Category Archives: Stock Analysis

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

Can Govt. Employees participate in the Stock(Share) Market ? (CCS Rules, 1964)

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் டீமேட் கணக்கு துவங்கி, பங்குகளில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்யலாமா என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் கேள்வி. நமது வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் இது சார்ந்த சந்தேகத்தை கேட்டிருந்தனர். இது சார்ந்த விதிகளை பற்றி மத்திய சிவில் சேவைகள் (நடத்தை), 1964 – Central Civil Services(Conduct) Rules, 1964 ஆவணத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சிவில் சேவைகள்(நடத்தை), 1964 ஆவணத்தில் வரிசை எண்.21, விதி எண்.16ன் கீழ், முதலீடு, கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் பகுதியில் 35(1) மூலம் அரசு ஊழியர்கள் முதலீடு சார்ந்த விஷயங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி கூறப்பட்டுள்ளது.

“ 35(1) எந்தவொரு பங்கு, பங்கு சார்ந்த அல்லது மற்ற முதலீட்டில் எந்த ஒரு அரசு ஊழியரும் ஊகம்(Speculative) சார்ந்த வணிகத்தில் ஈடுபடக் கூடாது. இந்த துணை விதியில் உள்ள பங்கு மூலம் அவ்வப்போது செய்யப்படும் முதலீடுகளுக்கு இது பொருந்தாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில் எந்தவொரு அரசு ஊழியரும் பங்குகளிலோ அல்லது மற்ற முதலீடுகளிலோ ஊகம் சார்ந்த, அதாவது நாள் வர்த்தகம், ஊக வணிகம்(Speculative Trading & Derivatives) போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட முதலீட்டு திட்டங்களில் அவ்வப்போது முதலீடாக செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தரகர்(Stock Broker) அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் தான் அவர்களது முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஊகம் என்பது அடிக்கடி பங்குகள் அல்லது மற்ற முதலீடுகளை வாங்கி அடிக்கடி விற்பது என்பதாக கருதப்படுகிறது. 

“40(2) (i) எந்தவொரு அரசு ஊழியரும் அவருடைய குடும்பத்தில் உள்ள எந்தவொரு நபரையும் அவர் சார்பாகவோ அல்லது குடும்பத்தின் நலன் சார்பாகவோ ஊக வர்த்தகத்தில் ஈடுபட வைக்கக் கூடாது மற்றும் அனுமதிக்க கூடாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில், அரசு ஊழியர்கள் தங்கள் சார்பாகவோ அல்லது மற்றவரின் நலனுக்காகவோ, தங்களது குடும்ப நபர்களை பங்குச்சந்தையில் மற்றும் பிற முதலீட்டில் ஊக வணிகம்(Day Trading & Derivatives) செய்ய அனுமதிக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. 

ஐ.பி.ஓ(IPO – Initial Public Offering) போன்ற முதன்மை சந்தையில் அரசு ஊழியர்கள் ஈடுபடலாம் எனவும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்த ஐ.பி.ஓ. வெளியீட்டின் போது அவர்கள் முதலீட்டாளராக பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு பங்குகளின் விலையை நிர்ணயம் செய்வதற்கான முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனுமதியில்லை(Decision making process of Fixation of price) எனவும் சொல்லப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஐ.பி.ஓ. வெளியீட்டில் முதலீடு செய்த பின்பு, இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) கிடைத்த லாபத்தை பங்கு வெளியீட்டு நாளன்று எடுப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான அரசு வேலைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர்(Discharge of his official duties) எனவும், மக்களிடம் பெறப்பட்ட அரசு வரி வருவாய் மூலம் அவர்களுக்கான ஊதியம் செலுத்தப்படுவதால், இது போன்ற ஊக வணிகத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாதென விளக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச்சந்தையில் அரசு ஊழியர்கள் நீண்டகாலத்தில் முதலீடு செய்வதை தான் அரசு அறிவுறுத்துகிறது.

மேலும் வங்கிகளில் கடன் வாங்குதல், வங்கிகளில் டெபாசிட் செய்தல், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தல், மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுத்தல் போன்றவற்றிற்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளது.

Central Civil Services(Conduct) Rules, 1964 பற்றி அறிய…

Central Civil Services(Conduct) Rules, 1964

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

Market Trading hours of the Major Stock exchanges around the World

இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டு சுமார் 148 வருடங்கள் முடிந்தாகி விட்டது. கடந்த 1875ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தை இன்று 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் சுமார் 366 லட்சம் கோடி – ஜனவரி 2024 தரவு) கொண்ட சந்தை மதிப்பாக உருவாகியுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

1992ம் ஆண்டு வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையின்(NSE) இன்றைய மதிப்பு 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 335 லட்சம் கோடி – டிசம்பர் 2023 தரவு). இச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 2,190. 

அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையை மதிப்பிடும் போது, ஒவ்வொரு 25 ஆண்டுகளில் இந்திய சந்தை நான்கு முறை கரடிப் பிடியில்(Bear Market) சிக்குவதாகவும், அமெரிக்க சந்தை போலவே இந்திய சந்தையிலும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கரடிச் சந்தையை முதலீட்டாளர்கள் சந்திப்பதாகவும் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிப்டி50 குறியீடு கடந்த 25 வருடங்களில் எட்டு முறை 20 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

2022-23ம் நிதியாண்டு தரவுப்படி உலகளவில் பங்குச்சந்தை பங்களிப்பு விகிதத்தை காணுகையில், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு(Trading & Delivery) செய்கின்றனர். இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(UK) 33 சதவீதமாகவும், சீனாவில் 13 சதவீதமாகவும், பிரேசிலில் 2 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் இது 3 சதவீத பங்களிப்பாக உள்ளது. அதே வேளையில் இந்தியாவில் குடும்பங்கள் வாரியாக காணும் போது, இது 17 சதவீதமாக இருந்துள்ளது. 

இந்தியாவில் பங்குச்சந்தையில் ஈடுபடும் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுவாக மற்றும் பரவலாக சொல்லப்படும் காரணி அதன் சந்தை வர்த்தக நேரம் தான். காலை ஒன்பது மணி முதல் மதியம் 03:30 மணி வரை. இந்த வேளையில் பெரும்பாலானோர் தங்களது நிறுவன வேலை அல்லது தொழிலில் ஈடுபட்டு கொண்டிருப்பர். இதுவே சந்தை பங்களிப்பு குறைவிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், நம்ம நாட்டு பக்கத்துல இருக்கிற சீனாவின் பங்களிப்பு எப்படி அதிகரித்தது, அதன் வர்த்தக நேரம் தான் என்ன ?

