய்யும் போது ஏதேனும் கட்டணம் சொல்லப்பட்டுள்ளதா, அவற்றை நீண்ட காலம் நம்மால் வைத்திருக்க முடியுமா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பங்கு போர்ட்போலியோ விவரங்களை(Portfolio Statement) மின்னஞ்சலில் பெற மாதாந்திர அல்லது ஆண்டு பராமரிப்பு கட்டணம் என்ன ?
  • பங்குகளை விற்பனை செய்த பின், பணத்தை நமது வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டுமெனில் அதற்கான கட்டணம்(Withdraw Charges) எவ்வளவு  ? 
  • நாம் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவன பங்குகளில் ஏதேனும் சிக்கல்(நிறுவனத்திற்கு) ஏற்பட்டால், அதனை நமக்கு தெரிவிப்பார்களா, சந்தையிலிருந்து அந்த பங்கு ஏதேனும் ஒரு காரணத்தால் வெளியேற்றப்பட்டால் நாம் எவ்வாறு அதனை அறிந்து கொள்வது ?
  • வெளிநாட்டு பங்குகளை வாங்கும் நாம் அந்நாட்டின் வருமான வரிச்சட்டம்(Taxation) எப்படி உள்ளது, நமக்கு சாதகமான அம்சம் ஏதுமுள்ளதா என்பதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும். 
  • முதலீடு செய்த பங்குகளுக்கு ஈவுத்தொகை(Dividend) ஏதும் வழங்கப்பட்டால் எந்த வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் அதற்கான வரி விதிப்பு எப்படி உள்ளது ?
  • வெளிநாட்டு நிறுவன பங்குகளின் தொழில் மற்றும் நிதி அறிக்கைகளை எளிமையாக தெரிந்து கொள்ள இணையதளங்கள் உள்ளதா, அவற்றினை அறிய கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா(Research reports) ?

பொதுவாக அமெரிக்காவில் பங்கு முதலீட்டுக்கான வரி விதிப்பு, நம் நாட்டை காட்டிலும் அதிகமாக தான் காணப்படுகிறது. இங்கே நீண்டகால மூலதன ஆதாய வரிக்கான காலம் ஒரு வருடத்திற்கு மேல் என்றால், அமெரிக்காவில் அது இரண்டு வருடத்திற்கு மேலாக சொல்லப்படுகிறது. நீண்டகால மூலதன ஆதாயத்திற்காக வரி இங்கே 10% (ஒரு லட்சம் வரையிலான லாபத்திற்கு வரி விலக்கு போக) எனும் போது, அமெரிக்காவில் எந்த வரி விலக்கும் இல்லாமல் 20 சதவீத வரி செலுத்த நேரிடும். பங்கு முதலீட்டு விற்பனைக்கு பின், பணத்தை வங்கிக்கணக்கில் மாற்ற வெளியேற்று கட்டணமும் அங்கே உண்டு.

நேரடி பங்கு முதலீடு(Direct Equity) அதிக ரிஸ்க் தன்மை கொண்டது. எனினும் பங்கு நிறுவனங்களை முறையாக ஆராய்ந்து நீண்டகாலத்தில் முதலீடு செய்து வந்தால்,  நல்ல வருவாயை பெறலாம். அதே வேளையில் உலகளவில் பெயர் போன பிராண்டுகளும், அனைத்து பென்னி பங்குகளும்(Penny Stocks) நல்ல வருவாயை அளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. 

சமீப காலமாக, சில பின்டெக் தளங்களில் “அதிகமானோர் விரும்பும் பங்குகள், 10 ரூபாய்க்கு கீழான பங்கு நிறுவனங்கள், தங்கள் தளங்களில் அதிகம் விற்பனையான பரஸ்பர நிதி திட்டங்கள், ஒரே வாரத்தில் அதிக வருவாய் அளித்த திட்டங்கள்” என விளம்பரங்களை(Promotions) காண முடிகிறது. இந்த பரிந்துரைகளை தொடர்ந்து கொண்டு முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க் தன்மையை நாம் எச்சரிக்கையாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகம் விற்பனையான அல்லது அதிகமானோர் விரும்பும் பங்குகள் மற்றும் திட்டங்கள் என்பது விழாக்கால சலுகை போல. கடினமாக உழைத்து சம்பாதித்த நம் பணத்தை இது போன்ற பரிந்துரைகள் மூலம் முதலீடு செய்வதால், எள்ளளவும் பயனில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 55 சதவீதமாக உள்ளது. இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(United Kingdom) 33 சதவீதமாகவும் மற்றும் சீனாவில் 13 சதவீதமாகவும் உள்ளது. இந்திய நாட்டின் வருங்கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்து வருகின்றன. நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இங்கே அதிக முதலீடுகளை மேற்கொள்கின்றன. 

அப்படியிருக்கையில், நமக்கான பெரும்பாலான பங்கு முதலீட்டு வாய்ப்பு நமக்கு அருகிலேயே தான் உள்ளது. வளர்ந்த நாடுகள் இங்கே முதலீடு செய்து சம்பாதிக்க, நமக்கான இடத்தை நிரப்ப நம்மூர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதினால் தான் அது சாத்தியம். 

குறிப்பு: நான் உள்ளூரில் நிறைவாக முதலீடு செய்து லாபமீட்டி வருகிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் எனது முதலீட்டு பங்களிப்பு அளப்பரியது. எனவே வெளிநாட்டு பங்குகளை வாய்ப்பாக கருதுகிறேன் என்று நீங்கள் சொன்னால் அயல்நாட்டு பங்கு முதலீட்டை(கட்டணம் மற்றும் வரிகளை புரிந்து கொண்டு) தாராளமாக மேற்கொள்ளுங்கள்.  

பரஸ்பர நிதி நிறுவனங்களின் வாயிலாக இன்று பெரும்பாலான வெளிநாட்டு பங்கு முதலீட்டு திட்டங்கள்(Mutual Funds) நமக்கு கிடைக்கப்பெறுகின்றன.   

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாளை முதல் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் ரூபாய் நாணயம்’ – நவம்பர் 1, 2022

நாளை முதல் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் ரூபாய் நாணயம்’ – நவம்பர் 1, 2022

India’s First Digital Rupee Currency – Pilot launch on November 1, 2022

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டிற்குள் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் நாணயம்’ அறிமுகப்படுத்தப்படும் என அரசு சார்பில் சொல்லப்பட்டிருந்தது. சோதனை முறையில் நாளை (நவம்பர் 1) முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த நாணயம், ‘eRupee’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

மத்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் இந்த டிஜிட்டல் நாணயம், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ரூபாய் நோட்டு அல்லது நாணயத்தின்(Fiat Currency) ஒரு மாற்று தான். அதாவது ஒரு ரூபாய் நோட்டு அல்லது நாணயம் என்பது அதே மதிப்பினை கொண்ட ஒரு ரூபாய் டிஜிட்டல் நாணயமாக கருதப்படும். 

டிஜிட்டல் நாணயம் சார்ந்த விவரங்களை, மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 50 பக்க ஆவண வடிவில் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. பிளாக் செயின் தொழில்நுட்பம், திறமையான மற்றும் எளிமையான மேலாண்மை அமைப்பு மற்றும் இன்னபிற தொழில்நுட்பங்களை கொண்டு டிஜிட்டல் நாணயம் வரவிருக்கிறது. 

இதன் மூலம் அரசின் பத்திரங்களுக்கான பரிவர்த்தனை செலவுகளை குறைக்கலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. துவக்க நிலையில் ஒன்பது வங்கிகளின் மூலம் இந்த டிஜிட்டல் நாணயம் செயல்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் – பாரத ஸ்டேட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பரோடா வங்கி, யூனியன் வங்கி, எச்.எஸ்.பி.சி.(HSBC), கோடக் மஹிந்திரா, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை.   

புதிய டிஜிட்டல் நாணய வருகையால், நடைமுறையில் இருக்கும் நாணய மற்றும் கட்டண அமைப்பில் ஏதும் மாற்றமில்லை எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது. டிஜிட்டல் ரூபாய் நாணயம் என்பது மெய்நிகர் நாணயத்திலிருந்து(Cryptocurrency) வேறுபடுகிறது என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

யூ.பி.ஐ.(Unified Payments Interface – UPI) பண பரிவர்த்தனையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த செப்டம்பர் 2022 மாதத்தில் மட்டும் UPI முறையில் 678 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் சுமார் 11.16 லட்சம் கோடி மதிப்பிலான பண பரிமாற்றம் நடந்துள்ளது. டிஜிட்டல் ரூபாய் நாணயம் நாட்டின் பொருளாதாரத்திலும், பிற மெய்நிகர் நாணயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதனை வரவிருக்கும் காலங்களில் அறியலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ?

உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ?

Debt to GDP of Developed and Emerging Economies – 2022

உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 798 கோடி(17-10-2022) மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு தோராயமாக 96 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்(தரவு 2021). மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், பொருளாதார மதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்திலும், பொருளாதார மதிப்பில் ஐந்தாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு காலத்தில் உலக பொருளாதாரம் (-3.27) சதவீதமாக வீழ்ச்சியை கண்டிருந்தது. அதே வேளையில் ஊரடங்கு காலத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பொருளாதாரம், 2021ம் ஆண்டின் முடிவில் 5.80 சதவீத வளர்ச்சியுடன் முடிவடைந்தது. 2021ம் வருடத்தில் சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி, கடந்த 48 வருடங்களில் உலகம் காணாத வளர்ச்சியாக இருந்துள்ளது. அதாவது பள்ளத்தில் விழுந்த பூனை மீண்டெழுவது போல (Dead Cat Bounce).

தனிநபர் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில்(GDP per Capita) காணும் போது, கடந்த 1980 களில் 2500 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் 12,260 டாலர்களாக உயர்ந்துள்ளது. தற்போது நாம் உலகின் நான்காம் தொழில் புரட்சி காலத்தில்(Industrial Revolution) டிஜிட்டல் மயத்துடன் இணைந்துள்ளோம். பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வறுமை அதிகரிப்பு, பருவநிலை மாற்றங்கள், நாடுகளிடையே போர் மற்றும் விநியோக சங்கிலியில்(Supply Chain) சிக்கல் என ஒருபுறம் இருந்தாலும், அடுத்த 20-30 வருடங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளே அதிகம் என உலக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

உலக பொருளாதார உற்பத்தி மதிப்பில்(GDP) அமெரிக்க நாட்டின் பங்களிப்பு மட்டும் 24 சதவீதமாகும். இதற்கடுத்தாற் போல் சீன நாட்டின் பங்களிப்பு 18.5 சதவீதம், ஜப்பான் 5 சதவீதம் மற்றும் ஜெர்மனியின் பங்களிப்பு 4.4 சதவீதமாக உள்ளது. உலகின் பொருளாதார உற்பத்தி பங்களிப்பு வரிசையில் முதல் 25 நாடுகளை தவிர்த்து பார்த்தால் மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பு, உலக பொருளாதார மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு அளவு கூட இல்லையென்பது கவனிக்கத்தக்கது. 

இதற்கு காரணமாக சொல்லப்படுவது வளர்ந்த மற்றும் விரைவாக வளரும் நாடுகளில் காணப்படும் அதிகபட்ச முதலீட்டு வாய்ப்பு, வேலைத்திறன் மற்றும் நுகர்வு தன்மை தான். பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் கடன்தன்மை அதிகரித்து வந்தாலும், அதற்கான வளர்ச்சியும் சாத்தியப்படுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பாதுகாப்பு, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மேம்படுவதற்கான முதலீடுகள் அதிகமாக செலவு செய்யப்படுகிறது. 

2021ம் ஆண்டின் தரவின் படி, அமெரிக்காவின் பொருளாதார மதிப்பு 23 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனா மற்றும் ஜப்பான் முறையே 17.7 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 4.9 டிரில்லியன் டாலர்கள். தனிநபர் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளை காட்டிலும் சீனா மற்றும் இந்தியாவில் குறைவே. அமெரிக்காவில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி(GDP per Capita) 69,287 அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில், சீனாவில் 12,556 டாலர்களாகவும், இந்தியாவில் 2,277 டாலர்களாகவும் உள்ளது. 

டிசம்பர் 2021 முடிவில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்த பொருளாதார மதிப்பில்(Debt to GDP) 137 சதவீதமாக இருந்துள்ளது. சீனாவில் இது 67 சதவீதமாகவும், ஜப்பானில் 266 சதவீதமாகவும் உள்ளது. ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராச்சியம்(United Kingdom) முறையே 69% மற்றும் 96 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் கடன்தன்மை 74 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா போன்ற நாடுகளில் கடன்தன்மை நூறு சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. வளரும் நாடுகளில் மிகக்குறைவாக தென் கொரியாவில் 42 சதவீதமாக உள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களில் வளர்ந்த நாடுகளின் கடன்தன்மை அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கூறியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலக நாடுகளின் மொத்த கடன் 226 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கடன் மட்டும் சுமார் 31 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது தனிநபர் ஒருவரின் சராசரி கடன் மட்டும் 93,400 அமெரிக்க டாலர்களாக அந்நாட்டில் உள்ளது. 

உலகளவில் ஜப்பான் நாட்டில் தான் அதன் பொருளாதார மதிப்பில் கடன்தன்மை அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் தேசிய கடன்தன்மை சுமார் 2.3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். ரஷ்யா, ஹாங்காங், வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் அதன் கடன்தன்மை குறைவாகவே காணப்படுகிறது. பொதுவாக வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடன் மூலம் முதலீடுகள் அதிகமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக அதன் வளர்ச்சியும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல் மற்றும் விநியோக சங்கிலியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதன் கடன் மூலம் பெறப்படும் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். அதனால் தான் கடன்தன்மையை சீரமைப்பதும் அவசியம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நமது குடும்பத்தில் காணப்படும் வரவு-செலவு போல தான் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியும், கடன் தன்மையும்…

(தரவுகள் பெறப்பட்ட தளங்கள்: World Bank, IMF, Macro Trends & Trading Economics)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

     

கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும்

கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் 

India’s CPI – Retail Inflation and Unemployment Rate (CMIE Data) – August 2022

நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) 7 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது. 

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவாக 8.28 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. கிராமப்புறங்களை காட்டிலும் நகரத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து 9.57 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம், சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும் சிறிது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் 6.75 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம், ஆகஸ்ட் மாதத்தில் 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாமிசம் மற்றும் மீன் பொருட்களின் விலை(CPI)  206 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 192 சதவீதமும், மசாலா பொருட்களின் பணவீக்க விகிதம் 194 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

காய்கறி மற்றும் பழங்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கான காரணியாக உள்ளது. இருப்பினும் எரிபொருட்களின் விலை சற்று தணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 11.8 சதவீதமாக இருந்த எரிபொருட்களின் பணவீக்க விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 10.78 சதவீதமாக குறைந்துள்ளது. 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது. வீட்டுமனை 10 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.60 சதவீதமும், சுகாதாரம் 6 சதவீதமும் மற்றும் கல்வி 4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. 

நாட்டின் பணவீக்க விகிதம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, மேம்படுத்தப்படாத உட்கட்டமைப்பு, உணவுப்பொருட்களை சந்தைக்கு குறித்த நேரத்தில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் மற்றும் அதிக நிதி பற்றாக்குறை ஆகியவை உள்ளது.

2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.86 சதவீதமாக இருந்துள்ளது. இது நகர்ப்புறங்களில் 8.64 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.04 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. படிப்படியாக குறைந்து வந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை 2022ல் 6.83 சதவீதமாக இருந்தது. இது நகர்ப்புறங்களில் 8.22 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.17 சதவீதமாகவும் இருந்துள்ளது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்து காணப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

நாட்டில் அதிகபட்ச வேலைவாய்ப்பின்மை விகிதம்(CMIE Data) காணப்படும் மாநிலங்களாக அரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு உள்ளன. இதற்கடுத்தாற் போல ஜார்கண்ட், திரிபுரா, பீகார் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் பணவீக்க விகிதம் 7.2 சதவீதமாகவும், தெலுங்கானா 6.9 சதவீதம், கேரளா 6.1 சதவீதம், ஆந்திரா 6 சதவீதம் மற்றும் கர்நாடகா 3.5 சதவீதமாகவும் உள்ளது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

Tamilnad Mercantile Bank(TMB) in Equity IPO

வங்கி மற்றும் நிதிச்சேவையில் நூறு வருடத்திற்கு மேலான அனுபவம் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஒரு வழியாக பங்குச்சந்தைக்கு தயாராகி விட்டது. கடந்த 1921ம் ஆண்டு தமிழக நாடார் சமூகத்தினரால் தொழில் சார்ந்த நிதி சேவைகளுக்காக தொடங்கப்பட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. துவக்கத்தில் ‘நாடார் வங்கி’ என அழைக்கப்பட்ட இவ்வங்கி பின்னர் வணிக மேம்பாட்டின் காரணமாக, ‘தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வங்கிக்கு, நாடு முழுவதும் 509 கிளைகளும், 12 பெரும் அலுவலகங்களும்(Regional offices) உள்ளன. கடந்த 2010 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டின் தனியார் வங்கிகளில் மிக சிறப்பாகவும், வேகமாக வளரும் வங்கியாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சொல்லப்பட்டது. 

1937ம் ஆண்டு இலங்கையில் ஒரு வங்கிக்கிளையை துவக்கியிருந்தாலும், பின்னர் அந்த கிளையை மூடிவிட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. வங்கி கிளைகளில் முதன்முறையாக கணினிமயமாக்கலை ஏற்படுத்திய தனியார் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(1983ம் வருடம்) தான். இன்று அனைத்து கிளைகளும் முழுமையான கணினி தொழில்நுட்பத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் மென்பொருள் இன்போசிஸ்(Infosys) நிறுவனம் உருவாக்கியது என்பது கூடுதல் தகவல்.

தனியார் வங்கிகளில் அன்னிய செலாவணியை பெறுவதில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முதலிடத்தில் உள்ளது. 2019ம் நிதியாண்டில் இவ்வங்கி சுமார் 15,726 கோடி ரூபாய் மதிப்பில் அன்னிய செலாவணி வர்த்தகத்தை புரிந்துள்ளது. மாநிலத்தில் மட்டுமே இயங்கும் வங்கி போல தோற்றமளிக்கும் இவ்வங்கி உலகம் முழுவதும் எச்.டி.எப்.சி. மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கிகளுடன் இணைந்து வங்கி சேவையை பகிர்ந்துள்ளது.

2021ம் நிதியாண்டில் வங்கியின் வருவாய் 530 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 4,253 கோடி ரூபாய். நிகர லாபமாக வங்கி 995 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. 2022ம் ஆண்டின் முடிவில் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 52,858 கோடி (7.04 பில்லியன் டாலர்கள்). வங்கிகளில் இணைய வழியிலான வைப்பு நிதி கணக்கு(Deposit) துவங்கும் சேவையை நாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது இவ்வங்கியே. 

வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கே.வி. ராமமூர்த்தி உள்ளார். கடந்த காலங்களில் சில சர்ச்சைகளையும், பங்குச்சந்தையில் நுழைய முடக்கங்களையும் மெர்கன்டைல் வங்கி சந்தித்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஒரு வழியாக பங்குச்சந்தை நுழைவுக்கான விண்ணப்பத்தை செபியிடம்(SEBI) சமர்ப்பித்தது. நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் இதற்கான ஒப்புதலும் பெற்றது.

வரக்கூடிய செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை பங்குகளை வழங்க ஐ.பி.ஓ. வை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு 10 ரூபாயாகவும், ஐ.பி.ஓ.வில் பங்கு ஒன்றின் விலை ரூ.500 – ரூ.525 என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 28 பங்குகளும்( 1 Lot), அதிகபட்சமாக 364 பங்குகளும்(13 Lots) வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எதிர்கால மூலதன தேவைகளுக்காக பங்கு முதலீட்டை பெற(Initial Public offer) உள்ளதாக வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.பி.ஓ.வில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் பங்களிப்பு முறையே தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள்(QIB) 75 சதவீதத்திற்கு மிகாமல், உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்(HNI) 15 சதவீதத்திற்கு மிகாமல் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் – தனிநபர்கள்(Retail investors) 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொதுவாக ஐ.பி.ஓ.வில் அறிமுகமாகும் நிறுவனங்களின் நிதி விவரங்களை அவ்வளவு எளிதில் பகுப்பாய்வு செய்ய முடியாது. சந்தைக்கு வந்து குறைந்தபட்சம் ஐந்து வருடங்களை கடந்த பின்பு தான், அவற்றின் நிதி அறிக்கைகளை நம்மால் அடிப்படை பகுப்பாய்வுக்கு(Analysis) உட்படுத்த முடியும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா மெட்டாலிக்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

டாட்டா மெட்டாலிக்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

TATA Metaliks Limited – Fundamental Analysis – Stocks

நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான டாட்டா குழுமத்தின் ஒரு அங்கம் தான் டாட்டா மெட்டாலிக்ஸ். டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாட்டா மெட்டாலிக்ஸ் கடந்த 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. இரும்பு குழாய்(Pig iron and Ductile Iron Pipes) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாக டாட்டா மெட்டாலிக்ஸ் உள்ளது.

