Category Archives: Think Invest

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

Regulatory authorities in India

‘தாலாட்டு கேட்குதம்மா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரபுவும், கவுண்டமணியும் இரவு நேரத்தில் ஒரே சைக்கிளில்(டபுள்ஸ் தான்!) வந்து கொண்டிருப்பார்கள். அப்போது எதிரே வரும் போலீஸ்காரரை கண்ட பிரபு, கவுண்டமணி அவர்களை சைக்கிளிலிருந்து இறங்கச் சொல்வார். பின்பு வரும் போலீஸ்காரர் அந்த சைக்கிளை நிறுத்தி, ‘என்னய்யா சைக்கிள்ல லைட் இல்லாம வர்ற’ என கேட்க அதற்கு பிரபு சிரித்துக் கொண்டே, ‘நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வரேன், பின்னாடி ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாரு’ என காமெடியாக சொல்வார். இதனை நம்பி, அந்த போலீஸ்காரரும் பின்னாடி வரும் கவுண்டமணியை விசாரிப்பது போல நகைச்சுவை உரையாடல் நிகழும்.

இப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பாலான போன்சி – ஏமாற்று பேர்வழிகளின் மோசடித் திட்டங்களில்(Ponzi Scam) மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, இருக்கும் சொத்துக்களை விற்றுப் போட்டு விட்டு, மாதாமாதம் பணம் வரும் என பேராசையில் இருந்து விடுகின்றனர். மோசடி பேர்வழிகளும் ஆயிரம் கோடிகளில் பணத்தை சுருட்டி விட்டு, ஊரை விட்டு ஓடுகையில் நம் மக்கள் இது சார்ந்த புகாருக்கு அணுகும் முதல் நிலை, ‘காவல் நிலையம்’ தான். இது போன்ற மோசடித் திட்டங்களை முன்னரே அறிந்து, எச்சரிக்கையாக இருக்கும் சிலரும் இது சார்ந்த புகாரை எங்கு சொல்ல வேண்டுமென்ற விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். 

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இன்று, ஒவ்வொரு துறைக்கும் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார்களுக்கு தானியங்கி மூலம் வந்து விட்டது. இருப்பினும் இவர்களை கட்டுப்படுத்த, வரையறுக்க யாரவது ஒருவர் வேண்டுமல்லவா, அவர் தான் ஒழுங்குமுறை ஆணையம் எனும் பாதுகாப்பு வளையம்.

ஒழுங்குமுறை ஆணையம் என்றால் என்ன ?

பொதுவாக, ஒழுங்குமுறை என்பது விதிகள் மற்றும் போக்குகளின் தொகுப்பின் படி, ஒரு சிக்கலான அமைப்புகளின் மேலாண்மை ஆகும். உதாரணமாக பள்ளிகளில் நாம் காணும் ஆசிரியர்-மாணவர்களுக்கான ஒழுங்குமுறையை பள்ளி நிர்வாகம் அல்லது கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கும். அதனால் தான் நாம் பள்ளிகளில் கல்வியுடன் அடிப்படை ஒழுக்கத்தையும் கற்கிறோம். 

ஒழுங்குமுறை என்பது சமூக, அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரக் களங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவை அரசாங்கத்தால் அல்லது சில சட்டக் கட்டுப்பாடுகள், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படலாம். உதாரணமாக டிராபிக் சிக்னல்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட வரையறை, அடிப்படை உரிமைகள், உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவதற்கான சட்டங்கள்.

ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம். இந்த ஆணையம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது நிலை சார்ந்த உரிமம் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனில் மனித செயல்பாட்டின் சில பகுதிகளின் மீது தன்னாட்சி ஆதிக்கத்தை செலுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தை ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விதிகளின் படி அதிகாரம் பெற்ற தனிநபரோ வழங்கியிருக்கலாம். உதாரணமாக சந்தைகளில் நுகர்வோரை பாதுகாக்க சட்டம் , தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குமுறைப்படுத்த டிராய்(TRAI) என சொல்லலாம்.

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள்:    

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது உள்ளன. இவற்றில் முக்கியமாக கவனத்தில் உள்ளவை RBI, SEBI, IRDAI, PFRDA போன்றவை. இது போக சிலவற்றையும் நாம் இங்கு பார்ப்போம்.

  • RBI(Reserve Bank of India):

கடந்த 1935ம் வருடம் துவங்கப்பட்ட பாரத ரிசர்வ் வங்கி, 1949ம் ஆண்டு வாக்கில் தேசியமயமாக்கப்பட்டு நாட்டின் வங்கி, நிதி மற்றும் பணவியல் சார்ந்த கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாகவும், இந்தியாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி உள்ளது. 

இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல், ரூபாயின் கட்டுப்பாடு, வெளியீடு மற்றும் விநியோகத்தை பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். நாட்டின் முக்கிய ரூபாய் கட்டண முறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலையையும் இந்த மத்திய வங்கி ஏற்படுத்தி கொடுப்பது இதன் கடமையாகும்.

ஜனவரி 2024 தரவின் படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மட்டும் 623 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

  • SEBI(Securities and Exchange Board of India):

கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்தப்பட்ட செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் நாட்டில் உள்ள பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தையை(Securities & Commodity Market) கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக முதலீட்டாளர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், சந்தையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய வேலையை செய்கிறது.

பங்குச்சந்தையில் ஈடுபடும் தரகு நிறுவனங்களையும், அதன் தரகர்களையும் முறையாக பதிவு மற்றும் ஆய்வு செய்தல், சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்றுதல் ஆகிய முதலீட்டாளர் நலன் சார்ந்த பொறுப்பை செபி கொண்டுள்ளது.

இந்திய நிதிச்சந்தையில் சுமார் 20 உட்துறைகளை கொண்டு செபி தனது ஒழுங்குமுறை வேலைகளை செய்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி போலவே, செபியும் நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாக காணப்படுகிறது.

  • IRDAI (Insurance Regulatory and Development Authority of India)

கடந்த 1999ம் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. ஒழுங்குமுறை ஆணையம் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் காப்பீடு சார்ந்த தொழில்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துதல் இதன் வேலையாகும். 

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஐந்து முழு நேர மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக ஐ.ஆர்.டி.ஏ. ஆணையம் உள்ளது. இந்தியாவில் கடந்த 1818ம் ஆண்டு முதல் காப்பீடு சார்ந்த தொழில்கள் இருந்து வந்தாலும், இந்த ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு காப்பீட்டு கொள்கைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

பாலிசிதாரரின் நலனை பாதுகாத்தல், மின்னணு வடிவத்தில் பாலிசிதாரர் காப்பீட்டை பெற உதவும் பொறுப்பையும் ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது.

  • PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் ஓய்வூதியங்களின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பொறுப்பாக கொண்டுள்ளது. நாட்டின் முதியோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்வதும் இதன் வேலையாகும். 

இன்று நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் இல்லை(பழைய ஓய்வூதிய திட்டம் தவிர்த்து). இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைத்து இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய அனைவரும் தங்களது ஓய்வூதிய பலனை பெற, தேசிய பென்ஷன் திட்டம்(NPS – National Pension System) ஏற்படுத்தப்பட்டு, பி.எப்.ஆர்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  • EPFO (Employees’ Provident Fund Organisation):

கடந்த 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இ.பி.எப்.ஓ. ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் சார்ந்த ஓய்வூதிய திட்டங்களை பொறுப்பாக கொண்டு நிர்வகித்து வருகிறது.

இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தாய் அமைப்பாக மத்திய அறங்காவலர் குழு(Central Board of Trustees) உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952 சட்டம், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், 1976 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1971க்குப் பதிலாக) ஆகிய சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.

கட்டாய வருங்கால வைப்பு நிதி(Mandatory of Provident Fund), அடிப்படை ஓய்வூதிய திட்டங்கள், ஊனமுற்றோர் மற்றும் இறப்பு காப்பீடு, அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எளிதாக்குதல் ஆகிய வேலைகளை இ.பி.எப்.ஓ. ஆணையம் செய்து வருகிறது.

மேலே சொன்ன முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்கள் போக, பின்வரும் சில ஒழுங்குமுறை அமைப்புகளும் இந்தியாவில் பங்காற்றி வருகின்றன.

  • FSSAI (Food Safety and Standards Authority of India)
  • NASSCOM (National Association of Software and Service Companies)
  • TRAI (Telecom Regulatory Authority of India)
  • CERC (Central Electricity Regulatory Commission)
  • CDSCO (Central Drugs Standard Control Organisation)
  • FIEO (Federation of Indian Export Organisation)
  • AMFI (Association of Mutual Funds in India)
  • BIS (Bureau of Indian Standards)
  • BCCI (Board of Control for Cricket in India)
  • ASCI (Advertising Standards Council of India)
  • NHB (National Housing Bank)
  • CBFC (Central Board of Film Certification)
  • NABARD (National Bank for Agriculture and Rural Development)
  • ICC (Indian Chemical Council)
  • AERB (Atomic Energy Regulatory Board)
  • NHAI (National Highways Authority of India)
  • ICAI (The Institute of Chartered Accountants of India)

மற்றும் இன்னும் சில…

நாட்டில் ஏற்படும் முதலீடு சார்ந்த மோசடித் திட்டங்களை அரசாங்கத்தால் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது போன்ற மோசடிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்(Tier-II and Tier-III Cities) தான் நடைபெறுகிறது. மக்களின் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முனைதல் மற்றும் பேராசையே இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம். இருப்பினும், முதலீடு சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்கலாம்.

எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் நம் பணத்தை போடும் முன், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என அந்த நிறுவனமே சொன்னாலும், இந்த நிறுவனம் மற்றும் திட்டங்கள் எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகிறது என்பதனை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், பெரும்பாலான மோசடி நிறுவனங்கள், ‘நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்’ என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு மக்களை ஏமாற்றி விடுவார்கள். 

இன்று நாட்டில் உள்ள எந்தவொரு தொழிலும், முதலீட்டுத் திட்டங்களும் ஏதாவதொரு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வந்து தான் ஆக வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாகவும், அதன் சார்ந்த புகார்களை தெரிவிக்கவும் முனையலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

   

       

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

Can Govt. Employees participate in the Stock(Share) Market ? (CCS Rules, 1964)

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் டீமேட் கணக்கு துவங்கி, பங்குகளில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்யலாமா என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் கேள்வி. நமது வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் இது சார்ந்த சந்தேகத்தை கேட்டிருந்தனர். இது சார்ந்த விதிகளை பற்றி மத்திய சிவில் சேவைகள் (நடத்தை), 1964 – Central Civil Services(Conduct) Rules, 1964 ஆவணத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சிவில் சேவைகள்(நடத்தை), 1964 ஆவணத்தில் வரிசை எண்.21, விதி எண்.16ன் கீழ், முதலீடு, கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் பகுதியில் 35(1) மூலம் அரசு ஊழியர்கள் முதலீடு சார்ந்த விஷயங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி கூறப்பட்டுள்ளது.

“ 35(1) எந்தவொரு பங்கு, பங்கு சார்ந்த அல்லது மற்ற முதலீட்டில் எந்த ஒரு அரசு ஊழியரும் ஊகம்(Speculative) சார்ந்த வணிகத்தில் ஈடுபடக் கூடாது. இந்த துணை விதியில் உள்ள பங்கு மூலம் அவ்வப்போது செய்யப்படும் முதலீடுகளுக்கு இது பொருந்தாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில் எந்தவொரு அரசு ஊழியரும் பங்குகளிலோ அல்லது மற்ற முதலீடுகளிலோ ஊகம் சார்ந்த, அதாவது நாள் வர்த்தகம், ஊக வணிகம்(Speculative Trading & Derivatives) போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட முதலீட்டு திட்டங்களில் அவ்வப்போது முதலீடாக செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தரகர்(Stock Broker) அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் தான் அவர்களது முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஊகம் என்பது அடிக்கடி பங்குகள் அல்லது மற்ற முதலீடுகளை வாங்கி அடிக்கடி விற்பது என்பதாக கருதப்படுகிறது. 

“40(2) (i) எந்தவொரு அரசு ஊழியரும் அவருடைய குடும்பத்தில் உள்ள எந்தவொரு நபரையும் அவர் சார்பாகவோ அல்லது குடும்பத்தின் நலன் சார்பாகவோ ஊக வர்த்தகத்தில் ஈடுபட வைக்கக் கூடாது மற்றும் அனுமதிக்க கூடாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில், அரசு ஊழியர்கள் தங்கள் சார்பாகவோ அல்லது மற்றவரின் நலனுக்காகவோ, தங்களது குடும்ப நபர்களை பங்குச்சந்தையில் மற்றும் பிற முதலீட்டில் ஊக வணிகம்(Day Trading & Derivatives) செய்ய அனுமதிக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. 

