Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

முதலீட்டில் தங்கத்தின் பங்களிப்பு எவ்வளவு இருக்கலாம் ?  – உலக தங்க கவுன்சில் பரிந்துரை 

முதலீட்டில் தங்கத்தின் பங்களிப்பு எவ்வளவு இருக்கலாம் ?  – உலக தங்க கவுன்சில் பரிந்துரை 

Share of Gold in your Investment Portfolio – World Gold Council 2026

 

நேற்று(17-07-2026) மாலை வேளையில், மதுரை மாநகரத்தின் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்டெர்லிங் வி கிராண்ட் ஹோட்டலில் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட் இந்தியா(AAFM) மற்றும் உலக தங்க கவுன்சில்(World Gold Council) சார்பாக, ‘ஒரு சொத்து வகையாக தங்கத்தில் முதலீடு’ என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

இவற்றில் சொல்லப்பட்டவை இங்கே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1990 களில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது பெரும்பாலும், நகைகளாக தான் இருந்துள்ளது. இதற்கான காரணம், இந்தியப் பெண்களுக்கான சேமிப்பு என்பது பெரும்பாலும் தங்க நகைகளை சிறுகச்சிறுக வாங்குவது தான். ஆனால் இந்த நிலை, 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மாறி உள்ளது. அதாவது தங்கத்தினை மக்கள் நகைகளாக மட்டும் வாங்காமல், தங்கப் பத்திர திட்டம்(Sovereign Gold Bond – SGB), தங்கத்தின் மீதான மியூச்சுவல் பண்டுகள் மற்றும் இ.டி.எப். திட்டங்கள் வரவேற்பை பெற்று, அவை ஒரு முதலீடாக வாங்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக தங்கத்தின் மீதான மதிப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் சார்ந்திருக்காமல் உலகெங்கிலும் பரவி உள்ளது. அதாவது, நாம் வாங்கிய தங்கத்தினை நமது நாட்டில் மட்டுமில்லாமல், உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் விற்று பணமாக்கக்கூடிய நிலை, தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு சாதகமாக உள்ளது. பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு இருப்பது போல, தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு பெரும்பாலும் எதிர் தரப்பு இடர்(Zero counterparty risk – Physical Gold ) என்ற ஒன்றில்லை எனலாம். 

தங்கத்தின் மீதான முதலீட்டில் பொதுவாக அதிக ஏற்ற-இறக்கம் இருப்பதில்லை(பங்குச்சந்தையை போல). அதே வேளையில் கடந்த சில வருடங்களாக உலக பொருளாதார காரணிகள் விரைவாக மாற்றம் பெற்று வருவதன் காரணமாக, பங்குச்சந்தையை போல தங்கத்திலும் ஏற்ற-இறக்கத்தை காணலாம். தங்கத்தில் நீர்மை நிறை(Liquidity) கிடைக்கப்பெறுவது அதன் சாதகமான அம்சம். அதாவது, நாம் வாங்கிய தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் அடமானம் வைத்துக் கொள்ளலாம், விற்று விடலாம். அதே வேளையில், ஊரடங்கு காலத்தில் அவ்வளவு எளிதாக இது அமையவில்லை.

தங்கத்தின் மீதான உண்மையான முதலீடு என்பது பொதுவாக தங்கக் கட்டிகள், நாணயங்கள், மியூச்சுவல் பண்டுகள்(Gold Funds) மற்றும் இ.டி.எப்.(Gold ETF) என்ற வடிவங்களில் கிடைக்கப்பெறுகிறது. நகைகளாக வாங்குவது என்பது ஒரு தங்கத்தின் மீதான முதலீடல்ல. அதனை சொத்தாகவும் கருத முடியாது. அதன் காரணமாக தான் அதன் செலவினமே(நகைகளை உருவாக்க), மதிப்பையும் குறைத்து விடுகிறது. நடப்பில், சில தனியார் நிறுவனங்களால்  ‘டிஜிட்டல் கோல்டு (Digital Gold)’ என்ற பெயரில் வெளியிடப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் எனவும், அவை ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் உலக தங்க கவுன்சில் கூறுகிறது. 

உலக தங்க கவுன்சில் பரிந்துரையின் படி,  தங்கக் கட்டிகள், நாணயங்கள், தங்கக் கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்டுகள் மற்றும் இ.டி.எப். போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். தங்க நகைகளாக வாங்க விரும்புவோர், தங்களுக்கு அருகே உள்ள நம்பிக்கைக்குரிய மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு பெற்ற நகை கடைகளில் வாங்கி கொள்ளலாம்.

ஒருவரது முதலீட்டில் தங்கம், பங்குகள், வங்கி வைப்புத்தொகை, நிலம், பரஸ்பர நிதிகள்(Mutual Funds) என பரவலாக்கம் செய்வது அவசியம். இதன் மூலம், நாம் முதலீட்டில் உள்ள ரிஸ்க் தன்மையை குறைத்து, நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெற முடியும். உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது பொதுவாக 7.5 % முதல் 15% வரை இருக்கலாம் என உலக தங்க கவுன்சில் பரிந்துரைக்கிறது. முதலீட்டுத் தொகுப்பை சீரமைத்தலில்(Portfolio Rebalancing) தங்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 16.85% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முந்தைய இலக்கான சுமார் 15%-ஐ ஏற்கனவே கடந்துவிட்டது. நேரடித் தங்கம் சேகரிப்பு மற்றும் உலகளவில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை ஆகியவற்றால் இந்த நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2026ம் ஆண்டின் காலாண்டு முடிவில், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு சுமார் 34,600 டன்கள் (3.7 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்) என சொல்லப்படுகிறது. இவற்றில் ரிசர்வ் வங்கியிடம் இருப்பது மட்டும் 880 டன்கள். மியூச்சுவல் பண்டு மற்றும் இ.டி.எப். முறையில் தங்கத்தில் முதலீடு செய்யும் போது 99.5% + சுத்தமான தங்கம் மற்றும் 24 காரட் மதிப்பு  கிடைப்பதுடன், அதன் செலவினமும் குறைவு. கோல்டு இ.டி.எப். முறையில் முதலீடு செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய்க்கு மேலாக இருந்தால், நாம் அதனை தங்கமாகவும்(கட்டிகள் அல்லது நாணயங்கள்) பெற்றுக் கொள்ளலாம்.   

நன்றி:  ஷீலா குல்கர்னி

உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) இந்தியப் பிரிவு சந்தை மேம்பாடு (முதலீடு) மற்றும் நிறுவன முதலீட்டாளர் உறவுகள் பிரிவின் தலைவர்.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

பங்குப் பிரிப்புக்கு தயாராகும் இந்தியன் டோனர்ஸ் – பங்குச்சந்தை அலசல்

கடந்த 1990ம் ஆண்டு வாக்கில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராம்பூரை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட நிறுவனம் தான் இந்தியன் டோனர்ஸ்(Indian Toners & Developers Ltd – ITDL). இந்தியாவில் லேசர் பிரின்டர்களுக்கான டோனர் பவுடர்(Toner Powder) பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வந்திருந்தது. இதை மாற்றி, இந்தியாவிலேயே உயர்தர டோனர் பவுடரை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. 

லேசர் பிரிவில் பிரிண்டர் டோனர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மூலப்பொருட்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. லேசர் பிரிண்டர்கள், டிஜிட்டல் இயந்திரங்கள், பல-செயல்பாட்டு பிரிண்டர்கள், அனலாக் நகல் இயந்திரங்கள் (copiers) மற்றும் அகல வடிவ (wide format) பிரிண்டர்கள் மற்றும் நகல் இயந்திரங்களில் பயன்படுத்தக்கூடிய இணக்கமான டோனர்களின் (compatible toners) இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராகவும் நிறுவனம் உள்ளது. 

மொத்த அளவிலான டோனர்கள் மட்டுமின்றி, லேசர் பிரிண்டர்களில் பயன்படுத்த உயர்தர வண்ண டோனர்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது. ‘Supremo’ (சுப்ரீமோ) என்ற பிராண்டின் கீழ் மாற்றுப் பொருட்களுக்கான சந்தையிலும் (replacement market) தனது சேவையை அளிக்கிறது இந்தியன் டோனர்ஸ்.

