Category Archives: Investopedia

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி 

ITC Ltd reported a net profit of Rs.19,477 Crore in FY 2022-23

112 வருட தொழில் அனுபவம் கொண்ட ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. பில்லியன் டாலர் வருவாயை கொண்ட இந்நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 90 நாடுகளுக்கும் மேலாக இதன் பொருட்கள் ஏற்றுமதியிலும், சுமார் 60 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

புகையிலை, விவசாயம் மற்றும் உணவுப்பொருட்கள், காகிதம் மற்றும் பேக்கேஜிங், நட்சத்திர தங்கும் விடுதிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை நிறுவனத்தின் முக்கிய துறைகளாக உள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.21 லட்சம் கோடி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில், புகையிலை பொருட்களின் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் 37 சதவீதமாக உள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.70,937 கோடியாகவும், செலவினம் 45,272 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 36 சதவீதமாகவும், இதர வருமானமாக ரூ.2,053 கோடியை ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 25,866 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் ரூ.19,477 கோடி.

2021-22ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் தற்போது சொல்லப்பட்ட வருவாய் 17.6 சதவீத வளர்ச்சியையும், நிகர லாபம் 24.5 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் பங்குதாரர்களுக்கான ஈவுத்தொகை(Dividend) பங்கு ஒன்றுக்கு ரூ.15.50 ஆக சொல்லப்பட்டுள்ளது(ஏற்கனவே அளிக்கப்பட்ட ரூ.6/பங்கு சேர்த்து).

எப்.எம்.சி.ஜி(FMCG) துறையின் வருவாய் 20 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், காகிதம் மற்றும் பேக்கேஜிங் 19 சதவீதமும் மற்றும் புகையிலை பொருட்களின் வருவாய் 20 சதவீதமுமாக வளர்ச்சி அடைந்துள்ளது. Aashirvaad, Sunfeast, Yippee, Dark Fantasy, Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Savlon, Fabelle, Mom’s Magic, Sunrise Foods, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique ஆகியவை நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளாகும்.

பங்குச்சந்தை – பண்டமென்டல் அனாலிசிஸ் – இலவச வகுப்புகள் – 14 நாட்கள் 

2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 67,912 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு நீண்டகால கடன்கள் எதுவுமில்லை. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 56 ரூபாயாகவும், பங்கு விலைக்கும், விற்பனைக்குமான இடைவெளி 7.35 மடங்குகளிலும் உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 12 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் பங்கு முதலீடு மீதான வருவாய்(Return on Equity) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 25 சதவீதம் தந்துள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 57 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் புகையிலை பொருட்களின்(Cigarettes) பங்களிப்பு மட்டும் 60 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

Can you invest in Chennai Super Kings – CSK – Unlisted Equity(Pre-IPO) ?

கடந்த 2007ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் துவங்கப்பட்டது தான் இந்தியன் பிரீமியர் லீக்(IPL). உரிமையாளர்(Franchise) சார்ந்து கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டு 2008ம் ஆண்டு முதல் இன்று வரை வருடந்தோறும் ஐ.பி.எல். போட்டிகள் நடந்து வருகின்றன. 

இதுவரை நடைபெற்ற 15 வருட ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கை அணிகளாக மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல வருடங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப காலங்களில் மாஸ்டர் பிளாஸ்டர்(Master Blaster) என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இருந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் அமைந்தது தான்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இந்தியா வின்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக முன்னாள் ஐ.சி.சி. தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சீனிவாசன் இருக்கிறார். இந்தியா வின்ஸ ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக எம்.எஸ். தோனியே இருந்து வருகிறார். பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாட்டின் முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாகும். 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பை(USD One Billion – Unicorn) கொண்ட நிறுவனத்தை தான் யுனிகார்ன் நிறுவனம் என கூறுவதுண்டு.

கடந்த 15 வருட ஐ.பி.எல். வரலாற்றில் நான்கு முறை கோப்பையை இந்நிறுவனம் வென்றிருந்தாலும், 2013ம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்ட நிகழ்வில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016, 2017 என இரண்டு வருடங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்நிகழ்வில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

2013ம் ஆண்டில் லண்டனை சேர்ந்த பிராண்ட் பினான்ஸ் நிறுவனம், உலகின் மதிப்புமிக்க 150 விளையாட்டு அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்ந்தெடுத்தது இதன் சிறப்பம்சம். ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ்(Mumbai Indians) அணியும் அதிக போட்டிகளை நேருக்கு நேர் எதிர்கொண்ட அணிகளாக உள்ளது. கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்கும் முதலீட்டு செலவிலும் இவ்விரு அணிகள் தான் முன்னிலையில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூட்டாக ஏற்படுத்திய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இரு முறை கோப்பைகளை வென்ற அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே உள்ளன. 

பொதுவாக பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட, இந்திய கம்பனிகள் சட்டப்படி, அந்நிறுவனத்தை பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக(Public Limited / Listed) பதிவு செய்ய வேண்டும். பின்னர் தான் அந்த நிறுவனம் சந்தையில் ஐ.பி.ஓ. முறையில் பங்குகளை வெளியிடும். அப்போது தான் பொதுவெளியில் சாமானிய மக்களும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க இயலும். 

இதே முறையில், பொதுவெளியில் பங்குகளை வெளியிடாமல் ஆனால் குறிப்பிட்ட பங்குதாரர்கள் மட்டும் முதலீடு செய்யும் பொருட்டு வந்த நிறுவனங்கள் தான் இன்று பெரும்பாலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக வலம் வருகின்றன. உதாரணமாக ஜொமாடோ(Zomato), ஒயோ, ஸ்விக்கி, பைஜூ, போட்(boAt) ஆகிய நிறுவனங்கள்.

இது போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமாகவும், தனியார் முதலீட்டை பெறக்கூடிய பங்குகளை கொண்ட நிறுவனமாகவும் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏறக்குறைய அனைவரும் முதலீடும் செய்யலாம். அதே வேளையில் அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை(Unlisted Equity). 

2014ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு சந்தையில் பட்டியலிடப்படாத(Unlisted) பங்கு முதலீட்டை கொண்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அதாவது இந்த பங்கு பொதுவெளி சந்தையில் வர்த்தகமாகாது. ஆனால், இந்த பங்குகளை ஏற்கனவே வைத்திருக்கும் குறிப்பிட்ட முதலீட்டாளர்களிடம் அவர்கள் விற்கும் விலையில் வாங்கி கொள்ளலாம்.

