Tag Archives: sebi

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

Regulatory authorities in India

‘தாலாட்டு கேட்குதம்மா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரபுவும், கவுண்டமணியும் இரவு நேரத்தில் ஒரே சைக்கிளில்(டபுள்ஸ் தான்!) வந்து கொண்டிருப்பார்கள். அப்போது எதிரே வரும் போலீஸ்காரரை கண்ட பிரபு, கவுண்டமணி அவர்களை சைக்கிளிலிருந்து இறங்கச் சொல்வார். பின்பு வரும் போலீஸ்காரர் அந்த சைக்கிளை நிறுத்தி, ‘என்னய்யா சைக்கிள்ல லைட் இல்லாம வர்ற’ என கேட்க அதற்கு பிரபு சிரித்துக் கொண்டே, ‘நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வரேன், பின்னாடி ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாரு’ என காமெடியாக சொல்வார். இதனை நம்பி, அந்த போலீஸ்காரரும் பின்னாடி வரும் கவுண்டமணியை விசாரிப்பது போல நகைச்சுவை உரையாடல் நிகழும்.

இப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பாலான போன்சி – ஏமாற்று பேர்வழிகளின் மோசடித் திட்டங்களில்(Ponzi Scam) மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, இருக்கும் சொத்துக்களை விற்றுப் போட்டு விட்டு, மாதாமாதம் பணம் வரும் என பேராசையில் இருந்து விடுகின்றனர். மோசடி பேர்வழிகளும் ஆயிரம் கோடிகளில் பணத்தை சுருட்டி விட்டு, ஊரை விட்டு ஓடுகையில் நம் மக்கள் இது சார்ந்த புகாருக்கு அணுகும் முதல் நிலை, ‘காவல் நிலையம்’ தான். இது போன்ற மோசடித் திட்டங்களை முன்னரே அறிந்து, எச்சரிக்கையாக இருக்கும் சிலரும் இது சார்ந்த புகாரை எங்கு சொல்ல வேண்டுமென்ற விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். 

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இன்று, ஒவ்வொரு துறைக்கும் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார்களுக்கு தானியங்கி மூலம் வந்து விட்டது. இருப்பினும் இவர்களை கட்டுப்படுத்த, வரையறுக்க யாரவது ஒருவர் வேண்டுமல்லவா, அவர் தான் ஒழுங்குமுறை ஆணையம் எனும் பாதுகாப்பு வளையம்.

ஒழுங்குமுறை ஆணையம் என்றால் என்ன ?

பொதுவாக, ஒழுங்குமுறை என்பது விதிகள் மற்றும் போக்குகளின் தொகுப்பின் படி, ஒரு சிக்கலான அமைப்புகளின் மேலாண்மை ஆகும். உதாரணமாக பள்ளிகளில் நாம் காணும் ஆசிரியர்-மாணவர்களுக்கான ஒழுங்குமுறையை பள்ளி நிர்வாகம் அல்லது கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கும். அதனால் தான் நாம் பள்ளிகளில் கல்வியுடன் அடிப்படை ஒழுக்கத்தையும் கற்கிறோம். 

ஒழுங்குமுறை என்பது சமூக, அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரக் களங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவை அரசாங்கத்தால் அல்லது சில சட்டக் கட்டுப்பாடுகள், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படலாம். உதாரணமாக டிராபிக் சிக்னல்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட வரையறை, அடிப்படை உரிமைகள், உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவதற்கான சட்டங்கள்.

ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம். இந்த ஆணையம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது நிலை சார்ந்த உரிமம் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனில் மனித செயல்பாட்டின் சில பகுதிகளின் மீது தன்னாட்சி ஆதிக்கத்தை செலுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தை ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விதிகளின் படி அதிகாரம் பெற்ற தனிநபரோ வழங்கியிருக்கலாம். உதாரணமாக சந்தைகளில் நுகர்வோரை பாதுகாக்க சட்டம் , தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குமுறைப்படுத்த டிராய்(TRAI) என சொல்லலாம்.

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள்:    

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது உள்ளன. இவற்றில் முக்கியமாக கவனத்தில் உள்ளவை RBI, SEBI, IRDAI, PFRDA போன்றவை. இது போக சிலவற்றையும் நாம் இங்கு பார்ப்போம்.

  • RBI(Reserve Bank of India):

கடந்த 1935ம் வருடம் துவங்கப்பட்ட பாரத ரிசர்வ் வங்கி, 1949ம் ஆண்டு வாக்கில் தேசியமயமாக்கப்பட்டு நாட்டின் வங்கி, நிதி மற்றும் பணவியல் சார்ந்த கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாகவும், இந்தியாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி உள்ளது. 

இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல், ரூபாயின் கட்டுப்பாடு, வெளியீடு மற்றும் விநியோகத்தை பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். நாட்டின் முக்கிய ரூபாய் கட்டண முறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலையையும் இந்த மத்திய வங்கி ஏற்படுத்தி கொடுப்பது இதன் கடமையாகும்.

ஜனவரி 2024 தரவின் படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மட்டும் 623 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

  • SEBI(Securities and Exchange Board of India):

கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்தப்பட்ட செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் நாட்டில் உள்ள பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தையை(Securities & Commodity Market) கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக முதலீட்டாளர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், சந்தையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய வேலையை செய்கிறது.

பங்குச்சந்தையில் ஈடுபடும் தரகு நிறுவனங்களையும், அதன் தரகர்களையும் முறையாக பதிவு மற்றும் ஆய்வு செய்தல், சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்றுதல் ஆகிய முதலீட்டாளர் நலன் சார்ந்த பொறுப்பை செபி கொண்டுள்ளது.

இந்திய நிதிச்சந்தையில் சுமார் 20 உட்துறைகளை கொண்டு செபி தனது ஒழுங்குமுறை வேலைகளை செய்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி போலவே, செபியும் நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாக காணப்படுகிறது.

  • IRDAI (Insurance Regulatory and Development Authority of India)

கடந்த 1999ம் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. ஒழுங்குமுறை ஆணையம் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் காப்பீடு சார்ந்த தொழில்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துதல் இதன் வேலையாகும். 

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஐந்து முழு நேர மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக ஐ.ஆர்.டி.ஏ. ஆணையம் உள்ளது. இந்தியாவில் கடந்த 1818ம் ஆண்டு முதல் காப்பீடு சார்ந்த தொழில்கள் இருந்து வந்தாலும், இந்த ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு காப்பீட்டு கொள்கைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

பாலிசிதாரரின் நலனை பாதுகாத்தல், மின்னணு வடிவத்தில் பாலிசிதாரர் காப்பீட்டை பெற உதவும் பொறுப்பையும் ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது.

  • PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் ஓய்வூதியங்களின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பொறுப்பாக கொண்டுள்ளது. நாட்டின் முதியோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்வதும் இதன் வேலையாகும். 

இன்று நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் இல்லை(பழைய ஓய்வூதிய திட்டம் தவிர்த்து). இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைத்து இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய அனைவரும் தங்களது ஓய்வூதிய பலனை பெற, தேசிய பென்ஷன் திட்டம்(NPS – National Pension System) ஏற்படுத்தப்பட்டு, பி.எப்.ஆர்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  • EPFO (Employees’ Provident Fund Organisation):

கடந்த 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இ.பி.எப்.ஓ. ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் சார்ந்த ஓய்வூதிய திட்டங்களை பொறுப்பாக கொண்டு நிர்வகித்து வருகிறது.

இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தாய் அமைப்பாக மத்திய அறங்காவலர் குழு(Central Board of Trustees) உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952 சட்டம், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், 1976 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1971க்குப் பதிலாக) ஆகிய சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.

கட்டாய வருங்கால வைப்பு நிதி(Mandatory of Provident Fund), அடிப்படை ஓய்வூதிய திட்டங்கள், ஊனமுற்றோர் மற்றும் இறப்பு காப்பீடு, அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எளிதாக்குதல் ஆகிய வேலைகளை இ.பி.எப்.ஓ. ஆணையம் செய்து வருகிறது.

மேலே சொன்ன முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்கள் போக, பின்வரும் சில ஒழுங்குமுறை அமைப்புகளும் இந்தியாவில் பங்காற்றி வருகின்றன.

  • FSSAI (Food Safety and Standards Authority of India)
  • NASSCOM (National Association of Software and Service Companies)
  • TRAI (Telecom Regulatory Authority of India)
  • CERC (Central Electricity Regulatory Commission)
  • CDSCO (Central Drugs Standard Control Organisation)
  • FIEO (Federation of Indian Export Organisation)
  • AMFI (Association of Mutual Funds in India)
  • BIS (Bureau of Indian Standards)
  • BCCI (Board of Control for Cricket in India)
  • ASCI (Advertising Standards Council of India)
  • NHB (National Housing Bank)
  • CBFC (Central Board of Film Certification)
  • NABARD (National Bank for Agriculture and Rural Development)
  • ICC (Indian Chemical Council)
  • AERB (Atomic Energy Regulatory Board)
  • NHAI (National Highways Authority of India)
  • ICAI (The Institute of Chartered Accountants of India)

மற்றும் இன்னும் சில…

நாட்டில் ஏற்படும் முதலீடு சார்ந்த மோசடித் திட்டங்களை அரசாங்கத்தால் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது போன்ற மோசடிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்(Tier-II and Tier-III Cities) தான் நடைபெறுகிறது. மக்களின் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முனைதல் மற்றும் பேராசையே இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம். இருப்பினும், முதலீடு சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்கலாம்.

எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் நம் பணத்தை போடும் முன், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என அந்த நிறுவனமே சொன்னாலும், இந்த நிறுவனம் மற்றும் திட்டங்கள் எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகிறது என்பதனை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், பெரும்பாலான மோசடி நிறுவனங்கள், ‘நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்’ என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு மக்களை ஏமாற்றி விடுவார்கள். 

இன்று நாட்டில் உள்ள எந்தவொரு தொழிலும், முதலீட்டுத் திட்டங்களும் ஏதாவதொரு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வந்து தான் ஆக வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாகவும், அதன் சார்ந்த புகார்களை தெரிவிக்கவும் முனையலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

   

       

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

Understanding about Stress Test Methodology – Mutual Funds Investments

பொதுவாக, மருத்துவத் துறையில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) எனும் உடற்பயிற்சி அழுத்த சோதனை என்பது நமது உடல் செயல்பாடுகளின் போது, நமது இதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனை அளவிட உதவுகிறது. உதாரணமாக ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், பிற உடலியக்கம் சார்ந்த வேலைகளை செய்தல் அல்லது ட்ரெட் மில்(TMT) பரிசோதனை செய்யும் போது இதயத்தின் நிலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் அறியலாம். இந்த டெஸ்ட் முறை ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு மற்றும் பிற இதயம் சார்ந்த பிரச்சனைகளை அறிய உதவுகிறது. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவரும் நமக்கு இதய நிலைக்கான சிகிச்சைகளை வழங்குவார்.

இதுவே முதலீட்டில் காணும் போது, ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் உள்ள சொத்துக்களில் காணப்படும் பணப்புழக்கத்தை(Liquidity) மதிப்பிடுவதற்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் உதவுகிறது. முக்கியமாக பொருளாதார மந்தநிலையின் போது அல்லது பங்குச்சந்தை அதிகமாக சரியும் காலங்களில் இந்த முறை பயன்படுகிறது. சொல்லப்பட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் வெளியேறுவதற்கான காலத்தை இது குறிக்கிறது. 

பொதுவாக சந்தை சரியும் காலங்கள், கொரோனா பெருந்தொற்று காலங்களில் முதலீட்டாளர்கள் அச்சத்தில் அல்லது தேவைக்காக அதிக பணத்தை ஒரு குறிப்பிட்ட திட்டத்திலிருந்து எடுக்கும் போது, அத்திட்டத்தில் பணப்புழக்கம்(போதுமானதாக) எவ்வாறு உள்ளது, பெரும்பாலானோர் எளிதாக தங்களது பணத்தை பெற முடிகிறதா, இதனை பண்டு மேலாளர் எவ்வாறு கையாள்கிறார், அவ்வாறு பணம் வெளியேறும் சூழ்நிலையில் அத்திட்டம் மேற்கொண்டு எந்தவித பெரிய சிக்கலும் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளதா என்பதனை அறிய இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பயன்படுகிறது.

இது போன்ற செயல்முறை பொதுவாக, ‘வருமுன் காப்பது நலம்’ என்ற சிந்தனையை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையை தான் தற்போது பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும்(SEBI), அதனை சார்ந்த ஆம்ப்பையும்(AMFI) இணைந்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்பது ஒன்றும் புதிய முறையல்ல. இது பொதுவாக நிதித்துறையில், குறிப்பாக வங்கிகளில் அதன் திறனை மதிப்பிட செயல்படுத்தப்படும். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோர் ஏதேனும் காரணத்தால் ஒரே காலத்தில் அதிக பணத்தை வெளியே எடுக்கும் போது, வங்கி திவாலாகாமல் செயல்படுத்தக் கூடிய நிலைகளை அல்லது வழிமுறைகளை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் பெறலாம்.

