Tag Archives: mutual funds

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

Understanding about Stress Test Methodology – Mutual Funds Investments

பொதுவாக, மருத்துவத் துறையில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) எனும் உடற்பயிற்சி அழுத்த சோதனை என்பது நமது உடல் செயல்பாடுகளின் போது, நமது இதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனை அளவிட உதவுகிறது. உதாரணமாக ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், பிற உடலியக்கம் சார்ந்த வேலைகளை செய்தல் அல்லது ட்ரெட் மில்(TMT) பரிசோதனை செய்யும் போது இதயத்தின் நிலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் அறியலாம். இந்த டெஸ்ட் முறை ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு மற்றும் பிற இதயம் சார்ந்த பிரச்சனைகளை அறிய உதவுகிறது. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவரும் நமக்கு இதய நிலைக்கான சிகிச்சைகளை வழங்குவார்.

இதுவே முதலீட்டில் காணும் போது, ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் உள்ள சொத்துக்களில் காணப்படும் பணப்புழக்கத்தை(Liquidity) மதிப்பிடுவதற்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் உதவுகிறது. முக்கியமாக பொருளாதார மந்தநிலையின் போது அல்லது பங்குச்சந்தை அதிகமாக சரியும் காலங்களில் இந்த முறை பயன்படுகிறது. சொல்லப்பட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் வெளியேறுவதற்கான காலத்தை இது குறிக்கிறது. 

பொதுவாக சந்தை சரியும் காலங்கள், கொரோனா பெருந்தொற்று காலங்களில் முதலீட்டாளர்கள் அச்சத்தில் அல்லது தேவைக்காக அதிக பணத்தை ஒரு குறிப்பிட்ட திட்டத்திலிருந்து எடுக்கும் போது, அத்திட்டத்தில் பணப்புழக்கம்(போதுமானதாக) எவ்வாறு உள்ளது, பெரும்பாலானோர் எளிதாக தங்களது பணத்தை பெற முடிகிறதா, இதனை பண்டு மேலாளர் எவ்வாறு கையாள்கிறார், அவ்வாறு பணம் வெளியேறும் சூழ்நிலையில் அத்திட்டம் மேற்கொண்டு எந்தவித பெரிய சிக்கலும் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளதா என்பதனை அறிய இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பயன்படுகிறது.

இது போன்ற செயல்முறை பொதுவாக, ‘வருமுன் காப்பது நலம்’ என்ற சிந்தனையை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையை தான் தற்போது பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும்(SEBI), அதனை சார்ந்த ஆம்ப்பையும்(AMFI) இணைந்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்பது ஒன்றும் புதிய முறையல்ல. இது பொதுவாக நிதித்துறையில், குறிப்பாக வங்கிகளில் அதன் திறனை மதிப்பிட செயல்படுத்தப்படும். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோர் ஏதேனும் காரணத்தால் ஒரே காலத்தில் அதிக பணத்தை வெளியே எடுக்கும் போது, வங்கி திவாலாகாமல் செயல்படுத்தக் கூடிய நிலைகளை அல்லது வழிமுறைகளை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் பெறலாம்.

மியூச்சுவல் பண்டை பொறுத்தவரை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) கடன் பத்திரத் திட்டங்களுக்கு பல வருடங்களாக இருந்து வருகிறது கவனிக்கத்தக்கது. இதனை தான் நாம் பெரும்பாலும் Interest Rate Risk, Credit Rate Risk மற்றும் Liquidity Risk ஆகிய காரணிகளால் காண்கிறோம். உதாரணமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் நடந்த நிகழ்வை நாம் சொல்லலாம்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிறுவனம் திவாலாகாமல் தவிர்க்க, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தால் அதன் விளைவுகளை களைய, பங்குச்சந்தை ஒரே வாரத்தில் அதிக புள்ளிகள் சரிவை கண்டால் சமாளிக்க, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தல் என பொருளாதாரத்தில் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பகுப்பாய்வு தீர்வை அளிக்கும். 

உதாரணமாக வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் எதிர்பாராவிதமாக இறக்க நேரிட்டால், அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த இழப்பை எவ்வாறு சரி செய்வது, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சேர்த்து வைத்திருந்த பணத்தை முழுவதும் சிகிச்சைக்கு செலவழிக்காமல் இருக்க என்ன வழிகள் என நமது தனிநபர் நிதித்திட்டமிடலிலும் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் நிகழ்வை நாம் காணலாம்.

தற்போது செபி-ஆம்பையால்(SEBI-AMFI) சொல்லப்பட்ட விஷயம், ‘மியூச்சுவல் பண்டில் காணப்படும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Mid & Small Cap Funds) திட்டங்களில் ஏதேனும் காரணத்தால் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது முதலீட்டு பணத்தை கணிசமாக திரும்ப பெறுகையில், அத்திட்டத்தின் பணப்புழக்கம் எவ்வாறு இருக்கும், மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தால் அத்திட்டத்தை மேற்கொண்டு நடத்த இயலுமா’ என்பதனை அறிய ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

அதாவது கடந்த பிப்ரவரி மாதத் தரவுகளின் அடிப்படையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட ஏற்கனவே ஆம்ப்பை கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த சோதனையை தொடரவும், அதன் முடிவுகளை பொதுவெளியில் வெளியிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட மிட் அல்லது ஸ்மால் கேப் திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில்(AUM Portfolio) 25 சதவீதம் வரை பணம் வெளியே செல்ல எவ்வளவு நாட்கள் எடுக்கும், இதனைப் போல 50% வரை பணம் வெளியே செல்ல அதற்கு எடுக்கக்கூடிய காலம் எவ்வளவு என்பதனை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறை மூலம் செயல்படுத்தி அதன் முடிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். 

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மிட் கேப் திட்டத்திற்கு 50 சதவீதம் வரை பணம் வெளியேறுவதற்கு 27 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவே 25% வரை வெளியேறுவதற்கு 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மிட் கேப் பண்ட் பிரிவில் உள்ள மற்றொரு பண்டுக்கு இந்த வெளியேறும் நாட்கள் மாறுபடலாம். ஆக, விற்பனை ஏற்பட்டால் அவர்கள் எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்கிறார்கள் அல்லது பணப்புழக்கம் எவ்வாறு உள்ளது என்பதனை இந்த பரிசோதனை சொல்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னது போல ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனும் அழுத்த சோதனை, பொருளாதார அவசர காலங்களிலும், சந்தை அதிகமாக சரியும் நிலைகளில் மட்டுமே என கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. அதற்காக இப்போது சந்தை சரியப்போகிறதா என கேட்க வேண்டாம். ஒரு வேளை நடந்தால் என்ன செய்வது என்பதற்கான பயிற்சி நிகழ்வு தான் இது. இதனால் மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல உங்களது நிதி இலக்கை சார்ந்து முதலீட்டை நீண்டகாலத்தில் மேற்கொள்ளுதல் நலம்.

செபியும், ஆம்ப்பையும் ஏன் திடீரென்று தற்போது இந்த நிகழ்வை நடத்த சொல்கிறது ?

சிறு முதலீட்டாளர்களின் நலனை(முதலீடு) பாதுகாப்பதற்காக தான்.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான சந்தை அதிக ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதுவும் வரலாற்றில் காணாத ஏற்றமும், அதே வேளையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் குறைந்த வருவாய் வளர்ச்சியும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் நான்கு கோடிக்கும் குறைவான டீமேட் கணக்குகள் இருந்த நிலையில், இன்று சுமார் 14 கோடி டீமேட் கணக்குகள் மொத்தமாக உள்ளது. 

