Category Archives: Think Invest

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

Can you invest in Chennai Super Kings – CSK – Unlisted Equity(Pre-IPO) ?

கடந்த 2007ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் துவங்கப்பட்டது தான் இந்தியன் பிரீமியர் லீக்(IPL). உரிமையாளர்(Franchise) சார்ந்து கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டு 2008ம் ஆண்டு முதல் இன்று வரை வருடந்தோறும் ஐ.பி.எல். போட்டிகள் நடந்து வருகின்றன. 

இதுவரை நடைபெற்ற 15 வருட ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கை அணிகளாக மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல வருடங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப காலங்களில் மாஸ்டர் பிளாஸ்டர்(Master Blaster) என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இருந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் அமைந்தது தான்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இந்தியா வின்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக முன்னாள் ஐ.சி.சி. தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சீனிவாசன் இருக்கிறார். இந்தியா வின்ஸ ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக எம்.எஸ். தோனியே இருந்து வருகிறார். பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாட்டின் முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாகும். 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பை(USD One Billion – Unicorn) கொண்ட நிறுவனத்தை தான் யுனிகார்ன் நிறுவனம் என கூறுவதுண்டு.

கடந்த 15 வருட ஐ.பி.எல். வரலாற்றில் நான்கு முறை கோப்பையை இந்நிறுவனம் வென்றிருந்தாலும், 2013ம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்ட நிகழ்வில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016, 2017 என இரண்டு வருடங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்நிகழ்வில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

2013ம் ஆண்டில் லண்டனை சேர்ந்த பிராண்ட் பினான்ஸ் நிறுவனம், உலகின் மதிப்புமிக்க 150 விளையாட்டு அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்ந்தெடுத்தது இதன் சிறப்பம்சம். ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ்(Mumbai Indians) அணியும் அதிக போட்டிகளை நேருக்கு நேர் எதிர்கொண்ட அணிகளாக உள்ளது. கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்கும் முதலீட்டு செலவிலும் இவ்விரு அணிகள் தான் முன்னிலையில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூட்டாக ஏற்படுத்திய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இரு முறை கோப்பைகளை வென்ற அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே உள்ளன. 

பொதுவாக பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட, இந்திய கம்பனிகள் சட்டப்படி, அந்நிறுவனத்தை பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக(Public Limited / Listed) பதிவு செய்ய வேண்டும். பின்னர் தான் அந்த நிறுவனம் சந்தையில் ஐ.பி.ஓ. முறையில் பங்குகளை வெளியிடும். அப்போது தான் பொதுவெளியில் சாமானிய மக்களும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க இயலும். 

இதே முறையில், பொதுவெளியில் பங்குகளை வெளியிடாமல் ஆனால் குறிப்பிட்ட பங்குதாரர்கள் மட்டும் முதலீடு செய்யும் பொருட்டு வந்த நிறுவனங்கள் தான் இன்று பெரும்பாலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக வலம் வருகின்றன. உதாரணமாக ஜொமாடோ(Zomato), ஒயோ, ஸ்விக்கி, பைஜூ, போட்(boAt) ஆகிய நிறுவனங்கள்.

இது போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமாகவும், தனியார் முதலீட்டை பெறக்கூடிய பங்குகளை கொண்ட நிறுவனமாகவும் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏறக்குறைய அனைவரும் முதலீடும் செய்யலாம். அதே வேளையில் அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை(Unlisted Equity). 

2014ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு சந்தையில் பட்டியலிடப்படாத(Unlisted) பங்கு முதலீட்டை கொண்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அதாவது இந்த பங்கு பொதுவெளி சந்தையில் வர்த்தகமாகாது. ஆனால், இந்த பங்குகளை ஏற்கனவே வைத்திருக்கும் குறிப்பிட்ட முதலீட்டாளர்களிடம் அவர்கள் விற்கும் விலையில் வாங்கி கொள்ளலாம்.

2021-22ம் நிதியாண்டின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 1.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் பங்களிப்பில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்(India Cements Shareholders Trust) 30 சதவீத பங்குகளையும், ஸ்ரீ சாரதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 7 சதவீத பங்குகளையும், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 6 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் டிரஸ்ட் நிறுவனம் 2.50 சதவீத பங்குகளையும், டி மார்ட்(DMart) நிறுவனத்தின் தலைவர் திரு. ராதா கிஷன் தமானி 2.40 சதவீத பங்குகளையும் வைத்துள்ளார். இன்னபிற தனியார் நிறுவனங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வைத்துள்ளது. நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 30.81 கோடி(Equity Shares). நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கல்லிடைக்குறிச்சி விஸ்வநாதன் சுப்பிரமணியம் உள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்படாத சந்தை மதிப்பு சுமார் ரூ. 5,100 கோடி. பங்கு ஒன்றின் விலை 180 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு முதலீட்டாளராக நூறு பங்குகளை வாங்க வேண்டியது அவசியம். 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 341 கோடி ரூபாயாகவும், வருவாய் வளர்ச்சி 38 சதவீதமாகவும் இருந்துள்ளது.

CSK - Profit and loss - FY22

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் செலவினம் 308 கோடி ரூபாயாகவும், நிகர லாபம்(Net Profit) ரூ. 32 கோடியாக உள்ளது. கடன்-பங்கு விகிதம் 0.25 என்ற அளவிலும், ஒரு பங்கு மீதான வருமானம்(EPS) 95 பைசாவாகவும் இருந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் எட்டாம் ஆண்டு பொதுக்கூட்டம் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. மார்ச் 2022 முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves & Surplus) 245 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 130 கோடி (மார்ச் 2022). 2021-22ம் நிதியாண்டில் நிறுவனம் சார்பில் ஈவுத்தொகை(Dividend) எதுவும் அறிவிக்கப்படவில்லை. சொல்லப்பட்ட காலத்தில் பெறப்பட்ட லாபத்திலிருந்து நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்புக்கு தொகை எதுவும் ஒதுக்கப்படவில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம், பங்குச்சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பை பற்றி தற்போது வெளியிடவில்லை. அதே வேளையில் நிறுவனத்தின் வருமான வாய்ப்புகளாக ஊடக உரிமைகள்(Media Rights), ஸ்பான்சர்சிப், விளம்பரங்கள், போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், கடிகாரங்கள், டி-சர்ட்டுகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திற்கு, சூப்பர்கிங்ஸ் வென்ச்சர்ஸ் என்ற துணை நிறுவனமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

CSK நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்யலாமா ?

  • பொதுவாக பங்குச்சந்தையில், பொதுவெளியில் வெளியிடப்படும் நிறுவன பங்குகளில் ரிஸ்க் தன்மை அதிகமாக இருக்கும் நிலையில், பட்டியலிடப்படாத இது போன்ற நிறுவன பங்குகளிலும் ரிஸ்க் தன்மை மிகவும் அதிகமே. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதனை களைய செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது. ஆனால் பட்டியலிடப்படாத பங்குகளில் இதனை நாம் காண முடியாது. 
  • பங்குச்சந்தையில் காணப்படும் அதிக ஏற்ற-இறக்கங்கள், பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் பொதுவாக நடைபெறாது. இதற்கான காரணம் மிகக்குறைந்த பங்குகள் மட்டும் இங்கே வர்த்தகமாகும். சில நேரங்களில்(மாதங்கள் அல்லது வருடங்கள்) பங்கு வர்த்தகமே ஆகாது. வாங்குவதற்கும், விற்பதற்கும் நித்தமும் ஆட்கள் இருக்க வேண்டுமே !
  • பங்குச்சந்தையில் ஏற்கனவே அளப்பரிய அளவில் முதலீடு செய்து விட்டு, தனியார் நிறுவனங்களில், இது போன்ற பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோர் இதனை ஒரு வாய்ப்பாக கருதலாம். ஒரு வேளை, இது போன்ற நிறுவனங்கள் பின்னொரு காலத்தில் பங்குச்சந்தைக்கு(IPO Listed) வரும் போது, ஏற்கனவே முதலீட்டு செய்திருக்கும் நிலையில் அதிக விலையில் பங்குகளை விற்று வெளியேறலாம். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும், திறமையான நிர்வாகமும் இதனை வெளிக்காட்டும்.
  • பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளை, தற்போதைய நிலையில் வெகு சில தளங்களே வாங்கும்-விற்பனை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தளங்களின் நம்பகத்தன்மையையும் நாம் சரிபார்த்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் கைதேர்ந்தவர்களுக்கும்(25 வருடங்களுக்கு மேல் முதலீட்டு அனுபவம்), அச்சந்தையில் அதிக முதலீடு செய்து கோடிகளில் லாபத்தை ஈட்டியவர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பட்டியலிடப்படாத பங்குகள் ஒரு அரிய முதலீட்டு வாய்ப்பாகும். மற்ற கத்துக்குட்டிகளுக்கு இவற்றிலிருந்து விலகியிருப்பதே நன்மை பயக்கும் !