காலப்போக்கில், இந்திய சந்தையைத் தாண்டி உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. தரம் மற்றும் ஆராய்ச்சி (R&D) மீது கவனம் செலுத்தி, பல்வேறு பிரிண்டர் பிராண்டுகளுக்கு ஏற்ற டோனர் தயாரிப்புகளையும் உருவாக்கி வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அச்சுப்பொறி மை உற்பத்தியாளர்கள், மறு நிரப்புதல் நிறுவனங்கள், அலுவலக உபகரண நிறுவனங்கள், சர்வதேச விநியோகஸ்தர்கள் மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்கள் ஆகியோர் உள்ளனர். 

நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில், இதன் ஒட்டுமொத்த வருவாயில் ஏற்றுமதியின் பங்களிப்பு மட்டும் 16 சதவீதமாக உள்ளது. உள்நாட்டில் சுமார் 120க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களையும், 60க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களையும்(Dealers) இந்நிறுவனம் கொண்டுள்ளது. 

கடந்த 2025-26ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 166 கோடி ரூபாயாகவும், செலவினம் 131 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் 35 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.27 கோடி. இயக்க லாப விகிதம்(OPM) ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. 

2026ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ.222 கோடி மற்றும் நிறுவனத்திற்கு கடன் எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 69.25 சதவீதமாக உள்ளது. தற்போது பங்கு ஒன்றின் விலை ரூ.296 (ஜூலை 7, 2026) என்ற விலையில் வர்த்தகமாகி வரும் நிலையில், வரும் ஜூலை 17ம் தேதி, இந்நிறுவனம் பங்குப் பிரிப்பு(Stock Split) நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. நடப்பில் இதன் பங்கு முக மதிப்பு ரூ.10 என்ற அளவில் உள்ள நிலையில், இதனை இரண்டு ரூபாய் முக மதிப்பாக பிரிக்க உள்ளது. அதாவது ஏற்கனவே பங்கு வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு, ஐந்து பங்குகள் என்ற விகிதத்தில் அளிக்கப்படவுள்ளது. 

Stock Split issue:

Old Face Value: Rs.10 per Share

New Face Value: Rs.2 per Share (Record Date: 17th July, 2026)

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

www.varthagamadurai.com

2025-26ம் நிதியாண்டில் கிர்லோஸ்கர் பெர்ரஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.376 கோடி நிகர லாபம்

2025-26ம் நிதியாண்டில் கிர்லோஸ்கர் பெர்ரஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.376 கோடி நிகர லாபம்

Kirloskar Ferrous Industries reported a Net Profit of Rs.376 Crore – FY2025-26 Results

மகாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமையிடமாக கொண்டு இயங்குவது கிர்லோஸ்கர் குழுமம். கிர்லோஸ்கர் நிறுவனம் துவங்கப்பட்டு 136 வருடங்களாகிறது. இக்குழுமத்தின் துணை நிறுவனம் தான் கிர்லோஸ்கர் பெர்ரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். வாகனத்துறை, பம்புகள் மற்றும் பைப்புகள், மற்ற உலோகங்களின் உற்பத்திக்கு தேவையான இரும்பு வார்ப்புகளை(Pig Iron and Ferrous Castings) இந்நிறுவனம் தயாரித்து  விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. டிராக்டர் மற்றும் டீசல் இன்ஜின் தொழில்களுக்கு தேவைப்படும் சிலிண்டர் பிளாக்குகள், சிலிண்டர் ஹெட்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்களையும் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. 

சொல்லப்பட்ட பிரிவில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் கிர்லோஸ்கர் பெர்ரஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் சந்தையில் 20 சதவீத பங்களிப்பை(Market Share) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2025-26ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 2026 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 6,784 கோடி ரூபாயாகவும், செலவினம் 5,948 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

2025-26ம் நிதியாண்டில் இயக்க லாபம் ரூ.836 கோடியாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 12 சதவீதமாகவும் இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 514 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.376 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.நிறுவனத்தின் இயக்க லாப விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் ஏற்ற-இறக்கமாக இருந்திருந்தாலும், சராசரியாக ஆண்டுக்கு 12 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது.

வருவாய் பிரிவை பொறுத்தவரை, Pig Iron என சொல்லப்படும் இரும்பு வார்ப்பு பிரிவில் ரூ.1,951 கோடி ரூபாயையும், Castings பிரிவு ரூ.1,758 கோடி ரூபாய், ஸ்டீல் பிரிவு ரூ.604 கோடி ரூபாய், டியூப் பிரிவு ரூ.2,130 கோடி மற்றும் இதர பிரிவுகள் ரூ .339 கோடி ரூபாயையும் வருவாயாக ஈட்டியுள்ளது.

 

மார்ச் 2026ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 3,682 கோடி ரூபாயாகவும், கடன் நிலையை காணுகையில் குறுகிய கால கடன் தொகை ரூ.798 கோடி மற்றும் நீண்டகால கடன் தொகை ரூ.237 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்திற்கு ரொக்கமாக(Cash Equivalents) இருக்கும் தொகை ரூ.117 கோடி. 2025-26ம் நிதியாண்டில் பணவரத்தும் சரியாக வந்து கொண்டுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனம் முதலீடு செய்த அசையா சொத்துக்களின்(Purchase of Fixed Assets) மதிப்பு ரூ.456 கோடி.

கிர்லோஸ்கர் பெர்ரஸ் நிறுவனத்தின் பங்கு விலை தற்போது ரூ.465 என்ற விலையிலும்(மே 8, 2026), அதன் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 228 ரூபாய் என்ற விலையிலும் உள்ளது. நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 27 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 20 சதவீதமாகவும் உள்ளது. கூட்டு லாப வளர்ச்சியை காணும் போது, ஐந்து வருடங்களில் 5 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 21 சதவீதம் என்ற அளவிலும் இருந்துள்ளது.

பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) வளர்ச்சி, கடந்த ஐந்து வருட காலத்தில் சராசரியாக 14.2 சதவீதமாக இருந்துள்ளது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) ஐந்து மடங்குகளிலும், கடன்-பங்கு விகிதம்(Debt to Equity Ratio) 0.28 மடங்கு என்ற அளவிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 51 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் தற்போதைய பி.இ. விகிதம் 20 மடங்களுக்கு கீழாக உள்ளது. துறை வாரியான பி.இ. விகிதம் 25 மடங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பங்கு விலை தற்போது ரூ.465 என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்தாலும், பணப்பாய்வு மதிப்பீட்டின்(Discounted Cash Flow Valuation) படி, பங்கு ஒன்றுக்கு ரூ.225-282 என்ற விலையை பெறுகிறது(MoS சேர்த்து).

 கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

உள்ளூர் கிரிக்கெட்டின் உற்ற நண்பனாக கிரிக் ஹீரோஸ் – CricHeroes

உள்ளூர் கிரிக்கெட்டின் உற்ற நண்பனாக கிரிக் ஹீரோஸ் – CricHeroes

The Trusted Friend(App) of Grassroot Cricket in India – CricHeroes

 

நவீன உலகத்தின் தொழில்நுட்ப வேகத்தில், இன்று வயதானவர்களையும் இளமை நடைப் போட செய்வது யாதெனில், அது உடல்நலனை பேணுவது தான். இவற்றில் முக்கியமாக கவனிக்கப்படுவது நமக்கு பிடித்த விளையாட்டை விளையாடுவது தான். விளையாட்டின் மூலம் உடல்நலன் மேம்படுவது மட்டுமில்லாமல், நமது உள்ளத்தையும் மகிழ்விக்க கூடிய ஒன்றாக  மாறியுள்ளது. அதனால் தான் பண்டைய காலம் தொட்டு, விளையாட்டுக்கு என களமும், எண்களும் அமைக்கப்பட்டிருந்தது.

 

தென்கிழக்கு இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டின் தாக்கம் என்னவோ, 16ம் நாற்றாண்டின் பிற்பகுதியில் தான். வயது வந்தோர் விளையாடிக் கொண்டிருந்த இந்த கிரிக்கெட்டை குழந்தைகளும் விளையாடலாம் என்ற நிலை உருவானது அப்போது தான். 20ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐ.சி.சி.(Imperial Cricket Conference) அமைப்பில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா என வெறும் மூன்று நாடுகளை மட்டுமே சார்ந்திருந்த நிலையில், பின்னர் அடுத்த நூறு வருடங்களில் இதன் வளர்ச்சி அளப்பரியதாக இருந்தது.  

