Category Archives: mutual funds

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

Income Tax rates for Mutual Fund Investments – Individuals – FY 2022-23 (AY 2023-24)

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாட்டின் பட்ஜெட் தாக்கலில் வருமான வரி விகிதங்கள் சார்ந்த மாற்றங்கள் நிறைய சொல்லப்பட்டிருந்தது. நடப்பு 2022-23ம் நிதியாண்டுக்கான வரி விகிதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds) மூலம் கிடைக்கப்பெறும் வருவாய்க்கான வரி விகிதங்களும் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பொறுத்தவரை உள்ளூர் முதலீட்டாளர்கள்(Resident) மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) என வரி விதிப்பு முறை தனித்தனியாக அமைந்துள்ளது. திட்டங்களின் அடிப்படையில் காணும் போது பங்கு சார்ந்த திட்டங்களுக்கும், பங்கு சாராத திட்டங்கள் என வரி விதிப்பு முறையும் வேறுபட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான, அதாவது 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி விகிதங்கள் குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) மற்றும் நீண்டகால மூலதன ஆதாயம்(Long term Capital Gains) என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இங்கே சொல்லப்படும் காலம்(Short or long term) என்பது வருமான வரி விகிதங்களுக்கான கணக்கீட்டு காலம் மட்டுமே, அவை ஒரு குறிப்பிட்ட திட்டங்களில் மேற்கொள்ளப்படும் காலமல்ல. எனவே நாம் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்யவிருந்தாலும், மூலதன ஆதாய  வரி என்பது நாம் நம் முதலீட்டை விற்பனை செய்யும் காலத்தினை பொறுத்து வரி விகிதங்கள் மாறுபடும்.

பொதுவாக பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் நாம் அதனை விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், ஒரு வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் சொல்லப்பட்டு வரி விதிக்கப்படும். இதுவே பங்கு சாராத திட்டங்களுக்கு(Debt Mutual Funds or other than Equity oriented schemes) முதலீடு செய்த மூன்று வருடத்திற்குள் விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், மூன்று வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும்.

எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்கையில் ஒவ்வொரு மாதாந்திர அல்லது வாராந்திர முதலீடும், வரி விகிதத்தை பொறுத்தவரை தனித்தனி முதலீடாக கருதப்படும். உதாரணமாக ஜனவரி மாதத்தில் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, சொல்லப்பட்ட முதலீட்டு தேதியிலிருந்து(ஜனவரி 5) கணக்கிடப்படும். இதுவே பிப்ரவரி மாதம் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு, தனி முதலீடாக கருதப்பட்டு அவை பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, காலத்தை சார்ந்து வரி விகிதங்கள் மாறுபடும். இந்த குழப்பங்கள் பெரும்பாலும் வரி சேமிப்பு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில்(ELSS) முதலீடு செய்வோருக்கு ஏற்படும்.

 ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை மட்டும்(Lumpsum investment) செய்யப்படும் முதலீடாக இருக்கும் நிலையில், முதலீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து விற்பனை தேதியை கணக்கிடுகையில் சிரமம் இருக்காது. எஸ்.ஐ.பி. முறையில் செய்யப்படும் முதலீட்டிற்கு மட்டும் இந்த கவனம் தேவை. எனினும், வரி கணக்கீட்டினை பொறுத்தமட்டில் இன்றைய நிலையில் பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்த கணக்கீட்டு அறிக்கையை முதலீட்டாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. எனவே வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த அறிக்கையை பயன்படுத்தி கொள்ளலாம்.

2018ம் ஆண்டுக்கு முன்பிருந்து, நீங்கள் பங்குகள் அல்லது பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகிறீர்களா ? (உங்களுக்கான பதிவு தான் இது)

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15 சதவீதமும், நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதமும் விதிக்கப்படும். நீண்டகால மூலதன ஆதாயத்தில் கிடைக்கப்பெறும் முதல் ரூ. 1 லட்சத்திற்கு வரி எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாயத்திற்கு மட்டுமே 10 சதவீத வரியாகும்.

மியூச்சுவல் பண்ட் – தனிநபர் வரி விகிதங்கள் – நிதியாண்டு 2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)

முதலீட்டு பிரிவு

தனிநபர் – உள்ளூர் முதலீட்டாளர் 

வெளிநாடு வாழ் இந்தியர் 

பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

15%

15%

நீண்டகால மூலதன ஆதாயம் 

10%*

10%*

பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

நீண்டகால மூலதன ஆதாயம் 

பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20%

10% – (பட்டியலிடப்படாத)

20% – (பட்டியலிடப்பட்ட மற்றும் பணவீக்க விகித சரிக்கட்டலுடன்)

வர்த்தக மதுரை | www.varthagamadurai.com

* ஒரு லட்சம் ரூபாய் வரையிலான(குறிப்பிட்ட நிதியாண்டில்) லாபத்திற்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை. ஒரு லட்சத்திற்கும் மேலான லாபத்திற்கு மட்டுமே 10 சதவீத வரி. 

இதுவே பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய  வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பின் அடிப்படையில்(Individual’s Income Tax Slab) அமைகிறது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக, பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு (Indexation Benefit) 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பணவீக்க விகிதத்திற்கான சரிக்கட்டல் மதிப்பை(Cost Inflation Index) ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.  

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும் (ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான தொகைக்கு) சொல்லப்பட்டுள்ளது. பங்கு சாராத திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பு அடிப்படையில் உள்ளது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதம் (பட்டியலிடப்படாத – Unlisted, No indexation benefit) மற்றும் 20 சதவீதமாக (Listed, With Indexation Benefit) சொல்லப்பட்டுள்ளது. 

முதலீட்டில் கிடைக்கப்பெறும் லாபத்திற்கு எவ்வளவு தொகையை வரியாக செலுத்த வேண்டுமென்பதை வரி ஆலோசகர் அல்லது பட்டய கணக்காளர்(Chartered Accountant) ஒருவரின் துணையுடன் கணக்கிடுவது நல்லது. 

கவனிக்க:

  • 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாத பட்ஜெட் அறிக்கையில், பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களின் வரி முறையில் சில மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் செய்துள்ளது. இந்த புதிய முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி, 2023 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.      
  • பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் எனும் போது, சிறிய பங்களிப்பில் பங்குகளை கொண்டிருந்தாலும் அவ்வகையான திட்டங்கள்  வரிச்சட்டத்தில் பங்கு சாராத திட்டமாகவே சொல்லப்படுகிறது. வரும் ஏப்ரல் 1, 2023 முதல் பங்கு சாராத திட்டங்களில், பங்குகளின் பங்களிப்பு 35 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், குறுகிய மற்றும் நீண்டகால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரம்பில் அமையும் என சொல்லப்பட்டுள்ளது.
  • இதுவே அத்திட்டத்தில் பங்குகளின் பங்களிப்பு 36 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை இருக்கும் பட்சத்தில், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பிலும், நீண்டகால மூலதன ஆதாய வரி என்பது பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20 சதவீதமாகவும் கூறப்பட்டுள்ளது. 
  • 65 சதவீதத்திற்கும் மேல் பங்குகளின் பங்களிப்பை கொண்டிருக்கும் திட்டங்கள், பங்கு சார்ந்த திட்டங்களின் வரி விதிப்பு மற்றும் முதலீட்டு கால முறையை(Holding period) போலவே கொண்டிருக்கும். அதாவது ஒரு வருடத்திற்குள்ளான குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும்(ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான) இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் 

Things to know before investing in Foreign Equities

இந்தியாவின் பங்குச்சந்தை மதிப்பு சுமார் 285 லட்சம் கோடி ரூபாய் (3.50 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு மட்டும் 77.90 லட்சம் கோடி ரூபாய் (தரவு: BSE India). இந்திய பங்குச்சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையை பெருமளவில் மேற்கொண்டதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் 2020ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை வீழ்ந்திருந்த போதும், அதற்கு பிறகான மீட்டெடுப்பில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 

கடந்த சில காலாண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து அதிகளவில் வெளியேறி இருந்தாலும், நமது சந்தை பெருமளவில் இறக்கம் காணவில்லை. இதற்கு முக்கிய காரணமாக உள்ளூர் முதலீடுகள் பெருகி வருவது தான். பின்டெக்(Fintech Apps) நிறுவனங்களின் பங்கு முதலீடு சார்ந்த விளம்பரங்கள், பரஸ்பர நிதிகளில் தொடர்ச்சியான முதலீடு, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, குறிப்பிடத்தக்க பங்கு சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த சேமிப்புகள் பங்குச்சந்தையை நோக்கி திரும்புதல் ஆகியவை நமது சந்தைக்கு பக்க பலமாக உள்ளது. 