“Unlisted equity is an opportunity to build wealth, but it’s always risky than listed”

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்கு முதலீடு அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி 

Infosys reported a net profit of Rs.24,108 Crore in the Financial year 2022-23 – Results

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த வார முடிவில் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவு மற்றும் ஒட்டுமொத்த ஆண்டுக்கான நிதி அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,441 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,443 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம்(OPM %) 24 சதவீதமாக உள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ. 6,134 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டின்(2021-22) நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்டிருக்கும் வருவாய் 16 சதவீதமும், நிகர லாபம் 8 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டினை ஒட்டுமொத்தமாக காணும் போது, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,46,767 கோடியாகவும், செலவினம் 1,11,637 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. 

சொல்லப்பட்ட நிதியாண்டின் முடிவில் நிறுவனம் 24,108 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் பங்கு மீதான வருவாய்(EPS) 58 ரூபாயாக உள்ளது. 2011-12ம் நிதியாண்டில் இது 18 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் டிஜிட்டல் சேவையை சார்ந்தும், நிதித்துறை(Financial Services) சார்ந்த சேவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.  

புவியியல் சார்ந்து காணும் போது, நிறுவனத்தின் 62 சதவீத வருவாய் வட அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. ஐரோப்பாவில் 25 சதவீதமும், உள்நாட்டில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வருவாய் ஈட்டப்படுகிறது. உலகின் சிறப்பான 500 நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின்(Infosys Limited) முக்கிய வாடிக்கையாளர்களாக மெர்சிடஸ்-பென்ஸ், எச்.எஸ்.பி.சி. வங்கி, லாக்கீட் மார்ட்டின், அமெரிக்க ராணுவம், அமெரிக்க கடற்படை, ஐ.பி.எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் டச்சு வங்கி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.22 லட்சம் கோடி. 

கடந்த நிதியாண்டில் எதிர்பார்த்த வருவாய் மற்றும் லாப மதிப்பீட்டை காட்டிலும் குறைவாக இருந்ததும், நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் வழிகாட்டல்(Financial Guidance) நிறுவனத்தின் சார்பில் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்ததால், திங்கள் கிழமை அன்று (17-04-2023) இந்த பங்கின் விலை 10 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்தது. நீண்டகால முதலீட்டாளர்களிடையே இது எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாது, விலை வீழ்ச்சியால் பங்கு வாங்குவதற்கான வாய்ப்பையும் இது போன்ற நிகழ்வு வழங்குகிறது.

உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றம் ஆகியவற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை சரிவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. அதன் கடன்-பங்கு விகிதம் 0.11 என்ற அளவில் உள்ளது. மார்ச் 2023 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 73,338 கோடியாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சராசரியாக 14 சதவீதமும், லாப வளர்ச்சி 10 சதவீதமாகவும் இருந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 17 சதவீதம் (கூட்டு வட்டியில்) ஏற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் 28 சதவீதம் இறக்கமடைந்துள்ளது. அடிப்படை பகுப்பாய்வின் படி(Cash Flow – Fundamental Analysis), இன்போசிஸ் பங்கின் விலை ரூ. 900 – ரூ. 1,100 என்ற அளவில் அமைந்துள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ? 

Global Market Indices in the year 2022 – Returns %

2022ம் ஆண்டில் பல்வகை முதலீடுகளின்(Asset Classes) வளர்ச்சி விகிதத்தை காணும் போது, உலகளவில் அதிகபட்சமாக தங்கத்தின் மீதான முதலீடு 11 சதவீதமும், பெரு நிறுவனங்களின் பங்கு முதலீடு(Large Cap Equity) 3 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.5 சதவீதமும், தனியார் கடன் பத்திரங்கள் 2.7 சதவீதமும், அரசு பத்திரங்கள் 2.3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மாறாக நடுத்தர மற்றும் குறு நிறுவனங்களின் பங்கு முதலீடு இறக்கத்தை சந்தித்துள்ளன.

கடந்த பத்து வருட காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீடு 2015ம் ஆண்டை தவிர்த்து(-4.1 %) பார்க்கையில், அனைத்து வருடமும் ஏற்றத்தில் தான் முடிந்துள்ளன. தங்கத்தின் மீதான முதலீடு 2019 மற்றும் 2020ம் வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளன. உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் அதிகரித்துள்ளது.

பொதுவாக பொருளாதார மந்தநிலை காணப்படும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், மீண்டெழும் பொருளாதாரத்தில் தங்கத்தின் வருவாய் குறைவதும் இயல்பே. பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, பங்கு முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான ஏற்றம் காணப்படும்.   

2022ம் வருடத்தில் வளர்ந்த நாடுகளின் பங்குச்சந்தை முதலீடு பெரும்பாலும் இறக்கத்தையே சந்தித்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் முடிவில் அமெரிக்காவின் நாஸ்டாக்(Nasdaq) குறியீடு 33 சதவீதம் சரிந்துள்ளது. இந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப குறியீடு(FAANG) மட்டும் 40 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளது. ஜெர்மனியின் டாக்ஸ்(DAX) 12 சதவீதமும், ஜப்பானின் நிக்கி(Nikkei) 9 சதவீதமும், ஐரோப்பாவின் ஸ்டாக்ஸ்(Stoxx) 11 சதவீதமும் இறக்கத்தை சந்தித்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஐக்கிய ராச்சியத்தின் புட்சி(FTSE) குறியீடு மட்டும் ஒரு சதவீதம் என்ற அளவில் 2022ம் ஆண்டு ஏற்றம் பெற்றுள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் குறியீடுகள் 14 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்துள்ளன. அதிகபட்சமாக ரஷ்ய நாட்டின் பங்குச்சந்தை குறியீடு 39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தோனேசிய மற்றும் சிங்கப்பூர் நாட்டின் பங்குச்சந்தை குறியீடுகள் 4 சதவீதம் என்ற அளவில் ஏற்றமடைந்துள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்திய பங்குச்சந்தை மட்டுமே 5 சதவீதம் என்ற அளவில் ஏற்றம் பெற்று முதலிடத்தில் உள்ளது. நிப்டி (Nifty) தேசிய பங்குச்சந்தையில் உலோகத்துறை, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்(CPSE) மற்றும் தனியார் வங்கிகளின் குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேல் வருவாயை தந்துள்ளது. அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் குறியீடு 70 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

மாறாக, தகவல் தொழில்நுட்ப துறை 26 சதவீதமும், மருந்துத்துறை(Pharma) 11 சதவீதமும், ரியல் எஸ்டேட் குறியீடு 11 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களிடையே அதிகமாக புழங்கும் எப்.எம்.சி.ஜி.(FMCG) துறை 17 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2022ம் ஆண்டில் 52 சதவீதமும், கோல் இந்தியா 54 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ ஆகிய பங்குகளின் விலை 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளன. 

வரக்கூடிய காலம் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான நிலையாக இருப்பதால், பங்கு முதலீட்டில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும். நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாள தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

How is the Inflation and Interest rate playing in the Real Economy ? 

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட உலகளவிலான ஊரடங்கிற்கு பின்பு, உலக பொருளாதாரம் இந்த சுழற்சி முறையில்(Life Cycle) தான் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்க, அதனை அப்படியே பின்பற்றி வருகிறது உலக பொருளாதாரமும். கூடுதலாக உக்ரைன்-ரஷ்ய போர் மற்றும் சீன-தைவான் எல்லை பதற்றமும் அடங்கும். 

கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு(Economic Stimulus) அன்றைய நிலையை களைய பெரிதும் உதவியது. இருப்பினும் அதன் காரணமாக பணவீக்க விகிதமும் கடந்த சில காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதன் விளைவு தேவை-உற்பத்திக்குமான இடைவெளியில் தான் உள்ளது. இந்த இடைவெளியே பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு எடுத்து செல்லும். 

உலக பங்குச்சந்தைகளும், அரசு கடன் பத்திர சந்தைகளும் வரவிருக்கும் காலத்தில் ஆட்டம்(High Volatility) காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் நவீன பொருளாதாரத்தில் இது ஒரு சுழற்சி முறையே(Life Cycle). பணவீக்கம் உயர்ந்தால் அதனை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியின் வேலை தான். அதிகரித்து வரும் பொருட்களின் சந்தை விலையை மட்டுப்படுத்த, போடப்படுகிற கடிவாளம் தான் இந்த வட்டி விகித உயர்வு. 

வட்டி விகித உயர்வால் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி குறைந்து சந்தையில் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இதன் தாக்கம் தொழில் நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், பங்கு விலையும் சரியும்(அனைத்து நிறுவங்களுக்கும் பொருந்தாது). கடனில்லா நிறுவனங்களுக்கு வருவாய் குறைவு ஒரு பிரச்சனையில்லை, ஆனால் கடனை அதிகமாக கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு தான் இந்த சிக்கலே !

வங்கி வட்டி விகித உயர்வு, டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டை மேற்கொள்பவருக்கு வேண்டுமானால் வாய்ப்பாக அமையலாம். ஆனால் வங்கிகளில் கடன் வாங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தான் செலுத்த வேண்டிய வட்டி செலவு அதிகரித்து விடும். சொல்லப்போனால், டெபாசிட்தாரரருக்கும் இந்த வட்டி உயர்வு நீண்டகாலத்தில் பயன் தராது. 