(See Table below)

Market Trading Hours - Global Equity Markets

பொதுவாக அமெரிக்காவில் நிறுவன முதலீட்டாளர்களின்(Institutional Investors) பங்களிப்பு, பங்குச்சந்தையில் அதிகமாக இருக்கும். வல்லரசாக மட்டுமில்லாமல் வளர்ந்த பங்குச்சந்தையாகவும் அமெரிக்க சந்தை உள்ளது. இதன் காரணமாகவே நேரடி முதலீட்டாளர்களின் பங்களிப்பும், PMS, Hedge Fund மற்றும் Index Fund வாயிலாக முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், அதன் மதிப்பும் அதிகம். இதுவே நம் நாட்டில் PMS மற்றும் Index Fund என்பது இன்னும் புது வரவாகவே இருக்கிறது. கடந்த சில வருடங்களாக தான் இந்திய சந்தையில் முதலீட்டாளர்களின் பங்களிப்பு(மியூச்சுவல் பண்டு மூலமாக) அதிகரித்து வருகிறது.

சீனாவை பொறுத்தவரை அந்நாட்டின் பங்குச்சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிதாக இணைப்பு இல்லை. சீனச் சந்தை, இந்திய சந்தையை காட்டிலும் அதிக மதிப்பை கொண்டிருந்தாலும் அங்கு பெரும்பாலும் அரசு கட்டுப்பாட்டில் தான் அவை இயங்கும். சந்தையும் உள்ளூர் முதலீட்டாளர்களை தான் அதிகமாக கொண்டிருக்கிறது. இது போல ஹாங்காங் சந்தையிலும் தொழில் வணிகர்கள் குறிப்பிடத்தக்க முதலீடு செய்திருந்தாலும் சீனச் சந்தை அமைப்பின் கீழ் தான் இயங்கி வருகிறது. 

சீன பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்குச்சந்தை பங்களிப்பு 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவே இந்தியாவில் பொருளாதாரத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுகிறது. சீனச் சந்தையில் பெரும்பாலும் அதன் அரசு கொள்கைகள் தான் ஆதிக்கம் செலுத்தும். இதுவே இந்தியாவில் சந்தை ஒதுக்கீடு பொறிமுறையில்(Market allocation mechanism) இயங்கும்.

பெரும்பான்மையான நாடுகளில் ஈர்க்கப்படும் முதலீடுகள் ETF(Exchange Traded Fund) அல்லது மியூச்சுவல் பண்டு வாயிலாக தான் வருகின்றன. ஆசியாவின் மிகப்பழமையான சந்தையாக இந்தியாவின் மும்பை பங்குச்சந்தை இருந்திருந்தாலும், இங்குள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, வேகமாக வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவே.   

இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பொதுவான காரணங்களாக நிதி சார்ந்த கல்வியறிவின்மை, பணப்பற்றாக்குறை, பாரம்பரிய முதலீடுகளை அதிகமாக சார்ந்திருப்பது(தங்கம், நிலம், வங்கி டெபாசிட்), பங்குச்சந்தையில் பொறுமையின்மை மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபமீட்ட எண்ணம், பாதுகாப்பான அணுகுமுறையை விரும்புதல் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த கடந்த கால அச்சம் ஆகியவை உள்ளது.

மேலே காணப்பட்ட வர்த்தக நேரப் பட்டியலின் முடிவில், உலகின் பெரும்பாலான சந்தைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பகலில் மட்டுமே இயங்குகிறது. ‘வாரம் இருமுறை சந்தைக்கு விடுமுறை’ என்பதனை பெரும்பாலான சந்தைகள் அமெரிக்காவின் நகலாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

      

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள்

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள் 

 

Football Field Analysis – Asset Valuation Techniques

பொருளாதாரவியலில் எந்தவொரு சொத்துக்கும் மதிப்பொன்று உள்ளது. முதலீட்டு மதிப்பீட்டின் மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் மதிப்பை நாம் அறியலாம். இதற்கென மதிப்பீட்டு பகுப்பாய்வு(Valuation Analysis) என்ற ஒரு அலகு உள்ளது. மதிப்பீட்டு பகுப்பாய்வு என்பது ஒரு சொத்தின் தோராயமான மதிப்பை மதிப்பிடும் ஒரு செயல்முறையாகும்.

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை பலவகைகளில் கிடைக்கப்பெற்றாலும், சுருக்கமாக இரு வகைகளை நாம் சொல்லலாம். அதாவது ஒப்பீட்டு முறை(Relative Valuation) மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation). ஒப்பீட்டு முறை என்பது ஒரு சொத்தினை அதனை ஒத்த மற்ற சொத்துக்களுடன் ஒப்பிடுவது அல்லது ஒரு நிறுவனத்தின் மதிப்பை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனங்களின் மதிப்புடன் ஒப்பிட்டு முடிவினை அடைவதாகும். 

 

முழுமையான மதிப்பீட்டு முறை என்பது அவ்வாறாக இல்லாமல், ஒரு சொத்தின் அல்லது நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பை (மற்றவற்றுடன் ஒப்பிடாமல்) பெறுவதாகும். இதன் மூலம் ஒரு சொத்து அல்லது நிறுவனம்  இவ்வளவு மதிப்பை கொண்டிருக்கும் என சொல்வதாகும்.

 

சிறு உதாரணத்தின் மூலம் மேலே சொன்ன இரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறைகளை பார்ப்போம். ஒருவரின் தோட்டத்தில் (ஒரு ஏக்கர் நிலம்) நூறு கொய்யா மரங்கள் உள்ளது. ஒவ்வொரு மரமும் ஆண்டுக்கு நூறு கொய்யா பழங்களை தருகிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அவரது தோட்டத்தில் ஆண்டுக்கு ஆயிரம் கொய்யா பழங்கள்(100 மரங்கள் X 100 பழங்கள்) காய்த்து அதற்கான வருவாயை தருகிறது. இங்கே கொய்யா பழத்திற்கான விலை, ஒவ்வொரு கொய்யா மரத்தின் வாழ்நாட்கள் மற்றும் பருவம், கழிவு, விலைவாசி(உற்பத்தி செலவு மற்றும் பணவீக்கம்), அடுத்த 10-15 வருடங்களுக்கான விளைச்சல் எதிர்பார்ப்பு  ஆகியவற்றை பொறுத்து அத்தோட்டத்திற்கு ஒரு மதிப்பை கொடுக்கலாம். பின்னாளில் அவர் இந்த தோட்டத்தினை விற்க முனைகையில் மேலே சொன்ன மதிப்பீட்டை கருத்தில் கொண்டு விலையை பேசலாம். இதனை தான் நாம் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation) என சொல்கிறோம்.

