Category Archives: Insurance

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

How is the Sum assured(HLV) calculated for Term Insurance Plans ?

நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட ஆயுள் காப்பீட்டு(Life Insurance) நிறுவனங்கள் தற்போது உள்ளன. எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் தவிர அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களாகும். இன்றைய பொருளாதார வாழ்வில் காப்பீட்டின் தேவை குறித்து பலர் புரிந்து கொண்டிருந்தாலும், 2022ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை படி, 100ல் மூன்று பேர் மட்டுமே காப்பீட்டை எடுத்துள்ளனர். இந்த மூன்று பேர்களும் தங்களது வருமானத்திற்கு ஏற்ப(Income Replacement) காப்பீட்டு அளவை எடுத்துள்ளார்களா என கேட்டால், அது தான் இல்லை.

நம்மில் பெரும்பாலோர் காப்பீட்டு திட்டத்தை சேமிப்பாக கருதுவதால் தான், தங்களது வருமானத்தை போல பல மடங்குகளில் காப்பீட்டு அளவை தேர்ந்தெடுப்பதில்லை. குறைந்த தொகையில்(Premium) அதிக காப்பீட்டு அளவை ஏற்படுத்த இன்றைய நிலையில் டேர்ம் காப்பீட்டு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் அமையவில்லை எனலாம். 

காப்பீடு என்பது ஒரு சேமிப்பல்ல, அது ஒரு செலவு. நமது வாகனத்திற்கு, வீட்டிற்கு, தொழிலுக்கு எடுக்கப்படும் காப்பீட்டை போல தான் டேர்ம் காப்பீடு திட்டமும். “நான் கட்டிய ப்ரீமியத்தொகைக்கு முடிவில் என்ன கொடுப்பீர்கள் என டேர்ம் காப்பீட்டை நீங்கள் கேட்டால், நீங்கள் இல்லாத நிலையில் உங்களது வருமானத்திற்கு மாற்றாக உங்களது குடும்பத்தை பொருளாதார ரீதியாக நான் பாதுகாப்பேன்” என்பது தான்.

டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance) நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதில் கிடைக்கப்பெறுவதில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு டேர்ம் காப்பீடு திட்டத்தின் ப்ரீமியத்தொகையும் அதிகரித்து விட்டது, டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கான நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டது. இருப்பினும், அதன் தேவையை நாம் புரிந்து கொண்டு நமது வருமானத்திற்கு ஏற்றாற் போல, தேவையான காப்பீட்டு அளவை பெறுவது அவசியம். 

சமீபத்திய தரவின் படி, ஆயுள் காப்பீட்டை பெறுவோரில் மூன்றில் ஒருவர் மட்டுமே டேர்ம் காப்பீட்டு திட்டத்தை எடுத்துள்ளனர். டேர்ம் காப்பீடு திட்டத்தை எந்தளவில் பெறலாம் என்பதை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்(IRDAI) ஒப்புதல் படி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளது. பொதுவாக நமது வயது மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இது அமையும்.

வருமானத்திற்கான மாற்று முறை – Human Life Value(HLV):

ஒரு தனிநபரின் எதிர்கால வருவாயின் தற்போதைய மதிப்பு தான் HLV(Human Life Value). எதிர்காலத்தில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் மற்றும் அவர் இல்லாத காலத்தில் தனது குடும்பத்தில் உள்ளோரை பொருளாதாரம் சார்ந்து பாதுகாக்க தேவையான தொகையை இன்றைய மதிப்பில் கணக்கிட வேண்டும். 

HLV = (1 + Investment rate) / (1 + Increment or Income growth rate) – 1

Alternative and Simple in terms, HLV = (Annual Income of an Individual) / (ROI in the Market)

*ROI – Rate of Interest 

இதனை சுருக்கமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒருவரின் தற்போதைய ஆண்டு வருமானத்தின் மடங்குகளில் சொல்லப்படுகிறது. இதனை டேர்ம் காப்பீட்டை வழங்கும் நிறுவனங்களும் தங்களது தரவு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மடங்குகளின் எண்ணிக்கை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம். ஆனால் பெரும்பாலும் அவை ஒத்த அளவில் தான் இருந்துள்ளது. 

டேர்ம் காப்பீட்டு அளவை பெற தேவையான இரண்டு முக்கிய காரணிகள்:

  • ஒருவரின் வயது 
  • ஆண்டு வருமானம் (சில நேரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி வருமானம்)
  • இதர காரணிகள் – கடனையும் சேர்த்து ஆகும் ஆண்டு செலவு, முன்னர் எடுத்திருக்கும் காப்பீட்டின் அளவு(Existing Life Cover)

உதாரணத்திற்கு 30 வயது நிரம்பிய குமார் என்பவர் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாயை வருமானமாக கொண்டுள்ளார். 55 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பும் குமார், ஓய்வுக்கு முன்னரே தான் இறந்து விட்டால் தனது வருமானத்திற்கு நிகரான காப்பீட்டு அளவை தனது குடும்பத்திற்கு அளிக்க விரும்புகிறார். அப்படியெனில் தோராயமாக அவர் எடுத்து கொள்ள வேண்டிய டேர்ம் காப்பீட்டின் அளவு 1.15 கோடி ரூபாய்(Sum Assured or Coverage).

இங்கே நாம் குமாருக்கான கடன் தொகை எவ்வளவு, தனது குடும்ப உறுப்பினர்களின் நிதி இலக்குகளுக்கான எதிர்கால தொகை எவ்வளவு என்பதனை கணக்கில் கொள்ளவில்லை. இதனை கணக்கில் எடுக்கும் போது, காப்பீட்டு அளவு அதிகரிக்கலாம். 

HLV முறையை கொண்டு நாம் கணக்கிட்டாலும், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கென ஒருவருக்கு அதிகபட்சம் அனுமதிக்கப்பட வேண்டிய தொகையை கூறியுள்ளது. இந்த தொகை தனிநபர் ஒருவரின் வயது மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல மாறுபடும்.

டேர்ம் காப்பீட்டுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு (மடங்குகளில்):

வயது வரம்பு  மடங்குகள்* 
18 முதல் 35 வயது வரை  25
36 முதல் 40 வயது வரை  20
41 முதல் 45 வயது வரை  15
46 முதல் 50 வயது வரை  12
51 முதல் 55 வயது வரை  10
56 முதல் 65 வயது வரை  5

 

(* ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மாறுபடலாம்)

மேலே உள்ள தரவின் படி, குமாருக்கு அதிகபட்சமாக அவரது ஆண்டு வருமானத்தை போல, 25 மடங்குகளின் அளவில் காப்பீடு கிடைக்க கூடும். ( ரூ. 8 லட்சம் X 25 மடங்குகள் = 2 கோடி ரூபாய்)

கவனிக்க:

  • டேர்ம் காப்பீட்டை பெற இன்று பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தனிநபர் ஒருவரின் வருமான ஆதாரத்தை அவசியமான ஒன்றாக பார்க்கிறது. இதற்கான முக்கிய ஆவணமாக கடந்த சில வருடங்களின் வருமான வரி தாக்கல்(Income Tax Returns) ஆவணங்கள், கடந்த சில மாதங்களின் சம்பள விவரங்கள்(Pay Slips) மற்றும் கடந்த ஒரு வருடத்திற்கான வங்கி அறிக்கை(Bank Statement).
  • புகைப்பிடித்தல் / மதுப்பழக்கம் இருக்கும் நிலையில் அதற்கான ப்ரீமியத்தொகை அதிகரிக்கலாம். சில சமயங்களில் காப்பீட்டை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
  • டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அவசியமாகிறது. உடல்நலத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் ப்ரீமியத்தொகை அதிகரிக்கப்படலாம் அல்லது காப்பீடு நிராகரிக்கப்படலாம்.
  • ஏற்கனவே வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டேர்ம் காப்பீட்டை பெற்றிருந்தாலோ அல்லது காப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்தாலோ, தற்போதைய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பரிசீலனைக்கு பின்பு தான் காப்பீடு வழங்கலாமா, வேண்டாமா என்பதனை முடிவெடுக்கும்.
  • இன்று மாத சம்பளதாரர்களை விட, பெரும்பாலும் சுய தொழில் செய்பவர்களுக்கே டேர்ம் காப்பீடு நிராகரிக்கப்படுகிறது. இதற்கான காரணமாக சொல்லப்படுவது வருமானத்தின் விவரங்களை சரியாக பராமரிக்காமை அல்லது அதிக வருவாய் இருந்தும் முறையாக வருமான வரி தாக்கல் செய்யாதிருப்பது. 
  • டேர்ம் காப்பீட்டை இளவயதில்(சம்பாதிக்க ஆரம்பித்த சில வருடங்களில்) எடுக்கும் போது, அதற்கான ப்ரீமியத்தொகையும் அதிகரிக்கும். சரியான காப்பீட்டு அளவை சரியான நேரத்தில் அதிகரித்து கொள்வது அவசியம். தாமதமாக எடுக்கும் போது, உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் நமக்கான காப்பீட்டு அளவு கிடைக்காமல் போகலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டைம் லூப்(Time loop): மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரிப்பு, டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க உள்ளது – என்ன செய்ய போகிறீர்கள் ?

