Tag Archives: fundamental analysis

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல்

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல் 

Layman’s Personal Financial Planning – Invest & Breathe

“மனதைத் தெளிவுபடுத்துவதற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்கும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியே அடிப்படை” என மருத்துவம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. 

“A Deep breathing exercise to clear the mind and relieve stress”

மூச்சுப்பயிற்சியினால் மனித உடலின் இரத்த அழுத்தம் குறைவதும், மற்ற உடலுறுப்புக்கள் சீராக இயங்குவது மட்டுமில்லாமல், அமைதி மற்றும் நல்வாழ்வு வாழ்வதற்கான புது தெம்பும் நமக்கு கிடைக்கப்பெறுகிறது.    

நவீன உலகத்தில் உடல்நலனும், செல்வமும் இரு நண்பர்களாக தான் வலம் வருகிறது. பொருள் ஆதாரமற்ற மனித வாழ்க்கையை இன்று நாம் இவ்வுலகில் காண இயலாது. அதே போல சுவர் இருந்தால் தான் சித்திரமும். 

அதற்காக நாம் கடினமாக உழைப்பதோ, உடல்நலத்தை பேணுகிறேன், உடல் எடையை இத்தனை நாட்களில் குறைக்கிறேன் என நாள்தோறும் ‘ஜிம்(Gym)’ பேர்வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண நடைப்பயிற்சியும், மூச்சுப்பயிற்சியும் மற்றும் உணவில் கவனம் – அவரவர் வயது சார்ந்து மற்றும் தொழிலுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் அறிவை பயன்படுத்தி மற்றும் அதனை மேம்படுத்துதல் மூலம் நாம் செல்வத்தை எளிமையாக ஈட்டலாம். ஈட்டிய செல்வத்தை சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் பெருஞ்செல்வமாக மாற்றலாம். 

நமது உடல்நலனை நாம் எப்படி பொறுமையாக கருத்தில் கொண்டு பேணுகிறோமோ, அதனை போல செல்வம் சேர்ப்பதிலும் கற்றல் மற்றும் பொறுமையும் அவசியம். ‘அதிகரித்த உடல் எடையை, சில நாட்களில் மிக விரைவாக குறைக்கிறேன்’ என நாம் எடுக்கும் ரிஸ்க் தன்மையும், ‘குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை அள்ளி விட வேண்டும்’ என முதலீட்டில் நாம் விளையாடும் ஊக வணிகமும்(Speculation) – இரண்டும் பக்கவிளைவை தரக்கூடியவையே !

பல வருடங்களாக நமது உடலில் இருக்கும் நோய்த்தன்மையை ஓரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விட்டால், பின்னாளில் நமது உடல் இயக்கங்கள் அடுத்து வரும் நாட்களில் தடுமாறும். இதன் காரணமாக மீண்டுமொரு கவனத்தை நாம் நம் உடல் நலன் மீது செலுத்த நேரிடும். இதற்கான காலமும், பணச்செலவும் அதிகமே. இதனை போல பல ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு பங்குச்சந்தையில் ஒரே நாளில் பல லட்சங்களையும், கோடிகளையும் ஈட்ட வேண்டுமென்ற ஆசை(பேராசை) எல்லோருக்கும் தான். ஆனால் அது அனைவருக்கும், எல்லா நேரங்களிலும் சாத்தியமா !    

கடந்த 2022-23ம் நிதியாண்டில் செபி|(SEBI) வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, இந்திய பங்குச்சந்தையில் ஈடுபடும் 10 நபர்களில் ஒன்பது பேர் (Futures & Options Traders) தங்களது முதலீட்டு பணத்தை இழக்கின்றனர் என கூறுகிறது. சந்தையில் பணத்தை இழக்கும் நபர்களின் சராசரி இழப்பு ரூ.50,000 வரை உள்ளதாகவும், 28 சதவீதம் பேர் தங்களது முதலீட்டு இழப்பை, வெறும் பரிவர்த்தனை கட்டணங்கள் செலுத்துவதில் சந்திக்கின்றனர் எனவும் இந்த தரவு அறிக்கை கூறுகிறது. 

அப்படியிருக்க நாம் எதனை நோக்கி நாம் உழைத்த பணத்தை கொண்டு சென்றிருக்கிறோம் ? பங்குச்சந்தை முதலீடு நீண்ட காலத்தில் பலன் தரும் என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கமே இதனை வெளிப்படையாய் சொன்னாலும்(சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதும்) நாம் என்னவோ குறுகிய காலத்தில் பணக்காரனாக ஆசைப்படுவதே. உண்மையில் பங்குச்சந்தையில் எளிமையாகவும், மிக விரைவாகவும் லாபமீட்ட முடிந்தால், ஏற்கனவே சந்தையில் லட்சம் கோடி ரூபாய்களில் மூலதன மதிப்பை கொண்ட டாட்டா, அம்பானி, பஜாஜ், கோத்ரேஜ், இன்னபிற குழுமங்கள் எங்கே ? அவர்களிடம் இல்லாத பணமா, நிர்வாகமா அல்லது அவர்களுக்கு தெரியாத பங்குச்சந்தை ரகசியமா. சொல்லப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை தங்களது தொழில்களை தான் நம்பியுள்ளன. அவர்களது தொழிற் திறனும், வாடிக்கையாளர்களும் தான் பின்னாளில் முதலீட்டாளர்களால் பங்கு விலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

சாமானியனின் நிதித்திட்டமிடலில் முதல் படி:

தனது குடும்பத்திற்கு தேவையான நிதிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது தான் –  வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு போதுமான டேர்ம் காப்பீடு(Term Insurance), குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்ந்தாற் போல மருத்துவ காப்பீடு(Mediclaim), அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்யும் நபராக இருக்கும் நிலையில், அவருக்கு தேவையான விபத்துக் காப்பீடு(Accidental Coverage).

இது போக அவசர கால நிதியை(Emergency Fund) உருவாக்குதல், குடும்ப நபர்களுக்கான நிதித்தேவையை இலக்குகளாக மாற்றுதல்(Creating Financial Goals). மேலே சொன்ன ஐந்து நிலைகளுக்கும் தனிநபர் ஒருவரின் வருமானம் மற்றும் குடும்ப நபர்களின் தேவையை கருத்தில் கொண்டு திட்டமிடலாம். இந்த ஐந்தும் தவிர்க்க இயலாத நிலைகளாக மற்றும் அவசியமான ஒன்றாக உள்ளது.

நிதித்திட்டமிடலின் இரண்டாவது படியில்,

உங்களது நிதி இலக்குகளுக்கான சரியான சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது(Identifying Suitable Investment schemes). பொதுவாக சேமிப்பு எனும் போது அரசு சார்ந்த அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, பி.எப். பிடித்தம், சிறியளவில் நகை சேமிப்பு, சீட்டு(அரசு பதிவு பெற்ற மற்றும் நம்பகமான) ஆகியவை நமக்கு நினைவில் வரும். 

