Tag Archives: AMFI

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

Regulatory authorities in India

‘தாலாட்டு கேட்குதம்மா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரபுவும், கவுண்டமணியும் இரவு நேரத்தில் ஒரே சைக்கிளில்(டபுள்ஸ் தான்!) வந்து கொண்டிருப்பார்கள். அப்போது எதிரே வரும் போலீஸ்காரரை கண்ட பிரபு, கவுண்டமணி அவர்களை சைக்கிளிலிருந்து இறங்கச் சொல்வார். பின்பு வரும் போலீஸ்காரர் அந்த சைக்கிளை நிறுத்தி, ‘என்னய்யா சைக்கிள்ல லைட் இல்லாம வர்ற’ என கேட்க அதற்கு பிரபு சிரித்துக் கொண்டே, ‘நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வரேன், பின்னாடி ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாரு’ என காமெடியாக சொல்வார். இதனை நம்பி, அந்த போலீஸ்காரரும் பின்னாடி வரும் கவுண்டமணியை விசாரிப்பது போல நகைச்சுவை உரையாடல் நிகழும்.

இப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பாலான போன்சி – ஏமாற்று பேர்வழிகளின் மோசடித் திட்டங்களில்(Ponzi Scam) மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, இருக்கும் சொத்துக்களை விற்றுப் போட்டு விட்டு, மாதாமாதம் பணம் வரும் என பேராசையில் இருந்து விடுகின்றனர். மோசடி பேர்வழிகளும் ஆயிரம் கோடிகளில் பணத்தை சுருட்டி விட்டு, ஊரை விட்டு ஓடுகையில் நம் மக்கள் இது சார்ந்த புகாருக்கு அணுகும் முதல் நிலை, ‘காவல் நிலையம்’ தான். இது போன்ற மோசடித் திட்டங்களை முன்னரே அறிந்து, எச்சரிக்கையாக இருக்கும் சிலரும் இது சார்ந்த புகாரை எங்கு சொல்ல வேண்டுமென்ற விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். 

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இன்று, ஒவ்வொரு துறைக்கும் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார்களுக்கு தானியங்கி மூலம் வந்து விட்டது. இருப்பினும் இவர்களை கட்டுப்படுத்த, வரையறுக்க யாரவது ஒருவர் வேண்டுமல்லவா, அவர் தான் ஒழுங்குமுறை ஆணையம் எனும் பாதுகாப்பு வளையம்.

ஒழுங்குமுறை ஆணையம் என்றால் என்ன ?

பொதுவாக, ஒழுங்குமுறை என்பது விதிகள் மற்றும் போக்குகளின் தொகுப்பின் படி, ஒரு சிக்கலான அமைப்புகளின் மேலாண்மை ஆகும். உதாரணமாக பள்ளிகளில் நாம் காணும் ஆசிரியர்-மாணவர்களுக்கான ஒழுங்குமுறையை பள்ளி நிர்வாகம் அல்லது கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கும். அதனால் தான் நாம் பள்ளிகளில் கல்வியுடன் அடிப்படை ஒழுக்கத்தையும் கற்கிறோம். 

ஒழுங்குமுறை என்பது சமூக, அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரக் களங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவை அரசாங்கத்தால் அல்லது சில சட்டக் கட்டுப்பாடுகள், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படலாம். உதாரணமாக டிராபிக் சிக்னல்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட வரையறை, அடிப்படை உரிமைகள், உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவதற்கான சட்டங்கள்.

ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம். இந்த ஆணையம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது நிலை சார்ந்த உரிமம் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனில் மனித செயல்பாட்டின் சில பகுதிகளின் மீது தன்னாட்சி ஆதிக்கத்தை செலுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தை ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விதிகளின் படி அதிகாரம் பெற்ற தனிநபரோ வழங்கியிருக்கலாம். உதாரணமாக சந்தைகளில் நுகர்வோரை பாதுகாக்க சட்டம் , தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குமுறைப்படுத்த டிராய்(TRAI) என சொல்லலாம்.

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள்:    

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது உள்ளன. இவற்றில் முக்கியமாக கவனத்தில் உள்ளவை RBI, SEBI, IRDAI, PFRDA போன்றவை. இது போக சிலவற்றையும் நாம் இங்கு பார்ப்போம்.