ஐ.பி.ஓ(IPO – Initial Public Offering) போன்ற முதன்மை சந்தையில் அரசு ஊழியர்கள் ஈடுபடலாம் எனவும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்த ஐ.பி.ஓ. வெளியீட்டின் போது அவர்கள் முதலீட்டாளராக பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு பங்குகளின் விலையை நிர்ணயம் செய்வதற்கான முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனுமதியில்லை(Decision making process of Fixation of price) எனவும் சொல்லப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஐ.பி.ஓ. வெளியீட்டில் முதலீடு செய்த பின்பு, இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) கிடைத்த லாபத்தை பங்கு வெளியீட்டு நாளன்று எடுப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான அரசு வேலைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர்(Discharge of his official duties) எனவும், மக்களிடம் பெறப்பட்ட அரசு வரி வருவாய் மூலம் அவர்களுக்கான ஊதியம் செலுத்தப்படுவதால், இது போன்ற ஊக வணிகத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாதென விளக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச்சந்தையில் அரசு ஊழியர்கள் நீண்டகாலத்தில் முதலீடு செய்வதை தான் அரசு அறிவுறுத்துகிறது.

மேலும் வங்கிகளில் கடன் வாங்குதல், வங்கிகளில் டெபாசிட் செய்தல், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தல், மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுத்தல் போன்றவற்றிற்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளது.

Central Civil Services(Conduct) Rules, 1964 பற்றி அறிய…

Central Civil Services(Conduct) Rules, 1964

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

Investor awareness Arena

கடந்த சில வாரங்களாக நமது வாசகர்களும், சில வாடிக்கையாளர்களும் (குறிப்பாக நெருங்கிய நண்பர்களும்) தாங்கள் ஏற்கனவே நீண்டகாலத்திற்கு முதலீடு செய்திருந்த பண்டுகளை சந்தையில் உள்ள மற்ற பண்டுகளுடன் ஒப்பிட்டு, அந்த பண்டு கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் வருவாயை அளித்துள்ளது. நாம் ஏற்கனவே செய்துள்ள முதலீட்டை, இந்த பண்டில் மாற்றலாமே என கேட்கிறார்கள்.   

  • பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் போது, குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும்பாலான பண்டுகள்(Mutual Funds) நிறைய வருவாயை கொடுக்கும். ஆனால், நீண்டகாலத்தில் இது சாத்தியமில்லை. 
  • ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பண்டுகள் ராஜநடை போடும். இதனை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தை பெற இயலாது.
  • பொதுவாக அதிக வருவாயை கொடுக்கும் பண்டுகள், பின்னொரு காலத்தில் சரிவை சந்திக்கும். எனவே எச்சரிக்கையுடன் நமது முதலீட்டு நோக்கம், நம் குழந்தைகளுக்கான மற்றும் சந்ததிக்கான செல்வத்தை சேர்க்க முயல வேண்டும் ! 
  • பண்டுகளை அடிக்கடி மாற்றுகையில் அதற்கான செலவினமும், வரியும் உண்டு. சிறுதுளி பெரு வெள்ளம் என்பதனை கவனத்தில் கொண்டு, நீண்டகாலத்தில் பொறுமையாக முதலீடு செய்வதே நன்று. 
  • பண்டுகளை ஒவ்வொரு வருடமும் மதிப்பீடு செய்வது அவசியம். பண்டுகளை மாற்ற வேண்டுமா, கூடுதலாக முதலீடு செய்யலாமா அல்லது இந்த பண்டில் முதலீட்டில் குறைக்கலாமா என்பதனை உங்களது நிதி ஆலோசகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கான வேலையை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கான குழப்பம் தீரும்.
  • எந்தவொரு ஆலோசகரின் உதவியின்றி நீங்களாவே பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய நினைத்தால், சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள் மற்றும் படிப்புகளை கற்பது அவசியம். கற்ற பின், முதலீடு செய்ய துவங்கலாம், தவறுகள் குறையலாம்.
  • பக்கத்து வீட்டுக்காரர் அந்த கார் மாடல் வைத்துள்ளார், எதிர் வீட்டுக்காரர் இந்த கைபேசி வைத்துள்ளார், மச்சான் இந்த பிரேஸ்லெட் அணிந்துள்ளார் என ஒவ்வொருடன் நாம் ஒப்பிட்டு கொண்டிருந்தால், நாம் நமக்கான இலக்கை அடைய முடியாது. நமக்கென்ன தேவை, நமக்கான நிதி இலக்குக்கான தொகை மற்றும் காலம் எவ்வளவு, அதனை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் அவசியம். 
  • 11 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்த, திருவாளர் வாரன் பப்பெட்(Warren Buffett) அவர்கள் தனது 55 வயதிற்கு பின்னரே உலகளவில் பிரபலமானார். குறுகிய காலத்திலோ, குறுக்கு வழியிலோ யாரும் நிரந்தர செல்வங்களை முடியாது.  
  • இந்திய பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டை பொறுத்தவரையில் அடுத்த 20-30 வருடங்கள் மட்டுமே பிரகாசமான காலம்(பொருளாதாரம் சார்ந்து வாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கும் காலம்). அதற்கு பிறகு, உங்களுக்கு வங்கி வட்டி விகிதத்திற்கு மேல் ஒரு சதவீதம் கிடைத்தாலே பெருமை தான். இது தான் வல்லரசான அமெரிக்காவிலும், ஐக்கிய ராச்சியத்திலும், ஜப்பானிலும் நடந்துள்ளது.