2021-22ம் நிதியாண்டின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 1.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் பங்களிப்பில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்(India Cements Shareholders Trust) 30 சதவீத பங்குகளையும், ஸ்ரீ சாரதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 7 சதவீத பங்குகளையும், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 6 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் டிரஸ்ட் நிறுவனம் 2.50 சதவீத பங்குகளையும், டி மார்ட்(DMart) நிறுவனத்தின் தலைவர் திரு. ராதா கிஷன் தமானி 2.40 சதவீத பங்குகளையும் வைத்துள்ளார். இன்னபிற தனியார் நிறுவனங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வைத்துள்ளது. நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 30.81 கோடி(Equity Shares). நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கல்லிடைக்குறிச்சி விஸ்வநாதன் சுப்பிரமணியம் உள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்படாத சந்தை மதிப்பு சுமார் ரூ. 5,100 கோடி. பங்கு ஒன்றின் விலை 180 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு முதலீட்டாளராக நூறு பங்குகளை வாங்க வேண்டியது அவசியம். 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 341 கோடி ரூபாயாகவும், வருவாய் வளர்ச்சி 38 சதவீதமாகவும் இருந்துள்ளது.

CSK - Profit and loss - FY22

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் செலவினம் 308 கோடி ரூபாயாகவும், நிகர லாபம்(Net Profit) ரூ. 32 கோடியாக உள்ளது. கடன்-பங்கு விகிதம் 0.25 என்ற அளவிலும், ஒரு பங்கு மீதான வருமானம்(EPS) 95 பைசாவாகவும் இருந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் எட்டாம் ஆண்டு பொதுக்கூட்டம் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. மார்ச் 2022 முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves & Surplus) 245 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 130 கோடி (மார்ச் 2022). 2021-22ம் நிதியாண்டில் நிறுவனம் சார்பில் ஈவுத்தொகை(Dividend) எதுவும் அறிவிக்கப்படவில்லை. சொல்லப்பட்ட காலத்தில் பெறப்பட்ட லாபத்திலிருந்து நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்புக்கு தொகை எதுவும் ஒதுக்கப்படவில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம், பங்குச்சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பை பற்றி தற்போது வெளியிடவில்லை. அதே வேளையில் நிறுவனத்தின் வருமான வாய்ப்புகளாக ஊடக உரிமைகள்(Media Rights), ஸ்பான்சர்சிப், விளம்பரங்கள், போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், கடிகாரங்கள், டி-சர்ட்டுகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திற்கு, சூப்பர்கிங்ஸ் வென்ச்சர்ஸ் என்ற துணை நிறுவனமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

CSK நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்யலாமா ?

  • பொதுவாக பங்குச்சந்தையில், பொதுவெளியில் வெளியிடப்படும் நிறுவன பங்குகளில் ரிஸ்க் தன்மை அதிகமாக இருக்கும் நிலையில், பட்டியலிடப்படாத இது போன்ற நிறுவன பங்குகளிலும் ரிஸ்க் தன்மை மிகவும் அதிகமே. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதனை களைய செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது. ஆனால் பட்டியலிடப்படாத பங்குகளில் இதனை நாம் காண முடியாது. 
  • பங்குச்சந்தையில் காணப்படும் அதிக ஏற்ற-இறக்கங்கள், பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் பொதுவாக நடைபெறாது. இதற்கான காரணம் மிகக்குறைந்த பங்குகள் மட்டும் இங்கே வர்த்தகமாகும். சில நேரங்களில்(மாதங்கள் அல்லது வருடங்கள்) பங்கு வர்த்தகமே ஆகாது. வாங்குவதற்கும், விற்பதற்கும் நித்தமும் ஆட்கள் இருக்க வேண்டுமே !
  • பங்குச்சந்தையில் ஏற்கனவே அளப்பரிய அளவில் முதலீடு செய்து விட்டு, தனியார் நிறுவனங்களில், இது போன்ற பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோர் இதனை ஒரு வாய்ப்பாக கருதலாம். ஒரு வேளை, இது போன்ற நிறுவனங்கள் பின்னொரு காலத்தில் பங்குச்சந்தைக்கு(IPO Listed) வரும் போது, ஏற்கனவே முதலீட்டு செய்திருக்கும் நிலையில் அதிக விலையில் பங்குகளை விற்று வெளியேறலாம். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும், திறமையான நிர்வாகமும் இதனை வெளிக்காட்டும்.
  • பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளை, தற்போதைய நிலையில் வெகு சில தளங்களே வாங்கும்-விற்பனை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தளங்களின் நம்பகத்தன்மையையும் நாம் சரிபார்த்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் கைதேர்ந்தவர்களுக்கும்(25 வருடங்களுக்கு மேல் முதலீட்டு அனுபவம்), அச்சந்தையில் அதிக முதலீடு செய்து கோடிகளில் லாபத்தை ஈட்டியவர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பட்டியலிடப்படாத பங்குகள் ஒரு அரிய முதலீட்டு வாய்ப்பாகும். மற்ற கத்துக்குட்டிகளுக்கு இவற்றிலிருந்து விலகியிருப்பதே நன்மை பயக்கும் !

“Unlisted equity is an opportunity to build wealth, but it’s always risky than listed”

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்கு முதலீடு அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி 

Infosys reported a net profit of Rs.24,108 Crore in the Financial year 2022-23 – Results

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த வார முடிவில் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவு மற்றும் ஒட்டுமொத்த ஆண்டுக்கான நிதி அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,441 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,443 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம்(OPM %) 24 சதவீதமாக உள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ. 6,134 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டின்(2021-22) நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்டிருக்கும் வருவாய் 16 சதவீதமும், நிகர லாபம் 8 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டினை ஒட்டுமொத்தமாக காணும் போது, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,46,767 கோடியாகவும், செலவினம் 1,11,637 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. 

சொல்லப்பட்ட நிதியாண்டின் முடிவில் நிறுவனம் 24,108 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் பங்கு மீதான வருவாய்(EPS) 58 ரூபாயாக உள்ளது. 2011-12ம் நிதியாண்டில் இது 18 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் டிஜிட்டல் சேவையை சார்ந்தும், நிதித்துறை(Financial Services) சார்ந்த சேவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.  

புவியியல் சார்ந்து காணும் போது, நிறுவனத்தின் 62 சதவீத வருவாய் வட அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. ஐரோப்பாவில் 25 சதவீதமும், உள்நாட்டில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வருவாய் ஈட்டப்படுகிறது. உலகின் சிறப்பான 500 நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின்(Infosys Limited) முக்கிய வாடிக்கையாளர்களாக மெர்சிடஸ்-பென்ஸ், எச்.எஸ்.பி.சி. வங்கி, லாக்கீட் மார்ட்டின், அமெரிக்க ராணுவம், அமெரிக்க கடற்படை, ஐ.பி.எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் டச்சு வங்கி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.22 லட்சம் கோடி. 

கடந்த நிதியாண்டில் எதிர்பார்த்த வருவாய் மற்றும் லாப மதிப்பீட்டை காட்டிலும் குறைவாக இருந்ததும், நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் வழிகாட்டல்(Financial Guidance) நிறுவனத்தின் சார்பில் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்ததால், திங்கள் கிழமை அன்று (17-04-2023) இந்த பங்கின் விலை 10 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்தது. நீண்டகால முதலீட்டாளர்களிடையே இது எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாது, விலை வீழ்ச்சியால் பங்கு வாங்குவதற்கான வாய்ப்பையும் இது போன்ற நிகழ்வு வழங்குகிறது.

உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றம் ஆகியவற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை சரிவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. அதன் கடன்-பங்கு விகிதம் 0.11 என்ற அளவில் உள்ளது. மார்ச் 2023 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 73,338 கோடியாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சராசரியாக 14 சதவீதமும், லாப வளர்ச்சி 10 சதவீதமாகவும் இருந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 17 சதவீதம் (கூட்டு வட்டியில்) ஏற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் 28 சதவீதம் இறக்கமடைந்துள்ளது. அடிப்படை பகுப்பாய்வின் படி(Cash Flow – Fundamental Analysis), இன்போசிஸ் பங்கின் விலை ரூ. 900 – ரூ. 1,100 என்ற அளவில் அமைந்துள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

Income Tax rates for Mutual Fund Investments – Individuals – FY 2022-23 (AY 2023-24)

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாட்டின் பட்ஜெட் தாக்கலில் வருமான வரி விகிதங்கள் சார்ந்த மாற்றங்கள் நிறைய சொல்லப்பட்டிருந்தது. நடப்பு 2022-23ம் நிதியாண்டுக்கான வரி விகிதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds) மூலம் கிடைக்கப்பெறும் வருவாய்க்கான வரி விகிதங்களும் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பொறுத்தவரை உள்ளூர் முதலீட்டாளர்கள்(Resident) மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) என வரி விதிப்பு முறை தனித்தனியாக அமைந்துள்ளது. திட்டங்களின் அடிப்படையில் காணும் போது பங்கு சார்ந்த திட்டங்களுக்கும், பங்கு சாராத திட்டங்கள் என வரி விதிப்பு முறையும் வேறுபட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான, அதாவது 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி விகிதங்கள் குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) மற்றும் நீண்டகால மூலதன ஆதாயம்(Long term Capital Gains) என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இங்கே சொல்லப்படும் காலம்(Short or long term) என்பது வருமான வரி விகிதங்களுக்கான கணக்கீட்டு காலம் மட்டுமே, அவை ஒரு குறிப்பிட்ட திட்டங்களில் மேற்கொள்ளப்படும் காலமல்ல. எனவே நாம் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்யவிருந்தாலும், மூலதன ஆதாய  வரி என்பது நாம் நம் முதலீட்டை விற்பனை செய்யும் காலத்தினை பொறுத்து வரி விகிதங்கள் மாறுபடும்.

பொதுவாக பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் நாம் அதனை விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், ஒரு வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் சொல்லப்பட்டு வரி விதிக்கப்படும். இதுவே பங்கு சாராத திட்டங்களுக்கு(Debt Mutual Funds or other than Equity oriented schemes) முதலீடு செய்த மூன்று வருடத்திற்குள் விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், மூன்று வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும்.

எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்கையில் ஒவ்வொரு மாதாந்திர அல்லது வாராந்திர முதலீடும், வரி விகிதத்தை பொறுத்தவரை தனித்தனி முதலீடாக கருதப்படும். உதாரணமாக ஜனவரி மாதத்தில் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, சொல்லப்பட்ட முதலீட்டு தேதியிலிருந்து(ஜனவரி 5) கணக்கிடப்படும். இதுவே பிப்ரவரி மாதம் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு, தனி முதலீடாக கருதப்பட்டு அவை பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, காலத்தை சார்ந்து வரி விகிதங்கள் மாறுபடும். இந்த குழப்பங்கள் பெரும்பாலும் வரி சேமிப்பு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில்(ELSS) முதலீடு செய்வோருக்கு ஏற்படும்.

 ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை மட்டும்(Lumpsum investment) செய்யப்படும் முதலீடாக இருக்கும் நிலையில், முதலீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து விற்பனை தேதியை கணக்கிடுகையில் சிரமம் இருக்காது. எஸ்.ஐ.பி. முறையில் செய்யப்படும் முதலீட்டிற்கு மட்டும் இந்த கவனம் தேவை. எனினும், வரி கணக்கீட்டினை பொறுத்தமட்டில் இன்றைய நிலையில் பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்த கணக்கீட்டு அறிக்கையை முதலீட்டாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. எனவே வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த அறிக்கையை பயன்படுத்தி கொள்ளலாம்.

2018ம் ஆண்டுக்கு முன்பிருந்து, நீங்கள் பங்குகள் அல்லது பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகிறீர்களா ? (உங்களுக்கான பதிவு தான் இது)

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15 சதவீதமும், நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதமும் விதிக்கப்படும். நீண்டகால மூலதன ஆதாயத்தில் கிடைக்கப்பெறும் முதல் ரூ. 1 லட்சத்திற்கு வரி எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாயத்திற்கு மட்டுமே 10 சதவீத வரியாகும்.

மியூச்சுவல் பண்ட் – தனிநபர் வரி விகிதங்கள் – நிதியாண்டு 2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)

முதலீட்டு பிரிவு

தனிநபர் – உள்ளூர் முதலீட்டாளர் 

வெளிநாடு வாழ் இந்தியர் 

பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

15%

15%

நீண்டகால மூலதன ஆதாயம் 

10%*

10%*

பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

நீண்டகால மூலதன ஆதாயம் 

பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20%

10% – (பட்டியலிடப்படாத)

20% – (பட்டியலிடப்பட்ட மற்றும் பணவீக்க விகித சரிக்கட்டலுடன்)

வர்த்தக மதுரை | www.varthagamadurai.com

* ஒரு லட்சம் ரூபாய் வரையிலான(குறிப்பிட்ட நிதியாண்டில்) லாபத்திற்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை. ஒரு லட்சத்திற்கும் மேலான லாபத்திற்கு மட்டுமே 10 சதவீத வரி. 

இதுவே பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய  வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பின் அடிப்படையில்(Individual’s Income Tax Slab) அமைகிறது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக, பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு (Indexation Benefit) 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பணவீக்க விகிதத்திற்கான சரிக்கட்டல் மதிப்பை(Cost Inflation Index) ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.  

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும் (ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான தொகைக்கு) சொல்லப்பட்டுள்ளது. பங்கு சாராத திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பு அடிப்படையில் உள்ளது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதம் (பட்டியலிடப்படாத – Unlisted, No indexation benefit) மற்றும் 20 சதவீதமாக (Listed, With Indexation Benefit) சொல்லப்பட்டுள்ளது. 

முதலீட்டில் கிடைக்கப்பெறும் லாபத்திற்கு எவ்வளவு தொகையை வரியாக செலுத்த வேண்டுமென்பதை வரி ஆலோசகர் அல்லது பட்டய கணக்காளர்(Chartered Accountant) ஒருவரின் துணையுடன் கணக்கிடுவது நல்லது. 