 

கடந்த நூறு வருடங்களில் கிரிக்கெட் விளையாட்டுத் துறை அதிகமாக வளர்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது, உள்ளூர் விளையாட்டுகள் மீதான கவனம் தான். ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு நகர்ப்புற, கிராமப்புற மற்றும் ஒவ்வொரு மூலையிலும் ஏதோவொரு பண்பாடு சார்ந்த விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருந்த காலத்தில், எந்தவொரு திணிப்பும் இல்லாமல், பெரும்பாலோரிடம் இந்த கிரிக்கெட்டின் மீது காதல் ஏற்பட்டது. இதற்கு ஏற்றாற் போல, இந்தியாவிலும் இதற்கென ஒரு களம், வீரர்கள், விளையாட்டு உபகரணங்கள், எண் கணிதம்(ரன் ரேட், எகானமி மற்றும் சராசரி) வந்தது.

 

உள்ளூர் கிரிக்கெட்டின் துவக்க காலத்தில் ரன் ஓட்டங்கள் கணக்கிடுவது(Scores – Runs) என்னவோ தரையில்(மணலில்) விரல்களை கொண்டு தான். இல்லையெனில் யாரோ ஒருவர் மனசுக்குள் எண்ண வேண்டியது தான். இதன் பிறகு காகிதத்திலும், நோட்டு புத்தகங்களிலும் ரன்களை குறித்து வைத்து விளையாடும் வழக்கம் இருந்து வந்தது. சில நிறுவனங்கள் இதற்கென கிரிக்கெட் ஸ்கோர் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. கிரிக்கெட் உலகின் சந்தை மதிப்பு அதன் துவக்க காலத்தில் பெரும்பாலும் அதன் உபகரணங்களையும், இது போன்ற நோட்டு புத்தகங்களையும் சார்ந்து தான் இருந்து வந்தது.

 

நவீன காலத்தில், இந்த கிரிக்கெட்டுக்கான வளர்ச்சி பெரிதும் மாற்றம் பெற்றது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் கணினிகளில் ரன்களை குறிப்பது, விளம்பரங்கள் வருவது என உருமாற்றம் பெற்றது. இன்று நாம் தொலைக்காட்சி அல்லது இணையத்தில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டியை காணும் பொழுது, அங்கே விளையாட்டு மைதானத்தில்(புல் தரையில்) இருக்கும் விளம்பரங்கள் கூட, அந்த காலத்தில் இருந்தது போல இன்று உண்மையில்லை. அது 3D கிராபிக்ஸ் வடிவம் மட்டுமே. 

 

மணலில் ரன்களை குறித்து வைத்து வந்த நம்மை, கணினி வழியாக இன்று கைபேசி செயலியில்(Mobile App) கொண்டு வந்ததனை நாம் உள்ளூர் கிரிக்கெட்டின் அளப்பரிய வளர்ச்சியே என சொல்லலாம். ‘இவன் நன்றாக விளையாடுவான் (அ) விளையாடுவாள் ‘ என சொல்ல வைப்பதற்கு இந்த கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த செயலியே ஒரு உதாரணமாக இருக்கிறது. 

 

இந்திய விளையாட்டுத் துறையின் சந்தை மதிப்பு மட்டும் சுமார் 52 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2024 தரவு: இந்திய ரூபாயில் ரூ.4,68,000 கோடி). இவற்றில் இந்திய கிரிக்கெட் துறை மட்டும் சுமார் 20.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2030ம் ஆண்டு முடிவில் இந்திய விளையாட்டுத் துறையின் சந்தை மதிப்பு 130 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சியடையக் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் கிரிக்கெட் துறையின் பங்களிப்பும் அப்போது அதிகமாகலாம்.

 

உலக கிரிக்கெட் துறையின் ஒட்டுமொத்த வருவாயில் சுமார் 62 சதவீத பங்களிப்பு, இந்தியாவிலிருந்து மட்டும் பெறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த உபகரணங்களின்(Sports Equipment) மதிப்பு மட்டும் தற்போது 70 கோடி அமெரிக்க டாலர்கள். விளையாட்டு சார்ந்த உடல்நலனை பேணுவதற்கான ஊட்டச்சத்து பொருட்கள், மருந்துகள், உபகரணங்கள், ஊடகங்கள்(Media) என அதன் வருவாய் பெறக்கூடிய பிரிவு விரிந்து கொண்டே செல்கிறது.

 

உள்ளூர் கிரிக்கெட்டின் உற்ற நண்பனாக…

 

கிரிக்கெட் ஓட்டங்களை(ரன்கள்) குறித்து வைக்கும் பழக்கம் என்பது நமக்கு பல காலமாக இருந்து வந்தாலும், தற்காலத்தில் கைபேசி செயலி மூலம் குறித்து வைப்பது என்பது நாம், நமது குடும்பத்தின் வரவு-செலவுகளை ஒரு  கைபேசியில் சேமித்து வைப்பது போல தான். எப்போது வேண்டுமானாலும் திரும்ப நாம் எடுத்து பார்த்துக் கொள்ளலாம். அவ்வாறான செயலிகள் இன்று இந்தியாவில் பல அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்ட ஒரு நிறுவனம் மற்றும் செயலி தான், “கிரிக் ஹீரோஸ்(CricHeroes)”. 

 

பொதுவாக உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் தங்களது வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து விவாதிப்பார்கள். இதற்கு முன்பு, இது போன்ற விவாதங்கள் பெரும்பாலும் அடுத்தகட்ட போட்டிகளுக்கு பெரிதாக பங்களிக்கவில்லை. அதே வேளையில், தரவு சார்ந்த விவரங்களை கொண்டு விவாதங்கள் ஏற்படும் போது, அடுத்தகட்ட போட்டிக்கான வீரர்களின் ஆட்டத்திறனும் மேம்படுவதாக விளையாட்டு தரவுக் குறிப்புக்கள் சொல்கிறது.

 

இவற்றில் முக்கிய பங்களிப்பாக தான் தற்போதைய கிரிக்கெட் ஸ்கோர் செயலிகள் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற தீர்வை காண, கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரு. அபிஷேக் தேசாய் மற்றும் அவரது நண்பர்களால் துவக்கப்பட்ட ஒரு சிறு நிறுவனம் தான் கிரிக் ஹீரோஸ்(CricHeroes). 

 

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் செயலியில் இதுவரை சுமார் 1.40 கோடிக்கும் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. 4.20 கோடிக்கும் அதிகமான வீரர்களின் தரவுகள் சேமிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள், பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.சி.சி. போன்ற கிரிக்கெட் அமைப்புகளுடன் இணைந்து பல உலகத்தர போட்டிகளுக்கான சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. சுமார் 75க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் மதிப்பு 62.8 கோடி ரூபாயாகும்(தரவு: tracxn). நிறுவனர்களின் பங்களிப்பு மட்டும் 35 சதவீதமாக உள்ளது. 2025ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 11.30 கோடி ரூபாயாக இருந்துள்ளது. உலக அளவிலான உள்ளூர் கிரிக்கெட் செயலி தரவரிசையில் மூன்றாவது இடத்தில் CricHeroes உள்ளது. 

 

நிறுவனத்தின் முக்கிய நிறுவனர்களாக அபிஷேக் தேசாய், குந்தால் ஷா மற்றும் மீத் ஷா ஆகியோர் உள்ளனர். சுமார் 11 தனியார் நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து, நிறுவனம் இதுவரை பெற்ற பங்கு முதலீட்டின் மதிப்பு  24.8 லட்சம் அமெரிக்க டாலர்கள். இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதற்கான செய்தி, நிறுவனத்திடம் இதுவரை இல்லை என்பது கவனிக்கத்தக்கது. எனவே, தனியார் நிறுவன பங்கு முதலீட்டின் மூலம் செயல்படும் நிறுவனமாக தற்போது வரை கிரிக் ஹீரோஸ் பிரைவேட் லிமிடெட்  உள்ளது.

 

“காகிதத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்கோர்களில் இருந்து தரவுகளைத் திரட்டி, அர்த்தமுள்ள நுண்ணறிவுகளைப் பெறுவது கடினமானது மற்றும்  சாத்தியமற்றது. இதனை தீர்க்க வந்தவை தான், CricHeroes போன்ற எண்ணற்ற செயலிகள்”.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

   

தேசிய பென்ஷன் திட்டத்தில்(NPS, UPS) புதிய மாற்றம் – நீங்கள் செய்து விட்டீர்களா ?