பணவீக்கத்தை கட்டுப்படுத்திய பிறகு வங்கிகளின் வட்டி வருவாய் விகிதத்தையும் மத்திய வங்கி குறைத்து விடுமே. இதனை தான் நாம் தொழிலாளர்களின் பி.எப்.(Provident Fund), அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி வைப்பு நிதிகளில் காணலாம். பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த காலங்களில் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் அதிகமாகவும், மாறாக பணவீக்கம் குறையும் போது, சேமிப்புக்கான வட்டி விகிதமும் வெகுவாக குறைக்கப்படும். இதனை நாம் பெரும்பாலும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதற்கு பிறகான காலங்களில்(Economic Recession & Growth) காணலாம். 

இது ஒருபுறம் இருக்க, கடந்த காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாய், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடு என்று சொல்லப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வருடத்தின் பணவீக்க விகிதம் 7 சதவீதம் என எடுத்து கொண்டால், சேமிப்புக்கான வட்டி  விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். இதுவே வங்கி சேமிப்புக்கணக்குக்கான வட்டி விகிதத்தை சொல்லவே வேண்டாம்.  அதே வேளையில், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து காணப்படும். 

 பொதுவாக மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது, பெரும்பாலான வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதத்தை உடனே அதிகரித்து விடுவதுண்டு. மாறாக, நமது சேமிப்புக்கான வட்டி பெரும்பாலும் பணவீக்கத்திற்கு குறைவாக இருக்கும். இது போக கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியது இருந்தால், முடிவில் நிகர இழப்பு தான் !

எனவே வட்டி விகித உயர்வு காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய மற்றும் நீண்ட காலத்தில் குறைந்த வரி விகிதத்தில் அதிக வருவாயை ஏற்படுத்தும் முதலீட்டை கண்டறிவது அவசியம். அது போன்ற முதலீட்டு வாய்ப்புகள் தான் பரஸ்பர நிதிகளும்(Mutual Funds), பங்குச்சந்தைகளும். பங்குச்சந்தைக்கும், பரஸ்பர நிதிக்குமான ரிஸ்க் தன்மை என்பது வெவ்வேறு. சரியான நிதி இலக்கை ஏற்படுத்தி  விட்டு, அதற்கான முதலீட்டை துவக்கினால் போதுமானது. நீண்டகாலத்தில் உங்களது முதலீடு உங்களுக்காக உழைக்க தயாராகும்…!

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

முதலீட்டாளர்கள் கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள்

முதலீட்டாளர்கள் கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள்

Floating Rate Bonds and Funds – Inflation Insights

உலகளவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். விண்ணைத் தொடும் விலைவாசி ஒருபுறம் இருக்க, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக உயர்த்தும் நிலையில் மத்திய வங்கிகள் உள்ளன.

பொதுவாக பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதும், இதுவே பணவீக்கம் குறையும் போது அல்லது பணவாட்டம்(Deflation) ஏற்படும் நிலையில் நுகர்வு தன்மையை ஊக்கப்படுத்துவதும் இயல்பான ஒன்று.

வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது வங்கிக்கடன் பெறுவோருக்கு சாதகமானதல்ல. வட்டி விகித அதிகரிப்பு  தனிநபருக்கு மட்டுமல்ல, தங்களது தொழிலுக்காக கடன் பெறும் நிறுவனங்களுக்கும் நல்ல செய்தியல்ல. இதன் காரணமாக நிறுவனங்களின் வருவாயில் கடனுக்கான வட்டியை செலுத்திய பிறகு, லாபங்கள் குறையலாம். அதிக கடனை கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் நட்டத்தையும் சந்திக்கலாம்.

இது பங்குச்சந்தைக்கும் பாதகமான நிலை தான். அதே வேளையில் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு சற்று ஆறுதலான விஷயமாக இது அமையும். பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் அதிகரித்தால், நடுத்தர மற்றும் நீண்டகால கடன் பத்திரங்களுக்கான தேவை குறைந்து, அவற்றின் மீதான முதலீட்டு வருவாய் குறையும். இதற்கு மாறாக வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, கடன் பத்திரங்களுக்கான தேவை அதிகரித்து முதலீட்டு வருவாய் கூடும்.

அடுத்து வரும் சில காலாண்டுகளில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும். இது பங்குச்சந்தைக்கும், நீண்டகால கடன் பத்திரங்களுக்கும் குறுகிய காலத்தில் பாதகத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் ஓரளவு வருமானம் தரக்கூடிய மற்றும் பாதுகாப்பான(அதிக ஏற்ற-இறக்கம் இல்லாத) முதலீடாக வங்கி டெபாசிட், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள், பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் லிக்விட் பண்டுகள் ஆகியவை உள்ளன. 

மேலே சொன்ன திட்டங்கள் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்காவிட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர கால தேவைக்கு பயன்படும் ஒரு வாய்ப்பாக உள்ளது. இந்நிலையில் தான் தொடரப்போகும் வங்கி வட்டி விகித அதிகரிப்பை, ஒரு முதலீட்டாளராக சாதகமாக பயன்படுத்தும் திட்டம் உள்ளது.

இவை தற்போது முதலீட்டாளர்களை கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட்(Floating Rate) திட்டங்களாக அமைந்துள்ளது எனலாம். வட்டி விகித அதிகரிப்பை நாம் சாதகமாக பயன்படுத்த இந்த ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் பயன்படுகிறது. எப்போதெல்லாம் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுகிறதோ, அப்போது ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வருவாயிலும் மாற்றம் செய்யப்படும்.

உதாரணமாக வட்டி விகிதம் அதிகரித்தால், ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வருவாயும் அதிகரிக்கும். மாறாக வட்டி விகிதம் குறைந்தால், இத்திட்டத்தின் வருவாய் குறையும். மற்ற கடன் பத்திரங்களின் நிலையான வட்டி விகித ரிஸ்க் தன்மையை குறைக்க, ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வட்டி விகித வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் வங்கி டெபாசிட் மூலமும், பரஸ்பர நிதிகளில் பண்டு வாயிலாகவும் கிடைக்கப்பெறுகிறது. 

RBI Floating Rate Savings Bond:

  • அரசு பத்திரங்களாக கிடைக்கப்பெறுவதால், ரிஸ்க் என்பது பெரும்பாலும் இல்லை. அதே வேளையில், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்காது.

 

  • பணவீக்கம் அதிகரிக்கும் காலங்களில், வட்டி விகித அதிகரிப்பை ஒரு முதலீட்டு வாய்ப்பாக பயன்படுத்தி, நடுத்தர காலத்திற்கு உதவும் ஒரு திட்டமாகும்.
  • குறைந்தபட்ச முதலீடு – ரூ.1000 & அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு எதுவுமில்லை.
  •  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். தேசிய சேமிப்பு பத்திரங்களை(NSC) காட்டிலும் வட்டி வருவாய் சற்று கூடுதலாக இருக்கும்.
  • ஏழு வருடங்களில் முதிர்வு அடைக்கக்கூடிய திட்டமாக இருப்பதால், முன்னரே முதலீட்டை திரும்ப பெற முடியாது (மூத்த குடிமக்கள் தவிர்த்து).
  • கிடைக்கப்பெறும் வட்டி வருவாய்க்கு, வரி விதிப்பு உண்டு. 

   

  • பணப்புழக்கம்(Liquidity) குறைவு மற்றும் சந்தையில் பட்டியலிடப்படாதது இதன் பாதகமான அம்சம்.

 

  • வருமான வரி வரம்பில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இத்திட்டம் ஓரளவு பயன்படும்.

Floating Rate Fund (Mutual Fund): 

  • இது ஒரு திறந்தநிலை(Open-ended) கடன் சார்ந்த பண்டாகும். வட்டி விகித மாறுபாட்டை கொண்டிருக்கும் சொத்துக்களில் குறைந்தபட்சம் 65 சதவீத முதலீட்டை இந்த பண்டு கொண்டிருக்கும்.

 

  • அஸெட் அலோகேஷன் முறையில், வட்டி விகித அதிகரிப்பை சாதகமாக பயன்படுத்த இந்த பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். மற்ற நிரந்தர வருவாயை(Fixed income) அளிக்கும் திட்டங்களை காட்டிலும், சொல்லப்பட்ட வட்டி விகித காலங்களில் ப்ளோட்டிங் ரேட் பண்டுகள் சற்று கூடுதல் வருவாயை கொடுக்கும்.
  • ப்ளோட்டிங் ரேட் பண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மற்றும் வெளியேறலாம். பெரும்பாலும் வெளியேறும் கட்டணம் இது போன்ற திட்டங்களுக்கு பெறப்படுவதில்லை.
  • குறைந்தபட்ச முதலீடு ரூ.500 (எஸ்.ஐ.பி. முறையில் 100 ரூபாய் முதல் துவக்கலாம்).
  •  பொதுவாக கடன் சார்ந்த பண்டு திட்டங்களில், வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, என்.ஏ.வி.(NAV) குறைந்து வர்த்தகமாகும். ஆனால், ப்ளோட்டிங் ரேட் பண்டுகளில் வட்டி விகித வாய்ப்பை பயன்படுத்தி முதலீடு செய்யப்படும்.