மியூச்சுவல் பண்டை பொறுத்தவரை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) கடன் பத்திரத் திட்டங்களுக்கு பல வருடங்களாக இருந்து வருகிறது கவனிக்கத்தக்கது. இதனை தான் நாம் பெரும்பாலும் Interest Rate Risk, Credit Rate Risk மற்றும் Liquidity Risk ஆகிய காரணிகளால் காண்கிறோம். உதாரணமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் நடந்த நிகழ்வை நாம் சொல்லலாம்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிறுவனம் திவாலாகாமல் தவிர்க்க, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தால் அதன் விளைவுகளை களைய, பங்குச்சந்தை ஒரே வாரத்தில் அதிக புள்ளிகள் சரிவை கண்டால் சமாளிக்க, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தல் என பொருளாதாரத்தில் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பகுப்பாய்வு தீர்வை அளிக்கும். 

உதாரணமாக வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் எதிர்பாராவிதமாக இறக்க நேரிட்டால், அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த இழப்பை எவ்வாறு சரி செய்வது, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சேர்த்து வைத்திருந்த பணத்தை முழுவதும் சிகிச்சைக்கு செலவழிக்காமல் இருக்க என்ன வழிகள் என நமது தனிநபர் நிதித்திட்டமிடலிலும் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் நிகழ்வை நாம் காணலாம்.

தற்போது செபி-ஆம்பையால்(SEBI-AMFI) சொல்லப்பட்ட விஷயம், ‘மியூச்சுவல் பண்டில் காணப்படும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Mid & Small Cap Funds) திட்டங்களில் ஏதேனும் காரணத்தால் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது முதலீட்டு பணத்தை கணிசமாக திரும்ப பெறுகையில், அத்திட்டத்தின் பணப்புழக்கம் எவ்வாறு இருக்கும், மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தால் அத்திட்டத்தை மேற்கொண்டு நடத்த இயலுமா’ என்பதனை அறிய ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

அதாவது கடந்த பிப்ரவரி மாதத் தரவுகளின் அடிப்படையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட ஏற்கனவே ஆம்ப்பை கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த சோதனையை தொடரவும், அதன் முடிவுகளை பொதுவெளியில் வெளியிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட மிட் அல்லது ஸ்மால் கேப் திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில்(AUM Portfolio) 25 சதவீதம் வரை பணம் வெளியே செல்ல எவ்வளவு நாட்கள் எடுக்கும், இதனைப் போல 50% வரை பணம் வெளியே செல்ல அதற்கு எடுக்கக்கூடிய காலம் எவ்வளவு என்பதனை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறை மூலம் செயல்படுத்தி அதன் முடிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். 

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மிட் கேப் திட்டத்திற்கு 50 சதவீதம் வரை பணம் வெளியேறுவதற்கு 27 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவே 25% வரை வெளியேறுவதற்கு 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மிட் கேப் பண்ட் பிரிவில் உள்ள மற்றொரு பண்டுக்கு இந்த வெளியேறும் நாட்கள் மாறுபடலாம். ஆக, விற்பனை ஏற்பட்டால் அவர்கள் எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்கிறார்கள் அல்லது பணப்புழக்கம் எவ்வாறு உள்ளது என்பதனை இந்த பரிசோதனை சொல்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னது போல ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனும் அழுத்த சோதனை, பொருளாதார அவசர காலங்களிலும், சந்தை அதிகமாக சரியும் நிலைகளில் மட்டுமே என கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. அதற்காக இப்போது சந்தை சரியப்போகிறதா என கேட்க வேண்டாம். ஒரு வேளை நடந்தால் என்ன செய்வது என்பதற்கான பயிற்சி நிகழ்வு தான் இது. இதனால் மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல உங்களது நிதி இலக்கை சார்ந்து முதலீட்டை நீண்டகாலத்தில் மேற்கொள்ளுதல் நலம்.

செபியும், ஆம்ப்பையும் ஏன் திடீரென்று தற்போது இந்த நிகழ்வை நடத்த சொல்கிறது ?

சிறு முதலீட்டாளர்களின் நலனை(முதலீடு) பாதுகாப்பதற்காக தான்.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான சந்தை அதிக ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதுவும் வரலாற்றில் காணாத ஏற்றமும், அதே வேளையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் குறைந்த வருவாய் வளர்ச்சியும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் நான்கு கோடிக்கும் குறைவான டீமேட் கணக்குகள் இருந்த நிலையில், இன்று சுமார் 14 கோடி டீமேட் கணக்குகள் மொத்தமாக உள்ளது. 