கடந்த இரண்டு முதல் மூன்று வருடமாக, இந்தியாவில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், பெரு நிறுவனங்கள்(Large Cap) அளித்த முதலீட்டு வருவாயை காட்டிலும், மிகவும் அதிகமாக கொடுத்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு புதிதாக வரும் டீமேட் கணக்கு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், கடந்த ஒரு வருட, இரண்டு வருட(Past Performance) முதலீட்டு வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டு இது போன்ற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக சந்தையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் பண்டுகள் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. அவை எந்தளவு ஏற்றம் கண்டிருக்கிறதோ, அதே போன்று இறக்கத்தையும் சந்திக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற நிகழ்வு லார்ஜ் கேப் பங்குகள் அல்லது பண்டு திட்டங்களில் நடப்பதில்லை. இதன் காரணமாகவே செபியும் முதலீட்டாளர்களை எச்சரிக்கும் வண்ணம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவை பங்கு சார்ந்த திட்டங்களில் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், குறிப்பிட்ட ஸ்மால் கேப் திட்டங்களில் புதிய முதலீடு பெறுவதை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 

பங்குச்சந்தையில் பொதுவாக மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவில் பெரும்பாலான நிறுவனப் பங்குகளில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதாவது வாங்கிய பங்குகளை அவ்வளவு எளிதாக விற்க முடியாது. இதனால் தான் பெரும்பாலான ஸ்மால் கேப் பங்குகளின் விலை ஒரு வாரமாக அல்லது ஒரு மாதமாக ஏற்றத்தை மட்டுமே கண்டிருந்தாலும், விற்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதே வேளையில் இந்த சிக்கல் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டு திட்டங்களில் பெரும்பாலும் நடப்பதில்லை. காரணம், பண்ட் மேலாளரின் அணுகுமுறை தான். அவர் பெரும்பாலும் பணப்புழக்கம் உள்ள பங்குகளை தான் வாங்குவார். முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறும் வகையில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை வடிவமைப்பதும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அவசியம்.

கடந்த பிப்ரவரி மாத ஆம்ப்பை(AMFI) முதலீட்டு தரவு அறிக்கையின் படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில்(Growth / Equity Oriented Schemes) சுமார் 12,00,77,704 கோடி ரூபாய் முதலீடாக வந்துள்ளது. இவற்றில் மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு மட்டும் 3,23,80,735 கோடி ரூபாய். சொல்லப்பட்ட மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP) முதலீடு 19,187 கோடி ரூபாய். மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் தனிநபர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மட்டும் 60.30 சதவீதமாகும்.

முதலீட்டாளர்களை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர காலத்தில் ஹைபிரிட்(Hybrid) மற்றும் லார்ஜ் கேப் திட்டங்களிலும், நீண்ட காலத்தில் அஸெட் அலோகேஷன், மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் எஸ்.ஐ.பி(SIP) மற்றும் எஸ்.டி.பி.(STP) முறையில் முதலீடு செய்வது சிறந்தது. இங்கே நீண்டகாலம் என்பது குறைந்தபட்சம் 20-25 ஆண்டுகள் அல்லது உங்களது நீண்டகால நிதி இலக்கு. குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் முடிந்தளவு துறை சார்ந்த அல்லது தீமாட்டிக்(Thematic) பண்டு திட்டங்களை தவிர்ப்பது நல்லது. 

ஸ்ட்ரெஸ் டெஸ்ட் அறிக்கைகளை காண…

Disclosure of Stress Test & Liquidity Analysis  in respect of Mid Cap & Small Cap Funds

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

         

2024ம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

2024ம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

Top 5 Funds for you to invest in 2024 – Mutual Fund Investments

ஆசியாவின் மிகப் பழமையான பங்குச்சந்தையான மும்பை பங்குச்சந்தை(Bombay Stock Exchange – BSE) 70,000 புள்ளிகளை இன்று(11-12-2023) எட்டியது. மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த 1979ம் ஆண்டு வாக்கில், ‘100’ என்ற அடிப்படை புள்ளிகளை கொண்டு வர்த்தகமாக துவங்கியது. ஜூலை 2023 மாத நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையின் சந்தை மூலதன மதிப்பு 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் 302 லட்சம் கோடி).

கடந்த 2006ம் ஆண்டில் சென்செக்ஸ் தனது 10,000 புள்ளிகளையும், 2007ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 20,000 புள்ளிகள் என்ற இலக்கையும், 2017ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 30,000 என்ற புள்ளிகளையும் கடந்தது. அடுத்த ஆறு வருடங்களில் இரு மடங்காக மாறிய இந்த குறியீடு தற்போது 70,000 புள்ளிகள் என்ற நிலையையும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னொரு காலத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு தேவையான முதலீடு, பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று உள்ளூர் நிறுவன முதலீடுகள் மட்டுமே அளப்பரியது. குறிப்பாக பரஸ்பர நிதிகள் என்றழைக்கப்படும் மியூச்சுவல் பண்ட் வாயிலாக இந்திய பங்குச்சந்தைக்கு வந்த முதலீடுகள் லட்சம் கோடிகளில்.

செபி(SEBI) ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் கடந்த 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆம்பி / ஆம்ஃபை(AMFI – Association of Mutual Funds in India) என்ற லாப நோக்கமில்லா நிறுவனத்தால் தான் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் வரையறைகளும், அதன் சொத்து மேலாண்மை நிறுவனங்களும்(Asset Management Companies) நிர்வகிக்கப்படுகிறது. 

தற்போது உள்நாட்டில் 40க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள்(AMC) பரஸ்பர நிதித்திட்டங்களின் வாயிலாக முதலீடுகளை பெறுகிறது. இந்த முதலீடுகள் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் துறை, இன்னபிற பிரிவுகளிலும் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. சமீபத்திய ஆம்ஃபை தரவின் படி, இந்திய மியூச்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 49.04 லட்சம் கோடி ரூபாய் (நவம்பர், 2023). மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கியவர்களின் எண்ணிக்கை மட்டும் 16.18 கோடி (Folios). இவற்றில் சிறு முதலீட்டாளர்களின் சார்பாக துவங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 12.92 கோடி.

பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்து கண்காணிக்க நேரமில்லை என்பவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) செய்யப்படும் முதலீடு உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு துணை புரிய கால அளவுகளை(Goal Period) ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்கு லிக்விட் மற்றும் கடன் பண்டுகள்(Liquid and Debt Mutual Funds), நடுத்தர கால தேவைகளுக்கு ஹைபிரிட் மற்றும் மல்டி அஸெட் பண்டுகள்(Hybrid and Multi Asset), நீண்ட காலத்திற்கு பங்கு சார்ந்த பண்டுகள்(Equity oriented) என பிரித்து முதலீடு செய்யலாம்.

அஸெட் அலோகேஷன் முறையில் பிரித்து முதலீடு செய்யும் போது சந்தை ஏற்ற-இறக்கத்தை பற்றிய கவலையில்லை. தங்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் நமது முதலீட்டை பெரிதாக பாதிக்காது. அது போன்ற கலவையுடன் உள்ள ஐந்து பண்டுகள் உங்களுக்காக. கடந்த காலங்களில் இந்த பண்டுகள் அளித்த வருவாய், பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் ரிஸ்க் தன்மை ஆகியவை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

  • ICICI Prudential Nifty50 Index Fund
  • Parag Parikh Flexi Cap Fund
  • Mirae Asset Tax Saver
  • SBI Gold Fund
  • HDFC Balanced Advantage Fund

Best - Top 5 Funds to invest in 2024

படத்தில் குறிப்பிடப்பட்ட கடந்த கால வருவாய், எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் இவை பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்கும். சொல்லப்பட்ட பண்டுகள் அனைத்தும் பணப்புழக்கம்(Liquidity), முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification & Asset Allocation), வரி சேமிப்பு, உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்பு(Global Equity exposure) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மேலே உள்ள பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்(MF Distributor) முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

How is the Inflation and Interest rate playing in the Real Economy ? 