டைம் லூப்(Time loop): மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரிப்பு, டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க உள்ளது – என்ன செய்ய போகிறீர்கள் ?

Learn the Time loop insights for the Personal Finance

உலகளவில் டைம் லூப், டைம் மெஷின் அல்லது கால பயணம்(Time Travel – Sci-fi) சார்ந்த திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், நம் நாட்டில் சற்று குறைவு தான். சமீப காலத்தில் கால பயணம் குறித்த படங்கள் இங்கே வந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற கதைகள் பொதுவாக கற்பனையாவையாக இருந்தாலும், உளவியல் சார்ந்த விஷயங்களை இவை பேசும்.

வீட்டிலிருந்து கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும் நிலையில், வீட்டு நுழைவாயிலில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டு விட்டால், அம்மா சிறிது தண்ணீர் அருந்தி விட்டு செல்லும்படி கூறுவதுண்டு. இதனை அலட்சியப்படுத்தலாம் அல்லது பயத்தினாலோ, பணிவின் காரணமாகவோ அவர் சொன்னதை செய்து விட்டு போகலாம். பலருக்கு அன்றைய தினம் டைம் லூப் தான் (கற்பனை தான்)

முக்கிய நிறுவனம் ஒன்றிற்கு இன்டெர்வியூ செல்லுகையில் பூனை குறுக்கே வந்து விட்டது, இரு சக்கர வாகனம் பஞ்சர், பஸ் பிரேக் டவுன் – 12 பி படத்தின் டைம் லூப் ஆக தான் தோன்றும்.

‘நான் தான் அப்பவே சொன்னேனே அங்கே போகாதன்னு”

“எனக்கு தெரியும் இப்படி தான் நடக்கும்முன்னு”

“அவங்க சொன்னதை நான் தான் கேட்கல”

இது போன்ற கண்ணுல வந்து போகும் டயலாக்குகள் எல்லாம் Decision Making S(K)ills தான்.

#maanaadu

மீண்டும் ஒரு ஊரடங்கு வருமா எனும் அச்சம் உங்களுக்கு ஏற்பட்டால், உங்களது டைம் லூப்பில் கடந்த கால சிந்தனைகள் தென்படும். இவை வருத்தம் தரக்கூடியதாகவோ, இல்லையெனில் வாய்ப்பளித்த மகிழ்ச்சியாகவோ உங்களுக்கு இருந்திருக்கலாம்.

சரி, நிதி சார்ந்த கால பயணத்திற்கு வருவோம். நாமும் ஒவ்வொரு வருடமும் இலக்குகளை குறித்து வைத்து தான் வருகிறோம். கம்யூனிசத்துக்கும், கேபிடலிசத்திற்கும் இடையே அல்லல்பட்டு வருகிறோம். ஆனால் நமது தனிநபர் நிதி திட்டமிடலை சரியாக நிறைவு செய்தோமா என்றால் அது நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

கொரோனா காலத்தில் நமது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்களில் சில உயிர்களை இழந்திருப்போம். பிரபலமானவர்களின் இரங்கலை செய்தியாக கேட்டிருப்போம். ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தநிலையில் பலர் வேலை இழந்தனர், தங்களது தொழிலை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர், சிலர் இணைய வழி வருமானத்தை வாய்ப்பாக உருவாக்கினர், பெருந்தொற்று காரணமாக எதிர்பாராத வகையில் அதிக மருத்துவ செலவு, வருமானம் ஈட்டும் நபரின் இழப்பால் குடும்பத்தின் நிதி பாதிப்பு ஆகியவற்றை நாம் அறிந்திருப்போம். இவையெல்லாம் நமது நினைவலைகளாக எப்போதும் இருக்கும். சரியான நிதி பாதுகாப்பை உறுதி செய்தவர்களுக்கு ஓரளவு சிரமம் ஏற்பட்டிருக்காது. அது போன்ற குடும்பத்தில் நிதிச்சிக்கலும் குறைவு தான். டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு மற்றும் அவசர கால நிதி(Emergency Fund) ஓரளவு நமக்கு புரிந்திருக்கும்.

ஒவ்வொரு வருடமும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதை காலம் தாழ்த்தி வருகிறோம். அவசர கால நிதிக்கு பெரும்பாலும் நாம் மற்றவர்களை சார்ந்து  தான்(Parents, Neighborhood, Loans, Credit cards) இருக்கிறோம். ‘நான் நன்றாக தான் இருக்கிறேன், நமக்கு எதுக்கு மருத்துவ காப்பீடு – வீண் செலவு’ என்று அலட்சியம் செய்கிறோம். இருப்பினும் நமது கால பயணத்தில்(Time Travel) மீண்டும் மீண்டும் ஒரு நெருங்கிய உறவுகளின் இழப்பு, பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பம், காப்பீடு எடுக்காமல் லட்சங்களில் மருத்துவ செலவு.

இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரித்து விட்டது என புலம்புகிறோம். ‘5ஜி தொழில்நுட்பம் வந்த பிறகு என்ன செய்வது, விலை ஏறுமா அல்லது குறையுமா ?’

டேர்ம் காப்பீடுக்கான பிரீமியம் தொகையும் அதிகரிக்க போகிறது. கொரோனா காலத்திற்கு முந்தைய பிரீமியம் ஓரளவு பரவாயில்லை. புதிய நோய்கள் கண்டறிய கண்டறிய ரிஸ்க்குக்கான பிரீமியமும் அதிகமாக உள்ளது. முன்னொரு காலத்தில் தேவையும் பெரிதாக இல்லை, தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையவில்லை. வரவுக்குள் செலவு எளிதாக அமைந்தது. இப்போது அப்படியல்ல, நமது தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்துள்ளது. நிதி சார்ந்த விழிப்புணர்வு இனிவரும் காலங்களில் நமக்கு நிறைய தேவைப்படுகிறது.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மற்றும் டேர்ம் பிரீமியம் அதிகரித்தாலும் நமக்கு கவலையில்லை, அதிகமாக சம்பாதித்தால் ! தேவைகளும், விருப்பங்களும் அதிகரிக்கும் போது பெரும்பாலும் விலைவாசி உயர்வு நம் கையில் இல்லை.

ஆனால், நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்யாமல் காலம் தாழ்த்துவது நமது டைம் லூப்பை உண்மை நிலையாக மாற்ற செய்யும். அவற்றில் நமது கவனம் எப்போதும் தேவை. ‘ ஓய்வு காலத்திற்கு இன்னும் 30 வருடங்கள் உள்ளது, நமக்கு என்ன அவசரம்’ என 30 வயது இளைஞன் எண்ணினால் நமது பெற்றோருக்கு கிடைத்த வாழ்க்கை(உடல் மற்றும் மன நலமும்) கூட நமக்கு பின்னாளில் கிடைக்கப்பெறாது.

‘வரும் முன் காப்பது நலம்’

‘பருவத்தே பயிர் செய்’

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’

இவையனைத்தும் டைம் லூப்பை சார்ந்தவை தான்.

