Tag Archives: nps

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

Regulatory authorities in India

‘தாலாட்டு கேட்குதம்மா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரபுவும், கவுண்டமணியும் இரவு நேரத்தில் ஒரே சைக்கிளில்(டபுள்ஸ் தான்!) வந்து கொண்டிருப்பார்கள். அப்போது எதிரே வரும் போலீஸ்காரரை கண்ட பிரபு, கவுண்டமணி அவர்களை சைக்கிளிலிருந்து இறங்கச் சொல்வார். பின்பு வரும் போலீஸ்காரர் அந்த சைக்கிளை நிறுத்தி, ‘என்னய்யா சைக்கிள்ல லைட் இல்லாம வர்ற’ என கேட்க அதற்கு பிரபு சிரித்துக் கொண்டே, ‘நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வரேன், பின்னாடி ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாரு’ என காமெடியாக சொல்வார். இதனை நம்பி, அந்த போலீஸ்காரரும் பின்னாடி வரும் கவுண்டமணியை விசாரிப்பது போல நகைச்சுவை உரையாடல் நிகழும்.

இப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பாலான போன்சி – ஏமாற்று பேர்வழிகளின் மோசடித் திட்டங்களில்(Ponzi Scam) மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, இருக்கும் சொத்துக்களை விற்றுப் போட்டு விட்டு, மாதாமாதம் பணம் வரும் என பேராசையில் இருந்து விடுகின்றனர். மோசடி பேர்வழிகளும் ஆயிரம் கோடிகளில் பணத்தை சுருட்டி விட்டு, ஊரை விட்டு ஓடுகையில் நம் மக்கள் இது சார்ந்த புகாருக்கு அணுகும் முதல் நிலை, ‘காவல் நிலையம்’ தான். இது போன்ற மோசடித் திட்டங்களை முன்னரே அறிந்து, எச்சரிக்கையாக இருக்கும் சிலரும் இது சார்ந்த புகாரை எங்கு சொல்ல வேண்டுமென்ற விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். 

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இன்று, ஒவ்வொரு துறைக்கும் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார்களுக்கு தானியங்கி மூலம் வந்து விட்டது. இருப்பினும் இவர்களை கட்டுப்படுத்த, வரையறுக்க யாரவது ஒருவர் வேண்டுமல்லவா, அவர் தான் ஒழுங்குமுறை ஆணையம் எனும் பாதுகாப்பு வளையம்.

ஒழுங்குமுறை ஆணையம் என்றால் என்ன ?

பொதுவாக, ஒழுங்குமுறை என்பது விதிகள் மற்றும் போக்குகளின் தொகுப்பின் படி, ஒரு சிக்கலான அமைப்புகளின் மேலாண்மை ஆகும். உதாரணமாக பள்ளிகளில் நாம் காணும் ஆசிரியர்-மாணவர்களுக்கான ஒழுங்குமுறையை பள்ளி நிர்வாகம் அல்லது கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கும். அதனால் தான் நாம் பள்ளிகளில் கல்வியுடன் அடிப்படை ஒழுக்கத்தையும் கற்கிறோம். 

ஒழுங்குமுறை என்பது சமூக, அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரக் களங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவை அரசாங்கத்தால் அல்லது சில சட்டக் கட்டுப்பாடுகள், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படலாம். உதாரணமாக டிராபிக் சிக்னல்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட வரையறை, அடிப்படை உரிமைகள், உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவதற்கான சட்டங்கள்.

ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம். இந்த ஆணையம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது நிலை சார்ந்த உரிமம் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனில் மனித செயல்பாட்டின் சில பகுதிகளின் மீது தன்னாட்சி ஆதிக்கத்தை செலுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தை ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விதிகளின் படி அதிகாரம் பெற்ற தனிநபரோ வழங்கியிருக்கலாம். உதாரணமாக சந்தைகளில் நுகர்வோரை பாதுகாக்க சட்டம் , தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குமுறைப்படுத்த டிராய்(TRAI) என சொல்லலாம்.

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள்:    

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது உள்ளன. இவற்றில் முக்கியமாக கவனத்தில் உள்ளவை RBI, SEBI, IRDAI, PFRDA போன்றவை. இது போக சிலவற்றையும் நாம் இங்கு பார்ப்போம்.

  • RBI(Reserve Bank of India):

கடந்த 1935ம் வருடம் துவங்கப்பட்ட பாரத ரிசர்வ் வங்கி, 1949ம் ஆண்டு வாக்கில் தேசியமயமாக்கப்பட்டு நாட்டின் வங்கி, நிதி மற்றும் பணவியல் சார்ந்த கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாகவும், இந்தியாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி உள்ளது. 

இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல், ரூபாயின் கட்டுப்பாடு, வெளியீடு மற்றும் விநியோகத்தை பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். நாட்டின் முக்கிய ரூபாய் கட்டண முறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலையையும் இந்த மத்திய வங்கி ஏற்படுத்தி கொடுப்பது இதன் கடமையாகும்.

ஜனவரி 2024 தரவின் படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மட்டும் 623 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

  • SEBI(Securities and Exchange Board of India):

கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்தப்பட்ட செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் நாட்டில் உள்ள பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தையை(Securities & Commodity Market) கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக முதலீட்டாளர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், சந்தையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய வேலையை செய்கிறது.

பங்குச்சந்தையில் ஈடுபடும் தரகு நிறுவனங்களையும், அதன் தரகர்களையும் முறையாக பதிவு மற்றும் ஆய்வு செய்தல், சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்றுதல் ஆகிய முதலீட்டாளர் நலன் சார்ந்த பொறுப்பை செபி கொண்டுள்ளது.

இந்திய நிதிச்சந்தையில் சுமார் 20 உட்துறைகளை கொண்டு செபி தனது ஒழுங்குமுறை வேலைகளை செய்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி போலவே, செபியும் நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாக காணப்படுகிறது.

  • IRDAI (Insurance Regulatory and Development Authority of India)

கடந்த 1999ம் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. ஒழுங்குமுறை ஆணையம் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் காப்பீடு சார்ந்த தொழில்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துதல் இதன் வேலையாகும். 

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஐந்து முழு நேர மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக ஐ.ஆர்.டி.ஏ. ஆணையம் உள்ளது. இந்தியாவில் கடந்த 1818ம் ஆண்டு முதல் காப்பீடு சார்ந்த தொழில்கள் இருந்து வந்தாலும், இந்த ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு காப்பீட்டு கொள்கைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

பாலிசிதாரரின் நலனை பாதுகாத்தல், மின்னணு வடிவத்தில் பாலிசிதாரர் காப்பீட்டை பெற உதவும் பொறுப்பையும் ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது.

  • PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் ஓய்வூதியங்களின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பொறுப்பாக கொண்டுள்ளது. நாட்டின் முதியோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்வதும் இதன் வேலையாகும். 

இன்று நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் இல்லை(பழைய ஓய்வூதிய திட்டம் தவிர்த்து). இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைத்து இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய அனைவரும் தங்களது ஓய்வூதிய பலனை பெற, தேசிய பென்ஷன் திட்டம்(NPS – National Pension System) ஏற்படுத்தப்பட்டு, பி.எப்.ஆர்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  • EPFO (Employees’ Provident Fund Organisation):

கடந்த 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இ.பி.எப்.ஓ. ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் சார்ந்த ஓய்வூதிய திட்டங்களை பொறுப்பாக கொண்டு நிர்வகித்து வருகிறது.

இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தாய் அமைப்பாக மத்திய அறங்காவலர் குழு(Central Board of Trustees) உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952 சட்டம், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், 1976 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1971க்குப் பதிலாக) ஆகிய சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.

கட்டாய வருங்கால வைப்பு நிதி(Mandatory of Provident Fund), அடிப்படை ஓய்வூதிய திட்டங்கள், ஊனமுற்றோர் மற்றும் இறப்பு காப்பீடு, அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எளிதாக்குதல் ஆகிய வேலைகளை இ.பி.எப்.ஓ. ஆணையம் செய்து வருகிறது.

மேலே சொன்ன முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்கள் போக, பின்வரும் சில ஒழுங்குமுறை அமைப்புகளும் இந்தியாவில் பங்காற்றி வருகின்றன.