 

  • கடன் சார்ந்த பண்டுகளில் காணப்படும் வரி விகிதமே, இந்த திட்டத்திற்கும் பொருந்தும்.

கவனிக்க:

குறுகிய காலத்தில் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் பயன்பட்டாலும், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை அளிக்க பங்கு சார்ந்த திட்டங்களை போல வேறு எதுவுமில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

Things to do as an Investor in the Economic or War Crisis 

2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உலக பொருளாதார வீழ்ச்சி, தேவைக்கும்-உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல், பொருட்கள் மற்றும் சேவையை பெறுவதில் இடையூறு, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டது. இதன் மூலம் நாம் புதியதொரு இயல்பு வாழ்க்கையை(New Normal) தொடர வேண்டிய மாற்றம் நிகழ்ந்தது.

கடந்த ஓராண்டாக பொருளாதார நிலை ஓரளவு மேம்பட்டு வந்திருந்தாலும், 2020ம் ஆண்டு உலகளவில் வீழ்ந்த உலக பங்குச்சந்தை குறியீடுகள் வேகமாக மீண்டெழுந்தது. வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட சந்தை காலமாக இவை சொல்லப்படுகிறது. புதிய உச்சத்தை அடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அதிக ஏற்ற-இறக்கத்துடன் பக்கவாட்டில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை குறியீடுகள் பணவீக்க விகிதம் மற்றும் வங்கி வட்டி விகித மாற்றத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது உக்ரைன்-ரஷ்ய போர் நிலையும் தொற்றி கொண்டன. ஒவ்வொரு நாள் வர்த்தகத்தின் ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக ஒவ்வொரு தகவலும் சொல்லப்படுவதுண்டு. நடப்பு சந்தை இறக்கத்திற்கு உக்ரைன்-ரஷ்ய போர் மட்டுமே இப்போது காரணமாக அமைந்து விட்டது.

பொதுவாக நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருப்பதற்கான குறியீடாக அந்நாட்டின் பங்குச்சந்தை, தொழிற்துறை மற்றும் வீட்டுமனை(Realty) வளர்ச்சியை கொண்டிருக்கும். இதுவே பொருளாதார மந்தநிலையில் இருக்கும் போது, மேலே சொல்லப்பட்டவை இறக்கத்திலும், இதற்கு மாறாக தங்கம் மற்றும் கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்கும். அதாவது சுருக்கமாக சந்தை வீழும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது கடன் பத்திரங்களின் தேவை அதிகரிப்பதும் பொருளாதார உலகின் இயல்பு.

எனவே பொருளாதாரத்தில் தேவைக்கும்-இருப்புக்குமான இடைவெளியே பெரும்பாலும் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கிறது. முதலாம் உலக போருக்கு பின்பு, அடுத்தவொரு நிகழ்வு இது போன்று நடைபெறாது என நினைத்திருந்த நிலையில் இரண்டாம் உலகப்போரை இவ்வுலகம் சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. ஜெர்மனி மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலைக்கு(Recession) செல்ல உள்ளதாக அந்நாட்டின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கிறது. உக்ரைன்-ரஷ்ய போர் ஒரு வாரத்தில் முடியுமா, இல்லையெனில் இன்னும் பல காலம் எடுத்து கொள்ளுமா என்பதனை நம்மால் கணிக்க இயலாத ஒன்று.

அதே வேளையில், ஒவ்வொரு நாட்டில் ஏற்பட்டுள்ள கடன் அதிகரிப்பும் அதனை சார்ந்த பணவீக்க விகிதமும் தான் வரக்கூடிய நாட்களில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றையும் நாம் எதுவும் செய்து விட முடியாது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வேலை மத்திய வங்கிக்கும், அரசுக்கும் தான்.

வரக்கூடிய காலகட்டங்கள் நமக்கு மீண்டும் புதியதொரு இயல்பு நிலையை அறிவுறுத்தலாம். குறுகிய காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையின் விலை அதிகரிக்கலாம். பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படலாம். நீண்டகாலத்தில் பொருளாதாரம் ஏற்றமடைய கூடிய வாய்ப்பு தென்பட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகமாக உள்ளது.

இருப்பினும், முதலீட்டாளராக நாம் நம்மால் முடிந்த சில முன்னெடுப்புகளை செய்ய முடியும். 

  • எதிர்வரும் சவால்களை சந்திக்க: உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்குமான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் பேரில் போதுமான டேர்ம் காப்பீடு தொகை, விபத்து காப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மருத்துவ காப்பீட்டை உறுதி செய்துள்ளீர்களா ?
  • வேலையிழப்பு அல்லது தொழிலில் மந்தநிலை ஏற்படக்கூடிய காலத்தை சமாளிக்க குறைந்தது ஆறு மாதம் முதல் இரண்டு வருடத்திற்கு தேவையான அவசர கால நிதியை(உங்களது மாத வருமானத்தின் மடங்குகளில்) தயார் செய்து விட்டீர்களா ?
  • நிதி இலக்குகளுக்கான(Financial Goals) சேமிப்பு மற்றும் முதலீட்டு தொகை தடையேதும் இல்லாமல் செல்கின்றனவா ?
  • பொதுவாக உங்களது நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds) பயன்படுத்துங்கள். அடுத்த தலைமுறைக்கு தேவையான செல்வவளத்தை ஏற்படுத்த நேரடி பங்குகளை(Direct Equity) கவனியுங்கள். குறுகிய கால தேவைகளுக்கு பங்குச்சந்தையை பயன்படுத்த வேண்டாம்.
  • பங்குச்சந்தை இறங்கினால் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதே வேளையில் சிறு துளி பெரு வெள்ளம் போல, சிறுக சிறுக முதலீடு செய்து வாருங்கள். ஒரே நாளில் பணக்காரராக வேண்டும் என்று பங்குச்சந்தையில் உங்களது கைவிரல்களை சுட்டு கொள்ள வேண்டாம்.
  •  எதனையும் நாம் நேர்மறையாக அணுக வேண்டுமென்றாலும், பங்குச்சந்தையில் மட்டும் பங்கு நிறுவனங்களை கண்டறியும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். பைசாவில் இருந்து பத்து ரூபாய்க்கும், நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கும் குறுகிய காலத்தில் ஏற்றமடையும் பங்குகள் அனைத்தும் நல்ல நிறுவன பங்குகள் என்று சொல்லி விட முடியாது.
  • பங்குச்சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறக்கம் கண்டிருக்கும் நாட்களில் பெரும்பாலும் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடைபெற்றுள்ளது. எனவே நாம் இதனை ஒரு வாய்ப்பாக அமைத்து கொள்ள, நல்ல நிறுவன பங்குகளை அலசி ஆராய்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • பங்குகளை அவசரமாக வாங்க வேண்டும் என்ற நிலையை எப்போதும் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதற்கென கிடைக்கும் உள்ளார்ந்த விலையை(Intrinsic or Fair Value) எப்போதும் பரிந்துரையுங்கள். சில நேரங்களில் நல்ல நிறுவன பங்குகள் நாம் நினைக்கக்கூடிய விலையில் கிடைக்கப்பெறாது.
  • இனிவரும் காலங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் என்பதனை மனதில் நிறுத்தி, அஸெட் அலோகேஷன் முறையை கடைபிடியுங்கள். வருடத்தின் எல்லா நாட்களிலும் பங்குச்சந்தை மட்டுமே ஏற்றம் பெறும், தங்கம் எப்போதும் விலையேறும் என எண்ணி விட வேண்டாம். பல முதலீட்டு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்வது, நட்டத்தை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தும்.
  •  சந்தை உச்சத்தில் இருக்கும் போது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு, இறக்கத்தில் வாங்கி வைக்கிறேன் என உங்களால் எப்போதும் சரியாக கணிக்க இயலாது. அஸெட் அலோகேஷன்(Asset Allocation) செய்வதன் மூலம் மட்டுமே, நீங்கள் பெரும்பாலான வாய்ப்புகளை பயன்படுத்த முடியும்.
  • பங்குச்சந்தை அடுத்த சில வருடங்களுக்கு பெரும் வீழ்ச்சியை கண்டால் உங்களது முதலீட்டு உத்தி என்ன ? (நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தும்)
  • போன்சி(Ponzi) போன்ற ஏமாற்று வழிகளின் மூலம் நீங்கள் மிக விரைவாக பணம் சேர்த்து விட முடியும் என நம்புகிறீர்களா, மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தவிர்த்து விட முடியமா என்ன  ?
  • இறுதியாக உங்களது உயிலை(Will) தயார் செய்ய மறவாதீர்கள். இதற்கு வயது வரம்பு பெரிதாக இல்லை. 18 வயது நிரம்பியிருந்து சுயநிலையில் உங்களது உயிலை எழுதலாம். உங்களது காலத்திற்கு பின்பு ஏற்படும் நிதிச்சிக்கலை உயில் எழுதுவதன் மூலம் தவிர்க்கலாம். உலக பொருளாதார மந்தநிலையையோ, பணவீக்கத்தையோ நம்மால் கணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால் நமக்கான பாதுகாப்பையும், நிதி மேம்பாட்டையும் செய்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

India’s First Silver ETF Fund to invest – Investment opportunity 2022

பொதுவாக தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் பங்களிப்பு உற்பத்தி சார்ந்த துறையில் அதிகமாக உள்ளது. தங்கம் அணிகலன்களாக வலம் வந்தால், வெள்ளி தொழிற்துறைக்கு தேவையான முக்கிய மூலப்பொருளாக அமைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருவது பல நூற்றாண்டுகளை கடந்து வந்துள்ளது. வெள்ளியின் பங்களிப்பு தொழிற்துறையில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பங்கு சந்தைகள் சரியும். இதனை சரிக்கட்டும் ஆயுதமாக தங்கமும், வெள்ளியும் உதவும். நிதி சொத்துக்கள்(Financial Assets) வரிசையில் ஏற்கனவே தங்கம் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெள்ளி முதலீட்டிலும் இது சாத்தியப்பட்டுள்ளது.

