All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

Regulatory authorities in India

‘தாலாட்டு கேட்குதம்மா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரபுவும், கவுண்டமணியும் இரவு நேரத்தில் ஒரே சைக்கிளில்(டபுள்ஸ் தான்!) வந்து கொண்டிருப்பார்கள். அப்போது எதிரே வரும் போலீஸ்காரரை கண்ட பிரபு, கவுண்டமணி அவர்களை சைக்கிளிலிருந்து இறங்கச் சொல்வார். பின்பு வரும் போலீஸ்காரர் அந்த சைக்கிளை நிறுத்தி, ‘என்னய்யா சைக்கிள்ல லைட் இல்லாம வர்ற’ என கேட்க அதற்கு பிரபு சிரித்துக் கொண்டே, ‘நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வரேன், பின்னாடி ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாரு’ என காமெடியாக சொல்வார். இதனை நம்பி, அந்த போலீஸ்காரரும் பின்னாடி வரும் கவுண்டமணியை விசாரிப்பது போல நகைச்சுவை உரையாடல் நிகழும்.

இப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பாலான போன்சி – ஏமாற்று பேர்வழிகளின் மோசடித் திட்டங்களில்(Ponzi Scam) மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, இருக்கும் சொத்துக்களை விற்றுப் போட்டு விட்டு, மாதாமாதம் பணம் வரும் என பேராசையில் இருந்து விடுகின்றனர். மோசடி பேர்வழிகளும் ஆயிரம் கோடிகளில் பணத்தை சுருட்டி விட்டு, ஊரை விட்டு ஓடுகையில் நம் மக்கள் இது சார்ந்த புகாருக்கு அணுகும் முதல் நிலை, ‘காவல் நிலையம்’ தான். இது போன்ற மோசடித் திட்டங்களை முன்னரே அறிந்து, எச்சரிக்கையாக இருக்கும் சிலரும் இது சார்ந்த புகாரை எங்கு சொல்ல வேண்டுமென்ற விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். 

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இன்று, ஒவ்வொரு துறைக்கும் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார்களுக்கு தானியங்கி மூலம் வந்து விட்டது. இருப்பினும் இவர்களை கட்டுப்படுத்த, வரையறுக்க யாரவது ஒருவர் வேண்டுமல்லவா, அவர் தான் ஒழுங்குமுறை ஆணையம் எனும் பாதுகாப்பு வளையம்.

ஒழுங்குமுறை ஆணையம் என்றால் என்ன ?

பொதுவாக, ஒழுங்குமுறை என்பது விதிகள் மற்றும் போக்குகளின் தொகுப்பின் படி, ஒரு சிக்கலான அமைப்புகளின் மேலாண்மை ஆகும். உதாரணமாக பள்ளிகளில் நாம் காணும் ஆசிரியர்-மாணவர்களுக்கான ஒழுங்குமுறையை பள்ளி நிர்வாகம் அல்லது கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கும். அதனால் தான் நாம் பள்ளிகளில் கல்வியுடன் அடிப்படை ஒழுக்கத்தையும் கற்கிறோம். 

ஒழுங்குமுறை என்பது சமூக, அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரக் களங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவை அரசாங்கத்தால் அல்லது சில சட்டக் கட்டுப்பாடுகள், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படலாம். உதாரணமாக டிராபிக் சிக்னல்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட வரையறை, அடிப்படை உரிமைகள், உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவதற்கான சட்டங்கள்.

ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம். இந்த ஆணையம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது நிலை சார்ந்த உரிமம் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனில் மனித செயல்பாட்டின் சில பகுதிகளின் மீது தன்னாட்சி ஆதிக்கத்தை செலுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தை ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விதிகளின் படி அதிகாரம் பெற்ற தனிநபரோ வழங்கியிருக்கலாம். உதாரணமாக சந்தைகளில் நுகர்வோரை பாதுகாக்க சட்டம் , தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குமுறைப்படுத்த டிராய்(TRAI) என சொல்லலாம்.

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள்:    

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது உள்ளன. இவற்றில் முக்கியமாக கவனத்தில் உள்ளவை RBI, SEBI, IRDAI, PFRDA போன்றவை. இது போக சிலவற்றையும் நாம் இங்கு பார்ப்போம்.

  • RBI(Reserve Bank of India):

கடந்த 1935ம் வருடம் துவங்கப்பட்ட பாரத ரிசர்வ் வங்கி, 1949ம் ஆண்டு வாக்கில் தேசியமயமாக்கப்பட்டு நாட்டின் வங்கி, நிதி மற்றும் பணவியல் சார்ந்த கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாகவும், இந்தியாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி உள்ளது. 

இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல், ரூபாயின் கட்டுப்பாடு, வெளியீடு மற்றும் விநியோகத்தை பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். நாட்டின் முக்கிய ரூபாய் கட்டண முறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலையையும் இந்த மத்திய வங்கி ஏற்படுத்தி கொடுப்பது இதன் கடமையாகும்.

ஜனவரி 2024 தரவின் படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மட்டும் 623 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

  • SEBI(Securities and Exchange Board of India):

கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்தப்பட்ட செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் நாட்டில் உள்ள பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தையை(Securities & Commodity Market) கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக முதலீட்டாளர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், சந்தையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய வேலையை செய்கிறது.

பங்குச்சந்தையில் ஈடுபடும் தரகு நிறுவனங்களையும், அதன் தரகர்களையும் முறையாக பதிவு மற்றும் ஆய்வு செய்தல், சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்றுதல் ஆகிய முதலீட்டாளர் நலன் சார்ந்த பொறுப்பை செபி கொண்டுள்ளது.

இந்திய நிதிச்சந்தையில் சுமார் 20 உட்துறைகளை கொண்டு செபி தனது ஒழுங்குமுறை வேலைகளை செய்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி போலவே, செபியும் நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாக காணப்படுகிறது.

  • IRDAI (Insurance Regulatory and Development Authority of India)

கடந்த 1999ம் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. ஒழுங்குமுறை ஆணையம் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் காப்பீடு சார்ந்த தொழில்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துதல் இதன் வேலையாகும். 

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஐந்து முழு நேர மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக ஐ.ஆர்.டி.ஏ. ஆணையம் உள்ளது. இந்தியாவில் கடந்த 1818ம் ஆண்டு முதல் காப்பீடு சார்ந்த தொழில்கள் இருந்து வந்தாலும், இந்த ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு காப்பீட்டு கொள்கைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

பாலிசிதாரரின் நலனை பாதுகாத்தல், மின்னணு வடிவத்தில் பாலிசிதாரர் காப்பீட்டை பெற உதவும் பொறுப்பையும் ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது.

  • PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் ஓய்வூதியங்களின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பொறுப்பாக கொண்டுள்ளது. நாட்டின் முதியோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்வதும் இதன் வேலையாகும். 

இன்று நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் இல்லை(பழைய ஓய்வூதிய திட்டம் தவிர்த்து). இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைத்து இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய அனைவரும் தங்களது ஓய்வூதிய பலனை பெற, தேசிய பென்ஷன் திட்டம்(NPS – National Pension System) ஏற்படுத்தப்பட்டு, பி.எப்.ஆர்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  • EPFO (Employees’ Provident Fund Organisation):

கடந்த 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இ.பி.எப்.ஓ. ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் சார்ந்த ஓய்வூதிய திட்டங்களை பொறுப்பாக கொண்டு நிர்வகித்து வருகிறது.

இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தாய் அமைப்பாக மத்திய அறங்காவலர் குழு(Central Board of Trustees) உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952 சட்டம், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், 1976 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1971க்குப் பதிலாக) ஆகிய சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.

கட்டாய வருங்கால வைப்பு நிதி(Mandatory of Provident Fund), அடிப்படை ஓய்வூதிய திட்டங்கள், ஊனமுற்றோர் மற்றும் இறப்பு காப்பீடு, அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எளிதாக்குதல் ஆகிய வேலைகளை இ.பி.எப்.ஓ. ஆணையம் செய்து வருகிறது.

மேலே சொன்ன முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்கள் போக, பின்வரும் சில ஒழுங்குமுறை அமைப்புகளும் இந்தியாவில் பங்காற்றி வருகின்றன.

  • FSSAI (Food Safety and Standards Authority of India)
  • NASSCOM (National Association of Software and Service Companies)
  • TRAI (Telecom Regulatory Authority of India)
  • CERC (Central Electricity Regulatory Commission)
  • CDSCO (Central Drugs Standard Control Organisation)
  • FIEO (Federation of Indian Export Organisation)
  • AMFI (Association of Mutual Funds in India)
  • BIS (Bureau of Indian Standards)
  • BCCI (Board of Control for Cricket in India)
  • ASCI (Advertising Standards Council of India)
  • NHB (National Housing Bank)
  • CBFC (Central Board of Film Certification)
  • NABARD (National Bank for Agriculture and Rural Development)
  • ICC (Indian Chemical Council)
  • AERB (Atomic Energy Regulatory Board)
  • NHAI (National Highways Authority of India)
  • ICAI (The Institute of Chartered Accountants of India)

மற்றும் இன்னும் சில…

நாட்டில் ஏற்படும் முதலீடு சார்ந்த மோசடித் திட்டங்களை அரசாங்கத்தால் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது போன்ற மோசடிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்(Tier-II and Tier-III Cities) தான் நடைபெறுகிறது. மக்களின் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முனைதல் மற்றும் பேராசையே இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம். இருப்பினும், முதலீடு சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்கலாம்.

எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் நம் பணத்தை போடும் முன், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என அந்த நிறுவனமே சொன்னாலும், இந்த நிறுவனம் மற்றும் திட்டங்கள் எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகிறது என்பதனை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், பெரும்பாலான மோசடி நிறுவனங்கள், ‘நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்’ என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு மக்களை ஏமாற்றி விடுவார்கள். 

இன்று நாட்டில் உள்ள எந்தவொரு தொழிலும், முதலீட்டுத் திட்டங்களும் ஏதாவதொரு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வந்து தான் ஆக வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாகவும், அதன் சார்ந்த புகார்களை தெரிவிக்கவும் முனையலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

   

       

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

Can Govt. Employees participate in the Stock(Share) Market ? (CCS Rules, 1964)

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் டீமேட் கணக்கு துவங்கி, பங்குகளில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்யலாமா என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் கேள்வி. நமது வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் இது சார்ந்த சந்தேகத்தை கேட்டிருந்தனர். இது சார்ந்த விதிகளை பற்றி மத்திய சிவில் சேவைகள் (நடத்தை), 1964 – Central Civil Services(Conduct) Rules, 1964 ஆவணத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சிவில் சேவைகள்(நடத்தை), 1964 ஆவணத்தில் வரிசை எண்.21, விதி எண்.16ன் கீழ், முதலீடு, கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் பகுதியில் 35(1) மூலம் அரசு ஊழியர்கள் முதலீடு சார்ந்த விஷயங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி கூறப்பட்டுள்ளது.

“ 35(1) எந்தவொரு பங்கு, பங்கு சார்ந்த அல்லது மற்ற முதலீட்டில் எந்த ஒரு அரசு ஊழியரும் ஊகம்(Speculative) சார்ந்த வணிகத்தில் ஈடுபடக் கூடாது. இந்த துணை விதியில் உள்ள பங்கு மூலம் அவ்வப்போது செய்யப்படும் முதலீடுகளுக்கு இது பொருந்தாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில் எந்தவொரு அரசு ஊழியரும் பங்குகளிலோ அல்லது மற்ற முதலீடுகளிலோ ஊகம் சார்ந்த, அதாவது நாள் வர்த்தகம், ஊக வணிகம்(Speculative Trading & Derivatives) போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட முதலீட்டு திட்டங்களில் அவ்வப்போது முதலீடாக செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தரகர்(Stock Broker) அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் தான் அவர்களது முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஊகம் என்பது அடிக்கடி பங்குகள் அல்லது மற்ற முதலீடுகளை வாங்கி அடிக்கடி விற்பது என்பதாக கருதப்படுகிறது. 

“40(2) (i) எந்தவொரு அரசு ஊழியரும் அவருடைய குடும்பத்தில் உள்ள எந்தவொரு நபரையும் அவர் சார்பாகவோ அல்லது குடும்பத்தின் நலன் சார்பாகவோ ஊக வர்த்தகத்தில் ஈடுபட வைக்கக் கூடாது மற்றும் அனுமதிக்க கூடாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில், அரசு ஊழியர்கள் தங்கள் சார்பாகவோ அல்லது மற்றவரின் நலனுக்காகவோ, தங்களது குடும்ப நபர்களை பங்குச்சந்தையில் மற்றும் பிற முதலீட்டில் ஊக வணிகம்(Day Trading & Derivatives) செய்ய அனுமதிக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. 

ஐ.பி.ஓ(IPO – Initial Public Offering) போன்ற முதன்மை சந்தையில் அரசு ஊழியர்கள் ஈடுபடலாம் எனவும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்த ஐ.பி.ஓ. வெளியீட்டின் போது அவர்கள் முதலீட்டாளராக பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு பங்குகளின் விலையை நிர்ணயம் செய்வதற்கான முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனுமதியில்லை(Decision making process of Fixation of price) எனவும் சொல்லப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஐ.பி.ஓ. வெளியீட்டில் முதலீடு செய்த பின்பு, இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) கிடைத்த லாபத்தை பங்கு வெளியீட்டு நாளன்று எடுப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான அரசு வேலைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர்(Discharge of his official duties) எனவும், மக்களிடம் பெறப்பட்ட அரசு வரி வருவாய் மூலம் அவர்களுக்கான ஊதியம் செலுத்தப்படுவதால், இது போன்ற ஊக வணிகத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாதென விளக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச்சந்தையில் அரசு ஊழியர்கள் நீண்டகாலத்தில் முதலீடு செய்வதை தான் அரசு அறிவுறுத்துகிறது.

மேலும் வங்கிகளில் கடன் வாங்குதல், வங்கிகளில் டெபாசிட் செய்தல், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தல், மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுத்தல் போன்றவற்றிற்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளது.

Central Civil Services(Conduct) Rules, 1964 பற்றி அறிய…

Central Civil Services(Conduct) Rules, 1964

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

அதென்னங்க… ஸ்ட்ரெஸ் டெஸ்ட் – மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் கவனிக்க !

Understanding about Stress Test Methodology – Mutual Funds Investments

பொதுவாக, மருத்துவத் துறையில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) எனும் உடற்பயிற்சி அழுத்த சோதனை என்பது நமது உடல் செயல்பாடுகளின் போது, நமது இதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனை அளவிட உதவுகிறது. உதாரணமாக ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், பிற உடலியக்கம் சார்ந்த வேலைகளை செய்தல் அல்லது ட்ரெட் மில்(TMT) பரிசோதனை செய்யும் போது இதயத்தின் நிலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் அறியலாம். இந்த டெஸ்ட் முறை ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு மற்றும் பிற இதயம் சார்ந்த பிரச்சனைகளை அறிய உதவுகிறது. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவரும் நமக்கு இதய நிலைக்கான சிகிச்சைகளை வழங்குவார்.

இதுவே முதலீட்டில் காணும் போது, ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் உள்ள சொத்துக்களில் காணப்படும் பணப்புழக்கத்தை(Liquidity) மதிப்பிடுவதற்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் உதவுகிறது. முக்கியமாக பொருளாதார மந்தநிலையின் போது அல்லது பங்குச்சந்தை அதிகமாக சரியும் காலங்களில் இந்த முறை பயன்படுகிறது. சொல்லப்பட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் வெளியேறுவதற்கான காலத்தை இது குறிக்கிறது. 

பொதுவாக சந்தை சரியும் காலங்கள், கொரோனா பெருந்தொற்று காலங்களில் முதலீட்டாளர்கள் அச்சத்தில் அல்லது தேவைக்காக அதிக பணத்தை ஒரு குறிப்பிட்ட திட்டத்திலிருந்து எடுக்கும் போது, அத்திட்டத்தில் பணப்புழக்கம்(போதுமானதாக) எவ்வாறு உள்ளது, பெரும்பாலானோர் எளிதாக தங்களது பணத்தை பெற முடிகிறதா, இதனை பண்டு மேலாளர் எவ்வாறு கையாள்கிறார், அவ்வாறு பணம் வெளியேறும் சூழ்நிலையில் அத்திட்டம் மேற்கொண்டு எந்தவித பெரிய சிக்கலும் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளதா என்பதனை அறிய இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பயன்படுகிறது.

இது போன்ற செயல்முறை பொதுவாக, ‘வருமுன் காப்பது நலம்’ என்ற சிந்தனையை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையை தான் தற்போது பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும்(SEBI), அதனை சார்ந்த ஆம்ப்பையும்(AMFI) இணைந்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்பது ஒன்றும் புதிய முறையல்ல. இது பொதுவாக நிதித்துறையில், குறிப்பாக வங்கிகளில் அதன் திறனை மதிப்பிட செயல்படுத்தப்படும். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோர் ஏதேனும் காரணத்தால் ஒரே காலத்தில் அதிக பணத்தை வெளியே எடுக்கும் போது, வங்கி திவாலாகாமல் செயல்படுத்தக் கூடிய நிலைகளை அல்லது வழிமுறைகளை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மூலம் பெறலாம்.

மியூச்சுவல் பண்டை பொறுத்தவரை இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்(Stress Test) கடன் பத்திரத் திட்டங்களுக்கு பல வருடங்களாக இருந்து வருகிறது கவனிக்கத்தக்கது. இதனை தான் நாம் பெரும்பாலும் Interest Rate Risk, Credit Rate Risk மற்றும் Liquidity Risk ஆகிய காரணிகளால் காண்கிறோம். உதாரணமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் நடந்த நிகழ்வை நாம் சொல்லலாம்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிறுவனம் திவாலாகாமல் தவிர்க்க, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தால் அதன் விளைவுகளை களைய, பங்குச்சந்தை ஒரே வாரத்தில் அதிக புள்ளிகள் சரிவை கண்டால் சமாளிக்க, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தல் என பொருளாதாரத்தில் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பகுப்பாய்வு தீர்வை அளிக்கும். 