  • FSSAI (Food Safety and Standards Authority of India)
  • NASSCOM (National Association of Software and Service Companies)
  • TRAI (Telecom Regulatory Authority of India)
  • CERC (Central Electricity Regulatory Commission)
  • CDSCO (Central Drugs Standard Control Organisation)
  • FIEO (Federation of Indian Export Organisation)
  • AMFI (Association of Mutual Funds in India)
  • BIS (Bureau of Indian Standards)
  • BCCI (Board of Control for Cricket in India)
  • ASCI (Advertising Standards Council of India)
  • NHB (National Housing Bank)
  • CBFC (Central Board of Film Certification)
  • NABARD (National Bank for Agriculture and Rural Development)
  • ICC (Indian Chemical Council)
  • AERB (Atomic Energy Regulatory Board)
  • NHAI (National Highways Authority of India)
  • ICAI (The Institute of Chartered Accountants of India)

மற்றும் இன்னும் சில…

நாட்டில் ஏற்படும் முதலீடு சார்ந்த மோசடித் திட்டங்களை அரசாங்கத்தால் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது போன்ற மோசடிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்(Tier-II and Tier-III Cities) தான் நடைபெறுகிறது. மக்களின் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முனைதல் மற்றும் பேராசையே இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம். இருப்பினும், முதலீடு சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்கலாம்.

எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் நம் பணத்தை போடும் முன், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என அந்த நிறுவனமே சொன்னாலும், இந்த நிறுவனம் மற்றும் திட்டங்கள் எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகிறது என்பதனை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், பெரும்பாலான மோசடி நிறுவனங்கள், ‘நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்’ என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு மக்களை ஏமாற்றி விடுவார்கள். 

இன்று நாட்டில் உள்ள எந்தவொரு தொழிலும், முதலீட்டுத் திட்டங்களும் ஏதாவதொரு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வந்து தான் ஆக வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாகவும், அதன் சார்ந்த புகார்களை தெரிவிக்கவும் முனையலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

   

       

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 3

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 3

Budget Planning for Middle Class Family – Part 3

 

பட்ஜெட் திட்டமிடலின் மூன்றாவது பகுதிக்கு வரவேற்கிறோம்…

 

கடந்த பகுதிகளின் மூலம் நடுத்தர பட்ஜெட் குடும்பத்திற்கு தேவையான சில யோசனைகள் மற்றும் திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் வந்திருக்கலாம். அதனை நீங்கள் உடனே செயல்படுத்துவதற்கான ஆயுத்தங்களை செய்தால் போதும். அப்போது தான் பட்ஜெட் திட்டமிடலின் முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். சரி வாருங்கள், இந்த பகுதிக்கான திட்டமிடலை பார்ப்போம்.

 

திரு. பாண்டி மத்திய அரசுத்துறையில் வேலை பார்த்து வரும் 28 வயது இளைஞர். சாத்தூரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தனது வேலை நிமித்தமாக மதுரை மாநகரில் வசித்து வருகிறார். இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர் தனது இலக்கான அரசு பணியினை கைப்பற்றிய பாண்டி, தனக்கான மணப்பெண்ணையும் தேடி வருகிறார் 🙂

 

பட்ஜெட் திட்டமிடல்:

 

சம்பளத்தில் பிடித்தம் போக தனது கையில் (வங்கியில்) மாதம் ரூ. 35,000 ஐ வருமானமாக பெறுகிறார். அதாவது ஆண்டுக்கு ரூ. 4.20 லட்சத்தை சம்பளமாக பெறுகிறார். தற்போதைய அடிப்படை செலவாக (Fixed Expenses)  அவர் மாதம் ரூ. 12,000 மும், இன்சூரன்ஸ் செலவாக மாதம் 2000 ரூபாயும் ஒதுக்குகிறார். முதலீட்டு செலவாக (Investing Expenses) மாதம் ரூ. 17,000 ஐ கொண்டுள்ளார். மீதம் அவரிடம் 4000 ரூபாய் உள்ளது, இதனை தனது எதிர்பாராத செலவுகளுக்கு பயன்படுத்தி வருகிறார்.

 

Budget Financial Planning 3

 

அடிப்படை செலவு என்பது பொதுவாக அத்தியாவசிய செலவுகளாக கருதப்படும். இருப்பிடம், உணவு, உடை, போக்குவரத்து, மின்சாரம், இணைய கட்டணம், காப்பீடு போன்றவை அடிப்படை செலவுகளாகும். முதலீட்டு செலவு எனும் போது, நமது எதிர்கால தேவைக்காக நாம் இன்று சேமிக்கும், முதலீடு மேற்கொள்ளும் தொகையாகும். முதலீட்டை நாம் ஒரு செலவாக தான் பார்க்க வேண்டும். ஏனெனில், நாம் பின்னாளில் கிடைக்கும் முதிர்வு தொகையை செலவழிக்க தான் போகிறோம்.