ஆண்டுக்கு சுமார் 5.50 லட்சம் கொள்ளளவு உலோக உற்பத்தி திறன் கொண்ட ஆலையை இந்நிறுவனம் கொண்டுள்ளது. நாட்டின் இரும்பு(Pig Iron) உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை டாட்டா மெட்டாலிக்ஸ் கொண்டிருக்கிறது. இதன் உற்பத்தி பெரும்பாலும் வாகனம், விவசாயம், மின்சாரம், ரயில்வே போன்ற துறைகளுக்கு பயன்படுகிறது. 

நிறுவனத்தின் இரும்பு குழாய் உற்பத்தி 14 வகையான முதன்மை தரங்களை கொண்டதாக உள்ளது. ‘TATA efee’ இந்நிறுவனத்தின் முக்கிய பிராண்டாக வலம் வருகிறது. நிறுவனத்தின் விற்பனை உள்நாட்டில் மட்டுமில்லாமல் ஐக்கிய அரபு, கத்தார், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் பரவலாகியுள்ளது. 

நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 60 சதவீதமாக உள்ளது. நிறுவனராக டாட்டா ஸ்டீல் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களிடம்(Mutual Funds) சுமார் 9 சதவீத பங்குகள் உள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.10 மடங்கு என்ற அளவில் உள்ளது. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 483 ரூபாயாகவும், முக மதிப்பு 10 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 8 மடங்குகளில் இருக்கிறது. 2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,746 கோடியாகவும், நிகர லாபம் 237 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

பொதுவாக உலோக துறையில் காணப்படும் உலகளாவிய தாக்கம், வருவாயில் காணப்படும் ஏற்ற-இறக்கம் டாட்டா மெட்டாலிக்ஸ் நிறுவனத்திற்கும் பொருந்தும். நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) மார்ச் 2022 முடிவில் ரூ.1,494 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) நன்றாக உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் டாட்டா மெட்டாலிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் 14 சதவீதமாகவும், நிகர லாபம் 13 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 23 சதவீதமும், பத்து வருட காலத்தில் 27 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 

நிறுவனத்தின் விற்பனைக்கும், பங்கு விலைக்குமான இடைவெளி(Price to Sales) 0.82 மடங்காகவும், வருவாய்க்கும், பங்கு விலைக்குமான இடைவெளி(P/E) 19 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்தின் கடன் 148 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

        

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை 

India’s Balance of Trade – Trade Deficit July 2022

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூலை மாதத்தின் முடிவில் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. நாட்டின் இறக்குமதி 43 சதவீதம் அதிகரித்தும், ஏற்றுமதி 2.5 சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது. ஏற்றுமதியின் அளவு 66.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி அளவு 36.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாவும் இருந்துள்ளது.

பொதுவாக, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியே வர்த்தக பற்றாக்குறையாக சொல்லப்படுகிறது. கனிம எரிபொருட்கள், எண்ணெய், இரும்பு மற்றும் எஃகு, முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், நகைகள் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் இறக்குமதியாக கொண்டிருக்கிறோம். ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருட்கள், ஆபரணங்கள், வாகனங்கள், தானியங்கள், இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் ரசாயனங்களை அதிகமாக கொண்டுள்ளோம்.

இறக்குமதியில் நாம் பெரும்பாலும் சீனாவிடமிருந்து தான் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுகிறோம். 2021ம் ஆண்டில் நாட்டின் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 16 சதவீதமாகவும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 7.6 சதவீதமும் மற்றும் அமெரிக்காவில் 7.3 சதவீதத்தையும் கொண்டுள்ளோம். சீனாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 87.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனாவிடமிருந்து மின் மற்றும் மின்னணு உபகரணங்கள், இயந்திரங்கள், கொதிகலன்கள், அணு உலை, ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் உரங்களை பெறுகிறோம்.

ஏற்றுமதியில் நாம் அமெரிக்காவிற்கு அதிகமாக அனுப்பி கொண்டிருக்கிறோம். நாட்டின் ஏற்றுமதி பங்களிப்பில் அமெரிக்கா 18 சதவீதம், ஐக்கிய அரபு நாடு 6.5 சதவீதம் மற்றும் சீனா 5.9 சதவீதமாக இருந்துள்ளது. முத்துக்கள் விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், மருந்துகள் மற்றும் துணிமணிகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 121 பில்லியன் அமெரிக்க டாலர்களும், இறக்குமதி 190 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில், ஏற்றுமதி 26.82 சதவீதமும், இறக்குமதி 49.76 சதவீதமுமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதியின் அளவு உயர்ந்து வருவது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா 2022 –  அடுத்து என்ன ?

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா 2022 –  அடுத்து என்ன ?

US enters into Technical Recession – Things to know

ஜூன் மாதத்தில் வல்லரசான அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவாக கருதப்படுகிறது. எரிபொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்ததால் சொல்லப்பட்ட பணவீக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. 

எரிவாயு (Gasoline) விலை 60 சதவீதம் உயர்ந்தும், எரிபொருட்களின் எண்ணெய்(Fuel oil) 99 சதவீதமும், மின்சாரம் 14 சதவீதம் என்ற அளவிலும் ஜூன் மாதத்தில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் 10.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 

நடப்பாண்டின் முதலாம் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Q1 GDP 2022: -1.6 %) ஆக இருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் (-0.9) சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பது உறுதியாகியுள்ளது.

2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு மீண்டும் மந்தநிலைக்கு அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்க நாட்டின் வளர்ச்சி 0.5 சதவீதமாக இருக்கும் என பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது  பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பொருளாதார மந்தநிலைக்கு காரணமாக வீட்டுமனை முதலீடும் குறைந்திருப்பது ஒரு காரணியாக சொல்லப்படுகிறது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், உக்ரைன்- ரசிய போர் இவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், நாட்டின் ஏற்றுமதி கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவு  வளர்ச்சியை பெற்றுள்ளது.

நடப்பு ஜூலை மாதம் நடைபெற்ற அமெரிக்க மத்திய வங்கி(US Fed) அறிக்கையில் வட்டி விகிதம் 75 புள்ளிகளாக அதிகரிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ச்சியாக நான்காவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாத அறிக்கையின் படி, வட்டி விகிதம் 2.25 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை உள்ளது. 

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடப்பு நிதியாண்டில் மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். 2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் வட்டி விகிதம் 3.5% – 3.8% என்ற அளவில் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. 

எனவே அடுத்து வரும் மாதங்களில் மீண்டுமொரு வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கலாம். பணவீக்க அதிகரிப்பு மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய வட்டி விகித உயர்வு ஆகியவை தொழில் நிறுவனங்களின் வருவாயை பாதிக்கலாம். மக்களிடையே ஏற்பட்டுள்ள நுகர்வு தன்மை தேக்கம் மேலும் சில மாதங்கள் தொடரலாம். 

விநியோக சங்கிலியில்(Supply Chain) ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், உக்ரைன் – ரசிய போர் நீடிக்கும் வரை, உலக பொருளாதார மந்தநிலையை தொடர செய்யும். கொரோனா காலத்தில் சந்தையை மீட்டெடுக்க செய்யப்பட்ட அதிகப்படியான பொருளாதார ஊக்குவிப்பு, இப்போது பணவீக்க அதிகரிப்பில் காணப்படுகிறது. எனினும், இது பொருளாதாரவியலில் அடிப்படையான ஒன்று தான். 

வரக்கூடிய வாரங்களில் டாலருக்கு நிகரான மற்ற நாணயங்களின் மதிப்பு அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். வட்டி விகித அதிகரிப்பின் தாக்கம் நிறுவனங்களின் வருவாயில் வெளிப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் அல்லது காலாண்டுகள் தேவைப்படலாம். நடப்பாண்டில் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் நல்ல வருவாயை அளித்த பங்குச்சந்தையாக இந்தோனேசிய சந்தையும், மோசமான இழப்பை ஏற்படுத்திய சந்தையாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் உள்ளன.

சொல்லப்பட்ட காலத்தில் இந்தோனேசிய ஜகார்த்தா குறியீடு 3 சதவீதமும், கடந்த ஒரு வருட காலத்தில் 13 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. இதுவே இந்திய நிப்டி 500 குறியீடு நடப்பு வருடத்தில் 5 சதவீத வீழ்ச்சியையும், கடந்த ஒரு வருடத்தில் 5 சதவீதம் ஏற்றமும் அடைந்துள்ளது.

2022ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் வளர்ந்த சந்தைகள் முறையே அமெரிக்க எஸ் & பி 500 (-18%), ஐரோப்பிய STXE (-14%), சீன CSI 500 (-14%) மற்றும் ஆஸ்திரேலிய ASX 200 (-9%) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தை தற்போது ஏற்றம் பெற்று வந்தாலும், இதற்கான பொருளாதார காரணிகள் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. எனவே, நீண்டகாலம் முதலீடு செய்பவர்கள் இது சார்ந்த கவலையை விட்டு விடலாம். கடனில்லா(Debt Free) நல்ல நிறுவனங்களின் பங்குகளை ஆராய்ந்து சிறுகச்சிறுக முதலீடு செய்து வரலாம். குறுகிய காலத்தில் சந்தை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படும் நிலையில், பண இழப்பை தவிர்ப்பது நன்று.

தொடர்ச்சியாக இரு காலாண்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்தாலும், அவை பொருளாதார வீழ்ச்சியாக எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்ற விவாதமும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? ஜூலை 31, 2022 காலக்கெடு

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? ஜூலை 31, 2022 காலக்கெடு 

Income Tax Filing Returns – Deadline for AY 2022-23 (FY 2021-22)

2021-22ம் நிதியாண்டில் தனிநபர் ஒருவர் ஈட்டிய வருமானத்திற்கு 2022-23ம் மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் சொல்லப்பட்ட நிதியாண்டில் ஒட்டுமொத்த வருமானமாக ரூ.2.50 லட்சத்திற்கு மிகும் போது, வரி தாக்கல் செய்வது அவசியம். 

2022-23ம் மதிப்பீட்டு ஆண்டில், இதுவரை(16-07-2022) 1.45 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி தாக்கல் தளத்தில் தங்களது பான் எண்ணை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 10.30 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது.

நடப்பில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு அரசின் இணையதளம்(Income Tax Portal) மட்டுமின்றி, சில மூன்றாம் தரப்பு தளங்களும் இந்த சேவையை வழங்குகின்றன. எனினும் வரி தாக்கல் செய்த பின், மின்னணு சரிபார்ப்பை(E-Verification) நிறைவு செய்வது அவசியமாகும். 

E-Verification ஐ நிறைவு செய்யும் நிலையில் மட்டுமே அது வரி தாக்கல் செய்ததாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். மேலே சொல்லப்பட்ட 1.45 கோடி பேர் வரி தாக்கல் செய்திருந்தாலும், இதுவரை 1.21 கோடி நபர்கள் மட்டுமே மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்துள்ளனர்.

2022-23ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (2021-22ம் நிதியாண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 31, 2022 என சொல்லப்பட்டுள்ளது. காலங்கடந்த வரி தாக்கலுக்கு அபராத கட்டணம் செலுத்த நேரிடும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு மதிப்பீட்டு ஆண்டுகளில்(AY 2020-21, AY 2021-22) வரி தாக்கலுக்கான காலக்கெடு அந்த வருடத்தின் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக இரத்தக்கொடை தினம் இன்று – உங்களுக்கான நிதி பாடங்கள் என்ன ?

உலக இரத்தக்கொடை தினம் இன்று – உங்களுக்கான நிதி பாடங்கள் என்ன ?

Blood Donors Day – June 14 – Ready for your Personal Finance

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் 14ம் நாள், உலக இரத்தக்கொடை தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் கிடைக்கப்பெறும் பலன்கள் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் தான். இரத்த தானம் செய்வதன் மூலம் நமது இதயத்தை பாதுகாப்பது, புற்றுநோய் ஏற்படுவதை பெரும்பாலும் தவிர்ப்பது, இரும்பு சத்தினை கட்டுக்குள் வைத்திருப்பது, உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை மேம்படுத்துதல், உடல் எடையை சரியான முறையில் பராமரித்தல் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை குறைத்தல் போன்ற பல நன்மைகள் உண்டு.

நம்மிடம் உள்ள இரத்தத்தை நாம் சிறந்த முறையில் நிர்வகிப்பது போல, நாம் ஈட்டும் வருமானத்தையும் சிறப்பாக நிர்வகிக்க  கற்று கொண்டால், நாமும் செல்வந்தர்களை போன்று செல்வச்செழிப்புடன் வாழலாம். சரியான நிதித்திட்டமிடலை ஏற்படுத்துவதன் மூலம், பின்னாளில் மற்றவர்களின் நிதி ஆதாரத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை. நம்மை ஆளும்(Governing) அரசையும் நாம் குறை கூற வேண்டிய நிலை இருக்காது.

நிதித்திட்டமிடலில் நாம் செய்ய வேண்டிய உடனடி வழிமுறைகள் இதோ…

  • நிதி பாதுகாப்பு:  நமக்கும், நமது குடும்பத்திற்கு தேவையான மருத்துவ காப்பீட்டை எடுத்து கொள்ளுதல், போதுமான டேர்ம் காப்பீட்டு தொகையை உறுதி செய்தல், விபத்து காப்பீட்டின் தேவையை அறிதல்.
  • உங்களது ‘ஆல் டைம் கிரெடிட் கார்டு’: அவசர கால நிதியை(Emergency Fund) ஏற்படுத்துதல், நிதி இலக்குகளை நிர்ணயித்து சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ளுதல். உங்களது நிதி இலக்குகள் குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை இருக்கலாம்.
  • தலைமுறைக்கான பெரும் செல்வம்: பங்கு முதலீட்டின் மூலம் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை ஏற்படுத்தலாம். ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது போல பங்குச்சந்தையிலும் நீண்டகாலத்தில் முதலீடு செய்து வருவதன் மூலம் பெரும் செல்வத்தை காணலாம். வெறுமனே நாள் வணிகத்தில் ஈடுபடுவதும், பங்குச்சந்தையை குறுகிய காலத்தில் அணுகுவதும் ஆபத்தான மற்றும் விரயமான ஒன்று.  
  • ‘உலக நாயகன்’ எனும் அஸெட் அலோகேஷன்(Asset Allocation): எந்தவொரு தனிப்பட்ட முதலீட்டு சாதனமும்(Investment product) எல்லா வருடமும் லாபத்தை மட்டுமே அளிக்காது. பொருளாதாரம் சரியில்லை என்றால், பங்குச்சந்தையும், ரியல் எஸ்டேட் துறையும் சுணக்கம் காணும். அதே வேளையில் தங்கம் போன்ற முதலீடுகள்(Hedging) ஏற்றத்தை பெறும். பொருளாதாரம் சீராகும் போது, தங்கத்தின் மீதான முதலீட்டு தேவை குறைந்து அவற்றின் வருவாயும் குறைந்து காணப்படும். ஆனால் நீண்டகாலத்தில் பெரும்பாலான சர்வதேச மற்றும் பொருளாதாரம் சார்ந்த முதலீடுகள் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை அளிக்கும். எனவே, எந்தவொரு முதலீட்டு சாதனத்திலும் அதன் எதிர்கால வருவாயை கணிக்க முற்படாமல், கலவையாக முதலீடு செய்து வருவதன் மூலம் கணிசமான வருவாய் விகிதத்தை நீண்டகாலத்தில் ஏற்படுத்தலாம்.
  • ரிஸ்க் புரொபைலிங்(Risk Profiling): சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த விழிப்புணர்வை நாம் எப்போதும் ஏற்படுத்தி கொள்வது அவசியம். நமக்கு தெரிந்த மற்றும் புரியக்கூடிய திட்டங்களில் மட்டும் முதலீடு செய்வது, புரியாத விஷயங்களை பற்றி, அதன் துறை சார்ந்த நபர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது, நம்மால் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியும் மற்றும் எந்தளவு இழப்பை தாங்க கூடிய திறன் நமக்கு உண்டு என்பதனை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பணவளக்கலை சார்ந்த புத்தகங்களை படிப்பதன் மூலம், நாம் இவற்றை அறிந்து கொள்ளலாம். 

இளம்வயதில் உள்ள நல்ல வருமானம் ஈட்டும் ஒருவர், நிதி திட்டமிடலில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது – தனது ஓய்வுக்காலத்தில் ஓய்வூதியத்தை மட்டுமே கொண்டு வாழும் ஒருவர், பங்குச்சந்தையில் அதிக ரிஸ்க் எடுத்து லாபமீட்டலாம் என எண்ணுவது – இரண்டும் தவறு தான்.

      

நிதி சார்ந்த விழிப்புணர்வு அவசியம் !

சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ளுவதன் மூலம், நாம் மட்டுமில்லாமல் நமது நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் !

சிறு துளி பெருவெள்ளம் – உயிர்த்துளி இரத்த தானம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம் – எப்படி ?

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம் – எப்படி ?

India’s GDP in the Financial year 2021-22 – 8.7 Percent

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால், 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் (-6.6) சதவீத வீழ்ச்சியை  சந்தித்திருந்தது. 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 20.1 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 8.4 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 5.4 சதவீதம் மற்றும் நான்காம் காலாண்டில் 4.1 சதவீதமுமாக இருந்தது.

2020-21ம் நிதியாண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காணும் போது, 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்துள்ளது. இருப்பினும் இந்த வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து மீட்கப்பட்ட வளர்ச்சியாகவே பொருளாதார வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. 

அதாவது கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை ஒப்பிடுகையில் இது மிகக்குறைந்த வளர்ச்சியாக அமைந்துள்ளது. 2020ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு சுமார் 2.62 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் இது 2.32 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதார மதிப்பில்(GVA) சேவை துறை 54 சதவீதமும், விவசாயம் 20 சதவீதமும் மற்றும் தொழிற்துறை 26 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில், விவசாயத்துறை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2021-22ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக சொல்லப்பட்ட நிலையில், இது சந்தை எதிர்பார்த்த அளவினை எட்டியுள்ளது. நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

முதலீட்டாளர்கள் கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள்

முதலீட்டாளர்கள் கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள்

Floating Rate Bonds and Funds – Inflation Insights

உலகளவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். விண்ணைத் தொடும் விலைவாசி ஒருபுறம் இருக்க, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக உயர்த்தும் நிலையில் மத்திய வங்கிகள் உள்ளன.

பொதுவாக பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதும், இதுவே பணவீக்கம் குறையும் போது அல்லது பணவாட்டம்(Deflation) ஏற்படும் நிலையில் நுகர்வு தன்மையை ஊக்கப்படுத்துவதும் இயல்பான ஒன்று.

வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது வங்கிக்கடன் பெறுவோருக்கு சாதகமானதல்ல. வட்டி விகித அதிகரிப்பு  தனிநபருக்கு மட்டுமல்ல, தங்களது தொழிலுக்காக கடன் பெறும் நிறுவனங்களுக்கும் நல்ல செய்தியல்ல. இதன் காரணமாக நிறுவனங்களின் வருவாயில் கடனுக்கான வட்டியை செலுத்திய பிறகு, லாபங்கள் குறையலாம். அதிக கடனை கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் நட்டத்தையும் சந்திக்கலாம்.

இது பங்குச்சந்தைக்கும் பாதகமான நிலை தான். அதே வேளையில் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு சற்று ஆறுதலான விஷயமாக இது அமையும். பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் அதிகரித்தால், நடுத்தர மற்றும் நீண்டகால கடன் பத்திரங்களுக்கான தேவை குறைந்து, அவற்றின் மீதான முதலீட்டு வருவாய் குறையும். இதற்கு மாறாக வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, கடன் பத்திரங்களுக்கான தேவை அதிகரித்து முதலீட்டு வருவாய் கூடும்.

அடுத்து வரும் சில காலாண்டுகளில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும். இது பங்குச்சந்தைக்கும், நீண்டகால கடன் பத்திரங்களுக்கும் குறுகிய காலத்தில் பாதகத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் ஓரளவு வருமானம் தரக்கூடிய மற்றும் பாதுகாப்பான(அதிக ஏற்ற-இறக்கம் இல்லாத) முதலீடாக வங்கி டெபாசிட், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள், பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் லிக்விட் பண்டுகள் ஆகியவை உள்ளன. 