உதாரணமாக வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் எதிர்பாராவிதமாக இறக்க நேரிட்டால், அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த இழப்பை எவ்வாறு சரி செய்வது, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சேர்த்து வைத்திருந்த பணத்தை முழுவதும் சிகிச்சைக்கு செலவழிக்காமல் இருக்க என்ன வழிகள் என நமது தனிநபர் நிதித்திட்டமிடலிலும் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் நிகழ்வை நாம் காணலாம்.

தற்போது செபி-ஆம்பையால்(SEBI-AMFI) சொல்லப்பட்ட விஷயம், ‘மியூச்சுவல் பண்டில் காணப்படும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Mid & Small Cap Funds) திட்டங்களில் ஏதேனும் காரணத்தால் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது முதலீட்டு பணத்தை கணிசமாக திரும்ப பெறுகையில், அத்திட்டத்தின் பணப்புழக்கம் எவ்வாறு இருக்கும், மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தால் அத்திட்டத்தை மேற்கொண்டு நடத்த இயலுமா’ என்பதனை அறிய ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

அதாவது கடந்த பிப்ரவரி மாதத் தரவுகளின் அடிப்படையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட ஏற்கனவே ஆம்ப்பை கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த சோதனையை தொடரவும், அதன் முடிவுகளை பொதுவெளியில் வெளியிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட மிட் அல்லது ஸ்மால் கேப் திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில்(AUM Portfolio) 25 சதவீதம் வரை பணம் வெளியே செல்ல எவ்வளவு நாட்கள் எடுக்கும், இதனைப் போல 50% வரை பணம் வெளியே செல்ல அதற்கு எடுக்கக்கூடிய காலம் எவ்வளவு என்பதனை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முறை மூலம் செயல்படுத்தி அதன் முடிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். 

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மிட் கேப் திட்டத்திற்கு 50 சதவீதம் வரை பணம் வெளியேறுவதற்கு 27 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவே 25% வரை வெளியேறுவதற்கு 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மிட் கேப் பண்ட் பிரிவில் உள்ள மற்றொரு பண்டுக்கு இந்த வெளியேறும் நாட்கள் மாறுபடலாம். ஆக, விற்பனை ஏற்பட்டால் அவர்கள் எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்கிறார்கள் அல்லது பணப்புழக்கம் எவ்வாறு உள்ளது என்பதனை இந்த பரிசோதனை சொல்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னது போல ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனும் அழுத்த சோதனை, பொருளாதார அவசர காலங்களிலும், சந்தை அதிகமாக சரியும் நிலைகளில் மட்டுமே என கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. அதற்காக இப்போது சந்தை சரியப்போகிறதா என கேட்க வேண்டாம். ஒரு வேளை நடந்தால் என்ன செய்வது என்பதற்கான பயிற்சி நிகழ்வு தான் இது. இதனால் மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல உங்களது நிதி இலக்கை சார்ந்து முதலீட்டை நீண்டகாலத்தில் மேற்கொள்ளுதல் நலம்.

செபியும், ஆம்ப்பையும் ஏன் திடீரென்று தற்போது இந்த நிகழ்வை நடத்த சொல்கிறது ?

சிறு முதலீட்டாளர்களின் நலனை(முதலீடு) பாதுகாப்பதற்காக தான்.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான சந்தை அதிக ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதுவும் வரலாற்றில் காணாத ஏற்றமும், அதே வேளையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் குறைந்த வருவாய் வளர்ச்சியும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் நான்கு கோடிக்கும் குறைவான டீமேட் கணக்குகள் இருந்த நிலையில், இன்று சுமார் 14 கோடி டீமேட் கணக்குகள் மொத்தமாக உள்ளது. 

கடந்த இரண்டு முதல் மூன்று வருடமாக, இந்தியாவில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், பெரு நிறுவனங்கள்(Large Cap) அளித்த முதலீட்டு வருவாயை காட்டிலும், மிகவும் அதிகமாக கொடுத்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு புதிதாக வரும் டீமேட் கணக்கு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், கடந்த ஒரு வருட, இரண்டு வருட(Past Performance) முதலீட்டு வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டு இது போன்ற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக சந்தையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் பண்டுகள் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. அவை எந்தளவு ஏற்றம் கண்டிருக்கிறதோ, அதே போன்று இறக்கத்தையும் சந்திக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற நிகழ்வு லார்ஜ் கேப் பங்குகள் அல்லது பண்டு திட்டங்களில் நடப்பதில்லை. இதன் காரணமாகவே செபியும் முதலீட்டாளர்களை எச்சரிக்கும் வண்ணம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவை பங்கு சார்ந்த திட்டங்களில் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், குறிப்பிட்ட ஸ்மால் கேப் திட்டங்களில் புதிய முதலீடு பெறுவதை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 

பங்குச்சந்தையில் பொதுவாக மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவில் பெரும்பாலான நிறுவனப் பங்குகளில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதாவது வாங்கிய பங்குகளை அவ்வளவு எளிதாக விற்க முடியாது. இதனால் தான் பெரும்பாலான ஸ்மால் கேப் பங்குகளின் விலை ஒரு வாரமாக அல்லது ஒரு மாதமாக ஏற்றத்தை மட்டுமே கண்டிருந்தாலும், விற்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதே வேளையில் இந்த சிக்கல் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டு திட்டங்களில் பெரும்பாலும் நடப்பதில்லை. காரணம், பண்ட் மேலாளரின் அணுகுமுறை தான். அவர் பெரும்பாலும் பணப்புழக்கம் உள்ள பங்குகளை தான் வாங்குவார். முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறும் வகையில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை வடிவமைப்பதும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அவசியம்.

கடந்த பிப்ரவரி மாத ஆம்ப்பை(AMFI) முதலீட்டு தரவு அறிக்கையின் படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில்(Growth / Equity Oriented Schemes) சுமார் 12,00,77,704 கோடி ரூபாய் முதலீடாக வந்துள்ளது. இவற்றில் மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு மட்டும் 3,23,80,735 கோடி ரூபாய். சொல்லப்பட்ட மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP) முதலீடு 19,187 கோடி ரூபாய். மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் தனிநபர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மட்டும் 60.30 சதவீதமாகும்.

முதலீட்டாளர்களை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர காலத்தில் ஹைபிரிட்(Hybrid) மற்றும் லார்ஜ் கேப் திட்டங்களிலும், நீண்ட காலத்தில் அஸெட் அலோகேஷன், மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் எஸ்.ஐ.பி(SIP) மற்றும் எஸ்.டி.பி.(STP) முறையில் முதலீடு செய்வது சிறந்தது. இங்கே நீண்டகாலம் என்பது குறைந்தபட்சம் 20-25 ஆண்டுகள் அல்லது உங்களது நீண்டகால நிதி இலக்கு. குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் முடிந்தளவு துறை சார்ந்த அல்லது தீமாட்டிக்(Thematic) பண்டு திட்டங்களை தவிர்ப்பது நல்லது. 

ஸ்ட்ரெஸ் டெஸ்ட் அறிக்கைகளை காண…

Disclosure of Stress Test & Liquidity Analysis  in respect of Mid Cap & Small Cap Funds

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

         

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

Market Trading hours of the Major Stock exchanges around the World

இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டு சுமார் 148 வருடங்கள் முடிந்தாகி விட்டது. கடந்த 1875ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தை இன்று 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் சுமார் 366 லட்சம் கோடி – ஜனவரி 2024 தரவு) கொண்ட சந்தை மதிப்பாக உருவாகியுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

1992ம் ஆண்டு வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையின்(NSE) இன்றைய மதிப்பு 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 335 லட்சம் கோடி – டிசம்பர் 2023 தரவு). இச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 2,190. 

அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையை மதிப்பிடும் போது, ஒவ்வொரு 25 ஆண்டுகளில் இந்திய சந்தை நான்கு முறை கரடிப் பிடியில்(Bear Market) சிக்குவதாகவும், அமெரிக்க சந்தை போலவே இந்திய சந்தையிலும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கரடிச் சந்தையை முதலீட்டாளர்கள் சந்திப்பதாகவும் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிப்டி50 குறியீடு கடந்த 25 வருடங்களில் எட்டு முறை 20 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

2022-23ம் நிதியாண்டு தரவுப்படி உலகளவில் பங்குச்சந்தை பங்களிப்பு விகிதத்தை காணுகையில், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு(Trading & Delivery) செய்கின்றனர். இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(UK) 33 சதவீதமாகவும், சீனாவில் 13 சதவீதமாகவும், பிரேசிலில் 2 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் இது 3 சதவீத பங்களிப்பாக உள்ளது. அதே வேளையில் இந்தியாவில் குடும்பங்கள் வாரியாக காணும் போது, இது 17 சதவீதமாக இருந்துள்ளது. 

இந்தியாவில் பங்குச்சந்தையில் ஈடுபடும் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுவாக மற்றும் பரவலாக சொல்லப்படும் காரணி அதன் சந்தை வர்த்தக நேரம் தான். காலை ஒன்பது மணி முதல் மதியம் 03:30 மணி வரை. இந்த வேளையில் பெரும்பாலானோர் தங்களது நிறுவன வேலை அல்லது தொழிலில் ஈடுபட்டு கொண்டிருப்பர். இதுவே சந்தை பங்களிப்பு குறைவிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், நம்ம நாட்டு பக்கத்துல இருக்கிற சீனாவின் பங்களிப்பு எப்படி அதிகரித்தது, அதன் வர்த்தக நேரம் தான் என்ன ?