இவை பெரும்பாலும் குறைந்த வட்டி வருவாயை(பணவீக்கத்தை விட குறைவு) கொண்டிருந்தாலும், குறுகிய கால இலக்குகளுக்கு சிறந்தது. இதனை விடுத்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொன்சி(Ponzi Scam) மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை அரசாங்கம் வெளியிடும் அல்லது அரசு நிர்வாகம் செய்யும் சேமிப்பு திட்டங்களை மட்டுமே நாடுவது நல்லது.

நடுத்தர மற்றும் நீண்டகால நிதி இலக்குகளுக்கு மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இந்த திட்டங்களில் ஏற்ற-இறக்க ரிஸ்க் தன்மை இருப்பதால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஏற்படுத்தலாம. இதன் காரணமாக நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை சரியான காலத்தில் பெற முடியும். பரஸ்பர நிதிகளில் நீண்டகாலத்திற்கு என முதலீட்டு செய்து விட்டு, இலக்குகளை அடையும் முன்னர் அல்லது இடைவெளி காலத்தில் முடிந்தளவு பணத்தை வெளியில் எடுக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு எடுக்கும் நிலையில், நாம் கூட்டு வட்டியின் முழுமையான பலனை(Power of Compounding) அடைய முடியாமல் போகலாம்.

பரஸ்பர நிதி முதலீட்டின் வாயிலாக நாம் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான திட்டங்களில்(Asset Allocation) நமது முதலீட்டை பரவலாக்க முடியும். 

மூன்றாவது மற்றும் இறுதிப்படியாக,

பெருஞ்செல்வத்தை ஈட்டுவது இன்றைய காலத்தில் தேவையான ஒன்றாகி விட்டது. முன்னொரு காலத்தில் மனித உடற்சக்தியை மட்டுமே நம்பியிருந்த குடும்பச் சமூகம், இன்று நிதிச் சொத்துக்களை தான் குடும்பத்திற்கான ஆதாரமாக வைத்துள்ளது. எனவே நாம் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான மற்றும் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை சேர்ப்பதிலும், அவற்றினை கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய நிலையுள்ளது. செல்வம் சேர்ப்பது என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானதல்ல.

பெருஞ்செல்வம் ஈட்ட நாம் தொழில் திறனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நமக்கான தொழில் ஏதுமில்லை அல்லது அவற்றை செய்ய நமது மனம் விரும்பாத போது, மற்றவர்களின் தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்(அதற்காக மீண்டும் பொன்சி மோசடியிடம் மாட்டி கொள்ளாதீர்கள் !). முதலீடு செய்யப்படும் தொழில் நிறுவனம் அரசு அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவும், நிர்வாகத்திறன் படைத்ததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கா விட்டாலும், நமது முதலீட்டு பணம் நமக்காக திறம்பட வேலை செய்யும்.  

மற்றவர்களது தொழிலில் ஒரு சாமானியனும் முதலீடு செய்யலாம் என்பதே, இன்றைய பங்குச்சந்தை வாய்ப்பு(Public & Private Equity – Listed & Unlisted). பங்குச்சந்தை முதலீடு பற்றிய அடிப்படை கற்றலை கற்றுக் கொண்ட பின்னர் தான், சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை கொண்டிருந்தால் சிறப்பு. இல்லையென்றால்,பதிவு பெற்ற மற்றும் நம்பகத்தனமான நிறுவனங்களின் மூலம் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பங்குச்சந்தையிலும் பேராசை காட்டி மோசடி செய்யும் பேர்வழிகள் ஏராளம் ! 

உங்களால் பங்குச்சந்தையை புரிந்து கொள்ள முடியவில்லை எனில், முதலிரண்டு படிநிலைகளோடு இருந்து விடுவது நல்லது. 

மூச்சுப்பயிற்சியை மெதுவாக கவனித்தால் தான் மெருகும், நிதி முதலீடும் சாமானியனுக்கு அப்படித்தான் 🙂

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Panama Petrochem Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1982ம் ஆண்டு தனியார் நிறுவனமாக துவக்கப்பட்ட பனாமா பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட், பல்வேறு வகையான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் தயாரிப்பில் திரவ பாரஃபின் எண்ணெய்கள், பெட்ரோலியம் ஜெல்லி, மை எண்ணெய்கள், ஆன்டிஸ்டேடிக் கோனிங் எண்ணெய், ரப்பர் செயல்முறை எண்ணெய்கள், மின்மாற்றி எண்ணெய்கள், கேபிள் நிரப்புதல் கலவைகள் மற்றும் பாரஃபின் மெழுகு ஆகியவை அடங்கும்.

பெட்ரோலிய சிறப்பு தயாரிப்பு(Petroleum Specialty Products) பிரிவில் 80க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் தொழில் புரிந்து வருகிறது. இவை மைகள் மற்றும் பிசின்கள், ஜவுளி, ரப்பர், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், வாகனம், மின்சாரம், கேபிள்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்கு இன்றியமையாதவை. 

1993ம் ஆண்டில் நிறுவனம் பொது நிறுவனமாக(Public Limited) பதிவு செய்யப்பட்டு 1994ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2011ம் ஆண்டில் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்திற்கு தற்போது உள்நாட்டில் 4 உற்பத்தி ஆலைகள் உள்ளது. 

வருவாயை பொறுத்தவரை நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் அழகுசாதனம் மற்றும் மருந்துத்துறை பிரிவுகளில் 24 சதவீதமும், மைகள் / பூச்சுகள் பிரிவில் 21 சதவீதமும், ரப்பர் செயல்முறை பிரிவில் 19 சதவீதமும், ஜவுளித்துறையில் 19 சதவீத வருவாய் பங்களிப்பையும் கொண்டுள்ளது. உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களில் 51 சதவீதம் ஏற்றுமதியில் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களுக்கு நிறுவனம் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாபர் இந்தியா, ஹூபர் குழுமம், ஏடிசி(ATC) டயர் ஆகியவை உள்ளன. 

நிறுவனம் சமீபத்தில் நான்கு புதிய தயாரிப்பு பொருட்களாக: மை மற்றும் பூச்சு தொழிலுக்கான அரோமா ஃப்ரீ டிஸ்டில்லேட்ஸ்(Aroma Free Distillates), பெயிண்ட் தொழிலுக்கான நறுமண இலவச கரைப்பான்கள், துளையிடுதல் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கான மக்கும் எண்ணெய்கள் மற்றும் ரப்பர் தொழில்துறைக்கான நறுமணமற்ற புதிய எண்ணெய்கள் ஆகியவற்றை சந்தையில் வெளியிட்டுள்ளது. 

வருங்காலத்தில் பெரும்பாலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தங்களது இலக்கு என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் முயற்சியாக கடந்த 2022-23ம் நிதியாண்டில் சுமார் 30,000 டன் திறன் கொண்ட இயந்திரத்தை நிறுவியுள்ளது. இவற்றில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வணிகமயமாக்கப்பட்டுள்ளது.

பனாமா பெட்ரோகெம் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 1,953 கோடி ரூபாய். நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.157 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 21 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்திற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் என பெரிதாக எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 69 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,249 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,940 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) விகிதம் கடந்த பல வருடங்களாக சற்று ஏற்ற-இறக்கமாக இருந்திருந்தாலும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம்(PBT) ரூ. 295 கோடியாகவும், நிகர லாபம் 233 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.940 கோடி(மார்ச் 2023). கடந்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி சராசரியாக 13 சதவீதமும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமுமாக இருந்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமும், இதுவே பத்து வருட காலத்தில் சராசரியாக 20 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது. 