பின்டெக் நிறுவனங்களின் பங்கு முதலீட்டு பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் புதிய உள்ளூர் முதலீட்டாளர்களை இந்திய பங்குச்சந்தைக்கு அதிகளவில் கொண்டு வந்துள்ளன என்பதனை நாம் மறுப்பதற்கில்லை. இவற்றையும் கடந்து சமீப காலங்களில் வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான தளங்களை பெரும்பாலான பங்கு தரகர்கள்(Stock Brokers) வழங்கி வருகின்றனர். இதனையே பங்குச்சந்தையில் நேரடி செயல்பாடுகளை கொண்டிருக்காத மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும்(Third Party Apps – Fintech Companies) அயல்நாட்டு பங்குகளை வாங்குவதற்கான வசதிகளை செய்து தந்துள்ளது.

இதன் மூலம் இந்திய உள்ளூர் முதலீட்டாளர்களும் கூகுள், ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பிரபலமான வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்க முடியும். உலகமயமாக்கலுக்கு பின்பு நமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்து வந்துள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் இணைய புரட்சி மூலம் நிதி முதலீடுகளை மேற்கொள்வதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஏதோவொரு கிராமத்தில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவில் வர்த்தகமாகும் ‘டெஸ்லா’ பங்கினை வாங்குவது இன்று அவ்வளவு சுலபம். 

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீத பங்களிப்பை கூட கொண்டிருக்காத நம் பங்குச்சந்தைக்கு, வெளிநாட்டு பங்குகளை வாங்குவது மிகவும் எளிமையாக இருந்தாலும், நாம் பங்குச்சந்தை சார்ந்த விழிப்புணர்வை ஓரளவு பெற்று விட்டோமா என்றால் அது தான் இல்லை. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் அத்தனை பேரும் லாபமீட்டுகிறார்களா என கவனித்தால், அந்த எண்ணிக்கை ஆயிரங்களில் மட்டுமே உள்ளது. இன்றும் சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியாத முதலீட்டாளர்கள் கோடிகளில் உண்டு. அப்படியிருக்கும் போது, வெறும் விளம்பர நோக்கில் பரிந்துரைக்கப்படும் அயல்நாட்டு பங்குகளை பற்றி நம்மால் புரிந்த கொள்ள முடியுமா, இல்லையெனில் பங்குச்சந்தையில் லாபமீட்டுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன ?

இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக பங்கு முதலீடு செய்பவர்களுக்கு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை புரிந்து கொள்வது சற்று கடினமான விஷயமே. நிறுவனத்தின் தொழில் ஆதாரம், நிதி அறிக்கைகள், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். 100 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் பங்குகள் இப்படியிருக்கும், 1000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகும் பங்குகள் இவ்வாறு விலை நகரும் என யாராலும் சந்தையில் கணிக்க இயலாது. அடுத்த 50 வருடங்களுக்கு இந்த துறை தான் சிறப்பாக செயல்படும் என உறுதியாக சொல்ல முடியாது. பிரபலமான பிராண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் சோடை போன வரலாறு உலகின் அனைத்து பங்குச்சந்தைகளுக்கும் உண்டு. இதனை களைய தான் பரஸ்பர நிதிகளின் மூலம் நீண்ட காலத்தில் முதலீடு செய்யுங்கள் என நிதி ஆலோசகர்களும், பொருளாதார வல்லுனர்களும் கூறி வருகின்றனர். பரஸ்பர நிதிகளில் பங்கு நிறுவனங்களை ஆராய்ந்து முதலீடுகளை மேற்கொள்ள பண்ட் மேலாளர்கள் உள்ளனர்.  

அப்படியிருக்கையில் அயல்நாட்டு பங்குகளில் ஏதோவொரு தளத்தின் வாயிலாக நேரடியாக பங்கு முதலீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை நாம் பார்ப்போம்.

  • மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை(Third Party Apps) கொண்டு வெளிநாட்டு பங்குகளை வாங்குவதில் உள்ள நம்பகத்தன்மை என்ன, ஒழுங்குமுறை ஆணையத்தின்(Regulators) கீழ் அந்த நிறுவனம் செயல்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த(Associates) அடிப்படையில் பரிந்துரைக்கிறார்களா ?
  • இன்று பெரும்பாலான தளங்கள்(Platforms) டீமேட் கணக்கு துவங்குவதற்கும், பங்குகளை வாங்குவதற்கும் கட்டணம் எதுவுமில்லை என சொன்னாலும், வெளிநாட்டு பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களை பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம்.
  • வாங்கிய வெளிநாட்டு பங்குகளை பின்னர் விற்பனை செய்யும் போது ஏதேனும் கட்டணம் சொல்லப்பட்டுள்ளதா, அவற்றை நீண்ட காலம் நம்மால் வைத்திருக்க முடியுமா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பங்கு போர்ட்போலியோ விவரங்களை(Portfolio Statement) மின்னஞ்சலில் பெற மாதாந்திர அல்லது ஆண்டு பராமரிப்பு கட்டணம் என்ன ?
  • பங்குகளை விற்பனை செய்த பின், பணத்தை நமது வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டுமெனில் அதற்கான கட்டணம்(Withdraw Charges) எவ்வளவு  ? 
  • நாம் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவன பங்குகளில் ஏதேனும் சிக்கல்(நிறுவனத்திற்கு) ஏற்பட்டால், அதனை நமக்கு தெரிவிப்பார்களா, சந்தையிலிருந்து அந்த பங்கு ஏதேனும் ஒரு காரணத்தால் வெளியேற்றப்பட்டால் நாம் எவ்வாறு அதனை அறிந்து கொள்வது ?
  • வெளிநாட்டு பங்குகளை வாங்கும் நாம் அந்நாட்டின் வருமான வரிச்சட்டம்(Taxation) எப்படி உள்ளது, நமக்கு சாதகமான அம்சம் ஏதுமுள்ளதா என்பதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும். 
  • முதலீடு செய்த பங்குகளுக்கு ஈவுத்தொகை(Dividend) ஏதும் வழங்கப்பட்டால் எந்த வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் அதற்கான வரி விதிப்பு எப்படி உள்ளது ?
  • வெளிநாட்டு நிறுவன பங்குகளின் தொழில் மற்றும் நிதி அறிக்கைகளை எளிமையாக தெரிந்து கொள்ள இணையதளங்கள் உள்ளதா, அவற்றினை அறிய கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா(Research reports) ?

பொதுவாக அமெரிக்காவில் பங்கு முதலீட்டுக்கான வரி விதிப்பு, நம் நாட்டை காட்டிலும் அதிகமாக தான் காணப்படுகிறது. இங்கே நீண்டகால மூலதன ஆதாய வரிக்கான காலம் ஒரு வருடத்திற்கு மேல் என்றால், அமெரிக்காவில் அது இரண்டு வருடத்திற்கு மேலாக சொல்லப்படுகிறது. நீண்டகால மூலதன ஆதாயத்திற்காக வரி இங்கே 10% (ஒரு லட்சம் வரையிலான லாபத்திற்கு வரி விலக்கு போக) எனும் போது, அமெரிக்காவில் எந்த வரி விலக்கும் இல்லாமல் 20 சதவீத வரி செலுத்த நேரிடும். பங்கு முதலீட்டு விற்பனைக்கு பின், பணத்தை வங்கிக்கணக்கில் மாற்ற வெளியேற்று கட்டணமும் அங்கே உண்டு.

நேரடி பங்கு முதலீடு(Direct Equity) அதிக ரிஸ்க் தன்மை கொண்டது. எனினும் பங்கு நிறுவனங்களை முறையாக ஆராய்ந்து நீண்டகாலத்தில் முதலீடு செய்து வந்தால்,  நல்ல வருவாயை பெறலாம். அதே வேளையில் உலகளவில் பெயர் போன பிராண்டுகளும், அனைத்து பென்னி பங்குகளும்(Penny Stocks) நல்ல வருவாயை அளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. 