  • RBI(Reserve Bank of India):

கடந்த 1935ம் வருடம் துவங்கப்பட்ட பாரத ரிசர்வ் வங்கி, 1949ம் ஆண்டு வாக்கில் தேசியமயமாக்கப்பட்டு நாட்டின் வங்கி, நிதி மற்றும் பணவியல் சார்ந்த கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாகவும், இந்தியாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி உள்ளது. 

இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல், ரூபாயின் கட்டுப்பாடு, வெளியீடு மற்றும் விநியோகத்தை பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். நாட்டின் முக்கிய ரூபாய் கட்டண முறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலையையும் இந்த மத்திய வங்கி ஏற்படுத்தி கொடுப்பது இதன் கடமையாகும்.

ஜனவரி 2024 தரவின் படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மட்டும் 623 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

  • SEBI(Securities and Exchange Board of India):

கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்தப்பட்ட செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் நாட்டில் உள்ள பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தையை(Securities & Commodity Market) கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக முதலீட்டாளர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், சந்தையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய வேலையை செய்கிறது.

பங்குச்சந்தையில் ஈடுபடும் தரகு நிறுவனங்களையும், அதன் தரகர்களையும் முறையாக பதிவு மற்றும் ஆய்வு செய்தல், சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்றுதல் ஆகிய முதலீட்டாளர் நலன் சார்ந்த பொறுப்பை செபி கொண்டுள்ளது.

இந்திய நிதிச்சந்தையில் சுமார் 20 உட்துறைகளை கொண்டு செபி தனது ஒழுங்குமுறை வேலைகளை செய்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி போலவே, செபியும் நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாக காணப்படுகிறது.

  • IRDAI (Insurance Regulatory and Development Authority of India)

கடந்த 1999ம் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. ஒழுங்குமுறை ஆணையம் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் காப்பீடு சார்ந்த தொழில்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துதல் இதன் வேலையாகும். 

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஐந்து முழு நேர மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக ஐ.ஆர்.டி.ஏ. ஆணையம் உள்ளது. இந்தியாவில் கடந்த 1818ம் ஆண்டு முதல் காப்பீடு சார்ந்த தொழில்கள் இருந்து வந்தாலும், இந்த ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு காப்பீட்டு கொள்கைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

பாலிசிதாரரின் நலனை பாதுகாத்தல், மின்னணு வடிவத்தில் பாலிசிதாரர் காப்பீட்டை பெற உதவும் பொறுப்பையும் ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது.

  • PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் ஓய்வூதியங்களின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பொறுப்பாக கொண்டுள்ளது. நாட்டின் முதியோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்வதும் இதன் வேலையாகும். 

இன்று நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் இல்லை(பழைய ஓய்வூதிய திட்டம் தவிர்த்து). இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைத்து இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய அனைவரும் தங்களது ஓய்வூதிய பலனை பெற, தேசிய பென்ஷன் திட்டம்(NPS – National Pension System) ஏற்படுத்தப்பட்டு, பி.எப்.ஆர்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  • EPFO (Employees’ Provident Fund Organisation):

கடந்த 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இ.பி.எப்.ஓ. ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் சார்ந்த ஓய்வூதிய திட்டங்களை பொறுப்பாக கொண்டு நிர்வகித்து வருகிறது.

இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தாய் அமைப்பாக மத்திய அறங்காவலர் குழு(Central Board of Trustees) உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952 சட்டம், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், 1976 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1971க்குப் பதிலாக) ஆகிய சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.

கட்டாய வருங்கால வைப்பு நிதி(Mandatory of Provident Fund), அடிப்படை ஓய்வூதிய திட்டங்கள், ஊனமுற்றோர் மற்றும் இறப்பு காப்பீடு, அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எளிதாக்குதல் ஆகிய வேலைகளை இ.பி.எப்.ஓ. ஆணையம் செய்து வருகிறது.

மேலே சொன்ன முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்கள் போக, பின்வரும் சில ஒழுங்குமுறை அமைப்புகளும் இந்தியாவில் பங்காற்றி வருகின்றன.