கடந்த இரண்டு முதல் மூன்று வருடமாக, இந்தியாவில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், பெரு நிறுவனங்கள்(Large Cap) அளித்த முதலீட்டு வருவாயை காட்டிலும், மிகவும் அதிகமாக கொடுத்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு புதிதாக வரும் டீமேட் கணக்கு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், கடந்த ஒரு வருட, இரண்டு வருட(Past Performance) முதலீட்டு வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டு இது போன்ற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக சந்தையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் பண்டுகள் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. அவை எந்தளவு ஏற்றம் கண்டிருக்கிறதோ, அதே போன்று இறக்கத்தையும் சந்திக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற நிகழ்வு லார்ஜ் கேப் பங்குகள் அல்லது பண்டு திட்டங்களில் நடப்பதில்லை. இதன் காரணமாகவே செபியும் முதலீட்டாளர்களை எச்சரிக்கும் வண்ணம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவை பங்கு சார்ந்த திட்டங்களில் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், குறிப்பிட்ட ஸ்மால் கேப் திட்டங்களில் புதிய முதலீடு பெறுவதை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 

பங்குச்சந்தையில் பொதுவாக மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவில் பெரும்பாலான நிறுவனப் பங்குகளில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதாவது வாங்கிய பங்குகளை அவ்வளவு எளிதாக விற்க முடியாது. இதனால் தான் பெரும்பாலான ஸ்மால் கேப் பங்குகளின் விலை ஒரு வாரமாக அல்லது ஒரு மாதமாக ஏற்றத்தை மட்டுமே கண்டிருந்தாலும், விற்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதே வேளையில் இந்த சிக்கல் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டு திட்டங்களில் பெரும்பாலும் நடப்பதில்லை. காரணம், பண்ட் மேலாளரின் அணுகுமுறை தான். அவர் பெரும்பாலும் பணப்புழக்கம் உள்ள பங்குகளை தான் வாங்குவார். முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறும் வகையில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை வடிவமைப்பதும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அவசியம்.

கடந்த பிப்ரவரி மாத ஆம்ப்பை(AMFI) முதலீட்டு தரவு அறிக்கையின் படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில்(Growth / Equity Oriented Schemes) சுமார் 12,00,77,704 கோடி ரூபாய் முதலீடாக வந்துள்ளது. இவற்றில் மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு மட்டும் 3,23,80,735 கோடி ரூபாய். சொல்லப்பட்ட மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP) முதலீடு 19,187 கோடி ரூபாய். மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் தனிநபர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மட்டும் 60.30 சதவீதமாகும்.

முதலீட்டாளர்களை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர காலத்தில் ஹைபிரிட்(Hybrid) மற்றும் லார்ஜ் கேப் திட்டங்களிலும், நீண்ட காலத்தில் அஸெட் அலோகேஷன், மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் எஸ்.ஐ.பி(SIP) மற்றும் எஸ்.டி.பி.(STP) முறையில் முதலீடு செய்வது சிறந்தது. இங்கே நீண்டகாலம் என்பது குறைந்தபட்சம் 20-25 ஆண்டுகள் அல்லது உங்களது நீண்டகால நிதி இலக்கு. குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் முடிந்தளவு துறை சார்ந்த அல்லது தீமாட்டிக்(Thematic) பண்டு திட்டங்களை தவிர்ப்பது நல்லது. 

ஸ்ட்ரெஸ் டெஸ்ட் அறிக்கைகளை காண…

Disclosure of Stress Test & Liquidity Analysis  in respect of Mid Cap & Small Cap Funds

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

         

செப்டம்பர் மாதம் முதல் அமலில் வரக்கூடிய பங்குச்சந்தை ஒழுங்குமுறை மாற்றங்கள் – 2020

செப்டம்பர் மாதம் முதல் அமலில் வரக்கூடிய பங்குச்சந்தை ஒழுங்குமுறை மாற்றங்கள் – 2020

Stock Market Regulatory Changes effective from September 2020

நடப்பாண்டின் மார்ச் மாத வீழ்ச்சிக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) சுமார் 13,000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றமடைந்துள்ளது. அதாவது சரிவிலிருந்து தற்போது வரை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், ஜனவரி 1 முதல் கணக்கிடும் போது, சென்செக்ஸ் 5 சதவீத இறக்கத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.

கடந்த இரண்டு வருட காலத்தில் சென்செக்ஸ் 1.5 சதவீத ஏற்றம் மட்டுமே அடைந்துள்ளது. இருப்பினும் மூன்று வருட காலத்தில் 24 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது இந்த குறியீடு. பங்குச்சந்தை ஏற்ற-இறக்கம் இருந்து கொண்டிருந்தாலும், நாட்டில் ஏற்படும் பொருளாதார நிலை மாற்றங்கள், பங்குச்சந்தை அமைப்பு ஒழுங்குமுறையிலும் சில மாற்றங்களை கொண்டு வருகிறது.