சமீப காலமாக, சில பின்டெக் தளங்களில் “அதிகமானோர் விரும்பும் பங்குகள், 10 ரூபாய்க்கு கீழான பங்கு நிறுவனங்கள், தங்கள் தளங்களில் அதிகம் விற்பனையான பரஸ்பர நிதி திட்டங்கள், ஒரே வாரத்தில் அதிக வருவாய் அளித்த திட்டங்கள்” என விளம்பரங்களை(Promotions) காண முடிகிறது. இந்த பரிந்துரைகளை தொடர்ந்து கொண்டு முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க் தன்மையை நாம் எச்சரிக்கையாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகம் விற்பனையான அல்லது அதிகமானோர் விரும்பும் பங்குகள் மற்றும் திட்டங்கள் என்பது விழாக்கால சலுகை போல. கடினமாக உழைத்து சம்பாதித்த நம் பணத்தை இது போன்ற பரிந்துரைகள் மூலம் முதலீடு செய்வதால், எள்ளளவும் பயனில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 55 சதவீதமாக உள்ளது. இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(United Kingdom) 33 சதவீதமாகவும் மற்றும் சீனாவில் 13 சதவீதமாகவும் உள்ளது. இந்திய நாட்டின் வருங்கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்து வருகின்றன. நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இங்கே அதிக முதலீடுகளை மேற்கொள்கின்றன. 

அப்படியிருக்கையில், நமக்கான பெரும்பாலான பங்கு முதலீட்டு வாய்ப்பு நமக்கு அருகிலேயே தான் உள்ளது. வளர்ந்த நாடுகள் இங்கே முதலீடு செய்து சம்பாதிக்க, நமக்கான இடத்தை நிரப்ப நம்மூர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதினால் தான் அது சாத்தியம். 

குறிப்பு: நான் உள்ளூரில் நிறைவாக முதலீடு செய்து லாபமீட்டி வருகிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் எனது முதலீட்டு பங்களிப்பு அளப்பரியது. எனவே வெளிநாட்டு பங்குகளை வாய்ப்பாக கருதுகிறேன் என்று நீங்கள் சொன்னால் அயல்நாட்டு பங்கு முதலீட்டை(கட்டணம் மற்றும் வரிகளை புரிந்து கொண்டு) தாராளமாக மேற்கொள்ளுங்கள்.  

பரஸ்பர நிதி நிறுவனங்களின் வாயிலாக இன்று பெரும்பாலான வெளிநாட்டு பங்கு முதலீட்டு திட்டங்கள்(Mutual Funds) நமக்கு கிடைக்கப்பெறுகின்றன.   

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

India’s First Silver ETF Fund to invest – Investment opportunity 2022

பொதுவாக தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் பங்களிப்பு உற்பத்தி சார்ந்த துறையில் அதிகமாக உள்ளது. தங்கம் அணிகலன்களாக வலம் வந்தால், வெள்ளி தொழிற்துறைக்கு தேவையான முக்கிய மூலப்பொருளாக அமைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருவது பல நூற்றாண்டுகளை கடந்து வந்துள்ளது. வெள்ளியின் பங்களிப்பு தொழிற்துறையில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பங்கு சந்தைகள் சரியும். இதனை சரிக்கட்டும் ஆயுதமாக தங்கமும், வெள்ளியும் உதவும். நிதி சொத்துக்கள்(Financial Assets) வரிசையில் ஏற்கனவே தங்கம் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெள்ளி முதலீட்டிலும் இது சாத்தியப்பட்டுள்ளது.

நடைமுறையில் தங்கம் – அரசு பத்திரமாகவும், சந்தையில் இ.டி.எப். வடிவிலும் மற்றும் பரஸ்பர நிதியின் ஒரு திட்டமாகவும்(SGB, Gold ETF, Gold Fund) கிடைக்கப்பெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வெள்ளி இ.டி.எப். முதலீடு சார்ந்த விதிமுறைகளை செபி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளி மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத முதலீடு இருக்க வேண்டுமென்றும், முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் முதலீடு 99.9 சதவீதம் தூய வெள்ளியாக வாங்குவதற்கு பயன்பட வேண்டும் என விதிமுறை சொல்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தாலும், மேலும் இரண்டு நிறுவனங்கள்(Aditya Birla Sun life, Nippon India Mutual Funds) வெள்ளி சார்ந்த இ.டி.எப். திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.

புதிய பண்டு வகையாக(NFO) வரும் ஐ.சி.ஐ.சி.ஐ. சில்வர் இ.டி.எப். திட்டம் ஜனவரி 5 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பதிவுக்கு உள்ளது. பிறகு இதனை நாம் வெளிச்சந்தையிலும் வாங்கி கொள்ளலாம். உள்நாட்டு விலையில் உள்ள வெள்ளியின் செயல்திறனுக்கு ஏற்ப, Silver ETF விலையும் மாறுபடும்.

வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு இது புதிய மற்றும் எளிமையான வாய்ப்பாக காணப்படுகிறது. சில்வர் ETF மூலம் தர தூய்மை, பாதுகாப்பு மற்றும் விலை ஆகியவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ.100 (NFO) மட்டுமே.

இனி, வெள்ளியை நாம் பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு திட்டங்கள் வாயிலாகவும் வாங்கி கொள்ளலாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

Best 5 Funds for you to invest in 2022 – Mutual Fund investments

கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் அபரிதமாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பு இருந்ததென்றால், அது 2020ம் ஆண்டின் கொரோனா கால துவக்கம் தான். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகளவில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார வீழ்ச்சி, பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை தந்தது எனலாம்.

மீண்டும் ஒரு பெருத்த வீழ்ச்சி உடனடியாக ஏற்படுமா என்றால், உலக சந்தையை கணிக்க பெரும் பணக்காரரர்களாலும், ஆகச்சிறந்த பொருளாதார வல்லுனர்களாலும் முடியாது. அதே வேளையில், அவர்களால் அடிப்படை பொருளாதார காரணிகளை புரிந்து எச்சரிக்கை செய்ய முடியும். அதிக ஏற்றமிருந்தால் இறக்கம் ஏற்படுவது உறுதி, இது போல இறக்கம் என ஒன்றிருந்தால் ஏற்றமும் சாத்தியமே.

பங்கு முதலீட்டில் பெரும்பாலோர் தோற்பது இரண்டு காரணிகளால் தான் – குறுகிய காலத்தில் பேராசை மற்றும் சந்தையை கணிக்கிறேன் என தவறான முதலீட்டு முடிவை எடுப்பது. எந்தவித சலனமும் இல்லாமல் நீண்ட காலத்தில் தொடர் முதலீடு செய்து வருபவர்களே எப்போதும் வெற்றி வாகை சூடுகின்றனர்.

‘ பங்கு முதலீட்டை என்னால் சரிவர கையாள முடியவில்லை’ என்பவர்கள் அதற்கென துறை சார்ந்த ஆலோசகர்களை வைத்து கொள்ளலாம். இதற்கான கட்டணமும் உண்டு. இலவசமாக உங்களுக்கு யாரும் பெரும் செல்வத்தை அளித்து விட முடியாது. எனவே ஆலோசனை பெறுபவர்களிடமும் கவனம் வேண்டும்.

சந்தையில் நேரடியாக முதலீடு செய்து கண்காணிக்க நேரமில்லை என்பவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) செய்யப்படும் முதலீடு உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு துணை புரிய கால அளவுகளை(Goal Period) ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்கு லிக்விட் மற்றும் கடன் பண்டுகள்(Liquid and Debt Mutual Funds), நடுத்தர கால தேவைகளுக்கு ஹைபிரிட் மற்றும் மல்டி அஸெட் பண்டுகள்(Hybrid and Multi Asset), நீண்ட காலத்திற்கு பங்கு சார்ந்த பண்டுகள்(Equity oriented) என பிரித்து முதலீடு செய்யலாம்.

அஸெட் அலோகேஷன் முறையில் பிரித்து முதலீடு செய்யும் போது சந்தை ஏற்ற-இறக்கத்தை பற்றிய கவலையில்லை. தங்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் நமது முதலீட்டை பெரிதாக பாதிக்காது. அது போன்ற கலவையுடன் உள்ள ஐந்து பண்டுகள் உங்களுக்காக. கடந்த காலங்களில் இந்த பண்டுகள் அளித்த வருவாய், பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் ரிஸ்க் தன்மை ஆகியவை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் குறிப்பிடப்பட்ட கடந்த கால வருவாய், எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் இவை பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்கும். சொல்லப்பட்ட பண்டுகள் அனைத்தும் பணப்புழக்கம்(Liquidity), முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification & Asset Allocation), வரி சேமிப்பு, உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்பு(Global Equity exposure) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

  • Aditya Birla Sun Life(ABSL) Gold Fund

  • HDFC Multi Asset Fund

  • PGIM India Midcap Opportunities Fund

  • Mirae Asset Tax Saver Fund

  • Parag Parikh(PPFAS) Flexi Cap Fund

Mutual funds 2022

வரக்கூடிய 2022ம் வருடம் நமக்கு எப்படியிருக்கும் என நம்மால் கணிக்க இயலாது. நாமும் ஒவ்வொரு வருடமும் புதிய இலக்குகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். 2022ம் ஆண்டுக்கான உங்கள் நிதி இலக்குகளுக்கு சொல்லப்பட்ட பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். பின்னாளில் இந்த முதலீட்டு பெருக்கம் உங்களை நிதி சார்ந்து பாதுகாக்கும்.