நிறுவனத்தை பொறுத்தவரை பாதகமான நிலையாக மூலப்பொருட்களின் விலை மாற்றம்(கச்சா எண்ணெய்), சுற்றுச்சூழல் அபாயங்கள், டாலர் விலை மாற்றம், துறையில் ஈடுபடும் போட்டி மற்றும் பெரு நிறுவனங்கள், அரசு கொள்கைகள் ஆகியவை. சாதகமான நிலை என காணுகையில் நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு பொருட்கள், வலுவான வாடிக்கையாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு(R&D) ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுதல், ஏற்றுமதி சந்தையில் காணப்படும் வாய்ப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுக்கான உலகளாவிய தேவை.

2022-23ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனம் ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 222 கோடி ரூபாயை வைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) தொகையும் மேம்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல்

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல் 

Captain Pipes Limited – Fundamental Analysis – Stocks

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேப்டன் குழுமத்தின் துணை நிறுவனம் தான் கேப்டன் பைப்ஸ் லிமிடெட். பிளாஸ்டிக் செய்யப்படாத பி.வி.சி(UPVC) குழாய்கள் மற்றும் பொருத்துதல் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது கேப்டன் பைப்ஸ் நிறுவனம். 

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக கருதப்படும் UPVC குழாய்கள் பொதுவாக வெப்ப செயல்திறன் மற்றும் நீடித்த ஆயுள் காலத்தை கொண்டிருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் UPVC தொழில்நுட்பம், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. UPVC சாளரங்கள் பெரும்பாலும் பல்நோக்கு செயல்பாடுகளை கொண்டவை. 

கடந்த 2010ம் ஆண்டு துவக்கப்பட்ட கேப்டன் பைப்ஸ் நிறுவனம் UPVC குழாய்கள் பிரிவில் உறை குழாய்கள், பிளம்பிங் குழாய்கள், உறிஞ்சும் குழாய்கள், தோட்ட குழாய்கள், HDPE குழாய்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்கள், SWR குழாய்கள், கரைப்பான் சிமெண்ட் மற்றும் பி.வி.சி. அழுத்த குழாய்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த குழாய்கள் பெரும்பாலும் நீர் வழங்கல் பகுதிகள்(Water Supply Lines), வடிகால் அமைப்பு, கழிவு நீர் பாதை, நீர்ப்பாசன அமைப்புகள், மின் வழித்தடம் மற்றும் கட்டுமான பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சுமார் 62,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஜெர்மன் மற்றும் ஜப்பானிய தொழில்நுட்பத்தை(German extrusion lines and Japanese injection molding machine) கொண்டு குழாய்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தனது குழாய் விற்பனை கிளையை நிறுவியுள்ள கேப்டன் பைப்ஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பெரு நில பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 

அகமதாபாத் அருகே புதிதாக ஒரு ஆலையை(Greenfield Plant) அமைப்பதற்கான திட்டத்திற்கு, சமீபத்தில் நிறுவனத்தின் இயக்குனர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக அமையவுள்ள ஆலை 20,000 மெட்ரிக் டன் திறன் கொண்டதாகவும், இதற்கான மொத்த முதலீடு 25 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலையிலிருக்கும் உற்பத்தி திறனை இரட்டிப்பாக முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையின் SME பிரிவில் கேப்டன் பைப்ஸ் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற விலையில் தனது பொதுப்பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பின்னர் நடப்பு 2023ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் மும்பை பங்குச்சந்தையின் பிரதான பலகைக்கு(Migration) மாற்றப்பட்டுள்ளது. ஒன்பது வருடத்திற்கு முன்பு, SME பிரிவில் பங்கு வெளியிடுகையில் இதன் சந்தை மதிப்பு சுமார் நான்கரை கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை 0.13 மடங்கிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1.44 என்ற அளவிலும் உள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் நிறுவனம் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. அதே காலத்தில் நிறுவனத்தின் முக மதிப்பும்(Face value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 85 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.81 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) கடந்த பத்து வருடங்களில் சராசரியாக ஐந்து சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட நிதி ஆண்டில் நிறுவனம் ரூ.1.81 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 46 சதவீதமாகவும் இருந்துள்ளது. அதே வேளையில் இதன் பங்கு விலை கடந்த மூன்று வருட காலத்தில் 200 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் பெற்றுள்ளது. 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 6.10 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. நிறுவனத்தின் தலைவராக திரு. ரமேஷ் கிச்சாடியா மற்றும் நிர்வாக இயக்குனராக திரு. கோபால் கிச்சாடியா ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். 

கேப்டன் குழுமத்தின் மற்ற துணை நிறுவனங்களாக கேப்டன் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட், கேப்டன் பாலிபிளாஸ்ட் லிமிடெட், கேப்டன் டெக்னோகாஸ்ட் மற்றும் கேப்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவை உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி 

ITC Ltd reported a net profit of Rs.19,477 Crore in FY 2022-23

112 வருட தொழில் அனுபவம் கொண்ட ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. பில்லியன் டாலர் வருவாயை கொண்ட இந்நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 90 நாடுகளுக்கும் மேலாக இதன் பொருட்கள் ஏற்றுமதியிலும், சுமார் 60 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

புகையிலை, விவசாயம் மற்றும் உணவுப்பொருட்கள், காகிதம் மற்றும் பேக்கேஜிங், நட்சத்திர தங்கும் விடுதிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை நிறுவனத்தின் முக்கிய துறைகளாக உள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.21 லட்சம் கோடி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில், புகையிலை பொருட்களின் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் 37 சதவீதமாக உள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.70,937 கோடியாகவும், செலவினம் 45,272 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 36 சதவீதமாகவும், இதர வருமானமாக ரூ.2,053 கோடியை ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 25,866 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் ரூ.19,477 கோடி.

2021-22ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் தற்போது சொல்லப்பட்ட வருவாய் 17.6 சதவீத வளர்ச்சியையும், நிகர லாபம் 24.5 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் பங்குதாரர்களுக்கான ஈவுத்தொகை(Dividend) பங்கு ஒன்றுக்கு ரூ.15.50 ஆக சொல்லப்பட்டுள்ளது(ஏற்கனவே அளிக்கப்பட்ட ரூ.6/பங்கு சேர்த்து).

எப்.எம்.சி.ஜி(FMCG) துறையின் வருவாய் 20 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், காகிதம் மற்றும் பேக்கேஜிங் 19 சதவீதமும் மற்றும் புகையிலை பொருட்களின் வருவாய் 20 சதவீதமுமாக வளர்ச்சி அடைந்துள்ளது. Aashirvaad, Sunfeast, Yippee, Dark Fantasy, Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Savlon, Fabelle, Mom’s Magic, Sunrise Foods, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique ஆகியவை நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளாகும்.