  • FSSAI (Food Safety and Standards Authority of India)
  • NASSCOM (National Association of Software and Service Companies)
  • TRAI (Telecom Regulatory Authority of India)
  • CERC (Central Electricity Regulatory Commission)
  • CDSCO (Central Drugs Standard Control Organisation)
  • FIEO (Federation of Indian Export Organisation)
  • AMFI (Association of Mutual Funds in India)
  • BIS (Bureau of Indian Standards)
  • BCCI (Board of Control for Cricket in India)
  • ASCI (Advertising Standards Council of India)
  • NHB (National Housing Bank)
  • CBFC (Central Board of Film Certification)
  • NABARD (National Bank for Agriculture and Rural Development)
  • ICC (Indian Chemical Council)
  • AERB (Atomic Energy Regulatory Board)
  • NHAI (National Highways Authority of India)
  • ICAI (The Institute of Chartered Accountants of India)

மற்றும் இன்னும் சில…

நாட்டில் ஏற்படும் முதலீடு சார்ந்த மோசடித் திட்டங்களை அரசாங்கத்தால் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது போன்ற மோசடிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்(Tier-II and Tier-III Cities) தான் நடைபெறுகிறது. மக்களின் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முனைதல் மற்றும் பேராசையே இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம். இருப்பினும், முதலீடு சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்கலாம்.

எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் நம் பணத்தை போடும் முன், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என அந்த நிறுவனமே சொன்னாலும், இந்த நிறுவனம் மற்றும் திட்டங்கள் எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகிறது என்பதனை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், பெரும்பாலான மோசடி நிறுவனங்கள், ‘நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்’ என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு மக்களை ஏமாற்றி விடுவார்கள். 

இன்று நாட்டில் உள்ள எந்தவொரு தொழிலும், முதலீட்டுத் திட்டங்களும் ஏதாவதொரு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வந்து தான் ஆக வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாகவும், அதன் சார்ந்த புகார்களை தெரிவிக்கவும் முனையலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

   

       

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

Understanding about Stress Test Methodology – Mutual Funds Investments

பொதுவாக, மருத்துவத் துறையில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) எனும் உடற்பயிற்சி அழுத்த சோதனை என்பது நமது உடல் செயல்பாடுகளின் போது, நமது இதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனை அளவிட உதவுகிறது. உதாரணமாக ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், பிற உடலியக்கம் சார்ந்த வேலைகளை செய்தல் அல்லது ட்ரெட் மில்(TMT) பரிசோதனை செய்யும் போது இதயத்தின் நிலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் அறியலாம். இந்த டெஸ்ட் முறை ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு மற்றும் பிற இதயம் சார்ந்த பிரச்சனைகளை அறிய உதவுகிறது. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவரும் நமக்கு இதய நிலைக்கான சிகிச்சைகளை வழங்குவார்.

இதுவே முதலீட்டில் காணும் போது, ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் உள்ள சொத்துக்களில் காணப்படும் பணப்புழக்கத்தை(Liquidity) மதிப்பிடுவதற்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் உதவுகிறது. முக்கியமாக பொருளாதார மந்தநிலையின் போது அல்லது பங்குச்சந்தை அதிகமாக சரியும் காலங்களில் இந்த முறை பயன்படுகிறது. சொல்லப்பட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் வெளியேறுவதற்கான காலத்தை இது குறிக்கிறது. 

பொதுவாக சந்தை சரியும் காலங்கள், கொரோனா பெருந்தொற்று காலங்களில் முதலீட்டாளர்கள் அச்சத்தில் அல்லது தேவைக்காக அதிக பணத்தை ஒரு குறிப்பிட்ட திட்டத்திலிருந்து எடுக்கும் போது, அத்திட்டத்தில் பணப்புழக்கம்(போதுமானதாக) எவ்வாறு உள்ளது, பெரும்பாலானோர் எளிதாக தங்களது பணத்தை பெற முடிகிறதா, இதனை பண்டு மேலாளர் எவ்வாறு கையாள்கிறார், அவ்வாறு பணம் வெளியேறும் சூழ்நிலையில் அத்திட்டம் மேற்கொண்டு எந்தவித பெரிய சிக்கலும் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளதா என்பதனை அறிய இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பயன்படுகிறது.

