ஊக வணிகத்தில் நட்டமடையும் இந்திய பங்கு வர்த்தகர்கள் – செபியின் 2022ம் ஆண்டின் சிறப்பு அறிக்கை

ஊக வணிகத்தில் நட்டமடையும் இந்திய பங்கு வர்த்தகர்கள் – செபியின் 2022ம் ஆண்டின் சிறப்பு அறிக்கை 

Individual Traders engaged in Equity F&O Segment – SEBI Analysis Report 

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(Securities and Exchange Board of India) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மத்திய பொருளாதார மற்றும் கொள்கை பகுப்பாய்வு துறையின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஊக வணிக(Futures and Options) பிரிவில் 2022ம் நிதியாண்டில் தனிநபர் வர்த்தகர்கள் அடைந்த லாப-நட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியிருந்தது.

2022ம் நிதியாண்டில் சுமார் 45 லட்சம் தனிநபர் வர்த்தகர்கள் இந்திய பங்குச்சந்தை ஊக வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது 2019ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் 500 சதவீத வளர்ச்சி என்றும், 30 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 36 சதவீதமாக இருந்துள்ளது.

வர்த்தகத்தில் ஈடுபட்ட தனிநபர் பிரிவில் 80 சதவீதத்திற்கு மேல் ஆண்கள் என்றும், ஊக வணிகத்தில் ஈடுபடும் 10 நபர்களில் 9 பேர் நட்டமடைவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதாவது ஊக வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களில் 89 சதவீதம் பேர் தங்களது முதலீட்டை இழந்துள்ளனர். இவர்களது முதலீட்டு இழப்பு சராசரியாக 50,000 ரூபாய் வரை இருந்துள்ளது. 

2022ம் நிதியாண்டில் ஊக வணிகத்தில் லாபமீட்டியவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக இருந்த போதிலும், அவர்களது அதிகபட்ச சராசரி லாபம் ரூ.1.5 லட்சம் வரை இருந்துள்ளது. ஊக வணிகத்தில் Index Options பிரிவில் 89 சதவீதம் பேரும், Index Futures பிரிவில் 11 சதவீதம் பேரும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வயது பெரும்பாலும் 20-30 வயது வரம்பில் இருந்துள்ளது.

அதே வேளையில் Index Options பிரிவில் ஈடுபட்டிருந்த 89 சதவீதம் பேரில் 82 சதவீதம் பேர் தங்களது முதலீட்டை இழந்துள்ளனர். இந்த பிரிவில் வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டை ஒப்பிடும் போது 2022ம் ஆண்டு எட்டு மடங்கு உயர்ந்துள்ளது. Index Futures பிரிவில் ஈடுபட்டிருந்தவர்களில் 74 சதவீதம் பேரும்(சராசரி இழப்பு: ரூ. 1 லட்சம்), Stock Futures பிரிவில் 67 சதவீதம் பேரும்(சராசரி இழப்பு: ரூ. 2.1 லட்சம்) முதலீட்டில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த பிரிவில் லாபம் ஈட்டியவர்களின் சராசரி தொகை ரூ. 2.4 லட்சமாகும். இவர்களும் முதல் 5 சதவீத நிலையில் உள்ள Active Traders ஆவர்.

ஊக வணிகத்தில் லாபம் ஈட்டியவர்களில் பெரும்பாலானோர் தங்களது லாபத்தில் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணங்களுக்காக(Transaction cost) செலவளித்துள்ளனர். சொல்லப்பட்ட தனிநபர் வர்த்தகர்களில் இந்து கூட்டு குடும்பம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் அடங்குவர். ஊக வணிகத்தில் 2022ம் ஆண்டில் ஈடுபட்ட 45 லட்சம் வர்த்தகர்களில் பெருநகரங்களை சாராதோர்(Except Tier I & Tier II) எண்ணிக்கை மட்டும் 81 சதவீதமாக உள்ளது. திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் நாட்டின் முன்னிலையில் உள்ள முதல் 10 பங்கு தரகர்களிடம்(Brokers) இருந்து என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.