 

உடன்பிறந்தோர் தனது பெற்றோரை பார்த்து கொண்டிருந்தாலும், பாண்டி தனது பெற்றோருக்காக ஒரு கார்பஸ் (Corpus) தொகையை பெற முதலீட்டை மேற்கொண்டு வருகிறார். அவரது முதலீட்டு செலவில் இதுவும் (மாதம் ரூ. 5000/-) அடங்கும். இன்னும் 5 வருடத்தில் முதிர்வு பெறும் நிலையில் கிடைக்கும் ரூ. 8,70,000 /- தொகையை தனது பெற்றோருக்கு கொடுக்க உள்ளார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மேலே உள்ள அட்டவணையின் மூலம் நாம் பாண்டி அவர்களின் வரவு மற்றும் செலவை அறியலாம். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட (NPS) தொகையை அவர் தனது ஓய்வு காலத்திற்கு பயன்படுத்தி கொள்வார். தனி நபராக இருக்கும் போது அவருக்கு செலவுகள் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், தனது எதிர்காலத்தை (திருமணம் மற்றும் அதனை அடுத்த பொறுப்புகள்) கவனத்தில் கொண்டு சேமிப்பு மற்றும் முதலீட்டை முன்னரே செய்துள்ளார். பணிபுரியும் மணப்பெண்ணை அவர் எதிர்பார்ப்பதால், வரக்கூடிய எதிர்கால செலவுகளை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

நினைவில் கொள்க:

 

  • பாண்டி தனது நிதி இலக்குகளாக (Financial Goals) 5 வருடத்திற்கு பிறகு புதிய வீட்டு மனை ஒன்றை வாங்க விரும்புவதாகவும், 3 வருடத்தின் முடிவில் ஒரு காரை வாங்க வேண்டுமென முடிவு செய்துள்ளார்.

 

  • இவரின் திருமண செலவு மற்றும் பிற நிதி இலக்குகளுக்கு தேவைப்படும் தொகையை, தான் ஏற்கனவே மேற்கொண்ட முதலீட்டில் பயன்படுத்தி கொள்ளலாம். மீதத்தொகைக்கு வங்கியில் கடன் பெறலாம். நான்கு சக்கர வாகனம் தற்போது அவசியமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் அல்லது அதற்கான காலத்தை தள்ளி போடலாம்.
  • தனது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை முன்னரே கணக்கிட்டு அதற்கான முதலீட்டை நாம் மேற்கொள்ளும் போது, எந்த நிதி சிக்கலும் இல்லை.

 

  • பொதுவான எண்டோவ்மென்ட் பாலிசியை எடுத்திருக்கும் இவர் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நலம். ஏற்கனவே தான் எடுத்திருக்கும் மெடிக்ளைம் (Mediclaim) பாலிசியில் திருமணத்திற்கு பிறகு, தனது மனைவியை சேர்த்து கொள்ளலாம். இது போக பாலிசிக்கான கவரேஜ் தொகையையும் அதிகரித்து கொள்வது நிதி செலவை பாதுகாக்கும்.

 

  • நிறுவனம் அல்லது அரசாங்கத்தால் பிடிக்கப்படும் NPS ஐ மட்டும் சாராமல், பிற முதலீட்டு சாதனங்களையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும். நிறுவனம் உங்கள் சம்பளத்தில் தான் குறிப்பிட்ட சதவிகிதத்தை பிடித்தம் செய்ய முடியும். ஓய்வு காலத்திற்கு தேவையான சரியான தொகையை நாம் மட்டுமே கணக்கிட முடியும்.

 

பட்ஜெட் திட்டமிடல் சம்மந்தமான உங்கள் கேள்விகள் மற்றும் கருத்துக்களை இங்கே பகிரலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 2

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 2

Budget Planning for Middle Class Family – Part 2

 

பட்ஜெட் திட்டமிடல் குறுந்தொடருக்கு வரவேற்கிறோம்…

 

திரு. ராஜாக்கண்ணன் மதுரை – ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாதச்சம்பளமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது விவசாய நிலத்திலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இரு மகன்கள் மற்றும் வயதான தன் பெற்றோர்களை கவனித்து கொள்ளும் பொறுப்பை, ராஜாக்கண்ணனின் மனைவி பார்த்து வருகிறார்.

 

மூத்த மகன் ஆறாவது வகுப்பும், இளைய மகன் மூன்றாவதும் படித்து கொண்டிருக்கிறார்கள். அழகான விவசாய தோட்டம், சொந்தமாக வீடு என்றிருக்கும் போது வேறென்ன வேண்டும் நமக்கு. இனி இவரது மாதாந்திர பட்ஜெட் திட்டமிடலை (Budget – Financial Planning) பார்ப்போம்.