(See Table below)

Market Trading Hours - Global Equity Markets

பொதுவாக அமெரிக்காவில் நிறுவன முதலீட்டாளர்களின்(Institutional Investors) பங்களிப்பு, பங்குச்சந்தையில் அதிகமாக இருக்கும். வல்லரசாக மட்டுமில்லாமல் வளர்ந்த பங்குச்சந்தையாகவும் அமெரிக்க சந்தை உள்ளது. இதன் காரணமாகவே நேரடி முதலீட்டாளர்களின் பங்களிப்பும், PMS, Hedge Fund மற்றும் Index Fund வாயிலாக முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், அதன் மதிப்பும் அதிகம். இதுவே நம் நாட்டில் PMS மற்றும் Index Fund என்பது இன்னும் புது வரவாகவே இருக்கிறது. கடந்த சில வருடங்களாக தான் இந்திய சந்தையில் முதலீட்டாளர்களின் பங்களிப்பு(மியூச்சுவல் பண்டு மூலமாக) அதிகரித்து வருகிறது.

சீனாவை பொறுத்தவரை அந்நாட்டின் பங்குச்சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிதாக இணைப்பு இல்லை. சீனச் சந்தை, இந்திய சந்தையை காட்டிலும் அதிக மதிப்பை கொண்டிருந்தாலும் அங்கு பெரும்பாலும் அரசு கட்டுப்பாட்டில் தான் அவை இயங்கும். சந்தையும் உள்ளூர் முதலீட்டாளர்களை தான் அதிகமாக கொண்டிருக்கிறது. இது போல ஹாங்காங் சந்தையிலும் தொழில் வணிகர்கள் குறிப்பிடத்தக்க முதலீடு செய்திருந்தாலும் சீனச் சந்தை அமைப்பின் கீழ் தான் இயங்கி வருகிறது. 

சீன பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்குச்சந்தை பங்களிப்பு 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவே இந்தியாவில் பொருளாதாரத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுகிறது. சீனச் சந்தையில் பெரும்பாலும் அதன் அரசு கொள்கைகள் தான் ஆதிக்கம் செலுத்தும். இதுவே இந்தியாவில் சந்தை ஒதுக்கீடு பொறிமுறையில்(Market allocation mechanism) இயங்கும்.

பெரும்பான்மையான நாடுகளில் ஈர்க்கப்படும் முதலீடுகள் ETF(Exchange Traded Fund) அல்லது மியூச்சுவல் பண்டு வாயிலாக தான் வருகின்றன. ஆசியாவின் மிகப்பழமையான சந்தையாக இந்தியாவின் மும்பை பங்குச்சந்தை இருந்திருந்தாலும், இங்குள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, வேகமாக வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவே.   

இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பொதுவான காரணங்களாக நிதி சார்ந்த கல்வியறிவின்மை, பணப்பற்றாக்குறை, பாரம்பரிய முதலீடுகளை அதிகமாக சார்ந்திருப்பது(தங்கம், நிலம், வங்கி டெபாசிட்), பங்குச்சந்தையில் பொறுமையின்மை மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபமீட்ட எண்ணம், பாதுகாப்பான அணுகுமுறையை விரும்புதல் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த கடந்த கால அச்சம் ஆகியவை உள்ளது.

மேலே காணப்பட்ட வர்த்தக நேரப் பட்டியலின் முடிவில், உலகின் பெரும்பாலான சந்தைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பகலில் மட்டுமே இயங்குகிறது. ‘வாரம் இருமுறை சந்தைக்கு விடுமுறை’ என்பதனை பெரும்பாலான சந்தைகள் அமெரிக்காவின் நகலாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

      

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

Investor awareness Arena

கடந்த சில வாரங்களாக நமது வாசகர்களும், சில வாடிக்கையாளர்களும் (குறிப்பாக நெருங்கிய நண்பர்களும்) தாங்கள் ஏற்கனவே நீண்டகாலத்திற்கு முதலீடு செய்திருந்த பண்டுகளை சந்தையில் உள்ள மற்ற பண்டுகளுடன் ஒப்பிட்டு, அந்த பண்டு கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் வருவாயை அளித்துள்ளது. நாம் ஏற்கனவே செய்துள்ள முதலீட்டை, இந்த பண்டில் மாற்றலாமே என கேட்கிறார்கள்.   

  • பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் போது, குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும்பாலான பண்டுகள்(Mutual Funds) நிறைய வருவாயை கொடுக்கும். ஆனால், நீண்டகாலத்தில் இது சாத்தியமில்லை. 
  • ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பண்டுகள் ராஜநடை போடும். இதனை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தை பெற இயலாது.
  • பொதுவாக அதிக வருவாயை கொடுக்கும் பண்டுகள், பின்னொரு காலத்தில் சரிவை சந்திக்கும். எனவே எச்சரிக்கையுடன் நமது முதலீட்டு நோக்கம், நம் குழந்தைகளுக்கான மற்றும் சந்ததிக்கான செல்வத்தை சேர்க்க முயல வேண்டும் ! 
  • பண்டுகளை அடிக்கடி மாற்றுகையில் அதற்கான செலவினமும், வரியும் உண்டு. சிறுதுளி பெரு வெள்ளம் என்பதனை கவனத்தில் கொண்டு, நீண்டகாலத்தில் பொறுமையாக முதலீடு செய்வதே நன்று. 
  • பண்டுகளை ஒவ்வொரு வருடமும் மதிப்பீடு செய்வது அவசியம். பண்டுகளை மாற்ற வேண்டுமா, கூடுதலாக முதலீடு செய்யலாமா அல்லது இந்த பண்டில் முதலீட்டில் குறைக்கலாமா என்பதனை உங்களது நிதி ஆலோசகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கான வேலையை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கான குழப்பம் தீரும்.
  • எந்தவொரு ஆலோசகரின் உதவியின்றி நீங்களாவே பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய நினைத்தால், சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள் மற்றும் படிப்புகளை கற்பது அவசியம். கற்ற பின், முதலீடு செய்ய துவங்கலாம், தவறுகள் குறையலாம்.
  • பக்கத்து வீட்டுக்காரர் அந்த கார் மாடல் வைத்துள்ளார், எதிர் வீட்டுக்காரர் இந்த கைபேசி வைத்துள்ளார், மச்சான் இந்த பிரேஸ்லெட் அணிந்துள்ளார் என ஒவ்வொருடன் நாம் ஒப்பிட்டு கொண்டிருந்தால், நாம் நமக்கான இலக்கை அடைய முடியாது. நமக்கென்ன தேவை, நமக்கான நிதி இலக்குக்கான தொகை மற்றும் காலம் எவ்வளவு, அதனை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் அவசியம். 
  • 11 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்த, திருவாளர் வாரன் பப்பெட்(Warren Buffett) அவர்கள் தனது 55 வயதிற்கு பின்னரே உலகளவில் பிரபலமானார். குறுகிய காலத்திலோ, குறுக்கு வழியிலோ யாரும் நிரந்தர செல்வங்களை முடியாது.  
  • இந்திய பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டை பொறுத்தவரையில் அடுத்த 20-30 வருடங்கள் மட்டுமே பிரகாசமான காலம்(பொருளாதாரம் சார்ந்து வாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கும் காலம்). அதற்கு பிறகு, உங்களுக்கு வங்கி வட்டி விகிதத்திற்கு மேல் ஒரு சதவீதம் கிடைத்தாலே பெருமை தான். இது தான் வல்லரசான அமெரிக்காவிலும், ஐக்கிய ராச்சியத்திலும், ஜப்பானிலும் நடந்துள்ளது.

முதலீட்டாளர், முதலீடு செய்யும் முன் கவனிக்க:

* முதலீடு செய்வதற்கான நோக்கம்(ஓய்வுக்கால நிதி, குழந்தைகளுக்கான கல்விச் செலவு, திருமணச்செலவு, வீடு கட்டுவது / வாங்குவது, வாகனம் வாங்குவது, சுற்றுலா, பிடித்த வேலையை செய்ய, தொழில் புரிய, அப்படி ஒண்ணுமில்லைங்க)

* முதலீடு செய்ய உள்ள தொகை 

* முதலீடு செய்யும் காலம் 

* எதிர்பார்க்கும் வருவாய் (கார்பஸ் தொகையை கணக்கிடுவது அவசியம்)

* மேலே சொல்லப்பட்டவைக்கான சரியான முதலீட்டு திட்டம் (முதலீட்டு ஆலோசகரின் உதவியுடன் அணுகுதல்)

நிதி சார்ந்த அக்கறையுடன், வர்த்தக மதுரை 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள்

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள் 

 

Football Field Analysis – Asset Valuation Techniques

பொருளாதாரவியலில் எந்தவொரு சொத்துக்கும் மதிப்பொன்று உள்ளது. முதலீட்டு மதிப்பீட்டின் மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் மதிப்பை நாம் அறியலாம். இதற்கென மதிப்பீட்டு பகுப்பாய்வு(Valuation Analysis) என்ற ஒரு அலகு உள்ளது. மதிப்பீட்டு பகுப்பாய்வு என்பது ஒரு சொத்தின் தோராயமான மதிப்பை மதிப்பிடும் ஒரு செயல்முறையாகும்.