நடைமுறையில் தங்கம் – அரசு பத்திரமாகவும், சந்தையில் இ.டி.எப். வடிவிலும் மற்றும் பரஸ்பர நிதியின் ஒரு திட்டமாகவும்(SGB, Gold ETF, Gold Fund) கிடைக்கப்பெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வெள்ளி இ.டி.எப். முதலீடு சார்ந்த விதிமுறைகளை செபி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளி மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத முதலீடு இருக்க வேண்டுமென்றும், முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் முதலீடு 99.9 சதவீதம் தூய வெள்ளியாக வாங்குவதற்கு பயன்பட வேண்டும் என விதிமுறை சொல்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தாலும், மேலும் இரண்டு நிறுவனங்கள்(Aditya Birla Sun life, Nippon India Mutual Funds) வெள்ளி சார்ந்த இ.டி.எப். திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.

புதிய பண்டு வகையாக(NFO) வரும் ஐ.சி.ஐ.சி.ஐ. சில்வர் இ.டி.எப். திட்டம் ஜனவரி 5 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பதிவுக்கு உள்ளது. பிறகு இதனை நாம் வெளிச்சந்தையிலும் வாங்கி கொள்ளலாம். உள்நாட்டு விலையில் உள்ள வெள்ளியின் செயல்திறனுக்கு ஏற்ப, Silver ETF விலையும் மாறுபடும்.

வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு இது புதிய மற்றும் எளிமையான வாய்ப்பாக காணப்படுகிறது. சில்வர் ETF மூலம் தர தூய்மை, பாதுகாப்பு மற்றும் விலை ஆகியவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ.100 (NFO) மட்டுமே.

இனி, வெள்ளியை நாம் பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு திட்டங்கள் வாயிலாகவும் வாங்கி கொள்ளலாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

How to track the Stocks(Shares) fundamentally ?

பங்குச்சந்தையில் நாம் காணும் அனைத்து பங்குகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் வர்த்தகமாகும் என சொல்லிவிட முடியாது. பொதுவாக லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் நிறுவன பங்குகள் பெரும்பாலும் அனைத்து நாட்களிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கும். அதே வேளையில் ஸ்மால் கேப் பங்குகள் அப்படியல்ல. அவற்றில் வர்த்தக புழக்கம்(Liquidity) பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) அதிகமாக இருத்தல், பெரு நிறுவன முதலீட்டாளர்களிடம்(Institutional Investors) கைவசம் இல்லாதது மற்றும் பொதுவெளியில் மிகவும் குறைவான பங்குகளே அமைந்திருப்பது அதன் வர்த்தக புழக்கத்திற்கு காரணமாக அமையும். இருப்பினும் ‘மல்டி பேக்கர்(Multibagger)’ என சொல்லக்கூடிய பல மடங்கு லாபத்தை அளிக்கவல்லது இந்த ஸ்மால் கேப் நிறுவன பங்குகள்.

அதிக பங்குகளை கொண்டு வர்த்தகமாகும் அல்லது ஒரே நாளில் வர்த்தக அளவை அதிகமாக கொண்டிருக்கும் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்தில் வருவாயை அளிக்கும் என நாம் சொல்ல இயலாது. இதற்கு உதாரணமாக யூனிடெக், ஜே.பி.அசோசியேட்ஸ், யெஸ் பேங்க்,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வோடபோன், ஜெட் ஏர்வேஸ் போன்ற பங்குகளை சொல்லலாம். நாள் வணிகத்துக்கு(Day Trading) இவை ஏற்றவையாக தெரிந்தாலும், உண்மையில் முதலீடு செய்பவர்களுக்கு நட்டத்தை மட்டும் தான் கொடுத்துள்ளன.

“A stock is not just a ticker symbol or an electronic blip; it is an ownership interest in an actual business, with an underlying value that does not depend on its share price.” – Benjamin Graham(Father of Value Investing), The Intelligent Investor

“ பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் என்பது வெறும் எண்கள் அல்ல. அவை ஒரு நிறுவனத்தின் தொழிலில் உங்களுக்கான உரிமையாகும். உண்மையான தொழிலின் மதிப்பு என்பது அதன் பங்கு விலையை சார்ந்திருக்க  வேண்டும் என்று அவசியமில்லை “ என முதலீட்டின் தந்தை என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் கூறுகிறார்.

நீண்டகாலத்தில் பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் செல்வத்தை ஏற்படுத்த வெறுமனே பங்குகளை வாங்கி விட்டால் மட்டும் போதாது. அதனை நமது சொந்த தொழிலை போல கண்காணிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • காலாண்டு முடிவுகளும், ஆண்டு பொதுக்கூட்டமும்:

சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் தனது தொழிலுக்கான காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை வெளியிட வேண்டியது அவசியம். இது அவர்களுக்கானதல்ல, நம்மை போன்ற முதலீட்டாளர்கள், நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் நிதிநிலை  அறிக்கைகளை(Financial Statements) அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. நிறுவனம் பின்னொரு காலத்தில் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாம் இது போன்ற முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் விற்பனையும், லாபமும் ஒவ்வொரு காலாண்டிலும் எப்படி உள்ளது, இதர வருமானம்(Other income) மட்டுமே அதிகரித்து வருகிறதா, நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு, நிறுவனர்களின் பங்கு அடமானம், பங்குதாரர்களின் பங்களிப்பு(Shareholding Pattern), டிவிடெண்ட் அறிவிக்கப்படும் தேதி என அனைத்து தகவல்களையும் ஒருசேர காலாண்டு முடிவுகளில் பெற்று விடலாம். இதன் வாயிலாக பிற்காலத்தில் நமது முதலீட்டு முடிவை பரிசீலிக்க இவை உதவும்.

காலாண்டு முடிவுகளும், நிதியாண்டுக்கான நிதி அறிக்கைகளும் இணையத்தில்(BSE, NSE, Company website) எப்போதும் கிடைக்கப்பெறுகிறது. அதனை சரியான காலத்தில் வாசிப்பது முதலீட்டாளரான நமது கடமை. நிறுவனம் சார்பாக ஆண்டுக்கொரு முறை பங்குதாரர்கள் கூட்டமும்(Annual General Meeting – AGM) நடைபெறுகிறது. இணையவழி மற்றும் நேரடியாக சென்றும் இது போன்ற நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டு, நிறுவனத்தின் மீது நமக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தொழில் சார்ந்த பொதுவான கேள்விகளையும் நாம் அங்கே கேட்கலாம்.

  • வாக்களிப்பதுஉங்கள் கடமை, பங்குச்சந்தையிலும்: 

ஒரு பங்குதாரராக நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கும், தொழில் கொள்கைகளை தீர்மானிக்கவும் நமக்கான வாக்களிக்கும் உரிமை பங்குச்சந்தையில் உண்டு. “ என்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் “ என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) மற்றும் தொழில் ஆதிக்கம் பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவன பங்குகளில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.

இயக்குனர் குழு மற்றும் நிறுவன பொறுப்புகளில் ஒருவரை நியமனம் செய்தல், நீக்குதல், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றிற்கு உங்களது வாக்கு ஒரு நிறுவனத்திற்கு அவசியமானது. நீங்கள் வாக்களிக்க தவறும் நிலையில், முடிவுகளும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் டாட்டா குழுமத்தில் மிஸ்திரி குடும்ப பங்குகளின் தாக்கம், வேதாந்தா நிறுவனம் பங்குச்சந்தையை விட்டு வெளியேற முடியாமல் சென்ற தருணம், யெஸ் வங்கி பங்குகளின் முடக்கம், நிறுவனங்களின் பங்குகளை திரும்ப பெறும்(Buyback of Shares) முறை, போனஸ் பங்குகள், புதிய பங்கு வெளியீடு என பல்வேறு செயல்பாடுகளுக்கு வாக்களிப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும்.

