அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

Understanding about Stress Test Methodology – Mutual Funds Investments

பொதுவாக, மருத்துவத் துறையில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) எனும் உடற்பயிற்சி அழுத்த சோதனை என்பது நமது உடல் செயல்பாடுகளின் போது, நமது இதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனை அளவிட உதவுகிறது. உதாரணமாக ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், பிற உடலியக்கம் சார்ந்த வேலைகளை செய்தல் அல்லது ட்ரெட் மில்(TMT) பரிசோதனை செய்யும் போது இதயத்தின் நிலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் அறியலாம். இந்த டெஸ்ட் முறை ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு மற்றும் பிற இதயம் சார்ந்த பிரச்சனைகளை அறிய உதவுகிறது. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவரும் நமக்கு இதய நிலைக்கான சிகிச்சைகளை வழங்குவார்.

இதுவே முதலீட்டில் காணும் போது, ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் உள்ள சொத்துக்களில் காணப்படும் பணப்புழக்கத்தை(Liquidity) மதிப்பிடுவதற்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் உதவுகிறது. முக்கியமாக பொருளாதார மந்தநிலையின் போது அல்லது பங்குச்சந்தை அதிகமாக சரியும் காலங்களில் இந்த முறை பயன்படுகிறது. சொல்லப்பட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் வெளியேறுவதற்கான காலத்தை இது குறிக்கிறது. 

பொதுவாக சந்தை சரியும் காலங்கள், கொரோனா பெருந்தொற்று காலங்களில் முதலீட்டாளர்கள் அச்சத்தில் அல்லது தேவைக்காக அதிக பணத்தை ஒரு குறிப்பிட்ட திட்டத்திலிருந்து எடுக்கும் போது, அத்திட்டத்தில் பணப்புழக்கம்(போதுமானதாக) எவ்வாறு உள்ளது, பெரும்பாலானோர் எளிதாக தங்களது பணத்தை பெற முடிகிறதா, இதனை பண்டு மேலாளர் எவ்வாறு கையாள்கிறார், அவ்வாறு பணம் வெளியேறும் சூழ்நிலையில் அத்திட்டம் மேற்கொண்டு எந்தவித பெரிய சிக்கலும் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளதா என்பதனை அறிய இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பயன்படுகிறது.

இது போன்ற செயல்முறை பொதுவாக, ‘வருமுன் காப்பது நலம்’ என்ற சிந்தனையை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையை தான் தற்போது பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும்(SEBI), அதனை சார்ந்த ஆம்ப்பையும்(AMFI) இணைந்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்பது ஒன்றும் புதிய முறையல்ல. இது பொதுவாக நிதித்துறையில், குறிப்பாக வங்கிகளில் அதன் திறனை மதிப்பிட செயல்படுத்தப்படும். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோர் ஏதேனும் காரணத்தால் ஒரே காலத்தில் அதிக பணத்தை வெளியே எடுக்கும் போது, வங்கி திவாலாகாமல் செயல்படுத்தக் கூடிய நிலைகளை அல்லது வழிமுறைகளை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் பெறலாம்.

மியூச்சுவல் பண்டை பொறுத்தவரை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) கடன் பத்திரத் திட்டங்களுக்கு பல வருடங்களாக இருந்து வருகிறது கவனிக்கத்தக்கது. இதனை தான் நாம் பெரும்பாலும் Interest Rate Risk, Credit Rate Risk மற்றும் Liquidity Risk ஆகிய காரணிகளால் காண்கிறோம். உதாரணமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் நடந்த நிகழ்வை நாம் சொல்லலாம்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிறுவனம் திவாலாகாமல் தவிர்க்க, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தால் அதன் விளைவுகளை களைய, பங்குச்சந்தை ஒரே வாரத்தில் அதிக புள்ளிகள் சரிவை கண்டால் சமாளிக்க, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தல் என பொருளாதாரத்தில் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பகுப்பாய்வு தீர்வை அளிக்கும். 

உதாரணமாக வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் எதிர்பாராவிதமாக இறக்க நேரிட்டால், அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த இழப்பை எவ்வாறு சரி செய்வது, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சேர்த்து வைத்திருந்த பணத்தை முழுவதும் சிகிச்சைக்கு செலவழிக்காமல் இருக்க என்ன வழிகள் என நமது தனிநபர் நிதித்திட்டமிடலிலும் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் நிகழ்வை நாம் காணலாம்.

தற்போது செபி-ஆம்பையால்(SEBI-AMFI) சொல்லப்பட்ட விஷயம், ‘மியூச்சுவல் பண்டில் காணப்படும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Mid & Small Cap Funds) திட்டங்களில் ஏதேனும் காரணத்தால் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது முதலீட்டு பணத்தை கணிசமாக திரும்ப பெறுகையில், அத்திட்டத்தின் பணப்புழக்கம் எவ்வாறு இருக்கும், மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தால் அத்திட்டத்தை மேற்கொண்டு நடத்த இயலுமா’ என்பதனை அறிய ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

அதாவது கடந்த பிப்ரவரி மாதத் தரவுகளின் அடிப்படையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட ஏற்கனவே ஆம்ப்பை கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த சோதனையை தொடரவும், அதன் முடிவுகளை பொதுவெளியில் வெளியிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட மிட் அல்லது ஸ்மால் கேப் திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில்(AUM Portfolio) 25 சதவீதம் வரை பணம் வெளியே செல்ல எவ்வளவு நாட்கள் எடுக்கும், இதனைப் போல 50% வரை பணம் வெளியே செல்ல அதற்கு எடுக்கக்கூடிய காலம் எவ்வளவு என்பதனை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறை மூலம் செயல்படுத்தி அதன் முடிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். 