முதலீட்டாளர், முதலீடு செய்யும் முன் கவனிக்க:

* முதலீடு செய்வதற்கான நோக்கம்(ஓய்வுக்கால நிதி, குழந்தைகளுக்கான கல்விச் செலவு, திருமணச்செலவு, வீடு கட்டுவது / வாங்குவது, வாகனம் வாங்குவது, சுற்றுலா, பிடித்த வேலையை செய்ய, தொழில் புரிய, அப்படி ஒண்ணுமில்லைங்க)

* முதலீடு செய்ய உள்ள தொகை 

* முதலீடு செய்யும் காலம் 

* எதிர்பார்க்கும் வருவாய் (கார்பஸ் தொகையை கணக்கிடுவது அவசியம்)

* மேலே சொல்லப்பட்டவைக்கான சரியான முதலீட்டு திட்டம் (முதலீட்டு ஆலோசகரின் உதவியுடன் அணுகுதல்)

நிதி சார்ந்த அக்கறையுடன், வர்த்தக மதுரை 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள்

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள் 

 

Football Field Analysis – Asset Valuation Techniques

பொருளாதாரவியலில் எந்தவொரு சொத்துக்கும் மதிப்பொன்று உள்ளது. முதலீட்டு மதிப்பீட்டின் மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் மதிப்பை நாம் அறியலாம். இதற்கென மதிப்பீட்டு பகுப்பாய்வு(Valuation Analysis) என்ற ஒரு அலகு உள்ளது. மதிப்பீட்டு பகுப்பாய்வு என்பது ஒரு சொத்தின் தோராயமான மதிப்பை மதிப்பிடும் ஒரு செயல்முறையாகும்.

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை பலவகைகளில் கிடைக்கப்பெற்றாலும், சுருக்கமாக இரு வகைகளை நாம் சொல்லலாம். அதாவது ஒப்பீட்டு முறை(Relative Valuation) மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation). ஒப்பீட்டு முறை என்பது ஒரு சொத்தினை அதனை ஒத்த மற்ற சொத்துக்களுடன் ஒப்பிடுவது அல்லது ஒரு நிறுவனத்தின் மதிப்பை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனங்களின் மதிப்புடன் ஒப்பிட்டு முடிவினை அடைவதாகும். 

 

முழுமையான மதிப்பீட்டு முறை என்பது அவ்வாறாக இல்லாமல், ஒரு சொத்தின் அல்லது நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பை (மற்றவற்றுடன் ஒப்பிடாமல்) பெறுவதாகும். இதன் மூலம் ஒரு சொத்து அல்லது நிறுவனம்  இவ்வளவு மதிப்பை கொண்டிருக்கும் என சொல்வதாகும்.

 

சிறு உதாரணத்தின் மூலம் மேலே சொன்ன இரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறைகளை பார்ப்போம். ஒருவரின் தோட்டத்தில் (ஒரு ஏக்கர் நிலம்) நூறு கொய்யா மரங்கள் உள்ளது. ஒவ்வொரு மரமும் ஆண்டுக்கு நூறு கொய்யா பழங்களை தருகிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அவரது தோட்டத்தில் ஆண்டுக்கு ஆயிரம் கொய்யா பழங்கள்(100 மரங்கள் X 100 பழங்கள்) காய்த்து அதற்கான வருவாயை தருகிறது. இங்கே கொய்யா பழத்திற்கான விலை, ஒவ்வொரு கொய்யா மரத்தின் வாழ்நாட்கள் மற்றும் பருவம், கழிவு, விலைவாசி(உற்பத்தி செலவு மற்றும் பணவீக்கம்), அடுத்த 10-15 வருடங்களுக்கான விளைச்சல் எதிர்பார்ப்பு  ஆகியவற்றை பொறுத்து அத்தோட்டத்திற்கு ஒரு மதிப்பை கொடுக்கலாம். பின்னாளில் அவர் இந்த தோட்டத்தினை விற்க முனைகையில் மேலே சொன்ன மதிப்பீட்டை கருத்தில் கொண்டு விலையை பேசலாம். இதனை தான் நாம் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation) என சொல்கிறோம்.