இப்போதே நீங்கள் செய்ய வேண்டிய நிதி திட்டமிடல்:

  • டேர்ம் காப்பீடு (Term Insurance)
  • விபத்து காப்பீடு (Accident care) 
  • மருத்துவ காப்பீடு (Health Insurance)
  • அவசர கால நிதி (Emergency Fund)
  • நிதி இலக்குகளுக்கான முதலீடு (Invest for Financial Goals) 
  • நாமினியை நியமிப்பது மற்றும் உயில் எழுதுவது (Nomination & Will)
  • உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி சார்ந்த கல்வி மற்றும் தேவையை உணர வைப்பது (Financial Literacy)

மேலே சொன்னவற்றை நாம் செய்யாவிட்டால், நமக்கு மட்டும் இழப்பல்ல… நம்மை நேசித்தவர்களுக்கு, நம்மை பொருளாதாரம் சார்ந்து நம்பியவர்களுக்கும் தான். விளைவை தெரிந்தும் காலம் தாழ்த்துவது தான் கால பயணத்தின் கிளைமாக்ஸ்.

டைம் மெஷினில் மீண்டும் வருவோம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மருத்துவ காப்பீடு, அதுவே உங்கள் உடல்நலத்துக்கான இழப்பீடு

மருத்துவ காப்பீடு, அதுவே உங்கள் உடல்நலத்துக்கான இழப்பீடு 

Health Insurance is one of your Wealth protection Tool

தகவலுக்கும், தானியங்கி சேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இன்றைய நவீன காலத்தில் நிதி சார்ந்த தேவைகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் குடும்பத்தில் உள்ள ஏதோ ஒரு வாரிசு தன்னை பாதுகாக்கும் என்ற பெற்றோர்களின் நிலை, இன்று மாறி நிதி தேவைகளை சற்று கவனிக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

தனிநபர் ஒருவரின் வருவாயை மட்டுமே கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு பெரும்பாலும் தேவைப்படுவது நிதி சார்ந்த பாதுகாப்பு தான். வருவாய் ஈட்டும் ஒருவர் எதிர்பாராமல் இறக்க நேரிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்களை நிதி சார்ந்து பாதுகாக்க டேர்ம் இன்சூரன்ஸ் என்ற காப்பீட்டு கவசம் இன்று அத்தியாவசியமான ஒன்று.

மருத்துவ சேவை மேம்பட்டிருந்தாலும், பெரும்பாலான நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணமாக அமைவது நமது விழிப்புணர்வு இல்லாமை தான். உடல் நலனை பேணுவது மற்றும் ஆரோக்கியமான மனநிலையை கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம். இருப்பினும் எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் புதிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. எனவே இது போன்ற சமயங்களிலும் நாம் நிதி சார்ந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

பணம் படைத்தவர்களாக இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் கரைவது நம் உடல்நலம் மட்டுமல்ல, நாம் சேர்த்து வைத்த பணமும், மனமும் தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது பார்த்து கொள்ளலாம், எனக்கு இப்போது ஏன் வேண்டும் மருத்துவ காப்பீடு என நீங்கள் சொன்னால் !

  •  மருத்துவச்செலவு ரூ.10 லட்சமாக இருக்கும் போது, சேமித்து வைத்திருக்கும் பணத்திலிருந்து அல்லது கடன் வாங்கியாவது 10 லட்சத்தை செலவு செய்வது புத்திசாலித்தனமா ?
  • செல்வம் அதிகமிருந்தாலும், ஆண்டுக்கு 20,000 ரூபாயை மருத்துவ காப்பீட்டுக்காக கட்டி விட்டு, 30 லட்ச ரூபாயை காப்பீட்டு கவரேஜாக பெறுவது புத்திசாலித்தனமா ? (ஆண்டுக்கு 20,000 ரூபாய் வீதம் அடுத்த 20 வருடங்கள் காப்பீட்டை வாங்கினாலும், மொத்த காப்பீட்டு செலவு ரூ.4 லட்சம் தான். Section 80D வருமான வரிச்சலுகை வேறு. இருபது வருடங்களில் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதும் மருத்துவ செலவு ஏற்படாது என்பது விதியா என்ன ?)
  • ஆண்டுக்கு 10 லட்ச ரூபாயை வருமானமாக சம்பாதிக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். சேமிப்பு பெரிதாக எதுவுமில்லை, கடன் மட்டுமே அதிகம். உங்களது குடும்பத்தின் ஒரே வருவாயை கொண்டிருக்கும் நீங்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சுமார் 20 லட்ச ரூபாய் செலவாகும் என சொன்னால், ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என உங்கள் குடும்பத்தினர் சொன்னாலும்… உண்மையான நிலை என்ன ?  

‘மருத்துவ காப்பீடு உண்மையில் உங்கள் உடல்நலனை முழுமையாக பாதுகாக்கிறதோ, இல்லையோ… ஆனால் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை நூறு சதவீதம் பாதுகாக்கும் ‘ என நண்பர் தேவ் ஆசிஷ்(Dev Asish, Stable Investor) கூறுவார்.

திருமணமானவர்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால், அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டை பரிந்துரையுங்கள் அல்லது வாங்கி கொடுங்கள். திருமணமாகாத (80s, 90s Kids) கிட்ஸ்களுக்கும் மருத்துவ காப்பீடு கட்டாயம். மருத்துவ தேவை உள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.

மருத்துவ காப்பீட்டுக்கான தேவை என்ன ?

  • அதிகரித்து கொண்டிருக்கும் பணவீக்கம் – விலைவாசி உயர்வு(Inflation)
  • மருத்துவ தேவைக்கான அவசியமான காலமிது, நீங்களாகவே சுய மருத்துவம் செய்து விட முடியாது (வருமுன் காப்பது மட்டுமே நமது கடமை) – எதிர்பாராத விபத்துக்களை தவிர்க்க இயலாது
  • மருத்துவச்செலவுகளுக்கான தொகை அதிகரித்து வருதல் – செலவு தொகையை நம்மால் கணிக்க இயலாது
  • புதிய நோய்களை கண்டறிதல்(Lifestyle Diseases)
  • வரும் முன் காக்கும் நடவடிக்கை – மருத்துவ காப்பீடு
  • ஈட்டிய அல்லது ஈட்டவிருக்கும் செல்வத்தை பாதுகாத்தல்
  • குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்டிருப்போருக்கு ஆபத்துக்கால நண்பன்
  • செல்வம் படைத்தோருக்கு தேவையில்லாத செலவுகளை தவிர்க்க உதவும்

மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு – இரண்டில் எது அவசியம் ?

மருத்துவ காப்பீடும்(Health Insurance), ஆயுள் காப்பீடும்(Term Plan) உங்கள் இரு கண்கள் போல. ஒரு கண் மட்டும் போதுமா, இரண்டும் வேண்டுமா என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள்.

தனிநபர் ஒருவரின் வருவாயை மட்டும் கொண்டிருக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களது தொழில் மூலம் வருவாய் ஈட்டி, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், தங்களது கணக்கில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணமிருந்தால் நீங்கள் டேர்ம் மற்றும் மருத்துவ காப்பீடு அவசியம் எடுக்க வேண்டுமா என்பதனை கொஞ்சம் யோசிக்கலாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டில் காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை

நாட்டில் காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை

Increasing Demand for Insurance in the Current Scenario – Covid-19 impact

சேமிப்பும், முதலீடும் ஒரு குடும்பத்திற்கு எந்தளவு முக்கியமோ, அதே போன்று நிதி பாதுகாப்பும்(Financial Protection) அவசியம். நிதி பாதுகாப்பு எனும் போது டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் அவசர கால நிதி ஆகியவற்றை சொல்லலாம். நமது சேமிப்பை எதிர்பாராத வேலையிழப்பு, தொழில் மந்தம் மற்றும் விபத்து காலங்களில் விரயம் செய்ய விடாமல் தடுக்க இந்த நிதி பாதுகாப்பு உதவும்.