மேலே சொன்ன திட்டங்கள் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்காவிட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர கால தேவைக்கு பயன்படும் ஒரு வாய்ப்பாக உள்ளது. இந்நிலையில் தான் தொடரப்போகும் வங்கி வட்டி விகித அதிகரிப்பை, ஒரு முதலீட்டாளராக சாதகமாக பயன்படுத்தும் திட்டம் உள்ளது.

இவை தற்போது முதலீட்டாளர்களை கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட்(Floating Rate) திட்டங்களாக அமைந்துள்ளது எனலாம். வட்டி விகித அதிகரிப்பை நாம் சாதகமாக பயன்படுத்த இந்த ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் பயன்படுகிறது. எப்போதெல்லாம் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுகிறதோ, அப்போது ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வருவாயிலும் மாற்றம் செய்யப்படும்.

உதாரணமாக வட்டி விகிதம் அதிகரித்தால், ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வருவாயும் அதிகரிக்கும். மாறாக வட்டி விகிதம் குறைந்தால், இத்திட்டத்தின் வருவாய் குறையும். மற்ற கடன் பத்திரங்களின் நிலையான வட்டி விகித ரிஸ்க் தன்மையை குறைக்க, ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வட்டி விகித வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் வங்கி டெபாசிட் மூலமும், பரஸ்பர நிதிகளில் பண்டு வாயிலாகவும் கிடைக்கப்பெறுகிறது. 

RBI Floating Rate Savings Bond:

  • அரசு பத்திரங்களாக கிடைக்கப்பெறுவதால், ரிஸ்க் என்பது பெரும்பாலும் இல்லை. அதே வேளையில், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்காது.

 

  • பணவீக்கம் அதிகரிக்கும் காலங்களில், வட்டி விகித அதிகரிப்பை ஒரு முதலீட்டு வாய்ப்பாக பயன்படுத்தி, நடுத்தர காலத்திற்கு உதவும் ஒரு திட்டமாகும்.
  • குறைந்தபட்ச முதலீடு – ரூ.1000 & அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு எதுவுமில்லை.
  •  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். தேசிய சேமிப்பு பத்திரங்களை(NSC) காட்டிலும் வட்டி வருவாய் சற்று கூடுதலாக இருக்கும்.
  • ஏழு வருடங்களில் முதிர்வு அடைக்கக்கூடிய திட்டமாக இருப்பதால், முன்னரே முதலீட்டை திரும்ப பெற முடியாது (மூத்த குடிமக்கள் தவிர்த்து).
  • கிடைக்கப்பெறும் வட்டி வருவாய்க்கு, வரி விதிப்பு உண்டு. 

   

  • பணப்புழக்கம்(Liquidity) குறைவு மற்றும் சந்தையில் பட்டியலிடப்படாதது இதன் பாதகமான அம்சம்.

 

  • வருமான வரி வரம்பில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இத்திட்டம் ஓரளவு பயன்படும்.

Floating Rate Fund (Mutual Fund): 

  • இது ஒரு திறந்தநிலை(Open-ended) கடன் சார்ந்த பண்டாகும். வட்டி விகித மாறுபாட்டை கொண்டிருக்கும் சொத்துக்களில் குறைந்தபட்சம் 65 சதவீத முதலீட்டை இந்த பண்டு கொண்டிருக்கும்.

 

  • அஸெட் அலோகேஷன் முறையில், வட்டி விகித அதிகரிப்பை சாதகமாக பயன்படுத்த இந்த பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். மற்ற நிரந்தர வருவாயை(Fixed income) அளிக்கும் திட்டங்களை காட்டிலும், சொல்லப்பட்ட வட்டி விகித காலங்களில் ப்ளோட்டிங் ரேட் பண்டுகள் சற்று கூடுதல் வருவாயை கொடுக்கும்.
  • ப்ளோட்டிங் ரேட் பண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மற்றும் வெளியேறலாம். பெரும்பாலும் வெளியேறும் கட்டணம் இது போன்ற திட்டங்களுக்கு பெறப்படுவதில்லை.
  • குறைந்தபட்ச முதலீடு ரூ.500 (எஸ்.ஐ.பி. முறையில் 100 ரூபாய் முதல் துவக்கலாம்).
  •  பொதுவாக கடன் சார்ந்த பண்டு திட்டங்களில், வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, என்.ஏ.வி.(NAV) குறைந்து வர்த்தகமாகும். ஆனால், ப்ளோட்டிங் ரேட் பண்டுகளில் வட்டி விகித வாய்ப்பை பயன்படுத்தி முதலீடு செய்யப்படும்.

 

  • கடன் சார்ந்த பண்டுகளில் காணப்படும் வரி விகிதமே, இந்த திட்டத்திற்கும் பொருந்தும்.

கவனிக்க:

குறுகிய காலத்தில் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் பயன்பட்டாலும், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை அளிக்க பங்கு சார்ந்த திட்டங்களை போல வேறு எதுவுமில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2021-22ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.15,243 கோடி

2021-22ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.15,243 கோடி

ITC reported a Net Profit of Rs.15,243 Crore in FY22 results

நூறு வருடத்திற்கும் மேலான தொழில் அனுபவம் கொண்ட ஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு சுமார் 3.40 லட்சம் கோடி ரூபாய். நுகர்வோர் பொருட்கள்(FMCG), பேப்பர் பொருட்கள்(Packaging), விவசாய பொருட்கள், நட்சத்திர உணவு விடுதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் தனது தொழிலை பரவலாக்கியுள்ளது.    

புகையிலை ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் ஐ.டி.சி. உள்ளது. Aashirvaad, Sunfeast, Yippee, Dark Fantasy, Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Savlon, Fabelle, Mom’s Magic, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளாகும்.

ஐ.டி.சி. நிறுவனத்தின் உணவு விடுதிகளில் கிராண்ட் சோழா, விண்ட்சார், கார்டெனியா, பார்சூன் போன்றவை மிகவும் பிரபலமானவை. உலகின் முதல் கார்பன் இல்லா உணவு விடுதியை(Leed Zero Carbon) ஏற்படுத்தியிருப்பது ஐ.டி.சி. நிறுவனத்தின் பங்களிப்பாகும்.  நுகர்வோர் பொருட்களில் 45க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 700க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 

இந்திய பன்னாட்டு நிறுவனமாக வலம் வரும் ஐ.டி.சி. நிறுவனம் 2021-22ம் நிதியாண்டில் வருவாயாக 60,688 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் செலவினம் ரூ.40,010 கோடியாகவும், இயக்க லாபம் 20,658 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் உள்ளது. கடனில்லா நிறுவனமாக உள்ள இந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 528 மடங்குகளிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 50 ரூபாயிலும் உள்ளது.

பங்குச்சந்தை – பண்டமென்டல் அனாலிசிஸ் – இலவச வகுப்புகள் – 14 நாட்களில்

2021-22ம் நிதியாண்டில் நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஏற்கனவே பங்கு ஒன்றுக்கு 5.25 ரூபாய் டிவிடெண்ட் அளித்துள்ள நிலையில், ஆண்டு இறுதி பங்களிப்பாக தற்போது பங்கு ஒன்றுக்கு 6.25 ரூபாயை அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டின் மார்ச் மாத முடிவின் படி, ஐ.டி.சி. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.61,223 கோடி.

நிறுவனத்தின் பணவரத்தும்(Cash Flow) கடந்த காலங்களில் நன்றாக இருந்துள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 7 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 8 சதவீதமாகவும் உள்ளது. பங்கு மீதான வருமானம்(ROE) ஐந்து வருட காலத்தில் 23 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை

நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை 

India’s rising Retail Inflation 2022 – Economy Insights

நாட்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த எட்டு வருடங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக 7.79 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது. ஏப்ரல் மாத பணவீக்கம், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவை காட்டிலும் அதிகமாக சென்றுள்ளது.

உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், பணவீக்க விகிதம் அதிகரித்து வந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 17.28 சதவீதமும், காய்கறிகள் 15.41 சதவீதமும் உயர்ந்துள்ளது. இது போல மசாலா பொருட்களின்(Spices) விலை எதிர்பாராத விதமாக 10.56 சதவீதம் என அதிகரித்து காணப்படுகிறது.

பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக பணவீக்க விகிதம், இரண்டு சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு மாதங்களாக இந்த இலக்கை கடந்து தான் பணவீக்க விகிதம் இருந்துள்ளது. 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதத்தில்(Consumer Price Index) உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக உள்ளது. இதற்கடுத்தாற் போல் வீட்டுமனை 10.07 சதவீத பங்களிப்பையும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.59 சதவீத பங்களிப்பையும், சுகாதாரம் 5.89 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதமாக உள்ளது.

பொதுவாக எரிசக்தியில் இறக்குமதியை சார்ந்து இருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, உட்கட்டமைப்பு சார்ந்த மேம்பாடு நிகழாதிருத்தல், உணவுப்பொருட்கள் விநியோக சங்கிலியில் அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவை நாட்டின் பணவீக்க விகித மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

இதற்கு முன்பு சில்லரை விலை பணவீக்கம் அதிகமாக காணப்பட்ட காலமாக 2013ம் வருடத்தின் நவம்பர் மாதம் இருந்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் மே மாதத்தில் 9.38 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து நவம்பர் மாதத்தில் 12.17 சதவீதமாக முடிவடைந்தது. 2013ம் ஆண்டு முதல் சில்லரை விலை பணவீக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, மொத்த விலை(Wholesale price index -WPI) அடிப்படையில் தான் நாட்டின் பணவீக்கம் கணக்கிடப்பட்டு வந்தது.

india-inflation-cpi-5 yrs - april - 2022

நடப்பில் மொத்த விலை பணவீக்கம் மற்றும் சில்லரை விலை பணவீக்கம் என இரு கணக்கீடுகளும் இருக்கும் நிலையில், சில்லரை விலை பணவீக்க விகிதம் தான் பொருளாதார முன்னுதாரணத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. 

ஒரு நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் போது, வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது பொருளாதாரத்தின் அடிப்படை நிகழ்வு. அதாவது உயரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும். இது தொழில் சார்ந்த பங்குச்சந்தைக்கு பாதகமாகவும், வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு சற்று சாதகமாகவும் அமையும். எப்போதெல்லாம் அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(தேவை) குறைகிறதோ, அப்போது வங்கி டெபாசிட்க்கான வருவாய் அதிகரித்துள்ளது எனலாம்.  

2013-14ம் ஆண்டு காலத்தில் கடனுக்கான வங்கி வட்டி விகிதம் பத்து சதவீதத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வட்டி விகிதம் ஒன்பது சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. 2013ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்திற்கு அரசின் கடன்(Debt to GDP) 67 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பில் இது 74 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி-கடன் விகிதம் சற்று குறைவாக இருப்பது சாதகமான ஒன்று.

இருப்பினும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஏப்ரல் 2022 கால நிலவரப்படி, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 20.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அளவு அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் இறக்குமதியில் கனிம எரிபொருட்கள், எண்ணெய், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் நகைகளின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது.

சீனா, சவுதி அரேபியா, ஈராக், இந்தோனேஷியா மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளிடம் வர்த்தக பற்றாக்குறையும், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்(UAE), இங்கிலாந்து மற்றும் வியட்நாம் நாடுகளிடம் உபரியாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது.

மிதமான பணவீக்க விகிதம், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும். பணவாட்டத்தை(Deflation) காட்டிலும் பணவீக்கம் பெரும்பாலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது. அதே வேளையில், அதிகப்படியான பணவீக்க விகிதம் சேமிப்பையும், வாங்கும் திறனையும் குறைத்து விடும். 

பணவீக்க விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, அதனை சமாளிக்கும் வகையில் வருவாய் மற்றும் முதலீடுகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால், விலைவாசி உயர்வு பொதுவாக சந்தையில் போட்டியை மழுங்க செய்யும். இதன் மூலம் முதலீட்டின் அளவும் குறைந்து, பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்த நேரிடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

  

கேஸ்ட்ரால் இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் – ரூ. 228 கோடி

கேஸ்ட்ரால் இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் – ரூ. 228 கோடி 

Castrol India reported a Net profit of Rs.228 Crore – Q1CY22 Quarterly results

லண்டனை தலைமையிடமாக கொண்ட பிரிட்டிஷ் பெட்ரோலிய(BP) நிறுவனத்தின் துணை நிறுவனமான கேஸ்ட்ரால் இந்தியா, கடந்த 1910ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவின் வாகன மற்றும் தொழிற்துறைக்கு தேவையான  மசகு எண்ணெய்(Lubricant) உற்பத்தியில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக கேஸ்ட்ரால் இந்தியா உள்ளது.

ஐந்து உற்பத்தி ஆலைகள், 270 விநியோகதாரர்கள் மற்றும் 70,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் தனது சேவையை விரிவடைய செய்துள்ளது இந்நிறுவனம். 1982ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கேஸ்ட்ரால் இந்தியாவின் இன்றைய சந்தை மூலதன மதிப்பு ரூ.10,750 கோடி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூட்டு ஒப்பந்தத்தின் படி, நாட்டில் புதிய எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைத்து கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இதன் மூலம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான 49 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது. 

இவற்றில் 1,400 பெட்ரோல் பம்புகளையும், விமான போக்குவரத்துக்கு தேவையான 31 எரிபொருள் நிலையங்களையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கையகப்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரிலையன்ஸ்-பிரிட்டிஷ் பெட்ரோலியம்(Jio-Bp) மற்றும் டி.வி.எஸ். மோட்டார் ஆகிய நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான மின்னணு சார்ஜிங் உட்கட்டமைப்பை(EV Charging Infrastructure) ஏற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 2022 காலாண்டில் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.1,236 கோடியாகவும், செலவினம் 918 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாபம்(Operating profit) 317 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம் 26 சதவீதமாகவும் உள்ளது. மார்ச் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.228 கோடி.

2021ம் ஆண்டின்(Calendar Year) முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,192 கோடியாகவும், நிகர லாபம் 758 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஆண்டின் வருவாய், கடந்த பத்து வருடங்களில் இல்லாத வளர்ச்சி அளவாகும். 

கடனில்லா நிறுவனமாக வலம் வரும் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர்கள் பங்களிப்பு 51 சதவீதமாக உள்ளது. அன்னிய முதலீட்டாளர்களிடம் 11 சதவீத பங்குகளும், உள்ளூர் நிறுவனங்களிடம் 16 சதவீத பங்குகளும் உள்ளது. இவற்றில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 11 சதவீத பங்குகளை வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. 

கேஸ்ட்ரால்(Castrol Ltd UK) நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் 150 நாடுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ளது. போக்ஸ்வேகன், ஆடி(Audi), பி.எம்.டபுள்யூ(BMW) ஆகியவை இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் விலை, பங்கு ஒன்றுக்கு 108 ரூபாயாக உள்ளது. இதன் உள்ளார்ந்த மதிப்பு(Intrinsic value with MoS) பங்கு ஒன்றுக்கு ரூ.140 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.      

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல்(Fundamental Analysis) மட்டுமே. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2021-22ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.22,110 கோடி

2021-22ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.22,110 கோடி 

Infosys reported a Net Profit of Rs.22,110 Crore in the Financial year 2021-22 – Results

இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் கடந்த 1981ம் ஆண்டு துவங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பிரிவில் டி.சி.எஸ். நிறுவனத்திற்கு பிறகு நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இன்போசிஸ் திகழ்கிறது. வருவாய் அடிப்படையில் உலகின் முதல் 1000 நிறுவனங்களில்(Public Company) ஒன்றாகவும் இந்நிறுவனம் உள்ளது. 

சுமார் 2.76 லட்சம் பணியாளர்களை கொண்டு இயங்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நிதித்துறை, காப்பீடு, உற்பத்தி மற்றும் பிற துறைகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கி கொண்டிருக்கும் இந்நிறுவனம் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் அதிகமான அலுவலகங்களை கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பெருநிறுவன பல்கலைக்கழகம்(Corporate University) ஒன்றை சுமார் 337 ஏக்கர் பரப்பளவில் இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட பயிற்றுனர்களும், 200 வகுப்பறைகளும் உள்ளன. தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அதனை சார்ந்த வேலைகளுக்கு இப்பல்கலைக்கழகம் பயன்படுகிறது. 

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 7.35 லட்சம் கோடி ரூபாய். நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.07 ஆக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 13 சதவீதமாகவும், நிறுவனத்தின் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 152 மடங்குகளில் உள்ளது. 

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,21,641 கோடியாகவும், செலவினம் 90,150 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) 26 சதவீதமும், வரிக்கு முந்தைய லாபம் 30,110 கோடி ரூபாயாகவும் உள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனம் நிகர லாபமாக 22,110 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. மார்ச் 2022 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.73,252 கோடி. செயல்பாட்டு மூலதனம்(Working Capital) மார்ச் 2022ல் 48 நாட்களாக உள்ளது. 

அன்னிய முதலீட்டாளர்களிடம் சுமார் 33 சதவீத பங்குகளும்,  உள்நாட்டு முதலீட்டாளர்களிடம்(Domestic Institutional Investors) 16 சதவீத பங்குகளும் உள்ளது கவனிக்கத்தக்கது. எல்.ஐ.சி. இந்தியா(LIC) காப்பீடு நிறுவனத்திடம் சுமார் 6 சதவீத இன்போசிஸ் பங்குகள் கைவசம் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எகிறும் விலைவாசி உயர்வு – நாட்டின் மார்ச் மாத பணவீக்கம் 6.95 சதவீதம்

எகிறும் விலைவாசி உயர்வு – நாட்டின் மார்ச் மாத பணவீக்கம் 6.95 சதவீதம்

India’s Retail Inflation to 6.95 Percent – March 2022

உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டுறவில் உள்ள நாடுகள், மார்ச் மாதம் முதல் தான் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் 8.5 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

தற்போது சொல்லப்பட்ட அமெரிக்க பணவீக்க விகிதம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வாகும். எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களில் ஏற்பட்ட விலை மாற்றமும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

ஏற்கனவே 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, உலக நாடுகளிடையே பொருட்கள் மற்றும் சேவை விநியோக சங்கிலியில் இடையூறு(Supply chain Disruption) ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் தீர்க்கப்படவில்லை.

இன்று(12-04-2022) இந்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால்(MOSPI) வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டின் சில்லரை விலை (நுகர்வோர்) பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக சொல்லப்படுகிறது.

மார்ச் மாதத்தில் சொல்லப்பட்ட பணவீக்கம், சந்தை மதிப்பீட்டை தாண்டிய அளவாக தற்போது உள்ளது. 6.35 சதவீதமாக சில்லரை விலை பணவீக்கம் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், மார்ச் மாத முடிவில் 6.95 சதவீதமாக இருந்துள்ளது.

உணவு பொருட்களின் விலை தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக உயர்ந்து வந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 18.79 சதவீதமும், காய்கறிகள் 11.64 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் வகைகள் 9.63 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 7.52 சதவீதமாகவும் விலை உயர்ந்துள்ளது. 

பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால பணவீக்க இலக்கு 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையில் இருக்கும் போது, தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேலாக இருப்பது கவனிக்கத்தக்கது.

உயர்ந்து வரும் எரிபொருட்களின் விலையால் ஏப்ரல் மாத பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. நாட்டின் பணவீக்க விகிதத்தில் உணவுப்பொருட்களின்(Food and Beverages) பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக உள்ளது. 

எகிறும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வரக்கூடிய காலங்களில் பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

No change in Repo Rate for the Eleventh Time – RBI Monetary Policy 

நடப்பு நிதியாண்டின் முதல் கூட்டமாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் வங்கி ரெப்போ வட்டி விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் சார்ந்த அறிக்கை இன்று பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) வெளியிடப்பட்டது. 

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் இம்முறை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் எனவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம், எந்த மாற்றமுமின்றி 3.35 சதவீதத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு கடந்த 2020ம்  ஆண்டு முதல் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் பெரியளவில் மாற்றமில்லை.

தற்போது சொல்லப்பட்ட அறிவிப்புடன் சேர்த்து, பதினொன்றாவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வரக்கூடிய மாதங்களில் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம். 

நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.2 சதவீதமாக இருக்கும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதுவே கடந்த முறை, பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாகவும், பணவீக்கம் 5.3 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கப்பட வேண்டியவை.