கவனிக்க:

  • 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாத பட்ஜெட் அறிக்கையில், பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களின் வரி முறையில் சில மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் செய்துள்ளது. இந்த புதிய முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி, 2023 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.      
  • பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் எனும் போது, சிறிய பங்களிப்பில் பங்குகளை கொண்டிருந்தாலும் அவ்வகையான திட்டங்கள்  வரிச்சட்டத்தில் பங்கு சாராத திட்டமாகவே சொல்லப்படுகிறது. வரும் ஏப்ரல் 1, 2023 முதல் பங்கு சாராத திட்டங்களில், பங்குகளின் பங்களிப்பு 35 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், குறுகிய மற்றும் நீண்டகால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரம்பில் அமையும் என சொல்லப்பட்டுள்ளது.
  • இதுவே அத்திட்டத்தில் பங்குகளின் பங்களிப்பு 36 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை இருக்கும் பட்சத்தில், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பிலும், நீண்டகால மூலதன ஆதாய வரி என்பது பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20 சதவீதமாகவும் கூறப்பட்டுள்ளது. 
  • 65 சதவீதத்திற்கும் மேல் பங்குகளின் பங்களிப்பை கொண்டிருக்கும் திட்டங்கள், பங்கு சார்ந்த திட்டங்களின் வரி விதிப்பு மற்றும் முதலீட்டு கால முறையை(Holding period) போலவே கொண்டிருக்கும். அதாவது ஒரு வருடத்திற்குள்ளான குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும்(ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான) இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

Jyothy Labs Limited – Fundamental Analysis – Stocks

கேரள மாநிலத்தை சேர்ந்த திரு. எம்.பி. ராமச்சந்திரன் அவர்களால், கேரளாவை தலைமையிடமாக கொண்டு 1983ம் ஆண்டில் துவங்கப்பட்டது தான் ஜோதி லேப்ஸ் நிறுவனம் (Jyothy Laboratories). எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையில் தொழில் புரிந்து வரும் இந்நிறுவனம் ஆரம்பநிலையில் ஒரே ஒரு பொருளை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தது. இன்று ஆண்டுக்கு பில்லியன் ரூபாய் மதிப்பிலான வருவாயை கொண்டும், சுமார் 6,900 கோடி ரூபாய் சந்தை மதிப்பையும் கொண்ட நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

வீட்டு பராமரிப்பு, துணிமணிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பிரபல சொட்டு நீலமான, ‘உஜாலா’ உற்பத்திக்காக 1992ம் ஆண்டு சென்னையில் ஒரு உற்பத்தி ஆலையை துவக்கியது. துணிமணி பராமரிப்பில், ‘ Ujala, Henko, Mr.White மற்றும் More Light’ இதன் முக்கிய பிராண்டுகள். நாட்டின் துணிமணி பராமரிப்புக்கான பொருட்கள் பிரிவில், 81 சதவீத சந்தை மதிப்பை இந்நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் துணிமணி பராமரிப்பு பிரிவு மட்டும் 37 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில்(Dish Wash) இதன் ஒட்டுமொத்த வருவாயில் 38 சதவீதத்தையும், தனிநபர் பராமரிப்பு பிரிவில் 10 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில், ‘Exo, Prill’ இதன் முக்கிய பிராண்டுகள். இந்த துறையில் 11 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. இந்த பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் ஜோதி லேப்ஸ் வலம் வருகிறது.

தனிநபர் பராமரிப்பு பிரிவில், ‘Margo, Neem Active மற்றும் Fa’ இதன் பிரபல பிராண்டு பொருட்கள். வீட்டு பூச்சிக்கொல்லி சார்ந்த பொருட்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த பிரிவில் 21 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் வைத்துள்ளது. ‘Maxo கொசுவர்த்தி, T-Shine Cleaner, Maya ஊதுபத்திகள்’ ஆகியவை இதன் பிராண்டுகளாக உள்ளன. 

நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சேர, சரக்கு மேலாண்மை அமைப்பையும்(Freight Management System) இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நான்காம் தொழில் புரட்சியின் கீழ் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஜோதி லேப்ஸ் முதலீடு செய்துள்ளது. 

2007ம் ஆண்டு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜோதி லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டது. தற்போது நிறுவனத்தின் தலைமையிடமாக மும்பை உள்ளது. இத்துறையில் புதிதாக நுழையும் மற்றும் ஏற்கனவே சந்தையில் சிறந்து விளங்கும் துறை சார் நிறுவனங்களை இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2011ம் ஆண்டில் கென்கேல் இந்தியா(Henkel India) நிறுவனத்தை ஜோதி லேப்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.     

ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பிராண்டு பொருட்களுக்கு, பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், திரைப்பட துறையில் உள்ள நடிகைகள் ஷில்பா  ஷெட்டி மற்றும் மாதுரி தீக்சித் ஆகியோர் விளம்பர தூதர்களாக இருந்துள்ளனர். நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ரா. லட்சுமி நாராயணன் அவர்களும், நிர்வாக இயக்குனராக எம்.ஆர். ஜோதி அவர்களும் உள்ளனர். நாட்டின் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் இன்றளவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,196 கோடியாகவும், இயக்க லாபம்(Operating Profit) 248 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் சராசரியாக வருடத்திற்கு 12-15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 159 கோடி. செப்டம்பர் 2022 காலாண்டின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.1,428 கோடி. 

ஜோதி லேப்ஸ் நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக பங்குச்சந்தையில் உள்ளது. உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களிடம் 17 சதவீத பங்குகளும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடம் 13 சதவீத பங்குகளும் உள்ளது. கடன் தன்மை குறைவாகவும், பங்கு மூலதனம் மீதான வருவாய் 14 சதவீதமாக(5 வருட காலத்தில்) இருப்பதும் சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது.     

ஜோதி லேப்ஸ் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறைந்தபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.134 ஆகவும், அதிகபட்ச விலையாக 223 ரூபாய் வரையிலும் வர்த்தகமாகியுள்ளது. 2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு துவக்கத்தில் இந்த பங்கின் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு மற்றும் பணப்பாய்வு(Discounted Cash Flow) முறையில் மதிப்பிடும் போது, ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ. 130-160 என்ற சராசரியை பெறும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஊக வணிகத்தில் நட்டமடையும் இந்திய பங்கு வர்த்தகர்கள் – செபியின் 2022ம் ஆண்டின் சிறப்பு அறிக்கை

ஊக வணிகத்தில் நட்டமடையும் இந்திய பங்கு வர்த்தகர்கள் – செபியின் 2022ம் ஆண்டின் சிறப்பு அறிக்கை 

Individual Traders engaged in Equity F&O Segment – SEBI Analysis Report 

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(Securities and Exchange Board of India) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மத்திய பொருளாதார மற்றும் கொள்கை பகுப்பாய்வு துறையின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஊக வணிக(Futures and Options) பிரிவில் 2022ம் நிதியாண்டில் தனிநபர் வர்த்தகர்கள் அடைந்த லாப-நட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியிருந்தது.

2022ம் நிதியாண்டில் சுமார் 45 லட்சம் தனிநபர் வர்த்தகர்கள் இந்திய பங்குச்சந்தை ஊக வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது 2019ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் 500 சதவீத வளர்ச்சி என்றும், 30 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 36 சதவீதமாக இருந்துள்ளது.