பங்குச்சந்தை – பண்டமென்டல் அனாலிசிஸ் – இலவச வகுப்புகள் – 14 நாட்கள் 

2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 67,912 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு நீண்டகால கடன்கள் எதுவுமில்லை. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 56 ரூபாயாகவும், பங்கு விலைக்கும், விற்பனைக்குமான இடைவெளி 7.35 மடங்குகளிலும் உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 12 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் பங்கு முதலீடு மீதான வருவாய்(Return on Equity) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 25 சதவீதம் தந்துள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 57 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் புகையிலை பொருட்களின்(Cigarettes) பங்களிப்பு மட்டும் 60 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி 

Infosys reported a net profit of Rs.24,108 Crore in the Financial year 2022-23 – Results

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த வார முடிவில் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவு மற்றும் ஒட்டுமொத்த ஆண்டுக்கான நிதி அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,441 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,443 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம்(OPM %) 24 சதவீதமாக உள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ. 6,134 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டின்(2021-22) நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்டிருக்கும் வருவாய் 16 சதவீதமும், நிகர லாபம் 8 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டினை ஒட்டுமொத்தமாக காணும் போது, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,46,767 கோடியாகவும், செலவினம் 1,11,637 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. 

சொல்லப்பட்ட நிதியாண்டின் முடிவில் நிறுவனம் 24,108 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் பங்கு மீதான வருவாய்(EPS) 58 ரூபாயாக உள்ளது. 2011-12ம் நிதியாண்டில் இது 18 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் டிஜிட்டல் சேவையை சார்ந்தும், நிதித்துறை(Financial Services) சார்ந்த சேவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.  

புவியியல் சார்ந்து காணும் போது, நிறுவனத்தின் 62 சதவீத வருவாய் வட அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. ஐரோப்பாவில் 25 சதவீதமும், உள்நாட்டில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வருவாய் ஈட்டப்படுகிறது. உலகின் சிறப்பான 500 நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின்(Infosys Limited) முக்கிய வாடிக்கையாளர்களாக மெர்சிடஸ்-பென்ஸ், எச்.எஸ்.பி.சி. வங்கி, லாக்கீட் மார்ட்டின், அமெரிக்க ராணுவம், அமெரிக்க கடற்படை, ஐ.பி.எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் டச்சு வங்கி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.22 லட்சம் கோடி. 

கடந்த நிதியாண்டில் எதிர்பார்த்த வருவாய் மற்றும் லாப மதிப்பீட்டை காட்டிலும் குறைவாக இருந்ததும், நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் வழிகாட்டல்(Financial Guidance) நிறுவனத்தின் சார்பில் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்ததால், திங்கள் கிழமை அன்று (17-04-2023) இந்த பங்கின் விலை 10 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்தது. நீண்டகால முதலீட்டாளர்களிடையே இது எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாது, விலை வீழ்ச்சியால் பங்கு வாங்குவதற்கான வாய்ப்பையும் இது போன்ற நிகழ்வு வழங்குகிறது.

உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றம் ஆகியவற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை சரிவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. அதன் கடன்-பங்கு விகிதம் 0.11 என்ற அளவில் உள்ளது. மார்ச் 2023 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 73,338 கோடியாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சராசரியாக 14 சதவீதமும், லாப வளர்ச்சி 10 சதவீதமாகவும் இருந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 17 சதவீதம் (கூட்டு வட்டியில்) ஏற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் 28 சதவீதம் இறக்கமடைந்துள்ளது. அடிப்படை பகுப்பாய்வின் படி(Cash Flow – Fundamental Analysis), இன்போசிஸ் பங்கின் விலை ரூ. 900 – ரூ. 1,100 என்ற அளவில் அமைந்துள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

Jyothy Labs Limited – Fundamental Analysis – Stocks

கேரள மாநிலத்தை சேர்ந்த திரு. எம்.பி. ராமச்சந்திரன் அவர்களால், கேரளாவை தலைமையிடமாக கொண்டு 1983ம் ஆண்டில் துவங்கப்பட்டது தான் ஜோதி லேப்ஸ் நிறுவனம் (Jyothy Laboratories). எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையில் தொழில் புரிந்து வரும் இந்நிறுவனம் ஆரம்பநிலையில் ஒரே ஒரு பொருளை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தது. இன்று ஆண்டுக்கு பில்லியன் ரூபாய் மதிப்பிலான வருவாயை கொண்டும், சுமார் 6,900 கோடி ரூபாய் சந்தை மதிப்பையும் கொண்ட நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

வீட்டு பராமரிப்பு, துணிமணிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பிரபல சொட்டு நீலமான, ‘உஜாலா’ உற்பத்திக்காக 1992ம் ஆண்டு சென்னையில் ஒரு உற்பத்தி ஆலையை துவக்கியது. துணிமணி பராமரிப்பில், ‘ Ujala, Henko, Mr.White மற்றும் More Light’ இதன் முக்கிய பிராண்டுகள். நாட்டின் துணிமணி பராமரிப்புக்கான பொருட்கள் பிரிவில், 81 சதவீத சந்தை மதிப்பை இந்நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் துணிமணி பராமரிப்பு பிரிவு மட்டும் 37 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில்(Dish Wash) இதன் ஒட்டுமொத்த வருவாயில் 38 சதவீதத்தையும், தனிநபர் பராமரிப்பு பிரிவில் 10 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில், ‘Exo, Prill’ இதன் முக்கிய பிராண்டுகள். இந்த துறையில் 11 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. இந்த பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் ஜோதி லேப்ஸ் வலம் வருகிறது.

தனிநபர் பராமரிப்பு பிரிவில், ‘Margo, Neem Active மற்றும் Fa’ இதன் பிரபல பிராண்டு பொருட்கள். வீட்டு பூச்சிக்கொல்லி சார்ந்த பொருட்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த பிரிவில் 21 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் வைத்துள்ளது. ‘Maxo கொசுவர்த்தி, T-Shine Cleaner, Maya ஊதுபத்திகள்’ ஆகியவை இதன் பிராண்டுகளாக உள்ளன. 

நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சேர, சரக்கு மேலாண்மை அமைப்பையும்(Freight Management System) இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நான்காம் தொழில் புரட்சியின் கீழ் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஜோதி லேப்ஸ் முதலீடு செய்துள்ளது. 

2007ம் ஆண்டு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜோதி லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டது. தற்போது நிறுவனத்தின் தலைமையிடமாக மும்பை உள்ளது. இத்துறையில் புதிதாக நுழையும் மற்றும் ஏற்கனவே சந்தையில் சிறந்து விளங்கும் துறை சார் நிறுவனங்களை இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2011ம் ஆண்டில் கென்கேல் இந்தியா(Henkel India) நிறுவனத்தை ஜோதி லேப்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.     

ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பிராண்டு பொருட்களுக்கு, பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், திரைப்பட துறையில் உள்ள நடிகைகள் ஷில்பா  ஷெட்டி மற்றும் மாதுரி தீக்சித் ஆகியோர் விளம்பர தூதர்களாக இருந்துள்ளனர். நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ரா. லட்சுமி நாராயணன் அவர்களும், நிர்வாக இயக்குனராக எம்.ஆர். ஜோதி அவர்களும் உள்ளனர். நாட்டின் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் இன்றளவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,196 கோடியாகவும், இயக்க லாபம்(Operating Profit) 248 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் சராசரியாக வருடத்திற்கு 12-15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 159 கோடி. செப்டம்பர் 2022 காலாண்டின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.1,428 கோடி. 