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை பலவகைகளில் கிடைக்கப்பெற்றாலும், சுருக்கமாக இரு வகைகளை நாம் சொல்லலாம். அதாவது ஒப்பீட்டு முறை(Relative Valuation) மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation). ஒப்பீட்டு முறை என்பது ஒரு சொத்தினை அதனை ஒத்த மற்ற சொத்துக்களுடன் ஒப்பிடுவது அல்லது ஒரு நிறுவனத்தின் மதிப்பை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனங்களின் மதிப்புடன் ஒப்பிட்டு முடிவினை அடைவதாகும். 

 

முழுமையான மதிப்பீட்டு முறை என்பது அவ்வாறாக இல்லாமல், ஒரு சொத்தின் அல்லது நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பை (மற்றவற்றுடன் ஒப்பிடாமல்) பெறுவதாகும். இதன் மூலம் ஒரு சொத்து அல்லது நிறுவனம்  இவ்வளவு மதிப்பை கொண்டிருக்கும் என சொல்வதாகும்.

 

சிறு உதாரணத்தின் மூலம் மேலே சொன்ன இரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறைகளை பார்ப்போம். ஒருவரின் தோட்டத்தில் (ஒரு ஏக்கர் நிலம்) நூறு கொய்யா மரங்கள் உள்ளது. ஒவ்வொரு மரமும் ஆண்டுக்கு நூறு கொய்யா பழங்களை தருகிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அவரது தோட்டத்தில் ஆண்டுக்கு ஆயிரம் கொய்யா பழங்கள்(100 மரங்கள் X 100 பழங்கள்) காய்த்து அதற்கான வருவாயை தருகிறது. இங்கே கொய்யா பழத்திற்கான விலை, ஒவ்வொரு கொய்யா மரத்தின் வாழ்நாட்கள் மற்றும் பருவம், கழிவு, விலைவாசி(உற்பத்தி செலவு மற்றும் பணவீக்கம்), அடுத்த 10-15 வருடங்களுக்கான விளைச்சல் எதிர்பார்ப்பு  ஆகியவற்றை பொறுத்து அத்தோட்டத்திற்கு ஒரு மதிப்பை கொடுக்கலாம். பின்னாளில் அவர் இந்த தோட்டத்தினை விற்க முனைகையில் மேலே சொன்ன மதிப்பீட்டை கருத்தில் கொண்டு விலையை பேசலாம். இதனை தான் நாம் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation) என சொல்கிறோம்.

 

இதுவே பக்கத்து தோட்டத்துக்காரர் தான் வைத்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில்  கொய்யா மரங்கள்(எண்ணிக்கை மாறுபடலாம்) அடங்கிய தோட்டத்திற்கு எந்தவொரு முழுமையான மதிப்பீட்டையும் செய்யாமல், முதலாமவரின் தோட்டத்தினை போல தனது தோட்டமும் இவ்வளவு மதிப்பை பெறும் என ஒப்பிட்டு முறையில் சொன்னாலே, அதுவே ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையாகும்(Relative Valuation).

 

இதனை தான் பங்குச்சந்தை முதலீட்டில் நாம் காணும் P/E(Price to Earning per Share) Ratio, P/Bv(Price to Book value) Ratio, P/S (Price to Sales), EV/EBITDA, etc. – ஒப்பீட்டு பகுப்பாய்வு முறை. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனப் பங்கின் விலையை அதன் ஒரு பங்கிற்கான வருவாயுடன் ஒப்பிடுவது, பங்கு  விலையை அதன் நிறுவன விற்பனையுடன், புத்தக மதிப்புடன்(Book value) ஒப்பிடுவது என சொல்லலாம். ஒரு நிறுவனத்தின் P/E விகிதத்தை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனத்தின் P/E விகிதத்துடன் ஒப்பிடுவது. 

 

Discounted Cash Flow(DCF), DDM(Discounted Dividend Model), Discounted Asset Model(DAM) போன்றவை முழுமையான ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையை சேர்ந்தவையாகும். இவை அந்நிறுவனத்தின் பணவரத்து, ஈவுத்தொகை(Dividend) மற்றும் கணக்கில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு முழுமையாக மதிப்பீடு செய்வதாகும். 

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை(Valuation Analysis) என்பது வெறுமனே பங்குச்சந்தை முதலீட்டுக்கு மட்டுமல்ல. ரியல் எஸ்டேட்(வீட்டுமனைத் துறை), தங்கம், விவசாய நிலம், தொழில் மற்றும் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் பயன்படுத்தலாம்.

 

ஒவ்வொரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறையும் வெவ்வேறு வகையான முடிவுகளை அளிக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் முதலீடு செய்பவருக்கு ஏற்ற அல்லது உகந்த மதிப்பீடுகளை எடுத்துக் கொள்வது இயல்பு. எனினும், பெரும்பாலும் வழக்கத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மதிப்பீடாக ஒப்பீட்டு முறை உள்ளது. அதே வேளையில் ஒப்பீட்டு முறையை காட்டிலும் முழுமையான மதிப்பீட்டு முறையே(Absolute Valuation) ஒரு முதலீட்டாளருக்கு சிறந்த முடிவாகவும், நீண்டகாலத்தில் நல்ல வருவாயை அளிக்க கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது. 

 

நான் பெரிசா, நீ பெரிசா என ஒவ்வொரு மதிப்பீட்டு முறையை கொண்டு போட்டி போடுவதை தவிர்த்து விட்டு, அனைத்து அல்லது பெரும்பான்மையான முறைகளை கணக்கில் எடுத்து கொண்டு முடிவுகளை எடுக்க கால்பந்து களப் பகுப்பாய்வு(Football Field Analysis) உதவுகிறது. வெவ்வேறு மதிப்பீட்டு முறைகளின் முடிவுகளை ஒப்பிட்டு சுருக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வரைபடத்தை(Graph /Chart)  இந்த ஆய்வு ஏற்படுத்துகிறது. 

 

இது பல்வேறு மதிப்பீட்டு முறைகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமையும் ஒரு நிறுவனத்திற்கான மதிப்புகளின் வரம்பை சுருக்கமாக கூறுகிறது. இந்த வரைபடத்தின் மூலம் பெரும்பான்மையான மதிப்பீட்டு  முறைகள் வாயிலாக, ஒரு நிறுவனத்தின் சராசரி விலை என்ன என்பதனை அறிந்து கொள்ளலாம். 

 

பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள்வதற்கும், மதிப்பீடுகளில் ஏற்படும் பிழைகளை குறைப்பதற்கும் இம்முறையை பயன்படுத்தலாம். 

 

உதாரணமாக ஒரு நிறுவனப் பங்கின் விலையை பணவரத்து(DCF) மதிப்பீட்டு முறையில் கணக்கிடும் போது ஒரு பங்கிற்கான மதிப்பு ரூ. 100 என கொள்வோம். இதுவே PE மதிப்பீட்டு முறையில் காணும் போது ஒரு பங்கிற்கு 80 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை வாங்கலாம் என பரிந்துரைக்கிறது. புத்தக மதிப்பு(Book value) அடிப்படையில் பார்க்கையில் ஒரு பங்குக்கு ரூ.85 என மதிப்பினை பெறுகிறது. கடந்த ஒரு வருட பங்கின் அதிகபட்ச விலை ரூ.150 ஆகவும், குறைந்தபட்ச விலை 65 ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஒரு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் ரூ.87 – ரூ.102 என்ற விலையில் வர்த்தகம் நடந்துள்ளது.

 

இப்போது ஏதேனும் மற்றொரு மதிப்பீட்டு முறை மூலம் ஆய்வு செய்யும் போது பங்கு ஒன்றுக்கு 82 ரூபாய் என காட்டுகிறது. முடிவில் மேலே சொன்ன அனைத்து மதிப்பீட்டு முறைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற மதிப்புகளை, கால்பந்து களப் பகுப்பாய்வு வரைபடத்தில் குறிப்பிட வேண்டும். தற்போது நடப்பில் ஒரு பங்கின் விலை ரூ.102 க்கு வர்த்தகமாகிறது என வைத்துக் கொள்வோம். 

 

கால்பந்து களப் பகுப்பாய்வின் மூலம் நாம் பெறுவது, ஒவ்வொரு மதிப்பீட்டின் அடிப்படையில் நாம் பெறக்கூடிய சராசரி விலை தான். இதனை தற்போதைய பங்கு விலையுடன் ஒப்பிட்டு வாங்கலாமா, காத்திருக்கலாமா என்பதனை முடிவு செய்யலாம். 

 

Football field analysis

 

நீங்களும் இதனை பரிசோதித்து பாருங்கள்… இதன் மூலம் உங்களது முதலீட்டு சிந்தனையை மேம்படுத்துங்கள் !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

   

    

 

 

இந்தியாவில் பணவீக்கம்(விலைவாசி) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

இந்தியாவில் பணவீக்கம்(விலைவாசி) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

How is the Inflation measured in India – WPI / CPI ?

நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாத முடிவில் 5.10 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு டிசம்பர் மாத முடிவில் 5.69 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பணவீக்க விகிதத்தை அடிப்படையாக கொண்டு தான் ஒரு நாட்டின் வங்கிகளின் வட்டி விகிதமும்(Bank Interest Rate), அரசின் பஞ்சப்படி(Dearness Allowance -DA) அறிவிப்பும் உள்ளது. 