 

இதுவே பக்கத்து தோட்டத்துக்காரர் தான் வைத்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில்  கொய்யா மரங்கள்(எண்ணிக்கை மாறுபடலாம்) அடங்கிய தோட்டத்திற்கு எந்தவொரு முழுமையான மதிப்பீட்டையும் செய்யாமல், முதலாமவரின் தோட்டத்தினை போல தனது தோட்டமும் இவ்வளவு மதிப்பை பெறும் என ஒப்பிட்டு முறையில் சொன்னாலே, அதுவே ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையாகும்(Relative Valuation).

 

இதனை தான் பங்குச்சந்தை முதலீட்டில் நாம் காணும் P/E(Price to Earning per Share) Ratio, P/Bv(Price to Book value) Ratio, P/S (Price to Sales), EV/EBITDA, etc. – ஒப்பீட்டு பகுப்பாய்வு முறை. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனப் பங்கின் விலையை அதன் ஒரு பங்கிற்கான வருவாயுடன் ஒப்பிடுவது, பங்கு  விலையை அதன் நிறுவன விற்பனையுடன், புத்தக மதிப்புடன்(Book value) ஒப்பிடுவது என சொல்லலாம். ஒரு நிறுவனத்தின் P/E விகிதத்தை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனத்தின் P/E விகிதத்துடன் ஒப்பிடுவது. 

 

Discounted Cash Flow(DCF), DDM(Discounted Dividend Model), Discounted Asset Model(DAM) போன்றவை முழுமையான ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையை சேர்ந்தவையாகும். இவை அந்நிறுவனத்தின் பணவரத்து, ஈவுத்தொகை(Dividend) மற்றும் கணக்கில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு முழுமையாக மதிப்பீடு செய்வதாகும். 

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை(Valuation Analysis) என்பது வெறுமனே பங்குச்சந்தை முதலீட்டுக்கு மட்டுமல்ல. ரியல் எஸ்டேட்(வீட்டுமனைத் துறை), தங்கம், விவசாய நிலம், தொழில் மற்றும் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் பயன்படுத்தலாம்.

 

ஒவ்வொரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறையும் வெவ்வேறு வகையான முடிவுகளை அளிக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் முதலீடு செய்பவருக்கு ஏற்ற அல்லது உகந்த மதிப்பீடுகளை எடுத்துக் கொள்வது இயல்பு. எனினும், பெரும்பாலும் வழக்கத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மதிப்பீடாக ஒப்பீட்டு முறை உள்ளது. அதே வேளையில் ஒப்பீட்டு முறையை காட்டிலும் முழுமையான மதிப்பீட்டு முறையே(Absolute Valuation) ஒரு முதலீட்டாளருக்கு சிறந்த முடிவாகவும், நீண்டகாலத்தில் நல்ல வருவாயை அளிக்க கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது. 

 

நான் பெரிசா, நீ பெரிசா என ஒவ்வொரு மதிப்பீட்டு முறையை கொண்டு போட்டி போடுவதை தவிர்த்து விட்டு, அனைத்து அல்லது பெரும்பான்மையான முறைகளை கணக்கில் எடுத்து கொண்டு முடிவுகளை எடுக்க கால்பந்து களப் பகுப்பாய்வு(Football Field Analysis) உதவுகிறது. வெவ்வேறு மதிப்பீட்டு முறைகளின் முடிவுகளை ஒப்பிட்டு சுருக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வரைபடத்தை(Graph /Chart)  இந்த ஆய்வு ஏற்படுத்துகிறது. 

 

இது பல்வேறு மதிப்பீட்டு முறைகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமையும் ஒரு நிறுவனத்திற்கான மதிப்புகளின் வரம்பை சுருக்கமாக கூறுகிறது. இந்த வரைபடத்தின் மூலம் பெரும்பான்மையான மதிப்பீட்டு  முறைகள் வாயிலாக, ஒரு நிறுவனத்தின் சராசரி விலை என்ன என்பதனை அறிந்து கொள்ளலாம். 

 

பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள்வதற்கும், மதிப்பீடுகளில் ஏற்படும் பிழைகளை குறைப்பதற்கும் இம்முறையை பயன்படுத்தலாம். 

 

உதாரணமாக ஒரு நிறுவனப் பங்கின் விலையை பணவரத்து(DCF) மதிப்பீட்டு முறையில் கணக்கிடும் போது ஒரு பங்கிற்கான மதிப்பு ரூ. 100 என கொள்வோம். இதுவே PE மதிப்பீட்டு முறையில் காணும் போது ஒரு பங்கிற்கு 80 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை வாங்கலாம் என பரிந்துரைக்கிறது. புத்தக மதிப்பு(Book value) அடிப்படையில் பார்க்கையில் ஒரு பங்குக்கு ரூ.85 என மதிப்பினை பெறுகிறது. கடந்த ஒரு வருட பங்கின் அதிகபட்ச விலை ரூ.150 ஆகவும், குறைந்தபட்ச விலை 65 ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஒரு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் ரூ.87 – ரூ.102 என்ற விலையில் வர்த்தகம் நடந்துள்ளது.

 

இப்போது ஏதேனும் மற்றொரு மதிப்பீட்டு முறை மூலம் ஆய்வு செய்யும் போது பங்கு ஒன்றுக்கு 82 ரூபாய் என காட்டுகிறது. முடிவில் மேலே சொன்ன அனைத்து மதிப்பீட்டு முறைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற மதிப்புகளை, கால்பந்து களப் பகுப்பாய்வு வரைபடத்தில் குறிப்பிட வேண்டும். தற்போது நடப்பில் ஒரு பங்கின் விலை ரூ.102 க்கு வர்த்தகமாகிறது என வைத்துக் கொள்வோம். 

 

கால்பந்து களப் பகுப்பாய்வின் மூலம் நாம் பெறுவது, ஒவ்வொரு மதிப்பீட்டின் அடிப்படையில் நாம் பெறக்கூடிய சராசரி விலை தான். இதனை தற்போதைய பங்கு விலையுடன் ஒப்பிட்டு வாங்கலாமா, காத்திருக்கலாமா என்பதனை முடிவு செய்யலாம். 

