Tag Archives: breathe exercise

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல்

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல் 

Layman’s Personal Financial Planning – Invest & Breathe

“மனதைத் தெளிவுபடுத்துவதற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்கும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியே அடிப்படை” என மருத்துவம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. 

“A Deep breathing exercise to clear the mind and relieve stress”

மூச்சுப்பயிற்சியினால் மனித உடலின் இரத்த அழுத்தம் குறைவதும், மற்ற உடலுறுப்புக்கள் சீராக இயங்குவது மட்டுமில்லாமல், அமைதி மற்றும் நல்வாழ்வு வாழ்வதற்கான புது தெம்பும் நமக்கு கிடைக்கப்பெறுகிறது.    

நவீன உலகத்தில் உடல்நலனும், செல்வமும் இரு நண்பர்களாக தான் வலம் வருகிறது. பொருள் ஆதாரமற்ற மனித வாழ்க்கையை இன்று நாம் இவ்வுலகில் காண இயலாது. அதே போல சுவர் இருந்தால் தான் சித்திரமும். 

அதற்காக நாம் கடினமாக உழைப்பதோ, உடல்நலத்தை பேணுகிறேன், உடல் எடையை இத்தனை நாட்களில் குறைக்கிறேன் என நாள்தோறும் ‘ஜிம்(Gym)’ பேர்வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண நடைப்பயிற்சியும், மூச்சுப்பயிற்சியும் மற்றும் உணவில் கவனம் – அவரவர் வயது சார்ந்து மற்றும் தொழிலுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் அறிவை பயன்படுத்தி மற்றும் அதனை மேம்படுத்துதல் மூலம் நாம் செல்வத்தை எளிமையாக ஈட்டலாம். ஈட்டிய செல்வத்தை சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் பெருஞ்செல்வமாக மாற்றலாம். 

நமது உடல்நலனை நாம் எப்படி பொறுமையாக கருத்தில் கொண்டு பேணுகிறோமோ, அதனை போல செல்வம் சேர்ப்பதிலும் கற்றல் மற்றும் பொறுமையும் அவசியம். ‘அதிகரித்த உடல் எடையை, சில நாட்களில் மிக விரைவாக குறைக்கிறேன்’ என நாம் எடுக்கும் ரிஸ்க் தன்மையும், ‘குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை அள்ளி விட வேண்டும்’ என முதலீட்டில் நாம் விளையாடும் ஊக வணிகமும்(Speculation) – இரண்டும் பக்கவிளைவை தரக்கூடியவையே !

பல வருடங்களாக நமது உடலில் இருக்கும் நோய்த்தன்மையை ஓரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விட்டால், பின்னாளில் நமது உடல் இயக்கங்கள் அடுத்து வரும் நாட்களில் தடுமாறும். இதன் காரணமாக மீண்டுமொரு கவனத்தை நாம் நம் உடல் நலன் மீது செலுத்த நேரிடும். இதற்கான காலமும், பணச்செலவும் அதிகமே. இதனை போல பல ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு பங்குச்சந்தையில் ஒரே நாளில் பல லட்சங்களையும், கோடிகளையும் ஈட்ட வேண்டுமென்ற ஆசை(பேராசை) எல்லோருக்கும் தான். ஆனால் அது அனைவருக்கும், எல்லா நேரங்களிலும் சாத்தியமா !    

கடந்த 2022-23ம் நிதியாண்டில் செபி|(SEBI) வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, இந்திய பங்குச்சந்தையில் ஈடுபடும் 10 நபர்களில் ஒன்பது பேர் (Futures & Options Traders) தங்களது முதலீட்டு பணத்தை இழக்கின்றனர் என கூறுகிறது. சந்தையில் பணத்தை இழக்கும் நபர்களின் சராசரி இழப்பு ரூ.50,000 வரை உள்ளதாகவும், 28 சதவீதம் பேர் தங்களது முதலீட்டு இழப்பை, வெறும் பரிவர்த்தனை கட்டணங்கள் செலுத்துவதில் சந்திக்கின்றனர் எனவும் இந்த தரவு அறிக்கை கூறுகிறது. 

அப்படியிருக்க நாம் எதனை நோக்கி நாம் உழைத்த பணத்தை கொண்டு சென்றிருக்கிறோம் ? பங்குச்சந்தை முதலீடு நீண்ட காலத்தில் பலன் தரும் என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கமே இதனை வெளிப்படையாய் சொன்னாலும்(சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதும்) நாம் என்னவோ குறுகிய காலத்தில் பணக்காரனாக ஆசைப்படுவதே. உண்மையில் பங்குச்சந்தையில் எளிமையாகவும், மிக விரைவாகவும் லாபமீட்ட முடிந்தால், ஏற்கனவே சந்தையில் லட்சம் கோடி ரூபாய்களில் மூலதன மதிப்பை கொண்ட டாட்டா, அம்பானி, பஜாஜ், கோத்ரேஜ், இன்னபிற குழுமங்கள் எங்கே ? அவர்களிடம் இல்லாத பணமா, நிர்வாகமா அல்லது அவர்களுக்கு தெரியாத பங்குச்சந்தை ரகசியமா. சொல்லப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை தங்களது தொழில்களை தான் நம்பியுள்ளன. அவர்களது தொழிற் திறனும், வாடிக்கையாளர்களும் தான் பின்னாளில் முதலீட்டாளர்களால் பங்கு விலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

சாமானியனின் நிதித்திட்டமிடலில் முதல் படி:

தனது குடும்பத்திற்கு தேவையான நிதிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது தான் –  வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு போதுமான டேர்ம் காப்பீடு(Term Insurance), குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்ந்தாற் போல மருத்துவ காப்பீடு(Mediclaim), அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்யும் நபராக இருக்கும் நிலையில், அவருக்கு தேவையான விபத்துக் காப்பீடு(Accidental Coverage).