ஜோதி லேப்ஸ் நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக பங்குச்சந்தையில் உள்ளது. உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களிடம் 17 சதவீத பங்குகளும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடம் 13 சதவீத பங்குகளும் உள்ளது. கடன் தன்மை குறைவாகவும், பங்கு மூலதனம் மீதான வருவாய் 14 சதவீதமாக(5 வருட காலத்தில்) இருப்பதும் சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது.     

ஜோதி லேப்ஸ் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறைந்தபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.134 ஆகவும், அதிகபட்ச விலையாக 223 ரூபாய் வரையிலும் வர்த்தகமாகியுள்ளது. 2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு துவக்கத்தில் இந்த பங்கின் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு மற்றும் பணப்பாய்வு(Discounted Cash Flow) முறையில் மதிப்பிடும் போது, ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ. 130-160 என்ற சராசரியை பெறும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா மெட்டாலிக்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

டாட்டா மெட்டாலிக்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

TATA Metaliks Limited – Fundamental Analysis – Stocks

நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான டாட்டா குழுமத்தின் ஒரு அங்கம் தான் டாட்டா மெட்டாலிக்ஸ். டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாட்டா மெட்டாலிக்ஸ் கடந்த 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. இரும்பு குழாய்(Pig iron and Ductile Iron Pipes) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாக டாட்டா மெட்டாலிக்ஸ் உள்ளது.

ஆண்டுக்கு சுமார் 5.50 லட்சம் கொள்ளளவு உலோக உற்பத்தி திறன் கொண்ட ஆலையை இந்நிறுவனம் கொண்டுள்ளது. நாட்டின் இரும்பு(Pig Iron) உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை டாட்டா மெட்டாலிக்ஸ் கொண்டிருக்கிறது. இதன் உற்பத்தி பெரும்பாலும் வாகனம், விவசாயம், மின்சாரம், ரயில்வே போன்ற துறைகளுக்கு பயன்படுகிறது. 

நிறுவனத்தின் இரும்பு குழாய் உற்பத்தி 14 வகையான முதன்மை தரங்களை கொண்டதாக உள்ளது. ‘TATA efee’ இந்நிறுவனத்தின் முக்கிய பிராண்டாக வலம் வருகிறது. நிறுவனத்தின் விற்பனை உள்நாட்டில் மட்டுமில்லாமல் ஐக்கிய அரபு, கத்தார், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் பரவலாகியுள்ளது. 

நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 60 சதவீதமாக உள்ளது. நிறுவனராக டாட்டா ஸ்டீல் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களிடம்(Mutual Funds) சுமார் 9 சதவீத பங்குகள் உள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.10 மடங்கு என்ற அளவில் உள்ளது. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 483 ரூபாயாகவும், முக மதிப்பு 10 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 8 மடங்குகளில் இருக்கிறது. 2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,746 கோடியாகவும், நிகர லாபம் 237 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

பொதுவாக உலோக துறையில் காணப்படும் உலகளாவிய தாக்கம், வருவாயில் காணப்படும் ஏற்ற-இறக்கம் டாட்டா மெட்டாலிக்ஸ் நிறுவனத்திற்கும் பொருந்தும். நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) மார்ச் 2022 முடிவில் ரூ.1,494 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) நன்றாக உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் டாட்டா மெட்டாலிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் 14 சதவீதமாகவும், நிகர லாபம் 13 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 23 சதவீதமும், பத்து வருட காலத்தில் 27 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 

நிறுவனத்தின் விற்பனைக்கும், பங்கு விலைக்குமான இடைவெளி(Price to Sales) 0.82 மடங்காகவும், வருவாய்க்கும், பங்கு விலைக்குமான இடைவெளி(P/E) 19 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்தின் கடன் 148 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

        

பிரைமா பிளாஸ்டிக்ஸ் – பங்குச்சந்தை அலசல்

பிரைமா பிளாஸ்டிக்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

Prima Plastics Ltd – Fundamental Analysis – Stocks

பிளாஸ்டிக் நாற்காலிகள் என சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது சுப்ரீம் மற்றும் நீல்கமல்(இந்தியாவில்) சேர்கள் தான். இதற்கு அடுத்தாற் போல நாற்காலி பிராண்டுகளில் பெயர் போன நிறுவனம் பிரைமா பிளாஸ்டிக்ஸ். பிளாஸ்டிக் வார்ப்பட பர்னிச்சர்கள்(Moulded Furniture) தயாரிப்பு பிரிவில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

கடந்த 1993ம் ஆண்டு திரு. மன்கர்லால் பரேக் அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் பிரைமா பிளாஸ்டிக்ஸ். டாமன் நகரத்தை தலைமையிடமாக கொண்டு, தனது முதல் உற்பத்தி பிரிவை துவக்கியது இந்நிறுவனம். பிளாஸ்டிக் சேர்கள், தட்டுகள், காப்பிடப்பட்ட பெட்டி(Insulated Box), காய்கறி மற்றும் பழங்களை வைப்பதற்கான பெட்டிகள், சாலை பாதுகாப்புக்கு தேவையான பிளாஸ்டிக் உபகரணங்கள், குப்பை தொட்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், விடுதிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான இதர பிளாஸ்டிக் வகைகளை உற்பத்தி செய்து வருகிறது.

வெறுமென உற்பத்தியை மட்டும் கொண்டிருக்காமல் விற்பனையில் 20 நாடுகளுக்கும் மேலாக ஏற்றமதியும் செய்து வருகிறது பிரைமா பிளாஸ்டிக்ஸ் நிறுவனம். தனது தொழிலை ஆரம்பித்து 28 வருடங்கள் தான் எனினும், இன்று உலகளவில் ஏழு உற்பத்தி மையங்களையும், 450 விநியோகஸ்தர்கள் மற்றும் 5,500 டீலர்களையும் கொண்டுள்ளது.

மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தனது உற்பத்தி கிளைகளை பரவியுள்ளது இந்நிறுவனம். Firstcry, Pepperfry மற்றும் அமேசான் போன்ற பிரபல இணைய பிராண்டுகளுடன் கைகோர்த்து தனது விற்பனையை செய்து வருகிறது. நிறுவனத்தின் பொருட்கள் பெரும்பாலும், ‘Prima’ என்ற பிராண்டின் கீழ் விற்பனையாகிறது.

1995ம் ஆண்டு பிரைமா பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தனது பொது பங்கு வெளியீட்டை துவங்கியுள்ளது. தற்போது சந்தையில் உள்ள இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 118 கோடி ரூபாய். பங்கு ஒன்றின் விலை 107 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 104 ரூபாயாகவும், முக மதிப்பு(Face value) 10 ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 58 சதவீதமாகவும், கடன்-பங்கு விகிதம் 0.28 ஆகவும் இருக்கிறது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. 2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 119 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் ரூ.15 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 15 கோடி ரூபாய். அதாவது பங்கு ஒன்றுக்கான லாபம் ரூ.13.63(Earning per share).

