Tag Archives: Global Economy

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

Global Market Indices in the year 2023 – Returns %

2023ம் ஆண்டை பொறுத்தவரை உலக பங்குச்சந்தையில் காணும் முக்கிய சந்தை குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேலாக வருவாயை கொடுத்துள்ளன. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை S&P 500 குறியீடு 24 சதவீதமும், ஜப்பானின் Nikkei 225 குறியீடு 30 சதவீதமும், ஐரோப்பாவின் Stoxx 50 குறியீடு 17.3 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான தேசிய பங்குச்சந்தையின்  நிப்டி50 குறியீடு 22.60 சதவீதமும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 21 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் பங்குச்சந்தை 7.8 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி(Kospi) 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் சீனாவின் S&P China 500 குறியீடு 12.50 சதவீதம் மற்றும் ஹாங்காங் நாட்டின் Hang Seng 14 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

2023ம் ஆண்டில் காணப்பட்ட உலகளாவிய போர் பதற்ற சூழ்நிலை, பொருளாதார மந்தநிலை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றால் தங்கத்தின் தேவை அதிகரித்து சொல்லப்பட்ட வருடத்தில் தங்கம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகளவில் வீட்டுமனைத் துறை(Real Estate – REITs) குறியீடும் 11.50 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் வீட்டுமனை விற்பனை 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் Dow Jones Real Estate குறியீடு 7.8 சதவீதம் வளர்ந்துள்ளது. அதே வேளையில் கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.    

அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் 2023ம் ஆண்டில் 5.8 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடந்த சில காலாண்டுகளாக பணவீக்க விகிதம் ஏற்ற-இறக்கமாக காணப்பட்ட நிலையில் வங்கி வட்டி விகிதமும் கணிசமான வருவாயை கடந்த ஆண்டு தந்துள்ளது. பரஸ்பர நிதியில் கிடைக்கப்பெறும் கடன் பண்டுகள்(Debt Mutual Funds) சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை வருவாயை அளித்துள்ளது.

நாணயச்சந்தையில் மெக்ஸிகோ நாட்டின் பெசோ(Peso) 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது போல சுவிட்சர்லாந்து நாட்டின் பிரான்க் 10 சதவீதமும், பிரிட்டிஷ் பவுண்டு 5.30 சதவீதமும் மற்றும் யூரோ 3 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் அமெரிக்க டாலர் 2 சதவீதமும், சீன யுவான் 2.80 சதவீதமும் மற்றும் ரசியாவின் ரூபெல் 17.50 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய ரூபாயும் 0.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டுள்ளது.   

வரக்கூடிய காலம் உலக பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான கால நிலையாக இருப்பதால், தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்து வரும் பங்குச்சந்தையில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். எந்தவொரு முதலீட்டுத் திட்டமும்(Shares, Gold, Bonds, Real Estate) நீண்டகாலம் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு ஏற்றத்தை மட்டுமே சந்திக்கும் என்பது பொருளாதார வரலாற்றில் இல்லை. இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும்.

நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாளத் தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள்

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள் 

The next Four Big challenges await for the Global Market 

2020ம் ஆண்டு உலக சந்தையின் மற்றொரு பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது கோவிட்-19. வரலாற்றில் Great Depression, Great Recession என்ற நிலையை தாண்டி இப்போது Great Shutdown (Lockdown) என்ற நிலைக்கு வந்துள்ளது உலக நாடுகள்.

பொதுவாக பொருளாதார வீழ்ச்சிக்கான(Recession) காலங்கள் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கலாம். நடப்பில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தான் ஊரடங்கு காலம் அதிகமாக இருந்துள்ளது. இதன் தாக்கம் வரும் காலாண்டுகளின் பொருளாதார எண்களில் தெரிய வரும்.

கடந்த 2007ம் ஆண்டு நிகழ்ந்த சப் பிரைம் அடமான நெருக்கடியால் உலக சந்தை ஆட்டம் கண்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மீண்டு வருவதற்கு 18 மாதங்கள் எடுத்து கொண்டன. 2001ம் ஆண்டு ஏற்பட்ட டாட் காம் குமிழி(Dotcom Bubble) பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமெரிக்க சந்தை 75 சதவீதம் வீழ்ச்சியை கண்டது. சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை எடுத்து கொண்ட காலம் வெறும் 8 மாதங்களே.