 

இதுவே பக்கத்து தோட்டத்துக்காரர் தான் வைத்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில்  கொய்யா மரங்கள்(எண்ணிக்கை மாறுபடலாம்) அடங்கிய தோட்டத்திற்கு எந்தவொரு முழுமையான மதிப்பீட்டையும் செய்யாமல், முதலாமவரின் தோட்டத்தினை போல தனது தோட்டமும் இவ்வளவு மதிப்பை பெறும் என ஒப்பிட்டு முறையில் சொன்னாலே, அதுவே ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையாகும்(Relative Valuation).

 

இதனை தான் பங்குச்சந்தை முதலீட்டில் நாம் காணும் P/E(Price to Earning per Share) Ratio, P/Bv(Price to Book value) Ratio, P/S (Price to Sales), EV/EBITDA, etc. – ஒப்பீட்டு பகுப்பாய்வு முறை. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனப் பங்கின் விலையை அதன் ஒரு பங்கிற்கான வருவாயுடன் ஒப்பிடுவது, பங்கு  விலையை அதன் நிறுவன விற்பனையுடன், புத்தக மதிப்புடன்(Book value) ஒப்பிடுவது என சொல்லலாம். ஒரு நிறுவனத்தின் P/E விகிதத்தை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனத்தின் P/E விகிதத்துடன் ஒப்பிடுவது. 

 

Discounted Cash Flow(DCF), DDM(Discounted Dividend Model), Discounted Asset Model(DAM) போன்றவை முழுமையான ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையை சேர்ந்தவையாகும். இவை அந்நிறுவனத்தின் பணவரத்து, ஈவுத்தொகை(Dividend) மற்றும் கணக்கில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு முழுமையாக மதிப்பீடு செய்வதாகும். 

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை(Valuation Analysis) என்பது வெறுமனே பங்குச்சந்தை முதலீட்டுக்கு மட்டுமல்ல. ரியல் எஸ்டேட்(வீட்டுமனைத் துறை), தங்கம், விவசாய நிலம், தொழில் மற்றும் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் பயன்படுத்தலாம்.

 

ஒவ்வொரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறையும் வெவ்வேறு வகையான முடிவுகளை அளிக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் முதலீடு செய்பவருக்கு ஏற்ற அல்லது உகந்த மதிப்பீடுகளை எடுத்துக் கொள்வது இயல்பு. எனினும், பெரும்பாலும் வழக்கத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மதிப்பீடாக ஒப்பீட்டு முறை உள்ளது. அதே வேளையில் ஒப்பீட்டு முறையை காட்டிலும் முழுமையான மதிப்பீட்டு முறையே(Absolute Valuation) ஒரு முதலீட்டாளருக்கு சிறந்த முடிவாகவும், நீண்டகாலத்தில் நல்ல வருவாயை அளிக்க கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது. 

 

நான் பெரிசா, நீ பெரிசா என ஒவ்வொரு மதிப்பீட்டு முறையை கொண்டு போட்டி போடுவதை தவிர்த்து விட்டு, அனைத்து அல்லது பெரும்பான்மையான முறைகளை கணக்கில் எடுத்து கொண்டு முடிவுகளை எடுக்க கால்பந்து களப் பகுப்பாய்வு(Football Field Analysis) உதவுகிறது. வெவ்வேறு மதிப்பீட்டு முறைகளின் முடிவுகளை ஒப்பிட்டு சுருக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வரைபடத்தை(Graph /Chart)  இந்த ஆய்வு ஏற்படுத்துகிறது. 

 

இது பல்வேறு மதிப்பீட்டு முறைகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமையும் ஒரு நிறுவனத்திற்கான மதிப்புகளின் வரம்பை சுருக்கமாக கூறுகிறது. இந்த வரைபடத்தின் மூலம் பெரும்பான்மையான மதிப்பீட்டு  முறைகள் வாயிலாக, ஒரு நிறுவனத்தின் சராசரி விலை என்ன என்பதனை அறிந்து கொள்ளலாம். 

 

பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள்வதற்கும், மதிப்பீடுகளில் ஏற்படும் பிழைகளை குறைப்பதற்கும் இம்முறையை பயன்படுத்தலாம். 