வாக்குகளை நேரடியாக அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இணைய வழியிலான(E-Voting) வாக்களிக்கும் வசதியும் இன்று நடைமுறையில் உண்டு. இது போன்ற சேவையை NSDL மற்றும் CDSL தளங்கள் நமக்காக செய்து கொடுக்கிறது. இதற்கான சேவை கட்டணத்தை(Brokerage & DP Charges) நாம் ஏற்கனவே பங்குகளை வாங்கும் போதே அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட்டோம் என்பதனை நினைவில் கொள்ளவும்.

  • நிறுவனங்களை நேரடியாக காணுங்கள், தொழிற்சாலைக்கு செல்லுங்கள்:

ஒரு நிறுவன பங்கை நாம் இணையம் வழியாக வாங்கி விட்டால், அதனோடு பங்கு முதலீடு முடிந்து விடப்போவதில்லை. இணையம் மட்டும் பங்கு முதலீட்டுக்கான வாழ்க்கையல்ல. அவை நமக்கான எளிய கட்டமைப்பு. நீங்கள் குடியிருக்கும் அல்லது வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில், நீங்கள் வாங்கிய பங்கு நிறுவன அலுவலகம் அல்லது தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கே சென்று பாருங்கள்.

நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவை எப்படி என நேரடியாக கண்காணியுங்கள். முடிந்தால், நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவிடம் அனுமதி பெற்று அவர்களது தொழிற்சாலையை சுற்றி பாருங்கள். இதற்கான வசதியை ஒரு நிறுவனத்தின் கம்பெனி செயலாளர்(Company Secretary) பொதுவாக செய்து கொடுப்பார். நிறுவனம் சார்ந்த ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் அவருக்கு மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் எந்த தொழிலையும், அலுவலகத்தையும் கொண்டிருக்காமல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஷெல் நிறுவனங்களும்(Shell companies) உண்டு என்பது சந்தை வரலாறு. சந்தையில் அவற்றின் பங்கு விலை நாள்தோறும் ஏற்றமடைகிறது என்ற ஒற்றை காரணத்திற்காக பங்குகளை வாங்காமல், நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளை கண்காணிப்பதும் அவசியம்.

நண்பர்களோடு சுற்றுலா செல்வது போல, ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு நிறுவனத்தை நேரடியாக சுற்றி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் சேவைகள்:

நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகள் எப்.எம்.சி.ஜி.(FMCG) பொருட்களை விற்கும்(Retail & Super Market) கடைகளாக தான் இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை எப்.எம்.சி.ஜி. துறையில் காணப்படும் பிரபலமான பொருட்கள் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பொருட்களாக தான் இருக்கும். உதாரணமாக இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., டாபர், கோத்ரேஜ், மாரிகோ, கோல்கேட், பஜாஜ், டி-மார்ட் போன்ற நிறுவனங்கள் தான். நமது நகரில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் தென்படும் பிராண்டுகளின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். பேச்சுவாக்கில் கடை உரிமையாளர் அல்லது விற்பனை மேலாளரிடம் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை எப்படி உள்ளதென அறிய முற்படலாம். இதற்கெல்லாம் நாம் நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ரியல் எஸ்டேட் முதலீட்டில் விசாரிக்கிறோமே !).

  • துறை சார்ந்த நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்:

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பல துறைகளை சார்ந்தவை. வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், வாகனம், நுகர்வோர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள்(Consumer Durables), எண்ணெய் சுத்திகரிப்பு, எரிசக்தி, விவசாயம், கல்வி, மின்னணு பொருட்கள், பொழுதுபோக்கு, மருத்துவம், கட்டுமானம்,காப்பீடு, காலணிகள், ஏற்றுமதி, ஜவுளி, தொலைத்தொடர்பு என பல துறைகளை உள்ளடக்கியவை.

நீங்கள் தொழில் செய்யும் நபராக இருந்தால், உங்களது துறையில் உள்ள சாதக-பாதகங்கள் உங்களுக்கு பொதுவாக தெரிந்திருக்கும். பொருளாதார மந்தநிலை காலங்களில் உங்களது தொழில் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும், அரசு கொள்கைகள் உங்கள் தொழிலுக்கு சாதகமாக உள்ளதா எனும் விஷயங்கள் உங்களது முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள். இதனை நீங்கள் பங்குச்சந்தையிலும் பயன்படுத்தலாம்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்கள் துறையில் உள்ள சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் துறை சார்ந்த ஆலோசனைகள், விவாதங்களை முன் வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் உங்களது பங்கு முதலீட்டுக்கு உதவும்.

நண்பர் ஒருவர் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) துறையின் முக்கிய பதவியில் வேலை பார்த்து வந்தால் அவரிடம் துறை சார்ந்த வளர்ச்சியையும், எதிர்காலத்தில் இவற்றின் தாக்கம் எப்படி உள்ளதென கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இன்று பங்கு முதலீடு சார்ந்த கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் வாயிலாக கிளப் ஹவுஸ், முகநூல்(Facebook Events), வலைப்பக்க நிரல்கள்(Webinars) நாள்தோறும் நடைபெறுகின்றன. இவற்றில் கலந்து கொண்டு பங்கு சார்ந்த தொழில் புரிதலை ஏற்படுத்தி கொள்ளலாம். அதே வேளையில் நாம் அதிகாரபூர்வ மற்றும் அரசு அங்கீகரிக்கும் நிறுவன தளம் மற்றும் ஆலோசகர்களிடம் தகவல்களை பெறுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்சப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் பரிந்துரைத்தார் என பங்குகளை வாங்கி பின்னர் நட்டமடைவதை தவிர்க்க மேலே சொன்ன விஷயங்கள் நமக்கு நீண்டகாலத்தில் பயனளிக்கும். வெறுமென ஊக விஷயங்களுக்கு பின்னால் நகர்வதை விட, நாமே நமது தொழிலுக்கான(பங்கு முதலீடு) அக்கறையை கொண்டிருப்பது நலம்.

பங்குகளை கண்காணிக்க நேரமில்லை என சொல்பவர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Mutual Funds) உள்ளது. உங்களுக்காக ஒரு பண்ட் மேனேஜர் அங்கே நிர்வகிக்க தயாராக உள்ளார். நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு செல்வமீட்டலாம்.

பங்குகள் உங்களின் செல்ல(செல்வ) குழந்தைகள், அவற்றை வளரும் போது நீங்கள் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தால், பின்னொரு காலத்தில் அவை உங்களை கவனித்து கொள்ளும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டைம் லூப்(Time loop): மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரிப்பு, டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க உள்ளது – என்ன செய்ய போகிறீர்கள் ?

டைம் லூப்(Time loop): மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரிப்பு, டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க உள்ளது – என்ன செய்ய போகிறீர்கள் ?

Learn the Time loop insights for the Personal Finance

உலகளவில் டைம் லூப், டைம் மெஷின் அல்லது கால பயணம்(Time Travel – Sci-fi) சார்ந்த திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், நம் நாட்டில் சற்று குறைவு தான். சமீப காலத்தில் கால பயணம் குறித்த படங்கள் இங்கே வந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற கதைகள் பொதுவாக கற்பனையாவையாக இருந்தாலும், உளவியல் சார்ந்த விஷயங்களை இவை பேசும்.

வீட்டிலிருந்து கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும் நிலையில், வீட்டு நுழைவாயிலில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டு விட்டால், அம்மா சிறிது தண்ணீர் அருந்தி விட்டு செல்லும்படி கூறுவதுண்டு. இதனை அலட்சியப்படுத்தலாம் அல்லது பயத்தினாலோ, பணிவின் காரணமாகவோ அவர் சொன்னதை செய்து விட்டு போகலாம். பலருக்கு அன்றைய தினம் டைம் லூப் தான் (கற்பனை தான்)

முக்கிய நிறுவனம் ஒன்றிற்கு இன்டெர்வியூ செல்லுகையில் பூனை குறுக்கே வந்து விட்டது, இரு சக்கர வாகனம் பஞ்சர், பஸ் பிரேக் டவுன் – 12 பி படத்தின் டைம் லூப் ஆக தான் தோன்றும்.

‘நான் தான் அப்பவே சொன்னேனே அங்கே போகாதன்னு”

“எனக்கு தெரியும் இப்படி தான் நடக்கும்முன்னு”

“அவங்க சொன்னதை நான் தான் கேட்கல”

இது போன்ற கண்ணுல வந்து போகும் டயலாக்குகள் எல்லாம் Decision Making S(K)ills தான்.

#maanaadu

மீண்டும் ஒரு ஊரடங்கு வருமா எனும் அச்சம் உங்களுக்கு ஏற்பட்டால், உங்களது டைம் லூப்பில் கடந்த கால சிந்தனைகள் தென்படும். இவை வருத்தம் தரக்கூடியதாகவோ, இல்லையெனில் வாய்ப்பளித்த மகிழ்ச்சியாகவோ உங்களுக்கு இருந்திருக்கலாம்.