குறிப்பு: மேலே உள்ள பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர் முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொடர இனி பான் – ஆதார் இணைப்பு அவசியம்

மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொடர இனி பான் – ஆதார் இணைப்பு அவசியம் 

PAN – Aadhaar linking is mandatory for Mutual Fund Transactions – From 1st July

மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள், கடந்த சில வருடங்களாக பிரபலமடைந்து வருகிறது. மே மாத முடிவின் படி, சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகித்து வரும் இந்த துறை, முதலீட்டுக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.

செபியின்(Securities and Exchange Board of India) கீழ் வரும் மியூச்சுவல் பண்டு துறை, ஆம்பி(AMFI) துணை மூலம் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்கள் இருந்தாலும், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய கே.ஒய்.சி.(KYC) நடைமுறையை பதிவு செய்வது அவசியம்.

பரஸ்பர நிதிகளில் தங்கம், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், வெளிநாட்டு நிறுவன முதலீடு மற்றும் பங்குச்சந்தை என பல கலவை திட்டங்கள் உள்ளன. குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை, முதலீடு செய்யும் ஒருவருக்கு தேவையான தனித்துவமான திட்டங்களை வழங்கி வருகிறது. பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய தயக்கம் உள்ளவர்கள், மியூச்சுவல் பண்டுகளில் கிடைக்கப்பெறும் திட்டங்களை எளிமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மியூச்சுவல் பண்டில் ஏற்கனவே முதலீடு செய்து வருபவர்கள் மற்றும் புதிதாக கணக்கு துவங்க உள்ளவர்கள், தங்களது பான் – ஆதார்(PAN – Aadhaar) எண்ணை இணைப்பது அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

சொல்லப்பட்ட காலத்திற்குள் இணைப்பை ஏற்படுத்தாதவர்கள், தாங்கள் ஏற்கனவே முதலீடு செய்த பணத்தை வெளியே எடுக்கவும், புதிதாக முதலீட்டை தொடரவும் சிக்கல் ஏற்படலாம். பொதுவான முறையில், பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவும் வரும் ஜூன், 30ம் தேதியுடன் முடிவடைகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

இணைப்புக்கான காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாதவர்களின் பான் எண் செல்லாதவையாக சொல்லப்படும் எனவும், வருமான வரி தாக்கல் செய்யும் நிலையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் எந்தவொரு முதலீட்டை உள்நாட்டில் தொடர, பான் – ஆதார் எண் இணைப்பு அவசியமாகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி திட்டம்

நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி திட்டம் 

India’s First International REIT Fund – Kotak Mutual Fund

பொதுவாக பங்குச்சந்தைக்கும், ரியல் எஸ்டேட் என சொல்லப்படும் வீட்டுமனை துறைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு நீர்மை நிறை(Liquidity) தான். பங்குச்சந்தையை பொறுத்தவரை பணப்புழக்கம் எப்போதும் அதிகம். அதே வேளையில் நாம் செய்த முதலீட்டு தொகையிலிருந்து சிறிய அளவில் கூட பங்குகளை விற்று எளிதாக பணமாக்கலாம். ஆனால் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள ஒரே குறை, இந்த நீர்மை நிறை தான்.

மேலும் ரியல் எஸ்டேட் துறையில் நாம் பங்குகளை போல வாங்கிய நாளன்றோ அல்லது நமக்கு எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது பங்குகளை விற்பது போல இங்கே செய்ய முடியாது. அதற்கான கட்டணங்களும் வீட்டுமனை துறையில் சற்று அதிகம். இந்த குறையை களைய ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்(Real Estate Investment Trust) என்னும்  அமைப்பு கடந்த 2007ம் ஆண்டு செபியால் துவங்கப்பட்டது.

இதுவே அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட காலம் 1960ம் ஆண்டு. ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பெரு நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், சிறு முதலீட்டாளர்களும் தாங்கள் செய்த முதலீட்டை எளிதாக விற்பதற்கும், தொடர் வருமானத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அமைப்பு உதவியது. இந்த துறையில் நுழையும் நிறுவனங்களுக்கும் சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டது.

குறைந்தபட்ச முதலீடாக 500 கோடி ரூபாயும், 80 சதவீத முதலீடு முழுவதுமாக முடிவடைந்த கட்டிடங்களிலும், 10 சதவீத தொகை மட்டுமே கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும் மனையிலும்(Under construction) இருக்க வேண்டுமென்ற வரைமுறைகள் உண்டு. ஈட்டப்படும் வருவாய், முதலீட்டாளர்களுக்கு 90 சதவீதம் என்ற அளவில் ஈவுத்தொகையாக (Dividends) மட்டுமே அளிக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்யாமல், ஒரு பெரு மனை சொத்தில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்து விட்டு, கணிசமான வருவாயை எதிர்பார்க்கலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மதிப்பீடுகள் செய்யப்படும் என்பதும் இதன் சிறப்பு.

ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதிக்கும்(REIT Funds), ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதி திட்டத்திற்கும்(Real Estate Funds) இடையே உள்ள வேறுபாடு, REIT முதலீட்டில் அதிகப்படியான ஈவுத்தொகை வருவாயை பெறலாம் என்பதே.

ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டில் பங்கு பெறும் நிறுவனங்கள் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், சேமிக்கும் கிடங்குகள் போன்ற தொடர் வருவாய் அளிக்கும் சொத்துக்களை சொந்தமாக கொண்டிருக்கும் அல்லது நிதியளிக்கும் நிறுவனங்களாக இருக்கும். இது பங்குச்சந்தையில்  பட்டியலிடப்படுவது போன்று வெளிப்படைத்தன்மையுடன் பட்டியலிடப்படும். சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை யாரும் முதலீடு செய்து தொடர் வருவாய் மற்றும் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தலாம். நடப்பில் வீட்டுமனை துறையில் காணப்படும் குறைகளை களைந்து, நேர்மையான முறையில் சிறிய முதலீடும் செய்வதற்கு இந்த முதலீட்டு டிரஸ்ட் உதவும்.

கடந்த ஆண்டு நாட்டின் முதல் REIT ஐ.பி.ஓ. வெளிவந்தது. முதன்மை சந்தையில் வெளிவந்த எம்பஸி ஆபிஸ் பார்க்ஸ் (Embassy Office Parks) நிறுவனம் வாடகை மற்றும் தொடர் வருவாய் அளிக்கும் வீட்டுமனை துறையில் முதலீடு செய்து வருகிறது. மேலும் தனக்கென பல ரியல் ஸ்டேட் சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளது.

சொல்லப்பட்ட நிறுவனம் உள்நாட்டு சந்தையில் இருந்து வரும் நிலையில், தற்போது கோடக்(Kotak) பரஸ்பர நிதி நிறுவனம் நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டமாக வந்திருக்கும் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி, திறந்த முடிவு திட்டமாக வந்துள்ளது(Open Ended fund – Fof).

நடப்பு டிசம்பர் 7 முதல் 21 வரை ஆரம்ப நிலை பதிவாக வரும் இத்திட்டம் பின்னர் பொதுவெளியில் பரஸ்பர நிதியின் கீழ் செயல்படும். இதன் முதலீட்டு சொத்து பங்களிப்பு சிங்கப்பூரில் 48.8 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 33.7 சதவீதமும், ஹாங்காங் நாட்டில் 9 சதவீதமாகவும் உள்ளது. நியூஸிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் ஒரு சதவீதத்திற்கு மேலாக முதலீடு செய்யப்படும். உள்நாட்டில் 0.9 சதவீதம் என்ற அளவில் மட்டுமே முதலீடு அமையும்.