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட உலகளவிலான ஊரடங்கிற்கு பின்பு, உலக பொருளாதாரம் இந்த சுழற்சி முறையில்(Life Cycle) தான் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்க, அதனை அப்படியே பின்பற்றி வருகிறது உலக பொருளாதாரமும். கூடுதலாக உக்ரைன்-ரஷ்ய போர் மற்றும் சீன-தைவான் எல்லை பதற்றமும் அடங்கும். 

கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு(Economic Stimulus) அன்றைய நிலையை களைய பெரிதும் உதவியது. இருப்பினும் அதன் காரணமாக பணவீக்க விகிதமும் கடந்த சில காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதன் விளைவு தேவை-உற்பத்திக்குமான இடைவெளியில் தான் உள்ளது. இந்த இடைவெளியே பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு எடுத்து செல்லும். 

உலக பங்குச்சந்தைகளும், அரசு கடன் பத்திர சந்தைகளும் வரவிருக்கும் காலத்தில் ஆட்டம்(High Volatility) காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் நவீன பொருளாதாரத்தில் இது ஒரு சுழற்சி முறையே(Life Cycle). பணவீக்கம் உயர்ந்தால் அதனை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியின் வேலை தான். அதிகரித்து வரும் பொருட்களின் சந்தை விலையை மட்டுப்படுத்த, போடப்படுகிற கடிவாளம் தான் இந்த வட்டி விகித உயர்வு. 

வட்டி விகித உயர்வால் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி குறைந்து சந்தையில் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இதன் தாக்கம் தொழில் நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், பங்கு விலையும் சரியும்(அனைத்து நிறுவங்களுக்கும் பொருந்தாது). கடனில்லா நிறுவனங்களுக்கு வருவாய் குறைவு ஒரு பிரச்சனையில்லை, ஆனால் கடனை அதிகமாக கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு தான் இந்த சிக்கலே !

வங்கி வட்டி விகித உயர்வு, டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டை மேற்கொள்பவருக்கு வேண்டுமானால் வாய்ப்பாக அமையலாம். ஆனால் வங்கிகளில் கடன் வாங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தான் செலுத்த வேண்டிய வட்டி செலவு அதிகரித்து விடும். சொல்லப்போனால், டெபாசிட்தாரரருக்கும் இந்த வட்டி உயர்வு நீண்டகாலத்தில் பயன் தராது. 

பணவீக்கத்தை கட்டுப்படுத்திய பிறகு வங்கிகளின் வட்டி வருவாய் விகிதத்தையும் மத்திய வங்கி குறைத்து விடுமே. இதனை தான் நாம் தொழிலாளர்களின் பி.எப்.(Provident Fund), அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி வைப்பு நிதிகளில் காணலாம். பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த காலங்களில் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் அதிகமாகவும், மாறாக பணவீக்கம் குறையும் போது, சேமிப்புக்கான வட்டி விகிதமும் வெகுவாக குறைக்கப்படும். இதனை நாம் பெரும்பாலும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதற்கு பிறகான காலங்களில்(Economic Recession & Growth) காணலாம். 

இது ஒருபுறம் இருக்க, கடந்த காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாய், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடு என்று சொல்லப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வருடத்தின் பணவீக்க விகிதம் 7 சதவீதம் என எடுத்து கொண்டால், சேமிப்புக்கான வட்டி  விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். இதுவே வங்கி சேமிப்புக்கணக்குக்கான வட்டி விகிதத்தை சொல்லவே வேண்டாம்.  அதே வேளையில், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து காணப்படும். 

 பொதுவாக மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது, பெரும்பாலான வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதத்தை உடனே அதிகரித்து விடுவதுண்டு. மாறாக, நமது சேமிப்புக்கான வட்டி பெரும்பாலும் பணவீக்கத்திற்கு குறைவாக இருக்கும். இது போக கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியது இருந்தால், முடிவில் நிகர இழப்பு தான் !

எனவே வட்டி விகித உயர்வு காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய மற்றும் நீண்ட காலத்தில் குறைந்த வரி விகிதத்தில் அதிக வருவாயை ஏற்படுத்தும் முதலீட்டை கண்டறிவது அவசியம். அது போன்ற முதலீட்டு வாய்ப்புகள் தான் பரஸ்பர நிதிகளும்(Mutual Funds), பங்குச்சந்தைகளும். பங்குச்சந்தைக்கும், பரஸ்பர நிதிக்குமான ரிஸ்க் தன்மை என்பது வெவ்வேறு. சரியான நிதி இலக்கை ஏற்படுத்தி  விட்டு, அதற்கான முதலீட்டை துவக்கினால் போதுமானது. நீண்டகாலத்தில் உங்களது முதலீடு உங்களுக்காக உழைக்க தயாராகும்…!

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

India’s First Silver ETF Fund to invest – Investment opportunity 2022

பொதுவாக தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் பங்களிப்பு உற்பத்தி சார்ந்த துறையில் அதிகமாக உள்ளது. தங்கம் அணிகலன்களாக வலம் வந்தால், வெள்ளி தொழிற்துறைக்கு தேவையான முக்கிய மூலப்பொருளாக அமைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருவது பல நூற்றாண்டுகளை கடந்து வந்துள்ளது. வெள்ளியின் பங்களிப்பு தொழிற்துறையில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பங்கு சந்தைகள் சரியும். இதனை சரிக்கட்டும் ஆயுதமாக தங்கமும், வெள்ளியும் உதவும். நிதி சொத்துக்கள்(Financial Assets) வரிசையில் ஏற்கனவே தங்கம் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெள்ளி முதலீட்டிலும் இது சாத்தியப்பட்டுள்ளது.

நடைமுறையில் தங்கம் – அரசு பத்திரமாகவும், சந்தையில் இ.டி.எப். வடிவிலும் மற்றும் பரஸ்பர நிதியின் ஒரு திட்டமாகவும்(SGB, Gold ETF, Gold Fund) கிடைக்கப்பெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வெள்ளி இ.டி.எப். முதலீடு சார்ந்த விதிமுறைகளை செபி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளி மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத முதலீடு இருக்க வேண்டுமென்றும், முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் முதலீடு 99.9 சதவீதம் தூய வெள்ளியாக வாங்குவதற்கு பயன்பட வேண்டும் என விதிமுறை சொல்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தாலும், மேலும் இரண்டு நிறுவனங்கள்(Aditya Birla Sun life, Nippon India Mutual Funds) வெள்ளி சார்ந்த இ.டி.எப். திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.

புதிய பண்டு வகையாக(NFO) வரும் ஐ.சி.ஐ.சி.ஐ. சில்வர் இ.டி.எப். திட்டம் ஜனவரி 5 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பதிவுக்கு உள்ளது. பிறகு இதனை நாம் வெளிச்சந்தையிலும் வாங்கி கொள்ளலாம். உள்நாட்டு விலையில் உள்ள வெள்ளியின் செயல்திறனுக்கு ஏற்ப, Silver ETF விலையும் மாறுபடும்.

வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு இது புதிய மற்றும் எளிமையான வாய்ப்பாக காணப்படுகிறது. சில்வர் ETF மூலம் தர தூய்மை, பாதுகாப்பு மற்றும் விலை ஆகியவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ.100 (NFO) மட்டுமே.