பணவீக்க மதிப்பீட்டில் அதிகபட்சமாக 2022-23ம் நிதியாண்டின் முதல் காலாண்டில்(April – June 2022) 6.3 சதவீதமாக பணவீக்கம் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் விலைவாசி உயர்வை(Inflation) கட்டுப்படுத்துவதே தற்போதைய நோக்கம் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நடப்பாண்டில் உயர்ந்து வரும் நுகர்வோர் விலை பணவீக்கம் – 2022

நடப்பாண்டில் உயர்ந்து வரும் நுகர்வோர் விலை பணவீக்கம் – 2022

India’s rising Retail inflation – Consumer Price Index 2022

கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் உலகளவில் பொருட்கள் மற்றும் சேவை விநியோக சங்கிலியில்(Supply Chain Disruption) இடையூறு ஏற்பட்டிருந்தது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவு மீட்கப்பட்டிருந்தாலும், சரக்கு போக்குவரத்து சேவையில் இன்றளவும் சுணக்கம் காணப்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு வருடங்களாக அரசின் பொருளாதார ஊக்குவிப்பு இருந்திருந்தாலும், தேவை மற்றும் உற்பத்தியில் அதிகமாக இடைவெளி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பணவீக்க விகிதத்திலும் மாற்றம் நிகழந்து வருவது கவனிக்கத்தக்கது.

நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் சில்லரை விலை என்ற நுகர்வோர் விலை(Consumer Price Index) பணவீக்கம் 6.07 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த எட்டு மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். இதற்கு முன்பு 2021ம் வருடத்தின் மே மாதத்தில் 6.30 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் அன்றைய ஆண்டின் அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டிருந்தது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் சில்லறை விலை பணவீக்க விகிதம் குறைந்தபட்ச அளவாக 2019ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும், அதிகபட்ச அளவாக 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 7.61 சதவீதமாகவும் இருந்துள்ளது. 

நடப்பு பிப்ரவரி மாத பணவீக்கம் அதிகரித்ததற்கான காரணமாக காய்கறி, உணவுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வகைகளின் விலை இருந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 16.5 சதவீதமும், இறைச்சி மற்றும் மீன் வகைகள் 7.5 சதவீதமும், காய்கறிகள் 6 சதவீதமும் சொல்லப்பட்ட மாதத்தில் அதிகரித்துள்ளது. 

இது போல ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) விலை 8 சதவீதமும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 8.86 சதவீதமும், வீட்டுமனை 4 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ரிசர்வ் வங்கியின் சில்லறை விலை பணவீக்கத்திற்கான குறுகிய கால இலக்கு 2 சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம்(WPI) 13.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதும், 2020ம் ஆண்டின் மே மாதம் முதல் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

வரக்கூடிய வாரங்களில் உயர்ந்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும். நடப்பு போர் பதற்ற சூழ்நிலையும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையின் விலையை பெருமளவில் மாற்றக்கூடும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

Things to do as an Investor in the Economic or War Crisis 

2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உலக பொருளாதார வீழ்ச்சி, தேவைக்கும்-உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல், பொருட்கள் மற்றும் சேவையை பெறுவதில் இடையூறு, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டது. இதன் மூலம் நாம் புதியதொரு இயல்பு வாழ்க்கையை(New Normal) தொடர வேண்டிய மாற்றம் நிகழ்ந்தது.

கடந்த ஓராண்டாக பொருளாதார நிலை ஓரளவு மேம்பட்டு வந்திருந்தாலும், 2020ம் ஆண்டு உலகளவில் வீழ்ந்த உலக பங்குச்சந்தை குறியீடுகள் வேகமாக மீண்டெழுந்தது. வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட சந்தை காலமாக இவை சொல்லப்படுகிறது. புதிய உச்சத்தை அடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அதிக ஏற்ற-இறக்கத்துடன் பக்கவாட்டில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை குறியீடுகள் பணவீக்க விகிதம் மற்றும் வங்கி வட்டி விகித மாற்றத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது உக்ரைன்-ரஷ்ய போர் நிலையும் தொற்றி கொண்டன. ஒவ்வொரு நாள் வர்த்தகத்தின் ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக ஒவ்வொரு தகவலும் சொல்லப்படுவதுண்டு. நடப்பு சந்தை இறக்கத்திற்கு உக்ரைன்-ரஷ்ய போர் மட்டுமே இப்போது காரணமாக அமைந்து விட்டது.

பொதுவாக நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருப்பதற்கான குறியீடாக அந்நாட்டின் பங்குச்சந்தை, தொழிற்துறை மற்றும் வீட்டுமனை(Realty) வளர்ச்சியை கொண்டிருக்கும். இதுவே பொருளாதார மந்தநிலையில் இருக்கும் போது, மேலே சொல்லப்பட்டவை இறக்கத்திலும், இதற்கு மாறாக தங்கம் மற்றும் கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்கும். அதாவது சுருக்கமாக சந்தை வீழும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது கடன் பத்திரங்களின் தேவை அதிகரிப்பதும் பொருளாதார உலகின் இயல்பு.

எனவே பொருளாதாரத்தில் தேவைக்கும்-இருப்புக்குமான இடைவெளியே பெரும்பாலும் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கிறது. முதலாம் உலக போருக்கு பின்பு, அடுத்தவொரு நிகழ்வு இது போன்று நடைபெறாது என நினைத்திருந்த நிலையில் இரண்டாம் உலகப்போரை இவ்வுலகம் சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. ஜெர்மனி மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலைக்கு(Recession) செல்ல உள்ளதாக அந்நாட்டின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கிறது. உக்ரைன்-ரஷ்ய போர் ஒரு வாரத்தில் முடியுமா, இல்லையெனில் இன்னும் பல காலம் எடுத்து கொள்ளுமா என்பதனை நம்மால் கணிக்க இயலாத ஒன்று.

அதே வேளையில், ஒவ்வொரு நாட்டில் ஏற்பட்டுள்ள கடன் அதிகரிப்பும் அதனை சார்ந்த பணவீக்க விகிதமும் தான் வரக்கூடிய நாட்களில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றையும் நாம் எதுவும் செய்து விட முடியாது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வேலை மத்திய வங்கிக்கும், அரசுக்கும் தான்.

வரக்கூடிய காலகட்டங்கள் நமக்கு மீண்டும் புதியதொரு இயல்பு நிலையை அறிவுறுத்தலாம். குறுகிய காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையின் விலை அதிகரிக்கலாம். பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படலாம். நீண்டகாலத்தில் பொருளாதாரம் ஏற்றமடைய கூடிய வாய்ப்பு தென்பட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகமாக உள்ளது.

இருப்பினும், முதலீட்டாளராக நாம் நம்மால் முடிந்த சில முன்னெடுப்புகளை செய்ய முடியும். 

  • எதிர்வரும் சவால்களை சந்திக்க: உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்குமான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் பேரில் போதுமான டேர்ம் காப்பீடு தொகை, விபத்து காப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மருத்துவ காப்பீட்டை உறுதி செய்துள்ளீர்களா ?
  • வேலையிழப்பு அல்லது தொழிலில் மந்தநிலை ஏற்படக்கூடிய காலத்தை சமாளிக்க குறைந்தது ஆறு மாதம் முதல் இரண்டு வருடத்திற்கு தேவையான அவசர கால நிதியை(உங்களது மாத வருமானத்தின் மடங்குகளில்) தயார் செய்து விட்டீர்களா ?
  • நிதி இலக்குகளுக்கான(Financial Goals) சேமிப்பு மற்றும் முதலீட்டு தொகை தடையேதும் இல்லாமல் செல்கின்றனவா ?
  • பொதுவாக உங்களது நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds) பயன்படுத்துங்கள். அடுத்த தலைமுறைக்கு தேவையான செல்வவளத்தை ஏற்படுத்த நேரடி பங்குகளை(Direct Equity) கவனியுங்கள். குறுகிய கால தேவைகளுக்கு பங்குச்சந்தையை பயன்படுத்த வேண்டாம்.
  • பங்குச்சந்தை இறங்கினால் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதே வேளையில் சிறு துளி பெரு வெள்ளம் போல, சிறுக சிறுக முதலீடு செய்து வாருங்கள். ஒரே நாளில் பணக்காரராக வேண்டும் என்று பங்குச்சந்தையில் உங்களது கைவிரல்களை சுட்டு கொள்ள வேண்டாம்.
  •  எதனையும் நாம் நேர்மறையாக அணுக வேண்டுமென்றாலும், பங்குச்சந்தையில் மட்டும் பங்கு நிறுவனங்களை கண்டறியும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். பைசாவில் இருந்து பத்து ரூபாய்க்கும், நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கும் குறுகிய காலத்தில் ஏற்றமடையும் பங்குகள் அனைத்தும் நல்ல நிறுவன பங்குகள் என்று சொல்லி விட முடியாது.
  • பங்குச்சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறக்கம் கண்டிருக்கும் நாட்களில் பெரும்பாலும் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடைபெற்றுள்ளது. எனவே நாம் இதனை ஒரு வாய்ப்பாக அமைத்து கொள்ள, நல்ல நிறுவன பங்குகளை அலசி ஆராய்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • பங்குகளை அவசரமாக வாங்க வேண்டும் என்ற நிலையை எப்போதும் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதற்கென கிடைக்கும் உள்ளார்ந்த விலையை(Intrinsic or Fair Value) எப்போதும் பரிந்துரையுங்கள். சில நேரங்களில் நல்ல நிறுவன பங்குகள் நாம் நினைக்கக்கூடிய விலையில் கிடைக்கப்பெறாது.
  • இனிவரும் காலங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் என்பதனை மனதில் நிறுத்தி, அஸெட் அலோகேஷன் முறையை கடைபிடியுங்கள். வருடத்தின் எல்லா நாட்களிலும் பங்குச்சந்தை மட்டுமே ஏற்றம் பெறும், தங்கம் எப்போதும் விலையேறும் என எண்ணி விட வேண்டாம். பல முதலீட்டு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்வது, நட்டத்தை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தும்.
  •  சந்தை உச்சத்தில் இருக்கும் போது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு, இறக்கத்தில் வாங்கி வைக்கிறேன் என உங்களால் எப்போதும் சரியாக கணிக்க இயலாது. அஸெட் அலோகேஷன்(Asset Allocation) செய்வதன் மூலம் மட்டுமே, நீங்கள் பெரும்பாலான வாய்ப்புகளை பயன்படுத்த முடியும்.
  • பங்குச்சந்தை அடுத்த சில வருடங்களுக்கு பெரும் வீழ்ச்சியை கண்டால் உங்களது முதலீட்டு உத்தி என்ன ? (நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தும்)
  • போன்சி(Ponzi) போன்ற ஏமாற்று வழிகளின் மூலம் நீங்கள் மிக விரைவாக பணம் சேர்த்து விட முடியும் என நம்புகிறீர்களா, மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தவிர்த்து விட முடியமா என்ன  ?
  • இறுதியாக உங்களது உயிலை(Will) தயார் செய்ய மறவாதீர்கள். இதற்கு வயது வரம்பு பெரிதாக இல்லை. 18 வயது நிரம்பியிருந்து சுயநிலையில் உங்களது உயிலை எழுதலாம். உங்களது காலத்திற்கு பின்பு ஏற்படும் நிதிச்சிக்கலை உயில் எழுதுவதன் மூலம் தவிர்க்கலாம். உலக பொருளாதார மந்தநிலையையோ, பணவீக்கத்தையோ நம்மால் கணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால் நமக்கான பாதுகாப்பையும், நிதி மேம்பாட்டையும் செய்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.01 சதவீதம்

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.01 சதவீதம் 

India’s CPI Retail Inflation in January 2022 – 6.01 Percent

 

சில்லறை விலை பணவீக்கம் என சொல்லப்படும் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம், கடந்த சில மாதங்களாக குறைந்து வந்திருந்த நிலையில் ஜனவரி மாதத்தில் 6 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் முதல் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் 6.01 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

 

அதே வேளையில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(|Unemployment rate) சற்று குறைந்துள்ளது. ஜனவரி மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் நகர்புறத்தில் 8.16 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.84 சதவீதமாகவும் இருந்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.57 சதவீதமாக ஜனவரி மாதத்தில் இருந்துள்ளது. 

 

கடந்த சில மாதங்களாக கிராமப்புறங்களை காட்டிலும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் அதிகரித்ததற்கான காரணமாக உணவுப்பொருட்களின் விலை இருந்துள்ளது. 

 

பருப்பு வகைகள் 3 சதவீதமும், காய்கறிகள் 5.19 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கு பிறகான காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக ஜனவரி மாத விலைவாசி உள்ளது. ஒளி மற்றும் எரிபொருட்களின் விலையும் 9.32 சதவீதமாக அதிகரித்து வந்துள்ளது.

 

துணிமணிகள் மற்றும் காலணிகள் 8.84 சதவீதம், வீட்டுமனை 3.52 சதவீதம் மற்றும் புகையிலை பொருட்கள் 2.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க(Consumer price index) குறியீட்டில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டுமனை 10.7 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு 8.6 சதவீதமும், சுகாதாரம் 5.9 சதவீதம் மற்றும் கல்வி 4.46 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

 

பாரத ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்திற்கான குறுகிய கால இலக்கு 2% முதல் 6% வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட நுகர்வோர் விலை பணவீக்கம் இலக்கை தாண்டியுள்ள நிலையில், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே சொல்லப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் –  ரூ.4,156 கோடி

ஐ.டி.சி. காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் –  ரூ.4,156 கோடி 

ITC reported a Net Profit of Rs.4,156 Crore – Q3FY22 Results

2.89 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம் தனது 2021-22ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மூன்றாம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 16,634 கோடி ரூபாயாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,492 கோடியாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.4,156 கோடியை ஈட்டியுள்ளது. 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வருவாய் 31 சதவீதமும், நிகர லாபம் 12.7 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. சிகரெட்டு, நுகர்வோர் உணவு பொருட்கள், விவசாயம் சார்ந்த தொழில், பேப்பர் பொருட்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் காணப்பட்ட வருவாய் வளர்ச்சி இதன் ஒட்டுமொத்த வருவாயை அதிகரித்துள்ளது.

எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையின் கீழ் சுமார் 45 பிரிவுகளில் 700க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது ஐ.டி.சி. நிறுவனம். உணவுப்பொருட்களில் ஆசிர்வாத் கோதுமை, ITC Master Chef, Sunfeast, Bingo, Yippee, Fabelle, Candyman, சன்ரைஸ் மசாலா, டார்க் பேண்டஸி ஆகியவை இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டுகள்.

Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Mom;s Magic, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique, Savlon ஆகியவை நிறுவனத்தின் மற்ற துறை சார்ந்த பிராண்டுகள். ஐ.டி.சி. நிறுவனத்தின் ஹோட்டல் பிரிவில் கிராண்ட் சோழா, விண்ட்சார், கார்டெனியா மிகவும் பிரபலமானவை.

நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆகியவற்றில் நிறுவனம் திறம்பட நிர்வகித்து வருவதாக தெரிவித்துள்ளது. கார்பன் இல்லாத சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கில் நிறுவனத்தின் தொழில் மேம்பட்டு வருகிறது.

நிறுவனத்திற்கு கடன் எதுவும்(Debt to Equity) பெரிதாக இல்லை. செப்டம்பர் 2021 காலாண்டு முடிவின் படி நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.57,955 கோடி. நிறுவனர்கள்(Promoter Holding) சார்பாக பங்குகள் எதுவும் நேரடியாக இல்லை. இருப்பினும் பொதுவெளியில் அவர்களிடம் குறிப்பிடத்தக்க பங்குகள் இருப்பது கவனிக்கத்தக்கது. அந்நிய முதலீட்டாளர்கள் சார்பில் சுமார் 44 சதவீத பங்குகள் உள்ளது. எல்.ஐ.சி. காப்பீட்டு(LIC India) நிறுவனத்திடம் சுமார் 16 சதவீத பங்குகளும் உள்ளன.

நூறு வருடத்திற்கு மேலான தொழில் அனுபவம் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. சஞ்சீவ் பூரி உள்ளார். 1910ம் ஆண்டு W.D & H.O. Wills நிறுவனத்தால் துவங்கப்பட்ட இம்பீரியல் டொபாகோ கம்பெனி(Imperial Tobacco Company of India) தான் பின்னொரு காலத்தில் ஐ.டி.சி. லிமிடெட் என மாற்றம் பெற்றுள்ளது. புகையிலை தொழிலை ஆரம்ப நிலையாக கொண்டிருந்தாலும், தற்போது நுகர்வோர் உணவுப்பொருட்கள் துறையில் நாட்டின் தவிர்க்க முடியாத நிறுவனமாக ஐ.டி.சி. உருவாகியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிரைமா பிளாஸ்டிக்ஸ் – பங்குச்சந்தை அலசல்

பிரைமா பிளாஸ்டிக்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

Prima Plastics Ltd – Fundamental Analysis – Stocks

பிளாஸ்டிக் நாற்காலிகள் என சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது சுப்ரீம் மற்றும் நீல்கமல்(இந்தியாவில்) சேர்கள் தான். இதற்கு அடுத்தாற் போல நாற்காலி பிராண்டுகளில் பெயர் போன நிறுவனம் பிரைமா பிளாஸ்டிக்ஸ். பிளாஸ்டிக் வார்ப்பட பர்னிச்சர்கள்(Moulded Furniture) தயாரிப்பு பிரிவில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

கடந்த 1993ம் ஆண்டு திரு. மன்கர்லால் பரேக் அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் பிரைமா பிளாஸ்டிக்ஸ். டாமன் நகரத்தை தலைமையிடமாக கொண்டு, தனது முதல் உற்பத்தி பிரிவை துவக்கியது இந்நிறுவனம். பிளாஸ்டிக் சேர்கள், தட்டுகள், காப்பிடப்பட்ட பெட்டி(Insulated Box), காய்கறி மற்றும் பழங்களை வைப்பதற்கான பெட்டிகள், சாலை பாதுகாப்புக்கு தேவையான பிளாஸ்டிக் உபகரணங்கள், குப்பை தொட்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், விடுதிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான இதர பிளாஸ்டிக் வகைகளை உற்பத்தி செய்து வருகிறது.

வெறுமென உற்பத்தியை மட்டும் கொண்டிருக்காமல் விற்பனையில் 20 நாடுகளுக்கும் மேலாக ஏற்றமதியும் செய்து வருகிறது பிரைமா பிளாஸ்டிக்ஸ் நிறுவனம். தனது தொழிலை ஆரம்பித்து 28 வருடங்கள் தான் எனினும், இன்று உலகளவில் ஏழு உற்பத்தி மையங்களையும், 450 விநியோகஸ்தர்கள் மற்றும் 5,500 டீலர்களையும் கொண்டுள்ளது.

மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தனது உற்பத்தி கிளைகளை பரவியுள்ளது இந்நிறுவனம். Firstcry, Pepperfry மற்றும் அமேசான் போன்ற பிரபல இணைய பிராண்டுகளுடன் கைகோர்த்து தனது விற்பனையை செய்து வருகிறது. நிறுவனத்தின் பொருட்கள் பெரும்பாலும், ‘Prima’ என்ற பிராண்டின் கீழ் விற்பனையாகிறது.

1995ம் ஆண்டு பிரைமா பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தனது பொது பங்கு வெளியீட்டை துவங்கியுள்ளது. தற்போது சந்தையில் உள்ள இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 118 கோடி ரூபாய். பங்கு ஒன்றின் விலை 107 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 104 ரூபாயாகவும், முக மதிப்பு(Face value) 10 ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 58 சதவீதமாகவும், கடன்-பங்கு விகிதம் 0.28 ஆகவும் இருக்கிறது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. 2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 119 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் ரூ.15 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 15 கோடி ரூபாய். அதாவது பங்கு ஒன்றுக்கான லாபம் ரூ.13.63(Earning per share).

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த பத்து வருடங்களில் 6 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 19 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு 103 கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.

2002ம் ஆண்டு நிறுவனர் காலமான பிறகு, திரு. பாஸ்கர் மன்கர்லால் பரேக், நிறுவனத்தின் தலைவராகவும், முழுநேர இயக்குனராகவும் உள்ளார். நிறுவனம் துவங்கிய காலத்திலிருந்து நிர்வாக இயக்குனராக திரு. திலீப் மன்கர்லால் பரேக் வகிக்கிறார். மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் தற்போது 13 மடங்குகளில் உள்ளது. பங்கு மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 14 சதவீதமாக இருக்கிறது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

India’s First Silver ETF Fund to invest – Investment opportunity 2022

பொதுவாக தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் பங்களிப்பு உற்பத்தி சார்ந்த துறையில் அதிகமாக உள்ளது. தங்கம் அணிகலன்களாக வலம் வந்தால், வெள்ளி தொழிற்துறைக்கு தேவையான முக்கிய மூலப்பொருளாக அமைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருவது பல நூற்றாண்டுகளை கடந்து வந்துள்ளது. வெள்ளியின் பங்களிப்பு தொழிற்துறையில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பங்கு சந்தைகள் சரியும். இதனை சரிக்கட்டும் ஆயுதமாக தங்கமும், வெள்ளியும் உதவும். நிதி சொத்துக்கள்(Financial Assets) வரிசையில் ஏற்கனவே தங்கம் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெள்ளி முதலீட்டிலும் இது சாத்தியப்பட்டுள்ளது.