SMAM(Sumitomo Mitsui DS Asset Management Company) ஆசிய ரியல் எஸ்டேட் முதலீட்டு திட்டத்தின் படி செயல்படும் இந்த திட்டம், ஆசிய-பசிபிக் பகுதியில் முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீத வருவாயை அளிக்கும் இத்திட்டத்தின் முதலீடு டாலர்களில் கையாளப்படுவதால் வெளிநாடுகளில் காணப்படும் ரியல் எஸ்டேட் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய், உள்நாட்டு முதலீட்டாளருக்கு சாதகமாக அமையும்.

எனினும் இது போன்ற திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு தற்போது குறைவு என்பதால், இந்த துறை சிறப்பாக செயல்பட இன்னும் சில காலமாகும். வரி விதிப்புகளும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு vs பங்குச்சந்தை – எங்கே முதலீடு செய்வது ?

மியூச்சுவல் பண்டு vs பங்குச்சந்தை – எங்கே முதலீடு செய்வது ?

Mutual Funds vs Stock (Share) Market – Where to invest ?

நம்மில் பலர் மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதியும், பங்குச்சந்தையும் ஒன்று என நினைத்து கொள்கின்றனர். அது போல, சொல்லப்பட்ட இரண்டுமே மிக அதிகமான ரிஸ்க் தன்மை கொண்டவை, அதனால் முதலீட்டுக்கு ஏற்றதல்ல என்ற தவறான எண்ணமும் உள்ளது.

உண்மையில் மியூச்சுவல் பண்டு(Mutual Funds) என்பது முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீடு பல்வேறு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும் முறையாகும். இதற்காக பல பிரிவுகளும், திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை நிர்வகிப்பது அஸெட் மேனேஜ்மென்ட்(Asset Management Company) என சொல்லப்படும் நிறுவனங்களாகும். பெரும்பாலும் இந்நிறுவனங்கள் வங்கி சேவையிலிருந்து வந்தவை ஆகும். ஆதலால் இந்த நிறுவனங்களின் நிதி சார்ந்த அனுபவமும் நீண்ட காலத்திற்கு உரியவை.

2020ம் ஆண்டு முடிவின் படி, அமெரிக்காவின் பரஸ்பர நிதிகளின் சொத்து மதிப்பு(AUM) சுமார் 24 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய பரஸ்பர நிதிகள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ. 33 லட்சம் கோடி (மே 31, 2021). உலகளவில் முதல் பத்து இடங்களில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் நிதி(Financial Assets) சார்ந்த சொத்துக்களை மட்டுமே சேர்த்து வைத்துள்ளனர். அதாவது அவர்களிடம் நிலம், தங்கம், வைரம் போன்றவையாக இல்லாமல் வங்கி முதலீடு, மியூச்சுவல் பண்டு, பங்குச்சந்தை மற்றும் இதர நிதி சார்ந்த முதலீடுகளாக இருக்கலாம்.

பரஸ்பர நிதி சேவையில் பல திட்டங்கள் உள்ளன. இவை பல இனங்கள் சேர்ந்த ஒரு கூட்டு கலவையாக உள்ளன. சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட் ஆகியவற்றுக்கு மாற்றாக, அரசு மற்றும் தனியார் பத்திரங்கள், அந்நிய நிறுவனத்தில் முதலீடு, பங்குச்சந்தை, குறிப்பிட்ட துறை சார்ந்த என முதலீடு திட்டங்கள் பல உள்ளன. இவை அனைத்தும் கிடைக்கப்பெறும் சந்தை தான் மியூச்சுவல் பண்டு சேவையாகும்.

தனிநபர் ஒருவர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் தேவையான நிதி இலக்குகளை நிர்ணயித்து பின்பு அதற்கேற்ற பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். இங்கே கால அளவு என்பது முக்கியம். நீங்கள் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்ய உள்ளீர்கள் மற்றும் எப்போது இந்த முதலீடு உங்களுக்கு தேவைப்படும் என்பதையும் அறிந்திருத்தல் அவசியம். மியூச்சுவல் பண்டு முதலீடு ரிஸ்க் தன்மை கொண்டது. ஆனால் அனைத்து மியூச்சுவல் பண்டு திட்டங்களும் ஒரே அளவிலான ரிஸ்க் தன்மை கொண்டவையல்ல. ஒரு இரவில் இருந்து 20 வருடங்கள்(Overnight to Long term Funds) வரை வெவ்வேறான முதலீட்டு திட்டங்களை பிரதிபலிப்பவை.

மிகவும் குறுகிய காலத்தில் குறைந்த ரிஸ்க் அளவு கொண்ட திட்டங்கள் உள்ளன. இவற்றில் கிடைக்கப்பெறும் வருவாய் அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்பை ஒட்டி அமையும். நடுத்தர காலத்தில் அரசின் கொள்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பொறுத்து திட்டங்களின் வருவாய் இருக்கும். நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு நல்ல வருவாயை ஈட்ட முடியும். முதலீட்டை பொறுத்தவரை பணவீக்கத்தை தாண்டிய வருவாயும், நிதி இலக்குகளை எட்டக்கூடிய தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதற்கு முன்னர், உங்களுக்கு தேவைப்படும் விஷயங்கள்:

  • நிதி இலக்கு (Goal Name)
  • இலக்கிற்கான தொகை (இன்றைய  மதிப்பில்) – Goal Value / Corpus
  • இலக்கிற்கான காலம் – Goal Period
  • எதிர்பார்க்கும் வருவாய் – Expected Returns %
  • முதலீட்டு வடிவம் – மாத முதலீடு அல்லது ஒரு முறை மட்டும் முதலீடு

மேலே சொன்ன விஷயங்களை  கருத்தில் கொண்டு, அதனை சார்ந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது அவசியமானது. புரிவது சற்று கடினமாக இருந்தால், தகுந்த முதலீட்டு ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுங்கள். முதலீட்டு ஆலோசகர் எனும் போது, உங்களின் நிதி இலக்குகளில் அக்கறை கொண்டு, அதற்காக கட்டணம் பெற்று சரியான தரவுகளை அளிக்கும் நபர்களை கண்டறியுங்கள். ஏஜெண்ட்களிடம் மாட்டி கொள்ள வேண்டாம். அவர்களின் கமிஷன் தொகைக்காக உங்களுக்கு சம்மந்தமில்லாத முதலீட்டு திட்டங்களை பரிந்துரைக்கலாம். முடிவில் நஷ்டம் உங்களுக்கு மட்டுமே. இந்த தவறான அணுகுமுறையால் தான், இன்று நம் நாட்டில் பெரும்பாலோர் முறையான காப்பீட்டு திட்டத்தை பெற இயலவில்லை. அது முதலீட்டு திட்டங்களிலும் நடக்க வேண்டாம்.

பங்குச்சந்தை(Share Market) என்பது ஒரு தொழிலை போல. ரிஸ்க் என்பது இவற்றில் எப்போதும் அதிகம் தான். பங்குச்சந்தை மூலம் வெகு விரைவில் நான் கோடீஸ்வரராக போகிறேன் என இங்கு யாரும் வர வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விட்டால், பிறகு யாரையும் நம்ப மாட்டீர்கள். பங்குச்சந்தை முதலீடு(Equity Investing) என்பது பலதரப்பட்ட முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீடு, ஒரு நிறுவனத்திற்கு அளிக்கப்படும். பின்பு அதனை கொண்டு அந்த நிறுவனம் தொழில் செய்யும். லாப, நட்டத்திற்கு முதலீட்டாளர்கள் தான் பொறுப்பு. பங்குச்சந்தையை நிர்வகிக்க ஜாம்பவான் செபி(SEBI) உள்ளது. சந்தையில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் ஒழுங்குமுறைப்படுத்தவது செபியின் வேலை. செபி தான் பரஸ்பர நிதி என சொல்லப்படும் மியூச்சுவல் பண்டு சேவைக்கும் தலைமை.

பங்குச்சந்தை என நினைத்து கொண்டு நம்மில் பலர் சந்தையை விட்டு, மோசடி பேர்வழிகளிடம்(Ponzi Schemes) பணத்தை இழந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையை பொறுத்தவரை ஒழுங்குமுறை ஆணையம், தரகர்கள், பதிவாளர்கள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் இருக்கும். இவை அனைத்தும் முதலீட்டாளர்களின் நலன் கருதி நிர்வாக சேவை செய்வதற்கு. பங்குச்சந்தையில் உங்களுக்கு பணம் பண்ண யாரும் உதவ மாட்டார்கள், அப்படி எதுவும் இங்கே கிடையாது. பங்குச்சந்தையை பற்றிய கல்வியை அளிக்க இங்கே எண்ணற்ற நிறுவனங்களும், புத்தகங்களும் உள்ளன. முறையாக கற்று கொண்டு, நீங்களாகவே களம் இறங்கினால் தான் உண்டு. பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி கொண்டு, உங்கள் கையை சுட்டு கொள்ள வேண்டாம்.

பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம், உங்கள் பணத்தை கொண்டு. உங்களிடம் உபரியாக உள்ள பணத்தை மட்டுமே, சந்தையில் முதலீடு செய்து பணம் பண்ணுங்கள். நஷ்டத்தை தவிர்க்க இயலாது, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் – பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், இவற்றில் சூதாட்டம் வேண்டாம். முதலீடு செய்யும் முன்னர், அதற்கான முறையான கல்வியை கற்று கொண்டு பின்னர் ஆயுதமாகுங்கள். உண்மையில் பங்குச்சந்தை பணம் பண்ணும் சூத்திரம், அனைவருக்கும் சாத்தியமே – முறையான கல்வியும், நீண்ட காலத்தில் பொறுமையும் இருந்தால்.

மியூச்சுவல் பண்டுக்கு பதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா ?

என்னிடம் பல நண்பர்கள் கேட்கும் கேள்வி இது. மியூச்சுவல் பண்டை விட, பங்குச்சந்தையில் அதிகம் வருமானம் கிடைக்குமாமே, மியூச்சுவல் பண்டும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்கிறார்கள் – அப்புறம் எதற்கு நான் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும் ?

இந்த கேள்வி தான் பெரும்பாலானவர்களிடம் !

முதலில் இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். மியூச்சுவல் பண்ட் சேவையில் பல கலவை திட்டங்கள் உள்ளன. பங்குச்சந்தை என்பது ஒரு நேரடி தொழில் போல. பரஸ்பர நிதி சேவைக்கு பெரிய கற்றல் தேவையில்லை. ஆனால், பங்குச்சந்தை அப்படியல்ல.

நீங்கள் இலக்கிற்காக முதலீடு செய்ய நினைத்தால், மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும் – ஒரு மாரத்தான்(Marathon) நடை போல…

உங்களுக்கென நிதி இலக்கு, இலக்கிற்கான காலம் உள்ளது. நீங்கள் அதனை தவிர்க்க இயலாது. உங்களது குழந்தை மேற்படிப்பு, திருமணம், ஓய்வு காலம் ஆகியவை குறிப்பிட்ட கால அளவை கொண்டவை. அதனால் முதலீட்டில் ஒரு ஒழுக்கம் தேவைப்படும். தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்து வரும் போது, உதாரணமாக 15 வருடங்களுக்கு பிறகு உங்கள் குழந்தையின் திருமண செலவை ஏற்படுத்தலாம் அல்லது உங்கள் ஓய்வு காலமாக இருக்கலாம்.

நான், ஏன் எனது நிதி இலக்கிற்கான தொகையை பங்குச்சந்தை மூலம் சம்பாதிக்க முடியாதா ?

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். பங்குச்சந்தை என்பதே உங்களுக்கான செலவத்தை ஏற்படுத்துவது தான். ஆனால், உங்களால் நிதி இலக்கை சார்ந்து முதலீடு செய்ய சாத்தியமா என்றால் – அது தான் இல்லை. மியூச்சுவல் பண்டு பல கட்டமைப்புகளை கொண்டது. அங்கே உங்கள் பணம்,அனுபவமிக்க பண்டு மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுவாக அவர்களுக்கு தெரியும், அடுத்து என்ன சந்தையில் நடக்க போகிறது என்று. அவர்களிடம் இருப்பதோ பல லட்சம் கோடிகள் முதலீடு. ஆனால், நமக்கு தாமதமான செய்திகள் மூலம் – அதுவும் ஊடகத்தின் வாயிலாக.

பங்குச்சந்தையில் நமக்கான ஒழுக்கத்தை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். தவறினால், பணம் இழக்க நேரிடும். யூனிடெக், சுஸ்லான், ஜே.பி. அஸோஸியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் போன்ற பங்குகளின் விலையெல்லாம் முன்னர் எப்படி இருந்தது என்பது நமக்கு தெரியும். ஆனால், இன்று பங்குகளின் விலை மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் நிர்வாகமே தள்ளாட்டத்தில். மேலே சொல்லப்பட்ட பங்குகள் எல்லாம் ஒரு காலத்தில் பெரு நிறுவன பங்குகள். அவற்றின் விலையும் உச்சத்தில் தான் இருந்தன. முடிவில் ஒரு குமிழி(Bubble) போல உடைந்து விட்டது. பல்வேறு நிர்வாக காரணங்களால் தான் அவை நடைபெற்றுள்ளது. இது போன்ற நிறுவனங்களில் நாம் முதலீடு செய்து விட்டு, நமது இலக்கிற்கான காலத்திற்கு அருகில் வரும் போது எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டு விட்டால் !

மியூச்சுவல் பண்டை போல நீங்கள் சந்தையில் மாதாமாதம் ஒரே பங்கில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. பங்கு உச்சத்தில் இருந்தால் நீங்கள் விற்க நேரிடும் அல்லது நிறுவனத்தை பற்றிய செய்திகள் எதிர்மறையாக இருந்தால், நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள் ? உங்களுக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் நூறு சதவீதம் உண்மையாக இருக்குமா ? நீங்கள் வாங்கிய பங்கு ஒவ்வொரு வாரமும் இறக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் தொடர்ச்சியாக வாங்கும் மனநிலையை கொண்டிருப்பீர்களா அல்லது அதற்கான காரணத்தை அறிய முற்படுவீர்களா ? பொதுவாக பங்குச்சந்தையில், நீங்கள் முடிவெடுப்பதற்குள் அந்த நிகழ்வு முடிந்து விடும்.

மியூச்சுவல் பண்டில், சந்தை ஏற்ற இறக்கத்தை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நமது இலக்கு தொடர்ச்சியாக முதலீடு செய்வது தான். அதனால் தான் சொல்கிறேன், பரஸ்பர நிதிகள் எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை உங்கள் நிதி இலக்கிற்கு பயன்படுத்துங்கள். பங்குச்சந்தையை உங்கள் செல்வ வளத்திற்கு(Wealth Creation) பயன்படுத்துங்கள் என்று. நீங்கள் எந்த வேலை செய்தாலும், உங்களுக்கென்று பகுதி நேர தொழில் உள்ளது – அது தான் பங்குச்சந்தை. பங்குச்சந்தையில் முதலீடு செய்து செலவத்தை பெருக்க உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள். அவர்களின் நீண்ட கால இலக்கிற்கு மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

Mutual Funds Investment declined in the month of June 2020

மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை விறு விறுவென ஏற்றம் பெற்று வருகிறது. பெரும்பாலான பங்குகள் மார்ச் கடைசி வாரம் அதலபாதாளத்திற்கு சென்ற நிலையில், தற்போது விலையேற்றத்தில் சுமார் 30-80 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளன.

பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், பங்குச்சந்தை குறியீடுகள் எதிர்பாராத விதமாக ஏற்றமடைந்துள்ளன. பொதுவாக இது போன்ற நிகழ்வு பங்குச்சந்தையில் இயல்பான ஒன்று தான். பின்னொரு நாளில் வேறொரு காரணத்திற்காக இறங்குவதும் நடக்கும். அதே வேளையில் நீண்டகாலத்தில் முதலீடு செய்து பொறுமையாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை பெரும் செல்வத்தை அளிக்கும் வாய்ப்பாக அமையும்.

இந்திய பரஸ்பர நிதி துறையில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்(Asset Management Companies) முதலீட்டு சேவையை செய்து வருகின்றன. செபி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பரஸ்பர நிதி துறையை ஆம்பய்(AMFI) அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. பரஸ்பர நிதி முதலீடுகள் சார்ந்த தகவல்களை ஆம்பய் அமைப்பு ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாத முடிவின் படி, இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு(AUM) 25.5 லட்சம் கோடி ரூபாயாகும். ஜூன் மாதத்தில் பரஸ்பர முதலீடுகள் 95 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் மூன்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதலீடு ரூ.195 கோடி. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் பெறப்பட்ட முதலீடு ரூ. 240 கோடி என சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது 95 சதவீத குறைவாகும்.