இனி, வெள்ளியை நாம் பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு திட்டங்கள் வாயிலாகவும் வாங்கி கொள்ளலாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

Best 5 Funds for you to invest in 2022 – Mutual Fund investments

கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் அபரிதமாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பு இருந்ததென்றால், அது 2020ம் ஆண்டின் கொரோனா கால துவக்கம் தான். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகளவில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார வீழ்ச்சி, பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை தந்தது எனலாம்.

மீண்டும் ஒரு பெருத்த வீழ்ச்சி உடனடியாக ஏற்படுமா என்றால், உலக சந்தையை கணிக்க பெரும் பணக்காரரர்களாலும், ஆகச்சிறந்த பொருளாதார வல்லுனர்களாலும் முடியாது. அதே வேளையில், அவர்களால் அடிப்படை பொருளாதார காரணிகளை புரிந்து எச்சரிக்கை செய்ய முடியும். அதிக ஏற்றமிருந்தால் இறக்கம் ஏற்படுவது உறுதி, இது போல இறக்கம் என ஒன்றிருந்தால் ஏற்றமும் சாத்தியமே.

பங்கு முதலீட்டில் பெரும்பாலோர் தோற்பது இரண்டு காரணிகளால் தான் – குறுகிய காலத்தில் பேராசை மற்றும் சந்தையை கணிக்கிறேன் என தவறான முதலீட்டு முடிவை எடுப்பது. எந்தவித சலனமும் இல்லாமல் நீண்ட காலத்தில் தொடர் முதலீடு செய்து வருபவர்களே எப்போதும் வெற்றி வாகை சூடுகின்றனர்.

‘ பங்கு முதலீட்டை என்னால் சரிவர கையாள முடியவில்லை’ என்பவர்கள் அதற்கென துறை சார்ந்த ஆலோசகர்களை வைத்து கொள்ளலாம். இதற்கான கட்டணமும் உண்டு. இலவசமாக உங்களுக்கு யாரும் பெரும் செல்வத்தை அளித்து விட முடியாது. எனவே ஆலோசனை பெறுபவர்களிடமும் கவனம் வேண்டும்.

சந்தையில் நேரடியாக முதலீடு செய்து கண்காணிக்க நேரமில்லை என்பவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) செய்யப்படும் முதலீடு உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு துணை புரிய கால அளவுகளை(Goal Period) ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்கு லிக்விட் மற்றும் கடன் பண்டுகள்(Liquid and Debt Mutual Funds), நடுத்தர கால தேவைகளுக்கு ஹைபிரிட் மற்றும் மல்டி அஸெட் பண்டுகள்(Hybrid and Multi Asset), நீண்ட காலத்திற்கு பங்கு சார்ந்த பண்டுகள்(Equity oriented) என பிரித்து முதலீடு செய்யலாம்.

அஸெட் அலோகேஷன் முறையில் பிரித்து முதலீடு செய்யும் போது சந்தை ஏற்ற-இறக்கத்தை பற்றிய கவலையில்லை. தங்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் நமது முதலீட்டை பெரிதாக பாதிக்காது. அது போன்ற கலவையுடன் உள்ள ஐந்து பண்டுகள் உங்களுக்காக. கடந்த காலங்களில் இந்த பண்டுகள் அளித்த வருவாய், பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் ரிஸ்க் தன்மை ஆகியவை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் குறிப்பிடப்பட்ட கடந்த கால வருவாய், எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் இவை பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்கும். சொல்லப்பட்ட பண்டுகள் அனைத்தும் பணப்புழக்கம்(Liquidity), முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification & Asset Allocation), வரி சேமிப்பு, உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்பு(Global Equity exposure) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

  • Aditya Birla Sun Life(ABSL) Gold Fund

  • HDFC Multi Asset Fund

  • PGIM India Midcap Opportunities Fund

  • Mirae Asset Tax Saver Fund

  • Parag Parikh(PPFAS) Flexi Cap Fund

Mutual funds 2022

வரக்கூடிய 2022ம் வருடம் நமக்கு எப்படியிருக்கும் என நம்மால் கணிக்க இயலாது. நாமும் ஒவ்வொரு வருடமும் புதிய இலக்குகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். 2022ம் ஆண்டுக்கான உங்கள் நிதி இலக்குகளுக்கு சொல்லப்பட்ட பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். பின்னாளில் இந்த முதலீட்டு பெருக்கம் உங்களை நிதி சார்ந்து பாதுகாக்கும்.

குறிப்பு: மேலே உள்ள பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர் முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொடர இனி பான் – ஆதார் இணைப்பு அவசியம்

மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொடர இனி பான் – ஆதார் இணைப்பு அவசியம் 

PAN – Aadhaar linking is mandatory for Mutual Fund Transactions – From 1st July

மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள், கடந்த சில வருடங்களாக பிரபலமடைந்து வருகிறது. மே மாத முடிவின் படி, சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகித்து வரும் இந்த துறை, முதலீட்டுக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.

செபியின்(Securities and Exchange Board of India) கீழ் வரும் மியூச்சுவல் பண்டு துறை, ஆம்பி(AMFI) துணை மூலம் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்கள் இருந்தாலும், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய கே.ஒய்.சி.(KYC) நடைமுறையை பதிவு செய்வது அவசியம்.

பரஸ்பர நிதிகளில் தங்கம், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், வெளிநாட்டு நிறுவன முதலீடு மற்றும் பங்குச்சந்தை என பல கலவை திட்டங்கள் உள்ளன. குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை, முதலீடு செய்யும் ஒருவருக்கு தேவையான தனித்துவமான திட்டங்களை வழங்கி வருகிறது. பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய தயக்கம் உள்ளவர்கள், மியூச்சுவல் பண்டுகளில் கிடைக்கப்பெறும் திட்டங்களை எளிமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மியூச்சுவல் பண்டில் ஏற்கனவே முதலீடு செய்து வருபவர்கள் மற்றும் புதிதாக கணக்கு துவங்க உள்ளவர்கள், தங்களது பான் – ஆதார்(PAN – Aadhaar) எண்ணை இணைப்பது அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

சொல்லப்பட்ட காலத்திற்குள் இணைப்பை ஏற்படுத்தாதவர்கள், தாங்கள் ஏற்கனவே முதலீடு செய்த பணத்தை வெளியே எடுக்கவும், புதிதாக முதலீட்டை தொடரவும் சிக்கல் ஏற்படலாம். பொதுவான முறையில், பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவும் வரும் ஜூன், 30ம் தேதியுடன் முடிவடைகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

இணைப்புக்கான காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாதவர்களின் பான் எண் செல்லாதவையாக சொல்லப்படும் எனவும், வருமான வரி தாக்கல் செய்யும் நிலையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் எந்தவொரு முதலீட்டை உள்நாட்டில் தொடர, பான் – ஆதார் எண் இணைப்பு அவசியமாகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு vs பங்குச்சந்தை – எங்கே முதலீடு செய்வது ?

மியூச்சுவல் பண்டு vs பங்குச்சந்தை – எங்கே முதலீடு செய்வது ?

Mutual Funds vs Stock (Share) Market – Where to invest ?

நம்மில் பலர் மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதியும், பங்குச்சந்தையும் ஒன்று என நினைத்து கொள்கின்றனர். அது போல, சொல்லப்பட்ட இரண்டுமே மிக அதிகமான ரிஸ்க் தன்மை கொண்டவை, அதனால் முதலீட்டுக்கு ஏற்றதல்ல என்ற தவறான எண்ணமும் உள்ளது.