டேர்ம் காப்பீடு எனில் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபருக்கு தான்(Breadwinner) எடுக்க வேண்டும். அதுவும் அவரது வருவாயை சார்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் போது, ஏதோவொரு சூழ்நிலையில் வருவாய் ஈட்டும் நபர் மறைந்து விட்டால் குடும்ப உறுப்பினர்களின் நிதி நலனை பாதுகாக்க டேர்ம் காப்பீடு பலனளிக்கும். பொதுவாக டேர்ம் காப்பீடு(Term Insurance) ஒருவரது ஆண்டு வருமானத்தை போல குறைந்தபட்சம் 10-15 மடங்கில் இருப்பது நல்லது.

மருத்துவ காப்பீடு எனும் போது நடைமுறையில் காணப்படும் கொரோனா பெருந்தொற்றினால் ஏற்படும் மருத்துவ செலவுகளை நாம் கேட்டிருப்போம் அல்லது கண்டிருப்போம், மருத்துவ காப்பீடு எவ்வளவு அவசியமென்று. ஆனால், உண்மையில் கொரோனா பெருந்தொற்றை காட்டிலும் மற்ற நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவ செலவுகள் தான் அதிகம். கொரோனா பெருந்தொற்று மூலம் உடல்நலம் பேணுவது, இயற்கையை பாதுகாப்பது மற்றும் மருத்துவ காப்பீட்டின்(Health Insurance) தேவையை நாம் உணர்ந்துள்ளோம்.

நகரமயமாக்கல் துவங்கிய பின்பு, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. இன்று கிராமப்புறங்களிலும் நாம் குறிப்பிடத்தக்க வாகன போக்குவரத்தை காணலாம். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்லலாம் என்றாலும், இன்று வாகன விபத்துகளை தவிர்ப்பது எளிதான காரியமல்ல. விபத்தினால் ஏற்படும் மரணங்கள் நம்மை போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் சற்று அதிகமே. எனவே, விபத்துகளினால் ஏற்படும் இறப்புகள் மூலம் பல குடும்பங்கள் நிதி சிக்கலில் மாட்டி கொள்கின்றன. இதனை தவிர்க்க விபத்து காப்பீடும்(Standalone Accidental Policy) அவசியம். விபத்து காப்பீட்டை பொறுத்தவரை ரைடர் பாலிசியாக(Rider) எடுத்து கொள்ளாமல், தனிநபர் விபத்து காப்பீடு திட்டமாக எடுத்து கொள்வது சிறந்தது.

வேலையிழப்பு, வேலையிலிருந்து தொழில் முனைவுக்கு செல்லுதல், நிதி நெருக்கடி காலங்கள் என அவசர காலத்திற்கு தேவையான நிதியை உருவாக்கி வைத்து கொள்வது இன்று அவசியமாக உள்ளது. உங்களது மாத வருமானத்தை போல குறைந்தபட்சம் ஆறு முதல் 12 மாதங்களுக்கான தொகையை இருப்பாக வைத்து கொள்வது நல்லது. இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட வங்கி சேமிப்பு கணக்கு அல்லது பரஸ்பர நிதிகளின் லிக்விட் பண்டு(Liquid Funds) திட்டங்களில் சேமித்து வரலாம். உண்மையில் அவசர கால தேவை மற்றும் நிதி நெருக்கடி என்றால் மட்டுமே இந்த தொகையை எடுக்க வேண்டும். திருவிழா, திருமணம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க அல்லது சுற்றுலா என செலவுகளுக்கு அவசர கால நிதியை பயன்படுத்த கூடாது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, காப்பீட்டின் அவசியத்தை அதிகமாகவே உணர்த்தியுள்ளது எனலாம். கடந்த சில மாதங்களாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக 35 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் டேர்ம் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வாங்குவதில் ஆர்வமாக இருந்துள்ளனர்.

முதலாம் அலைக்கு பின்னர் சில காப்பீட்டு திட்டங்களின் பிரீமிய தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம். டேர்ம் காப்பீட்டு திட்டங்களை பெறுவதற்கு கொரோனா தடுப்பூசி(Vaccine) போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் சில காப்பீட்டு நிறுவனங்கள் விதித்துள்ளது.

நடப்பாண்டில் காப்பீட்டு திட்டங்களை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உரிமை கோரல் தீர்வும்(Claim Settlement) அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்களின் லாபமும் குறைந்துள்ளது.

சமீபத்தில் கோடக் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இரண்டாம் அலை காரணமாக ஏற்பட்ட அதிகப்படியான இறப்பு விகிதத்தால்  ஜூன் 2021 காலாண்டில் நிறுவனம் சுமார் 275 கோடி ரூபாய் வரை நஷ்டமாக கொண்டிருக்கும் என கூறியுள்ளது.

இந்தியாவில் மக்களிடையே காணப்படும் ஆயுள் காப்பீட்டின் பங்களிப்பு 2.82 சதவீதம் மட்டுமே. மருத்துவம் மற்றும் சுகாதாரத்திலும் அரசின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதாரத்தில் இரண்டு சதவீதத்திற்கு குறைவாக தான் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உங்களுக்கான பாதுகாப்பு விளிம்பு(Margin of Safety) என்ன ?

உங்களுக்கான பாதுகாப்பு விளிம்பு(Margin of Safety) என்ன ?

What is your Margin of Safety ?

Margin of Safety’ என சொல்லப்படும் பாதுகாப்பு விளிம்பு, பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளுக்கு மட்டுமல்ல. நாம் நித்தமும் சந்திக்கும் நிகழ்வுகளிலும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சார்ந்த விஷயங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. உடல்நலம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களை நாம் அணுகும் போது, இந்த விஷயத்தை நாம் முன்னரே செய்திருக்கலாமோ என்ற கேள்வியும் எழுவதுண்டு.

‘சிறு துளி பெரு வெள்ளம்’, ‘வரும் முன் காப்போம்’ போன்ற வரிகளை நாம் பல காலங்களாக கேட்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் நடைமுறையில் அதனை செயல்படுத்த தவறி விட்டு, பின்பு சிக்கலில் மாட்டி கொள்கிறோம். பின்வரும் விஷயங்களில் உங்களது நடப்பு நிலை என்ன என்பதனை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கோ அல்லது உங்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ எதிர்பாராத விதமாக உடல்நலம் அல்லது நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டால், அதனை களைய உங்களிடம் உள்ள உடனடி தீர்வு என்ன ?
  • நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலை அல்லது உங்களது தொழில் உங்களை விட்டு போய் விட்டால், நீங்கள் வைத்திருக்கும் அடுத்த திட்டம் என்ன ? 
  • வேலையிழப்பு நாட்களை பற்றி யோசித்தது உண்டா, அப்படியெனில் உங்களிடம் அவசர தேவைக்கு போதுமான நிதி ஆதாரம் உள்ளதா ?
  • உங்களது அனைத்து காலத்திற்கான(All time prevention mode), ‘வரும் முன் காப்போம்’ உத்தி என்ன ?
  • பாதுகாப்பான முதலீடு என நாம் பல காலமாக ஒரே இடத்தில் சேமித்து வைத்துள்ளோம். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. நீங்கள் எதிர்பார்த்த மற்றும் உங்கள் இலக்குகளை அடைவதற்கான தொகை கிடைக்காமல் போகலாம். மாற்று திட்டம் எதுவும் வைத்துள்ளீர்களா ?

பொதுவாக நமக்கு முன் உள்ள பாதுகாப்பு கவசமாக காப்பீட்டு திட்டங்கள் (Insurance – ஆயுள், மருத்துவம் மற்றும் விபத்து) உள்ளன. நமது அசையா சொத்துக்களுக்கும் காப்பீட்டை எடுத்து கொள்ளலாம். நிதி இலக்குகளுக்கும், நமது வயதுக்கு தகுந்தாற் போல் ஏற்படும் கட்டாய தேவைகளுக்கும் நாம் சேமித்து வைக்கலாம். பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெற முதலீட்டை மேற்கொள்ளலாம்.