ரிஸ்க் குறைந்த லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) இருந்து பெரும்பாலான முதலீடுகள் கடந்த மாதத்தில் வெளியேறியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 44,220 கோடி ரூபாய். கடன் பத்திரம் மற்றும் வருவாய் சார்ந்த பண்டுகளில் ஈர்க்கப்பட்ட ஜூன் மாத முதலீடு ரூ. 2,862 கோடி. கலவை திட்டம் என அழைக்கப்படும் ஹைபிரிட்(Hybrid) திட்டத்தில் 356 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது.

ஓய்வு கால நிதி மற்றும் குழுந்தைகளுக்கான திட்டங்களில் பெறப்பட்ட தொகை ரூ. 108 கோடி ஆகும். வரி சலுகை சார்ந்த திட்டங்கள் வாயிலாக கடந்த மாதத்தில் முதலீடுகள்  ஈர்க்கப்படவில்லை. இந்த திட்டத்திலிருந்து 15 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. தங்கம் சார்ந்த ஈ.டி.எப்.(Gold ETF) திட்டத்தின் மூலம் 494 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் இரண்டிலும் முதலீட்டு வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது வேலையிழப்பு, குறைவான நாட்களுக்கு மட்டுமே பெறப்பட்ட ஊதியம், மந்தநிலையை காரணம் காட்டி முதலீடு செய்யாமல் இருந்ததாகும். மேலும் பங்குச்சந்தை மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் உச்சத்தில் இருப்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர்.

சந்தை இறக்கத்தில் அதிகமாக பெறப்பட்ட முதலீடு, தற்போது எச்சரிக்கை உணர்வாக பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை எனலாம். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில், நீண்டகால வருவாய் வளர்ச்சியை பெறலாம். சந்தை ஏற்ற-இறக்கத்தை கணிப்பதை விட, நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை திரட்டுவது அவசியமாகும்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமா ? – உங்களுக்காக 3 பரஸ்பர நிதி திட்டங்கள்

உலகின் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமா ? –  உங்களுக்காக 3 பரஸ்பர நிதி திட்டங்கள் 

Best 3 Global Funds to Invest – Mutual Funds in 2020

நான் எப்போதும் சொல்லும் வாசகம் இது தான், ‘ நேரிடையாக பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு தங்கள் உபரி பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஊக வணிகம் மற்றும் சூதாடுவதை தவிர்க்க வேண்டும். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்கப்பெறும் எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீட்டின் மூலம் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெறலாம். இதன் மூலம் ஒருவரின் நிதி இலக்கை நிறைவு செய்யலாம். உங்கள் நிதி இலக்குகளுக்காக நேரிடையாக பங்குச்சந்தைக்கு வராதீர்கள்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது உங்களது உபரி பணத்தில் தான். செல்வ வளத்தை சேர்க்கவும், சமூகத்தில் தொண்டு செய்வதற்கான நிதியை பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் பெறுங்கள். ஆனால் உங்கள் நிதி இலக்குகளில் அதனை பரிசோதனை செய்ய வேண்டாம். பங்குகள் மூலம் சில வருடங்களில் நீங்கள் குட்டி அம்பானியாகி விட முடியாது. அதற்கு இரண்டு தலைமுறைகள் கஷ்டப்பட வேண்டும். நீண்டகால தன்மையும், பொறுமையும் அவசியம்.‘

வங்கிகளில் வட்டி விகிதங்கள் கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. இதற்கு இரண்டு விஷயங்களை காரணமாக எடுத்து கொள்ளலாம். ஒன்று பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இல்லையெனில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இது போல வேகமாக வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் பொதுவாக வட்டி விகிதம் குறைவாக தான் காணப்படும். அப்படியிருக்கும் போது வருங்காலங்களில் வங்கிகள் மூலம் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் அதிகமாக இருக்காது (அதிக பணவீக்க காலத்தை தவிர்த்து). எனவே அவற்றுக்கு மாற்றாக பார்க்கும் போது, இன்று பரஸ்பர நிதிகள்(Mutual Funds) பிரபலமடைந்து வருகிறது.

அதே வேளையில் பரஸ்பர நிதிகள் என்றாலே பங்குச்சந்தை தான் எனவும் எடுத்து கொள்ளக்கூடாது மற்றும் வருவாய் நன்றாக உள்ளது என அலட்சியத்துடனும் இருந்து விட கூடாது. பரஸ்பர நிதிகள் பல கலவை திட்டங்களை கொண்டவை. நீங்கள் பார்க்கும் சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், பத்திரங்களில் முதலீடு, வீட்டுமனை, தங்கம், பங்குகள் என பல பரிணாமங்களை பரஸ்பர நிதிகளில் ஒரு சேர காணலாம்.

இருப்பினும் ஒருவருடைய தேவை மற்றும் காலத்திற்கு ஏற்ப தான் பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ரிஸ்க் என்பது எந்த முதலீட்டிலும் உண்டு. குறைந்த ரிஸ்க்(No Risk or Low Risk) கொண்ட லிக்விட் பண்டுகள் முதல் அதிக ரிஸ்க் கொண்ட பங்கு சார்ந்த பண்டுகள்(High Risk) வரை இங்கு கிடைக்கப்பெறுகிறது. திட்ட ஆவணங்களை சரியாக படிப்பதும், தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

உலக பங்குச்சந்தை முதலீட்டில் நமது நாட்டின் சந்தை மதிப்பு மூன்று சதவீதமே. நம் நாட்டில் பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் மூன்று சதவீதத்திற்கு குறைவே. சமீபத்தில் பங்குச்சந்தையில் புதிய கணக்குகள் அதிகமாக துவங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவை கொரோனா காலத்தில் பங்குச்சந்தை மூலம் ஊக வணிகம் மற்றும் தினசரி வர்த்தகத்தில் பகுதி நேரமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தினால் தான். உண்மை புள்ளிவிவரம் என்னவெனில் நாட்டில் ஏப்ரல் மாதம் வரை சுமார் 4 கோடி டீமேட் கணக்குகள் உள்ளதாகவும், இவற்றில் ஒரு கோடிக்கும் குறைவாகவே செயல்பாட்டில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது தொடங்கப்பட்ட பங்குச்சந்தை கணக்குகளில் 75 சதவீதம் செயல்படாமல் இருந்துள்ளன. மீதம் சொல்லப்பட்ட ஒரு கோடிக்கும் குறைவான கணக்குகளில் முதலீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை பாதியை கூட பெறாது. இவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம், யார் உண்மையில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று… ஆம், பங்கு தரகர்களும், நீண்டகால முதலீட்டாளர்களும்.

வெளிநாட்டு நிறுவன பங்குகளில் நாம் நேரிடையாக முதலீடு செய்வதற்கான சாதனம் நமது பங்குச்சந்தை அமைப்புகளில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் வெளிநாட்டு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம். அப்படி காணும் போது, நாம் சிறந்த மூன்று திட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

  • பிராங்க்ளின் பீடர் அமெரிக்க முதலீட்டு வாய்ப்பு (Franklin India Feeder US Opportunities)
  • டி.எஸ்.பி. ப்ளாக்ராக் அமெரிக்க முதலீடு (DSP Blackrock US Flexible Equity)

மேலே சொல்லப்பட்ட மூன்று பரஸ்பர நிதிகளில் பராக் பரிக் உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மதிப்புமிக்க முதலீட்டாளர்களில் ஒருவராவார். இன்றும் மூன்று திட்டங்களை மட்டுமே கொண்டு செயல்படும் இந்த பரஸ்பர நிதி நிறுவனம் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறது.

வெறுமென உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல், முதலீட்டாளர்களுக்கு உலக நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் வாய்ப்பை பராக் பரிக் தருகிறது. இந்த பண்டுகளில் குறைந்தபட்ச முதலீடாக மாதாமாதம் ரூ. 1000 ஐ முதலீடு செய்யலாம். பராக் பரிக் நீண்டகால பங்கு திட்டம் தொடங்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகும். இதுவரை 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ. 3,200 கோடி.