வரும் செப்டம்பர் மாதம் முதல் பங்குச்சந்தையில் சில ஒழுங்குமுறை மாற்றங்கள் அமலில் வர உள்ளது. அவற்றில் சில முக்கிய தகவல்களை இங்கு  காண்போம்.

பங்குச்சந்தையில் எந்த பங்கு பரிவர்த்தனையும் செய்யாதவரா நீங்கள் ?

  • பங்குச்சந்தையில் தொடர்ச்சியாக 12 மாதங்கள், பங்குகள் சார்ந்த எந்த பரிமாற்றத்தையும் செய்யாமல் இருக்கும் நிலையில், உங்கள் வர்த்தக கணக்கு செயலற்ற கணக்காக(Inactive) அறிவிக்கப்படும். இந்த நடைமுறை கடந்த மாதம் ஆகஸ்ட் முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • செயலற்ற கணக்கை(Dormant) மீண்டும் புதுப்பிக்க மறு கே.ஐ.சி.(Re-KYC) செய்வது அவசியமாகும். இதற்கு நீங்கள் கணக்கை துவங்கும் போது என்னென்ன ஆவணங்களை கொடுத்தீர்களா, அதே போல மீண்டும் ஒரு முறை சமர்ப்பிப்பது அவசியமாகும். வீட்டு முகவரி மாறியிருந்தால் அதற்கான தகுந்த ஆவணங்களை அளிக்க வேண்டும்.
  • பொதுவாக இந்த நடைமுறைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இருப்பினும், இது கால விரயம் ஏற்படுத்தும் செயலாக சொல்லப்படுகிறது.

இனி இங்கும் விளிம்பு பற்றாக்குறை அபராதம் உண்டு:

  • இதுவரை பணச்சந்தையில்(Cash Market) தரகு நிறுவனங்கள் அறிவிக்கும்  பண அளவு இருந்தாலே, நாள் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி(based on upfront margin) கொள்ளலாம். பங்குச்சந்தைக்கு தேவையான மீதி தொகையை தரகு நிறுவனங்கள் செலுத்தி விடும். பின்பு நாள் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் செலுத்த வேண்டிய பணத்தை பெற்று கொள்ளும் (பொதுவாக மூன்று நாட்களுக்குள்).
  • எனவே இனி பணச்சந்தையில் முழுத்தொகையும் இல்லாமல் மார்ஜின் அளவில் வர்த்தகம் புரிய முடியாது. ரொக்கமாக பணத்தை செலுத்தி விட்டு தான் பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியும். அதே போல, அன்றைய தினத்தில் விற்ற பங்குகளின் தொகையை கொண்டு புதிய பங்கு பரிவர்த்தனையை மேற்கொள்ள இயலாது. புதிய பரிவர்த்தனைக்கு தேவையான தொகையை சந்தைக்கு முன்னரே செலுத்த வேண்டும்.
  • இருப்பினும், ஏற்கனவே பங்குகளை டீமேட் கணக்கில் வைத்திருப்பவர்கள் அதனை அடமானமாக கணக்கில் கொண்டு, மார்ஜின் அளவுகளை பெறலாம். இதற்கு சந்தை அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய உறுதிமொழி இணைப்பை(New Margin Pledge Mechanism) பயன்படுத்த வேண்டும். அடமானத்தை உறுதி செய்த பின்னர், மார்ஜின் அளவு நிர்ணயிக்கப்படும்.
  • புதிய அடமான திட்டத்தால் மார்ஜின் வழங்கப்பட்டாலும்,பின் சொல்லப்பட்ட நாளில் பணத்தை முழுவதுமாக செலுத்தாத நிலையில் பற்றாக்குறை அபராதம் உண்டு.
  • குறைந்த அளவில் வர்த்தகமாகும் பங்குகள் (illiquid Securities) மற்றும் அதிக ஏற்ற-இறக்கங்களை காணும் பங்குகளுக்கு (100 % VAR) மார்ஜின் அளவு அளிக்கப்படாது.

மார்ஜின் பற்றாக்குறை அபராதம்(Margin Shortage Penalty) எவ்வளவு ?