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த பத்து வருடங்களில் 6 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 19 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு 103 கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.

2002ம் ஆண்டு நிறுவனர் காலமான பிறகு, திரு. பாஸ்கர் மன்கர்லால் பரேக், நிறுவனத்தின் தலைவராகவும், முழுநேர இயக்குனராகவும் உள்ளார். நிறுவனம் துவங்கிய காலத்திலிருந்து நிர்வாக இயக்குனராக திரு. திலீப் மன்கர்லால் பரேக் வகிக்கிறார். மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் தற்போது 13 மடங்குகளில் உள்ளது. பங்கு மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 14 சதவீதமாக இருக்கிறது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

How to track the Stocks(Shares) fundamentally ?

பங்குச்சந்தையில் நாம் காணும் அனைத்து பங்குகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் வர்த்தகமாகும் என சொல்லிவிட முடியாது. பொதுவாக லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் நிறுவன பங்குகள் பெரும்பாலும் அனைத்து நாட்களிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கும். அதே வேளையில் ஸ்மால் கேப் பங்குகள் அப்படியல்ல. அவற்றில் வர்த்தக புழக்கம்(Liquidity) பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) அதிகமாக இருத்தல், பெரு நிறுவன முதலீட்டாளர்களிடம்(Institutional Investors) கைவசம் இல்லாதது மற்றும் பொதுவெளியில் மிகவும் குறைவான பங்குகளே அமைந்திருப்பது அதன் வர்த்தக புழக்கத்திற்கு காரணமாக அமையும். இருப்பினும் ‘மல்டி பேக்கர்(Multibagger)’ என சொல்லக்கூடிய பல மடங்கு லாபத்தை அளிக்கவல்லது இந்த ஸ்மால் கேப் நிறுவன பங்குகள்.

அதிக பங்குகளை கொண்டு வர்த்தகமாகும் அல்லது ஒரே நாளில் வர்த்தக அளவை அதிகமாக கொண்டிருக்கும் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்தில் வருவாயை அளிக்கும் என நாம் சொல்ல இயலாது. இதற்கு உதாரணமாக யூனிடெக், ஜே.பி.அசோசியேட்ஸ், யெஸ் பேங்க்,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வோடபோன், ஜெட் ஏர்வேஸ் போன்ற பங்குகளை சொல்லலாம். நாள் வணிகத்துக்கு(Day Trading) இவை ஏற்றவையாக தெரிந்தாலும், உண்மையில் முதலீடு செய்பவர்களுக்கு நட்டத்தை மட்டும் தான் கொடுத்துள்ளன.

“A stock is not just a ticker symbol or an electronic blip; it is an ownership interest in an actual business, with an underlying value that does not depend on its share price.” – Benjamin Graham(Father of Value Investing), The Intelligent Investor

“ பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் என்பது வெறும் எண்கள் அல்ல. அவை ஒரு நிறுவனத்தின் தொழிலில் உங்களுக்கான உரிமையாகும். உண்மையான தொழிலின் மதிப்பு என்பது அதன் பங்கு விலையை சார்ந்திருக்க  வேண்டும் என்று அவசியமில்லை “ என முதலீட்டின் தந்தை என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் கூறுகிறார்.

நீண்டகாலத்தில் பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் செல்வத்தை ஏற்படுத்த வெறுமனே பங்குகளை வாங்கி விட்டால் மட்டும் போதாது. அதனை நமது சொந்த தொழிலை போல கண்காணிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • காலாண்டு முடிவுகளும், ஆண்டு பொதுக்கூட்டமும்:

சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் தனது தொழிலுக்கான காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை வெளியிட வேண்டியது அவசியம். இது அவர்களுக்கானதல்ல, நம்மை போன்ற முதலீட்டாளர்கள், நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் நிதிநிலை  அறிக்கைகளை(Financial Statements) அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. நிறுவனம் பின்னொரு காலத்தில் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாம் இது போன்ற முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் விற்பனையும், லாபமும் ஒவ்வொரு காலாண்டிலும் எப்படி உள்ளது, இதர வருமானம்(Other income) மட்டுமே அதிகரித்து வருகிறதா, நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு, நிறுவனர்களின் பங்கு அடமானம், பங்குதாரர்களின் பங்களிப்பு(Shareholding Pattern), டிவிடெண்ட் அறிவிக்கப்படும் தேதி என அனைத்து தகவல்களையும் ஒருசேர காலாண்டு முடிவுகளில் பெற்று விடலாம். இதன் வாயிலாக பிற்காலத்தில் நமது முதலீட்டு முடிவை பரிசீலிக்க இவை உதவும்.

காலாண்டு முடிவுகளும், நிதியாண்டுக்கான நிதி அறிக்கைகளும் இணையத்தில்(BSE, NSE, Company website) எப்போதும் கிடைக்கப்பெறுகிறது. அதனை சரியான காலத்தில் வாசிப்பது முதலீட்டாளரான நமது கடமை. நிறுவனம் சார்பாக ஆண்டுக்கொரு முறை பங்குதாரர்கள் கூட்டமும்(Annual General Meeting – AGM) நடைபெறுகிறது. இணையவழி மற்றும் நேரடியாக சென்றும் இது போன்ற நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டு, நிறுவனத்தின் மீது நமக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தொழில் சார்ந்த பொதுவான கேள்விகளையும் நாம் அங்கே கேட்கலாம்.

  • வாக்களிப்பதுஉங்கள் கடமை, பங்குச்சந்தையிலும்: 

ஒரு பங்குதாரராக நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கும், தொழில் கொள்கைகளை தீர்மானிக்கவும் நமக்கான வாக்களிக்கும் உரிமை பங்குச்சந்தையில் உண்டு. “ என்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் “ என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) மற்றும் தொழில் ஆதிக்கம் பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவன பங்குகளில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.

இயக்குனர் குழு மற்றும் நிறுவன பொறுப்புகளில் ஒருவரை நியமனம் செய்தல், நீக்குதல், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றிற்கு உங்களது வாக்கு ஒரு நிறுவனத்திற்கு அவசியமானது. நீங்கள் வாக்களிக்க தவறும் நிலையில், முடிவுகளும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் டாட்டா குழுமத்தில் மிஸ்திரி குடும்ப பங்குகளின் தாக்கம், வேதாந்தா நிறுவனம் பங்குச்சந்தையை விட்டு வெளியேற முடியாமல் சென்ற தருணம், யெஸ் வங்கி பங்குகளின் முடக்கம், நிறுவனங்களின் பங்குகளை திரும்ப பெறும்(Buyback of Shares) முறை, போனஸ் பங்குகள், புதிய பங்கு வெளியீடு என பல்வேறு செயல்பாடுகளுக்கு வாக்களிப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும்.

வாக்குகளை நேரடியாக அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இணைய வழியிலான(E-Voting) வாக்களிக்கும் வசதியும் இன்று நடைமுறையில் உண்டு. இது போன்ற சேவையை NSDL மற்றும் CDSL தளங்கள் நமக்காக செய்து கொடுக்கிறது. இதற்கான சேவை கட்டணத்தை(Brokerage & DP Charges) நாம் ஏற்கனவே பங்குகளை வாங்கும் போதே அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட்டோம் என்பதனை நினைவில் கொள்ளவும்.