நமக்கு முன் உள்ள முதலீட்டு வாய்ப்பாக நிலம், தொழில், பங்குகள், கடன் பத்திரங்கள், வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கப்பெறும் சிறு சேமிப்பு திட்டங்கள், பணப்பயிர்கள், ரொக்கம் ஆகியவை. (கவனிக்க: நாள் வணிகம் மற்றும் மெய்நிகர் நாணயம் போன்ற ஊக செயல்பாடுகள் முதலீடு அல்ல. அவற்றில் எச்சரிக்கை தேவை)

பணவீக்கத்தையும், முதலீட்டில் உள்ள ரிஸ்க் தன்மையையும் குறைத்து (தவிர்க்க இயலாது) நீண்டகாலத்தில் அதனை நல்ல வருவாயாக மாற்ற, அஸெட் அலோகேஷன்(Asset Allocation) மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification) அவசியம்.

இப்போது சொல்லுங்கள், உங்களுக்கான பாதுகாப்பு விளிம்பு என்ன ?

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு – வரைவு விதிமுறை வெளியீடு

ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு – வரைவு விதிமுறை வெளியீடு 

Rs.1 Crore Personal Accident Policy – Draft Norms – IRDAI

மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீட்டு திட்டமாகும்(Pradhan Mantri Suraksha Bima Yojana). இது ஒரு விபத்து காப்பீட்டு திட்டம், அனைவரும் பயன்பெறும் வகையில் 2 லட்ச ரூபாய் என்ற பாதுகாப்பு தொகையை குறைந்த பிரீமியத்தில் பெறலாம்.

அனைத்து வங்கிகளிலும் கிடைக்கப்பெறும் இத்திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தனிநபர் ஒருவர், ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டுமே செலுத்தி ரூ. 2 லட்சம் காப்பீட்டை பெறலாம். வாகன காப்பீட்டுடன் தனிநபர் விபத்து காப்பீடு சேர்ந்து வந்தாலும், முழுமையான தனிநபர் விபத்து காப்பீடு(Standalone Policy) என்பது அதனை தனி பிரிவாக எடுத்து கொண்டால் நமக்கு முழு பலனை அளிக்கும்.

விபத்து காப்பீட்டை பொறுத்தவரை மருத்துவ காப்பீட்டை அளிக்கும் நிறுவனங்களும் அதற்கான தனிநபர் பாலிசிகளை அளித்து வருகிறது. வெறுமென விபத்தினால் ஏற்படும் இறப்பு மட்டுமில்லாமல், நிரந்தர மற்றும் பகுதி சார்ந்த இயலாமை(Permanent and Partial Disability) இருக்கும் நிலையில் அதற்கான மருத்துவ செலவு மற்றும் முழு காப்பீடு தொகையும் வழங்கப்படுகிறது.

காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.(IRDAI) தற்போது விபத்து காப்பீடு சார்ந்த புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தனிநபர் விபத்து காப்பீட்டுக்கான தொகையில் குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வரைவை அறிவித்துள்ளது.

இந்த வரைவுமுறை வரும் ஏப்ரல் 1, 2021 முதல் புதிய விபத்து காப்பீட்டு திட்டமாக வெளிவர உள்ளது. திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தனிநபர் இணையலாம் எனவும், விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் காப்பீட்டு தொகையில் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக பெறலாம் என்ற கூடுதல் அம்சங்களையும் கூறியுள்ளது.

எனினும் குறைந்தபட்ச பிரீமிய தொகை எவ்வளவு என்பதனை ஐ.ஆர்.டி.ஏ. சொல்லவில்லை. இதன் காரணமாக காப்பீட்டு நிறுவனங்களே பிரீமிய தொகையை நிர்ணயிக்கலாம் என தெரிகிறது. காப்பீட்டுக்கான பிரீமிய தொகையை  மாதாமாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டு, இல்லையெனில் ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனிநபர் காப்பீடு, ஒரு நாட்டின் பாதுகாப்பு !

தனிநபர் காப்பீடு, ஒரு நாட்டின் பாதுகாப்பு !

Insurance is the fundamental of the Country’s economy

கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலைவாய்ப்பு இல்லாதது, தொழில்களில் காணப்படும் மந்தநிலை ஒரு புறம் இருந்தாலும், மீண்டும் அடுத்த அலை நம் நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற ஐயமும் அனைவரிடத்திலும் உள்ளது. மாற்று இயல்பு(New normal) என சொல்லக்கூடிய புதியதொரு வாழ்வை கொரோனா பாதிப்பின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு விகிதம் குறைந்திருந்தாலும் சுய தொழில்களின் வரவு அதிகரித்துள்ளது. அதே வேளையில் பெரும்பாலானோரின் செலவுகள் குறைந்து சேமிப்பும் அதிகரித்து வருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் பண்டிகை காலம் என்பதால் பொதுவாக நுகர்வோர் செலவு அதிகரிக்கக்கூடும். இருப்பினும் எதிர்காலத்தில் இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட கூடும் என்ற எச்சரிக்கை உணர்வால், சேமிப்பின் அளவும் அதிகரித்து  வருவது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2020 காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவீதம் சேமிப்புக்காக இருந்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் 8 சதவீதமாக இருந்துள்ளது. நம்மில் பெரும்பாலோருக்கு சேமிப்புக்கும், முதலீடுக்குமான வேறுபாடு தெரியவில்லை என்றாலும் பாரம்பரியமாக சேமிப்பது நமது அடிப்படை கடமையாக உள்ளது.

சேமிக்கிறேன் என காப்பீடு திட்டங்களை தேர்ந்தெடுப்பது, குழந்தைகளின் பெயரில் காப்பீடு என தவறான அணுகுமுறையை நாம் செய்து வருகிறோம். அப்படி இருந்தாலும், காப்பீடு தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கு அவசியமான ஒன்று. தனிநபர் ஒருவரின் வருவாயை சார்ந்திருக்கும் குடும்பம், அந்த குறிப்பிட்ட நபருக்கான காப்பீட்டை உறுதி செய்து கொள்வது அவசியம். எதிர்பாராத சூழ்நிலையில் அந்த தனிநபர் ஏதேனும் ஒரு நிகழ்வால் இறந்து விட்டால், அதனால் பொருளாதார ரீதியாக சிரமப்படும் குடும்பத்தினருக்கு காப்பீட்டின் மூலம் கிடைக்கப்பெறும் தொகை உதவும்.

சேமிப்பது ஒரு நாட்டிற்கு எந்தளவு நன்மை அளிக்குமோ, அது போன்று காப்பீடும் ஒரு நாட்டிற்கான முழுமையான பாதுகாப்பு எனலாம். தனிநபர் காப்பீட்டின் மூலம் தன்னை சார்ந்து வாழும் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல், அது நாட்டிற்கான கடமையாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் நிதி சுமை குறையும். குடும்பமும் பொருளாதார தன்னிறைவை நோக்கி நகரும்.

நாகரீக மாற்றத்தினால், இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில் மனிதனுக்கு உள்ள ஒரே பாதுகாப்பான பலம் நிதி சார்ந்த தன்மைகள் மட்டுமே. வெறுமென வேலை மற்றும் அதனை சார்ந்த சம்பளம் என்று இல்லாமல், வருவாயில் சேமிப்பு மற்றும் எதிர்பாராத நிகழ்வை சரி செய்யும் காப்பீடு போன்ற நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமான ஒன்று. காப்பீட்டின் மூலம் ஒரு நாடு தன்னிறைவை அடைவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதன் மூலம் கிடைக்கப்பெறும் பயன்கள் சில,

  • போதுமான சேமிப்பு
  • சேமிப்பின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்
  • தனிநபர் மற்றும் வணிகங்களுக்கான பாதுகாப்பு
  • அவசர காலம் மற்றும் மருத்துவம் சார்ந்த தேவையை நிறைவு செய்தல்
  • நீண்ட கால நிதி ஆதாரங்களை உருவாக்குதல்
  • தொழிற்துறைக்கு சாதகமான அம்சம்
  • அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
  • காப்பீட்டின் மூலம் ரிஸ்க் தன்மையை பரவலாக்குதல் அல்லது குறைத்தல்
  • வரி செலுத்துதல் மற்றும் வரி சேமிப்பு மூலம் அரசாங்கத்திற்கு தேவையான பணப்புழக்கத்தை ஏற்படுத்துதல்.

சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் குடிமக்கள் மற்றும் அதனை சார்ந்த அரசுக்கும் நிதி சுதந்திரத்தை அளிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்சூரன்ஸ் பிரீமியத்தை கட்டுவதற்கு சிரமப்படுகிறீர்களா, இது உங்களுக்கான மாத்தி யோசி வழி !