நடைமுறையில் தங்கம் – அரசு பத்திரமாகவும், சந்தையில் இ.டி.எப். வடிவிலும் மற்றும் பரஸ்பர நிதியின் ஒரு திட்டமாகவும்(SGB, Gold ETF, Gold Fund) கிடைக்கப்பெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வெள்ளி இ.டி.எப். முதலீடு சார்ந்த விதிமுறைகளை செபி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளி மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத முதலீடு இருக்க வேண்டுமென்றும், முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் முதலீடு 99.9 சதவீதம் தூய வெள்ளியாக வாங்குவதற்கு பயன்பட வேண்டும் என விதிமுறை சொல்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தாலும், மேலும் இரண்டு நிறுவனங்கள்(Aditya Birla Sun life, Nippon India Mutual Funds) வெள்ளி சார்ந்த இ.டி.எப். திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.

புதிய பண்டு வகையாக(NFO) வரும் ஐ.சி.ஐ.சி.ஐ. சில்வர் இ.டி.எப். திட்டம் ஜனவரி 5 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பதிவுக்கு உள்ளது. பிறகு இதனை நாம் வெளிச்சந்தையிலும் வாங்கி கொள்ளலாம். உள்நாட்டு விலையில் உள்ள வெள்ளியின் செயல்திறனுக்கு ஏற்ப, Silver ETF விலையும் மாறுபடும்.

வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு இது புதிய மற்றும் எளிமையான வாய்ப்பாக காணப்படுகிறது. சில்வர் ETF மூலம் தர தூய்மை, பாதுகாப்பு மற்றும் விலை ஆகியவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ.100 (NFO) மட்டுமே.

இனி, வெள்ளியை நாம் பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு திட்டங்கள் வாயிலாகவும் வாங்கி கொள்ளலாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

Best 5 Funds for you to invest in 2022 – Mutual Fund investments

கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் அபரிதமாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பு இருந்ததென்றால், அது 2020ம் ஆண்டின் கொரோனா கால துவக்கம் தான். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகளவில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார வீழ்ச்சி, பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை தந்தது எனலாம்.

மீண்டும் ஒரு பெருத்த வீழ்ச்சி உடனடியாக ஏற்படுமா என்றால், உலக சந்தையை கணிக்க பெரும் பணக்காரரர்களாலும், ஆகச்சிறந்த பொருளாதார வல்லுனர்களாலும் முடியாது. அதே வேளையில், அவர்களால் அடிப்படை பொருளாதார காரணிகளை புரிந்து எச்சரிக்கை செய்ய முடியும். அதிக ஏற்றமிருந்தால் இறக்கம் ஏற்படுவது உறுதி, இது போல இறக்கம் என ஒன்றிருந்தால் ஏற்றமும் சாத்தியமே.

பங்கு முதலீட்டில் பெரும்பாலோர் தோற்பது இரண்டு காரணிகளால் தான் – குறுகிய காலத்தில் பேராசை மற்றும் சந்தையை கணிக்கிறேன் என தவறான முதலீட்டு முடிவை எடுப்பது. எந்தவித சலனமும் இல்லாமல் நீண்ட காலத்தில் தொடர் முதலீடு செய்து வருபவர்களே எப்போதும் வெற்றி வாகை சூடுகின்றனர்.

‘ பங்கு முதலீட்டை என்னால் சரிவர கையாள முடியவில்லை’ என்பவர்கள் அதற்கென துறை சார்ந்த ஆலோசகர்களை வைத்து கொள்ளலாம். இதற்கான கட்டணமும் உண்டு. இலவசமாக உங்களுக்கு யாரும் பெரும் செல்வத்தை அளித்து விட முடியாது. எனவே ஆலோசனை பெறுபவர்களிடமும் கவனம் வேண்டும்.

சந்தையில் நேரடியாக முதலீடு செய்து கண்காணிக்க நேரமில்லை என்பவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) செய்யப்படும் முதலீடு உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு துணை புரிய கால அளவுகளை(Goal Period) ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்கு லிக்விட் மற்றும் கடன் பண்டுகள்(Liquid and Debt Mutual Funds), நடுத்தர கால தேவைகளுக்கு ஹைபிரிட் மற்றும் மல்டி அஸெட் பண்டுகள்(Hybrid and Multi Asset), நீண்ட காலத்திற்கு பங்கு சார்ந்த பண்டுகள்(Equity oriented) என பிரித்து முதலீடு செய்யலாம்.

அஸெட் அலோகேஷன் முறையில் பிரித்து முதலீடு செய்யும் போது சந்தை ஏற்ற-இறக்கத்தை பற்றிய கவலையில்லை. தங்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் நமது முதலீட்டை பெரிதாக பாதிக்காது. அது போன்ற கலவையுடன் உள்ள ஐந்து பண்டுகள் உங்களுக்காக. கடந்த காலங்களில் இந்த பண்டுகள் அளித்த வருவாய், பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் ரிஸ்க் தன்மை ஆகியவை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் குறிப்பிடப்பட்ட கடந்த கால வருவாய், எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் இவை பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்கும். சொல்லப்பட்ட பண்டுகள் அனைத்தும் பணப்புழக்கம்(Liquidity), முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification & Asset Allocation), வரி சேமிப்பு, உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்பு(Global Equity exposure) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

  • Aditya Birla Sun Life(ABSL) Gold Fund

  • HDFC Multi Asset Fund

  • PGIM India Midcap Opportunities Fund

  • Mirae Asset Tax Saver Fund

  • Parag Parikh(PPFAS) Flexi Cap Fund

Mutual funds 2022

வரக்கூடிய 2022ம் வருடம் நமக்கு எப்படியிருக்கும் என நம்மால் கணிக்க இயலாது. நாமும் ஒவ்வொரு வருடமும் புதிய இலக்குகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். 2022ம் ஆண்டுக்கான உங்கள் நிதி இலக்குகளுக்கு சொல்லப்பட்ட பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். பின்னாளில் இந்த முதலீட்டு பெருக்கம் உங்களை நிதி சார்ந்து பாதுகாக்கும்.

குறிப்பு: மேலே உள்ள பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர் முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

How to track the Stocks(Shares) fundamentally ?

பங்குச்சந்தையில் நாம் காணும் அனைத்து பங்குகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் வர்த்தகமாகும் என சொல்லிவிட முடியாது. பொதுவாக லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் நிறுவன பங்குகள் பெரும்பாலும் அனைத்து நாட்களிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கும். அதே வேளையில் ஸ்மால் கேப் பங்குகள் அப்படியல்ல. அவற்றில் வர்த்தக புழக்கம்(Liquidity) பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) அதிகமாக இருத்தல், பெரு நிறுவன முதலீட்டாளர்களிடம்(Institutional Investors) கைவசம் இல்லாதது மற்றும் பொதுவெளியில் மிகவும் குறைவான பங்குகளே அமைந்திருப்பது அதன் வர்த்தக புழக்கத்திற்கு காரணமாக அமையும். இருப்பினும் ‘மல்டி பேக்கர்(Multibagger)’ என சொல்லக்கூடிய பல மடங்கு லாபத்தை அளிக்கவல்லது இந்த ஸ்மால் கேப் நிறுவன பங்குகள்.

அதிக பங்குகளை கொண்டு வர்த்தகமாகும் அல்லது ஒரே நாளில் வர்த்தக அளவை அதிகமாக கொண்டிருக்கும் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்தில் வருவாயை அளிக்கும் என நாம் சொல்ல இயலாது. இதற்கு உதாரணமாக யூனிடெக், ஜே.பி.அசோசியேட்ஸ், யெஸ் பேங்க்,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வோடபோன், ஜெட் ஏர்வேஸ் போன்ற பங்குகளை சொல்லலாம். நாள் வணிகத்துக்கு(Day Trading) இவை ஏற்றவையாக தெரிந்தாலும், உண்மையில் முதலீடு செய்பவர்களுக்கு நட்டத்தை மட்டும் தான் கொடுத்துள்ளன.

“A stock is not just a ticker symbol or an electronic blip; it is an ownership interest in an actual business, with an underlying value that does not depend on its share price.” – Benjamin Graham(Father of Value Investing), The Intelligent Investor

“ பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் என்பது வெறும் எண்கள் அல்ல. அவை ஒரு நிறுவனத்தின் தொழிலில் உங்களுக்கான உரிமையாகும். உண்மையான தொழிலின் மதிப்பு என்பது அதன் பங்கு விலையை சார்ந்திருக்க  வேண்டும் என்று அவசியமில்லை “ என முதலீட்டின் தந்தை என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் கூறுகிறார்.

நீண்டகாலத்தில் பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் செல்வத்தை ஏற்படுத்த வெறுமனே பங்குகளை வாங்கி விட்டால் மட்டும் போதாது. அதனை நமது சொந்த தொழிலை போல கண்காணிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • காலாண்டு முடிவுகளும், ஆண்டு பொதுக்கூட்டமும்:

சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் தனது தொழிலுக்கான காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை வெளியிட வேண்டியது அவசியம். இது அவர்களுக்கானதல்ல, நம்மை போன்ற முதலீட்டாளர்கள், நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் நிதிநிலை  அறிக்கைகளை(Financial Statements) அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. நிறுவனம் பின்னொரு காலத்தில் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாம் இது போன்ற முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் விற்பனையும், லாபமும் ஒவ்வொரு காலாண்டிலும் எப்படி உள்ளது, இதர வருமானம்(Other income) மட்டுமே அதிகரித்து வருகிறதா, நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு, நிறுவனர்களின் பங்கு அடமானம், பங்குதாரர்களின் பங்களிப்பு(Shareholding Pattern), டிவிடெண்ட் அறிவிக்கப்படும் தேதி என அனைத்து தகவல்களையும் ஒருசேர காலாண்டு முடிவுகளில் பெற்று விடலாம். இதன் வாயிலாக பிற்காலத்தில் நமது முதலீட்டு முடிவை பரிசீலிக்க இவை உதவும்.

காலாண்டு முடிவுகளும், நிதியாண்டுக்கான நிதி அறிக்கைகளும் இணையத்தில்(BSE, NSE, Company website) எப்போதும் கிடைக்கப்பெறுகிறது. அதனை சரியான காலத்தில் வாசிப்பது முதலீட்டாளரான நமது கடமை. நிறுவனம் சார்பாக ஆண்டுக்கொரு முறை பங்குதாரர்கள் கூட்டமும்(Annual General Meeting – AGM) நடைபெறுகிறது. இணையவழி மற்றும் நேரடியாக சென்றும் இது போன்ற நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டு, நிறுவனத்தின் மீது நமக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தொழில் சார்ந்த பொதுவான கேள்விகளையும் நாம் அங்கே கேட்கலாம்.

  • வாக்களிப்பதுஉங்கள் கடமை, பங்குச்சந்தையிலும்: 

ஒரு பங்குதாரராக நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கும், தொழில் கொள்கைகளை தீர்மானிக்கவும் நமக்கான வாக்களிக்கும் உரிமை பங்குச்சந்தையில் உண்டு. “ என்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் “ என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) மற்றும் தொழில் ஆதிக்கம் பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவன பங்குகளில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.

இயக்குனர் குழு மற்றும் நிறுவன பொறுப்புகளில் ஒருவரை நியமனம் செய்தல், நீக்குதல், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றிற்கு உங்களது வாக்கு ஒரு நிறுவனத்திற்கு அவசியமானது. நீங்கள் வாக்களிக்க தவறும் நிலையில், முடிவுகளும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் டாட்டா குழுமத்தில் மிஸ்திரி குடும்ப பங்குகளின் தாக்கம், வேதாந்தா நிறுவனம் பங்குச்சந்தையை விட்டு வெளியேற முடியாமல் சென்ற தருணம், யெஸ் வங்கி பங்குகளின் முடக்கம், நிறுவனங்களின் பங்குகளை திரும்ப பெறும்(Buyback of Shares) முறை, போனஸ் பங்குகள், புதிய பங்கு வெளியீடு என பல்வேறு செயல்பாடுகளுக்கு வாக்களிப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும்.

வாக்குகளை நேரடியாக அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இணைய வழியிலான(E-Voting) வாக்களிக்கும் வசதியும் இன்று நடைமுறையில் உண்டு. இது போன்ற சேவையை NSDL மற்றும் CDSL தளங்கள் நமக்காக செய்து கொடுக்கிறது. இதற்கான சேவை கட்டணத்தை(Brokerage & DP Charges) நாம் ஏற்கனவே பங்குகளை வாங்கும் போதே அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட்டோம் என்பதனை நினைவில் கொள்ளவும்.

  • நிறுவனங்களை நேரடியாக காணுங்கள், தொழிற்சாலைக்கு செல்லுங்கள்:

ஒரு நிறுவன பங்கை நாம் இணையம் வழியாக வாங்கி விட்டால், அதனோடு பங்கு முதலீடு முடிந்து விடப்போவதில்லை. இணையம் மட்டும் பங்கு முதலீட்டுக்கான வாழ்க்கையல்ல. அவை நமக்கான எளிய கட்டமைப்பு. நீங்கள் குடியிருக்கும் அல்லது வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில், நீங்கள் வாங்கிய பங்கு நிறுவன அலுவலகம் அல்லது தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கே சென்று பாருங்கள்.

நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவை எப்படி என நேரடியாக கண்காணியுங்கள். முடிந்தால், நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவிடம் அனுமதி பெற்று அவர்களது தொழிற்சாலையை சுற்றி பாருங்கள். இதற்கான வசதியை ஒரு நிறுவனத்தின் கம்பெனி செயலாளர்(Company Secretary) பொதுவாக செய்து கொடுப்பார். நிறுவனம் சார்ந்த ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் அவருக்கு மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் எந்த தொழிலையும், அலுவலகத்தையும் கொண்டிருக்காமல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஷெல் நிறுவனங்களும்(Shell companies) உண்டு என்பது சந்தை வரலாறு. சந்தையில் அவற்றின் பங்கு விலை நாள்தோறும் ஏற்றமடைகிறது என்ற ஒற்றை காரணத்திற்காக பங்குகளை வாங்காமல், நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளை கண்காணிப்பதும் அவசியம்.

நண்பர்களோடு சுற்றுலா செல்வது போல, ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு நிறுவனத்தை நேரடியாக சுற்றி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் சேவைகள்:

நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகள் எப்.எம்.சி.ஜி.(FMCG) பொருட்களை விற்கும்(Retail & Super Market) கடைகளாக தான் இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை எப்.எம்.சி.ஜி. துறையில் காணப்படும் பிரபலமான பொருட்கள் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பொருட்களாக தான் இருக்கும். உதாரணமாக இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., டாபர், கோத்ரேஜ், மாரிகோ, கோல்கேட், பஜாஜ், டி-மார்ட் போன்ற நிறுவனங்கள் தான். நமது நகரில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் தென்படும் பிராண்டுகளின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். பேச்சுவாக்கில் கடை உரிமையாளர் அல்லது விற்பனை மேலாளரிடம் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை எப்படி உள்ளதென அறிய முற்படலாம். இதற்கெல்லாம் நாம் நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ரியல் எஸ்டேட் முதலீட்டில் விசாரிக்கிறோமே !).

  • துறை சார்ந்த நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்:

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பல துறைகளை சார்ந்தவை. வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், வாகனம், நுகர்வோர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள்(Consumer Durables), எண்ணெய் சுத்திகரிப்பு, எரிசக்தி, விவசாயம், கல்வி, மின்னணு பொருட்கள், பொழுதுபோக்கு, மருத்துவம், கட்டுமானம்,காப்பீடு, காலணிகள், ஏற்றுமதி, ஜவுளி, தொலைத்தொடர்பு என பல துறைகளை உள்ளடக்கியவை.

நீங்கள் தொழில் செய்யும் நபராக இருந்தால், உங்களது துறையில் உள்ள சாதக-பாதகங்கள் உங்களுக்கு பொதுவாக தெரிந்திருக்கும். பொருளாதார மந்தநிலை காலங்களில் உங்களது தொழில் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும், அரசு கொள்கைகள் உங்கள் தொழிலுக்கு சாதகமாக உள்ளதா எனும் விஷயங்கள் உங்களது முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள். இதனை நீங்கள் பங்குச்சந்தையிலும் பயன்படுத்தலாம்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்கள் துறையில் உள்ள சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் துறை சார்ந்த ஆலோசனைகள், விவாதங்களை முன் வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் உங்களது பங்கு முதலீட்டுக்கு உதவும்.

நண்பர் ஒருவர் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) துறையின் முக்கிய பதவியில் வேலை பார்த்து வந்தால் அவரிடம் துறை சார்ந்த வளர்ச்சியையும், எதிர்காலத்தில் இவற்றின் தாக்கம் எப்படி உள்ளதென கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இன்று பங்கு முதலீடு சார்ந்த கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் வாயிலாக கிளப் ஹவுஸ், முகநூல்(Facebook Events), வலைப்பக்க நிரல்கள்(Webinars) நாள்தோறும் நடைபெறுகின்றன. இவற்றில் கலந்து கொண்டு பங்கு சார்ந்த தொழில் புரிதலை ஏற்படுத்தி கொள்ளலாம். அதே வேளையில் நாம் அதிகாரபூர்வ மற்றும் அரசு அங்கீகரிக்கும் நிறுவன தளம் மற்றும் ஆலோசகர்களிடம் தகவல்களை பெறுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்சப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் பரிந்துரைத்தார் என பங்குகளை வாங்கி பின்னர் நட்டமடைவதை தவிர்க்க மேலே சொன்ன விஷயங்கள் நமக்கு நீண்டகாலத்தில் பயனளிக்கும். வெறுமென ஊக விஷயங்களுக்கு பின்னால் நகர்வதை விட, நாமே நமது தொழிலுக்கான(பங்கு முதலீடு) அக்கறையை கொண்டிருப்பது நலம்.

பங்குகளை கண்காணிக்க நேரமில்லை என சொல்பவர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Mutual Funds) உள்ளது. உங்களுக்காக ஒரு பண்ட் மேனேஜர் அங்கே நிர்வகிக்க தயாராக உள்ளார். நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு செல்வமீட்டலாம்.

பங்குகள் உங்களின் செல்ல(செல்வ) குழந்தைகள், அவற்றை வளரும் போது நீங்கள் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தால், பின்னொரு காலத்தில் அவை உங்களை கவனித்து கொள்ளும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

REPO rate unchanged – RBI – Monetary Policy Committee(MPC)

பாரத ரிசர்வ் வங்கி சார்பாக மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த டிசம்பர் 6 முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டுக்கு ஆறு முறை நடக்கும் இக்கூட்டத்தில் நாட்டின் வட்டி விகித மாற்றம் சார்ந்த அறிக்கைகள் வெளியிடப்படும். கூட்டத்தில் ரிசர்வ் வங்கி சார்பாக மூன்று அதிகாரிகளும், அரசு சார்பில் மூன்று உறுப்பினர்களும் கலந்து கொள்வர்.

வங்கிகளுக்கான வட்டி விகிதம், பணவீக்க நிலவரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதி சந்தை மற்றும் பொது நிதி போன்றவற்றை ஆலோசித்து பின்பு வாக்களிக்கும் முறையில் முடிவுகள் அறிவிக்கப்படும். இம்முறை கூட்டத்தில் எடுக்க முடிவின் படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி(REPO) விகிதத்தில் மாற்றமில்லை எனவும், இதற்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 5.3 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டு முழுவதுமான மதிப்பீட்டில் 9.5 சதவீதமாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் 6.6 சதவீதமும், ஜனவரி – மார்ச் நான்காம் காலாண்டில் 6 சதவீதமுமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நாட்டின் வட்டி விகிதம் கடந்த இரண்டு வருடங்களாக 6 சதவீதத்திற்கும் கீழ் இருந்து வருகிறது. இது பாரத ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்குகளை சார்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021

Income Tax Return Filing for AY 2021-22 Deadline: 31st December, 2021

2020-21ம் நிதியாண்டுக்கான (2021-22 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 2021 என்றிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் புதிய மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றால் டிசம்பர் 31, 2021 ஆக நீட்டிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், டிசம்பர் 3, 2021 தேதியின் படி, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான(Assessment Year) வருமான வரி தாக்கலை இதுவரை மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் செய்துள்ளதாகவும், தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நடப்பில் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வரி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 52 சதவீதம் பேர் இணையம் வழியாக வரி தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 59 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 1 (ITR – 1) படிவத்தையும், 9 சதவீதம் ஐ.டி.ஆர் – 3 படிவத்தையும், 8 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 2 படிவத்தையும் பயன்படுத்தி வரி தாக்கல் செய்துள்ளனர்.