தேசிய பென்ஷன் திட்டத்தில்(NPS, UPS) புதிய மாற்றம் – நீங்கள் செய்து விட்டீர்களா ?

Major Changes in the National Pension System – NPS and UPS

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு முன்னர் பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS) இருந்து வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பென்ஷன் வழங்குவதற்கான நிதியை அரசு ஏற்றுக் கொள்ளும். 2003 மற்றும் 2004ம் ஆண்டுக்கு பின்னர், பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக புதிய அல்லது தேசிய பென்ஷன் முறை(NPS) என்ற திட்டம் வந்தது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களின் தங்களது மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையையும், அரசு சார்பில் ஒரு குறிப்பிட்ட கூட்டுப் பங்களிப்பு தொகையையும் பென்ஷன் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடு, ஒரு தொகுப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யப்படும்(அரசு பத்திரங்கள், தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள், பிற முதலீடுகள்). இதன் மூலம் கிடைக்கப்பெறும் கார்பஸ் தொகை மூலமே, ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.

இன்று இந்தியாவில் பெரும்பாலும் பழைய பென்ஷன் என்ற திட்டம் இல்லை எனலாம்(பாதுகாப்பு துறை உட்பட). மாநில அளவில் CPS(Contributory Pension Scheme) என்ற திட்டம் தனியாக உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் வாயிலாக எதிர்ப்பு இருந்தாலும், அரசின் நிதி பொறுப்புடைமை சார்பில் காணும் போது பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. எனவே, இதனை களையும் பொருட்டு, கடந்த 2024ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறை(Unified Pension Scheme) என்ற புதிய பென்ஷன் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.  இந்த திட்டம் புதிதாக இருந்தாலும், தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள துணை வடிவம் தான், இந்த UPS பென்ஷன் திட்டம். 

2024-25ம் நிதியாண்டின் முடிவில் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 14.43 லட்சம் கோடி ரூபாய்(அடல் பென்ஷன் திட்டத்தை தவிர்த்து). இந்த திட்டத்தில் உள்ள பயனாளர்களின் எண்ணிக்கை 2.09 கோடி பேர்(அக்டோபர் 2025 தரவு – அரசு, தனியார் மற்றும் குடிமக்கள் சேர்த்து).   

NPS மற்றும் UPS பற்றிய தகவல்கள், வேறுபாடுகள் மற்றும் எது சிறந்தது என்பது தொடர்பான விவரங்களை பற்றி நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம். படிப்பதற்கு,

NPS vs UPS – Pension Comparison and Calculator

https://varthagamadurai.com/2025/05/09/nps-vs-ups-pension-calculator/

UPS(Unified Pension Scheme) திட்டத்தில், செப்டம்பர் மாத முடிவு வரை, சுமார் ஒரு லட்சத்திற்கும் குறைவான ஊழியர்களே சேர்ந்திருப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒட்டுமொத்த ஒன்றிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 24 லட்சம். அதாவது சொல்லப்பட்ட காலம் வரை பதிவு செய்யப்பட்ட UPS சந்தாதாரர்கள் 4% மட்டுமே.

சரி, இந்த புதிய மாற்றத்தை பற்றி பார்ப்போம்…

தேசிய பென்ஷன் திட்டம் துவங்கிய காலத்தில், அரசு ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்பு தொகை என, 100 சதவீதம் அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந்தது.(Default Scheme: LIC, UTI and SBI Pension Funds). இவற்றில் முதலீட்டின் மீதான எந்த ரிஸ்க் தன்மையும் பெரிதாக இல்லை(அரசாங்கம் திவாலானால் மட்டுமே ரிஸ்க்). அதே வேளையில், முதலீட்டின் வருவாயும் நீண்டகாலத்தில் பெரிதாக வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. 

இதனை களையும் பொருட்டு, பின்னர் பங்குகளிலும், தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய சில உட்திட்டங்களையும் அரசு இந்த பென்ஷன் திட்டத்தில் அறிமுகப்படுத்தியது. அவை Active Choice, Auto Choice மற்றும் Default Scheme என பிரிக்கப்பட்டது. Active Choice பிரிவில் பங்குகள், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பிற முதலீடுகள் என கலவையாக முதலீடு செய்யலாம். இருப்பினும், இது பெரும்பாலும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக அமைந்தது. நிதி பாதுகாப்பு கருதி, அரசு ஊழியர்களுக்கு இந்த வசதி அவ்வளவு எளிமையாக்கப்படவில்லை எனலாம்.

Auto Choice ஐ பொறுத்தவரை சுழற்சி முறையில் மேலே சொல்லப்பட்ட முதலீட்டு சாதனங்களில்(Equity, Corporate Bonds, Govt. Securities, Alternative Investment funds) கலவையாக முதலீடு செய்யப்படும். அதாவது ஒருவரின் வயதை அடிப்படையாக கொண்டு இங்கே முதலீட்டை பண்ட் நிர்வாகம் மேற்கொள்ளும். அதற்கேற்றாற் போல Conservative(LC25), Moderate(LC50) மற்றும் Aggressive(LC75) என்ற நிலைப்பாடுகளில் ஏதேனும் ஓன்றை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். உதாரணமாக LC25 நிலைப்பாட்டை நாம் தேர்ந்தெடுத்தால், 35 வயது வரை – 25 சதவீதத் தொகை பங்குகளிலும், பிற தொகை அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். 35 வயதுக்கு பின்னர் பங்குகளின் தொகை குறைக்கப்பட்டு பெரும்பாலும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும்(Portfolio Rebalancing – Risk Management). 

Default Scheme என்பது நாம் ஏற்கனவே சொன்னது போல, தேசிய பென்ஷன் திட்டத்தின் துவக்க காலத்தில் வந்தது தான். 100 சதவீத தொகையும் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். ரிஸ்க் குறைவு, பெரிய அளவில் வருவாய் வளர்ச்சி இருக்காது. 

நடப்பு காலத்தில் மியூச்சுவல் பண்டுகளிலும், பங்குச்சந்தையிலும் முதலீட்டை மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டின் மீதான விழிப்புணர்வும் கிடைக்கப் பெறுகிறது(அரசு சார்பிலும் விளம்பரம் செய்யப்படுகிறது). இதன் காரணமாக தேசிய பென்ஷன் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களும் தங்களது NPS அல்லது UPS திட்டத்தில் சற்று ரிஸ்க் எடுத்து வருமானம் ஈட்ட விரும்புகின்றனர். இந்த வாய்ப்பு, கடந்த அக்டோபர் மாதம் வரை கிட்டாமல் இருந்த நிலையில், அக்டோபர் 24ம் தேதி அன்று ஒன்றிய நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு புதிய உட்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Balanced Life Cycle 50 (Modified Version of LC50):

இத்திட்டம், பங்குகளில் கணிசமான பங்களிப்பை மேற்கொள்ள ஏதுவாக உள்ளது. அதாவது Balanced LC50 திட்டத்தில் உங்களது 45 வயது வரை – 50 சதவீதத் தொகை பங்குகளிலும், 30 சதவீதத் தொகை தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் 20 சதவீதத் தொகை அரசு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். அதன் பின்னர், படிப்படியாக ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அடிப்படையில் பங்குகளை குறைத்து கடன் பத்திரங்களில் உங்களது 55 வயது வரை முதலீடு செய்யப்படுகிறது. 

55 வயது முடியும் தருவாயில், பங்குகள் 35%, தனியார் கடன் பத்திரங்கள் 10 சதவீதம் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் 55 சதவீதம் என்ற அடிப்படையில், உங்களது NPS போர்ட்போலியோ மறு சமநிலைப்படுத்தப்படும்(Portfolio Rebalancing). இதற்கு பிறகான காலத்திலிருந்து உங்களது ஓய்வு காலம் வரை பெரும்பாலும் அரசு பத்திரங்களில் உங்கள் முதலீடு இருக்கும். 

நீங்கள் ஏற்கனவே மேலே சொன்ன வேறு ஏதேனும் உட்திட்டத்தில் தற்போது இருந்தால், நடப்பு மாதம் முதல் CRA NSDL தளத்தில் சென்று இந்த புதிய திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். Balanced LC50 திட்டம், NPS மற்றும் UPS என இரண்டு முறைகளுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தில் அரசு ஊழியர் மட்டுமல்லாது தனியார் மற்றும் இந்திய குடிமக்கள் யாவரும் மாற்றிக் கொள்ளலாம் என்பது இன்னொரு சிறப்பு.