  • நிறுவனங்களை நேரடியாக காணுங்கள், தொழிற்சாலைக்கு செல்லுங்கள்:

ஒரு நிறுவன பங்கை நாம் இணையம் வழியாக வாங்கி விட்டால், அதனோடு பங்கு முதலீடு முடிந்து விடப்போவதில்லை. இணையம் மட்டும் பங்கு முதலீட்டுக்கான வாழ்க்கையல்ல. அவை நமக்கான எளிய கட்டமைப்பு. நீங்கள் குடியிருக்கும் அல்லது வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில், நீங்கள் வாங்கிய பங்கு நிறுவன அலுவலகம் அல்லது தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கே சென்று பாருங்கள்.

நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவை எப்படி என நேரடியாக கண்காணியுங்கள். முடிந்தால், நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவிடம் அனுமதி பெற்று அவர்களது தொழிற்சாலையை சுற்றி பாருங்கள். இதற்கான வசதியை ஒரு நிறுவனத்தின் கம்பெனி செயலாளர்(Company Secretary) பொதுவாக செய்து கொடுப்பார். நிறுவனம் சார்ந்த ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் அவருக்கு மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் எந்த தொழிலையும், அலுவலகத்தையும் கொண்டிருக்காமல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஷெல் நிறுவனங்களும்(Shell companies) உண்டு என்பது சந்தை வரலாறு. சந்தையில் அவற்றின் பங்கு விலை நாள்தோறும் ஏற்றமடைகிறது என்ற ஒற்றை காரணத்திற்காக பங்குகளை வாங்காமல், நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளை கண்காணிப்பதும் அவசியம்.

நண்பர்களோடு சுற்றுலா செல்வது போல, ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு நிறுவனத்தை நேரடியாக சுற்றி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் சேவைகள்:

நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகள் எப்.எம்.சி.ஜி.(FMCG) பொருட்களை விற்கும்(Retail & Super Market) கடைகளாக தான் இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை எப்.எம்.சி.ஜி. துறையில் காணப்படும் பிரபலமான பொருட்கள் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பொருட்களாக தான் இருக்கும். உதாரணமாக இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., டாபர், கோத்ரேஜ், மாரிகோ, கோல்கேட், பஜாஜ், டி-மார்ட் போன்ற நிறுவனங்கள் தான். நமது நகரில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் தென்படும் பிராண்டுகளின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். பேச்சுவாக்கில் கடை உரிமையாளர் அல்லது விற்பனை மேலாளரிடம் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை எப்படி உள்ளதென அறிய முற்படலாம். இதற்கெல்லாம் நாம் நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ரியல் எஸ்டேட் முதலீட்டில் விசாரிக்கிறோமே !).

  • துறை சார்ந்த நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்:

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பல துறைகளை சார்ந்தவை. வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், வாகனம், நுகர்வோர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள்(Consumer Durables), எண்ணெய் சுத்திகரிப்பு, எரிசக்தி, விவசாயம், கல்வி, மின்னணு பொருட்கள், பொழுதுபோக்கு, மருத்துவம், கட்டுமானம்,காப்பீடு, காலணிகள், ஏற்றுமதி, ஜவுளி, தொலைத்தொடர்பு என பல துறைகளை உள்ளடக்கியவை.

நீங்கள் தொழில் செய்யும் நபராக இருந்தால், உங்களது துறையில் உள்ள சாதக-பாதகங்கள் உங்களுக்கு பொதுவாக தெரிந்திருக்கும். பொருளாதார மந்தநிலை காலங்களில் உங்களது தொழில் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும், அரசு கொள்கைகள் உங்கள் தொழிலுக்கு சாதகமாக உள்ளதா எனும் விஷயங்கள் உங்களது முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள். இதனை நீங்கள் பங்குச்சந்தையிலும் பயன்படுத்தலாம்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்கள் துறையில் உள்ள சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் துறை சார்ந்த ஆலோசனைகள், விவாதங்களை முன் வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் உங்களது பங்கு முதலீட்டுக்கு உதவும்.

நண்பர் ஒருவர் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) துறையின் முக்கிய பதவியில் வேலை பார்த்து வந்தால் அவரிடம் துறை சார்ந்த வளர்ச்சியையும், எதிர்காலத்தில் இவற்றின் தாக்கம் எப்படி உள்ளதென கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இன்று பங்கு முதலீடு சார்ந்த கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் வாயிலாக கிளப் ஹவுஸ், முகநூல்(Facebook Events), வலைப்பக்க நிரல்கள்(Webinars) நாள்தோறும் நடைபெறுகின்றன. இவற்றில் கலந்து கொண்டு பங்கு சார்ந்த தொழில் புரிதலை ஏற்படுத்தி கொள்ளலாம். அதே வேளையில் நாம் அதிகாரபூர்வ மற்றும் அரசு அங்கீகரிக்கும் நிறுவன தளம் மற்றும் ஆலோசகர்களிடம் தகவல்களை பெறுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்சப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் பரிந்துரைத்தார் என பங்குகளை வாங்கி பின்னர் நட்டமடைவதை தவிர்க்க மேலே சொன்ன விஷயங்கள் நமக்கு நீண்டகாலத்தில் பயனளிக்கும். வெறுமென ஊக விஷயங்களுக்கு பின்னால் நகர்வதை விட, நாமே நமது தொழிலுக்கான(பங்கு முதலீடு) அக்கறையை கொண்டிருப்பது நலம்.

பங்குகளை கண்காணிக்க நேரமில்லை என சொல்பவர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Mutual Funds) உள்ளது. உங்களுக்காக ஒரு பண்ட் மேனேஜர் அங்கே நிர்வகிக்க தயாராக உள்ளார். நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு செல்வமீட்டலாம்.

பங்குகள் உங்களின் செல்ல(செல்வ) குழந்தைகள், அவற்றை வளரும் போது நீங்கள் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தால், பின்னொரு காலத்தில் அவை உங்களை கவனித்து கொள்ளும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரூ.20,000 முதலீடு… இன்று ஒரு கோடி ரூபாய் – 15 ஆண்டுகளில் !

ரூ.20,000 முதலீடு… இன்று ஒரு கோடி ரூபாய் – 15 ஆண்டுகளில் !

20,000 rupees investing in 2006, Rs.1 Crore asset today – Fundamental Analysis

1980 களில் நீங்கள் விப்ரோ பங்குகளில் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால்… 1990 களில் நீங்கள் இன்போசிஸ் பங்குகளை வாங்கியிருந்தால்… என்ற ராகங்களை எல்லாம் இனி இங்கே வாசிக்க தேவையில்லை. மல்டிபேக்கர்(Multibagger) என சொல்லப்படும் பல மடங்கு லாபம் தரும் பங்குகள் சந்தையில் ஏராளம். வெறுமென பைசாவில் வர்த்தகமாகும், அடிப்படை பகுப்பாய்வை(Fundamentals) நிறைவு செய்யாத பங்குகளெல்லாம், பல மடங்கு லாபம் அளிக்கும் பங்குகளாக எப்போதும் இருப்பதில்லை. அவை சில சுழற்சி காலங்களில் ஏற்றமடையும், ஆனால் பெரும்பாலான சமயங்களில் விலை வீழ்ச்சியடையும்.

அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்து, நீண்டகாலத்தில் காத்திருந்து முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபமளிக்கும் நிறுவனத்தினை தான் நாம் பார்க்க உள்ளோம். இதற்கான கடந்த கால முதலீட்டு வரலாற்றை காட்டிலும், எதிர்வரும் காலத்தில் தான் வாய்ப்புகள் பெரும்பாலும் உள்ளது. பொதுவாக ஸ்மால் கேப் மற்றும் மைக்ரோ கேப் பங்குகளில் முதலீடு செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஷெல் நிறுவனங்கள்(Shell Companies) என சொல்லப்படும் வணிக நடவடிக்கைகளை ஏதும் மேற்கொள்ளாத நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் மைக்ரோ மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் உள்ளது கவனிக்கத்தக்கது. எனவே தொழிலை நாணயமாக நடத்தும், அடிப்படை பகுப்பாய்வை நிறைவு செய்யும் நிறுவனங்களை கண்டறிவது சற்று சவாலான காரியம் தான்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி வைத்து விட்டு, சும்மா உட்கார்ந்தால் அனைத்து பங்குகளும் உங்களுக்கு செல்வத்தை தந்து விட முடியாது. அதற்கான திறமான காரணிகளும் இருக்க வேண்டும். இதனால் தான் நிப்டி 50ல் உள்ள சில நிறுவனங்களும் தகிடுதத்தம் போட்ட காலங்களும் உண்டு. அடுத்த எச்.டி.எப்.சி. வங்கி என சொல்லப்பட்ட வங்கிகள் திவால் நிலைக்கு சென்றதும், நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் குழுமம் என ஒரு காலத்தில் சொல்லப்பட்ட பங்குகளும், பல காலங்களாக தொழிலில் லாபமீட்டாமல் நட்டத்தை மட்டுமே கொண்டிருப்பதும் சந்தையின் நிகழ்வு.

இருப்பினும் அடுத்த டாட்டா, இன்போசிஸ், ரிலையன்ஸ், பஜாஜ் போன்று இல்லாவிட்டாலும், நீண்டகாலத்தில் செல்வம் அளிக்கும் ஒரு நிறுவனத்தை கண்டுபிடிப்பதும் நமது பங்குச்சந்தை கற்றலுக்கான அடிப்படை தேடல் தான். அது போன்ற ஒரு நிறுவனத்தை தான் நாம் இங்கு பார்க்க உள்ளோம்.

கடந்த 1932ம் ஆண்டு திரு. செவ்வந்தி லால்(Sevantilal K Shah) அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் எஸ்.கே.குழுமம் – SK Group. ஆரம்ப நிலையில் மும்பை மாநகரில் 500 சதுர அடியில் தனது ரசாயன தொழிலை துவக்கிய இவர் மருந்து துறைக்கு தேவையான மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக மாற்றினார்.

பின்னொரு காலத்தில், எஸ்.கே. குழுமம் குடும்பத்தினர் வகிக்கும் தொழிலாகவும் மாறியது. ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற வாக்கிற்கு ஏற்றாற் போல், குழுமத்தில் பல நிறுவனங்களும் தோற்றுவிக்கப்பட்டது.  எஸ்.கே. குழுமத்தின் பல நிறுவனங்களில் மற்றொரு புதிய நிறுவனமாக அனுக் பார்மா(Anuh Pharma) எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட வருடமே, மும்பை பங்குச்சந்தையிலும் பதிவு செய்யப்பட்டது.

குழும நிறுவனம் ரசாயனம், தளவாடங்கள், விநியோகம் மற்றும் மருந்து துறையில் சிறந்து விளங்கி வந்த நிலையில், அனுக் பார்மா பாக்டீரியா, மலேரியா, கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் காசநோய் ஆகியவற்றை எதிர்க்க தேவையான மருந்து பொருட்களை உற்பத்தி செய்து வந்தது. இது போல பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டது.

காச நோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் நாட்டின் முக்கிய நிறுவனங்களுள் அனுக் பார்மாவும் ஒன்று. மும்பை சந்தையில் மட்டுமே பங்குகளை வெளியிட்டுள்ள இந்நிறுவனத்திற்கு கடன்கள் எதுவும் பெரிதாக இல்லை. கடன்-பங்கு விகிதம் 0.07 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 16 மடங்குகளிலும் உள்ளது. 2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.166 கோடியாக உள்ளது. இது சந்தை மூலதன மதிப்பில் நான்கில் ஒரு பங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 432 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.28 கோடியாகவும் இருந்துள்ளது.

2006ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அனுக் பார்மா நிறுவனத்தின் முக மதிப்பு(Face value) 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டது. உதாரணமாக 2006 ஜனவரி மாதத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஆக வர்த்தகமான நிலையில், நாம் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீட்டு மதிப்பு அன்று 20,000 ரூபாயாக இருந்திருக்கும். முகமதிப்பு மாற்றியமைக்கப்பட்ட பின்பு நமது கையிருப்பு பங்குகள் 2,000 (முதலீட்டு மதிப்பில் மாற்றமில்லை).

அதே வருடத்தில் ஒன்றுக்கு ஒன்று போனஸ்(1:1 Bonus issue) பங்குகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நமது கையில் உள்ள 2,000 பங்குகள் 4,000 பங்குகளாக மாறியிருக்கும். பின்பு 2010ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள்(2:1 Bonus issue) என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது நமது கையிருப்பு 12,000 பங்குகள்.

மீண்டும் 2015ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற அடிப்படையில்  போனஸ் பங்குகள். இந்த நிகழ்வுக்கு பின்பு நம்மிடம் 36,000 பங்குகளாக சொல்லப்பட்டிருக்கும். கடந்தாண்டு (செப்டம்பர் 2020) கொரோனா காலத்திலும் 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டது. இதனையும் நாம் கணக்கில் கொண்டால் இப்போது 72,000 பங்குகள் நம் கைவசம் இருந்திருக்கும். நடப்பில்(30-07-2021) அனுக் பார்மா நிறுவனத்தின் பங்கு ஒன்று 146 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 15 வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீடு அப்போதைய நிலையில் ரூ.20,000 ஆக இருந்திருக்கும். தற்போதைய விலையில் நம்மிடம் ரூ.1.05 கோடியும், 72000 பங்குகளும் கைவசம் இருக்கும்(பங்குகளை இதுவரை விற்காமல் இருந்திருந்தால் !).

குறைந்தபட்சம் அன்று 100 பங்குகளை 20 ரூபாய் விலைக்கு வாங்கியிருந்தாலும், இன்று அதன் மதிப்பு ரூ.10 லட்சம் !  இது தான் நீண்டகால முதலீட்டின் ரகசியமும் கூட…

ஒரு பங்கு, முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் வருவாயை கொட்டி கொடுத்தாலும், அந்நிறுவனம் நீண்டகாலத்தில் தொழிலை நன்றாக நடத்தி வருவதே முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com