 

Football field analysis

 

நீங்களும் இதனை பரிசோதித்து பாருங்கள்… இதன் மூலம் உங்களது முதலீட்டு சிந்தனையை மேம்படுத்துங்கள் !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

   

    

 

 

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம்

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 

Greaves Cotton Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1859ம் ஆண்டு ஜேம்ஸ் கிரீவ்ஸ் மற்றும் ஜார்ஜ் காட்டன் ஆகிய இருவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் கிரீவ்ஸ் காட்டன்(Greaves Cotton). பொறியியல் மற்றும் உற்பத்தித் துறையில் உள்ள இந்நிறுவனம் 1947ம் ஆண்டு வாக்கில் இந்தியத் தொழிலதிபரான திரு. லாலா கரம் சந்த் தப்பார் (தப்பார் குழுமம்) அவர்களால் வாங்கப்பட்டது. 1950ம் ஆண்டில் கிரீவ்ஸ் காட்டன் பொது நிறுவனமாக(Public Ltd) பதிவு செய்யப்பட்டது. தற்போது மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு நிறுவனம் தனது தொழிலை செய்து வருகிறது.

நிறுவனத்தின் தலைவராக திரு. கரண் தப்பார் உள்ளார். வாகனங்களுக்கான இன்ஜின்கள், உதிரி பாகங்கள், வாகன கட்டுப்பாட்டு அமைப்புகள், பண்ணை உபகரணங்கள், துணை சக்தி(Auxiliary Power) மற்றும் மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனையில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் இன்ஜின் பிரிவு 62 சதவீதத்தையும், மின்சார வாகனப் பிரிவு 30.5 சதவீதத்தையும் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. 

வருவாயில் உள்நாட்டு பங்களிப்பு 97 சதவீதமாகவும், ஏற்றுமதி 3 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக Greaves Electric Mobility (இரு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகன உற்பத்தி), Greaves Retail(உதிரி பாகங்கள், மின்சார வாகன ஏற்றுமதி, பராமரிப்பு), Greaves Engineering(எரிபொருளுக்கான தீர்வு, இயக்க கட்டுப்பாட்டு அமைப்புகள், இன்ஜின் பிரிவு, ஜென்செட்டுகள் மற்றும் பம்பு செட்டுகள்), Greaves Technologies(பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டிஜிட்டல் சேவைகள்) மற்றும் Greaves Finance(மின்சார வாங்கனங்களுக்கான நிதி சேவைகள்) ஆகியவை உள்ளன.  

விவசாயம், கட்டுமானம், சக்தி மற்றும் பிற தொழிற்துறைக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்திற்கு நாடு முழுவதும் சுமார் 6500கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களும், 350க்கும் மேற்பட்ட விநியோகச் சேவைகளும்(Dealers) உள்ளது. உதிரிப் பாகங்களுக்கான பிரிவில் நாடு முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் 6000க்கும் மேற்பட்ட சிறிய சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் தயாரிப்பு சேவை உள்நாட்டில் மட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. நிறுவனம் இந்திய குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் அனுபவம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் திறமையான தலைமைத்துவத்தை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் இப்பிரிவில் இந்திய அளவில் பெரும்பான்மையான பங்களிப்பை தன்னகத்தே கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்சார வாகனங்களில் மூன்று முக்கிய பிரிவுகளில் பிராண்டுகளை உற்பத்தி செய்து(Ampere, ele, Greaves Eltra) இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இரு சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 6 வகைகளையும், மூன்று சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 10க்கும் மேற்பட்ட வகைகளிலும் உள்ளன.

நிறுவனத்தின் கீழ் பல பிராண்டு உதிரி பாகங்கள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், பேட்டரிகள், சார்ஜிங், பிற கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், ‘Ampere Vehicles’ நிறுவனத்தில் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 81 சதவீத பங்குகளை வாங்கி கையகப்படுத்தியுள்ளது. 

‘E-Rickshaw’ பிரிவில் பெஸ்ட்வே நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது கிரீவ்ஸ் காட்டன். இது போக வாகனங்களுக்கான இயக்க கட்டுப்பாட்டு(Motion Control Systems) பிரிவில் தொழில் செய்து வரும் எக்சல் கண்ட்ரோலிங்கேஜ்(Excel Controlinkage Pvt Ltd) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், எம்.எல்.ஆர். ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளது. ஐக்கிய ராச்சியத்தை(United Kingdom) சேர்ந்த ஈட்டா கிரீன் பவர் நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் டிரைவ் சிஸ்டம் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்.6 வாகனப் பிரிவுக்கான பவர் ட்ரெயின்(Powertrain) தீர்வுகளை செய்து வருகிறது. மூன்று மற்றும் நான்கு சக்கர வணிக வாகனங்களுக்கான இன்ஜின்களை(Petrol, Diesel, CNG/LPG) உற்பத்தி செய்து விற்பனையிலும் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் தனது விற்பனையை அதிகரிக்க சவுதியை சேர்ந்த ஏ.எல்.ஜே(ALJ) குழும நிறுவனத்துடன் இணைந்து மேம்பாடுகளை செய்து வருகிறது. கடந்த 1945ம் ஆண்டு துவங்கப்பட்ட ALJ(Abdul Latif Jameel) நிறுவனம் வாகனப் பிரிவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தொழிலை செய்து வருகிறது.   

மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகின் சிறந்த பிராண்டாக காணப்படும், ‘Piaggio’ நிறுவனம் ஐரோப்பாவில் பெரும்பான்மையான சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு தேவையான இன்ஜின் மற்றும் பிற உதிரி பாகங்களை கடந்த 1998ம் வருடம் முதல் கிரீவ்ஸ் காட்டன் செய்து வழங்கி வருகிறது. சொல்லப்பட்ட வருடத்தில் பியாஜியோ – கிரீவ்ஸ் கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டு இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வந்தது. பின்னர் 2001ம் ஆண்டு வாக்கில் பியாஜியோ நிறுவனத்தின் தலைமைக் குழும நிறுவனமான P&C முழு பங்குகளையும் வாங்கி கொண்டது.

நிறுவனத்தின் முதலீட்டை பொறுத்தவரை, கடந்த 2021ம் ஆண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்கும் இலக்கை கொண்டு, தமிழ்நாட்டில் அடுத்த பத்து வருடங்களில் சுமார் 700 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய உள்ளதாக கிரீவ்ஸ் காட்டன், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்காக நாடு முழுவதும் ஆறு ஆலைகளை கொண்டுள்ளது இந்நிறுவனம்.

நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மொத்த வருவாயில் 1.6 சதவீதம் வரை செலவிடப்படுகிறது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடன் வழங்கும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு கிரீவ்ஸ் பைனான்ஸ்(Greaves Finance) நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் நிதிநிலையை பொறுத்தவரை இதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.3,830 கோடி. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 16 மடங்குகளிலும், நிறுவனர்களின் பங்களிப்பு 56 சதவீதமாகவும் உள்ளது. 

கடந்த 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டு முறையே ரூ.19 கோடி மற்றும் ரூ.35 கோடியை நிறுவனம் நட்டமாக சொல்லியுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,699 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.2,573 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. இயக்க லாப விகிதம் 4 சதவீதமாக உள்ளது.

சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம் 70 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. எனினும் கடந்த நான்கு காலாண்டுகளில் டிசம்பர் 2023 காலாண்டை தவிர்த்து மற்ற மூன்று காலாண்டுகளிலும் நிறுவனம் நட்டத்தை சந்தித்துள்ளது. இதற்கு காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட நிதிச் செலவின அதிகரிப்பு மற்றும் மின்சார வாகன மானியத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய அபாரதத் தொகையும் அடங்கும்.  

கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் மின்சார வாகன உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருவதால், முதலீடும் அது சார்ந்த செலவினமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சந்தையிலும் இந்தப் பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்தை சந்தித்து வருகிறது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு செப்டம்பர் 2023 காலத்தின் படி ரூ.1,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது. 

2022-23ம் நிதியாண்டில் என்ஜின் பிரிவு மூலம் நிறுவனத்திற்கு ரூ.1,425 கோடியும், மின்சார வாகனப் பிரிவின் மூலம் ரூ.1,124 கோடியும், பிற விற்பனை மூலம் 150 கோடி ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது. இருப்பினும் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபத்தில்(PBIT) இன்ஜின் பிரிவு 165 கோடி ரூபாயையும், மின்சார வாகனப் பிரிவு ஒரு கோடி ரூபாயையும் நிறுவனம் பெற்றுள்ளது. 

கடன்-பங்கு விகிதம் 0.06 மடங்கு, வட்டி பாதுகாப்பு விகிதம் மற்றும் இருப்புநிலை கையிருப்பு தொகை இந்நிறுவனத்திற்கு சாதகமாக இருந்தாலும், மின்னணு வாகனப் பிரிவில் இந்நிறுவனம் செய்த முதலீடு, அதன் முறிவு புள்ளியை(Breakeven) கடக்கும் வரை நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் அதிக மாறுபாடுகளை காணலாம்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

World’s Top Stock Exchanges and Countries by Market Capitalization

உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக ஹாங்காங் நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தையை நாம் முந்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குச்சந்தையின் மதிப்பு 4.37 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் சுமார் 363 லட்சம் கோடி ரூபாய்).

பங்குச்சந்தை உலகின் ராஜாவாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 49.65 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 4,127 லட்சம் கோடி ரூபாய்). இரண்டாமிடத்தில் 10.89 டிரில்லியன் டாலர்களுடன் சீனாவும், மூன்றாவது இடத்தில் 5.47 டிரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் நாடும் உள்ளது.

அமெரிக்காவின் மேலே சொல்லப்பட்ட சந்தை மதிப்பு அந்நாட்டின் பொருளாதார(GDP) மதிப்பில் 194.5 சதவீதமாகும். ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தை 3.96 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆறாம் மற்றும் ஏழாம் இடம் முறையே பிரான்சு மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள்(2.82 டிரில்லியன் டாலர்கள்) உள்ளன.

எட்டாவது இடத்தில் கனடா 2.64 லட்சம் கோடி டாலர்களுடனும், ஒன்பதாவது இடத்தில் சவுதி அரேபியா 2.42 லட்சம் கோடி டாலர்களுடனும் மற்றும் பத்தாவது இடத்தில் ஜெர்மனி 2.28 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடனும் உள்ளது. சொல்லப்பட்ட தரவுகள் 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டுகளுக்குள் கணக்கிடப்பட்டது.

கடந்த 1975ம் ஆண்டில் உலக பங்குச்சந்தையின் மதிப்பு 11.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தநிலையில் 2020ம் ஆண்டின் முடிவில் 93.68 லட்சம் கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது உலக பொருளாதார மதிப்பில் வெறும் 27 சதவீதமாக இருந்த பங்குச்சந்தை பங்களிப்பு இன்று 135 சதவீதத்திற்கும் மேலாக காணப்படுகிறது.

நடப்பில் மிகப்பெரிய பங்குச்சந்தை உள்ள நாடுகளில் குறிப்பிட்ட பங்குச்சந்தை(Stock Exchange) அடிப்படையில் காணுகையில், அமெரிக்காவின் நியூயார்க் சந்தை(NYSE) 26.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த சந்தை கடந்த 1792ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தில் அமெரிக்காவின் நாஷ்டாக்(NASDAQ) சந்தை உள்ளது. கடந்த 1866ம் வருடம் துவங்கப்பட்ட சீனச் சந்தையின் ஷாங்காய்(SSE) 6.87 டிரில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காம் இடத்தில் ஐரோப்பாவின் யூரோ நெக்ஸ்ட்(EuroNext) சந்தையும், ஐந்தாவது இடத்தில் ஹாங்காங் சந்தையின் HKEXம் உள்ளன. இந்தியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை பத்தாவது இடத்தில் 3.59 டிரில்லியன் டாலர்களுடன் உள்ளது. இச்சந்தை கடந்த 1875ம் வருடம் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனத்தின் அடிப்படையில், ஆப்பிள் நிறுவனம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் சவுதி அரம்கோ நிறுவனமும் உள்ளன.

நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் முறையே கூகுள்-ஆல்பாபெட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆறாவது இடத்தில் என்விடியா(Nvidia) மற்றும் ஏழாம் இடத்தில் மெட்டா(Meta) நிறுவனமும் உள்ளது.