வர்த்தகத்தில் ஈடுபட்ட தனிநபர் பிரிவில் 80 சதவீதத்திற்கு மேல் ஆண்கள் என்றும், ஊக வணிகத்தில் ஈடுபடும் 10 நபர்களில் 9 பேர் நட்டமடைவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதாவது ஊக வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களில் 89 சதவீதம் பேர் தங்களது முதலீட்டை இழந்துள்ளனர். இவர்களது முதலீட்டு இழப்பு சராசரியாக 50,000 ரூபாய் வரை இருந்துள்ளது. 

2022ம் நிதியாண்டில் ஊக வணிகத்தில் லாபமீட்டியவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக இருந்த போதிலும், அவர்களது அதிகபட்ச சராசரி லாபம் ரூ.1.5 லட்சம் வரை இருந்துள்ளது. ஊக வணிகத்தில் Index Options பிரிவில் 89 சதவீதம் பேரும், Index Futures பிரிவில் 11 சதவீதம் பேரும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வயது பெரும்பாலும் 20-30 வயது வரம்பில் இருந்துள்ளது.

அதே வேளையில் Index Options பிரிவில் ஈடுபட்டிருந்த 89 சதவீதம் பேரில் 82 சதவீதம் பேர் தங்களது முதலீட்டை இழந்துள்ளனர். இந்த பிரிவில் வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டை ஒப்பிடும் போது 2022ம் ஆண்டு எட்டு மடங்கு உயர்ந்துள்ளது. Index Futures பிரிவில் ஈடுபட்டிருந்தவர்களில் 74 சதவீதம் பேரும்(சராசரி இழப்பு: ரூ. 1 லட்சம்), Stock Futures பிரிவில் 67 சதவீதம் பேரும்(சராசரி இழப்பு: ரூ. 2.1 லட்சம்) முதலீட்டில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த பிரிவில் லாபம் ஈட்டியவர்களின் சராசரி தொகை ரூ. 2.4 லட்சமாகும். இவர்களும் முதல் 5 சதவீத நிலையில் உள்ள Active Traders ஆவர்.

ஊக வணிகத்தில் லாபம் ஈட்டியவர்களில் பெரும்பாலானோர் தங்களது லாபத்தில் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணங்களுக்காக(Transaction cost) செலவளித்துள்ளனர். சொல்லப்பட்ட தனிநபர் வர்த்தகர்களில் இந்து கூட்டு குடும்பம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் அடங்குவர். ஊக வணிகத்தில் 2022ம் ஆண்டில் ஈடுபட்ட 45 லட்சம் வர்த்தகர்களில் பெருநகரங்களை சாராதோர்(Except Tier I & Tier II) எண்ணிக்கை மட்டும் 81 சதவீதமாக உள்ளது. திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் நாட்டின் முன்னிலையில் உள்ள முதல் 10 பங்கு தரகர்களிடம்(Brokers) இருந்து என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ? 

Global Market Indices in the year 2022 – Returns %

2022ம் ஆண்டில் பல்வகை முதலீடுகளின்(Asset Classes) வளர்ச்சி விகிதத்தை காணும் போது, உலகளவில் அதிகபட்சமாக தங்கத்தின் மீதான முதலீடு 11 சதவீதமும், பெரு நிறுவனங்களின் பங்கு முதலீடு(Large Cap Equity) 3 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.5 சதவீதமும், தனியார் கடன் பத்திரங்கள் 2.7 சதவீதமும், அரசு பத்திரங்கள் 2.3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மாறாக நடுத்தர மற்றும் குறு நிறுவனங்களின் பங்கு முதலீடு இறக்கத்தை சந்தித்துள்ளன.

கடந்த பத்து வருட காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீடு 2015ம் ஆண்டை தவிர்த்து(-4.1 %) பார்க்கையில், அனைத்து வருடமும் ஏற்றத்தில் தான் முடிந்துள்ளன. தங்கத்தின் மீதான முதலீடு 2019 மற்றும் 2020ம் வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளன. உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் அதிகரித்துள்ளது.

பொதுவாக பொருளாதார மந்தநிலை காணப்படும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், மீண்டெழும் பொருளாதாரத்தில் தங்கத்தின் வருவாய் குறைவதும் இயல்பே. பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, பங்கு முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான ஏற்றம் காணப்படும்.   

2022ம் வருடத்தில் வளர்ந்த நாடுகளின் பங்குச்சந்தை முதலீடு பெரும்பாலும் இறக்கத்தையே சந்தித்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் முடிவில் அமெரிக்காவின் நாஸ்டாக்(Nasdaq) குறியீடு 33 சதவீதம் சரிந்துள்ளது. இந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப குறியீடு(FAANG) மட்டும் 40 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளது. ஜெர்மனியின் டாக்ஸ்(DAX) 12 சதவீதமும், ஜப்பானின் நிக்கி(Nikkei) 9 சதவீதமும், ஐரோப்பாவின் ஸ்டாக்ஸ்(Stoxx) 11 சதவீதமும் இறக்கத்தை சந்தித்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஐக்கிய ராச்சியத்தின் புட்சி(FTSE) குறியீடு மட்டும் ஒரு சதவீதம் என்ற அளவில் 2022ம் ஆண்டு ஏற்றம் பெற்றுள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் குறியீடுகள் 14 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்துள்ளன. அதிகபட்சமாக ரஷ்ய நாட்டின் பங்குச்சந்தை குறியீடு 39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தோனேசிய மற்றும் சிங்கப்பூர் நாட்டின் பங்குச்சந்தை குறியீடுகள் 4 சதவீதம் என்ற அளவில் ஏற்றமடைந்துள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்திய பங்குச்சந்தை மட்டுமே 5 சதவீதம் என்ற அளவில் ஏற்றம் பெற்று முதலிடத்தில் உள்ளது. நிப்டி (Nifty) தேசிய பங்குச்சந்தையில் உலோகத்துறை, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்(CPSE) மற்றும் தனியார் வங்கிகளின் குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேல் வருவாயை தந்துள்ளது. அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் குறியீடு 70 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

மாறாக, தகவல் தொழில்நுட்ப துறை 26 சதவீதமும், மருந்துத்துறை(Pharma) 11 சதவீதமும், ரியல் எஸ்டேட் குறியீடு 11 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களிடையே அதிகமாக புழங்கும் எப்.எம்.சி.ஜி.(FMCG) துறை 17 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2022ம் ஆண்டில் 52 சதவீதமும், கோல் இந்தியா 54 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ ஆகிய பங்குகளின் விலை 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளன. 

வரக்கூடிய காலம் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான நிலையாக இருப்பதால், பங்கு முதலீட்டில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும். நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாள தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

How is the Inflation and Interest rate playing in the Real Economy ? 