Balanced LC50 திட்டத்தின் மூலம் உங்களது ஓய்வுக்கால கார்பஸ்(Retirement Corpus) தொகையில் நல்ல வளர்ச்சியும், ஓய்வுகாலத்திற்கான பென்ஷன் தொகையும் சற்று கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யும்.

சுற்றறிக்கை விவரம்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182253&reg=3&lang=2

சுற்றறிக்கையை தமிழில் படிக்க…

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182536&reg=3&lang=2

  

சரவணகுமார் நாகராஜ்,

Registered NPS Distributor (ARN-158941)

Distributor Code: BZBPS3240P00158941

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவில் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் – துறை சார்ந்த அலசல்

இந்தியாவில் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் – துறை சார்ந்த அலசல் 

Diabetes in India – Sectoral Analysis

உலக நீரிழிவு நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடத்தப்பட்ட Lancet – Medical Journal ஆய்வின் படி, உலகளவில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் 82.8 கோடி. இவற்றில் நான்கில் ஒரு பங்கு அளவு இந்தியாவில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்க தரவாக வெளிவந்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் நீரிழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 21.2 கோடி. சீனாவில் இது 14.8 கோடியாக உள்ளது. உலகின், ‘நீரிழிவு நோயின் தலைநகரமாக’ இந்தியா நினைவூட்டப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளில் உலக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சராசரியாக நூறில் பதினான்கு பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. பாதிக்கப்பட்டோர்களில் 60 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் அதற்கான மருத்துவத்தையோ, வாழ்வியல் முறையையோ பேணுகின்றனர் என்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை. இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களின் விகிதம் 21.5 சதவீதமாகவும், பெண்கள் 23.7 சதவீதமாகவும் இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் 29.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 15 சதவீதமாகவும் காணப்படுகிறது. அதே வேளையில் மேற்குலக நாடுகளில் உள்ளது போல, டைப்-1 நீரிழிவு நோய் இந்தியாவில் பெரும்பாலும் இல்லை என்பதும், பாதிக்கப்பட்டோரில் சுமார் 95 சதவீதம் பேருக்கு வாழ்வியல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் சார்ந்த டைப்-2 நீரிழிவு இருப்பதும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 30 சதவீத மக்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதனை அறியாமலே, தங்களது வாழ்க்கையை தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அதிகரித்த எண்ணிக்கைகு காரணமாக சொல்லப்படுவது மரபணு, நகரமயமாக்கலுக்கு பிறகான உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள்(அதிகப்படியான உணவு எடுத்தல், குறைவான உழைப்பு மற்றும் தூக்கமின்மை, உளவியல் சார்ந்த சிக்கல்கள்) தான். பக்கவாதம், தமனி நோய், நுரையீரல் அடைப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய், இரும்புச்சத்து குறைபாடு, பிறந்த குழந்தைகளுக்கு காணப்படும் குறைபாடு ஆகியவற்றுக்கு மூலமாக இந்த வாழ்வியல் மற்றும் உணவு முறை சார்ந்த நீரிழிவு காரணமாகி விடுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்களையும் அரசு ஏற்படுத்தியுள்ளது. 1987ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தேசிய நீரிழிவு கட்டுப்பாட்டு திட்டம் முன்னரே துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை முறையான உடற் பரிசோதனை மற்றும் உணவுமுறை ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. மேற்குலக நாடுகளில் இவற்றுக்கான மருத்துவ செலவு அதிகமிருந்தாலும், இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இதற்கான செலவினம் சற்று குறைவே. அதாவது இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 10,000 ரூபாய்(தனிநபர்) என்ற விகித அடிப்படையில் இது இருந்து வருகிறது.

இந்தியாவின் நீரிழிவு சந்தை மதிப்பு சுமார் ரூ.31,600 கோடி(2024 தரவு). இது 2034ம் ஆண்டு வாக்கில் 1,39,400 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 16 சதவீத வளர்ச்சி. நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் இந்திய சந்தை மதிப்பு மட்டும் சுமார் 23,800 கோடி ரூபாய். இது அமெரிக்காவில் சுமார் 3.58 லட்சம் கோடி ரூபாயாக காணப்படுகிறது. மாறுபட்ட வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுப்பழக்க முறைகளின் அதிகரிப்பு காரணமாக நீரிழிவு நோய் எதிர்ப்புக்கான மருந்துகளின் தேவையும் அதிகரித்து வந்துள்ளது.

நோய் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், நவீன மருத்துவத்தின் வளர்ச்சியும், பிற மருத்துவ முறைகளின்(அலோபதி தவிர்த்து) ஆய்வும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறையில் காணப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், டிஜிட்டல் வழி சிகிச்சை, டெலிமெடிசின் போன்ற மேம்பாடுகள் கிராமப்புறங்கள் வரை கொண்டு செல்கிறது. கடந்த சில வருடங்களாக சுகாதாரத் துறையில் தேவையான வசதியை மேம்படுத்த அரசும் முதலீடு(உட்கட்டமைப்பு, புதிய சாதனங்கள், காப்பீடு மற்றும் மலிவான மருந்துகள்) செய்து வருகிறது.   

இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில் பெரும்பாலும் இன்சுலின் மருந்து அல்லாத மாத்திரை வடிவிலான சந்தை தான் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் முதன்மை மருந்துகளாக மெட்ஃபார்மின்(Metformin), சல்போனிலூரியா(Sulfonylureas), டிபிபி(Dipeptidyl peptidase-4), ஆல்பா-குளுக்கோசிடேஸ் தடுப்பான்கள்(Alpha-glucosidase) மற்றும் தியாசோலிடினியோன்கள்(TZDs) ஆகியவை உள்ளன. உலகளவில் மெட்ஃபார்மின்(Metformin) மருந்துச் சந்தை மதிப்பு மட்டும் 36 கோடி அமெரிக்க டாலர்கள். இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு(உற்பத்தி மற்றும் நுகர்வு) மட்டும் 46 சதவீதமாக உள்ளது. 

இந்த மருந்து தயாரிக்கும் API நிறுவனங்களை இந்தியாவில் காணும் போது, Wanbury, Aarti Drugs, USV, Harman Finochem, Exemed Pharma ஆகியவை உள்ளன. அதே வேளையில் ஒட்டுமொத்த நீரிழிவு சந்தைக்கான இந்திய பெரு நிறுவனங்கள் என காணுகையில் Sun Pharma, Dr. Reddy’s Lab, Biocon, Novo Nordisk, Sanofi India, Glenmark Pharma, Johnson & Johnson, Abbott India, Lupin, Torrent Pharma, Merck, Cadilla, AstraZeneca ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 

மெட்ஃபார்மின்(Metformin) மருந்து தயாரிப்பில் முதல் 5 நிறுவனங்கள் மட்டுமே, ஒட்டுமொத்த சந்தையில் 60 சதவீத பங்களிப்பை(Market Share) கொண்டுள்ளன. USV Private Ltd  22 சதவீத பங்களிப்புடன், இந்த மருந்து பிரிவில் முன்னிலையில் உள்ளது. இதற்கடுத்தாற் போல சன் பார்மா (Sun Pharma) 15%, Zydus Cadila 12%, Cipla 10% மற்றும் Dr.Reddy’s 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இப்பிரிவின் பெரும்பாலான மாத்திரைகள் ஒரு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது(மாத்திரை ஒன்றுக்கு). அரசின் மானிய விலையில் காணும் போது ஒரு மாத்திரையின் விலை இரண்டு ரூபாய்க்கும்  குறைவாகவே உள்ளது. பிரபல பிராண்டுகளாக Glycomet(USV Product), Metformin-Sun, Emsulide (Sun Pharma), Zita-met(Zydus Brand), Ciplament, Glyciphage(Cipla Product), Metformin-DR, Trijardy (Dr. Reddy’s) உள்ளன. குறிப்பிட்ட தயாரிப்பில் தனி நிறுவன காப்புரிமை இல்லாததால், இது 100 சதவீத பொதுவான தயாரிப்பு சந்தையாக(Generic Medicine) உள்ளது. இதுவே சில நிறுவனங்களுக்கு பாதகமாக உள்ளது. அதே வேளையில் மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கப்பெறுவதால், இதன் பிராண்டுகளும் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுகின்றன.