திருவாளர் வாரன் பப்பெட்டின் பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனம் எட்டாம் இடத்திலும், எலான் மஸ்க்கின் டெஸ்லா ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. எலி லில்லி நிறுவனம் 597 பில்லியன் டாலர்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

Global Market Indices in the year 2023 – Returns %

2023ம் ஆண்டை பொறுத்தவரை உலக பங்குச்சந்தையில் காணும் முக்கிய சந்தை குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேலாக வருவாயை கொடுத்துள்ளன. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை S&P 500 குறியீடு 24 சதவீதமும், ஜப்பானின் Nikkei 225 குறியீடு 30 சதவீதமும், ஐரோப்பாவின் Stoxx 50 குறியீடு 17.3 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான தேசிய பங்குச்சந்தையின்  நிப்டி50 குறியீடு 22.60 சதவீதமும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 21 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் பங்குச்சந்தை 7.8 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி(Kospi) 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் சீனாவின் S&P China 500 குறியீடு 12.50 சதவீதம் மற்றும் ஹாங்காங் நாட்டின் Hang Seng 14 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

2023ம் ஆண்டில் காணப்பட்ட உலகளாவிய போர் பதற்ற சூழ்நிலை, பொருளாதார மந்தநிலை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றால் தங்கத்தின் தேவை அதிகரித்து சொல்லப்பட்ட வருடத்தில் தங்கம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகளவில் வீட்டுமனைத் துறை(Real Estate – REITs) குறியீடும் 11.50 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் வீட்டுமனை விற்பனை 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் Dow Jones Real Estate குறியீடு 7.8 சதவீதம் வளர்ந்துள்ளது. அதே வேளையில் கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.    

அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் 2023ம் ஆண்டில் 5.8 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடந்த சில காலாண்டுகளாக பணவீக்க விகிதம் ஏற்ற-இறக்கமாக காணப்பட்ட நிலையில் வங்கி வட்டி விகிதமும் கணிசமான வருவாயை கடந்த ஆண்டு தந்துள்ளது. பரஸ்பர நிதியில் கிடைக்கப்பெறும் கடன் பண்டுகள்(Debt Mutual Funds) சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை வருவாயை அளித்துள்ளது.

நாணயச்சந்தையில் மெக்ஸிகோ நாட்டின் பெசோ(Peso) 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது போல சுவிட்சர்லாந்து நாட்டின் பிரான்க் 10 சதவீதமும், பிரிட்டிஷ் பவுண்டு 5.30 சதவீதமும் மற்றும் யூரோ 3 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் அமெரிக்க டாலர் 2 சதவீதமும், சீன யுவான் 2.80 சதவீதமும் மற்றும் ரசியாவின் ரூபெல் 17.50 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய ரூபாயும் 0.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டுள்ளது.   

வரக்கூடிய காலம் உலக பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான கால நிலையாக இருப்பதால், தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்து வரும் பங்குச்சந்தையில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். எந்தவொரு முதலீட்டுத் திட்டமும்(Shares, Gold, Bonds, Real Estate) நீண்டகாலம் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு ஏற்றத்தை மட்டுமே சந்திக்கும் என்பது பொருளாதார வரலாற்றில் இல்லை. இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும்.

நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாளத் தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Panama Petrochem Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1982ம் ஆண்டு தனியார் நிறுவனமாக துவக்கப்பட்ட பனாமா பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட், பல்வேறு வகையான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் தயாரிப்பில் திரவ பாரஃபின் எண்ணெய்கள், பெட்ரோலியம் ஜெல்லி, மை எண்ணெய்கள், ஆன்டிஸ்டேடிக் கோனிங் எண்ணெய், ரப்பர் செயல்முறை எண்ணெய்கள், மின்மாற்றி எண்ணெய்கள், கேபிள் நிரப்புதல் கலவைகள் மற்றும் பாரஃபின் மெழுகு ஆகியவை அடங்கும்.

பெட்ரோலிய சிறப்பு தயாரிப்பு(Petroleum Specialty Products) பிரிவில் 80க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் தொழில் புரிந்து வருகிறது. இவை மைகள் மற்றும் பிசின்கள், ஜவுளி, ரப்பர், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், வாகனம், மின்சாரம், கேபிள்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்கு இன்றியமையாதவை. 

1993ம் ஆண்டில் நிறுவனம் பொது நிறுவனமாக(Public Limited) பதிவு செய்யப்பட்டு 1994ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2011ம் ஆண்டில் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்திற்கு தற்போது உள்நாட்டில் 4 உற்பத்தி ஆலைகள் உள்ளது. 

வருவாயை பொறுத்தவரை நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் அழகுசாதனம் மற்றும் மருந்துத்துறை பிரிவுகளில் 24 சதவீதமும், மைகள் / பூச்சுகள் பிரிவில் 21 சதவீதமும், ரப்பர் செயல்முறை பிரிவில் 19 சதவீதமும், ஜவுளித்துறையில் 19 சதவீத வருவாய் பங்களிப்பையும் கொண்டுள்ளது. உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களில் 51 சதவீதம் ஏற்றுமதியில் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களுக்கு நிறுவனம் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாபர் இந்தியா, ஹூபர் குழுமம், ஏடிசி(ATC) டயர் ஆகியவை உள்ளன. 

நிறுவனம் சமீபத்தில் நான்கு புதிய தயாரிப்பு பொருட்களாக: மை மற்றும் பூச்சு தொழிலுக்கான அரோமா ஃப்ரீ டிஸ்டில்லேட்ஸ்(Aroma Free Distillates), பெயிண்ட் தொழிலுக்கான நறுமண இலவச கரைப்பான்கள், துளையிடுதல் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கான மக்கும் எண்ணெய்கள் மற்றும் ரப்பர் தொழில்துறைக்கான நறுமணமற்ற புதிய எண்ணெய்கள் ஆகியவற்றை சந்தையில் வெளியிட்டுள்ளது. 

வருங்காலத்தில் பெரும்பாலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தங்களது இலக்கு என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் முயற்சியாக கடந்த 2022-23ம் நிதியாண்டில் சுமார் 30,000 டன் திறன் கொண்ட இயந்திரத்தை நிறுவியுள்ளது. இவற்றில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வணிகமயமாக்கப்பட்டுள்ளது.

பனாமா பெட்ரோகெம் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 1,953 கோடி ரூபாய். நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.157 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 21 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்திற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் என பெரிதாக எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 69 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,249 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,940 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) விகிதம் கடந்த பல வருடங்களாக சற்று ஏற்ற-இறக்கமாக இருந்திருந்தாலும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம்(PBT) ரூ. 295 கோடியாகவும், நிகர லாபம் 233 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.940 கோடி(மார்ச் 2023). கடந்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி சராசரியாக 13 சதவீதமும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமுமாக இருந்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமும், இதுவே பத்து வருட காலத்தில் சராசரியாக 20 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது. 