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட உலகளவிலான ஊரடங்கிற்கு பின்பு, உலக பொருளாதாரம் இந்த சுழற்சி முறையில்(Life Cycle) தான் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்க, அதனை அப்படியே பின்பற்றி வருகிறது உலக பொருளாதாரமும். கூடுதலாக உக்ரைன்-ரஷ்ய போர் மற்றும் சீன-தைவான் எல்லை பதற்றமும் அடங்கும். 

கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு(Economic Stimulus) அன்றைய நிலையை களைய பெரிதும் உதவியது. இருப்பினும் அதன் காரணமாக பணவீக்க விகிதமும் கடந்த சில காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதன் விளைவு தேவை-உற்பத்திக்குமான இடைவெளியில் தான் உள்ளது. இந்த இடைவெளியே பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு எடுத்து செல்லும். 

உலக பங்குச்சந்தைகளும், அரசு கடன் பத்திர சந்தைகளும் வரவிருக்கும் காலத்தில் ஆட்டம்(High Volatility) காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் நவீன பொருளாதாரத்தில் இது ஒரு சுழற்சி முறையே(Life Cycle). பணவீக்கம் உயர்ந்தால் அதனை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியின் வேலை தான். அதிகரித்து வரும் பொருட்களின் சந்தை விலையை மட்டுப்படுத்த, போடப்படுகிற கடிவாளம் தான் இந்த வட்டி விகித உயர்வு. 

வட்டி விகித உயர்வால் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி குறைந்து சந்தையில் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இதன் தாக்கம் தொழில் நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், பங்கு விலையும் சரியும்(அனைத்து நிறுவங்களுக்கும் பொருந்தாது). கடனில்லா நிறுவனங்களுக்கு வருவாய் குறைவு ஒரு பிரச்சனையில்லை, ஆனால் கடனை அதிகமாக கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு தான் இந்த சிக்கலே !

வங்கி வட்டி விகித உயர்வு, டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டை மேற்கொள்பவருக்கு வேண்டுமானால் வாய்ப்பாக அமையலாம். ஆனால் வங்கிகளில் கடன் வாங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தான் செலுத்த வேண்டிய வட்டி செலவு அதிகரித்து விடும். சொல்லப்போனால், டெபாசிட்தாரரருக்கும் இந்த வட்டி உயர்வு நீண்டகாலத்தில் பயன் தராது. 

பணவீக்கத்தை கட்டுப்படுத்திய பிறகு வங்கிகளின் வட்டி வருவாய் விகிதத்தையும் மத்திய வங்கி குறைத்து விடுமே. இதனை தான் நாம் தொழிலாளர்களின் பி.எப்.(Provident Fund), அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி வைப்பு நிதிகளில் காணலாம். பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த காலங்களில் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் அதிகமாகவும், மாறாக பணவீக்கம் குறையும் போது, சேமிப்புக்கான வட்டி விகிதமும் வெகுவாக குறைக்கப்படும். இதனை நாம் பெரும்பாலும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதற்கு பிறகான காலங்களில்(Economic Recession & Growth) காணலாம். 

இது ஒருபுறம் இருக்க, கடந்த காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாய், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடு என்று சொல்லப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வருடத்தின் பணவீக்க விகிதம் 7 சதவீதம் என எடுத்து கொண்டால், சேமிப்புக்கான வட்டி  விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். இதுவே வங்கி சேமிப்புக்கணக்குக்கான வட்டி விகிதத்தை சொல்லவே வேண்டாம்.  அதே வேளையில், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து காணப்படும். 

 பொதுவாக மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது, பெரும்பாலான வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதத்தை உடனே அதிகரித்து விடுவதுண்டு. மாறாக, நமது சேமிப்புக்கான வட்டி பெரும்பாலும் பணவீக்கத்திற்கு குறைவாக இருக்கும். இது போக கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியது இருந்தால், முடிவில் நிகர இழப்பு தான் !

எனவே வட்டி விகித உயர்வு காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய மற்றும் நீண்ட காலத்தில் குறைந்த வரி விகிதத்தில் அதிக வருவாயை ஏற்படுத்தும் முதலீட்டை கண்டறிவது அவசியம். அது போன்ற முதலீட்டு வாய்ப்புகள் தான் பரஸ்பர நிதிகளும்(Mutual Funds), பங்குச்சந்தைகளும். பங்குச்சந்தைக்கும், பரஸ்பர நிதிக்குமான ரிஸ்க் தன்மை என்பது வெவ்வேறு. சரியான நிதி இலக்கை ஏற்படுத்தி  விட்டு, அதற்கான முதலீட்டை துவக்கினால் போதுமானது. நீண்டகாலத்தில் உங்களது முதலீடு உங்களுக்காக உழைக்க தயாராகும்…!

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் 

Things to know before investing in Foreign Equities

இந்தியாவின் பங்குச்சந்தை மதிப்பு சுமார் 285 லட்சம் கோடி ரூபாய் (3.50 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு மட்டும் 77.90 லட்சம் கோடி ரூபாய் (தரவு: BSE India). இந்திய பங்குச்சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையை பெருமளவில் மேற்கொண்டதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் 2020ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை வீழ்ந்திருந்த போதும், அதற்கு பிறகான மீட்டெடுப்பில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 

கடந்த சில காலாண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து அதிகளவில் வெளியேறி இருந்தாலும், நமது சந்தை பெருமளவில் இறக்கம் காணவில்லை. இதற்கு முக்கிய காரணமாக உள்ளூர் முதலீடுகள் பெருகி வருவது தான். பின்டெக்(Fintech Apps) நிறுவனங்களின் பங்கு முதலீடு சார்ந்த விளம்பரங்கள், பரஸ்பர நிதிகளில் தொடர்ச்சியான முதலீடு, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, குறிப்பிடத்தக்க பங்கு சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த சேமிப்புகள் பங்குச்சந்தையை நோக்கி திரும்புதல் ஆகியவை நமது சந்தைக்கு பக்க பலமாக உள்ளது. 

பின்டெக் நிறுவனங்களின் பங்கு முதலீட்டு பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் புதிய உள்ளூர் முதலீட்டாளர்களை இந்திய பங்குச்சந்தைக்கு அதிகளவில் கொண்டு வந்துள்ளன என்பதனை நாம் மறுப்பதற்கில்லை. இவற்றையும் கடந்து சமீப காலங்களில் வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான தளங்களை பெரும்பாலான பங்கு தரகர்கள்(Stock Brokers) வழங்கி வருகின்றனர். இதனையே பங்குச்சந்தையில் நேரடி செயல்பாடுகளை கொண்டிருக்காத மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும்(Third Party Apps – Fintech Companies) அயல்நாட்டு பங்குகளை வாங்குவதற்கான வசதிகளை செய்து தந்துள்ளது.

இதன் மூலம் இந்திய உள்ளூர் முதலீட்டாளர்களும் கூகுள், ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பிரபலமான வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்க முடியும். உலகமயமாக்கலுக்கு பின்பு நமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்து வந்துள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் இணைய புரட்சி மூலம் நிதி முதலீடுகளை மேற்கொள்வதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஏதோவொரு கிராமத்தில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவில் வர்த்தகமாகும் ‘டெஸ்லா’ பங்கினை வாங்குவது இன்று அவ்வளவு சுலபம். 