இன்சூரன்ஸ் பிரீமியத்தை கட்டுவதற்கு சிரமப்படுகிறீர்களா, இது உங்களுக்கான மாத்தி யோசி வழி !

Smart way to pay your annual premium – Financial Burden

நம்மில் பலருக்கு மாதச்சம்பளம் சரியான தேதியில் வந்து கொண்டிருந்தாலும், மாத நடுவில் இரண்டாம் சம்பளம் தேவைப்படுகிறது என்ற நிலைமை ஏற்பட தான் செய்கிறது. குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்தி விட வேண்டும் என நாம் யோசித்தால், அந்த மாதம் தான் எதிர்பாராத செலவுகள் எகிறி கொண்டிருக்கும். மாதம் ஆரம்பித்தவுடன் 5ம் தேதி வாகன இ.எம்.ஐ.(EMI) கட்டணம், 10ம் தேதி வீட்டு கடன் தவணை, அதே பத்தாம் தேதி கைபேசிக்கு போஸ்ட் பெய்டு கட்டணம், 15ம் தேதி மாத காப்பீடு பிரீமியம்(Insurance Premium). இதற்கு நடுவில் பால், கேபிள் டிவி, மின் கட்டணம், பலசரக்கு கடைக்கு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் ஷாப்பிங். அப்பப்பா, என்ன ஒரு மாதாந்திர செலவுகள் !

நடுத்தர குடும்பத்திற்கு மட்டுமே என இல்லாமல் ஏழை முதல் பணக்காரர்கள் வரை மாத செலவு பட்ஜெட் போடுவதற்கு என தனி வருமானம் வேண்டுமென எல்லோரையும் நினைக்க வைக்கிறது. சரிவிகித பட்ஜெட் திட்டமிடலை நாம் பராமரிக்காமல் விட்டால் வரவுக்கு மேல் கடன் வாங்க நேரிடும். கடன் அதிகமானால் கத்தி மேல் நடப்பது போல தினசரி வாழ்க்கை மாறி விடும். அப்புறம் எங்கே நாம் நிதி இலக்குகளை பற்றி திட்டமிடுவது, போதிய காப்பீட்டை பெறுவது.

முன்னொரு காலத்தில் இருந்த நமது பாரம்பரிய சேமிப்பு பழக்கவழக்கம் இன்று வழக்கொழிந்து எதற்கெடுத்தாலும் பொருட்களை வாங்கி குவிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இது போன்ற நவீன வாழ்வியல் சூழ்நிலையில், நாம் திறம்பட பட்ஜெட் திட்டமிடலை செய்தால் மட்டுமே, நமக்கு அடுத்த சந்ததியினருக்கு ஏதாவது நன்மை செய்திட முடியும். இன்றைய காலத்தில் பெரும்பாலோனோரின் பிரச்சனை நிதி சார்ந்த இலக்குகள் மற்றும் தேவையான காப்பீட்டு தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியாத நிலை தான்.

நிதி இலக்குகளுக்கு தேவையான மாத தொகையும், முறையான காப்பீட்டு தொகையையும் குறிப்பிட்ட தேதியில் செலுத்தாமல் விட்டால், பின்னால் அது சார்ந்து ஏற்படும் பிரச்சனை மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். இவற்றில் முக்கியமானது காப்பீட்டு தொகையை உரிய நேரத்தில் செலுத்துவது. சரியான காப்பீடு எனும் போது டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு ஆகியவற்றை சொல்லலாம். இது போக வாகன காப்பீடு தனிநபர் சார்ந்தது.

நம்மில் பெரும்பாலோர் ஆண்டு காப்பீட்டை(Annual Premium) செலுத்த முடியாமல், அதனை மாதாந்திர தொகையாக மாற்றி கொள்கின்றனர். இருப்பினும், பலர் மாதாந்திர தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் உள்ளனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலர் காப்பீட்டு பிரீமியம் அதிகமாக இருப்பதாக எண்ணி, போதிய காப்பீட்டு பாதுகாப்பை பெறாமல் உள்ளனர். நம் நாட்டை பொறுத்தவரை காப்பீட்டை முழுவதுமாக பெறாமல் இருப்பவர்களின்(Not Sufficient Coverage) எண்ணிக்கையும், காப்பீட்டில் உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பும்(Unclaimed amount) அதிகம் எனலாம். காலம் தவறிய பிரீமிய தொகை, அபராத கட்டணமாக மட்டுமில்லாமல், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு தொகை உரிமை கோருவதை நிராகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே சரியான வேளையில் அதற்கான தொகையை செலுத்தி விடுவது நல்லது. பொதுவாக மாதாந்திர காப்பீட்டு தொகையை காட்டிலும், ஆண்டு பிரீமியத்தில் சலுகை உண்டு. மேலும் அதனை எளிதாக செலுத்துவதற்கான யோசனையும் உள்ளது.

  • முதலில் உங்களது மாதாந்திர காப்பீட்டு தொகையை, ஆண்டு பிரிமியமாக மாற்றி கொள்ளுங்கள். (உங்களுக்கு மாதாந்திர தொகை செலுத்துவது சிரமமாக இருந்தால்)
  • ஆண்டு பிரீமியமாக செலுத்தும் போது, கட்டணத்தில் சிறிய அளவில் சலுகை பெற வாய்ப்புண்டு. ( ஏற்கனவே ஆண்டு பிரிமியம் செலுத்துபவர்களுக்கும் இது உதவும்)
  • ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். பின்பு அதனை 12 மாதங்களாக கணக்கில் எடுத்து கொள்ளுங்கள். சொல்லப்பட்ட 12 மாத தொகையை, மியூச்சுவல் பண்டில் கிடைக்கப்பெறும் குறைந்த ரிஸ்க் கொண்ட திட்டத்தில்(Monthly SIP – Liquid or Debt Funds) மாத எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யுங்கள்.
  • உங்களது பிரீமியம் செலுத்தும் காலம் வருவதற்கு ஒரு வாரம் முன்னர், மியூச்சுவல் பண்டு திட்டத்தில் உள்ள தொகையை எடுத்து அதற்கான பிரீமியத்தை செலுத்துங்கள். பிரீமிய தேதியை மறந்து விடலாம் என நினைப்பவர்கள், செலுத்த வேண்டிய தொகையை வங்கிக்கணக்கில் போட்டு விட்டு, இன்சூரன்ஸ் திட்டத்தில் தானியங்கி(Auto Debit – ECS) முறையை தேர்ந்தெடுக்கலாம்.
  • அஞ்சலக மற்றும் வங்கி ஆர்.டி.(Recurring Deposit) திட்டங்களை இதற்கு பயன்படுத்தலாம். எனினும் மியூச்சுவல் பண்டுகளில் ஆர்.டி. ஐ போன்று முதிர்வு காலம் என்ற வரம்பும், அபராதமும் கிடையாது. எனவே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து பின்னர் உங்களுக்கு தேவையான ஆண்டு பிரிமியத்துக்கு எடுத்து கொள்ளலாம்.
  • ஒரு வருட டேர்ம் பிளான்(Term Plan), மருத்துவ காப்பீடு(Health Insurance), விபத்து காப்பீடு(Accident Policy) மற்றும் வாகன காப்பீடு போன்றவற்றை செலுத்த சிரமப்படுபவர்கள் இது போன்ற மாதாந்திர எஸ்.ஐ.பி. முறையை தேர்ந்தெடுத்து தங்கள் தேவைக்கேற்ப அதனை மாற்றி கொள்ளலாம்.

இதனை ஒரு உதாரணம் மூலம் நாம் பார்க்கலாம். ராஜன் தனது குடும்பத்தை நிதி சார்ந்த இழப்புகளிலிருந்து பாதுகாக்க 1 கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்சூரன்ஸ் (பிரீமிய தொகை – ஆண்டுக்கு ரூ.12,500), 5 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு (பிரிமியம் ஆண்டுக்கு – ரூ. 15,400) மற்றும் விபத்து காப்பீடு ரூ.40 லட்சத்திற்கு (பிரீமியம் ஆண்டுக்கு ரூ. 9,600) எடுத்துள்ளார். இவற்றில் டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் வெவ்வேறு தேதிகளில் வருகிறது. விபத்து காப்பீட்டுக்கான பிரீமியத்தை அவர் ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் செலுத்தி வருகிறார்.