இது போன்ற செயல்முறை பொதுவாக, ‘வருமுன் காப்பது நலம்’ என்ற சிந்தனையை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையை தான் தற்போது பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும்(SEBI), அதனை சார்ந்த ஆம்ப்பையும்(AMFI) இணைந்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்பது ஒன்றும் புதிய முறையல்ல. இது பொதுவாக நிதித்துறையில், குறிப்பாக வங்கிகளில் அதன் திறனை மதிப்பிட செயல்படுத்தப்படும். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோர் ஏதேனும் காரணத்தால் ஒரே காலத்தில் அதிக பணத்தை வெளியே எடுக்கும் போது, வங்கி திவாலாகாமல் செயல்படுத்தக் கூடிய நிலைகளை அல்லது வழிமுறைகளை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் பெறலாம்.

மியூச்சுவல் பண்டை பொறுத்தவரை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) கடன் பத்திரத் திட்டங்களுக்கு பல வருடங்களாக இருந்து வருகிறது கவனிக்கத்தக்கது. இதனை தான் நாம் பெரும்பாலும் Interest Rate Risk, Credit Rate Risk மற்றும் Liquidity Risk ஆகிய காரணிகளால் காண்கிறோம். உதாரணமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் நடந்த நிகழ்வை நாம் சொல்லலாம்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிறுவனம் திவாலாகாமல் தவிர்க்க, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தால் அதன் விளைவுகளை களைய, பங்குச்சந்தை ஒரே வாரத்தில் அதிக புள்ளிகள் சரிவை கண்டால் சமாளிக்க, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தல் என பொருளாதாரத்தில் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பகுப்பாய்வு தீர்வை அளிக்கும். 

உதாரணமாக வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் எதிர்பாராவிதமாக இறக்க நேரிட்டால், அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த இழப்பை எவ்வாறு சரி செய்வது, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சேர்த்து வைத்திருந்த பணத்தை முழுவதும் சிகிச்சைக்கு செலவழிக்காமல் இருக்க என்ன வழிகள் என நமது தனிநபர் நிதித்திட்டமிடலிலும் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் நிகழ்வை நாம் காணலாம்.

தற்போது செபி-ஆம்பையால்(SEBI-AMFI) சொல்லப்பட்ட விஷயம், ‘மியூச்சுவல் பண்டில் காணப்படும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Mid & Small Cap Funds) திட்டங்களில் ஏதேனும் காரணத்தால் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது முதலீட்டு பணத்தை கணிசமாக திரும்ப பெறுகையில், அத்திட்டத்தின் பணப்புழக்கம் எவ்வாறு இருக்கும், மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தால் அத்திட்டத்தை மேற்கொண்டு நடத்த இயலுமா’ என்பதனை அறிய ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

அதாவது கடந்த பிப்ரவரி மாதத் தரவுகளின் அடிப்படையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட ஏற்கனவே ஆம்ப்பை கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த சோதனையை தொடரவும், அதன் முடிவுகளை பொதுவெளியில் வெளியிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட மிட் அல்லது ஸ்மால் கேப் திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில்(AUM Portfolio) 25 சதவீதம் வரை பணம் வெளியே செல்ல எவ்வளவு நாட்கள் எடுக்கும், இதனைப் போல 50% வரை பணம் வெளியே செல்ல அதற்கு எடுக்கக்கூடிய காலம் எவ்வளவு என்பதனை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறை மூலம் செயல்படுத்தி அதன் முடிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். 

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மிட் கேப் திட்டத்திற்கு 50 சதவீதம் வரை பணம் வெளியேறுவதற்கு 27 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவே 25% வரை வெளியேறுவதற்கு 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மிட் கேப் பண்ட் பிரிவில் உள்ள மற்றொரு பண்டுக்கு இந்த வெளியேறும் நாட்கள் மாறுபடலாம். ஆக, விற்பனை ஏற்பட்டால் அவர்கள் எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்கிறார்கள் அல்லது பணப்புழக்கம் எவ்வாறு உள்ளது என்பதனை இந்த பரிசோதனை சொல்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னது போல ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனும் அழுத்த சோதனை, பொருளாதார அவசர காலங்களிலும், சந்தை அதிகமாக சரியும் நிலைகளில் மட்டுமே என கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. அதற்காக இப்போது சந்தை சரியப்போகிறதா என கேட்க வேண்டாம். ஒரு வேளை நடந்தால் என்ன செய்வது என்பதற்கான பயிற்சி நிகழ்வு தான் இது. இதனால் மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல உங்களது நிதி இலக்கை சார்ந்து முதலீட்டை நீண்டகாலத்தில் மேற்கொள்ளுதல் நலம்.