பங்குச்சந்தை முதலீட்டை மற்ற சொத்து முதலீட்டுடன் ஒப்பிடுகையில், பங்குச்சந்தை முதலீடு(பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டும் தான்)  நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை கொடுக்கும் என சொல்கிறோம். தங்கத்தின் மீதான வருவாயை பணவீக்கத்திற்கு எதிரான இழப்புக்காப்பு(Hedging) என சொல்வதுண்டு. இவ்வாறு பணவீக்கம் என்பது பொருளாதார உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

பணவீக்கத்தை கணக்கிடும் முறை ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும், அதே வேளையில் அவற்றை சார்ந்த பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதிநிலை முடிவுகள் பெரும்பாலும் ஒத்த கருத்தையே கொண்டிருக்கும். அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரப்போகிறது என்றால், உள்நாட்டில் மத்திய ரிசர்வ் வங்கி அதனை கருத்தில் கொண்டு தான் இங்கு முடிவெடுக்கும்.

பணவீக்கத்தை பொறுத்தவரை நம் நாட்டில் இரு வகையான முறை தற்போது உள்ளது. ஒன்று மொத்தவிலை பணவீக்க விகிதம்(Wholesale Price Index – WPI), மற்றொன்று சில்லறை விலை அல்லது நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) என்றழைக்கப்படும் பணவீக்க விகிதம்.

மொத்தவிலை பணவீக்க விகிதம்: இது நாட்டில் உள்ள பல்வேறு உற்பத்திப் பொருட்களின் மொத்த விலை மாற்றங்களை கொண்டு அளவிடப்படுகிறது. அதாவது பிற நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது வணிகங்களால் ஏற்படும் செலவுகளை குறிப்பிடுகிறது. 

மொத்த விலையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள், நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர்களை சென்றடையும் முன் கண்காணிக்கப்படும் குறியீடாக மொத்தவிலை பணவீக்க விகிதம் உள்ளது. 

சில்லறை அல்லது நுகர்வோர் விலை பணவீக்க விகிதம்: இது பொதுவாக நுகர்வோரிடம் காணப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை மாற்றங்களை கொண்டு அளவிடப்படுகிறது. மக்களிடம் பெரும்பாலும் நாள்தோறும் தேவைப்படும் பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு சில்லறை விலை பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

இந்தியாவில் சில்லறை விலை பணவீக்க விகிதம் 2012ம் ஆண்டினை அடிப்படை வருடமாக(Base year: 2012) கொண்டு அளவிடப்படுகிறது. நடப்பில் மொத்தவிலை பணவீக்க விகிதத்தை காட்டிலும், சில்லறை விலை பணவீக்க விகிதமே முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் மொத்தவிலை பணவீக்கத்தை பொறுத்தவரை உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் உள்ள நிலையில், நுகர்வோருக்கு அவர்களின் மாத வரவு-செலவினை ஒப்பிடும் வகையில் சில்லறை விலை பணவீக்க விகிதமே தெளிவுபடுத்துகிறது.

பணவீக்கம் சார்ந்த அறிக்கைகளை மத்திய புள்ளியியல் அமைச்சகமும்(சில்லறை விலை பணவீக்கம்), வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகமும்(மொத்தவிலை பணவீக்கம்) பொதுவெளியில் அறிவிக்கும். சில்லறை விலை பணவீக்கம் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்திலும்(மாதத்தின் 14ம் தேதி), மொத்த விலை பணவீக்கம் ஒவ்வொரு வார மற்றும் மாத அடிப்படையிலும் வெளியிடப்படும்.

மொத்த விலை பணவீக்க விகிதத்தை பொறுத்தவரை சுமார் 697 பொருட்களை உற்பத்தி, முதன்மைப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் விலை மாற்றங்களை எடுத்து கொண்டு கணக்கிடப்படும். முதன்மைப் பொருட்கள் பிரிவில் உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் இடம்பெறும். சில்லறை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை சுமார் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தேசிய புள்ளியியல் அமைச்சகத்தால் ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய மாவட்டங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களில்(1181 கிராமங்கள் மற்றும் 1114 சந்தைகள்) கள ஊழியர்களை கொண்டு ஒவ்வொரு நாளின் சில்லறைப்  பொருட்களின் விலை மாற்றத்தை கணினியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. சில்லறை விலை பணவீக்கம் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள், புகையிலைப்பொருட்கள், துணிமணி மற்றும் காலணிகள், வீட்டுமனை, ஒளி மற்றும் எரிபொருட்கள், ஏனையப் பொருட்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் கணக்கிடப்படுகிறது.

சில்லறை விலை பணவீக்க விகிதத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாகும். இவற்றில் அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள், பால் பொருட்கள், காய்கறிகள், திண்பண்டங்கள் மற்றும் இனிப்புகள், மீன் வகைகள், மாமிசம், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகளும் அடங்கும். போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு 8.59 சதவீதமும், சுகாதாரம் 5.90 சதவீதமும் மற்றும் கல்வி 4.46 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

வீட்டுமனைப் பிரிவு 10 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதமும், துணிமணி மற்றும் காலணிகள் 6.53 சதவீதமும் மற்றும் புகையிலைப்பொருட்கள் 2.38 சதவீத பங்களிப்பையும் சில்லறை விலை பணவீக்க கணக்கீட்டில் கொண்டுள்ளது. 

மொத்தவிலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு 24 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றில் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த பொருட்கள் மற்றும் மொத்த விலையில்(Wholesale Price) வாங்கக் கூடிய விலை விவரங்களே இடம்பெறும். இரு வகையிலான பணவீக்க முறையை பொறுத்தவரையில், பொதுவாக அனைத்து பொருட்களின் கணக்கீட்டில் அதன் பிரிவில் சராசரி விலையே முடிவில் எடுத்து கொள்ளப்படும். உதாரணமாக ஒரு சாக்குப்பை அரிசியின் விலை ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1,000 என எடுத்துக் கொள்வோம். தற்போது இதன் விலை ரூ.1,400 ஆக இருந்தால் அரிசியின் பணவீக்க விகிதம் 40% ஆகும். இருப்பினும் இந்த பிரிவில் உள்ள மற்ற பொருட்களின் விலை மாற்றங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, முடிவில் சராசரி விலையின் குறியீடு தான் வெளிப்படும்.

CPI(Consumer Price Index) Formula: (Cost of the Market Basket in the given year / Cost of the Market Basket in the Base year) X 100

WPI(Wholesale Price Index) Formula: (Current Price / Base Period price) X100

சுருக்கமாக மொத்தவிலை பணவீக்க விகிதம் உற்பத்தி மற்றும் மொத்தவிலை சார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் சில்லறை விலை(Retail Inflation) பணவீக்க விகிதம் வாடிக்கையாளர் அல்லது நுகர்வோர் தங்களுக்கு அருகில் உள்ள சந்தை அல்லது கடையில் வாங்கும் சில்லறை விலை அடிப்படையில் மாற்றத்தை கொண்டு வரும்.

பணவீக்க விகித மாற்றத்தை கொண்டு தான் ஒரு அரசாங்கத்தின் நிதிநிலை செயல்பாடுகளும் இருக்கும். அரசாங்கத்தின் கொள்கைகளும் பணவீக்க விகித ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக அமையும். இது போல தனிநபர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களும் விலைவாசியை(பணவீக்கம்) கருத்தில் கொண்டு தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் முடிவை திட்டமிடலாம். பணவீக்க விகித மாற்றம் முதலீட்டிலும் அவசியமாகிறது. பணவீக்கம்(Inflation) பொருளாதாரத்தில் ஒரு எதிரியாக பார்க்கப்பட்டாலும், இதனை சிறப்பாக கையாளும் போது நமது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

   

உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளியா ? – பணத்தின் மீதான உங்களது நிலைப்பாடு எப்படி ?

உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளியா ? – பணத்தின் மீதான உங்களது நிலைப்பாடு எப்படி ?

Endowment Effect or Cognitive Bias – Behavioural Economics

‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்பார்கள். பொருளியலில் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இன்று பணம் இருந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளுக்கான தேவையும், நகர்வும் பணத்தை சார்ந்து இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் ஆற்றலை அறிய, அந்நாட்டின் போர்ப்படை மற்றும் அரசியல் அதிகாரத்தை விட பணத்தின்(பொருளாதாரம்) மூலம் தான் அளவுகோலை நிர்ணயிக்கிறார்கள்.

‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என துறவறவியலில்(அதிகாரம் – அருளுடைமை, பால் – அறத்துப்பால், குறள்: 247) பொருளீட்டலின்(இன்றைய பணம்) தேவையை பற்றி விவரிக்கிறது. பணத்தின் மீது பெருத்த ஆசை வைக்காவிட்டாலும், தனி நபருக்கு அல்லது ஒரு குடும்பத்தை நிதி சார்ந்து பாதுகாக்க தேவையான பணத்தை நாம் தேடித்தான் ஆக வேண்டும்.