கூகுள் (Alphabet), அமேசான், முகநூல்(Facebook), சுசூகி, மைக்ரோசாப்ட், எச்.டி.எப்.சி., ஐ.டி.சி., ஆரக்கிள், கேடிலா ஹெல்த்கேர் என பல முக்கிய நிறுவனங்களில் இந்த திட்டம் முதலீடு செய்யும். முதலீடு பரவலாக்கத்தில் 55 சதவீதம் பெரு நிறுவனங்களிலும்(Giant), லார்ஜ் கேப் 13 சதவீதம், மிட் கேப் 12 சதவீதம் மற்றும் மீதம் உள்ளவை சிறு நிறுவனங்களில்(Small cap) முதலீடு செய்யப்படும். அதிக ரிஸ்க் கொண்ட இந்த திட்டம் மல்டி கேப் முதலீட்டு பிரிவில் வருகிறது. நீண்டகால முதலீட்டிற்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

மற்ற பண்டுகளை பற்றி வரவிருக்கும் பதிவுகளில் காணலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு புதிய செயலி (Mobile App)

மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு புதிய செயலி (Mobile App)

New Mutual Fund Mobile App – Introduction on Varthaga Madurai Platform

இன்று வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை போல, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்பட்டு வருவதும் பரவலாக உள்ளது. வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கப்பெறும் சாதனங்கள் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வருபவை, எனவே அவை ஒரு முதலீட்டு சாதனமாக கருதப்படாது. அத்தியாவசிய தேவை மற்றும் அவசர பண பரிமாற்றத்திற்கு வங்கி சேமிப்பு கணக்கை பயன்படுத்தி கொள்ளலாம்.

வங்கிகளில் கிடைக்கக்கூடிய வைப்பு தொகை (Fixed Deposit) ஒரு சிறந்த முதலீடாக இருக்க முடியாது. ஏனெனில், பொதுவாக அவை பணவீக்கம் மற்றும் வரிகளை கடந்து குறைவான வட்டி வருவாயை கொண்டிருக்கும். எனவே, நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானமாக பயன் தராது.

நாட்டில் தற்போது 45க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள்(Asset Management Companies) உள்ளன. பொதுவாக இவை வங்கிகளாக தான் தனது முதன்மை தொழிலை கொண்டிருக்கின்றன. மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் அனுபவம் சிறப்பானதொரு முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்திய மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 27 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்(March 2020). வங்கி சேமிப்பு கணக்குகளை போல லிக்விட் பண்டுகள்(Liquid Funds) எனும் மிக குறைந்த ரிஸ்க் கொண்ட நிதி திட்டங்கள் உள்ளன.

வங்கி டெபாசிட் தொகைக்கு மாற்றாக, கடன் பத்திர திட்டங்கள்(Debt Funds) பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்க பெறுகிறது. ஓரளவு ரிஸ்க் குறைவான பண்டுகளாக இருந்தாலும், வரி விதிப்புகளில் வங்கி டி.டி.எஸ்.(TDS) பிடித்ததை விட குறைவான வரிகள் தான் விதிக்கப்படுகின்றன. பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட், குறிப்பிட்ட துறை சார்ந்த முதலீடுகள், புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காமல் ஏற்படுத்தப்படும் முதலீடுகள் என பல வகைகள் உள்ளன.

முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்த சந்தையில் ஒரு எளிய முதலீட்டு சாதனம் உள்ளது என்றால், அது மியூச்சுவல் பண்ட் எனும் பரஸ்பர நிதி முதலீடுகள் தான். அனைத்து வகையான பண்டுகள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்கள் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய வர்த்தக மதுரை சார்பாக புதிய கைபேசி செயலி (Mutual Fund Investment Application) ஒன்று கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

செயலியின் சிறப்பம்சங்கள்:
  • புதிய கணக்கை தொடங்குவதற்கு, கே.ஒய்.சி.(KYC) நடைமுறை என்ற கட்டுப்பாடு அனைத்து வகை நிதி சாதனங்களுக்கும் உண்டு. இது வங்கி, பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு பொருந்தும். கே.ஐ.சி. பதிவு செய்ய தனியாக படிவம் ஒன்றை நிரப்பி மியூச்சுவல் பண்டு நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். இந்த சிக்கலை குறைத்து, வர்த்தக மதுரை செயலியில் இணைய வழியாக இரண்டு நிமிடங்களில் கே.ஒய்.சி. பதிவை நிறைவு செய்யலாம். இந்த முறை செபியின் விதிமுறைக்கு உட்பட்டது.
  • முன்னர், மியூச்சுவல் பண்டு முதலீட்டை துவங்க ஒரு வார காலம் ஆகும். ஆனால், தற்போது இந்த செயலியின் வாயிலாக அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
  • வெவ்வேறு வகையான நிறுவனங்கள் மற்றும் பண்டுகளில் முதலீடு செய்தாலும் ஒரே செயலியில் உங்களது முதலீட்டு நிலவரங்களை எப்போது வேண்டுமானாலும்(Single Account for Multiple Funds) காணலாம்.
  • வங்கியில் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், வர்த்தக மதுரை செயலி மூலம் லிக்விட் பண்டுகளில் உங்கள் தேவைக்கேற்றாற் போல் பணத்தை பரிமாற்றம் செய்து கணிசமான வட்டி வருவாயை பெறலாம். முதலீடு செய்வதும், உங்கள் முதலீட்டில் உள்ள பணத்தை எடுப்பதும் மிகவும் எளிமையான ஒன்று.
  • நிதி சம்மந்தமான 10க்கும் மேற்பட்ட கணிப்பான்கள் இந்த செயலியில் உள்ளன. (Dream Home Planning, Dream Car Plan, Future Expenses, Children Education, Retirement Savings, Marriage Fund, Family Protection, Tour / Vacation Plan, Crorepati, SIP and EMI Calculator)
  •  உங்கள் முதலீடு சார்ந்த மின்னணு ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க இ-லாக்கர்(E-Locker) வசதி உண்டு. நீங்கள் முதலீடு செய்திருக்கும் தற்போதைய மதிப்பை உடனடியாக அறிந்து கொண்டு, பி.டி.எப்.(Download Investment Holding Reports) முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • சந்தையில் உள்ள புதிய தகவல்கள் மற்றும் செய்திகளை(Mutual Fund related Information) வர்த்தக மதுரை செயலியின் மூலமே படித்து தெரிந்து கொள்ளலாம். மியூச்சுவல் பண்டுகளில் கவனிக்க கூடிய முக்கிய திட்டங்களும் உங்களுக்கு பரிந்துரைக்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள்:
  • கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கப்பெறும் வர்த்தக மதுரை ( VARTHAGA MADURAI – MY DREAM PORTFOLIO ) செயலி பாதுகாப்பான நிதி செயலியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் செய்யப்படும் அனைத்து பரிமாற்றங்களும் செபியின் (SEBI – AMFI) அனுமதியுடன் இயங்கப்பட்டு வருகிறது.
  • மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கும், பயனாளர்களின் தேவைக்குமான பாலமாக இந்த செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரஸ்பர நிதிகளில் கிடைக்க கூடிய செயலிகள் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் மாறுபடும். உதாரணமாக நீங்கள் ஐந்து வெவ்வேறு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், ஐந்து செயலிகள் தேவைப்படும். ஆனால், இங்கே வர்த்தக மதுரை செயலி மூலம் நீங்கள் முதலீடு செய்த ஒவ்வொரு திட்டங்கள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களின் முதலீட்டு நிலவரங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி உண்டு.
  • உள்ளீடு செய்யப்படும் ஒவ்வொரு தரவுகளிலும்(Filled Information) கவனமாக பதிவு செய்வது அவசியம். உங்கள் பான்(PAN) எண்ணை கொண்டு தான் ஒவ்வொரு தகவலும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. நாமினியை பதிவு செய்வது, வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். இருப்பினும் தவறு ஏதேனும் ஏற்பட்டால், இதனை பின்னாளில் திருத்துவதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய கணக்கை துவங்குவதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து வருபவர்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

Varthaga Madurai Mutual Funds App – How to use Guide

நினைவில் கொள்ளுங்கள்: 

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் முன்னர், உங்களுக்கான நிதி இலக்குகளை திட்டமிட்டு பின்பு முதலீடு செய்வது சிறந்தது. மியூச்சுவல் பண்டுகளில் குறைந்த ரிஸ்க் முதல் அதிக ரிஸ்க் வரை உள்ள திட்டங்கள் ஏராளம். எனவே சரியான புரிதலை ஏற்படுத்தி கொண்டு முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.

செயலி மற்றும் மியூச்சுவல் பண்ட் சார்ந்த உங்களுக்கான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால், பதிவு செய்ய…

https://varthagamadurai.com/contact/

அல்லது

+91 9500 438 549 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com