இதர படிவங்களான ITR-4, 5, 6, 7 ஆகியவற்றை சுமார் 23 சதவீதம் பேர் வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தி உள்ளனர். மூன்று கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல் நடைபெற்றிருந்தாலும், E-Verification என்ற முழுமையான வரி தாக்கல் நிறைவை இதுவரை 2.69 கோடி பேர் மட்டுமே செய்துள்ளதாக வருமான வரி துறை கூறியுள்ளது.

வரி தாக்கலை Verification மூலம் உறுதி செய்வது, பான் – ஆதார் இணைப்பை ஏற்படுத்துதல், ஆதார் கார்டு தகவலில் கைபேசி எண்ணை பதிவு செய்தல், வங்கிக்கணக்கை சரியான முறையில் இணைப்பது ஆகியவற்றை செய்வதால் வருமான வரி தாக்கல் செய்யும் போது சிரமம் ஏற்படாமல் இருக்கும். வருமான வரி தாக்கல் செய்யும் முன் படிவம் 16(Form 16),  படிவம் – 26 ஏ.எஸ். (Form 26AS & AIS, TIS) மற்றும் வருடாந்திர வரித்தகவல் அறிக்கையை சரி பார்த்து கொள்வது அவசியம்.

நீங்கள் வாங்கிய மற்றும் விற்ற பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி சேமிப்பு மற்றும் டெபாசிட்டுக்கான வட்டி வருவாய், வீட்டுமனை பண பரிவர்த்தனை மற்றும் இதர நிதி சார்ந்த தகவல்கள் மேலே சொல்லப்பட்ட படிவங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை சரி பார்த்து மற்றும் உறுதி செய்து தாக்கல் செய்யும் போது, பின்னாளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். வரக்கூடிய காலக்கட்டங்களில் கடன்கள், காப்பீடுகள், புதிய நிதி சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகள் ஆகிய விவரங்களும் இது போன்ற படிவங்களில் புதுப்பிக்கப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம்

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் 

India’s GDP of 8.4 Percent in September Quarter – Q2FY22

கடந்த 2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் பெருத்த சரிவை கண்டிருந்தது. 2021ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் (-24.4) சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த காலாண்டிலும் (-7.4) சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

பெரும்பாலான வளர்ச்சியடைந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் இது போன்ற தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு குறைய குறைய பொருளாதாரமும் மீண்டெழுந்தது. கடந்தாண்டின் டிசம்பர் காலாண்டில் 0.5 சதவீதமும், மார்ச் காலாண்டில் 1.6 சதவீதமுமாக வளர்ச்சி இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல்-ஜூன் காலத்தில் 20.1 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது ஜூலை-செப்டம்பர் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி 8.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த 8.4 சதவீத வளர்ச்சி என்பது கடந்தாண்டு செப்டம்பர் 2020 காலத்துடன் ஒப்பிடப்பட்ட வளர்ச்சியாகும்.

சேவைத்துறை, நிதி மற்றும் வீட்டுமனை, அரசு நிர்வாகம், உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சியால் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது. 2021-22ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

1950ம் ஆண்டு காலகட்டங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பங்களிப்பில் விவசாய துறை 52 சதவீதத்தை கொண்டிருந்த நிலையில், இன்றைக்கு 12 சதவீதமாக உள்ளது. 2021ம் ஆண்டின் பொருளாதார பங்களிப்பில் சேவைத்துறை 60 சதவீதமும், உற்பத்தி 15 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், கட்டுமானம் 8 சதவீதம், குடிநீர் மற்றும் எரிசக்தி 5 சதவீதமுமாக உள்ளது.

விவசாயத்தின் பங்களிப்பு குறைந்திருந்தாலும், தற்போது நாட்டின் 50 சதவீத வேலைவாய்ப்பை விவசாயத்துறை உருவாக்கி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையின் கீழ் விவசாயம், வனவியல் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவை உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டைம் லூப்(Time loop): மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரிப்பு, டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க உள்ளது – என்ன செய்ய போகிறீர்கள் ?

டைம் லூப்(Time loop): மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரிப்பு, டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க உள்ளது – என்ன செய்ய போகிறீர்கள் ?

Learn the Time loop insights for the Personal Finance

உலகளவில் டைம் லூப், டைம் மெஷின் அல்லது கால பயணம்(Time Travel – Sci-fi) சார்ந்த திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், நம் நாட்டில் சற்று குறைவு தான். சமீப காலத்தில் கால பயணம் குறித்த படங்கள் இங்கே வந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற கதைகள் பொதுவாக கற்பனையாவையாக இருந்தாலும், உளவியல் சார்ந்த விஷயங்களை இவை பேசும்.

வீட்டிலிருந்து கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும் நிலையில், வீட்டு நுழைவாயிலில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டு விட்டால், அம்மா சிறிது தண்ணீர் அருந்தி விட்டு செல்லும்படி கூறுவதுண்டு. இதனை அலட்சியப்படுத்தலாம் அல்லது பயத்தினாலோ, பணிவின் காரணமாகவோ அவர் சொன்னதை செய்து விட்டு போகலாம். பலருக்கு அன்றைய தினம் டைம் லூப் தான் (கற்பனை தான்)

முக்கிய நிறுவனம் ஒன்றிற்கு இன்டெர்வியூ செல்லுகையில் பூனை குறுக்கே வந்து விட்டது, இரு சக்கர வாகனம் பஞ்சர், பஸ் பிரேக் டவுன் – 12 பி படத்தின் டைம் லூப் ஆக தான் தோன்றும்.

‘நான் தான் அப்பவே சொன்னேனே அங்கே போகாதன்னு”

“எனக்கு தெரியும் இப்படி தான் நடக்கும்முன்னு”

“அவங்க சொன்னதை நான் தான் கேட்கல”

இது போன்ற கண்ணுல வந்து போகும் டயலாக்குகள் எல்லாம் Decision Making S(K)ills தான்.

#maanaadu

மீண்டும் ஒரு ஊரடங்கு வருமா எனும் அச்சம் உங்களுக்கு ஏற்பட்டால், உங்களது டைம் லூப்பில் கடந்த கால சிந்தனைகள் தென்படும். இவை வருத்தம் தரக்கூடியதாகவோ, இல்லையெனில் வாய்ப்பளித்த மகிழ்ச்சியாகவோ உங்களுக்கு இருந்திருக்கலாம்.

சரி, நிதி சார்ந்த கால பயணத்திற்கு வருவோம். நாமும் ஒவ்வொரு வருடமும் இலக்குகளை குறித்து வைத்து தான் வருகிறோம். கம்யூனிசத்துக்கும், கேபிடலிசத்திற்கும் இடையே அல்லல்பட்டு வருகிறோம். ஆனால் நமது தனிநபர் நிதி திட்டமிடலை சரியாக நிறைவு செய்தோமா என்றால் அது நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

கொரோனா காலத்தில் நமது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்களில் சில உயிர்களை இழந்திருப்போம். பிரபலமானவர்களின் இரங்கலை செய்தியாக கேட்டிருப்போம். ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தநிலையில் பலர் வேலை இழந்தனர், தங்களது தொழிலை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர், சிலர் இணைய வழி வருமானத்தை வாய்ப்பாக உருவாக்கினர், பெருந்தொற்று காரணமாக எதிர்பாராத வகையில் அதிக மருத்துவ செலவு, வருமானம் ஈட்டும் நபரின் இழப்பால் குடும்பத்தின் நிதி பாதிப்பு ஆகியவற்றை நாம் அறிந்திருப்போம். இவையெல்லாம் நமது நினைவலைகளாக எப்போதும் இருக்கும். சரியான நிதி பாதுகாப்பை உறுதி செய்தவர்களுக்கு ஓரளவு சிரமம் ஏற்பட்டிருக்காது. அது போன்ற குடும்பத்தில் நிதிச்சிக்கலும் குறைவு தான். டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு மற்றும் அவசர கால நிதி(Emergency Fund) ஓரளவு நமக்கு புரிந்திருக்கும்.

ஒவ்வொரு வருடமும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதை காலம் தாழ்த்தி வருகிறோம். அவசர கால நிதிக்கு பெரும்பாலும் நாம் மற்றவர்களை சார்ந்து  தான்(Parents, Neighborhood, Loans, Credit cards) இருக்கிறோம். ‘நான் நன்றாக தான் இருக்கிறேன், நமக்கு எதுக்கு மருத்துவ காப்பீடு – வீண் செலவு’ என்று அலட்சியம் செய்கிறோம். இருப்பினும் நமது கால பயணத்தில்(Time Travel) மீண்டும் மீண்டும் ஒரு நெருங்கிய உறவுகளின் இழப்பு, பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பம், காப்பீடு எடுக்காமல் லட்சங்களில் மருத்துவ செலவு.

இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரித்து விட்டது என புலம்புகிறோம். ‘5ஜி தொழில்நுட்பம் வந்த பிறகு என்ன செய்வது, விலை ஏறுமா அல்லது குறையுமா ?’

டேர்ம் காப்பீடுக்கான பிரீமியம் தொகையும் அதிகரிக்க போகிறது. கொரோனா காலத்திற்கு முந்தைய பிரீமியம் ஓரளவு பரவாயில்லை. புதிய நோய்கள் கண்டறிய கண்டறிய ரிஸ்க்குக்கான பிரீமியமும் அதிகமாக உள்ளது. முன்னொரு காலத்தில் தேவையும் பெரிதாக இல்லை, தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையவில்லை. வரவுக்குள் செலவு எளிதாக அமைந்தது. இப்போது அப்படியல்ல, நமது தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்துள்ளது. நிதி சார்ந்த விழிப்புணர்வு இனிவரும் காலங்களில் நமக்கு நிறைய தேவைப்படுகிறது.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மற்றும் டேர்ம் பிரீமியம் அதிகரித்தாலும் நமக்கு கவலையில்லை, அதிகமாக சம்பாதித்தால் ! தேவைகளும், விருப்பங்களும் அதிகரிக்கும் போது பெரும்பாலும் விலைவாசி உயர்வு நம் கையில் இல்லை.

ஆனால், நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்யாமல் காலம் தாழ்த்துவது நமது டைம் லூப்பை உண்மை நிலையாக மாற்ற செய்யும். அவற்றில் நமது கவனம் எப்போதும் தேவை. ‘ ஓய்வு காலத்திற்கு இன்னும் 30 வருடங்கள் உள்ளது, நமக்கு என்ன அவசரம்’ என 30 வயது இளைஞன் எண்ணினால் நமது பெற்றோருக்கு கிடைத்த வாழ்க்கை(உடல் மற்றும் மன நலமும்) கூட நமக்கு பின்னாளில் கிடைக்கப்பெறாது.

‘வரும் முன் காப்பது நலம்’

‘பருவத்தே பயிர் செய்’

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’

இவையனைத்தும் டைம் லூப்பை சார்ந்தவை தான்.

இப்போதே நீங்கள் செய்ய வேண்டிய நிதி திட்டமிடல்:

  • டேர்ம் காப்பீடு (Term Insurance)
  • விபத்து காப்பீடு (Accident care) 
  • மருத்துவ காப்பீடு (Health Insurance)
  • அவசர கால நிதி (Emergency Fund)
  • நிதி இலக்குகளுக்கான முதலீடு (Invest for Financial Goals) 
  • நாமினியை நியமிப்பது மற்றும் உயில் எழுதுவது (Nomination & Will)
  • உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி சார்ந்த கல்வி மற்றும் தேவையை உணர வைப்பது (Financial Literacy)

மேலே சொன்னவற்றை நாம் செய்யாவிட்டால், நமக்கு மட்டும் இழப்பல்ல… நம்மை நேசித்தவர்களுக்கு, நம்மை பொருளாதாரம் சார்ந்து நம்பியவர்களுக்கும் தான். விளைவை தெரிந்தும் காலம் தாழ்த்துவது தான் கால பயணத்தின் கிளைமாக்ஸ்.

டைம் மெஷினில் மீண்டும் வருவோம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம்

தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம் 

Anuh Pharma will be listed soon in NSE(National Stock Exchange)

எஸ்.கே. குழுமத்தின் அங்கமான அனுக் பார்மா நிறுவனம் மருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 61 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்நிறுவனம் காசநோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. அனுக் பார்மா பாக்டீரியா, மலேரியா, கார்டிகோஸ்டீராய்டுகள் ஆகியவற்றை எதிர்க்க தேவையான மருந்து பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இது போல பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

530 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட ஸ்மால் கேப் நிறுவனமாக இருந்தாலும், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.23 என்ற விகிதத்திலும், நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது.

செப்டம்பர் 2021 காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 172 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது சந்தை மூலதன மதிப்பில் மூன்றில் ஒரு பங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அனுக் பார்மா நிறுவனத்தின் முக மதிப்பு(Face value) 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டது.

2006ம் வருடத்தின் ஜனவரி மாதத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஆக வர்த்தகமான நிலையில், நாம் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீட்டு மதிப்பு அப்போது 20,000 ரூபாயாக இருந்திருக்கும். முகமதிப்பு மாற்றியமைக்கப்பட்ட பின்பு நமது கையிருப்பு பங்குகள் 2,000 (முதலீட்டு மதிப்பில் மாற்றமில்லை).

அதே வருடத்தில் ஒன்றுக்கு ஒன்று போனஸ்(1:1 Bonus issue) பங்குகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நமது கையில் உள்ள 2,000 பங்குகள் 4,000 பங்குகளாக மாறியிருக்கும். பின்பு 2010ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள்(2:1 Bonus issue) என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது நமது கையிருப்பு 12,000 பங்குகள்.

மீண்டும் 2015ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற அடிப்படையில்  போனஸ் பங்குகள். இந்த நிகழ்வுக்கு பின்பு நம்மிடம் 36,000 பங்குகளாக சொல்லப்பட்டிருக்கும். கடந்தாண்டு (செப்டம்பர் 2020) கொரோனா காலத்திலும் 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டது. இதனையும் நாம் கணக்கில் கொண்டால் இப்போது 72,000 பங்குகள் நம் கைவசம் இருந்திருக்கும். நடப்பில்(03-08-2021) அனுக் பார்மா நிறுவனத்தின் பங்கு ஒன்று அதிகபட்சமாக 150 ரூபாய்க்கு வர்த்தகமானது. 15 வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீடு அப்போதைய நிலையில் ரூ.20,000 ஆக இருந்திருக்கும். சொல்லப்பட்ட ஆகஸ்ட் 2021 விலையில் நம்மிடம் ரூ.1.08 கோடியும், 72000 பங்குகளும் கைவசம் இருக்கும்(பங்குகளை இதுவரை விற்காமல் இருந்திருந்தால் !). தற்போது இந்த பங்கு ரூ.105 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் இந்நிறுவன பங்கு, கடந்த நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிறுவனத்தை பட்டியலிடுவதற்கான முடிவை பங்குதாரர்களிடம் இருந்து பெற்றது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு(Q2FY22 results) முடிவுகளின் நிகழ்விலும் உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரு மாதங்களுக்குள் அனுக் பார்மா நிறுவனம், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என நிறுவனமும் கூறியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,  வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

Trading activity of Foreign Institutional Investors(FII) in the Indian Equity Market 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதமும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி(Nifty50) குறியீடு 52 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நடப்பு வருடத்தில் சொல்லப்பட்ட இரண்டு குறியீடுகளும் இதுவரை 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றமடைந்துள்ளது. சமீபத்தில் இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான நிப்டி மற்றும் சென்செக்ஸ் தனது வாழ்நாள் உச்சபட்ச விலையில் வர்த்தகமானது.

தற்போது உச்சநிலையிலிருந்து, இந்த இரண்டு குறியீடுகளும் 5 சதவீதம் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. எனினும் இதனை மிகப்பெரிய இறக்கம் என நாம் சொல்லிவிட முடியாது. நடப்பு அக்டோபர் மாதம் 29ம் தேதியுடன் முடிவடைந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 59,307 புள்ளிகளுடனும், நிப்டி 17,672 புள்ளிகளுடனும் உள்ளது.

கடந்தாண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு(Covid-19) பிறகான காலத்தில் பங்குச்சந்தை முதலீடும், டீமேட் கணக்கு துவங்கும் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலமான 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் காணப்பட்ட உலக பொருளாதார மந்தநிலை, நாடுகளிடையேயான வர்த்தக போர், போர் பதற்றம், காலநிலை மாற்றங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வங்கிகளில் காணப்படும் வட்டி விகித குறைவு, பணவீக்க விகிதம் மற்றும் வீட்டுமனை துறையில் உள்ள சுணக்க நிலை ஆகியவற்றால் பங்குச்சந்தை மற்றும் மெய்நிகர் நாணய(அரசு அங்கீகரிக்கப்படாத – Unregulated) முதலீடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், இது போன்ற முதலீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தை இறக்கம் காணும் போது தங்கம் போன்ற முதலீடுகளின் வருவாய் அதிகரிக்க கூடும்.

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை பெரும்பாலும் அன்னிய முதலீட்டாளர்களின் கை ஓங்கி தான் இருக்கும். பங்குச்சந்தைக்கும், கடன் பத்திரங்களுக்கும் அன்னிய முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் முதலீடு கணிசமாக இருக்கும். கடந்த ஒன்றரை வருடத்தில் காணப்பட்ட பங்குச்சந்தை ஏற்றத்தால், தற்போது அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை(அக்டோபர் மாத முடிவில்) ரூ.68,500 கோடி என்ற அளவில் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை விற்றுள்ளனர். இதற்கு நேர்மாறாக உள்நாட்டு முதலீடு(Domestic Institutional Investors) 56,179 கோடி ரூபாய் சந்தைக்கு வந்துள்ளது. சமீபத்தில் மதிப்பீட்டு மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் சில, இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய மதிப்பு ஏற்றக்கொள்ளக்கூடியாத இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FII & DII Trading Activity

அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த ஏழு மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்கள் 11.75 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், ரூ.12.43 லட்சம் கோடி மதிப்பில் பங்குகளை விற்றும் உள்ளனர். நிகர விற்பனையாக 68,500 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில், உள்ளூர் முதலீட்டாளர்கள் 8.62 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், 8.06 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். இதன் காரணமாக அவர்களது நிகர கொள்முதல்(Net Purchase) ரூ.56,179 கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 25,572 கோடி ரூபாயை நிகர விற்பனையாக கொண்டுள்ளனர். இதே மாதத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் 4,470 கோடி ரூபாயை நிகர கொள்முதலாக கொண்டுள்ளனர். சந்தையில் உள்ள பல நிறுவன பங்குகளின் விலை, அதன் வருவாயுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) நிறைவு செய்யும் நல்ல நிறுவன பங்குகள் மலிவான விலையில் கிடைக்கப்பெறுவதும் தற்சமயம் உள்ளது.

சந்தை புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், தரமான நிறுவனங்களை தள்ளுபடி விலையில்(Discounted Value) வாங்கவில்லையென்றால், முதலீட்டில் அதிகப்படியான சரிவை சந்திக்கும் காலமாக தற்போது நிலவுகிறது. சந்தையில் புதிதாக பட்டியலிடப்படும் நிறுவனங்கள் தங்களுக்கான முதலீட்டை விரைவாக பெற வேண்டிய நிலையில், புதிய முதலீட்டாளர்கள் சற்று பொறுமை காத்து, பங்குகளை ஆராய்ந்து நீண்டகால முதலீட்டிற்கு தயாராக வேண்டியது அவசியம். முதலீட்டை எப்போதும் பரவலாக்கம்(Asset Allocation & Diversification) செய்வதன் காரணமாக, நட்டத்தை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி

ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி

ITC reported a Net Profit of Rs.3,714 Crore – Q2FY22 results

பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம், புகையிலையை தனது முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும், இன்று நுகர்வோர் பொருட்கள், ஆடைகள், நட்சத்திர விடுதிகள், பேப்பர் பொருட்கள், பேக்கேஜிங்(Packaging), விவசாயம் சார்ந்த பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை என தனது தொழிலை விரிவடைய செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் சுமார் 2.94 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டிருக்கும் இந்நிறுவனம் கடனில்லா நிறுவனமாகவும்(Debt Free) இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 564 மடங்குகளில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது.