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீத பங்களிப்பை கூட கொண்டிருக்காத நம் பங்குச்சந்தைக்கு, வெளிநாட்டு பங்குகளை வாங்குவது மிகவும் எளிமையாக இருந்தாலும், நாம் பங்குச்சந்தை சார்ந்த விழிப்புணர்வை ஓரளவு பெற்று விட்டோமா என்றால் அது தான் இல்லை. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் அத்தனை பேரும் லாபமீட்டுகிறார்களா என கவனித்தால், அந்த எண்ணிக்கை ஆயிரங்களில் மட்டுமே உள்ளது. இன்றும் சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியாத முதலீட்டாளர்கள் கோடிகளில் உண்டு. அப்படியிருக்கும் போது, வெறும் விளம்பர நோக்கில் பரிந்துரைக்கப்படும் அயல்நாட்டு பங்குகளை பற்றி நம்மால் புரிந்த கொள்ள முடியுமா, இல்லையெனில் பங்குச்சந்தையில் லாபமீட்டுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன ?

இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக பங்கு முதலீடு செய்பவர்களுக்கு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை புரிந்து கொள்வது சற்று கடினமான விஷயமே. நிறுவனத்தின் தொழில் ஆதாரம், நிதி அறிக்கைகள், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். 100 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் பங்குகள் இப்படியிருக்கும், 1000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகும் பங்குகள் இவ்வாறு விலை நகரும் என யாராலும் சந்தையில் கணிக்க இயலாது. அடுத்த 50 வருடங்களுக்கு இந்த துறை தான் சிறப்பாக செயல்படும் என உறுதியாக சொல்ல முடியாது. பிரபலமான பிராண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் சோடை போன வரலாறு உலகின் அனைத்து பங்குச்சந்தைகளுக்கும் உண்டு. இதனை களைய தான் பரஸ்பர நிதிகளின் மூலம் நீண்ட காலத்தில் முதலீடு செய்யுங்கள் என நிதி ஆலோசகர்களும், பொருளாதார வல்லுனர்களும் கூறி வருகின்றனர். பரஸ்பர நிதிகளில் பங்கு நிறுவனங்களை ஆராய்ந்து முதலீடுகளை மேற்கொள்ள பண்ட் மேலாளர்கள் உள்ளனர்.  

அப்படியிருக்கையில் அயல்நாட்டு பங்குகளில் ஏதோவொரு தளத்தின் வாயிலாக நேரடியாக பங்கு முதலீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை நாம் பார்ப்போம்.

  • மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை(Third Party Apps) கொண்டு வெளிநாட்டு பங்குகளை வாங்குவதில் உள்ள நம்பகத்தன்மை என்ன, ஒழுங்குமுறை ஆணையத்தின்(Regulators) கீழ் அந்த நிறுவனம் செயல்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த(Associates) அடிப்படையில் பரிந்துரைக்கிறார்களா ?
  • இன்று பெரும்பாலான தளங்கள்(Platforms) டீமேட் கணக்கு துவங்குவதற்கும், பங்குகளை வாங்குவதற்கும் கட்டணம் எதுவுமில்லை என சொன்னாலும், வெளிநாட்டு பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களை பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம்.
  • வாங்கிய வெளிநாட்டு பங்குகளை பின்னர் விற்பனை செய்யும் போது ஏதேனும் கட்டணம் சொல்லப்பட்டுள்ளதா, அவற்றை நீண்ட காலம் நம்மால் வைத்திருக்க முடியுமா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பங்கு போர்ட்போலியோ விவரங்களை(Portfolio Statement) மின்னஞ்சலில் பெற மாதாந்திர அல்லது ஆண்டு பராமரிப்பு கட்டணம் என்ன ?
  • பங்குகளை விற்பனை செய்த பின், பணத்தை நமது வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டுமெனில் அதற்கான கட்டணம்(Withdraw Charges) எவ்வளவு  ? 
  • நாம் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவன பங்குகளில் ஏதேனும் சிக்கல்(நிறுவனத்திற்கு) ஏற்பட்டால், அதனை நமக்கு தெரிவிப்பார்களா, சந்தையிலிருந்து அந்த பங்கு ஏதேனும் ஒரு காரணத்தால் வெளியேற்றப்பட்டால் நாம் எவ்வாறு அதனை அறிந்து கொள்வது ?
  • வெளிநாட்டு பங்குகளை வாங்கும் நாம் அந்நாட்டின் வருமான வரிச்சட்டம்(Taxation) எப்படி உள்ளது, நமக்கு சாதகமான அம்சம் ஏதுமுள்ளதா என்பதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும். 
  • முதலீடு செய்த பங்குகளுக்கு ஈவுத்தொகை(Dividend) ஏதும் வழங்கப்பட்டால் எந்த வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் அதற்கான வரி விதிப்பு எப்படி உள்ளது ?
  • வெளிநாட்டு நிறுவன பங்குகளின் தொழில் மற்றும் நிதி அறிக்கைகளை எளிமையாக தெரிந்து கொள்ள இணையதளங்கள் உள்ளதா, அவற்றினை அறிய கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா(Research reports) ?

பொதுவாக அமெரிக்காவில் பங்கு முதலீட்டுக்கான வரி விதிப்பு, நம் நாட்டை காட்டிலும் அதிகமாக தான் காணப்படுகிறது. இங்கே நீண்டகால மூலதன ஆதாய வரிக்கான காலம் ஒரு வருடத்திற்கு மேல் என்றால், அமெரிக்காவில் அது இரண்டு வருடத்திற்கு மேலாக சொல்லப்படுகிறது. நீண்டகால மூலதன ஆதாயத்திற்காக வரி இங்கே 10% (ஒரு லட்சம் வரையிலான லாபத்திற்கு வரி விலக்கு போக) எனும் போது, அமெரிக்காவில் எந்த வரி விலக்கும் இல்லாமல் 20 சதவீத வரி செலுத்த நேரிடும். பங்கு முதலீட்டு விற்பனைக்கு பின், பணத்தை வங்கிக்கணக்கில் மாற்ற வெளியேற்று கட்டணமும் அங்கே உண்டு.

நேரடி பங்கு முதலீடு(Direct Equity) அதிக ரிஸ்க் தன்மை கொண்டது. எனினும் பங்கு நிறுவனங்களை முறையாக ஆராய்ந்து நீண்டகாலத்தில் முதலீடு செய்து வந்தால்,  நல்ல வருவாயை பெறலாம். அதே வேளையில் உலகளவில் பெயர் போன பிராண்டுகளும், அனைத்து பென்னி பங்குகளும்(Penny Stocks) நல்ல வருவாயை அளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. 