அரசு சார்பில் மானிய விலையில் மருந்துகளை வழங்க பல்வேறு விநியோகத் திட்டங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் நீரிழவுக்கான கட்டுப்படுத்தல் மற்றும் பராமரிப்புகளையும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மருந்துகள் போதுமான அளவு கிடைக்கப்பெறுவதனையும் அரசு கண்காணித்து வருகிறது.

உலக நீரிழிவு மருத்துவ சாதனங்களின்(Medical Devices) சந்தை மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 7.5 சதவீதம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா 20 சதவீதத்தை பங்களிப்பை கொண்டுள்ளது. 2024ம் ஆண்டு தரவின் படி, இந்திய இன்சுலின் சந்தையின் மதிப்பு சுமார் 1.02 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் குளுக்கோஸ் கண்காணிப்பு சார்ந்த சாதனங்களின் சந்தை மதிப்பு 5.6 கோடி அமெரிக்க டாலர்கள்.          

நாடு முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த டெலிமெடிசின் மற்றும் ஏ.ஐ. மூலம் இயக்கப்படும் நவீன சிகிச்சை கண்காணிப்பு ஆகியவற்றால் இத்துறையின் வளர்ச்சியும் டிஜிட்டல் வழி சுகாதார முன்னேற்றமாக வடிவமைக்கப்பட உள்ளது. 

(தகவல்கள் மற்றும் தரவுகள்): Expertmarketreseach, JETIR Report, ICMR, CDSO, Lancet, IDMA)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி

2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி  

NALCO India reported a Net Profit of Rs.5,268 Crore in the FY 2024-25 Consolidated – Results

ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த முதன்மை அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினிய கம்பெனி(National Aluminium Company) நிறுவனம் தனது 2024-25ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டிருந்தது. நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பாக்சைட்- அலுமினா – அலுமினிய – மின்சார வளாகங்களை கொண்ட நிறுவனமாகவும் நால்கோ உள்ளது.

கடந்த 1981ம் ஆண்டு வாக்கில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் அலுமினா மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் உட்பிரிவுகளாக அலுமினிய கம்பிகள், உருட்டப்பட்டவை, கீற்றுகள்(Strips), பில்லெட்டுகள், கால்சின் செய்யப்பட்ட அலுமினா மற்றும் இதர அலுமினா பொருட்கள் உள்ளது. உலகளவில் குறைந்த விலையில் அலுமினியத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் நால்கோ இருக்கிறது. 

பொதுவாக பாக்சைட், அலுமினியம் உற்பத்திக்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில் அலுமினியத்தின் தேவை கட்டுமானம், மின்னணுவியல், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படுகிறது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பாக்சைட் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற பகுதிகளில் பாக்சைட் அமைந்துள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது கவனிக்கத்தக்கது.

நால்கோ நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் உள்நாட்டில் தான் பெறப்படுகிறது. ஏற்றுமதியில் இதன் வருவாய் முப்பது சதவீதமாக இருந்துள்ளது. 2024-25ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.16,788 கோடியாகவும், செலவினம் 9,280 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் இயக்க லாபம் 7,508 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 45 சதவீதமாகவும் இருக்கிறது. பொதுவாக இத்துறையில் இயக்க லாப விகிதம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மூலப்பொருட்களுக்கான செலவினம் உலகளாவிய சந்தையை சார்ந்திருப்பது தான். 

2024-25ம் நிதியாண்டில் நிறுவனத்தின் இதர வருவாய் 357 கோடி ரூபாயாகவும் நிகர லாபம் ரூ.5,268 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஈவுத்தொகை விகிதம்(Dividend Yield) தற்போதைய பங்குவிலையில் சராசரியாக நான்கு சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 2024-25ம் நிதியாண்டு முடிவில் ரூ.16,887 கோடி. நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 9 சதவீதமாகவும் இருந்துள்ளது. லாப வளர்ச்சியை காணுகையில், ஐந்து வருட காலத்தில் 108 சதவீதமாகவும், இதுவே 10 வருடங்களில் 16 சதவீதமாகவும் இருந்துள்ளது.

2025ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு(Cash Equivalents) ரூ. 5,427 கோடி. கடந்த காலத்தில் நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கணிசமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிறுவனர்களை பொறுத்தவரை, இது அரசு பொதுத்துறை நிறுவனம் என்பதால், ஒன்றிய அரசிடம் 51 சதவீத பங்குகள் கைவசம் உள்ளது. அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடம் சராசரியாக 16 சதவீதப் பங்குகள் உள்ளது. 

நால்கோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 33,765 கோடி ரூபாய். நிறுவனத்தின் பி.இ. விகிதம் தற்போது 6.5 என்ற மடங்குகளில் உள்ளது(மே 2025). பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீதமாகவும், பத்து ஆண்டுக்காலத்தில் 14 சதவீதமாகவும் இருக்கிறது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 121 மடங்குகளிலும், கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.01 என்ற அளவிலும் உள்ளது. 

நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.97 என சொல்லப்பட்டிருந்தாலும், தற்போதைய பங்கு விலை(ரூ.184), அதன் தள்ளுபடி மதிப்பை(ரூ.226) காட்டிலும் குறைவாக தான் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. 

நிறுவனத்திற்கு கடன் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், துறை சார்ந்த ரிஸ்க் தன்மை உலகளாவிய சந்தையை சார்ந்துள்ளது. இதன் காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவினம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படலாம். எனவே இதன் லாப விகிதமும் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாறுபடக்கூடிய நிலை உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பென்ஷன் திட்டமும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் – கணக்கீடு

தேசிய பென்ஷன் திட்டமும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் – கணக்கீடு 

National Pension System(NPS) vs Unified Pension Scheme(UPS) –  Calculation & illustration

இந்த பதிவு, நாட்டின் ஓய்வூதியத் திட்டத்தை பற்றி விரிவாக கூறவில்லை. மாறாக NPS மற்றும் UPS ஆகியவற்றுக்கு இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகள் மற்றும் கணக்கீட்டை பயன்படுத்த உதவுகிறது.

2003ம் ஆண்டுக்கு பிறகு, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS) மாற்றியமைக்கப்பட்டு, தேசிய ஓய்வூதியத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப நிலையில். புதிய பென்ஷன் திட்டம் என வழக்காக சொல்லப்பட்ட நிலையில், பின்னர் தேசிய பென்ஷன் திட்டம்(NPS) என்ற முறை அறியப்பட்டது. அதாவது பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வூதியத்திற்காக எந்த நிதிப் பங்களிப்பும் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படுவதில்லை. 

பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வூதியத்திற்கான நிதியை அரசே ஏற்றுக் கொள்ளும். தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பெறப்படும் பி.எப்.(சேமநல நிதி) பங்களிப்பும் வட்டியுடன் சேர்த்து பின்னர் அவர்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தேசிய பென்ஷன் திட்டத்தில் அப்படியொன்றும் இல்லை. 

2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பென்ஷன் திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் 10 சதவீத பங்களிப்பும், அரசின் சார்பில் 10 சதவீத பங்களிப்பும் என கூட்டாக ஒரு தொகை ஒதுக்கப்பட்டு பென்ஷனுக்கான ஒரு திட்டத்தில்(Pension Funds) முதலீடு செய்யப்படும். பின்னர் ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான நிதியாக கருதப்பட்டு, ஊழியர் தனது 60 வயதை கடந்தவுடன், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து மாதந்தோறும் வட்டி வருவாய் அளிக்கப்படும். தற்போது தேசிய பென்ஷன் திட்டத்திற்கான அரசின் பங்களிப்பானது 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பென்ஷன் திட்டத்தை பொறுத்தவரை ஊழியர் ஒருவர் தனது பணிக்காலம் முழுவதும் வேலை பார்த்து ஓய்வு பெறும் நிலையில், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து 60 சதவீதத் தொகையை ரொக்கமாகவும், மீதமுள்ள 40 சதவீதத் தொகைக்கு வட்டி வருவாயும்(Annuity Plan – Rates) பெறலாம். அதாவது ஓய்வு பெற்றாலும் அவரால் மீதமிருக்கும் 40 சதவீதத் தொகையை முழுவதுமாக பெற இயலாது. இந்த தொகை ஓய்வூதியத்தை உறுதிப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டுள்ள ஒரு முறை. 