இது போக அவசர கால நிதியை(Emergency Fund) உருவாக்குதல், குடும்ப நபர்களுக்கான நிதித்தேவையை இலக்குகளாக மாற்றுதல்(Creating Financial Goals). மேலே சொன்ன ஐந்து நிலைகளுக்கும் தனிநபர் ஒருவரின் வருமானம் மற்றும் குடும்ப நபர்களின் தேவையை கருத்தில் கொண்டு திட்டமிடலாம். இந்த ஐந்தும் தவிர்க்க இயலாத நிலைகளாக மற்றும் அவசியமான ஒன்றாக உள்ளது.

நிதித்திட்டமிடலின் இரண்டாவது படியில்,

உங்களது நிதி இலக்குகளுக்கான சரியான சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது(Identifying Suitable Investment schemes). பொதுவாக சேமிப்பு எனும் போது அரசு சார்ந்த அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, பி.எப். பிடித்தம், சிறியளவில் நகை சேமிப்பு, சீட்டு(அரசு பதிவு பெற்ற மற்றும் நம்பகமான) ஆகியவை நமக்கு நினைவில் வரும். 

இவை பெரும்பாலும் குறைந்த வட்டி வருவாயை(பணவீக்கத்தை விட குறைவு) கொண்டிருந்தாலும், குறுகிய கால இலக்குகளுக்கு சிறந்தது. இதனை விடுத்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொன்சி(Ponzi Scam) மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை அரசாங்கம் வெளியிடும் அல்லது அரசு நிர்வாகம் செய்யும் சேமிப்பு திட்டங்களை மட்டுமே நாடுவது நல்லது.

நடுத்தர மற்றும் நீண்டகால நிதி இலக்குகளுக்கு மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இந்த திட்டங்களில் ஏற்ற-இறக்க ரிஸ்க் தன்மை இருப்பதால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஏற்படுத்தலாம. இதன் காரணமாக நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை சரியான காலத்தில் பெற முடியும். பரஸ்பர நிதிகளில் நீண்டகாலத்திற்கு என முதலீட்டு செய்து விட்டு, இலக்குகளை அடையும் முன்னர் அல்லது இடைவெளி காலத்தில் முடிந்தளவு பணத்தை வெளியில் எடுக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு எடுக்கும் நிலையில், நாம் கூட்டு வட்டியின் முழுமையான பலனை(Power of Compounding) அடைய முடியாமல் போகலாம்.

பரஸ்பர நிதி முதலீட்டின் வாயிலாக நாம் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான திட்டங்களில்(Asset Allocation) நமது முதலீட்டை பரவலாக்க முடியும். 

மூன்றாவது மற்றும் இறுதிப்படியாக,

பெருஞ்செல்வத்தை ஈட்டுவது இன்றைய காலத்தில் தேவையான ஒன்றாகி விட்டது. முன்னொரு காலத்தில் மனித உடற்சக்தியை மட்டுமே நம்பியிருந்த குடும்பச் சமூகம், இன்று நிதிச் சொத்துக்களை தான் குடும்பத்திற்கான ஆதாரமாக வைத்துள்ளது. எனவே நாம் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான மற்றும் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை சேர்ப்பதிலும், அவற்றினை கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய நிலையுள்ளது. செல்வம் சேர்ப்பது என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானதல்ல.

பெருஞ்செல்வம் ஈட்ட நாம் தொழில் திறனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நமக்கான தொழில் ஏதுமில்லை அல்லது அவற்றை செய்ய நமது மனம் விரும்பாத போது, மற்றவர்களின் தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்(அதற்காக மீண்டும் பொன்சி மோசடியிடம் மாட்டி கொள்ளாதீர்கள் !). முதலீடு செய்யப்படும் தொழில் நிறுவனம் அரசு அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவும், நிர்வாகத்திறன் படைத்ததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கா விட்டாலும், நமது முதலீட்டு பணம் நமக்காக திறம்பட வேலை செய்யும்.  

மற்றவர்களது தொழிலில் ஒரு சாமானியனும் முதலீடு செய்யலாம் என்பதே, இன்றைய பங்குச்சந்தை வாய்ப்பு(Public & Private Equity – Listed & Unlisted). பங்குச்சந்தை முதலீடு பற்றிய அடிப்படை கற்றலை கற்றுக் கொண்ட பின்னர் தான், சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை கொண்டிருந்தால் சிறப்பு. இல்லையென்றால்,பதிவு பெற்ற மற்றும் நம்பகத்தனமான நிறுவனங்களின் மூலம் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பங்குச்சந்தையிலும் பேராசை காட்டி மோசடி செய்யும் பேர்வழிகள் ஏராளம் ! 

உங்களால் பங்குச்சந்தையை புரிந்து கொள்ள முடியவில்லை எனில், முதலிரண்டு படிநிலைகளோடு இருந்து விடுவது நல்லது. 

மூச்சுப்பயிற்சியை மெதுவாக கவனித்தால் தான் மெருகும், நிதி முதலீடும் சாமானியனுக்கு அப்படித்தான் 🙂

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com