 

உதாரணமாக ஒரு நிறுவனப் பங்கின் விலையை பணவரத்து(DCF) மதிப்பீட்டு முறையில் கணக்கிடும் போது ஒரு பங்கிற்கான மதிப்பு ரூ. 100 என கொள்வோம். இதுவே PE மதிப்பீட்டு முறையில் காணும் போது ஒரு பங்கிற்கு 80 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை வாங்கலாம் என பரிந்துரைக்கிறது. புத்தக மதிப்பு(Book value) அடிப்படையில் பார்க்கையில் ஒரு பங்குக்கு ரூ.85 என மதிப்பினை பெறுகிறது. கடந்த ஒரு வருட பங்கின் அதிகபட்ச விலை ரூ.150 ஆகவும், குறைந்தபட்ச விலை 65 ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஒரு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் ரூ.87 – ரூ.102 என்ற விலையில் வர்த்தகம் நடந்துள்ளது.

 

இப்போது ஏதேனும் மற்றொரு மதிப்பீட்டு முறை மூலம் ஆய்வு செய்யும் போது பங்கு ஒன்றுக்கு 82 ரூபாய் என காட்டுகிறது. முடிவில் மேலே சொன்ன அனைத்து மதிப்பீட்டு முறைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற மதிப்புகளை, கால்பந்து களப் பகுப்பாய்வு வரைபடத்தில் குறிப்பிட வேண்டும். தற்போது நடப்பில் ஒரு பங்கின் விலை ரூ.102 க்கு வர்த்தகமாகிறது என வைத்துக் கொள்வோம். 

 

கால்பந்து களப் பகுப்பாய்வின் மூலம் நாம் பெறுவது, ஒவ்வொரு மதிப்பீட்டின் அடிப்படையில் நாம் பெறக்கூடிய சராசரி விலை தான். இதனை தற்போதைய பங்கு விலையுடன் ஒப்பிட்டு வாங்கலாமா, காத்திருக்கலாமா என்பதனை முடிவு செய்யலாம். 

 

Football field analysis

 

நீங்களும் இதனை பரிசோதித்து பாருங்கள்… இதன் மூலம் உங்களது முதலீட்டு சிந்தனையை மேம்படுத்துங்கள் !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

   

    

 

 

உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளியா ? – பணத்தின் மீதான உங்களது நிலைப்பாடு எப்படி ?

உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளியா ? – பணத்தின் மீதான உங்களது நிலைப்பாடு எப்படி ?

Endowment Effect or Cognitive Bias – Behavioural Economics

‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்பார்கள். பொருளியலில் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இன்று பணம் இருந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளுக்கான தேவையும், நகர்வும் பணத்தை சார்ந்து இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் ஆற்றலை அறிய, அந்நாட்டின் போர்ப்படை மற்றும் அரசியல் அதிகாரத்தை விட பணத்தின்(பொருளாதாரம்) மூலம் தான் அளவுகோலை நிர்ணயிக்கிறார்கள்.

‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என துறவறவியலில்(அதிகாரம் – அருளுடைமை, பால் – அறத்துப்பால், குறள்: 247) பொருளீட்டலின்(இன்றைய பணம்) தேவையை பற்றி விவரிக்கிறது. பணத்தின் மீது பெருத்த ஆசை வைக்காவிட்டாலும், தனி நபருக்கு அல்லது ஒரு குடும்பத்தை நிதி சார்ந்து பாதுகாக்க தேவையான பணத்தை நாம் தேடித்தான் ஆக வேண்டும்.

அதிக பணமீட்டும் ஒரு சாரார் தங்களது செலவுகளை அதிகமாக கொண்டிருந்தாலும், அதன் மூலம் வரி வருவாய் ஏற்படுத்தினால் மட்டுமே, ஒரு நாட்டின் அரசால் வறுமையில் அல்லது வருவாய் குறைந்தவர்களுக்கான நிதி திட்டமிடலை செய்ய முடியும். இல்லையெனில் பொருளாதாரம் சார்ந்து அதிக ஏற்றத் தாழ்வால் வெறுப்பும், வன்முறையும் நிகழ வாய்ப்புண்டு. இதன் காரணமாக தான் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளும், வேகமாக வளரும் நாடுகளும் பொருளாதாரத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

முன்னொரு காலத்தில் நெல் உமியையும், அரிசியையும் வீணாக்கக் கூடாது என்ற வழக்கமுண்டு. பஞ்சத்தின் வெளிபாட்டையும், சிக்கனத்தை அவசியத்தையும் தான் இது போன்ற நிலைகள் கூறுகிறது. ‘பணக்காரனுக்கு என்னப்பா கவலை’ என்றும், ‘பணத்தை விட உடல்நலத்தை பேணுவதே’ என்றும், ‘நம்மிடம் பணமிருந்து என்ன பயன், நல்ல தூக்கம் இல்லையே’ என சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் பணத்திற்கான மதிப்பு தான் என்ன ?