அதே வேளையில் ஓய்வு பெறும் ஒருவர் பின்னாளில் இறந்து விட்டால், அவருடைய நாமினிக்கு இரு வாய்ப்புகள் தரப்படுகிறது. அதாவது, தனது துணையை போலவே, ஓய்வூதியம் பெற(40% தொகையில் வட்டி வருவாய்) விரும்புகிறாரா அல்லது முழுத்தொகையை பெற விரும்புகிறாரா என்பது தான்.   

ஊழியர் ஒருவர் தனது பணிக்காலத்தை முழுமை செய்யாத நிலையில், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து 20 சதவீதத் தொகை மட்டுமே அவருக்கு ரொக்கமாக வழங்கப்படும். மீதமிருக்கும் 80 சதவீத தொகையில்(80% Annuity Plan) வட்டி வருவாய் அளிக்கப்படும். மாறாக, அவர் 20 சதவீதத் தொகையை உடனே பெற விரும்பாவிட்டால், 60 வயது முடியும் வரை அவர் சொல்லப்பட்ட தொகுப்பு நிதிக்காக தனது பங்களிப்பை வழங்கலாம். இல்லையெனில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 ஐ மட்டும் செலுத்தி கணக்கை செயல்படுத்தும் நிலையில்(NPS Tier- I Activation) வைத்துக் கொள்ளலாம். 

பொதுவாக தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் நிலையான ஓய்வூதியம் என்ற ஒன்றில்லை. மாறாக சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியும், அவற்றின் வளர்ச்சி(அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பங்குகளில் முதலீடு) – Retirement Corpus மற்றும் வட்டி விகிதத்தை(Annuity Rates) பொறுத்தது தான். அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என இருந்த தேசிய பென்ஷன் திட்டம் பின்னர் 2009ம் ஆண்டு வாக்கில் தனியார் துறை ஊழியர்கள், சுய தொழில் புரிபவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என பெரும்பாலான இந்தியக் குடிமக்களுக்கு அறிமுகமானது.

பழைய பென்ஷன் திட்டத்தை ஒப்பிடும் போது, தேசிய பென்ஷன் திட்டம் பாதுகாப்பற்றதாகவும், நிலையான வருமானத்தை ஓய்வுக் காலத்தில் அளிப்பதில்லை எனவும் அரசு ஊழியர் சங்கங்களும், தொழிலாளர்களும் விமர்சித்து வந்த நிலையில், 2024ம் ஆண்டு ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்(Unified Pension Scheme) அறிமுகமானது. இருப்பினும் இவை நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கு மேலாகியுள்ளது. 

பழைய, தேசிய மற்றும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டங்களின் பயன்கள் மற்றும் அவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

NPS vs UPS கணக்கீடு (தோராயமாக மட்டுமே):

நீங்கள் உள்ளீட(Inputs) வேண்டியவை:

உங்கள் பெயர், பிறந்த தேதி, வேலைக்கு சேர்ந்த தேதி, ஓய்வு பெறக்கூடிய நாள், இதுவரை பணியாற்றிய ஆண்டுகள், இன்னும் பணியாற்ற வேண்டிய வருடங்கள், நடப்பு என்.பி.எஸ். கார்ப்ஸ் தொகை, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சதவீதம்.

[Name, DOB, Date of Joining, Date of Retirement, Completed Service, Years to Retirement, Current NPS Investment Corpus value, Current Basic Pay and Dearness Allowance % ]

எச்சரிக்கை: மற்றவற்றை பதிவிட அல்லது திருத்த முயற்சிக்க வேண்டாம். கணக்கீட்டில் பிழை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Warning: Do not attempt to input or edit others. There is a possibility of error in the Calculation Sheet.

NPS vs UPS – Calculator – Spreadsheet

மேலும் விவரங்களுக்கு அரசின் சுற்றறிக்கையை முழுவதுமாக படித்து அறிந்து கொள்ளவும். அதற்கான இணைப்பும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வேறுபாடு சார்ந்த தகவல் பெறப்பட்ட இணைப்பு: 

https://proteantech.in/articles/ops-vs-nps-vs-ups-retirement-plan-em1822025/

UPS Circular Document:

PFRDA UPS Rules (1)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.டி.எப்.சி. வங்கியை தோற்றுவித்த ஐ.சி.ஐ.சி.ஐ. – ஒரு வங்கியின் வரலாறு

எச்.டி.எப்.சி. வங்கியை தோற்றுவித்த ஐ.சி.ஐ.சி.ஐ. – ஒரு வங்கியின் வரலாறு 

HDFC was promoted by ICICI(Industrial Credit and Investment Corporation of India)

என்ன, எச்.டி.எப்.சி. வங்கியை ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் தோற்றுவித்ததா என கேள்வி எனலாம். வாருங்கள் எச்.டி.எப்.சி.யின் வரலாற்றை பார்ப்போம். 

குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் திரு.ஹஸ்முக் பரேக்(Hasmukhbhai Parekh). நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், லண்டன் பொருளாதாரக் கல்வி மையத்தில் தனது படிப்பை முடித்து விட்டு, பின்னர் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும், பங்குச்சந்தை தரகு நிறுவனத்தில் நிதிச்சந்தை சார்ந்தும் தனது அனுபவங்களை மெருகேற்றிக் கொண்டார். 1956ம் ஆண்டு வாக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிய இணைந்தார். 

அப்போது ஐ.சி.ஐ.சி.ஐ.(Industrial credit and Investment corporation of India) ஒரு அரசு பொதுத்துறை நிறுவனமாகும்(தனியார் நிறுவனம் அல்ல). இந்தியாவில் உள்ள சில அரசு பொதுத்துறை வங்கிகளும், உலக வங்கியும் ஒன்றிணைந்து உருவாக்கியதே ஐ.சி.ஐ.சி.ஐ. இந்நிறுவனத்தின் முதல் தலைவராக திரு. ஆற்காடு ராமசாமி முதலியார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1994ம் ஆண்டில் துவக்கப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இதன் துணை நிறுவனமாகும். 

பின்னர் காலப்போக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் இணைக்கப்பட்டு, தற்போது இந்தியப் பன்னாட்டு தனியார் வங்கிக் குழும நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தின் வேலை பார்ப்போரின் எண்ணிக்கை மட்டும் 1,35,900 பேர். முன்னர் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிந்த ஹஸ்முக் பரேக் அவர்கள், பின்னர் அதன் தலைவராகவும், நிறுவன இயக்குனர் குழுவின் முக்கிய பதவியையும் வகித்து 1976ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் இவரது நிதி சார்ந்த ஆலோசனையை பெற்றுக் கொண்டு தான் இருந்துள்ளது.

நிதித்துறையில் தனக்கு கிடைத்த அளப்பரிய அனுபவத்தை கொண்டு, தனது 66வது வயதில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தை போன்று ஒரு நிதி சார்ந்த வங்கியை துவக்க அவர் விரும்பினார். அந்த நிறுவனத்தின் பெயர் தான், ‘எச்.டி.எப்.சி.(HDFC)’. அப்போதைய அரசின் நிதிச் செயலாளராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் ஹஸ்முக் பரேக் ஒருமுறை கூறியது, “எச்.டி.எப்.சி., இந்திய மக்களிடம் அறியப்படாத ஒரு நிறுவனம். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறுமா என எனக்கு தெரியவில்லை”. இருப்பினும் நிறுவனத்தின் திட்டத்தில் எந்த மாற்றமுமின்றி கடந்த 1977ம் ஆண்டு இந்திய வணிக சமூகத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் சில அன்னிய நிறுவன முதலீடுகளுடன் எச்.டி.எப்.சி.(Housing Development Finance Corporation) நிறுவனம் துவங்கப்பட்டது. 