 

Budget Financial Planning Part2

 

மாதம் ரூ. 22,000 சம்பளமாக பெறும் ராஜாக்கண்ணன் தனது ஓய்வு கால நிதியாக, சம்பளத்தில் பிடிக்கப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தை (National Pension System -NPS) மட்டுமே கொண்டுள்ளார். வீட்டு வாடகை செலவு ஏதும் இல்லாததால் அவரின் பட்ஜெட்டில் துண்டு விழவில்லை. மாநகருக்கு வெளியே வீடு அமைந்திருப்பதால் காற்றோட்டமான சூழ்நிலையும், விவசாய வாய்ப்பும் தனக்கு கிடைத்துள்ளதாக கூறுகிறார். வயதான தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட்ட இவரது குடும்பத்திற்கான மாத உணவுச்செலவு ரூ. 10,000 /- ஆகும்.

 

மருத்துவம் மற்றும் காப்பீட்டிற்காக இவர் மாதாமாதம் ரூ. 3500 ஒதுக்குகிறார். உடை, பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து செலவுகளை மேலே உள்ள அட்டவணையில் காணலாம். பிற செலவுகளுக்காக ரூ. 1500 வரை மாதத்திற்கு வைத்துள்ளார். இரு மகன்களின் கல்விச்செலவுகளுக்கு மாதம் ரூ. 11,000 வரை செலவிடுகிறார். இவரது செலவு பட்டியலில் கல்விச்செலவே முக்கிய பங்கு வகிக்கிறது 🙂

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, ராஜாவின் மனதுக்கு பிடித்த விவசாய தொழில் மூலம் மாதம் ரூ. 5000 ஐ பிற வருமானமாக ஈட்டி வருகிறார். பருவ நிலை மாற்றங்களால் தான் எதிர்பார்த்த வருமானத்தை விவசாயத்தில் ஈட்ட முடியவில்லை என்றாலும், தனது நம்பிக்கையை கைவிடாமல் தோட்டத்தில் புதுமையான முறைகளை புகுத்தி வருகிறார். விரைவில் அவர் தனது விவசாயம் மூலம் நல்ல வருமானத்தை பெறுவார் என நம்பலாம். இவரின் வரவு-செலவை ஒப்பிடும் போது, மீதம் உபரித்தொகையாக ரூ. 1500 உள்ளது. இன்றைய நாட்களில், ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினை நிர்வகிப்பதில் இவரை போன்றவரை நாம் பாராட்டலாம்.

 

பரிந்துரைகள் / நினைவில் கொள்க:

 

  • ராஜாக்கண்ணன் தனது மாத உபரித்தொகையை இரு மகன்களின் எதிர்கால இலக்குகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். எதிர்கால இலக்குகளுக்கு பயன்படுத்த உள்ள தொகையை ஆர்.டி. யாகவோ (Bank / Post office RD) அல்லது பரஸ்பர நிதியின் எஸ்.ஐ.பி. முறையை (Mutual Fund -SIP) தேர்ந்தெடுப்பது நலம்.

 

  • குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறு நபர்கள் எனும் போது, அவரின் உணவில் பெரும்பாலும் இல்லை எனலாம். பிள்ளைகளுக்கு மற்றும் பெற்றோர்களுக்கான ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் பெரிய குடும்பங்களுக்கு உணவு சார்ந்த மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கும் போதே உணவுச்செலவினை ஓரளவு குறைக்க முடியும். இதனை கொண்டும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் இலக்குகளை நிர்ணயம் செய்யலாம்.

 

  • மருத்துவம் மற்றும் காப்பீடு என பார்க்கும் போது, அவர் பொதுவான எண்டோவ்மென்ட் (Endowment) பாலிசியை தான் எடுத்துள்ளார். மேலும் வயதான பெற்றோர்களுக்கான எதிர்பாராத மருத்துவ செலவுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

 

  • தான் ஒதுக்கும் ரூ. 3500 /- ல் (மருத்துவம் மற்றும் காப்பீடு) தனக்கான டேர்ம் இன்சூரன்ஸை எடுத்து கொள்வது நல்லது. இவருக்கான டேர்ம் பாலிசி கவரேஜ் ரூ. 45 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை இருந்தால் போதும் (ஆண்டு வருமானத்தை போல 15-20 மடங்கு). இந்த கவரேஜிற்கு ஆண்டு பிரீமியம் ரூ. 7000 – 7500 வரை இருக்கும்.