சமீப காலமாக, சில பின்டெக் தளங்களில் “அதிகமானோர் விரும்பும் பங்குகள், 10 ரூபாய்க்கு கீழான பங்கு நிறுவனங்கள், தங்கள் தளங்களில் அதிகம் விற்பனையான பரஸ்பர நிதி திட்டங்கள், ஒரே வாரத்தில் அதிக வருவாய் அளித்த திட்டங்கள்” என விளம்பரங்களை(Promotions) காண முடிகிறது. இந்த பரிந்துரைகளை தொடர்ந்து கொண்டு முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க் தன்மையை நாம் எச்சரிக்கையாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகம் விற்பனையான அல்லது அதிகமானோர் விரும்பும் பங்குகள் மற்றும் திட்டங்கள் என்பது விழாக்கால சலுகை போல. கடினமாக உழைத்து சம்பாதித்த நம் பணத்தை இது போன்ற பரிந்துரைகள் மூலம் முதலீடு செய்வதால், எள்ளளவும் பயனில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 55 சதவீதமாக உள்ளது. இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(United Kingdom) 33 சதவீதமாகவும் மற்றும் சீனாவில் 13 சதவீதமாகவும் உள்ளது. இந்திய நாட்டின் வருங்கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்து வருகின்றன. நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இங்கே அதிக முதலீடுகளை மேற்கொள்கின்றன. 

அப்படியிருக்கையில், நமக்கான பெரும்பாலான பங்கு முதலீட்டு வாய்ப்பு நமக்கு அருகிலேயே தான் உள்ளது. வளர்ந்த நாடுகள் இங்கே முதலீடு செய்து சம்பாதிக்க, நமக்கான இடத்தை நிரப்ப நம்மூர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதினால் தான் அது சாத்தியம். 

குறிப்பு: நான் உள்ளூரில் நிறைவாக முதலீடு செய்து லாபமீட்டி வருகிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் எனது முதலீட்டு பங்களிப்பு அளப்பரியது. எனவே வெளிநாட்டு பங்குகளை வாய்ப்பாக கருதுகிறேன் என்று நீங்கள் சொன்னால் அயல்நாட்டு பங்கு முதலீட்டை(கட்டணம் மற்றும் வரிகளை புரிந்து கொண்டு) தாராளமாக மேற்கொள்ளுங்கள்.  

பரஸ்பர நிதி நிறுவனங்களின் வாயிலாக இன்று பெரும்பாலான வெளிநாட்டு பங்கு முதலீட்டு திட்டங்கள்(Mutual Funds) நமக்கு கிடைக்கப்பெறுகின்றன.   

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

Tamilnad Mercantile Bank(TMB) in Equity IPO

வங்கி மற்றும் நிதிச்சேவையில் நூறு வருடத்திற்கு மேலான அனுபவம் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஒரு வழியாக பங்குச்சந்தைக்கு தயாராகி விட்டது. கடந்த 1921ம் ஆண்டு தமிழக நாடார் சமூகத்தினரால் தொழில் சார்ந்த நிதி சேவைகளுக்காக தொடங்கப்பட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. துவக்கத்தில் ‘நாடார் வங்கி’ என அழைக்கப்பட்ட இவ்வங்கி பின்னர் வணிக மேம்பாட்டின் காரணமாக, ‘தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வங்கிக்கு, நாடு முழுவதும் 509 கிளைகளும், 12 பெரும் அலுவலகங்களும்(Regional offices) உள்ளன. கடந்த 2010 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டின் தனியார் வங்கிகளில் மிக சிறப்பாகவும், வேகமாக வளரும் வங்கியாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சொல்லப்பட்டது. 

1937ம் ஆண்டு இலங்கையில் ஒரு வங்கிக்கிளையை துவக்கியிருந்தாலும், பின்னர் அந்த கிளையை மூடிவிட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. வங்கி கிளைகளில் முதன்முறையாக கணினிமயமாக்கலை ஏற்படுத்திய தனியார் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(1983ம் வருடம்) தான். இன்று அனைத்து கிளைகளும் முழுமையான கணினி தொழில்நுட்பத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் மென்பொருள் இன்போசிஸ்(Infosys) நிறுவனம் உருவாக்கியது என்பது கூடுதல் தகவல்.

தனியார் வங்கிகளில் அன்னிய செலாவணியை பெறுவதில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முதலிடத்தில் உள்ளது. 2019ம் நிதியாண்டில் இவ்வங்கி சுமார் 15,726 கோடி ரூபாய் மதிப்பில் அன்னிய செலாவணி வர்த்தகத்தை புரிந்துள்ளது. மாநிலத்தில் மட்டுமே இயங்கும் வங்கி போல தோற்றமளிக்கும் இவ்வங்கி உலகம் முழுவதும் எச்.டி.எப்.சி. மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கிகளுடன் இணைந்து வங்கி சேவையை பகிர்ந்துள்ளது.

2021ம் நிதியாண்டில் வங்கியின் வருவாய் 530 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 4,253 கோடி ரூபாய். நிகர லாபமாக வங்கி 995 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. 2022ம் ஆண்டின் முடிவில் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 52,858 கோடி (7.04 பில்லியன் டாலர்கள்). வங்கிகளில் இணைய வழியிலான வைப்பு நிதி கணக்கு(Deposit) துவங்கும் சேவையை நாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது இவ்வங்கியே. 

வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கே.வி. ராமமூர்த்தி உள்ளார். கடந்த காலங்களில் சில சர்ச்சைகளையும், பங்குச்சந்தையில் நுழைய முடக்கங்களையும் மெர்கன்டைல் வங்கி சந்தித்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஒரு வழியாக பங்குச்சந்தை நுழைவுக்கான விண்ணப்பத்தை செபியிடம்(SEBI) சமர்ப்பித்தது. நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் இதற்கான ஒப்புதலும் பெற்றது.

வரக்கூடிய செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை பங்குகளை வழங்க ஐ.பி.ஓ. வை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு 10 ரூபாயாகவும், ஐ.பி.ஓ.வில் பங்கு ஒன்றின் விலை ரூ.500 – ரூ.525 என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 28 பங்குகளும்( 1 Lot), அதிகபட்சமாக 364 பங்குகளும்(13 Lots) வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எதிர்கால மூலதன தேவைகளுக்காக பங்கு முதலீட்டை பெற(Initial Public offer) உள்ளதாக வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.பி.ஓ.வில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் பங்களிப்பு முறையே தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள்(QIB) 75 சதவீதத்திற்கு மிகாமல், உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்(HNI) 15 சதவீதத்திற்கு மிகாமல் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் – தனிநபர்கள்(Retail investors) 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொதுவாக ஐ.பி.ஓ.வில் அறிமுகமாகும் நிறுவனங்களின் நிதி விவரங்களை அவ்வளவு எளிதில் பகுப்பாய்வு செய்ய முடியாது. சந்தைக்கு வந்து குறைந்தபட்சம் ஐந்து வருடங்களை கடந்த பின்பு தான், அவற்றின் நிதி அறிக்கைகளை நம்மால் அடிப்படை பகுப்பாய்வுக்கு(Analysis) உட்படுத்த முடியும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com