  • பற்றாக்குறை தொகை ரூ.1 லட்சம் மற்றும் சொல்லப்பட்ட மார்ஜின் அளவு 10 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் நிலையில், 0.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
  • பற்றாக்குறை தொகை ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக மற்றும் மார்ஜின் அளவும் 10 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் நிலையில், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
  • மார்ஜின் பற்றாக்குறை(Margin Shortfall) மூன்று நாட்களுக்கு மேலாக செல்லும் போது, நான்காவது நாளிலிருந்து 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். இதுவே ஒரு மாதத்தில் ஐந்து நாட்களுக்கு மேலாக (தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும்) மார்ஜின் பற்றாக்குறை இருக்கும் போதும் 5 சதவீத அபராதம் செலுத்த வேண்டும்.

சொல்லப்பட்ட ஒழுங்குமுறை மாற்றங்களில் சில விதிமுறைகள் நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க: சில பங்குகளுக்கு 20 சதவீத தொகை ரொக்கமாக இருந்தாலே, மார்ஜின் அளவு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. மார்ஜின் அளவு மற்றும் அபராதம் சார்ந்த தகவல்களை உங்களது தரகு நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நன்று. தரகு நிறுவனங்கள் சார்ந்து செபியிடம்(SEBI) பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

செபியின் புதிய கட்டுப்பாடுகள்: பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் பெறுமா ?

செபியின் புதிய கட்டுப்பாடுகள்: பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் பெறுமா ?

SEBI’s New Restrictions – will the Indian Stock Market rebound ?

கடந்த வெள்ளிக்கிழமை அன்று (20-03-2020) இந்திய பங்குச்சந்தை குறியீட்டில் நிப்டி(Nifty50) 482 புள்ளிகளும், சென்செக்ஸ்(Sensex) 1628 புள்ளிகளும் ஏற்றம் பெற்றது. இரண்டு சந்தைகளும் 5 சதவீதத்திற்கு மேல் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த ஒரு மாதத்தில் 8 பில்லியன் டாலர்கள் அளவில் தங்கள் பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இரண்டு நாட்களுக்கு முன்பு 2.76 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்துள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 3.37 லட்சத்தை தாண்டி விட்டது. இறப்பு விகிதம் மூன்று நாட்களில் 10 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க சந்தையில் அரசு மற்றும் மத்திய வங்கியின் சார்பில் நாட்டின் பொருளாதார சரிவை தவிர்க்க பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும் தற்போது பலனளிக்கவில்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) அறிக்கையின் படி, இந்தியாவில் இதுவரை 17,237 பேருக்கு மட்டுமே கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் சார்பில் சொல்லப்பட்ட அறிக்கையில் இதுவரை விமான நிலையத்தில் 15.17 லட்சம் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை சரிவை தடுக்க செபி(SEBI) கடந்த சில நாட்களாக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிக ஏற்ற – இறக்கம் கொண்ட மற்றும் வலுவில்லாத சில பங்குகளில் மார்ஜின் அளவை குறைத்துள்ளது. அதே வேளையில் சில பங்குகளில் தினசரி வர்த்தகம் மற்றும் ஊக வணிகத்தை தடை செய்துள்ளது. மீறி வர்த்தகம் புரிபவர்களுக்கு அபராத கட்டணம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இருப்பினும், பங்குகளை டெலிவரி முறையில் வாங்குபவர்களுக்கு மார்ஜின் அளவை அதிகரித்து சொல்லியுள்ளது செபி. சந்தை அளவிலான வரம்பிலும்(Free Floating) ஒரு குறிப்பிட்ட பங்கின் சந்தை மூலதனத்தில் 10 சதவீதமாக குறைத்துள்ளது. இது முன்னர் 20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சந்தை மூலதன வரம்பில் ஒவ்வொரு நாளின் வர்த்தக முடிவிலும் 10 சதவீத அளவில் அதிகரித்து சொல்லப்படும் என செபி தெரிவித்துள்ளது.

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அடுத்த சில காலங்களுக்கு நீடிக்கும் என்பதால், இந்திய சந்தையும் அதனை பின்பற்றியே செயல்படும். எனவே தற்போதைய நிலையில் சந்தையில் பங்குகளை வர்த்தகம் புரிவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை. மேலும் இது சந்தை நகர்வுக்கு சாதகமாக இருக்காது. குறுகிய காலத்தில் சந்தை சில நாட்கள் ஏற்றம் பெற்றாலும், அடுத்த சில மாதங்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் வணிக இணைப்பு பாதிப்பு ஆகியவை சந்தையை மந்தநிலையில் தான் வைத்திருக்கும். நீண்ட கால முதலீட்டாளர்கள் தற்போதைய சந்தையில் கொக்கு போல ஒற்றை காலில் நின்று சரியான மீன்களை (பங்குகள்) பிடிக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பரஸ்பர நிதிக்கான மொத்த செலவு விகித மாற்றத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் – செபி