 

  • எதிர்பாரா மருத்துவ செலவுகளை தவிர்க்க இவருடன் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என ஒரு மருத்துவ பாலிசி, வயதான பெற்றோர்களுக்கென மற்றொரு பாலிசியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மூத்த குடிமக்கள் அல்லாமல் நான்கு பேருக்கான குடும்ப மருத்துவ காப்பீட்டு பிரீமியம் ஆண்டுக்கு ரூ. 15000-18000 /- ஆகும் ( 5 லட்சம் வரையிலான கவரேஜ்). மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு பிரீமியம் அதிகமாக இருக்கும் ( 2 Senior Citizens – Rs. 35,000 /- yearly for Upto 5 Lakh Sum Insured).

 

  • ஓய்வு கால நிதிக்கு தேசிய பென்ஷன் திட்டத்தை மட்டும் நம்பியிருக்காமல் அவ்வப்போது தனது சேமிப்பிலும் ஒரு தொகையை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்கால கல்விச்செலவுகளை கருத்தில் கொண்டு, முன்கூட்டிய சேமிக்க பழகினால் சிரமப்பட தேவையில்லை. வெறும் சேமிப்பு என்று மட்டும் பாராமல், பிற வருமானத்தை ஏற்படுத்துவதும் ஒரு குடும்பத்திற்கு நிதி சார்ந்த அக்கறை உதவும்.

 

வருவாயில் துண்டு விழாமல் பார்த்து கொள்வதே சாலச்சிறந்தது.

வந்த பின் வருந்துவது அர்த்தமில்லையே 🙂

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தேசிய பென்ஷன் திட்டத்தின் சமீபத்திய மாற்றங்கள்

தேசிய பென்ஷன் திட்டத்தின் சமீபத்திய மாற்றங்கள்

Recent Changes in National Pension System (NPS)

 

என்.பி.எஸ் (NPS) எனப்படும் தேசிய பென்ஷன் திட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2004 ஜனவரி மாதம்(January 1,2004) முதல் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், 2009 ம் வருடம் முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் என கொண்டு வரப்பட்டது. இதனை புதிய பென்ஷன் திட்டம் எனவும் கூறுவதுண்டு.

 

NPS(National Pension System) செயலாக்கத்தால் 2004 ஜனவரி 1 ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு முன்பிருந்த வரையறுக்கப்பட்ட பயனமைப்பை (Defined Benefit System) கொண்ட பென்ஷன் முறை ரத்து செய்யப்பட்டது. இதனால் 2004 முதல் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் முறைக்கு மாற்றாக, வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டம் (Voluntary Defined Contribution System) என்னும் தேசிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

 

என்.பி.எஸ் திட்டத்தில் பயன்பெறும் ஊழியர் சந்தாதாரர்(Subscriber) எனப்படுவார். இந்த திட்டம் PFRDA (Pension Fund Regulatory and Development Authority) அமைப்பால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சந்தாதாரர் சார்ந்த தகவல்கள் மற்றும் முதலீட்டு முறைகள் தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

 

தேசிய பென்ஷன் திட்டத்தில் அவ்வப்போது சில மாற்றங்கள் கொண்டு வருவதுண்டு. சமீபத்தில் அது போன்ற மாற்றங்கள் சில அறிவிக்கப்பட்டுள்ளன. சந்தாதாரராக உள்ளவர் திட்டத்தில் இணைந்த மூன்று வருடங்களுக்கு பிறகு தனது பங்களிப்பில் 25 சதவீத பணத்தை விரும்பினால் பெற்று கொள்ளலாம்(25 percent withdrawal). பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் காரணமாக, தனது துறை சார்ந்த உயர்கல்வி படிப்பது, புதிதாக தொழில் துவங்குவது போன்றவையாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

தனியார் துறையில் பணிபுரியும் சந்தாதார்களுக்கு தனது என்.பி.எஸ். கணக்க்கில் சமபங்கு முதலீட்டை(Equity Investment) 75 சதவீதம் வரை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விகிதம் 50 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சந்தாதாரர் தனது திட்ட காலத்தில் அதிகபட்சமாக மூன்று முறை தனது பங்களிப்பு பணத்தை பெற்று கொள்ளலாம் எனவும், இது சம்மந்தமான விண்ணப்ப கோரிக்கையை CRA (Central Record Keeping Agency) என்ற மத்திய ஆவண பதிவு அமைப்பில் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளது. அருகில் உள்ள நோடல் அலுவலகத்திலும் விண்ணப்பத்தை கொடுக்கலாம் என தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com