அதிக பணமீட்டும் ஒரு சாரார் தங்களது செலவுகளை அதிகமாக கொண்டிருந்தாலும், அதன் மூலம் வரி வருவாய் ஏற்படுத்தினால் மட்டுமே, ஒரு நாட்டின் அரசால் வறுமையில் அல்லது வருவாய் குறைந்தவர்களுக்கான நிதி திட்டமிடலை செய்ய முடியும். இல்லையெனில் பொருளாதாரம் சார்ந்து அதிக ஏற்றத் தாழ்வால் வெறுப்பும், வன்முறையும் நிகழ வாய்ப்புண்டு. இதன் காரணமாக தான் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளும், வேகமாக வளரும் நாடுகளும் பொருளாதாரத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

முன்னொரு காலத்தில் நெல் உமியையும், அரிசியையும் வீணாக்கக் கூடாது என்ற வழக்கமுண்டு. பஞ்சத்தின் வெளிபாட்டையும், சிக்கனத்தை அவசியத்தையும் தான் இது போன்ற நிலைகள் கூறுகிறது. ‘பணக்காரனுக்கு என்னப்பா கவலை’ என்றும், ‘பணத்தை விட உடல்நலத்தை பேணுவதே’ என்றும், ‘நம்மிடம் பணமிருந்து என்ன பயன், நல்ல தூக்கம் இல்லையே’ என சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் பணத்திற்கான மதிப்பு தான் என்ன ?

அதனை நீங்கள் தான் அளவிட முடியும் !

நம்மிடமிருக்கும் பணத்தை நாம் அவ்வளவு அக்கறையாக பார்க்கையில், மற்றொருவரின் பணத்தை நாம் அவ்வாறாக காண்பதில்லை. இதனை தான் எண்டோவ்மென்ட் விளைவு(Endowment Effect) என்கிறோம். ‘பணத்தை தண்ணி போல செலவழிக்கிறான் பார்’ என சொல்வதுண்டு. பணத்தின் மீதான அளவீடு என்பது ஒவ்வொரு தனிநபரின் பார்வையிலும் மாறி கொண்டே இருக்கிறது.

கஷ்டப்பட்டு அப்பா சம்பாதித்த பணத்தை பற்றி பிள்ளைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அதன் அளவீடும் மாறுபடும். சாலையில் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளும், சில்லறைகளும் அதனை கண்டவரின் பார்வையில் பணத்தின் மீதான அளவீடு உள்ளது. நமது பணம் தொலைந்து விட்டால் நமக்கு வரும் பதட்டம், அதே பணத்தை மற்றவர் தொலைக்கும் போது இருப்பதில்லை. முடிந்தால் அறிவுரை சொல்ல பழக்கப்பட்டிருப்போம்.

பொதுவாக நம்மிடம் இல்லாதவற்றை விட, நமக்கு சொந்தமான பொருட்களின் மீது நாம் உயர்வான மதிப்பை கொண்டிருக்கிறோம். இதனை தான் முதலீட்டு சிந்தனையிலும் செய்து வருகிறோம். நமக்கு தெரிந்த முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது அல்லது நமது வசதிக்கு ஏற்ப இந்த திட்டம் தான் சரியானது என முதலீடு செய்வது. உண்மையில் அந்த திட்டம் வருவாயை கொடுக்காமல் இருந்திருக்கலாம். சில நேரங்களில் அத்திட்டம் அதிக ரிஸ்க் தன்மை கொண்டதாக இருந்திருக்கக் கூடும்.

இருப்பினும் நாம் அந்த திட்டத்தை மற்றவைகளை பற்றி தெரிந்து கொள்ள விருப்பில்லாமல், ஏற்கனவே சொன்ன திட்டத்தில் ஆறுதல் தேடிக் கொள்வோம். இதனை தான் உளவியலாளர் திரு. டேனியல் கானமேன் ஒரு ஆராய்ச்சியின் மூலம் விவரிக்கிறார்…

“ அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒரு போட்டியை நடத்தி ஆராய்ச்சி கண்டோம். சில மாணவர்களிடம் பல்கலைக்கழக சின்னம் பதிக்கப்பட்ட குவளைகளை(Mugs) வைத்திருக்க சொன்னோம். குவளைகளை கொண்டிருந்த மாணவர்களிடம் அதனை மற்ற குவளையில்லாத மாணவர்களிடம் விற்கும் படி செய்ய சொன்னோம். குவளையில்லாத மாணவர்களும், குவளை வைத்திருக்கும் மாணவர்களிடம் வாங்குவதற்கான பேரத்தை பேசினர்.

இதனை பலமுறை சோதித்து, இறுதி ஆராய்ச்சியின் முடிவில் நாங்கள் கண்டது, குவளையில்லாத மாணவர்கள் தாங்கள் கேட்ட விலையை விட இரு மடங்கு விலையில் குவளையை வைத்திருந்த மாணவர்கள் விற்பதற்கு தயாராக இருந்தனர் என்பது தான்.”

இதனை தான் நாம் அவ்வப்போது நம் வாழ்க்கையில் செய்து வருகிறோம். உதாரணத்திற்கு நம்மிடம் உள்ள பழைய நான்கு சக்கர வாகனத்தை விற்கும் போது, நாம் அதன் அருமை-பெருமைகளை சொல்லி கூடுதல் விலைக்கு விற்க முனைகிறோம். இதுவே வாங்க வருபவர், தேய்மானத்தை அடிப்படையாக கொண்டு மலிவான விலையில் கேட்பார்.

வீட்டுமனை விற்பனையிலும் நாம் இதனை காணலாம். வீட்டுமனையை வைத்திருப்பவர் எப்போதும் அதிக விலைக்கே விற்க(Endowment Effect) முனைகிறார். ஆனால் உண்மை நிலவரம் அப்படியில்லை, இடம் மற்றும் காலத்திற்கு தகுந்தாற் போல தான் அந்த மனையின் விலை விற்கப்படும். எனினும் நம் மனம் நமது சொந்த பொருட்களின் மீதான மதிப்பை அதிகரித்தே சொல்லக் கூடும்.

கைக்கடிகாரம் கூட யார் மணிக்கட்டில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கிணங்க அதன் மதிப்பை பெறுகிறது என்பார்கள்.

எனவே நம் பணத்தின் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பை, மற்றவர்களின் பணத்திற்கும்(மனிதத் தன்மைக்கும்) கொடுப்பது நலம். இதன் மூலம் அதீத ஏற்ற-தாழ்வை பொருளாதார நிலையை குறைக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம்

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 

Greaves Cotton Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1859ம் ஆண்டு ஜேம்ஸ் கிரீவ்ஸ் மற்றும் ஜார்ஜ் காட்டன் ஆகிய இருவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் கிரீவ்ஸ் காட்டன்(Greaves Cotton). பொறியியல் மற்றும் உற்பத்தித் துறையில் உள்ள இந்நிறுவனம் 1947ம் ஆண்டு வாக்கில் இந்தியத் தொழிலதிபரான திரு. லாலா கரம் சந்த் தப்பார் (தப்பார் குழுமம்) அவர்களால் வாங்கப்பட்டது. 1950ம் ஆண்டில் கிரீவ்ஸ் காட்டன் பொது நிறுவனமாக(Public Ltd) பதிவு செய்யப்பட்டது. தற்போது மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு நிறுவனம் தனது தொழிலை செய்து வருகிறது.

நிறுவனத்தின் தலைவராக திரு. கரண் தப்பார் உள்ளார். வாகனங்களுக்கான இன்ஜின்கள், உதிரி பாகங்கள், வாகன கட்டுப்பாட்டு அமைப்புகள், பண்ணை உபகரணங்கள், துணை சக்தி(Auxiliary Power) மற்றும் மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனையில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் இன்ஜின் பிரிவு 62 சதவீதத்தையும், மின்சார வாகனப் பிரிவு 30.5 சதவீதத்தையும் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. 

வருவாயில் உள்நாட்டு பங்களிப்பு 97 சதவீதமாகவும், ஏற்றுமதி 3 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக Greaves Electric Mobility (இரு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகன உற்பத்தி), Greaves Retail(உதிரி பாகங்கள், மின்சார வாகன ஏற்றுமதி, பராமரிப்பு), Greaves Engineering(எரிபொருளுக்கான தீர்வு, இயக்க கட்டுப்பாட்டு அமைப்புகள், இன்ஜின் பிரிவு, ஜென்செட்டுகள் மற்றும் பம்பு செட்டுகள்), Greaves Technologies(பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டிஜிட்டல் சேவைகள்) மற்றும் Greaves Finance(மின்சார வாங்கனங்களுக்கான நிதி சேவைகள்) ஆகியவை உள்ளன.  

விவசாயம், கட்டுமானம், சக்தி மற்றும் பிற தொழிற்துறைக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்திற்கு நாடு முழுவதும் சுமார் 6500கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களும், 350க்கும் மேற்பட்ட விநியோகச் சேவைகளும்(Dealers) உள்ளது. உதிரிப் பாகங்களுக்கான பிரிவில் நாடு முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் 6000க்கும் மேற்பட்ட சிறிய சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் தயாரிப்பு சேவை உள்நாட்டில் மட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. நிறுவனம் இந்திய குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் அனுபவம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் திறமையான தலைமைத்துவத்தை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் இப்பிரிவில் இந்திய அளவில் பெரும்பான்மையான பங்களிப்பை தன்னகத்தே கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்சார வாகனங்களில் மூன்று முக்கிய பிரிவுகளில் பிராண்டுகளை உற்பத்தி செய்து(Ampere, ele, Greaves Eltra) இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இரு சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 6 வகைகளையும், மூன்று சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 10க்கும் மேற்பட்ட வகைகளிலும் உள்ளன.