செபியும், ஆம்ப்பையும் ஏன் திடீரென்று தற்போது இந்த நிகழ்வை நடத்த சொல்கிறது ?

சிறு முதலீட்டாளர்களின் நலனை(முதலீடு) பாதுகாப்பதற்காக தான்.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான சந்தை அதிக ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதுவும் வரலாற்றில் காணாத ஏற்றமும், அதே வேளையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் குறைந்த வருவாய் வளர்ச்சியும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் நான்கு கோடிக்கும் குறைவான டீமேட் கணக்குகள் இருந்த நிலையில், இன்று சுமார் 14 கோடி டீமேட் கணக்குகள் மொத்தமாக உள்ளது. 

கடந்த இரண்டு முதல் மூன்று வருடமாக, இந்தியாவில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், பெரு நிறுவனங்கள்(Large Cap) அளித்த முதலீட்டு வருவாயை காட்டிலும், மிகவும் அதிகமாக கொடுத்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு புதிதாக வரும் டீமேட் கணக்கு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், கடந்த ஒரு வருட, இரண்டு வருட(Past Performance) முதலீட்டு வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டு இது போன்ற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக சந்தையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் பண்டுகள் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. அவை எந்தளவு ஏற்றம் கண்டிருக்கிறதோ, அதே போன்று இறக்கத்தையும் சந்திக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற நிகழ்வு லார்ஜ் கேப் பங்குகள் அல்லது பண்டு திட்டங்களில் நடப்பதில்லை. இதன் காரணமாகவே செபியும் முதலீட்டாளர்களை எச்சரிக்கும் வண்ணம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவை பங்கு சார்ந்த திட்டங்களில் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், குறிப்பிட்ட ஸ்மால் கேப் திட்டங்களில் புதிய முதலீடு பெறுவதை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 

பங்குச்சந்தையில் பொதுவாக மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவில் பெரும்பாலான நிறுவனப் பங்குகளில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதாவது வாங்கிய பங்குகளை அவ்வளவு எளிதாக விற்க முடியாது. இதனால் தான் பெரும்பாலான ஸ்மால் கேப் பங்குகளின் விலை ஒரு வாரமாக அல்லது ஒரு மாதமாக ஏற்றத்தை மட்டுமே கண்டிருந்தாலும், விற்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதே வேளையில் இந்த சிக்கல் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டு திட்டங்களில் பெரும்பாலும் நடப்பதில்லை. காரணம், பண்ட் மேலாளரின் அணுகுமுறை தான். அவர் பெரும்பாலும் பணப்புழக்கம் உள்ள பங்குகளை தான் வாங்குவார். முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறும் வகையில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை வடிவமைப்பதும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அவசியம்.

கடந்த பிப்ரவரி மாத ஆம்ப்பை(AMFI) முதலீட்டு தரவு அறிக்கையின் படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில்(Growth / Equity Oriented Schemes) சுமார் 12,00,77,704 கோடி ரூபாய் முதலீடாக வந்துள்ளது. இவற்றில் மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு மட்டும் 3,23,80,735 கோடி ரூபாய். சொல்லப்பட்ட மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP) முதலீடு 19,187 கோடி ரூபாய். மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் தனிநபர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மட்டும் 60.30 சதவீதமாகும்.

முதலீட்டாளர்களை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர காலத்தில் ஹைபிரிட்(Hybrid) மற்றும் லார்ஜ் கேப் திட்டங்களிலும், நீண்ட காலத்தில் அஸெட் அலோகேஷன், மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் எஸ்.ஐ.பி(SIP) மற்றும் எஸ்.டி.பி.(STP) முறையில் முதலீடு செய்வது சிறந்தது. இங்கே நீண்டகாலம் என்பது குறைந்தபட்சம் 20-25 ஆண்டுகள் அல்லது உங்களது நீண்டகால நிதி இலக்கு. குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் முடிந்தளவு துறை சார்ந்த அல்லது தீமாட்டிக்(Thematic) பண்டு திட்டங்களை தவிர்ப்பது நல்லது. 