2020-21ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 49,257 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.13,161 கோடியாகவும் இருந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு மார்ச் 2021 முடிவில் ரூ.59,100 கோடி.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு(ஜூலை – செப்டம்பர் Quarterly results) முடிவுகளை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.13,751 கோடியாகவும், செலவினம் 8,740 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 469 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபமாக ரூ.3,714 கோடி இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,055 கோடி. கடந்த ஜூலை 2021 காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 4 சதவீதமும், நிகர லாபம் 13 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

முந்தைய வருடத்தின்(2020-21) இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் வருவாய் தற்போது 14 சதவீதமும், நிகர லாபம் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது. எனினும் கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய், கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பில் அதிகரித்து காணப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 3,259 கோடி

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 3,259 கோடி 

HCL Technologies reported a net profit of Rs.3,259 Crore – Q2FY22 results

3.40 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்ட எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவையை தனது தொழிலாக கொண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திரு. சிவ நாடார் அவர்களால், கடந்த 1976ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகும்.

2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் லாபம் மட்டுமே 1.5 பில்லியன் டாலர். சுமார் இரண்டு லட்சம் பணியாளர்களை கொண்டு 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை பரவியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய தலைவராக சிவ நாடார் அவர்களின் புதல்வி திருமதி. ரோஷ்ணி உள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தை(Listed Company) வழிநடத்தும் நாட்டின் முதல் பெண் தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளில்(நடப்பு 2021) ரோஷ்ணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மொத்த வருவாய் பங்களிப்பில் அமெரிக்கா 58 சதவீதமும், ஐரோப்பா 27 சதவீதமும் கொண்டுள்ளது. உள்நாட்டில் ஈட்டப்படும் வருவாய் மூன்று சதவீதம் மட்டுமே.

நிதிச்சேவை, உற்பத்தி, சில்லறை வணிகம், தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், வாழ்வியல் மற்றும் ஆரோக்கியம் என பல துறைகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) எச்.சி.எல். நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. செப்டம்பர் 2021 காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 20,655 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.15,633 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,259 கோடி.

இயக்க லாப விகிதம்(OPM) சராசரியாக ஒவ்வொரு காலாண்டிலும் 25 சதவீதம் என்ற அளவை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.60,133 கோடியாகவும், விற்பனை வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் 20 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், கடன்-பங்கு விகிதம் 0.10 ஆகவும் இருக்கிறது.

நிறுவனர் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம் 42 மடங்குகளிலும், பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 10 வருடங்களில் 25 சதவீதம் வளர்ந்துள்ளது. 2020ம் ஆண்டின் ஏப்ரல் மாத துவக்கத்தில் பங்கு ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில்(உள்ளார்ந்த மதிப்புக்கு கீழ் – Undervalued), தற்போது 1,250 ரூபாய் என்ற விலையில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – அக்டோபர் – டிசம்பர் 2021

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – அக்டோபர் – டிசம்பர் 2021

Small savings scheme interest rate for the Period – October – December 2021

நடப்பு 2021-22ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டின் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. காலாண்டுக்கு ஒரு முறை சிறு சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. தற்போது அக்டோபர் முதல் டிசம்பர் 2021 வரையிலான காலாண்டுக்கு வட்டி விகிதம் சொல்லப்பட்டுள்ளது.

ஜூலை – செப்டம்பர் 2021 காலாண்டில் சொல்லப்பட்டிருந்த வட்டி விகிதம் இம்முறையும் தொடரும் என நிதி அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் கிடைக்கப்பெறும் திட்டங்கள், பெரும்பாலும் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் தான் வருகிறது.

ஒரு வருட, இரண்டு வருட மற்றும் மூன்று வருட கால வைப்பு நிதிக்கு(Term Deposit) 5.5 சதவீத வட்டி விகிதம் சொல்லப்பட்டுள்ளது. இதுவே ஐந்து வருட டெபாசிட் திட்டத்திற்கு 6.7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கான 5 வருட சேமிப்பு திட்டத்திற்கு 7.4 சதவீதமாக உள்ளது.

ஐந்து வருட தொடர் வைப்பு(RD – Recurring Deposit) திட்டத்திற்கான வட்டி விகிதம் 5.80 சதவீதமாகவும், மாத வருவாய் அளிக்கும் 5 வருட சேமிப்பு(Monthly Income Scheme) திட்டத்திற்கு 6.6 சதவீதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரி சேமிப்பு அளிக்கும் திட்டமான தேசிய சேமிப்பு பத்திர திட்டம் – NSC 6.8 சதவீதம் வட்டியை(5 வருடம்) கொண்டுள்ளது.

small-savings-scheme-interest-rates-oct-2021

பொது வருங்கால வைப்பு நிதிக்கு(Public Provident Fund – PPF) 7.10 சதவீதமும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டத்திற்கு 7.6 சதவீதமும் உள்ளது. இரண்டரை வருடங்களுக்கு முன்பு செல்வமகள் திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.9 சதவீத வட்டி விகிதம் சொல்லப்பட்டுள்ளது. பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதை கருத்தில் கொண்டு, சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. எனினும், இவை பெரும்பாலும் பணவீக்க விகிதத்தை தாண்டிய வருவாயை அளிக்க முடிவதில்லை. ஏழை மக்களுக்கான மற்றும் பாதுகாப்பான சேமிப்பாக, சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் வங்கி வட்டி விகிதம் 2021 – சிறு பார்வை

நாட்டின் வங்கி வட்டி விகிதம் 2021 – சிறு பார்வை 

India’s Interest Rate 2021 – Little Insights

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் நடைபெற்ற நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என சொல்லப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக எட்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் 4 சதவீதம் என்ற அளவு மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவும், கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யும் முயற்சியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

வங்கிகளில் கடன் மற்றும் டெபாசிட்டுக்கான அடிப்படை வட்டி விகிதம் 7.30 % முதல் 8.80 % வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மேற்பட்ட டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 4.90 % – 5.50 % என்ற அளவில் உள்ளது. இருப்பினும் நடைமுறை வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் இருப்பதும் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது எனலாம்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வங்கி வட்டி விகிதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் நிலையில், தனிநபர் மற்றும் தொழில் புரியும் நிறுவனம் குறைவான வட்டி விகிதத்தில் தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம். இதற்கு மாறாக பணவீக்கம் அதிகரிக்கும் போது, அதனை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்களும் அதிகரிக்கக்கூடும். இது பொருளாதாரத்திற்கும், பங்குச்சந்தை முதலீட்டிற்கும் சாதகமாக இருக்காது.

பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருந்து தொழிலுக்கு சாதகமாக அமையும் போது வேலைவாய்ப்புகளும், நாட்டின் பொருளாதாரமும் வேகமெடுக்கும். இது முதலீட்டு சந்தைக்கு நேர்மறையாக அமையும். அதே வேளையில் தங்கம், கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட் மற்றும் இதர சேமிப்பு திட்டத்தில் வருவாய் குறைவாக காணப்படும். நடப்பில் காணப்படும் உலக பங்குச்சந்தை ஏற்றத்திற்கு வட்டி விகித குறைவும் ஒரு காரணம்.

பொருளாதார வீழ்ச்சி காலங்களில் பங்குச்சந்தை முதலீடு இறக்கத்தையும், தங்கம் போன்ற முதலீடு ஏற்றத்தையும் பெறும். நடப்பாண்டின் அக்டோபர் – டிசம்பர் காலத்திற்கான சிறு சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதத்திலும் மாற்றம் ஏதுமில்லை. மூத்த குடிமக்களுக்கான ஐந்து வருட டெபாசிட்(Senior Citizen Savings Scheme) திட்டத்தில் 7.4 சதவீதமும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதம் என்ற வட்டி விகிதமும் தொடரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் வங்கி வட்டி விகிதம், சேமிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு சாதகமான நிலையில் இல்லை. பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பொதுவாக வங்கிகள் அளிப்பதில்லை. தற்போதைய வட்டி விகித குறைவு நிலையில் தங்கம், ரியல் எஸ்டேட், பரஸ்பர நிதிகள், பங்குகள், துணிகர முதலீடு என முதலீட்டாளர்கள் தங்களது தேர்வை மாற்றும் நிலை அதிகரித்துள்ளது. புரிந்து கொள்ள முடியாத முதலீடு மற்றும் மோசடி திட்டங்களில் ஏமாற்றப்படும் நிலையும் தற்போது அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.

வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், இதற்கு மாற்றாக பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்களின் வருவாய் சற்று ஆறுதல் அளிக்கும். வரும் மாதங்களில் பணவீக்கம் அதிகரித்தால் மட்டுமே, அதனை சார்ந்து வட்டி விகிதமும் உயர்த்தப்படும். அதுவரை பங்குச்சந்தை போன்ற முதலீட்டு சந்தைக்கு பணவரவில் தடை ஏதும் இருக்காது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு

மீண்டும் பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு 

PAN-Aadhaar linking deadline extended to March 31, 2022

நடப்பில் எந்தவொரு நிதி சார்ந்த தேவைகளுக்கும், அரசின் உதவிகளை பெறுவதற்கும் ஆதார் எண்ணை கொண்டிருப்பது அவசியமாக உள்ளது. ரேசன் கடை முதல் வருமான வரி தாக்கல் செய்வது வரை ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது. இவற்றில் நம்மிடம் உள்ள பான்(PAN) எண்ணுடன் ஆதார்(Aadhaar) எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணை பெறுவதற்கு வருமான வரி செலுத்துபவர்கள் மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் என்று நடைமுறையில் இல்லை. வங்கியில் புதிய கணக்கை துவங்குதல், ஒரு பரிவர்த்தனை(Transaction) 50,000 ரூபாய்க்கு மிகும் போது, தொழில் நிறுவனத்தினை பதிவு செய்கையில், சொத்துக்களை வாங்க மற்றும் விற்க, அன்னிய செலாவணி(வெளிநாட்டு வருவாய்) போன்றவற்றுக்கும் பான் எண்ணை கொண்டிருப்பது அவசியமாகிறது.

பான் எண்ணை பெறுவதற்கு எந்த வயது வரம்பும் இல்லை. 5 வயது குழந்தைக்கும் பான் கார்டு எண்ணை பெறலாம். நமக்கான அடையாள சான்றாகவும் சில சமயங்களில் பான் கார்டு எண் பயன்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது. வரி ஏய்ப்பை தடுக்கும் ஏற்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது.

பான் – ஆதார் இணைப்பில் பொது மக்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களால் இதற்கான காலக்கெடு ஒவ்வொரு வருடமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பான் மற்றும் ஆதார் எண்களில் உள்ள தரவுகள் சரியாக பொருந்தினால் மட்டுமே அவை இணைக்கப்படுவது சாத்தியமாகிறது. இல்லையெனில், அவை இணைக்கப்படாத நிலையாகவே எடுத்து கொள்ளப்படுகிறது.

பெயரில் உள்ள பிழை, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பான் எண்ணில் பெயர் பிழைகளை சரி செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. அவற்றுக்கு சரியான அடையாள ஆவணம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, ஆதார் கார்டில் உள்ள தகவல் சரிசெய்யப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் பான் – ஆதார் எண்ணுக்கான இணைப்பு காலக்கெடு 2022ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதியாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர்  30, 2021 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தளத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு 

Income Tax Returns(ITR) Filing due date extended to December 2021 (For FY2020-21)

2020-21ம் நிதியாண்டில்(Financial Year) சம்பாதித்த வருவாய்க்கு மதிப்பீட்டு(Assessment Year) ஆண்டு 2021-22ம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் நிலையில்(வரிச்சலுகைகள் போக), வரிப்பிடித்தம் இல்லையென்றாலும் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். தவறும் பட்சத்தில், பின்னொரு நாளில் அபராத தொகை செலுத்த நேரிடும்.

பொதுவாக ஒரு நிதியாண்டில் ஈட்டிய சம்பள வருமானம், வாடகை வருமானம், அஞ்சலகம், வங்கிகள், பங்குகள் மற்றும் பத்திரங்களில் கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு அடுத்த மதிப்பீட்டு ஆண்டில் வரி தாக்கல் செய்ய வேண்டும். வரிப்பிடித்தம் செய்த தொகையில் ரீஃபண்ட்(Refund) பெற, வருமான வரி தாக்கல் செய்வதும் கட்டாயம். வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஒவ்வொரு மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை மாதத்துடன் முடிவடையும்.

ஆனால் கடந்தாண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21ம் மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை மாதம் என சொல்லப்பட்ட காலக்கெடு பின்னர் நீட்டிக்கப்பட்டது. இம்முறையும் அது போன்று ஜூலை மாதத்திலிருந்து நடப்பு மாதமான செப்டம்பர் 30 வரை சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று(09-09-2021) மாலை மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடுவை நடப்பாண்டின் டிசம்பர் 31ம் தேதியாக குறிப்பிட்டுள்ளது. நடப்பு 2021-22 மதிப்பீட்டு ஆண்டில் இதுவரை 6.01 கோடி பேர் வரி தாக்கல்(e-verified ITR) செய்துள்ளனர்.

வருமான வரி தாக்கலுக்கான புதிய தளம்(e filing 2.0) கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வரி தாக்கல் செய்பவர்கள் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சந்திக்க நேரிட்டது. இந்த சிக்கல்கள் இன்று வரை சரிசெய்யப்படாத நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மருத்துவ காப்பீடு, அதுவே உங்கள் உடல்நலத்துக்கான இழப்பீடு

மருத்துவ காப்பீடு, அதுவே உங்கள் உடல்நலத்துக்கான இழப்பீடு 

Health Insurance is one of your Wealth protection Tool

தகவலுக்கும், தானியங்கி சேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இன்றைய நவீன காலத்தில் நிதி சார்ந்த தேவைகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் குடும்பத்தில் உள்ள ஏதோ ஒரு வாரிசு தன்னை பாதுகாக்கும் என்ற பெற்றோர்களின் நிலை, இன்று மாறி நிதி தேவைகளை சற்று கவனிக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

தனிநபர் ஒருவரின் வருவாயை மட்டுமே கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு பெரும்பாலும் தேவைப்படுவது நிதி சார்ந்த பாதுகாப்பு தான். வருவாய் ஈட்டும் ஒருவர் எதிர்பாராமல் இறக்க நேரிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்களை நிதி சார்ந்து பாதுகாக்க டேர்ம் இன்சூரன்ஸ் என்ற காப்பீட்டு கவசம் இன்று அத்தியாவசியமான ஒன்று.

மருத்துவ சேவை மேம்பட்டிருந்தாலும், பெரும்பாலான நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணமாக அமைவது நமது விழிப்புணர்வு இல்லாமை தான். உடல் நலனை பேணுவது மற்றும் ஆரோக்கியமான மனநிலையை கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம். இருப்பினும் எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் புதிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. எனவே இது போன்ற சமயங்களிலும் நாம் நிதி சார்ந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

பணம் படைத்தவர்களாக இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் கரைவது நம் உடல்நலம் மட்டுமல்ல, நாம் சேர்த்து வைத்த பணமும், மனமும் தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது பார்த்து கொள்ளலாம், எனக்கு இப்போது ஏன் வேண்டும் மருத்துவ காப்பீடு என நீங்கள் சொன்னால் !

  •  மருத்துவச்செலவு ரூ.10 லட்சமாக இருக்கும் போது, சேமித்து வைத்திருக்கும் பணத்திலிருந்து அல்லது கடன் வாங்கியாவது 10 லட்சத்தை செலவு செய்வது புத்திசாலித்தனமா ?
  • செல்வம் அதிகமிருந்தாலும், ஆண்டுக்கு 20,000 ரூபாயை மருத்துவ காப்பீட்டுக்காக கட்டி விட்டு, 30 லட்ச ரூபாயை காப்பீட்டு கவரேஜாக பெறுவது புத்திசாலித்தனமா ? (ஆண்டுக்கு 20,000 ரூபாய் வீதம் அடுத்த 20 வருடங்கள் காப்பீட்டை வாங்கினாலும், மொத்த காப்பீட்டு செலவு ரூ.4 லட்சம் தான். Section 80D வருமான வரிச்சலுகை வேறு. இருபது வருடங்களில் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதும் மருத்துவ செலவு ஏற்படாது என்பது விதியா என்ன ?)
  • ஆண்டுக்கு 10 லட்ச ரூபாயை வருமானமாக சம்பாதிக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். சேமிப்பு பெரிதாக எதுவுமில்லை, கடன் மட்டுமே அதிகம். உங்களது குடும்பத்தின் ஒரே வருவாயை கொண்டிருக்கும் நீங்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சுமார் 20 லட்ச ரூபாய் செலவாகும் என சொன்னால், ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என உங்கள் குடும்பத்தினர் சொன்னாலும்… உண்மையான நிலை என்ன ?  

‘மருத்துவ காப்பீடு உண்மையில் உங்கள் உடல்நலனை முழுமையாக பாதுகாக்கிறதோ, இல்லையோ… ஆனால் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை நூறு சதவீதம் பாதுகாக்கும் ‘ என நண்பர் தேவ் ஆசிஷ்(Dev Asish, Stable Investor) கூறுவார்.

திருமணமானவர்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால், அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டை பரிந்துரையுங்கள் அல்லது வாங்கி கொடுங்கள். திருமணமாகாத (80s, 90s Kids) கிட்ஸ்களுக்கும் மருத்துவ காப்பீடு கட்டாயம். மருத்துவ தேவை உள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.

மருத்துவ காப்பீட்டுக்கான தேவை என்ன ?

  • அதிகரித்து கொண்டிருக்கும் பணவீக்கம் – விலைவாசி உயர்வு(Inflation)
  • மருத்துவ தேவைக்கான அவசியமான காலமிது, நீங்களாகவே சுய மருத்துவம் செய்து விட முடியாது (வருமுன் காப்பது மட்டுமே நமது கடமை) – எதிர்பாராத விபத்துக்களை தவிர்க்க இயலாது
  • மருத்துவச்செலவுகளுக்கான தொகை அதிகரித்து வருதல் – செலவு தொகையை நம்மால் கணிக்க இயலாது
  • புதிய நோய்களை கண்டறிதல்(Lifestyle Diseases)
  • வரும் முன் காக்கும் நடவடிக்கை – மருத்துவ காப்பீடு
  • ஈட்டிய அல்லது ஈட்டவிருக்கும் செல்வத்தை பாதுகாத்தல்
  • குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்டிருப்போருக்கு ஆபத்துக்கால நண்பன்
  • செல்வம் படைத்தோருக்கு தேவையில்லாத செலவுகளை தவிர்க்க உதவும்

மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு – இரண்டில் எது அவசியம் ?

மருத்துவ காப்பீடும்(Health Insurance), ஆயுள் காப்பீடும்(Term Plan) உங்கள் இரு கண்கள் போல. ஒரு கண் மட்டும் போதுமா, இரண்டும் வேண்டுமா என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள்.

தனிநபர் ஒருவரின் வருவாயை மட்டும் கொண்டிருக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களது தொழில் மூலம் வருவாய் ஈட்டி, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், தங்களது கணக்கில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணமிருந்தால் நீங்கள் டேர்ம் மற்றும் மருத்துவ காப்பீடு அவசியம் எடுக்க வேண்டுமா என்பதனை கொஞ்சம் யோசிக்கலாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

புரிந்து கொள்ள முடியாத முதலீடு, பேரிழப்பை ஏற்படுத்தும் !

புரிந்து கொள்ள முடியாத முதலீடு, பேரிழப்பை ஏற்படுத்தும் !

Beware of any investment product, before Investing 

பொருளாதார உலகில் பங்குச்சந்தையை போன்ற எளிமையான முதலீட்டு வகையும், அதனை சார்ந்த செல்வமீட்டுதலும் இதுவரை அறியப்படவில்லை என சொல்லலாம். அதே வேளையில் பங்கு முதலீட்டு உலகில் பணம் பண்ண பொறுமையும், சில நுணுக்கங்களை அறிந்து வைத்திருப்பதும் அவசியம். பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய விரும்புபவர்கள், கற்றலுக்கான நேரத்தை எப்போதும் செலவழித்து தான் ஆக வேண்டும். எனக்கு நேரமில்லை என்பவர்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுத்து விட்டு செல்வது தான் சிறப்பு.

வளர்ந்த நாடுகளில் பெரும்பாலும் சேர்க்கப்படும் சொத்துக்கள் நிதி சொத்துக்களாக தான்(Financial Asset) உள்ளன. தங்கம், நிலம், வீடு, வணிக வளாகங்கள்(Physical Asset) என ஒரு புறம் சொத்துக்களாக இருந்தாலும் பங்குகள், பத்திரங்கள், பரஸ்பர நிதிகள், வங்கி வைப்பு நிதி போன்ற நிதி சொத்துக்கள் தான் உலக பணக்காரர்களிடம் பெரும்பான்மையாக காணப்படுகிறது. இதற்கான காரணம், சொத்துக்களை எளிமையாக நிர்வகிப்பது(Portfolio) மற்றும் எப்போது வேண்டுமானாலும் அவற்றை உடனடியாக பணமாக மாற்றி கொள்ளும் வசதி(Liquidity) தான்.