நிறுவனத்தின் கீழ் பல பிராண்டு உதிரி பாகங்கள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், பேட்டரிகள், சார்ஜிங், பிற கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், ‘Ampere Vehicles’ நிறுவனத்தில் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 81 சதவீத பங்குகளை வாங்கி கையகப்படுத்தியுள்ளது. 

‘E-Rickshaw’ பிரிவில் பெஸ்ட்வே நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது கிரீவ்ஸ் காட்டன். இது போக வாகனங்களுக்கான இயக்க கட்டுப்பாட்டு(Motion Control Systems) பிரிவில் தொழில் செய்து வரும் எக்சல் கண்ட்ரோலிங்கேஜ்(Excel Controlinkage Pvt Ltd) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், எம்.எல்.ஆர். ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளது. ஐக்கிய ராச்சியத்தை(United Kingdom) சேர்ந்த ஈட்டா கிரீன் பவர் நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் டிரைவ் சிஸ்டம் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்.6 வாகனப் பிரிவுக்கான பவர் ட்ரெயின்(Powertrain) தீர்வுகளை செய்து வருகிறது. மூன்று மற்றும் நான்கு சக்கர வணிக வாகனங்களுக்கான இன்ஜின்களை(Petrol, Diesel, CNG/LPG) உற்பத்தி செய்து விற்பனையிலும் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் தனது விற்பனையை அதிகரிக்க சவுதியை சேர்ந்த ஏ.எல்.ஜே(ALJ) குழும நிறுவனத்துடன் இணைந்து மேம்பாடுகளை செய்து வருகிறது. கடந்த 1945ம் ஆண்டு துவங்கப்பட்ட ALJ(Abdul Latif Jameel) நிறுவனம் வாகனப் பிரிவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தொழிலை செய்து வருகிறது.   

மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகின் சிறந்த பிராண்டாக காணப்படும், ‘Piaggio’ நிறுவனம் ஐரோப்பாவில் பெரும்பான்மையான சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு தேவையான இன்ஜின் மற்றும் பிற உதிரி பாகங்களை கடந்த 1998ம் வருடம் முதல் கிரீவ்ஸ் காட்டன் செய்து வழங்கி வருகிறது. சொல்லப்பட்ட வருடத்தில் பியாஜியோ – கிரீவ்ஸ் கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டு இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வந்தது. பின்னர் 2001ம் ஆண்டு வாக்கில் பியாஜியோ நிறுவனத்தின் தலைமைக் குழும நிறுவனமான P&C முழு பங்குகளையும் வாங்கி கொண்டது.

நிறுவனத்தின் முதலீட்டை பொறுத்தவரை, கடந்த 2021ம் ஆண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்கும் இலக்கை கொண்டு, தமிழ்நாட்டில் அடுத்த பத்து வருடங்களில் சுமார் 700 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய உள்ளதாக கிரீவ்ஸ் காட்டன், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்காக நாடு முழுவதும் ஆறு ஆலைகளை கொண்டுள்ளது இந்நிறுவனம்.

நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மொத்த வருவாயில் 1.6 சதவீதம் வரை செலவிடப்படுகிறது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடன் வழங்கும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு கிரீவ்ஸ் பைனான்ஸ்(Greaves Finance) நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் நிதிநிலையை பொறுத்தவரை இதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.3,830 கோடி. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 16 மடங்குகளிலும், நிறுவனர்களின் பங்களிப்பு 56 சதவீதமாகவும் உள்ளது. 

கடந்த 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டு முறையே ரூ.19 கோடி மற்றும் ரூ.35 கோடியை நிறுவனம் நட்டமாக சொல்லியுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,699 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.2,573 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. இயக்க லாப விகிதம் 4 சதவீதமாக உள்ளது.

சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம் 70 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. எனினும் கடந்த நான்கு காலாண்டுகளில் டிசம்பர் 2023 காலாண்டை தவிர்த்து மற்ற மூன்று காலாண்டுகளிலும் நிறுவனம் நட்டத்தை சந்தித்துள்ளது. இதற்கு காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட நிதிச் செலவின அதிகரிப்பு மற்றும் மின்சார வாகன மானியத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய அபாரதத் தொகையும் அடங்கும்.  

கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் மின்சார வாகன உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருவதால், முதலீடும் அது சார்ந்த செலவினமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சந்தையிலும் இந்தப் பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்தை சந்தித்து வருகிறது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு செப்டம்பர் 2023 காலத்தின் படி ரூ.1,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது. 

2022-23ம் நிதியாண்டில் என்ஜின் பிரிவு மூலம் நிறுவனத்திற்கு ரூ.1,425 கோடியும், மின்சார வாகனப் பிரிவின் மூலம் ரூ.1,124 கோடியும், பிற விற்பனை மூலம் 150 கோடி ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது. இருப்பினும் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபத்தில்(PBIT) இன்ஜின் பிரிவு 165 கோடி ரூபாயையும், மின்சார வாகனப் பிரிவு ஒரு கோடி ரூபாயையும் நிறுவனம் பெற்றுள்ளது. 

கடன்-பங்கு விகிதம் 0.06 மடங்கு, வட்டி பாதுகாப்பு விகிதம் மற்றும் இருப்புநிலை கையிருப்பு தொகை இந்நிறுவனத்திற்கு சாதகமாக இருந்தாலும், மின்னணு வாகனப் பிரிவில் இந்நிறுவனம் செய்த முதலீடு, அதன் முறிவு புள்ளியை(Breakeven) கடக்கும் வரை நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் அதிக மாறுபாடுகளை காணலாம்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

World’s Top Stock Exchanges and Countries by Market Capitalization

உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக ஹாங்காங் நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தையை நாம் முந்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குச்சந்தையின் மதிப்பு 4.37 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் சுமார் 363 லட்சம் கோடி ரூபாய்).

பங்குச்சந்தை உலகின் ராஜாவாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 49.65 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 4,127 லட்சம் கோடி ரூபாய்). இரண்டாமிடத்தில் 10.89 டிரில்லியன் டாலர்களுடன் சீனாவும், மூன்றாவது இடத்தில் 5.47 டிரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் நாடும் உள்ளது.

அமெரிக்காவின் மேலே சொல்லப்பட்ட சந்தை மதிப்பு அந்நாட்டின் பொருளாதார(GDP) மதிப்பில் 194.5 சதவீதமாகும். ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தை 3.96 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆறாம் மற்றும் ஏழாம் இடம் முறையே பிரான்சு மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள்(2.82 டிரில்லியன் டாலர்கள்) உள்ளன.

எட்டாவது இடத்தில் கனடா 2.64 லட்சம் கோடி டாலர்களுடனும், ஒன்பதாவது இடத்தில் சவுதி அரேபியா 2.42 லட்சம் கோடி டாலர்களுடனும் மற்றும் பத்தாவது இடத்தில் ஜெர்மனி 2.28 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடனும் உள்ளது. சொல்லப்பட்ட தரவுகள் 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டுகளுக்குள் கணக்கிடப்பட்டது.

கடந்த 1975ம் ஆண்டில் உலக பங்குச்சந்தையின் மதிப்பு 11.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தநிலையில் 2020ம் ஆண்டின் முடிவில் 93.68 லட்சம் கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது உலக பொருளாதார மதிப்பில் வெறும் 27 சதவீதமாக இருந்த பங்குச்சந்தை பங்களிப்பு இன்று 135 சதவீதத்திற்கும் மேலாக காணப்படுகிறது.

நடப்பில் மிகப்பெரிய பங்குச்சந்தை உள்ள நாடுகளில் குறிப்பிட்ட பங்குச்சந்தை(Stock Exchange) அடிப்படையில் காணுகையில், அமெரிக்காவின் நியூயார்க் சந்தை(NYSE) 26.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த சந்தை கடந்த 1792ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தில் அமெரிக்காவின் நாஷ்டாக்(NASDAQ) சந்தை உள்ளது. கடந்த 1866ம் வருடம் துவங்கப்பட்ட சீனச் சந்தையின் ஷாங்காய்(SSE) 6.87 டிரில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காம் இடத்தில் ஐரோப்பாவின் யூரோ நெக்ஸ்ட்(EuroNext) சந்தையும், ஐந்தாவது இடத்தில் ஹாங்காங் சந்தையின் HKEXம் உள்ளன. இந்தியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை பத்தாவது இடத்தில் 3.59 டிரில்லியன் டாலர்களுடன் உள்ளது. இச்சந்தை கடந்த 1875ம் வருடம் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனத்தின் அடிப்படையில், ஆப்பிள் நிறுவனம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் சவுதி அரம்கோ நிறுவனமும் உள்ளன.

நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் முறையே கூகுள்-ஆல்பாபெட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆறாவது இடத்தில் என்விடியா(Nvidia) மற்றும் ஏழாம் இடத்தில் மெட்டா(Meta) நிறுவனமும் உள்ளது.

திருவாளர் வாரன் பப்பெட்டின் பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனம் எட்டாம் இடத்திலும், எலான் மஸ்க்கின் டெஸ்லா ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. எலி லில்லி நிறுவனம் 597 பில்லியன் டாலர்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,வர்த்தக மதுரை

www.varthagamadurai.com