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மிட் கேப் திட்டத்திற்கு 50 சதவீதம் வரை பணம் வெளியேறுவதற்கு 27 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவே 25% வரை வெளியேறுவதற்கு 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மிட் கேப் பண்ட் பிரிவில் உள்ள மற்றொரு பண்டுக்கு இந்த வெளியேறும் நாட்கள் மாறுபடலாம். ஆக, விற்பனை ஏற்பட்டால் அவர்கள் எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்கிறார்கள் அல்லது பணப்புழக்கம் எவ்வாறு உள்ளது என்பதனை இந்த பரிசோதனை சொல்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னது போல ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனும் அழுத்த சோதனை, பொருளாதார அவசர காலங்களிலும், சந்தை அதிகமாக சரியும் நிலைகளில் மட்டுமே என கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. அதற்காக இப்போது சந்தை சரியப்போகிறதா என கேட்க வேண்டாம். ஒரு வேளை நடந்தால் என்ன செய்வது என்பதற்கான பயிற்சி நிகழ்வு தான் இது. இதனால் மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல உங்களது நிதி இலக்கை சார்ந்து முதலீட்டை நீண்டகாலத்தில் மேற்கொள்ளுதல் நலம்.

செபியும், ஆம்ப்பையும் ஏன் திடீரென்று தற்போது இந்த நிகழ்வை நடத்த சொல்கிறது ?

சிறு முதலீட்டாளர்களின் நலனை(முதலீடு) பாதுகாப்பதற்காக தான்.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான சந்தை அதிக ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதுவும் வரலாற்றில் காணாத ஏற்றமும், அதே வேளையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் குறைந்த வருவாய் வளர்ச்சியும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் நான்கு கோடிக்கும் குறைவான டீமேட் கணக்குகள் இருந்த நிலையில், இன்று சுமார் 14 கோடி டீமேட் கணக்குகள் மொத்தமாக உள்ளது. 

கடந்த இரண்டு முதல் மூன்று வருடமாக, இந்தியாவில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், பெரு நிறுவனங்கள்(Large Cap) அளித்த முதலீட்டு வருவாயை காட்டிலும், மிகவும் அதிகமாக கொடுத்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு புதிதாக வரும் டீமேட் கணக்கு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், கடந்த ஒரு வருட, இரண்டு வருட(Past Performance) முதலீட்டு வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டு இது போன்ற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக சந்தையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் பண்டுகள் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. அவை எந்தளவு ஏற்றம் கண்டிருக்கிறதோ, அதே போன்று இறக்கத்தையும் சந்திக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற நிகழ்வு லார்ஜ் கேப் பங்குகள் அல்லது பண்டு திட்டங்களில் நடப்பதில்லை. இதன் காரணமாகவே செபியும் முதலீட்டாளர்களை எச்சரிக்கும் வண்ணம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவை பங்கு சார்ந்த திட்டங்களில் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், குறிப்பிட்ட ஸ்மால் கேப் திட்டங்களில் புதிய முதலீடு பெறுவதை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 

பங்குச்சந்தையில் பொதுவாக மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவில் பெரும்பாலான நிறுவனப் பங்குகளில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதாவது வாங்கிய பங்குகளை அவ்வளவு எளிதாக விற்க முடியாது. இதனால் தான் பெரும்பாலான ஸ்மால் கேப் பங்குகளின் விலை ஒரு வாரமாக அல்லது ஒரு மாதமாக ஏற்றத்தை மட்டுமே கண்டிருந்தாலும், விற்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதே வேளையில் இந்த சிக்கல் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டு திட்டங்களில் பெரும்பாலும் நடப்பதில்லை. காரணம், பண்ட் மேலாளரின் அணுகுமுறை தான். அவர் பெரும்பாலும் பணப்புழக்கம் உள்ள பங்குகளை தான் வாங்குவார். முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறும் வகையில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை வடிவமைப்பதும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அவசியம்.

கடந்த பிப்ரவரி மாத ஆம்ப்பை(AMFI) முதலீட்டு தரவு அறிக்கையின் படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில்(Growth / Equity Oriented Schemes) சுமார் 12,00,77,704 கோடி ரூபாய் முதலீடாக வந்துள்ளது. இவற்றில் மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு மட்டும் 3,23,80,735 கோடி ரூபாய். சொல்லப்பட்ட மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP) முதலீடு 19,187 கோடி ரூபாய். மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் தனிநபர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மட்டும் 60.30 சதவீதமாகும்.

முதலீட்டாளர்களை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர காலத்தில் ஹைபிரிட்(Hybrid) மற்றும் லார்ஜ் கேப் திட்டங்களிலும், நீண்ட காலத்தில் அஸெட் அலோகேஷன், மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் எஸ்.ஐ.பி(SIP) மற்றும் எஸ்.டி.பி.(STP) முறையில் முதலீடு செய்வது சிறந்தது. இங்கே நீண்டகாலம் என்பது குறைந்தபட்சம் 20-25 ஆண்டுகள் அல்லது உங்களது நீண்டகால நிதி இலக்கு. குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் முடிந்தளவு துறை சார்ந்த அல்லது தீமாட்டிக்(Thematic) பண்டு திட்டங்களை தவிர்ப்பது நல்லது. 

ஸ்ட்ரெஸ் டெஸ்ட் அறிக்கைகளை காண…

Disclosure of Stress Test & Liquidity Analysis  in respect of Mid Cap & Small Cap Funds

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

         

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.