உண்மையில் மியூச்சுவல் பண்டு(Mutual Funds) என்பது முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீடு பல்வேறு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும் முறையாகும். இதற்காக பல பிரிவுகளும், திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை நிர்வகிப்பது அஸெட் மேனேஜ்மென்ட்(Asset Management Company) என சொல்லப்படும் நிறுவனங்களாகும். பெரும்பாலும் இந்நிறுவனங்கள் வங்கி சேவையிலிருந்து வந்தவை ஆகும். ஆதலால் இந்த நிறுவனங்களின் நிதி சார்ந்த அனுபவமும் நீண்ட காலத்திற்கு உரியவை.

2020ம் ஆண்டு முடிவின் படி, அமெரிக்காவின் பரஸ்பர நிதிகளின் சொத்து மதிப்பு(AUM) சுமார் 24 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய பரஸ்பர நிதிகள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ. 33 லட்சம் கோடி (மே 31, 2021). உலகளவில் முதல் பத்து இடங்களில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் நிதி(Financial Assets) சார்ந்த சொத்துக்களை மட்டுமே சேர்த்து வைத்துள்ளனர். அதாவது அவர்களிடம் நிலம், தங்கம், வைரம் போன்றவையாக இல்லாமல் வங்கி முதலீடு, மியூச்சுவல் பண்டு, பங்குச்சந்தை மற்றும் இதர நிதி சார்ந்த முதலீடுகளாக இருக்கலாம்.

பரஸ்பர நிதி சேவையில் பல திட்டங்கள் உள்ளன. இவை பல இனங்கள் சேர்ந்த ஒரு கூட்டு கலவையாக உள்ளன. சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட் ஆகியவற்றுக்கு மாற்றாக, அரசு மற்றும் தனியார் பத்திரங்கள், அந்நிய நிறுவனத்தில் முதலீடு, பங்குச்சந்தை, குறிப்பிட்ட துறை சார்ந்த என முதலீடு திட்டங்கள் பல உள்ளன. இவை அனைத்தும் கிடைக்கப்பெறும் சந்தை தான் மியூச்சுவல் பண்டு சேவையாகும்.

தனிநபர் ஒருவர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் தேவையான நிதி இலக்குகளை நிர்ணயித்து பின்பு அதற்கேற்ற பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். இங்கே கால அளவு என்பது முக்கியம். நீங்கள் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்ய உள்ளீர்கள் மற்றும் எப்போது இந்த முதலீடு உங்களுக்கு தேவைப்படும் என்பதையும் அறிந்திருத்தல் அவசியம். மியூச்சுவல் பண்டு முதலீடு ரிஸ்க் தன்மை கொண்டது. ஆனால் அனைத்து மியூச்சுவல் பண்டு திட்டங்களும் ஒரே அளவிலான ரிஸ்க் தன்மை கொண்டவையல்ல. ஒரு இரவில் இருந்து 20 வருடங்கள்(Overnight to Long term Funds) வரை வெவ்வேறான முதலீட்டு திட்டங்களை பிரதிபலிப்பவை.

மிகவும் குறுகிய காலத்தில் குறைந்த ரிஸ்க் அளவு கொண்ட திட்டங்கள் உள்ளன. இவற்றில் கிடைக்கப்பெறும் வருவாய் அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்பை ஒட்டி அமையும். நடுத்தர காலத்தில் அரசின் கொள்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பொறுத்து திட்டங்களின் வருவாய் இருக்கும். நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு நல்ல வருவாயை ஈட்ட முடியும். முதலீட்டை பொறுத்தவரை பணவீக்கத்தை தாண்டிய வருவாயும், நிதி இலக்குகளை எட்டக்கூடிய தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதற்கு முன்னர், உங்களுக்கு தேவைப்படும் விஷயங்கள்:

  • நிதி இலக்கு (Goal Name)
  • இலக்கிற்கான தொகை (இன்றைய  மதிப்பில்) – Goal Value / Corpus
  • இலக்கிற்கான காலம் – Goal Period
  • எதிர்பார்க்கும் வருவாய் – Expected Returns %
  • முதலீட்டு வடிவம் – மாத முதலீடு அல்லது ஒரு முறை மட்டும் முதலீடு

மேலே சொன்ன விஷயங்களை  கருத்தில் கொண்டு, அதனை சார்ந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது அவசியமானது. புரிவது சற்று கடினமாக இருந்தால், தகுந்த முதலீட்டு ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுங்கள். முதலீட்டு ஆலோசகர் எனும் போது, உங்களின் நிதி இலக்குகளில் அக்கறை கொண்டு, அதற்காக கட்டணம் பெற்று சரியான தரவுகளை அளிக்கும் நபர்களை கண்டறியுங்கள். ஏஜெண்ட்களிடம் மாட்டி கொள்ள வேண்டாம். அவர்களின் கமிஷன் தொகைக்காக உங்களுக்கு சம்மந்தமில்லாத முதலீட்டு திட்டங்களை பரிந்துரைக்கலாம். முடிவில் நஷ்டம் உங்களுக்கு மட்டுமே. இந்த தவறான அணுகுமுறையால் தான், இன்று நம் நாட்டில் பெரும்பாலோர் முறையான காப்பீட்டு திட்டத்தை பெற இயலவில்லை. அது முதலீட்டு திட்டங்களிலும் நடக்க வேண்டாம்.

பங்குச்சந்தை(Share Market) என்பது ஒரு தொழிலை போல. ரிஸ்க் என்பது இவற்றில் எப்போதும் அதிகம் தான். பங்குச்சந்தை மூலம் வெகு விரைவில் நான் கோடீஸ்வரராக போகிறேன் என இங்கு யாரும் வர வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விட்டால், பிறகு யாரையும் நம்ப மாட்டீர்கள். பங்குச்சந்தை முதலீடு(Equity Investing) என்பது பலதரப்பட்ட முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீடு, ஒரு நிறுவனத்திற்கு அளிக்கப்படும். பின்பு அதனை கொண்டு அந்த நிறுவனம் தொழில் செய்யும். லாப, நட்டத்திற்கு முதலீட்டாளர்கள் தான் பொறுப்பு. பங்குச்சந்தையை நிர்வகிக்க ஜாம்பவான் செபி(SEBI) உள்ளது. சந்தையில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் ஒழுங்குமுறைப்படுத்தவது செபியின் வேலை. செபி தான் பரஸ்பர நிதி என சொல்லப்படும் மியூச்சுவல் பண்டு சேவைக்கும் தலைமை.

பங்குச்சந்தை என நினைத்து கொண்டு நம்மில் பலர் சந்தையை விட்டு, மோசடி பேர்வழிகளிடம்(Ponzi Schemes) பணத்தை இழந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையை பொறுத்தவரை ஒழுங்குமுறை ஆணையம், தரகர்கள், பதிவாளர்கள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் இருக்கும். இவை அனைத்தும் முதலீட்டாளர்களின் நலன் கருதி நிர்வாக சேவை செய்வதற்கு. பங்குச்சந்தையில் உங்களுக்கு பணம் பண்ண யாரும் உதவ மாட்டார்கள், அப்படி எதுவும் இங்கே கிடையாது. பங்குச்சந்தையை பற்றிய கல்வியை அளிக்க இங்கே எண்ணற்ற நிறுவனங்களும், புத்தகங்களும் உள்ளன. முறையாக கற்று கொண்டு, நீங்களாகவே களம் இறங்கினால் தான் உண்டு. பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி கொண்டு, உங்கள் கையை சுட்டு கொள்ள வேண்டாம்.

பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம், உங்கள் பணத்தை கொண்டு. உங்களிடம் உபரியாக உள்ள பணத்தை மட்டுமே, சந்தையில் முதலீடு செய்து பணம் பண்ணுங்கள். நஷ்டத்தை தவிர்க்க இயலாது, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் – பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், இவற்றில் சூதாட்டம் வேண்டாம். முதலீடு செய்யும் முன்னர், அதற்கான முறையான கல்வியை கற்று கொண்டு பின்னர் ஆயுதமாகுங்கள். உண்மையில் பங்குச்சந்தை பணம் பண்ணும் சூத்திரம், அனைவருக்கும் சாத்தியமே – முறையான கல்வியும், நீண்ட காலத்தில் பொறுமையும் இருந்தால்.

மியூச்சுவல் பண்டுக்கு பதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா ?

என்னிடம் பல நண்பர்கள் கேட்கும் கேள்வி இது. மியூச்சுவல் பண்டை விட, பங்குச்சந்தையில் அதிகம் வருமானம் கிடைக்குமாமே, மியூச்சுவல் பண்டும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்கிறார்கள் – அப்புறம் எதற்கு நான் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும் ?

இந்த கேள்வி தான் பெரும்பாலானவர்களிடம் !

முதலில் இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். மியூச்சுவல் பண்ட் சேவையில் பல கலவை திட்டங்கள் உள்ளன. பங்குச்சந்தை என்பது ஒரு நேரடி தொழில் போல. பரஸ்பர நிதி சேவைக்கு பெரிய கற்றல் தேவையில்லை. ஆனால், பங்குச்சந்தை அப்படியல்ல.

நீங்கள் இலக்கிற்காக முதலீடு செய்ய நினைத்தால், மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும் – ஒரு மாரத்தான்(Marathon) நடை போல…

உங்களுக்கென நிதி இலக்கு, இலக்கிற்கான காலம் உள்ளது. நீங்கள் அதனை தவிர்க்க இயலாது. உங்களது குழந்தை மேற்படிப்பு, திருமணம், ஓய்வு காலம் ஆகியவை குறிப்பிட்ட கால அளவை கொண்டவை. அதனால் முதலீட்டில் ஒரு ஒழுக்கம் தேவைப்படும். தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்து வரும் போது, உதாரணமாக 15 வருடங்களுக்கு பிறகு உங்கள் குழந்தையின் திருமண செலவை ஏற்படுத்தலாம் அல்லது உங்கள் ஓய்வு காலமாக இருக்கலாம்.

நான், ஏன் எனது நிதி இலக்கிற்கான தொகையை பங்குச்சந்தை மூலம் சம்பாதிக்க முடியாதா ?

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். பங்குச்சந்தை என்பதே உங்களுக்கான செலவத்தை ஏற்படுத்துவது தான். ஆனால், உங்களால் நிதி இலக்கை சார்ந்து முதலீடு செய்ய சாத்தியமா என்றால் – அது தான் இல்லை. மியூச்சுவல் பண்டு பல கட்டமைப்புகளை கொண்டது. அங்கே உங்கள் பணம்,அனுபவமிக்க பண்டு மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுவாக அவர்களுக்கு தெரியும், அடுத்து என்ன சந்தையில் நடக்க போகிறது என்று. அவர்களிடம் இருப்பதோ பல லட்சம் கோடிகள் முதலீடு. ஆனால், நமக்கு தாமதமான செய்திகள் மூலம் – அதுவும் ஊடகத்தின் வாயிலாக.

பங்குச்சந்தையில் நமக்கான ஒழுக்கத்தை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். தவறினால், பணம் இழக்க நேரிடும். யூனிடெக், சுஸ்லான், ஜே.பி. அஸோஸியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் போன்ற பங்குகளின் விலையெல்லாம் முன்னர் எப்படி இருந்தது என்பது நமக்கு தெரியும். ஆனால், இன்று பங்குகளின் விலை மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் நிர்வாகமே தள்ளாட்டத்தில். மேலே சொல்லப்பட்ட பங்குகள் எல்லாம் ஒரு காலத்தில் பெரு நிறுவன பங்குகள். அவற்றின் விலையும் உச்சத்தில் தான் இருந்தன. முடிவில் ஒரு குமிழி(Bubble) போல உடைந்து விட்டது. பல்வேறு நிர்வாக காரணங்களால் தான் அவை நடைபெற்றுள்ளது. இது போன்ற நிறுவனங்களில் நாம் முதலீடு செய்து விட்டு, நமது இலக்கிற்கான காலத்திற்கு அருகில் வரும் போது எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டு விட்டால் !

மியூச்சுவல் பண்டை போல நீங்கள் சந்தையில் மாதாமாதம் ஒரே பங்கில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. பங்கு உச்சத்தில் இருந்தால் நீங்கள் விற்க நேரிடும் அல்லது நிறுவனத்தை பற்றிய செய்திகள் எதிர்மறையாக இருந்தால், நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள் ? உங்களுக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் நூறு சதவீதம் உண்மையாக இருக்குமா ? நீங்கள் வாங்கிய பங்கு ஒவ்வொரு வாரமும் இறக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் தொடர்ச்சியாக வாங்கும் மனநிலையை கொண்டிருப்பீர்களா அல்லது அதற்கான காரணத்தை அறிய முற்படுவீர்களா ? பொதுவாக பங்குச்சந்தையில், நீங்கள் முடிவெடுப்பதற்குள் அந்த நிகழ்வு முடிந்து விடும்.

மியூச்சுவல் பண்டில், சந்தை ஏற்ற இறக்கத்தை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நமது இலக்கு தொடர்ச்சியாக முதலீடு செய்வது தான். அதனால் தான் சொல்கிறேன், பரஸ்பர நிதிகள் எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை உங்கள் நிதி இலக்கிற்கு பயன்படுத்துங்கள். பங்குச்சந்தையை உங்கள் செல்வ வளத்திற்கு(Wealth Creation) பயன்படுத்துங்கள் என்று. நீங்கள் எந்த வேலை செய்தாலும், உங்களுக்கென்று பகுதி நேர தொழில் உள்ளது – அது தான் பங்குச்சந்தை. பங்குச்சந்தையில் முதலீடு செய்து செலவத்தை பெருக்க உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள். அவர்களின் நீண்ட கால இலக்கிற்கு மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

Mutual Funds Investment declined in the month of June 2020

மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை விறு விறுவென ஏற்றம் பெற்று வருகிறது. பெரும்பாலான பங்குகள் மார்ச் கடைசி வாரம் அதலபாதாளத்திற்கு சென்ற நிலையில், தற்போது விலையேற்றத்தில் சுமார் 30-80 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளன.

பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், பங்குச்சந்தை குறியீடுகள் எதிர்பாராத விதமாக ஏற்றமடைந்துள்ளன. பொதுவாக இது போன்ற நிகழ்வு பங்குச்சந்தையில் இயல்பான ஒன்று தான். பின்னொரு நாளில் வேறொரு காரணத்திற்காக இறங்குவதும் நடக்கும். அதே வேளையில் நீண்டகாலத்தில் முதலீடு செய்து பொறுமையாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை பெரும் செல்வத்தை அளிக்கும் வாய்ப்பாக அமையும்.

இந்திய பரஸ்பர நிதி துறையில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்(Asset Management Companies) முதலீட்டு சேவையை செய்து வருகின்றன. செபி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பரஸ்பர நிதி துறையை ஆம்பய்(AMFI) அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. பரஸ்பர நிதி முதலீடுகள் சார்ந்த தகவல்களை ஆம்பய் அமைப்பு ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாத முடிவின் படி, இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு(AUM) 25.5 லட்சம் கோடி ரூபாயாகும். ஜூன் மாதத்தில் பரஸ்பர முதலீடுகள் 95 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் மூன்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதலீடு ரூ.195 கோடி. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் பெறப்பட்ட முதலீடு ரூ. 240 கோடி என சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது 95 சதவீத குறைவாகும்.