ஸ்ட்ரெஸ் டெஸ்ட் அறிக்கைகளை காண…

Disclosure of Stress Test & Liquidity Analysis  in respect of Mid Cap & Small Cap Funds

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

         

2024ம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

2024ம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

Top 5 Funds for you to invest in 2024 – Mutual Fund Investments

ஆசியாவின் மிகப் பழமையான பங்குச்சந்தையான மும்பை பங்குச்சந்தை(Bombay Stock Exchange – BSE) 70,000 புள்ளிகளை இன்று(11-12-2023) எட்டியது. மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த 1979ம் ஆண்டு வாக்கில், ‘100’ என்ற அடிப்படை புள்ளிகளை கொண்டு வர்த்தகமாக துவங்கியது. ஜூலை 2023 மாத நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையின் சந்தை மூலதன மதிப்பு 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் 302 லட்சம் கோடி).

கடந்த 2006ம் ஆண்டில் சென்செக்ஸ் தனது 10,000 புள்ளிகளையும், 2007ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 20,000 புள்ளிகள் என்ற இலக்கையும், 2017ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 30,000 என்ற புள்ளிகளையும் கடந்தது. அடுத்த ஆறு வருடங்களில் இரு மடங்காக மாறிய இந்த குறியீடு தற்போது 70,000 புள்ளிகள் என்ற நிலையையும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னொரு காலத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு தேவையான முதலீடு, பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று உள்ளூர் நிறுவன முதலீடுகள் மட்டுமே அளப்பரியது. குறிப்பாக பரஸ்பர நிதிகள் என்றழைக்கப்படும் மியூச்சுவல் பண்ட் வாயிலாக இந்திய பங்குச்சந்தைக்கு வந்த முதலீடுகள் லட்சம் கோடிகளில்.

செபி(SEBI) ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் கடந்த 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆம்பி / ஆம்ஃபை(AMFI – Association of Mutual Funds in India) என்ற லாப நோக்கமில்லா நிறுவனத்தால் தான் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் வரையறைகளும், அதன் சொத்து மேலாண்மை நிறுவனங்களும்(Asset Management Companies) நிர்வகிக்கப்படுகிறது. 

தற்போது உள்நாட்டில் 40க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள்(AMC) பரஸ்பர நிதித்திட்டங்களின் வாயிலாக முதலீடுகளை பெறுகிறது. இந்த முதலீடுகள் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் துறை, இன்னபிற பிரிவுகளிலும் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. சமீபத்திய ஆம்ஃபை தரவின் படி, இந்திய மியூச்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 49.04 லட்சம் கோடி ரூபாய் (நவம்பர், 2023). மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கியவர்களின் எண்ணிக்கை மட்டும் 16.18 கோடி (Folios). இவற்றில் சிறு முதலீட்டாளர்களின் சார்பாக துவங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 12.92 கோடி.

பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்து கண்காணிக்க நேரமில்லை என்பவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) செய்யப்படும் முதலீடு உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு துணை புரிய கால அளவுகளை(Goal Period) ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்கு லிக்விட் மற்றும் கடன் பண்டுகள்(Liquid and Debt Mutual Funds), நடுத்தர கால தேவைகளுக்கு ஹைபிரிட் மற்றும் மல்டி அஸெட் பண்டுகள்(Hybrid and Multi Asset), நீண்ட காலத்திற்கு பங்கு சார்ந்த பண்டுகள்(Equity oriented) என பிரித்து முதலீடு செய்யலாம்.