பரஸ்பர நிதிக்கான மொத்த செலவு விகித மாற்றத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் – செபி  

Change and Disclosure of Total Expense Ratio to Mutual Investors – SEBI

 

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது நிதி திட்டங்களை நிர்வகிக்க வருடாந்திர கட்டணமாக, முதலீட்டாளரிடம் ஒரு தொகையை வசூலிக்கும். இதனை செலவின விகிதம் (Expense Ratio) என்பர். பரஸ்பர நிதியில் ஒரு முதலீட்டாளருடைய மொத்த செலவு விகிதம் TER (Total Expense Ratio) எனப்படும்.

 

மொத்த செலவு விகிதம் என்பது ஒரு முதலீட்டாளர்(Mutual Fund Investor) நிதியை வாங்கும் போது, விற்கும் போது மற்றும் தணிக்கை செலவுகள், மற்ற இதர செலவுகளை உட்படுத்தும். இதனை ஒரு வருடத்தின் மொத்த செலவுகளை அந்த வருடத்திற்குரிய சராசரி மொத்த வருவாயில் வகுத்தால் கிடைக்கும் விகிதமாகும்.

 

கடந்த மாதம், செபி அமைப்பு(SEBI) பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு(Mutual Fund Companies) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. முதலீட்டாளருக்கு விதிக்கப்படும் மொத்த செலவு விகிதத்தை (TER) பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளருக்கு அவ்வப்போது குறுஞ்செய்தி(SMS) அல்லது மின்னஞ்சல் (Email) மூலமோ தெரிவிக்க வேண்டுமென அறிவித்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது இணைய தளத்திலும் இது சம்மந்தமான தகவல்களை பகிர வேண்டும் எனவும், TER விகிதத்தில் மாற்றம் ஏதேனும் இருந்தாலும் அதனை உடனடியாக, அதாவது கட்டணம் விதிக்கப்படும் மூன்று வேலை நாட்களுக்கு முன்னரே (At least three working days prior to effecting such change)  முதலீட்டாளருக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

 

மார்ச் 31, 2018 க்கு பின்னர் அறிவிக்கப்படும் எந்த ஒரு பரஸ்பர நிதி திட்டத்திற்கும், அதற்கு முன்னர் இருந்த திட்டத்திற்கும் TER விகிதத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் என செபி தனது குறிப்பில் வெளியிட்டுள்ளது.

 

SEBI (Mutual Funds) Regulations, 1996 ன் படி, ஒவ்வொரு பரஸ்பர நிதியை நிர்வகிக்க (Sales & Advertising, Administrative Expenses, Transaction Cost, Management Fees, Custodian and Audit Fees) முதலீட்டாளரிடம் இருந்து ஒரு கட்டணம் பெறப்படும். ரூ. 100 கோடி வரையிலான வாராந்திர சராசரி நிகர சொத்துக்களை(Net Assets)  நிர்வகிக்கப்படும் சமபங்கு திட்டங்களுக்கு (Equity Schemes) மொத்த செலவு விகிதம் 2.5 % ஆகவும், அடுத்த 300 கோடிக்கு 2.25 % ஆகவும், அடுத்தடுத்த 300 கோடிக்கு 2 % ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதத்திற்கு மேல் எந்த ஒரு பரஸ்பர நிதி நிறுவனமும் கட்டணங்களை விதிக்க கூடாது.

 

கடன் திட்டங்களுக்கு, பங்கு சார்ந்த(Equity) திட்டங்களை விட 0.25 % செலவின விகிதம் குறைவாக உள்ளது.  முதலீட்டாளரை பொறுத்தவரை தங்கள் பரஸ்பர நிதி திட்டத்தின் தேர்ந்தெடுத்தலில் Total Expense Ratio விகிதம் ஒரு முக்கியமானவை. நீண்ட காலத்தில், அதிக TER விகிதம் உள்ள திட்டத்தில் முதலீட்டாளரின் கணிசமான தொகை கட்டணத்திற்கு செல்லும். அதே நேரத்தில் ஒவ்வொரு நிதி திட்டத்தின் செயல்பாடுகளையும் மற்றும் அதன் பலன்களையும் பார்த்து விட்டு தான், ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

(Source:  Total Expense Ratio – Change and Disclosure )

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com