ரிஸ்க் குறைந்த லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) இருந்து பெரும்பாலான முதலீடுகள் கடந்த மாதத்தில் வெளியேறியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 44,220 கோடி ரூபாய். கடன் பத்திரம் மற்றும் வருவாய் சார்ந்த பண்டுகளில் ஈர்க்கப்பட்ட ஜூன் மாத முதலீடு ரூ. 2,862 கோடி. கலவை திட்டம் என அழைக்கப்படும் ஹைபிரிட்(Hybrid) திட்டத்தில் 356 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது.

ஓய்வு கால நிதி மற்றும் குழுந்தைகளுக்கான திட்டங்களில் பெறப்பட்ட தொகை ரூ. 108 கோடி ஆகும். வரி சலுகை சார்ந்த திட்டங்கள் வாயிலாக கடந்த மாதத்தில் முதலீடுகள்  ஈர்க்கப்படவில்லை. இந்த திட்டத்திலிருந்து 15 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. தங்கம் சார்ந்த ஈ.டி.எப்.(Gold ETF) திட்டத்தின் மூலம் 494 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் இரண்டிலும் முதலீட்டு வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது வேலையிழப்பு, குறைவான நாட்களுக்கு மட்டுமே பெறப்பட்ட ஊதியம், மந்தநிலையை காரணம் காட்டி முதலீடு செய்யாமல் இருந்ததாகும். மேலும் பங்குச்சந்தை மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் உச்சத்தில் இருப்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர்.

சந்தை இறக்கத்தில் அதிகமாக பெறப்பட்ட முதலீடு, தற்போது எச்சரிக்கை உணர்வாக பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை எனலாம். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில், நீண்டகால வருவாய் வளர்ச்சியை பெறலாம். சந்தை ஏற்ற-இறக்கத்தை கணிப்பதை விட, நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை திரட்டுவது அவசியமாகும்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பரஸ்பர நிதிகளில் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க கூடாது ?

பரஸ்பர நிதிகளில் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க கூடாது ?

Why you should not choose a Dividend Plan in Mutual Funds ?

பரஸ்பர நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் பண்டுகளில் இரு வகையான பிரிவுகள் உள்ளன. ஒன்று வளர்ச்சி(Growth Plan) சார்ந்த பிரிவு, மற்றொன்று டிவிடெண்ட் என சொல்லப்படும் ஈவுத்தொகை(Dividend Plan) சார்ந்த பிரிவாகும். இவற்றில் நான் எதனை தேர்ந்தெடுக்க வேண்டுமென கேட்டால், பொதுவாக வளர்ச்சி சார்ந்த பிரிவு தான். இது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியும் கூட.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

என் கையில் இப்போது ஒரு லட்சம் ரூபாய் உள்ளது. நான் அதனை உங்களுக்கு தர விரும்புகிறேன். நீங்கள் அதனை இப்போது வாங்கி கொள்வீர்களா அல்லது ஒரு மாதத்திற்கு பிறகு அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு வாங்கி கொள்வீர்களா ?

 

இது தான் பணத்தின் கால மதிப்பு (Time Value of Money). உங்களுக்கு மற்றொரு வாய்ப்பை நான் வழங்க விரும்புகிறேன். அதாவது நீங்கள் என்னிடமிருந்து பெறக்கூடிய ஒரு லட்சம் ரூபாயை, ஒரு வருடத்தின் முடிவில் பெற்றால் நான் 12 சதவீத வட்டியுடன் (ஆண்டுக்கு) தர தயாராக உள்ளேன். இப்போது உங்கள் முடிவு என்ன ?

 

இல்லையெனில், நீங்கள் இன்றே அந்த ஒரு லட்சம் ரூபாயை பெற்று கொண்டு, நாளை உங்களால் ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பை கண்டறிய முடியுமா ? நான் சொன்ன 12 சதவீத வட்டி வருவாயை காட்டிலும் அற்புதமான திட்டத்தை ஏதும் நீங்கள் கண்டறிந்து உள்ளீர்களா ? இது தான் முதலீட்டு வாய்ப்பிற்கான தேடல். 

 

பொதுவாக பணக்காரர்கள் (ஊகத்தில் இருப்பவர்கள் அல்ல) பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி சேமிப்புகள் மற்றும் வீட்டு மனையை காட்டிலும் தங்கள் தொழில் மீது தான் ஆர்வம் காட்டுவர். உண்மையில் அவர்கள் வணிகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் தொழிலின் ரிஸ்க் தன்மையை உணர்ந்து நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெற தயாராக உள்ளனர்.

 

பணக்காரர்கள் அதிக வளர்ச்சி இல்லாத எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் தொழிலில் தோல்வி அடைந்தாலும் கூட, நல்ல முதலீட்டு வாய்ப்பை தேடுகின்றனர். எனவே அவர்கள் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளில் சிறிய அளவில் முதலீடு செய்வர். அவர்களின் முக்கிய பங்கு, தொழில் முதலீட்டில் தான். பணக்காரர்கள் தங்கள் முதலீட்டின் மூலம் தொடர்ச்சியான பணப்புழக்கத்தை உருவாக்க முற்படுகிறார்கள். அதனால் தான் அவர்களால் வேலைவாய்ப்புகளும், தொழில் விருத்தியும் ஏற்படுகிறது. இது தான் பணத்தின் கால மதிப்பு.

 

பொதுவாக வளர்ச்சி பங்குகளும்(Growth Stocks), பரஸ்பர நிதிகள் வழங்கும் வளர்ச்சி திட்டங்களும்(Growth Plan – Mutual Funds) உங்கள் மூலதனத்தை  பெருக்க கூடியவை. அதே நேரத்தில், டிவிடெண்ட் அளிக்கும் நிறுவனங்களும், டிவிடெண்ட் திட்டங்களும் நல்ல ஈவுத்தொகையை கொடுக்கும். ஆனால், பெருவாரியான வளர்ச்சியை பெறாது. சந்தையில் நல்ல நிறுவன பங்குகளின் விலை எப்போதும் அதிகமாக தான் இருக்கும். டிவிடெண்ட் அளிக்கும் நிறுவனங்களின் பங்கு விலை நீண்டகாலத்தில் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது. காரணம் என்னவென்றால், அளிக்கப்பட்ட டிவிடெண்ட் தொகை எந்த வளர்ச்சியையும் பெறுவதில்லை.

 

உங்கள் வீடு குறிப்பிடத்தக்க வாடகை வருமானத்தை தராமல் போகலாம், ஆனால் அவற்றின் முதலீடு அருமையான விலையை கொண்டிருக்கலாம். அதனால் தான் நகர்ப்புறங்களில் நெரிசலான இடங்களில் வீட்டு மனையின் விலை அதிகமாக உள்ளது. காரணம், அவை நல்ல தொடர் வருவாயை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பால்.

 

நீங்கள் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகாது எனில், அவை கூட்டு வட்டியின் மதிப்பை இழக்கின்றன. நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஒரு லட்சம் ரூபாய் (தேவையில்லாத நிலையில்) எந்தவொரு வளர்ச்சியையும் பெறுவதில்லை. ஆனால் அதனை அருகிலுள்ள வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ டெபாசிட் செய்திருந்தால், அது மற்றொருவருக்கு வங்கியின் மூலம் கடனாக கொடுக்கப்படும். உங்களுக்கான வருவாய் வளர்ச்சியும் கிடைக்கும். 