சரி, நிதி சார்ந்த கால பயணத்திற்கு வருவோம். நாமும் ஒவ்வொரு வருடமும் இலக்குகளை குறித்து வைத்து தான் வருகிறோம். கம்யூனிசத்துக்கும், கேபிடலிசத்திற்கும் இடையே அல்லல்பட்டு வருகிறோம். ஆனால் நமது தனிநபர் நிதி திட்டமிடலை சரியாக நிறைவு செய்தோமா என்றால் அது நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

கொரோனா காலத்தில் நமது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்களில் சில உயிர்களை இழந்திருப்போம். பிரபலமானவர்களின் இரங்கலை செய்தியாக கேட்டிருப்போம். ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தநிலையில் பலர் வேலை இழந்தனர், தங்களது தொழிலை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர், சிலர் இணைய வழி வருமானத்தை வாய்ப்பாக உருவாக்கினர், பெருந்தொற்று காரணமாக எதிர்பாராத வகையில் அதிக மருத்துவ செலவு, வருமானம் ஈட்டும் நபரின் இழப்பால் குடும்பத்தின் நிதி பாதிப்பு ஆகியவற்றை நாம் அறிந்திருப்போம். இவையெல்லாம் நமது நினைவலைகளாக எப்போதும் இருக்கும். சரியான நிதி பாதுகாப்பை உறுதி செய்தவர்களுக்கு ஓரளவு சிரமம் ஏற்பட்டிருக்காது. அது போன்ற குடும்பத்தில் நிதிச்சிக்கலும் குறைவு தான். டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு மற்றும் அவசர கால நிதி(Emergency Fund) ஓரளவு நமக்கு புரிந்திருக்கும்.

ஒவ்வொரு வருடமும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதை காலம் தாழ்த்தி வருகிறோம். அவசர கால நிதிக்கு பெரும்பாலும் நாம் மற்றவர்களை சார்ந்து  தான்(Parents, Neighborhood, Loans, Credit cards) இருக்கிறோம். ‘நான் நன்றாக தான் இருக்கிறேன், நமக்கு எதுக்கு மருத்துவ காப்பீடு – வீண் செலவு’ என்று அலட்சியம் செய்கிறோம். இருப்பினும் நமது கால பயணத்தில்(Time Travel) மீண்டும் மீண்டும் ஒரு நெருங்கிய உறவுகளின் இழப்பு, பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பம், காப்பீடு எடுக்காமல் லட்சங்களில் மருத்துவ செலவு.

இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரித்து விட்டது என புலம்புகிறோம். ‘5ஜி தொழில்நுட்பம் வந்த பிறகு என்ன செய்வது, விலை ஏறுமா அல்லது குறையுமா ?’

டேர்ம் காப்பீடுக்கான பிரீமியம் தொகையும் அதிகரிக்க போகிறது. கொரோனா காலத்திற்கு முந்தைய பிரீமியம் ஓரளவு பரவாயில்லை. புதிய நோய்கள் கண்டறிய கண்டறிய ரிஸ்க்குக்கான பிரீமியமும் அதிகமாக உள்ளது. முன்னொரு காலத்தில் தேவையும் பெரிதாக இல்லை, தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையவில்லை. வரவுக்குள் செலவு எளிதாக அமைந்தது. இப்போது அப்படியல்ல, நமது தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்துள்ளது. நிதி சார்ந்த விழிப்புணர்வு இனிவரும் காலங்களில் நமக்கு நிறைய தேவைப்படுகிறது.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மற்றும் டேர்ம் பிரீமியம் அதிகரித்தாலும் நமக்கு கவலையில்லை, அதிகமாக சம்பாதித்தால் ! தேவைகளும், விருப்பங்களும் அதிகரிக்கும் போது பெரும்பாலும் விலைவாசி உயர்வு நம் கையில் இல்லை.

ஆனால், நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்யாமல் காலம் தாழ்த்துவது நமது டைம் லூப்பை உண்மை நிலையாக மாற்ற செய்யும். அவற்றில் நமது கவனம் எப்போதும் தேவை. ‘ ஓய்வு காலத்திற்கு இன்னும் 30 வருடங்கள் உள்ளது, நமக்கு என்ன அவசரம்’ என 30 வயது இளைஞன் எண்ணினால் நமது பெற்றோருக்கு கிடைத்த வாழ்க்கை(உடல் மற்றும் மன நலமும்) கூட நமக்கு பின்னாளில் கிடைக்கப்பெறாது.

‘வரும் முன் காப்பது நலம்’

‘பருவத்தே பயிர் செய்’

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’

இவையனைத்தும் டைம் லூப்பை சார்ந்தவை தான்.

இப்போதே நீங்கள் செய்ய வேண்டிய நிதி திட்டமிடல்:

  • டேர்ம் காப்பீடு (Term Insurance)
  • விபத்து காப்பீடு (Accident care) 
  • மருத்துவ காப்பீடு (Health Insurance)
  • அவசர கால நிதி (Emergency Fund)
  • நிதி இலக்குகளுக்கான முதலீடு (Invest for Financial Goals) 
  • நாமினியை நியமிப்பது மற்றும் உயில் எழுதுவது (Nomination & Will)
  • உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி சார்ந்த கல்வி மற்றும் தேவையை உணர வைப்பது (Financial Literacy)

மேலே சொன்னவற்றை நாம் செய்யாவிட்டால், நமக்கு மட்டும் இழப்பல்ல… நம்மை நேசித்தவர்களுக்கு, நம்மை பொருளாதாரம் சார்ந்து நம்பியவர்களுக்கும் தான். விளைவை தெரிந்தும் காலம் தாழ்த்துவது தான் கால பயணத்தின் கிளைமாக்ஸ்.

டைம் மெஷினில் மீண்டும் வருவோம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

புரிந்து கொள்ள முடியாத முதலீடு, பேரிழப்பை ஏற்படுத்தும் !

புரிந்து கொள்ள முடியாத முதலீடு, பேரிழப்பை ஏற்படுத்தும் !

Beware of any investment product, before Investing 

பொருளாதார உலகில் பங்குச்சந்தையை போன்ற எளிமையான முதலீட்டு வகையும், அதனை சார்ந்த செல்வமீட்டுதலும் இதுவரை அறியப்படவில்லை என சொல்லலாம். அதே வேளையில் பங்கு முதலீட்டு உலகில் பணம் பண்ண பொறுமையும், சில நுணுக்கங்களை அறிந்து வைத்திருப்பதும் அவசியம். பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய விரும்புபவர்கள், கற்றலுக்கான நேரத்தை எப்போதும் செலவழித்து தான் ஆக வேண்டும். எனக்கு நேரமில்லை என்பவர்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுத்து விட்டு செல்வது தான் சிறப்பு.

வளர்ந்த நாடுகளில் பெரும்பாலும் சேர்க்கப்படும் சொத்துக்கள் நிதி சொத்துக்களாக தான்(Financial Asset) உள்ளன. தங்கம், நிலம், வீடு, வணிக வளாகங்கள்(Physical Asset) என ஒரு புறம் சொத்துக்களாக இருந்தாலும் பங்குகள், பத்திரங்கள், பரஸ்பர நிதிகள், வங்கி வைப்பு நிதி போன்ற நிதி சொத்துக்கள் தான் உலக பணக்காரர்களிடம் பெரும்பான்மையாக காணப்படுகிறது. இதற்கான காரணம், சொத்துக்களை எளிமையாக நிர்வகிப்பது(Portfolio) மற்றும் எப்போது வேண்டுமானாலும் அவற்றை உடனடியாக பணமாக மாற்றி கொள்ளும் வசதி(Liquidity) தான்.

இனிவரும் காலங்களில் நிதி சொத்துக்கள் தான் பொருளாதார உலகில் அதிகம்  காணப்பட்டாலும், புரிந்து கொள்ள முடியாத செயல்பாடுகளில் நமது பணத்தை முதலீடு செய்து விட்டு பின்பு அதனை முழுமையாக இழந்து விட கூடாது. உண்மையில் இது போன்ற செயல்பாடுகள் முதலீட்டு வகையில் சேராது எனலாம். இன்றைய காலத்தில் போன்சி(Ponzi) என சொல்லப்படும் மோசடி திட்டங்கள் ஏராளம். முன்னொரு காலத்தில் தங்கம், நிலம் மற்றும் கால்நடைகளை கொண்டு ஏமாற்று பேர்வழி திட்டங்கள் வந்தநிலையில், இப்போது இணைய வழியிலான நிதி மோசடிகள் அதிகமாகியுள்ளது.

மெய்நிகர் நாணயம்(Crypto), கரன்சி(Forex), பங்கு வர்த்தகம், பிரமிட்(Pyramid) திட்டங்கள், எம்.எல்.எம்., P2P Lending என பல பெயர்களில் ஏமாற்று பேர்வழிகள் மோசடி திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். அசலை போன்ற போலி என்ற வகையில் இவற்றை சொல்லலாம். உண்மையில் மெய்நிகர் நாணயம் ஒரு தொழில்நுட்ப அணுகுமுறையை(Blockchain Technology) தான் கொண்டுள்ளது. அவை நிதி சொத்துக்களாகவும், மற்ற சொத்துக்களை இணைக்கும் வகையிலும் இன்னும் அமைக்கப்படவில்லை. எந்தவொரு முதலீட்டு சாதனமும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கமும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், நாம் தான் அசல்-போலியை கண்டறிவதற்கான நிதி கல்வியை பெற வேண்டும்.