நிறுவனத்தை பொறுத்தவரை பாதகமான நிலையாக மூலப்பொருட்களின் விலை மாற்றம்(கச்சா எண்ணெய்), சுற்றுச்சூழல் அபாயங்கள், டாலர் விலை மாற்றம், துறையில் ஈடுபடும் போட்டி மற்றும் பெரு நிறுவனங்கள், அரசு கொள்கைகள் ஆகியவை. சாதகமான நிலை என காணுகையில் நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு பொருட்கள், வலுவான வாடிக்கையாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு(R&D) ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுதல், ஏற்றுமதி சந்தையில் காணப்படும் வாய்ப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுக்கான உலகளாவிய தேவை.

2022-23ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனம் ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 222 கோடி ரூபாயை வைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) தொகையும் மேம்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

What means a Debt Free Listed Company in the Stock Market ?

கடனில்லா நிறுவனங்கள் என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அதன் இருப்புநிலை அறிக்கையில்(Balance Sheet) கடன் எதுவும் இருக்க கூடாது. பொதுவாக ஒரு நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய அல்லது தொடர்ந்து தொழில் புரிய கடன் வாங்கலாம். இந்த கடன் பங்குகளாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ(Debt Securities) இருக்கலாம். 

பங்குகளாக கடன் பெறப்பட்டிருந்தால், பின்னாளில் நிறுவனத்தின் லாபத்தில் பங்குதாரர்களுக்கும் பங்குண்டு. அதே வேளையில் கடன் பத்திரங்களின் மூலம்  பெறப்படும் கடன் தொகைக்கு, பின்னாளில் வட்டியுடன் சேர்த்து அசல் தொகையை நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும்.

நிறுவனத்தின் கடன் பொதுவாக குறுகிய கால கடனாகவோ அல்லது நீண்ட கால கடனாகவோ இருக்கலாம். நிகர கடன்(Net Debt) எனும் போது, ஒரு நிறுவனத்திற்கு கடன் இருக்கலாம். அவை குறுகிய கால அல்லது நீண்ட கால கடனாக இருக்கக்கூடும். அந்த கடனை நிறுவனம் இன்றே செலுத்த வேண்டும் என்ற நிலை வந்தால், நிறுவனத்திடம் அதனை செலுத்துவதற்கான ரொக்க தொகை(Cash & Cash Equivalents) உள்ளதா என்பதை ஆராய்வது, நிகர கடனாகும்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் முடிவில் அதன் இருப்புநிலை அறிக்கையின் படி, ரூ.50 கோடி கடன் உள்ளதாக எடுத்து கொள்வோம். இப்போது, சொல்லப்பட்ட ஆண்டின் முடிவில் அந்த நிறுவனத்திடம் ரூ.25 கோடி ரொக்கமாக இருக்கும் நிலையில், அந்த நிறுவனம் தனது கடனை குறைக்கும் பட்சத்தில், மீதமிருக்கும் கடன் ரூ.25 கோடி மட்டுமே.

Net Debt = Borrowings(Short Term Debt + Long Term Debt) – Cash & Cash Equivalents

இதுவே நிறுவனத்திடம் ரொக்க தொகை ரூ.50 கோடியாக இருந்து கடனை அடைக்கும் நிலையில், நிறுவனத்திடம் தற்போது கடன் எதுவும் இருக்காது. இதனை தான் நாம், ‘நிகர கடனில்லா தன்மை(Net Debt Free)’ என்கிறோம். இங்கே நிறுவனம் அந்த கடனை உடனடியாக உண்மையில் செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. கடனை திரும்ப செலுத்த கூடிய நிலை ஏற்பட்டால் என்ற தன்மையை மட்டுமே இந்த விதிமுறை கூறுகிறது.

நிறுவனத்தின் கடன் தன்மையை புரிந்து கொள்ள மற்றொரு முறையை நாம் காணலாம். அதாவது நிறுவனத்தின் மொத்த கடனை, அதன் பங்குதாரர்களின் பங்கு மதிப்பை கொண்டு ஒப்பிடுவது. இதனை கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் என்கிறோம்.

Debt to Equity Ratio = Total Liabilities / Shareholder’s Equity

(Simple Way to Calculate from the Balance Sheet: Borrowings / (Equity Share Capital + Reserves))

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை ஒன்று(1.0) என வந்தால், நிறுவனத்தின் கடனும், பங்கு மதிப்பும் சரிசமமாக உள்ளது. இதன் காரணமாக நிறுவனம் பின்னாளில் தனது கடனை அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படலாம். இது நிறுவனத்திற்கும், பங்குதாரர்களுக்கு நல்லதல்ல. இதுவே 0.5 என விகிதம் இருந்தால், நிறுவனத்தின் கடன் தன்மை, பங்குகளின் மதிப்பில் பாதியாக உள்ளது என பொருளுண்டு. 

சுருக்கமாக சொன்னால், ஒருவருடைய வருவாய் ரூ.1 என கொள்ளும் போது, அதற்குள்ளாகவே அதன் செலவுகளும் இருக்க வேண்டும். மீறினால், கடன் தன்மை அதிகரித்து நிர்வாகம் சீர்கெடும், தொழிலும் பாதிப்படையலாம். இதுவே ஒரு ரூபாய் வருவாய் இருக்கையில், செலவு 50 பைசா அல்லது அதற்கு கீழாக இருக்கும் போது, அவர் பின்னாளில் கடன் வாங்கினாலும் அதனை திரும்ப செலுத்துவதற்கான திறன் உள்ளது. வருவாயை காட்டிலும் செலவு குறைவாக இருக்கும் நிலையில், தொழிலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏதுமிருக்காது.

மேலே சொல்லப்பட்ட இரு நிலைகளையும் அறிந்து வைத்திருப்பது, பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு அவசியம். ஒரு நிறுவனத்திற்கு நிகர கடன் நன்றாக இருந்தாலும் சரி, கடன்-பங்கு தன்மை 0.5 விகிதத்துக்கு குறைவாக இருந்தாலும் சரி – அவை கடனில்லா நிறுவனங்களாக கருதப்படும்.

ஒரு நிறுவனம் கடனில்லா தன்மையாக இருப்பதில் சாதகமும், பாதகமும் உள்ளது. கடனில்லாமல் இருக்கும் போது, நிறுவனத்தின் லாபத்திலிருந்து கடனுக்கான வட்டி தொகைக்கு ஒதுக்க தேவையில்லை. தொழிலை விரிவாக்கம் செய்ய போதுமான தொகை கையிருப்பில் இருக்கும். லாபத்தில் பங்குதாரர்களுக்கு பங்களிப்பை(Dividend, Buyback) அளிக்கலாம். 