அப்போது திரு.ஹஸ்முக் பரேக் அவர்களை மரியாதை செய்யும் விதமாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனமும் எச்.டி.எப்.சி. நிறுவனத்தை பற்றி விளம்பரப்படுத்தி மக்களுக்கு கொண்டு சென்றது கவனிக்கத்தக்கது. இந்திய நடுத்தர மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் ஒரு நிதி நிறுவனம் வேண்டுமெனவும், அது தனது கல்லூரிக்கால விருப்பம் எனவும் திரு.ஹஸ்முக் பரேக் ஒரு முறை கூறியுள்ளார். தனது ஓய்வுகாலத்தில் துவக்கிய ஒரு வங்கி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது. அதாவது மிகப்பெரிய ஒரு வங்கியில் வேலை பார்த்த இவர், அந்த வங்கியின் நிதி சார்ந்த மதிப்பை காட்டிலும் ஒரு வங்கியை ஏற்படுத்தியது இந்திய நிதித்துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் மற்றும் சிறப்பம்சம் கொண்ட அடமான நிதி(வங்கி) நிறுவனமாகவும் எச்.டி.எப்.சி. இருந்துள்ளது. இன்று இதன் சொத்து மதிப்பு சுமார் 420 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நிறுவனத்தின் இந்திய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 12.51 லட்சம் கோடி ரூபாய். 2024ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் மட்டும் சுமார் 2.83 லட்சம் கோடி ரூபாய். எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank). 2022ம் ஆண்டு வாக்கில் இரு நிறுவனமும் இணைக்கப்பட்டு தற்போது எச்.டி.எப்.சி. வங்கி என இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2.13 லட்சம் பேர். எச்.டி.எப்.சி. வங்கி இந்தியாவில் மட்டுமில்லாமல், அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வங்கிக் குழுமம் இன்று வங்கி சேவை, முதலீட்டு வங்கி சேவை, அடமானம், தனியார் முதலீடு, மியூச்சுவல் பண்டு, காப்பீடு, பங்கு தரகு, டிஜிட்டல் நிதி சேவை, ரிஸ்க் மேலாண்மை மற்றும் முதலீட்டு மேலாண்மை என பல துணை நிறுவனங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.

2024ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) மட்டும் ரூ.4.55 லட்சம் கோடி. செப்டம்பர் 2024 முடிவில் நிறுவனத்தின் வாராக்கடன் தன்மை(Gross NPA) 1.36 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் தன்மை(Net NPA) 0.41 சதவீதமாகவும் உள்ளது. 

எச்.டி.எப்.சி. நிறுவனம் நேரடியாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தால் துவங்கப்படாவிட்டாலும், அந்த நிறுவனத்தின் முக்கிய பதவி வகித்த திரு. திரு.ஹஸ்முக் பரேக் அவர்களின் முயற்சியையே சாரும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

       

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ?

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ? 

History of Madras Stock Exchange(MSE) 

தமிழ்நாட்டை தலைநகரமாக கொண்ட சென்னை நீடித்த வரலாற்றையும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பையும் கொண்டிருக்கிறது. 2022ம் ஆண்டு முடிவில் சென்னையின் பொருளாதார மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் 7.87 லட்சம் கோடி). இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு, சென்னையின் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதியும் ஒரு காரணம் எனலாம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் சென்னையின் பங்களிப்பு மட்டும் சுமார் 33 சதவீதமாகும். உலகின் பிரபலமான நகரங்களில் முதல் 50 நகரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் சென்னையின் இடத்தை தவிர்க்க முடியாதது.

ஆசியாவின் டெட்ராய்ட்(Detroit of Asia) என அழைக்கப்படும் சென்னை, வாகனத்துறைக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் வாகன உதிரி பாகங்கள் பிரிவில் சென்னை மட்டும் 35 சதவீத பங்கினை கொண்டுள்ளது. இந்திய நான்கு சக்கர வாகன உற்பத்திப் பிரிவில் இதன் பங்களிப்பு மட்டும் 30 சதவீதமாக உள்ளது. கனரக வாகனங்கள், டயர்கள், வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, துறைமுகங்கள், உலகின் முக்கிய நிறுவனங்களின் அலுவலகங்கள் என வாகனத்துறைக்கு தேவையான பெரும்பாலான நிலைகளை சென்னை உள்ளடக்கியுள்ளது. 

அப்படியிருக்க, சென்னையில் ஒரு பங்குச்சந்தை…  

கடந்த 1937ம் ஆண்டு துவக்கப்பட்டது தான் மெட்ராஸ் பங்குச்சந்தை(தலைமை அலுவலகம்: சென்னை). நாட்டின் நான்காவது பங்குச்சந்தையாகவும், தென் இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் பங்குச்சந்தையாகவும், மெட்ராஸ் பங்குச்சந்தை இருந்தது. இந்த சந்தை மேலே சொல்லப்பட்ட காலத்தில் துவக்கப்பட்டிருந்தாலும், 1957ம் ஆண்டு தான் இச்சந்தைக்கு தேவையான ஒழுங்குமுறைகளும், இன்னபிற வழிமுறைகளும் சட்டமாக்கப்பட்டு இயக்கத்தில் வந்தன.

ஆரம்ப நிலையில் ஐந்து நிறுவனங்களின் துணை மூலம் தோற்றுவிக்கப்பட்ட மெட்ராஸ் சந்தை, பின்னர் பெரிய சந்தையாக சுமார் 120 உறுப்பினர்களுடன் இயங்கியது. 1996ம் ஆண்டு முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட சந்தையாக, 120 பங்குத்தரகு அலுவலகங்களுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை செயல்பட்டது.

 2001ம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.3,000 கோடி வர்த்தக அளவை கொண்டிருந்த மெட்ராஸ் பங்குச்சந்தை, 2012ம் ஆண்டில் சுமார் 19,900 கோடி ரூபாய் வர்த்தகம் என்ற அளவில் வளர்ச்சியடைந்தது. 2001ம் ஆண்டில் சொல்லப்பட்ட 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் என்பது அப்போதைய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையை ஒப்பிடுகையில், இது மூன்று சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளது.

மெட்ராஸ் பங்குச்சந்தையில் சுமார் 1,785 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. மெட்ராஸ் பங்குச்சந்தைக்கு ஒரு துணை நிறுவனமும் உண்டு – எம்எஸ்இ பைனான்சியல் சர்வீஸஸ்(MSE Financial Services). 2012ம் ஆண்டு வாக்கில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(SEBI) அறிவித்த ஒரு செய்தியால், மெட்ராஸ் பங்குச்சந்தையை மூடுவதற்கு காரணமாக அமைந்தது. இந்தியாவில் உள்ள ஒரு பங்குச்சந்தை குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய்க்கு பங்குகளில் பணப்புழக்கத்தை(Minimum Liquidity) ஏற்படுத்த வேண்டுமென்பது தான். அதாவது ஒரு முதலீட்டாளரோ, வர்த்தகம் செய்பவரோ தான் வாங்கியிருக்கும் பங்குகளை விற்க முனைந்தால், மற்றொரு புறம் வாங்குவதற்கு ஆள் வேண்டுமே, அது தான் இந்த பணப்புழக்கம்(Liquidity). 

மேற்சொன்ன அறிவிப்பை தொடர முடியாத நிலையில் பெங்களூர் பங்குச்சந்தையுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை இணைக்கப்பட்டது. பின்னாளில் இச்சந்தையும் மூடப்பட்டது.  இதனைத் தொடந்து 2015ம் ஆண்டின் மே மாதத்தில் தனது வர்த்தக செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக மெட்ராஸ் பங்குச்சந்தை அறிவித்தது. பின்னர் செபியும் அதனை ஏற்றுக் கொண்டது. 77 வருட பாரம்பரிய பங்குச்சந்தையாக திகழ்ந்த மெட்ராஸ் பங்குச்சந்தை 2015ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் என 1990 மற்றும் 2000களில் இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்ட நிலையில், 1992ம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தை மற்றும் ஆசியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை போன்ற ராட்சத அலைகளுக்கு முன்னர் தென் இந்தியாவின் முதற் பங்குச்சந்தை நிற்க இயலவில்லை. நாடெங்கிலும் எண்ணற்ற பங்குச்சந்தைகள்(20க்கும் மேற்பட்ட) இருந்த நிலையில், அவற்றை கையாள்வது கடினம் மற்றும் முதலீட்டாளர் நலனை பாதுகாக்க இது போன்ற நிகழ்வுகளை செபி(SEBI) ஏற்படுத்தியிருந்தது. 

இந்தியப் பங்குச்சந்தையில் தற்போதைய முதலீட்டாளர் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு அன்றைய காலத்தில் இல்லாததும் ஒரு காரணமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com