மேலை நாடுகளில் சூதாட்ட(Gambling) விளையாட்டுகளுக்கு என சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அங்கே அவை ஒரு போதும் சொத்துக்களாகவோ, செல்வம் ஈட்டும் அரிய கருவியாகவோ சொல்லப்படவில்லை. மாறாக அரசுக்கு வரி வருவாய் ஏற்படுத்தவும், கருப்பு பணத்தை தடுக்கும் முயற்சியாகவும் தான் சட்டமாக மாற்றப்பட்டுள்ளன. அது போன்று நம் நாட்டிலும் சட்டங்கள் சில நடைமுறையில் உள்ளன. ஆனால் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட மக்களில் இளைஞர்கள் பலர், இணையத்தில் ரம்மி, கிரிக்கெட் விளையாடுவது குறுகிய காலத்தில் பெரிய பணம் பண்ணிவிடலாம் என தங்களது உழைப்பையும்(Hard earned money), நேரத்தையும் தொலைத்து விடுவதுண்டு. இன்னும் சிலரோ நிதி சுதந்திரம், மோட்டிவேஷன் என புரிந்து கொள்ள முடியாத ஏமாற்று நிறுவனங்களிடம் பணத்தை கட்டி விட்டு, தங்களது நண்பர்களையும் சேர்த்து விட்டு சில வருடங்களில் ஏமாற்றப்படுகின்றனர். இதனை அவர்கள் தொழில்முனைவு(Entrepreneurship) என்று சொல்லிக்கொள்வதும் உண்டு.

தொழில்முனைவுக்கும்(Entrepreneur), நேரடி விற்பனைக்கும்(Direct Marketing, Multi level Marketing) உள்ள வேறுபாட்டையும், அதன் விளக்கத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை எனில், நாம் வாழ்நாள் இறுதி வரை உழைத்து கொண்டு தான் இருக்க வேண்டும். இதன் மூலம் உண்மையான நிதி சுதந்திரத்தை பெற்று விட முடியாது.

“ நான் ஏ.பி.சி.டி. நிறுவனத்தில் ரூ.10,000 முதலீடு செய்துள்ளேன். ஒரே ஆப்பில்(Mobile App) தினமும் 2000 ரூபாய் சம்பாதிக்கலாமாம். அந்த நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ளது என சொன்னார்கள். வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம், ராயல்டி வருமானம், ஓய்வுகாலத்தில் கடற்கரை ஓரத்தில் ஒரு அழகிய வீடு…”  –  நமது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்காரர் விற்கும் பொருட்களை பற்றிய புரிதலே நமக்கு இல்லாத போது, ஆஸ்திரேலியா நிறுவனம் நமது அண்ணன் நடத்தும் நிறுவனமா என்ன ? நமது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என என்றாவது நமது நிறுவனத்திடம் கேட்டிருப்போமா ?

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே சிறு முதலீட்டில் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வேறு. சில தொழில்களில் முதலீடு குறைவாக இருக்கலாம், தொழில்  நாணயத்தையும் எதிர்பார்க்கலாம். அதே வேளையில் குறைந்த முதலீடு, அதிக லாபம் என்ற வாசகம் தான் மோசடி திட்டங்களின் அடிப்படை. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அரசு பரிந்துரைக்கும் திட்டங்களிலே நாம் முதலீடு செய்யாத போது, யாரோ ஒருவர் சொன்னார் அல்லது எங்கோ இருக்கும் நிறுவனம் உங்களுக்கா நிதி சுதந்திரத்தை அளிக்க போகிறது ?

பங்கு வர்த்தகத்தின் ரிஸ்க் புரியாமல் தான் சம்பாதித்த பணத்தையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பணத்தையும் கொண்டு சூதாடி விட்டு, பின்பு மானம் என சொல்லிக்கொண்டு தன்னை மாய்த்து கொள்வது ஏனோ !

ஒரு நிறுவனத்தை பொறுத்தவரை ஏதோவொரு பொருள் அல்லது சேவையை விற்பனை செய்யும் தொழிலை கொண்டிருக்க வேண்டும். வெறுமென ஆட்களை சேர்த்து அவர்களது பணத்தால் வாங்கி கொடுத்தால் உங்களுக்கு வருமானம் என சொன்னால் அது தொழிலாக கருதப்படுமா ? இந்த மோசடிக்கும், நடைமுறையில் இருக்கும் Referral Marketing என்பதற்கும் எந்த சம்மந்தமுமில்லை. இந்த புரிதலையும் நாம் கொண்டிருப்பது அவசியம்.

நம் முன் நித்தமும் காத்திருக்கும் அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், அரசு பத்திரங்கள், தங்கம், பரஸ்பர நிதிகள், பங்குகள், ரியல் எஸ்டேட், தொழில் முனைவு போன்ற முதலீடுகளை, நம்மில் எத்தனை பேர் பயன்படுத்தியிருப்போம். நிதி பாதுகாப்பு, பணவீக்கம் மற்றும் முதலீட்டு ரிஸ்க் ஆகியவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா, கூட்டு வட்டிக்கும், இ.எம்.ஐ.(EMI) இரண்டுக்குமான வேறுபாடு என்ன என்பதனை பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது இன்றைய காலத்தின் அவசியம்.

ஆயிரங்களை போட்டு, குறுகிய காலத்தில் லட்சங்களையும், கோடிகளையும் உங்களால் அள்ள முடியுமென்றால், அந்த வாய்ப்பு முதலில் டாட்டா, அம்பானி போன்றவர்களுக்கு தான் தெரிந்திருக்கும். ஏனெனில் அவர்களிடம் உங்களை காட்டிலும் முதலீட்டு தகவல்கள் எளிதாக வந்து சேரும் வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் அவர்கள் ஏன் மோசடி திட்டங்களை தவிர்த்து விட்டு, பல்லாயிரம் ஏக்கர்களை வாங்கி தொழிற்சாலை அமைத்து, பணியாளர்களை அமர்த்தி, முதலீடுகளையும் ஈர்த்து கொண்டு தொழில் வளர்ச்சிக்காக ஓடுகின்றனர். அவர்களும் ஒரே நாளில் 10,000 கோடி ரூபாயை போட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாயாக மாற்றலாமே !

விரைவாக பணம் பண்ண வேண்டும் என்ற பேராசையே, குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க உதவுகிறது. இது தான் மோசடி பேர்வழிகளின் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. சரி நாம் விரைவாக பணம் சம்பாதித்து விட்டாலும் பின்பு அதனை மறுமுதலீடாக எங்கே கொண்டு செல்ல போகிறோம் ?

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் பணமிருந்தால் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ? 

உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக கிடைத்தால், அதனை புரியாத திட்டத்தில் முதலீடு செய்வீர்களா அல்லது சூதாடுவீர்களா ? இங்கே, இரண்டும் ஒன்று தான். உதாரணமாக உங்களிடம் ஒரு கோடி ரூபாய் பணமிருந்தால் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வருவாய் தரும் திட்டத்தில் முதலீடு செய்து விட்டு, மாதாமாதம் 60,000 ரூபாயை வருமானமாக பெறலாம். இதற்காக மெனெக்கெட தேவையில்லை, நாம் பள்ளிகளில் படித்த வட்டி விகித கணக்கு தான். வங்கி அல்லது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தால் போதும்.

நிதிச்சுதந்திரம் பெறுவது என்பது முதலில் உங்களது குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்வது தான். தேவையான அளவு டேர்ம் மற்றும் விபத்து காப்பீடு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவ காப்பீடு, அவரச காலத்திற்கு தேவையான பண கையிருப்பு ஆகியவை தான். கடனில்லா வாழ்க்கையை வாழ விரும்புவதும் உங்களுக்காக நிதி சுதந்திரமே.

நிதி இலக்குகளை(Financial Goals) சரியாக நிர்ணயித்து முதலீடு செய்தல், தொடர்ச்சியாக முதலீடு செய்து வருதல் மற்றும் மினிமலிசம் வாழ்க்கை முறையை பழகுதல் – இது தான் நிதி சுதந்திரத்திற்கான வழி. செலவுகளை குறைத்து எவ்வாறு சேமிக்க பழகுகிறோமோ அது போல வருவாய் பெருக்கத்திற்கான வழியையும் கண்டறிய வேண்டும். அதற்காக புரியாத விஷயங்களை செய்ய வேண்டாம்.

உங்களுக்கு ரியல் ஸ்டேட், பங்கு முதலீடு, தொழில்முனைவு புரியவில்லை என்றால், கற்று கொள்வதற்கான நேரத்தை கொடுங்கள். நேரமில்லை என சொன்னால், வங்கி அல்லது பரஸ்பர நிதி முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம். பணவீக்கத்தை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். ரிஸ்க் இல்லாத முதலீடு என்று இங்கும் எதுவும் இல்லை. நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கும் உங்களுக்கு நன்றாக புரிந்திருக்க வேண்டும்.

ஆற்றில் காலை விட்டாலும், சேறு விழுந்தால் பரவாயில்லை… ஆனால் நாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com