பொதுவாக பொருளாதார மந்தநிலை மற்றும் துறை சார்ந்த நிதிச்சிக்கல் ஏற்படும் போது, கடனில்லா நிறுவனங்கள் தப்பி பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். திவால் நிலையை தவிர்ப்பது கடனில்லா நிறுவனங்களுக்கு எளிது. 

பாதகமான நிலையென்றால், ஒரு நிறுவனம் பங்குகள் மூலம் தனது முதலீட்டை அதிகம் ஈர்க்கையில், அது அந்த நிறுவனத்திற்கு நீண்ட காலத்தில் சாதகமாக அமையாது. ஏனெனில், பொதுவாக கடன் பத்திரங்களின் மூலம் பெறப்படும் கடனுக்கு, பங்குகளை காட்டிலும் செலவு விகிதம் மிக குறைவே. பங்குகள் எனில், லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அதன் பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். கடன் பத்திரங்கள்(Debt Funds) எனில், நிலையான வட்டியுடன் அசலை செலுத்தினால் போதுமானது. இதன் காரணமாக தான் பெரும்பாலான நிறுவனங்கள், வங்கிக்கடனை குறைந்த வட்டி விகிதத்தில் வாங்கி கொள்கிறது.  

இந்திய பங்குச்சந்தையில் கடனில்லா நிறுவனங்கள்:

  • கடன்-பங்கு(Debt to Equity Ratio) விகிதம் ஒன்றுக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,166
  •  கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,550
  • பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 366
  •  பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 50 சதவீதத்திற்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 257
  • பங்கு மூலதன மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், ரொக்க கையிருப்பு(Cash Equivalents) நிறுவனத்தின் கடனை காட்டிலும் அதிகமாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கு மேலாக மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 147.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

International Coffee Day – October 1, 2023 – Industry Insights

காபி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நியாயமான வர்த்தக காபியை ஊக்குவிக்கவும், 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ம் நாளில் சர்வதேச காபி தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. தேசிய காபி தினம் என ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தாலும், கடந்த 1963ம் ஆண்டில் லண்டனை தலைமையிடமாக கொண்டு சர்வதேச காபி அமைப்பு(International Coffee Organization) ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பில் இந்தியா உள்பட 42 நாடுகள் காபி உற்பத்தி உறுப்பினர்களாகவும், 7 நாடுகள் காபி இறக்குமதி செய்யும் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இறக்குமதி செய்யும் உறுப்பினர் நாடுகளாக ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய ராச்சியம் மற்றும் துனிசியா ஆகியவை உள்ளன. 

சர்வதேச காபி தினத்தில் சில காபி உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள், அன்றைய நாளில் காபியை இலவசமாகவோ அல்லது தள்ளுபடி விலையிலோ வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ‘காபி’, ஒரு பிரபலமான பானமாகவும், பொருட்சந்தையில் முக்கிய பொருளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் காபியை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்குகிறார்கள். 

உலகில் நாள்தோறும் சுமார் 225 கோடி கப் அளவிலான காபி, 100 கோடி நபர்களால் உட்கொள்ளப்படுகிறது. உலகின் 90 சதவீதத்திற்கும் அதிகமான காபி உற்பத்தி பெரும்பாலும் வளரும் நாடுகளில் தான் உற்பத்தியாகிறது. உலகம் முழுவதும் காபியை உற்பத்தி செய்யும் சிறு வணிகர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2.50 கோடி. தென் அமெரிக்காவில் தான் காபியை உட்கொள்ளும் அல்லது நுகரும் தன்மை அதிகமாக உள்ளது.

சர்வதேச காபி சந்தையின் மதிப்பு சுமார் 127 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய காபி சந்தையின் மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலக காபி விற்பனையின் வளர்ச்சி ஆண்டுக்கு 4 முதல் 5 சதவீதமாக(CAGR 2023-2028) மதிப்பிடப்படுகிறது. உலகின் காபி விற்பனை மூலமான பெரும்பாலான வருவாய் அமெரிக்காவிலிருந்து தான் கிடைக்கப்பெறுகிறது. உலக காபி சந்தையில் ஒரு தனிநபரின் சராசரி நுகரும் அளவு நாளொன்றுக்கு 700 முதல் 800 கிராம்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

காபி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது பிரேசில். வியட்நாம், கொலம்பியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஏழாவது மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இறக்குமதி செய்யும் நாடுகளாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக காபி விற்பனை சந்தையின் நாயகனாக மற்றும் பிராண்டாக, ‘ஸ்டார் பக்ஸ்(Starbucks)’ உள்ளது. இந்நிறுவனம் காபி விற்பனை மூலம் சுமார் 32.25 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. அதாவது அமெரிக்காவின் மொத்த காபி விற்பனை வருவாயில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 37 சதவீதம். ஸ்டார் பக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல Panera Bread, McCafe, Lavazza, Tim Hortons, Dunkin’s Brands ஆகிய நிறுவனங்கள்(பிராண்டுகள்) உள்ளன.      

2022-2023ம் ஆண்டின் முடிவில் உலக காபி தொழிற்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 495 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவின் காபி உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை கர்நாடக மாநிலம் மட்டும் கொண்டுள்ளது. இதற்கடுத்தாற் போல கேரளா 23 சதவீதத்தையும், தமிழ்நாடு 6 சதவீதத்தையும் பங்களிப்பாக கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஆண்டுக்கு சுமார் 2.33 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான காபியை உற்பத்தி செய்கிறது. 

இந்திய உள்ளூர் சந்தையில் காபி நுகரும் தன்மை 73 சதவீதம் நகரங்களிலிருந்து தான் வருகிறது. இந்திய காபியை அதிகம் நுகரும்(இறக்குமதி) நாடுகளாக இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா, லிபியா, போலந்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உள்ளது. இந்தியாவின் காபி ஏற்றுமதியில் இத்தாலியின் பங்களிப்பு மட்டும் சுமார் 45 சதவீதம். அடுத்த ஐந்து வருடங்களில்(2023-2028) இந்திய காபி சந்தையின் விற்பனை வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதத்தை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

இந்திய பங்குச்சந்தையில் தோட்டத்துறை பிரிவில்(Plantation) சுமார் 44 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் உட்பிரிவான தேநீர் மற்றும் காபி(Tea & Coffee) துறையில் 26 நிறுவனங்கள் உள்ளன. இச்சந்தையின் முதன்மை இடத்தை, ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ்’ தக்க வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.81,400 கோடி. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேயிலை நிறுவனமாகவும் ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com