 

டிவிடெண்ட் பங்குகளும், பரஸ்பர நிதிகளின் டிவிடெண்ட் திட்டங்களும் பொதுவாக ஓய்வு பெறும் நபர்களுக்கு பயன்படும். ஏனென்றால் அவர்களுக்கு வளர்ச்சியை விட, தொடர் வருவாய் அவசியமாகும். இது போல தொடர் வருவாய் பெற விரும்புபவர்கள் வேண்டுமானால், இது போன்ற திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அதே வேளையில் எந்த பங்கும், டிவிடெண்ட் திட்டமும் ஒரே  அளவிலான டிவிடெண்ட் தொகையை தொடர்ச்சியாக அளிக்கும் என சொல்ல முடியாது. 

 

இளைய தலைமுறையினரும், ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களும் வளர்ச்சி பெறக்கூடிய நிறுவனங்களையும், வளர்ச்சி பிரிவு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களையும் தேர்ந்தெடுக்கும் போது, அபரிதமான முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக, முதலீடு என்பது வளர வேண்டும். இது போன்ற டிவிடெண்ட் திட்டங்களால் அவை கட்டுப்படுத்தப்பட கூடாது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

வங்கி சேமிப்புக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பயன்படுத்துவது எப்படி ?

வங்கி சேமிப்புக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பயன்படுத்துவது எப்படி ?

How to use  Mutual Funds Schemes instead of Bank Savings or Deposits ?

கடந்த மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டது. நடப்பில் வங்கிகளுக்கான ரெப்போ விகிதம்(Repo Rate) 5.15 சதவீதமாக உள்ளது. இந்த வருடத்தில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் ஐந்து முறை குறைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின் (Bonds) தேவை அதிகரித்து அவற்றின் வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதே போல வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, கடன் பத்திரங்களின் தேவை குறைந்து அதனுடைய வட்டி குறையும். எனவே இந்த சூழ்நிலையை ஒருவர் கருத்தில் கொண்டு முதலீடு செய்தால், குறிப்பிடத்தக்க வட்டி வருவாயை பெறலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எஸ்.பி.ஐ. (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக குறைத்துள்ளது. வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் ஒரு வருடத்திற்கு 7 சதவீதத்திற்கு குறைவாகவும், ஐந்து வருட காலத்திற்கு 9 சதவீதத்திற்கு கீழாகவும் உள்ளது.

இது போன்ற காலத்தில், இதற்கு மாற்றாக பரஸ்பர நிதி (Mutual Funds) திட்டங்களை பயன்படுத்தலாம். பண பரிவர்த்தனைகளுக்கு ஒருவர் வங்கி சேமிப்பு கணக்கை சார்ந்திருந்தாலும், சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு வங்கிகளை காட்டிலும் சற்று கூடுதலான வட்டி வருவாயை கொடுக்கும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

லிக்விட் பண்டுகள் (Liquid Funds):

வங்கி சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் 4 சதவீதத்திற்கு குறைவான வட்டி விகிதத்திற்கு பதிலாக பரஸ்பர நிதிகளின் லிக்விட் பண்டுகளை(Liquid Funds) பயன்படுத்தலாம். இவற்றில் பணப்புழக்கமும் நன்றாக உள்ளது, ரிஸ்க் அதிகமில்லா முதலீடாக கருதப்படுகிறது. மேலும் வங்கி சேமிப்பு கணக்கை காட்டிலும், அதாவது ஆண்டுக்கு 6-7 சதவீத வருவாயை கொடுக்கும். லிக்விட் பண்டுகளை மிகவும் குறுகிய காலத்திற்கு(Alternative for Bank Savings Rate) பயன்படுத்தி கொள்ளலாம்.

எச்.டி.எப்.சி.(HDFC), நிப்பான் இந்தியா(Nippon India), ஆதித்ய பிர்லா, ஆக்ஸிஸ் போன்ற பரஸ்பர நிதி நிறுவனங்களில் லிக்விட் பண்டுகளின் முதலீடு எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த பண்டுகளில் முதலீடு செய்த தொகையை வெறும் இரண்டு நிமிடத்தில் நமது வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யும் வசதியும் உள்ளது. சில லிக்விட் திட்டத்தில் இலவச ஏ.டி.எம்.(ATM) கார்டு சேவையும், வரம்பற்ற பரிவர்த்தனைகளையும்(Unlimited Withdrawal Transaction) கிடைக்கப்பெறுகிறது.

கடன் சார்ந்த பண்டுகள் (Debt Funds):

ஒரு வருடம் முதல் ஐந்து வருட காலத்திற்கான முதலீட்டுக்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திர திட்டங்களை(Debt Funds) தேர்ந்தெடுக்கலாம். இவற்றில் தற்போது 7-10 சதவீதம் வரை வட்டி வருவாய் அமைகிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக முதலீடு செய்யும் பட்சத்தில், வரி சலுகையும்(Indexation Benefit) உள்ளது. இது போன்ற வசதி வங்கி டெபாசிட்களில் கிடைப்பதில்லை. கால அளவுகளை கொண்ட கடன் பத்திர திட்டங்களை(Duration Funds), நமது இலக்குகளுக்கு தகுந்தாற் போல் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

கலப்பின பண்டுகள் (Hybrid Funds):

ஐந்து வருட கால இலக்குகளுக்கு ஒருவர் பரஸ்பர நிதிகளின் கலப்பு முதலீட்டு திட்டத்தினை (Hybrid Funds) தேர்ந்தெடுக்கலாம். இவற்றின் சராசரி வருமானம் 10-12 சதவீதமாக இருக்கும். கலப்பு முதலீடு என்பது பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும். இதன் மூலம் ஒருவர் தனது பணத்தை முழுமையாக பங்குகளில் முதலீடு செய்யாமல், கடன் பத்திரங்களின் வாய்ப்பையும் பயன்படுத்தலாம்.

முதலீட்டு பரவலாக்க பண்டுகள் (Asset Allocation Funds):

நீண்டகால இலக்குகள் மற்றும் தேவைகளை கொண்டுள்ளோர் பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் பங்குகளில் முதலீடு செய்யும் போது, நல்ல வருமானத்தை ஈட்டலாம். குறுகிய காலத்தில் பங்குகள் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு இருப்பதால் பங்குகளை குறுகிய கால தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது. அதே வேளையில், பன்முக முதலீட்டையும் ஒருவர் பரிசீலிக்கலாம். பன்முக முதலீட்டின்(Asset Allocation) வாயிலாக ஒருவர் பங்கு, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழில்களில் முதலீட்டை பரவலாக்கலாம்.

வரி சேமிப்பு பண்டுகள் (Tax Savings – ELSS Mutual Funds):

வரி சேமிப்புக்கு மட்டுமே வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பை சார்ந்தவர்கள், ஒரு முறை பரஸ்பர நிதி வழங்கும் வரி சேமிப்பு பண்டுகளை(Tax Savings Mutual Funds) தேர்ந்தெடுக்கலாம். குறைந்த கால லாக்-இன்(Lock-in) வசதியை கொண்ட இது போன்ற பண்டுகளில் நீண்ட காலத்தில் வருமானமும் சற்று அதிகம்.

வங்கிகள் வழங்கும் சேமிப்பு  மற்றும் முதலீட்டு திட்டங்களை நாம் அறவே ஒதுக்க முடியாது. வங்கிகளை போல நிலையான அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம்(Fixed Returns) பரஸ்பர நிதிகளில் சொல்லப்படுவதில்லை. இருப்பினும், வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் சூழ்நிலையில் பரஸ்பர நிதி திட்டங்களை திறமையாக பயன்படுத்துவது  சாதகமான விஷயமே. எதிர்காலத்தில் வங்கி கணக்குக்கு மாற்றாக பரஸ்பர நிதிகளும் தினசரி பரிவர்த்தனைக்கான சேவையை வழங்க முன்வரலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக  மதுரை 

www.varthagamadurai.com