ராஜனுக்கு ஒவ்வொரு ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் காப்பீடு கட்டணத்திற்காக செலுத்த வேண்டிய தொகை ரூ.28,000. டேர்ம் காப்பீடுக்கான பிரீமியம் பொதுவாக மாறாது, எனினும் மருத்துவ காப்பீடுக்கான பிரீமியம் வயது அதிகரிக்கும் நிலையில் அதற்கான பிரீமியமும் அதிகமாக செல்லும். ராஜனின் மாத வருவாய் ரூ.50,000 ஆக இருக்கும் நிலையில், ஜூன் மாதத்தில் வேறு ஏதேனும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுமாயின், அவர் சிரமப்பட நேரிடும். இதனை தவிர்க்கும் பொருட்டு, அவர் மியூச்சுவல் பண்டு திட்டத்தில்(Mutual Funds) மாத எஸ்.ஐ.பி. முறையில் ரூ.2500 ஐ முதலீடு செய்து வருகிறார். இதனை கொண்டு ஜூன் மாதத்திற்கான டேர்ம் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியத்தை செலுத்தி விடுவார். இது போக மற்றொரு திட்டத்தினை(Low Risk Debt or Liquid Funds) துவங்கி மாதம் ரூ.1500 ஐ எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார். இந்த திட்டத்தில் கிடைக்கப்பெறும் தொகையை கொண்டு விபத்து காப்பீட்டு பிரீமியம் மற்றும் தனது மகளின் பிறந்தநாள் செலவுகளை சமாளித்து விடுகிறார்.

மாதாந்திர எஸ்.ஐ.பி. முறையில் 12 மாதங்களுக்கு ரூ. 2500 ஐ முதலீடு செய்யும் நிலையில், எதிர்பார்க்கும் வட்டி விகிதம் 7 சதவீதம் எனும் போது, ஒரு வருடத்தின் முடிவில் கிடைக்கப்பெறும் தொகை ரூ.31,150. நாம் காப்பீடுக்கு கட்ட வேண்டிய தொகையோ ரூ.28,000. மீதத்தொகையை மற்ற செலவுகளுக்கு வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்.

மாதாமாதம் ரூ.1500 ஐ எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்தால், ஒரு வருடத்திற்கு பிறகு(எதிர்பார்க்கும் வட்டி – 7 %)  18,700 ரூபாயை பெறலாம். ஆண்டு பிரீமிய தேவைகளுக்கு எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும் போது, பாலிசி காலம் முடியும் வரை முதலீட்டை தொடரும் படி வைத்து கொள்ளுங்கள். மற்ற எதிர்பாராத செலவுகளுக்கும் இந்த மாத்தி யோசி முறை பயன்தரும். மியூச்சுவல் பண்டு திட்டத்தில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்பவர்கள்(Lumpsum Invest in Debt Funds) அல்லது வங்கி ஒரு வருட டெபாசிட் திட்டத்தில்(Fixed Deposit) சேமிப்பவர்கள், அவற்றிலிருந்து கிடைக்கபெறும் ஆண்டு வட்டி வருவாய் உடனடியாக தேவைப்படாத நிலையில், அதனை  கொண்டு உங்களது ஆண்டு பிரீமியத்தை செலுத்தி கொள்வது கூடுதல் சிறப்பம்சமாக இருக்கும். 

இந்த மாத்தி யோசி திட்டம் வெறும் காப்பீட்டுக்கு மட்டுமல்ல. உங்கள் குழந்தை பிறந்தநாள் செலவுகள், திருவிழா காலங்கள், ஆண்டு கல்வி கட்டணம் என எந்தவொரு இலக்கிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் எதிர்பாராத நிதி சிக்கல்களை சமாளிக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நான் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?

நான் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?

How much Term insurance should I take out ?

பொதுவாக நம்மில் பலர் காப்பீட்டையும், முதலீட்டையும் போட்டு குழப்பி கொள்கின்றனர். காப்பீடு(Insurance) என்பது எதிர்பாராது ஏற்படும் நிகழ்வு அல்லது விபத்துகளினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்டுவதற்கு தான். காப்பீட்டுக்காக நீங்கள் கட்டிய பணம், எந்த எதிர்பாராத நிகழ்வும் நடைபெறாமல் இருந்தால் அல்லது முதிர்வு தொகை என ஒரு தொகையை நீங்கள் பெறும் நிலையில், அது சரியான காப்பீடாக கருதப்படாது.

உதாரணமாக நீங்கள் உங்களது வாகனம், வீடு மற்றும் தொழிலுக்கு செய்யும் காப்பீட்டு தொகைக்கு முதிர்வு தொகை என்று எதுவும் இல்லை. மேலே சொன்னவற்றில் நமக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டின் மூலம் இழப்பு தொகை கிடைக்கப்பெறும். அதனை போல தான் மனித உயிருக்கும். 

உங்களது வாகனம் தொலைந்து விட்டால் அல்லது விபத்தால் சேதம் அடைந்திருந்தால், நீங்கள் காப்பீடு செய்திருக்கும் நிலையில் அதற்கான இழப்பீட்டு தொகையை கோரலாம். நான் வருடாவருடம் வாகன காப்பீட்டிற்கு பணம் கட்டுகிறேன், முதிர்வில் எனக்கு பணம் தாருங்கள் என கேட்க முடியாது. நீங்கள் மற்றொருவரின் வாகனத்தை எதிர்பாராது சேதப்படுத்தி விட்டாலும், அவருக்கான இழப்பு தொகைக்கு உங்கள் காப்பீடு தான் உதவக்கூடும்.

முதலீடு(Investing) என்பது இருவகை தன்மைகளை கொண்டது. உங்கள் முதலீட்டின் மூலம் தொடர் வருவாய்(Cash Flow) கிடைக்கலாம். அதே வேளையில் பின்னொரு காலத்தில் அந்த முதலீட்டை நீங்கள் விற்கும் போதும் அதற்கான மூலதன ஆதாயம்(Capital Gains – Appreciation) கிடைக்கப்பெறும். உதாரணமாக வீட்டு மனை, வணிக வளாகங்கள், பங்குகள் மற்றும் தொழில்கள். தங்கம் ஒரு முதலீட்டு சாதனம் அல்ல.

டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance) என்பது பொதுவாக நீங்கள் உங்கள் வாகனம், வீடு அல்லது தொழிலுக்கு காப்பீடு எடுப்பது போல. இது ஒரு சிறந்த காப்பீடு திட்டம் எனலாம். டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும் ஒருவருக்கு ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால், அதன் காரணமாக அவர் குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிசெய்ய உதவும். இங்கே இழப்பு ஏற்பட்டால் மட்டுமே அதற்குரிய தொகை கிடைக்கும், முதிர்வு தொகை என்பது அல்ல.

டேர்ம் காப்பீட்டை பொறுத்தவரை இளம் வயதில் எடுத்து கொள்வது மிக நன்று. ஏனெனில் இளம் வயதில் தான் அதற்கான பிரீமிய தொகை மிக குறைவு. டேர்ம் காப்பீட்டுக்கான காலத்தை நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம். எனினும் உங்களது ஓய்வு காலம் வரும் வரை எடுத்து வைத்து கொள்வது நல்லது. நீங்கள் ஆரம்ப நிலையில் கட்டிய தொகை தான் கடைசி வரை தொடரும். எனவே இளமை காலத்தில் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது சிறந்தது. பொதுவாக டேர்ம் இன்சூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டும் ஒருவர் அல்லது தனிநபர் ஒருவரை சார்ந்திருக்கும் குடும்பம், அவருக்கு தான் காப்பீடு தேவை. வருவாய் ஈட்டும் அந்த நபருக்கு எதிர்காலத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டு, அதனால் நம்பியிருக்கும் குடும்பம் பொருளாதாரம் சார்ந்து பாதிக்கப்படலாம். இதனை தவிர்க்க அந்த நபருக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.

எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?

மிகக்குறைந்த பிரீமிய தொகையில் அதிக மதிப்பிலான காப்பீடு செய்ய முடியுமென்றால், அது டேர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே. டேர்ம் காப்பீட்டுக்கான தொகை தனிநபர் ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ப மாறுபடும். இருப்பினும் காப்பீடு நிறுவனங்கள் இதற்கான சிறப்பு கணக்கீடுகளை கூறியுள்ளது. இயல்பு வாழ்க்கையில் உள்ள அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சில கணக்கீடுகள் டேர்ம் பாலிசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கணக்கீடு 1:

  • உங்களுடைய மாத வருமானத்தை ஆண்டு கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (A).
  • உங்களது தற்போதைய கடன்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவுகள், திருமணம் ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (B).
  • உங்களுடைய தற்போதைய சேமிப்பு / முதலீட்டு கையிருப்பை குறித்து கொள்ளவும் (C).

 

Insurance Coverage = A + B – C   X   15

கணக்கீடு 2:

Human Life Value (HLV) = (Annual Income – Self Expenses) ÷ Bank Interest Rate %
  • ஒரு வருடத்திற்கான உங்களது சொந்த செலவுகளை (உங்களின் தனிப்பட்ட செலவுகள் மட்டுமே), நீங்கள் சம்பாதிக்கும் ஆண்டு வருமானத்தில் கழித்து கொள்ளுங்கள்.
  • கிடைக்கப்பெறும் தொகையை, வங்கி வட்டி விகிதத்தில் வகுத்து கொள்ளுங்கள்.
  • வங்கி வட்டி விகிதம்(Bank Interest Rate) எனும் போது, ஒரு வருடத்திற்கான வைப்பு தொகை விகிதத்தை எடுத்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு வருடத்திற்கு 7 சதவீதம்.

உதாரணம்: 

ராமு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய  ஆண்டு வருவாய் ரூ. 6 லட்சம். அவரை சார்ந்து மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். 30 வயதாகும் ராமு, தனது தனிப்பட்ட செலவுக்காக மாத வருமானத்தில் 5000 ரூபாய் (மொபைல் ரீசார்ஜ், போக்குவரத்து, டீ மற்றும் வடை, சினிமா, வெளியூர் பயணம்) எடுத்து கொள்வார். ராமுவுக்கு நீண்டகால கடன் (வீட்டுக்கடன், வாகன கடன்) மற்றும் முதலீட்டு செலவாக (குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம்) தனது மாத வருமானத்தில் ரூ. 30,000 செலவாகிறது. சேமிப்பு மற்றும் முதலீடாக ரூ. 1 லட்சம் (வங்கி டெபாசிட் மற்றும் பங்குகள்) உள்ளன.

கணக்கீடு 1ன் படி, ராமு எடுக்க வேண்டிய டேர்ம் இன்சூரன்ஸ் தொகை:

Insurance Coverage = ரூ. 6 லட்சம் (A +B) – ரூ. 1 லட்சம் (C)  X 15 = ரூ. 75 லட்சம் 

இங்கே அவரது கடன் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளுக்கான முதலீட்டு செலவு, மாத வருவாயிலிருந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே வருமானத்தை தாண்டிய கடன் அல்லது செலவுகள் எதுவுமில்லை.

கணக்கீடு 2ன் படி அவர் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகை:

HLV = (ரூ. 6 லட்சம் – ரூ. 60,000 ) / .07 = ரூ. 77 லட்சம் 

மேலே சொன்ன இரண்டு கணக்கீடுகளில் எந்த தொகை பெரிதாக உள்ளதோ, அதுவே நீங்கள் எடுக்க வேண்டிய டேர்ம் காப்பீடு தொகை. 

இந்த இரு கணக்கீடுகள் உங்களுக்கு புரியவில்லையா ?

சுருக்கமாக, உங்களது ஆண்டு வருமானத்தை போல 15-20 மடங்கில் காப்பீடு தொகையை எடுத்து கொள்வது நல்லது.

காப்பீட்டையும், முதலீட்டையும் ஒருசேர செய்கிறேன் என குழப்பி கொள்ள வேண்டாம். காப்பீடு இழப்புகளுக்கு, முதலீடு இலக்குகளுக்கு !

குழந்தைகளுக்கு காப்பீடு திட்டத்தை எடுக்கிறேன் என தவறான நிதி செயல்களை செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு தேவை காப்பீடு அல்ல, நிதி இலக்குகளுக்கான முதலீடு மட்டுமே. அவர்களின் காப்பீடு தொகையை சார்ந்து நீங்கள் இல்லை. உங்களது வருமானத்தை எதிர்பார்த்து தான் அவர்களது எதிர்கால செலவு உள்ளது. 

வரிச்சலுகை பெறுகிறேன் என்று தவறான திட்டத்தில் பணத்தை செலவழிக்காதீர்கள். வரும் முன் காப்பதே நலம், வந்த பின் யோசிக்க நேரமில்லை. அன்றைய நாளில் அவசரத்திற்கு பணம் மட்டுமே தேவையாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

  

இந்திய வாகன காப்பீட்டு துறையில் களமிறங்கும் அமேசான் நிறுவனம்

இந்திய வாகன காப்பீட்டு துறையில் களமிறங்கும் அமேசான் நிறுவனம் 

Amazon India enters into the Auto Insurance in India

கடந்த 1994ம் ஆண்டு துவங்கப்பட்ட அமேசான் நிறுவனம் இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இணைய வர்த்தகம், மேகக் கணிமை(Cloud Computing), டிஜிட்டல் வீடியோ (Digital Streaming) மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் கால் பதித்துள்ளது.

டாட் காம்(Dot com) வீழ்ச்சி மற்றும் 2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியால் அமேசான் நிறுவனம் திவால் நிலை வரை சென்றது. பின்பு துரித முதலீடு மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் மீட்டெடுக்கப்பட்டு, இன்று உலகின் பெரு நிறுவனமாக மாறியுள்ளது. நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் இன்று உலகின் பணக்காரராக முதலிடத்தில் இருக்கிறார்.

அமேசான் நிறுவனம் பல நாடுகளில் தனது காலடியை பதித்து வருகிறது. தொழில் போட்டிகளை கடந்து, தொழில்நுட்பத்துடன் புதுமையான சிந்தனைகளை புகுத்தி வீறு நடை போட்டுக்கொண்டிருக்கிறது. பிளிப்கார்ட்(Flipkart) நிறுவனத்தின் நிறுவனர்களும், அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்கள் தான்.

இந்திய வாகன காப்பீட்டு துறையில் நுழைய, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமேசான் நிறுவனத்திற்கும், மும்பையை தலைமையிடமாக கொண்ட அக்கோ(Acko General Insurance) பொது காப்பீடு நிறுவனத்திற்குமிடையே பேச்சு வார்த்தை நடந்தது. தற்போது இவற்றில் உடன்பாடு ஏற்பட்டு, அமேசான் நிறுவனம் இந்திய வாகன காப்பீட்டு துறையில் நேரிடையாக விற்பனையில் களம் இறங்கியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அக்கோ நிறுவனம் பெரு முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 274 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றிருந்தது. இவற்றில் அமேசான் நிறுவனமும் ஒரு முதலீட்டாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்கோ நிறுவனம் பொது காப்பீட்டில் வாகனங்களுக்கான பாலிசி சேவைகளை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் ஓலா(Ola) நிறுவனத்துடனான சேவையிலும் கூட்டு வைத்துள்ளது. எனவே அமேசான் இந்தியா தளத்திலும் வாகனங்களுக்கான காப்பீட்டு சேவையை இனி பெறலாம். எளிய முறையில், காகித ஆவணங்களை குறைக்கும் பொருட்டு அமேசான் பே (Amazon Pay) மூலமாக இன்சூரன்ஸ் பாலிசிகளை பெறலாம் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிகத்திலும் அமேசான் நிறுவனம் கால்பதிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முடிவு எட்டப்படும் நிலையில், ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் 10 சதவீத பங்குகளை அமேசான் வாங்கலாம் என சொல்லப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com