அஸெட் அலோகேஷன் முறையில் பிரித்து முதலீடு செய்யும் போது சந்தை ஏற்ற-இறக்கத்தை பற்றிய கவலையில்லை. தங்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் நமது முதலீட்டை பெரிதாக பாதிக்காது. அது போன்ற கலவையுடன் உள்ள ஐந்து பண்டுகள் உங்களுக்காக. கடந்த காலங்களில் இந்த பண்டுகள் அளித்த வருவாய், பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் ரிஸ்க் தன்மை ஆகியவை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

  • ICICI Prudential Nifty50 Index Fund
  • Parag Parikh Flexi Cap Fund
  • Mirae Asset Tax Saver
  • SBI Gold Fund
  • HDFC Balanced Advantage Fund

Best - Top 5 Funds to invest in 2024

படத்தில் குறிப்பிடப்பட்ட கடந்த கால வருவாய், எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் இவை பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்கும். சொல்லப்பட்ட பண்டுகள் அனைத்தும் பணப்புழக்கம்(Liquidity), முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification & Asset Allocation), வரி சேமிப்பு, உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்பு(Global Equity exposure) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மேலே உள்ள பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்(MF Distributor) முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

Mutual Funds Investment declined in the month of June 2020

மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை விறு விறுவென ஏற்றம் பெற்று வருகிறது. பெரும்பாலான பங்குகள் மார்ச் கடைசி வாரம் அதலபாதாளத்திற்கு சென்ற நிலையில், தற்போது விலையேற்றத்தில் சுமார் 30-80 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளன.

பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், பங்குச்சந்தை குறியீடுகள் எதிர்பாராத விதமாக ஏற்றமடைந்துள்ளன. பொதுவாக இது போன்ற நிகழ்வு பங்குச்சந்தையில் இயல்பான ஒன்று தான். பின்னொரு நாளில் வேறொரு காரணத்திற்காக இறங்குவதும் நடக்கும். அதே வேளையில் நீண்டகாலத்தில் முதலீடு செய்து பொறுமையாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை பெரும் செல்வத்தை அளிக்கும் வாய்ப்பாக அமையும்.

இந்திய பரஸ்பர நிதி துறையில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்(Asset Management Companies) முதலீட்டு சேவையை செய்து வருகின்றன. செபி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பரஸ்பர நிதி துறையை ஆம்பய்(AMFI) அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. பரஸ்பர நிதி முதலீடுகள் சார்ந்த தகவல்களை ஆம்பய் அமைப்பு ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாத முடிவின் படி, இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு(AUM) 25.5 லட்சம் கோடி ரூபாயாகும். ஜூன் மாதத்தில் பரஸ்பர முதலீடுகள் 95 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் மூன்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதலீடு ரூ.195 கோடி. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் பெறப்பட்ட முதலீடு ரூ. 240 கோடி என சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது 95 சதவீத குறைவாகும்.

ரிஸ்க் குறைந்த லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) இருந்து பெரும்பாலான முதலீடுகள் கடந்த மாதத்தில் வெளியேறியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 44,220 கோடி ரூபாய். கடன் பத்திரம் மற்றும் வருவாய் சார்ந்த பண்டுகளில் ஈர்க்கப்பட்ட ஜூன் மாத முதலீடு ரூ. 2,862 கோடி. கலவை திட்டம் என அழைக்கப்படும் ஹைபிரிட்(Hybrid) திட்டத்தில் 356 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது.

ஓய்வு கால நிதி மற்றும் குழுந்தைகளுக்கான திட்டங்களில் பெறப்பட்ட தொகை ரூ. 108 கோடி ஆகும். வரி சலுகை சார்ந்த திட்டங்கள் வாயிலாக கடந்த மாதத்தில் முதலீடுகள்  ஈர்க்கப்படவில்லை. இந்த திட்டத்திலிருந்து 15 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. தங்கம் சார்ந்த ஈ.டி.எப்.(Gold ETF) திட்டத்தின் மூலம் 494 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் இரண்டிலும் முதலீட்டு வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது வேலையிழப்பு, குறைவான நாட்களுக்கு மட்டுமே பெறப்பட்ட ஊதியம், மந்தநிலையை காரணம் காட்டி முதலீடு செய்யாமல் இருந்ததாகும். மேலும் பங்குச்சந்தை மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் உச்சத்தில் இருப்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர்.

சந்தை இறக்கத்தில் அதிகமாக பெறப்பட்ட முதலீடு, தற்போது எச்சரிக்கை உணர்வாக பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை எனலாம். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில், நீண்டகால வருவாய் வளர்ச்சியை பெறலாம். சந்தை ஏற்ற-இறக்கத்தை கணிப்பதை விட, நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை திரட்டுவது அவசியமாகும்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com