இனிவரும் காலங்களில் நிதி சொத்துக்கள் தான் பொருளாதார உலகில் அதிகம்  காணப்பட்டாலும், புரிந்து கொள்ள முடியாத செயல்பாடுகளில் நமது பணத்தை முதலீடு செய்து விட்டு பின்பு அதனை முழுமையாக இழந்து விட கூடாது. உண்மையில் இது போன்ற செயல்பாடுகள் முதலீட்டு வகையில் சேராது எனலாம். இன்றைய காலத்தில் போன்சி(Ponzi) என சொல்லப்படும் மோசடி திட்டங்கள் ஏராளம். முன்னொரு காலத்தில் தங்கம், நிலம் மற்றும் கால்நடைகளை கொண்டு ஏமாற்று பேர்வழி திட்டங்கள் வந்தநிலையில், இப்போது இணைய வழியிலான நிதி மோசடிகள் அதிகமாகியுள்ளது.

மெய்நிகர் நாணயம்(Crypto), கரன்சி(Forex), பங்கு வர்த்தகம், பிரமிட்(Pyramid) திட்டங்கள், எம்.எல்.எம்., P2P Lending என பல பெயர்களில் ஏமாற்று பேர்வழிகள் மோசடி திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். அசலை போன்ற போலி என்ற வகையில் இவற்றை சொல்லலாம். உண்மையில் மெய்நிகர் நாணயம் ஒரு தொழில்நுட்ப அணுகுமுறையை(Blockchain Technology) தான் கொண்டுள்ளது. அவை நிதி சொத்துக்களாகவும், மற்ற சொத்துக்களை இணைக்கும் வகையிலும் இன்னும் அமைக்கப்படவில்லை. எந்தவொரு முதலீட்டு சாதனமும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கமும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், நாம் தான் அசல்-போலியை கண்டறிவதற்கான நிதி கல்வியை பெற வேண்டும்.

மேலை நாடுகளில் சூதாட்ட(Gambling) விளையாட்டுகளுக்கு என சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அங்கே அவை ஒரு போதும் சொத்துக்களாகவோ, செல்வம் ஈட்டும் அரிய கருவியாகவோ சொல்லப்படவில்லை. மாறாக அரசுக்கு வரி வருவாய் ஏற்படுத்தவும், கருப்பு பணத்தை தடுக்கும் முயற்சியாகவும் தான் சட்டமாக மாற்றப்பட்டுள்ளன. அது போன்று நம் நாட்டிலும் சட்டங்கள் சில நடைமுறையில் உள்ளன. ஆனால் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட மக்களில் இளைஞர்கள் பலர், இணையத்தில் ரம்மி, கிரிக்கெட் விளையாடுவது குறுகிய காலத்தில் பெரிய பணம் பண்ணிவிடலாம் என தங்களது உழைப்பையும்(Hard earned money), நேரத்தையும் தொலைத்து விடுவதுண்டு. இன்னும் சிலரோ நிதி சுதந்திரம், மோட்டிவேஷன் என புரிந்து கொள்ள முடியாத ஏமாற்று நிறுவனங்களிடம் பணத்தை கட்டி விட்டு, தங்களது நண்பர்களையும் சேர்த்து விட்டு சில வருடங்களில் ஏமாற்றப்படுகின்றனர். இதனை அவர்கள் தொழில்முனைவு(Entrepreneurship) என்று சொல்லிக்கொள்வதும் உண்டு.

தொழில்முனைவுக்கும்(Entrepreneur), நேரடி விற்பனைக்கும்(Direct Marketing, Multi level Marketing) உள்ள வேறுபாட்டையும், அதன் விளக்கத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை எனில், நாம் வாழ்நாள் இறுதி வரை உழைத்து கொண்டு தான் இருக்க வேண்டும். இதன் மூலம் உண்மையான நிதி சுதந்திரத்தை பெற்று விட முடியாது.

“ நான் ஏ.பி.சி.டி. நிறுவனத்தில் ரூ.10,000 முதலீடு செய்துள்ளேன். ஒரே ஆப்பில்(Mobile App) தினமும் 2000 ரூபாய் சம்பாதிக்கலாமாம். அந்த நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ளது என சொன்னார்கள். வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம், ராயல்டி வருமானம், ஓய்வுகாலத்தில் கடற்கரை ஓரத்தில் ஒரு அழகிய வீடு…”  –  நமது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்காரர் விற்கும் பொருட்களை பற்றிய புரிதலே நமக்கு இல்லாத போது, ஆஸ்திரேலியா நிறுவனம் நமது அண்ணன் நடத்தும் நிறுவனமா என்ன ? நமது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என என்றாவது நமது நிறுவனத்திடம் கேட்டிருப்போமா ?

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே சிறு முதலீட்டில் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வேறு. சில தொழில்களில் முதலீடு குறைவாக இருக்கலாம், தொழில்  நாணயத்தையும் எதிர்பார்க்கலாம். அதே வேளையில் குறைந்த முதலீடு, அதிக லாபம் என்ற வாசகம் தான் மோசடி திட்டங்களின் அடிப்படை. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அரசு பரிந்துரைக்கும் திட்டங்களிலே நாம் முதலீடு செய்யாத போது, யாரோ ஒருவர் சொன்னார் அல்லது எங்கோ இருக்கும் நிறுவனம் உங்களுக்கா நிதி சுதந்திரத்தை அளிக்க போகிறது ?

பங்கு வர்த்தகத்தின் ரிஸ்க் புரியாமல் தான் சம்பாதித்த பணத்தையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பணத்தையும் கொண்டு சூதாடி விட்டு, பின்பு மானம் என சொல்லிக்கொண்டு தன்னை மாய்த்து கொள்வது ஏனோ !

ஒரு நிறுவனத்தை பொறுத்தவரை ஏதோவொரு பொருள் அல்லது சேவையை விற்பனை செய்யும் தொழிலை கொண்டிருக்க வேண்டும். வெறுமென ஆட்களை சேர்த்து அவர்களது பணத்தால் வாங்கி கொடுத்தால் உங்களுக்கு வருமானம் என சொன்னால் அது தொழிலாக கருதப்படுமா ? இந்த மோசடிக்கும், நடைமுறையில் இருக்கும் Referral Marketing என்பதற்கும் எந்த சம்மந்தமுமில்லை. இந்த புரிதலையும் நாம் கொண்டிருப்பது அவசியம்.

நம் முன் நித்தமும் காத்திருக்கும் அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், அரசு பத்திரங்கள், தங்கம், பரஸ்பர நிதிகள், பங்குகள், ரியல் எஸ்டேட், தொழில் முனைவு போன்ற முதலீடுகளை, நம்மில் எத்தனை பேர் பயன்படுத்தியிருப்போம். நிதி பாதுகாப்பு, பணவீக்கம் மற்றும் முதலீட்டு ரிஸ்க் ஆகியவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா, கூட்டு வட்டிக்கும், இ.எம்.ஐ.(EMI) இரண்டுக்குமான வேறுபாடு என்ன என்பதனை பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது இன்றைய காலத்தின் அவசியம்.

ஆயிரங்களை போட்டு, குறுகிய காலத்தில் லட்சங்களையும், கோடிகளையும் உங்களால் அள்ள முடியுமென்றால், அந்த வாய்ப்பு முதலில் டாட்டா, அம்பானி போன்றவர்களுக்கு தான் தெரிந்திருக்கும். ஏனெனில் அவர்களிடம் உங்களை காட்டிலும் முதலீட்டு தகவல்கள் எளிதாக வந்து சேரும் வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் அவர்கள் ஏன் மோசடி திட்டங்களை தவிர்த்து விட்டு, பல்லாயிரம் ஏக்கர்களை வாங்கி தொழிற்சாலை அமைத்து, பணியாளர்களை அமர்த்தி, முதலீடுகளையும் ஈர்த்து கொண்டு தொழில் வளர்ச்சிக்காக ஓடுகின்றனர். அவர்களும் ஒரே நாளில் 10,000 கோடி ரூபாயை போட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாயாக மாற்றலாமே !

விரைவாக பணம் பண்ண வேண்டும் என்ற பேராசையே, குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க உதவுகிறது. இது தான் மோசடி பேர்வழிகளின் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. சரி நாம் விரைவாக பணம் சம்பாதித்து விட்டாலும் பின்பு அதனை மறுமுதலீடாக எங்கே கொண்டு செல்ல போகிறோம் ?

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் பணமிருந்தால் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ? 

உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக கிடைத்தால், அதனை புரியாத திட்டத்தில் முதலீடு செய்வீர்களா அல்லது சூதாடுவீர்களா ? இங்கே, இரண்டும் ஒன்று தான். உதாரணமாக உங்களிடம் ஒரு கோடி ரூபாய் பணமிருந்தால் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வருவாய் தரும் திட்டத்தில் முதலீடு செய்து விட்டு, மாதாமாதம் 60,000 ரூபாயை வருமானமாக பெறலாம். இதற்காக மெனெக்கெட தேவையில்லை, நாம் பள்ளிகளில் படித்த வட்டி விகித கணக்கு தான். வங்கி அல்லது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தால் போதும்.

நிதிச்சுதந்திரம் பெறுவது என்பது முதலில் உங்களது குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்வது தான். தேவையான அளவு டேர்ம் மற்றும் விபத்து காப்பீடு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவ காப்பீடு, அவரச காலத்திற்கு தேவையான பண கையிருப்பு ஆகியவை தான். கடனில்லா வாழ்க்கையை வாழ விரும்புவதும் உங்களுக்காக நிதி சுதந்திரமே.

நிதி இலக்குகளை(Financial Goals) சரியாக நிர்ணயித்து முதலீடு செய்தல், தொடர்ச்சியாக முதலீடு செய்து வருதல் மற்றும் மினிமலிசம் வாழ்க்கை முறையை பழகுதல் – இது தான் நிதி சுதந்திரத்திற்கான வழி. செலவுகளை குறைத்து எவ்வாறு சேமிக்க பழகுகிறோமோ அது போல வருவாய் பெருக்கத்திற்கான வழியையும் கண்டறிய வேண்டும். அதற்காக புரியாத விஷயங்களை செய்ய வேண்டாம்.

உங்களுக்கு ரியல் ஸ்டேட், பங்கு முதலீடு, தொழில்முனைவு புரியவில்லை என்றால், கற்று கொள்வதற்கான நேரத்தை கொடுங்கள். நேரமில்லை என சொன்னால், வங்கி அல்லது பரஸ்பர நிதி முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம். பணவீக்கத்தை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். ரிஸ்க் இல்லாத முதலீடு என்று இங்கும் எதுவும் இல்லை. நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கும் உங்களுக்கு நன்றாக புரிந்திருக்க வேண்டும்.

ஆற்றில் காலை விட்டாலும், சேறு விழுந்தால் பரவாயில்லை… ஆனால் நாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அமர ராஜா பேட்டரிஸ் – முதலாம் காலாண்டு நிகர லாபம் ரூ.124 கோடி

அமர ராஜா பேட்டரிஸ் – முதலாம் காலாண்டு நிகர லாபம் ரூ.124 கோடி 

Amara Raja Batteries reported a Net Profit of Rs.124 Crore – Q1FY22 results

ஆந்திர மாநிலம் திருப்பதியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய பன்னாட்டு குழும நிறுவனம், அமர ராஜா பேட்டரிஸ். பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ், பேட்டரி, சோலார்,  உட்கட்டமைப்பு, பதப்படுத்தப்பட்ட உணவு, பொழுதுபோக்கு மற்றும் ஊடகம் என பல துறைகளில் தொழில் புரிந்து வருகிறது. அயர்லாந்து நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ஜான்சன் கண்ட்ரோல்(Johnson Controls) நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் தனது சேவையை விரிவாக்கம் செய்துள்ளது அமர ராஜா.

வாகனத்துறைக்கு தேவையான பேட்டரி தயாரிப்பில், எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்(Exide) நிறுவனத்திற்கு அடுத்தாற்போல் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக அமர ராஜா பேட்டரிஸ் உள்ளது. 15,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு, உலகெங்கும் தனது சேவைகளை பரவலாக்கியுள்ளது இந்நிறுவனம்.

அமரான்(Amaron), குவாண்டா, கல்லா(Galla), பவர் ஜோன்(Powerzone) என பல பிராண்டுகளில் இதன் தயாரிப்பு பொருட்கள் சந்தையில் விற்பனையாகின்றன. நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.12,300 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 246 ரூபாய் விலையிலும், சந்தை விலை பங்கு ஒன்றுக்கு ரூ.720 என்ற விலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt to Equity) 0.02 என்ற விகிதத்திலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 88 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 28 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடந்த 2018ம் ஆண்டு ஜான்சன் கண்ட்ரோல் நிறுவனம் தனது 26 சதவீத பங்குகளை விற்ற பின்னர், அமர ராஜா நிறுவனர்களின் பங்களிப்பு 28 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அன்னிய முதலீட்டாளர்களிடம் 22 சதவீத பங்குகளும், உள்ளூர் முதலீட்டு மற்றும் நிதி நிறுவனங்களிடம் 15 சதவீத பங்குகளும் கையிருப்பில் உள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,886 கோடி ரூபாயாகவும், செலவினம் 1,636 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.124 கோடி. மார்ச் 2021 ஆண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.4,193 கோடி. இதர வருமானமாக ஜூன் காலாண்டில் 17 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. முக்கிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு விற்பனைக்கு பிறகு, இந்நிறுவனத்தின் பங்கு விலை பெரிய ஏற்றம் பெறவில்லை. இருப்பினும் தனது துறையின் தவிர்க்க முடியாத நிறுவனமாக அமர ராஜா பேட்டரிஸ் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

Insurance Scheme alone does not help to save the tax

மார்ச் மாதம் வந்தவுடன் வருமான வரி செலுத்துவோருக்கு ஏதோ செலவுகள் இருப்பது போலவும், இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களுக்கு புதிய பாலிசிகள் அதிகமாக கிடைக்கும் காலமாகவும் பார்க்கப்படுகிறது. உண்மை அதுவல்ல, நாம் இங்கு யாரையும் குறைகூற விரும்பவில்லை. வருமான வரி செலுத்துபவர்கள் தங்களின் வரி சலுகையை பெற அவசரகதியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நோக்கி ஓடி செல்வதே இதற்கு காரணம்.

வருமான வரி செலுத்துபவருக்கு ஒரு நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரை நேரம் இருக்கும் போது, நாம் ஏன் காப்பீடு திட்டங்களை அவசரமாக வாங்கி செல்ல வேண்டும். நமது மாத ஊதியம் எப்போது நமக்கு வரவு வைக்கப்படும் என்பது நமக்கு தெரியும். நமது ஊதிய உயர்வு ஒரு ஆண்டின் எந்த மாதத்தில் தரப்படலாம் என்பதும் நமக்கு அறிந்ததாக தான் இருக்கும். அப்படியிருக்கும் போது, நாம் ஒரு வருடத்தில் பெறப்போகும் வருமானத்தின் மதிப்பு தோராயமாக நமக்கு தெரிய வரும். நாம் இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டாலே, வரும் காலத்தில் நமது வருமான வரி என்ன என்பதை நாமே கணக்கிட்டு கொள்ளலாம்.

வருமான வரி செலுத்தக்கூடிய நபராக நாம் மாறும் போதே, வரி சலுகையை பெறுவதற்கான வாய்ப்புகளை நாம் கண்டறிவது, நமக்கான சிறந்த சேமிப்பாக இருக்கும். வருமான வரியை நாம் வேலை பார்க்கும் நிறுவனம் பிடித்தம் செய்து விட்டது, அரசாங்கம் வரி கொள்ளையில் ஈடுபடுகிறது என்று சொல்லிக்கொண்டே நாம் நமக்கு தேவையில்லாத வரிச்சலுகை தரும் திட்டங்கள் என்று சில செலவுகளை செய்து வருகிறோம். வருமான வரி சலுகைக்கு நம்மில் பெரும்பாலோர் நம்பி கொண்டிருப்பது காப்பீடு திட்டம்(Insurance Schemes for Tax Saving) தான்.

காப்பீடு திட்டம் மட்டுமே வருமான வரி சலுகைக்கு உதவும் என்பது நம்மிடம் உள்ள தவறான அணுகுமுறை. நாம் ஏற்கனவே சொன்னது போல, காப்பீடு என்பது நமக்கு ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து நமது குடும்பத்தை நிதிச்சிக்கலில் இருந்து பாதுகாக்க உதவும் ஒரு சாதனமே. ஆம், காப்பீட்டு திட்டங்களை கொண்டு நாம் வரியை சேமிக்கலாம். காப்பீடு திட்டத்திலும் சிறிதளவு சேமிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு திட்டங்கள் நமக்கான பாதுகாப்பு அம்சமாகவே நாம் காண வேண்டும். மாறாக அவற்றை ஒரு முதலீடாகவோ, வரி சேமிப்பாகவோ நாம் காண ஆரம்பித்தால் நமக்கு செலவு தான் ஏற்படும்.

சரி காப்பீடு திட்டம் மட்டுமே வரி சலுகைக்கு இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். வேறு என்ன வரி சேமிப்பு திட்டங்கள் உள்ளன ?

  • 80C, 80CCC, 80CCD (Income Tax Act) பிரிவின் கீழ்  – ஆயுள் காப்பீடு, வரி சேமிப்பு பத்திரங்கள், 5 வருட வங்கி வைப்பு நிதிகள், இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) மியூச்சுவல் பண்டு திட்டங்கள், செல்வ மகள் சேமிப்பு திட்டம், பி.எப்., பொது வருங்கால வைப்பு நிதி(PPF), மூத்த குடிமக்கள் திட்டம், தேசிய பென்ஷன் திட்டம்(NPS), ராஜிவ் காந்தி சேமிப்பு திட்டம், வீட்டு கடன் அசலை திரும்ப செலுத்துதல்
  • 80 D – மருத்துவ காப்பீடு மற்றும் செலவுகள்
  • 80DD & 80U – மாற்று திறனாளிகளுக்கான சலுகை
  • 80DDB – குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை
  • 80E – கல்வி கடனுக்கான வட்டியை செலுத்தும் போது வரி சலுகை
  • 80EE – முதன்முறையாக சொந்த வீட்டை கொண்டவர்களுக்கு வீட்டுக்கடன் வட்டியில் வரி சலுகை
  • 80G – நன்கொடை மற்றும் நிவாரண நிதி அளிக்கும் போது
  • 80GG – வீட்டு வாடகையில் சலுகை
  • 80TTA – சேமிப்பு கணக்கு வட்டி வருமானத்திற்கு
  • Section 24 – வீட்டு கடன் வட்டியில் வரி சேமிப்பு

இது போக மற்ற வருமான வரி சட்ட பிரிவுகளிலும் வரி சலுகைகள் அனுமதிக்கப்படுகின்றன. வரி சேமிப்பு திட்டங்களை நாம் வரி சலுகைக்காக மட்டும் பெறாமல், நமக்கான முதலீட்டு வாய்ப்பாகவும் ஏற்படுத்தி கொள்வது, வருமானத்தை அதிகரிக்க உதவும். கடைசி நேர வரி சலுகை முதலீடு பயன் தராது. உங்களது வரி சேமிப்பு திட்டங்களை நிதியாண்டின் தொடக்கத்திலே துவங்க முனையுங்கள். வரி சேமிப்பு திட்டங்களை நீண்ட காலத்தில் பயன்படுத்தும் போது, அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் நன்றாக அமையும்.

காப்பீட்டு திட்டத்தை யார் தவிர்க்கலாம் ? (Who can avoid Insurance ?)

நமக்கான காப்பீடு தொகையை எவ்வாறு கணக்கிடுவது ?

இன்றும் பி.எப்., பி.பி.எப்.(Public Provident Fund) மற்றும் செல்வ மகள்(Sukanya Samriddhi) திட்டங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இது போன்ற வரி சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானவை மட்டுமல்ல, தொடர்ச்சியான வட்டி விகிதத்தை கொடுக்க கூடியவை. வாழ்க்கை மாற்றங்களுக்கு தகுந்தாற் போல, நோய்களுக்கும் பஞ்சமில்லை. 80D(Medical Insurance) பிரிவை நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை. எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்காக காப்பீட்டு தொகையுடன், வரி சேமிப்பையும் ஏற்படுத்தலாம். பரஸ்பர நிதிகள் அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ்.(Equity linked savings scheme) திட்டங்கள் வரி சலுகையாக மட்டும் செயல்படாமல், பணவீக்கத்தை தாண்டிய நல்ல வருமானத்தை தரக்கூடியதாக உள்ளது. இனி, வரி சலுகைக்கு காப்பீடு திட்டங்களை மட்டுமே நம்பியிருக்காமல் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து வரி சலுகையையும் பயன்படுத்துங்கள், வருமான வரியை சாமர்த்தியமாக சேமியுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Financial Blog in Tamil