1929ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை சுமார் நான்கு ஆண்டுகள்  இருந்தது. 1929 முதல் 1933 வரை இருந்த இந்த மந்தநிலை, பொருளாதார உலகில் மிகப்பெரிய சரிவாக(Great Depression) சொல்லப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு தயாரான நிலையில், இந்த பொருளாதார மந்தநிலை மீண்டு வர காரணமாக இருந்தது என பொருளாதார வல்லுனர்களும் அக்காலத்தில் கூறியிருந்தனர்.

நடப்பில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை எப்போது சரியாகும் என்பதற்கான அறிகுறி தற்போதைய நிலையில் கிடைக்க  பெறவில்லை. இருப்பினும் அடுத்த இரு வருடங்கள் இந்த நிலை நீடிக்கலாம் எனவும், அதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் பொருளாதார வல்லுநர்களால் சொல்லப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மெல்ல மெல்ல தளர்வின் மூலம் விடுவிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் பெரிய வீழ்ச்சி கண்ட உலக பங்குச்சந்தை குறியீடுகள் ஏப்ரல் மாதத்தில் நல்ல ஒரு ஏற்றத்தை சந்தித்தன. இருப்பினும் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் தவிர மற்ற நாடுகளில் உள்ள சந்தைகள் பெரியளவில் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

நடப்பு மாதத்தின் இறுதியில் நாட்டின் ஜனவரி – மார்ச் காலத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சியை அறிவிக்க உள்ளது ரிசர்வ் வங்கி. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும் நாட்களில் பெரும்பாலானவை வெளிவர உள்ளது. இதன் காரணமாக சந்தை போக்கு மாறலாம்.

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த சவாலாக சில முக்கிய காரணிகள் நடப்பு 2020ம் ஆண்டில் உள்ளது. ஊரடங்குக்கு பிறகான தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின் நிலைமை முக்கியத்துவம் பெறுகிறது. இதனை ஒட்டியே வரக்கூடிய காலாண்டுகளில் பொருளாதார மாற்றம் நிகழும்.

இரண்டாவதாக ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த அமெரிக்க – சீன வர்த்தக போர் எவ்வாறு சூடுபிடிக்க உள்ளது என்பதனையும் உலக சந்தைகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனங்களின் நிலை என்ன என்பதும் அவசியமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சம்மந்தமாக அமெரிக்கா மற்ற நாடுகளை கூட்டு சேர்த்துள்ளது. இது சீனாவுக்கு எதிராக செயல்படும் நிலையில், உலகின் முக்கிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, அதனை எப்படி கையாள போகிறது என்பதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதுவரை தொற்றுநோய் என்றாலே மூன்று நிலைகளுக்கு மேல் இருந்ததாக வரலாற்று தகவல்கள் சொல்கின்றன. ஆனால் சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற தொற்றுகளில் அவ்வாறான பாதிப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை. ஒரு வேளை கோவிட்-19 மனிதர்களின் உடலுக்குள் மாற்றமடைந்து(Mutation) விட்டால், அது இரண்டாவது அலைக்கு வித்திடலாம். இன்றைய அறிவியல் வளர்ச்சி, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பதும் சவாலான விஷயம் தான்.

வைரஸ்களின் வரலாற்றில் இதுவரை பெரும்பான்மையான மற்றும் முக்கிய தொற்றுநோய்களுக்கு மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது ஆராய்ச்சியில் உள்ளது எனலாம். தொற்றுநோய்களின் தன்மை தானாக வந்து, மறைவதாக தான் உள்ளது. இரண்டாம் அலை வந்தால், ஊரடங்கை அமல்படுத்த போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. இது திட்டமிட்டபடி நடக்குமா, நடக்கும் பட்சத்தில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியை பிடித்தால், அமெரிக்காவின் புதிய கொள்கைகள் எப்படி இருக்கும் என்பதனையும் சந்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஆக, 2020ம் ஆண்டு பங்குச்சந்தைக்கு பண்டிகை காலமாக மாறியுள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. உலக பங்குச்சந்தை பல வீழ்ச்சிகளையும், பிரமாண்டமான ஏற்றங்களையும் பார்த்த வரலாறு உண்டு.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com