அதனை நீங்கள் தான் அளவிட முடியும் !

நம்மிடமிருக்கும் பணத்தை நாம் அவ்வளவு அக்கறையாக பார்க்கையில், மற்றொருவரின் பணத்தை நாம் அவ்வாறாக காண்பதில்லை. இதனை தான் எண்டோவ்மென்ட் விளைவு(Endowment Effect) என்கிறோம். ‘பணத்தை தண்ணி போல செலவழிக்கிறான் பார்’ என சொல்வதுண்டு. பணத்தின் மீதான அளவீடு என்பது ஒவ்வொரு தனிநபரின் பார்வையிலும் மாறி கொண்டே இருக்கிறது.

கஷ்டப்பட்டு அப்பா சம்பாதித்த பணத்தை பற்றி பிள்ளைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அதன் அளவீடும் மாறுபடும். சாலையில் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளும், சில்லறைகளும் அதனை கண்டவரின் பார்வையில் பணத்தின் மீதான அளவீடு உள்ளது. நமது பணம் தொலைந்து விட்டால் நமக்கு வரும் பதட்டம், அதே பணத்தை மற்றவர் தொலைக்கும் போது இருப்பதில்லை. முடிந்தால் அறிவுரை சொல்ல பழக்கப்பட்டிருப்போம்.

பொதுவாக நம்மிடம் இல்லாதவற்றை விட, நமக்கு சொந்தமான பொருட்களின் மீது நாம் உயர்வான மதிப்பை கொண்டிருக்கிறோம். இதனை தான் முதலீட்டு சிந்தனையிலும் செய்து வருகிறோம். நமக்கு தெரிந்த முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது அல்லது நமது வசதிக்கு ஏற்ப இந்த திட்டம் தான் சரியானது என முதலீடு செய்வது. உண்மையில் அந்த திட்டம் வருவாயை கொடுக்காமல் இருந்திருக்கலாம். சில நேரங்களில் அத்திட்டம் அதிக ரிஸ்க் தன்மை கொண்டதாக இருந்திருக்கக் கூடும்.

இருப்பினும் நாம் அந்த திட்டத்தை மற்றவைகளை பற்றி தெரிந்து கொள்ள விருப்பில்லாமல், ஏற்கனவே சொன்ன திட்டத்தில் ஆறுதல் தேடிக் கொள்வோம். இதனை தான் உளவியலாளர் திரு. டேனியல் கானமேன் ஒரு ஆராய்ச்சியின் மூலம் விவரிக்கிறார்…

“ அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒரு போட்டியை நடத்தி ஆராய்ச்சி கண்டோம். சில மாணவர்களிடம் பல்கலைக்கழக சின்னம் பதிக்கப்பட்ட குவளைகளை(Mugs) வைத்திருக்க சொன்னோம். குவளைகளை கொண்டிருந்த மாணவர்களிடம் அதனை மற்ற குவளையில்லாத மாணவர்களிடம் விற்கும் படி செய்ய சொன்னோம். குவளையில்லாத மாணவர்களும், குவளை வைத்திருக்கும் மாணவர்களிடம் வாங்குவதற்கான பேரத்தை பேசினர்.

இதனை பலமுறை சோதித்து, இறுதி ஆராய்ச்சியின் முடிவில் நாங்கள் கண்டது, குவளையில்லாத மாணவர்கள் தாங்கள் கேட்ட விலையை விட இரு மடங்கு விலையில் குவளையை வைத்திருந்த மாணவர்கள் விற்பதற்கு தயாராக இருந்தனர் என்பது தான்.”

இதனை தான் நாம் அவ்வப்போது நம் வாழ்க்கையில் செய்து வருகிறோம். உதாரணத்திற்கு நம்மிடம் உள்ள பழைய நான்கு சக்கர வாகனத்தை விற்கும் போது, நாம் அதன் அருமை-பெருமைகளை சொல்லி கூடுதல் விலைக்கு விற்க முனைகிறோம். இதுவே வாங்க வருபவர், தேய்மானத்தை அடிப்படையாக கொண்டு மலிவான விலையில் கேட்பார்.

வீட்டுமனை விற்பனையிலும் நாம் இதனை காணலாம். வீட்டுமனையை வைத்திருப்பவர் எப்போதும் அதிக விலைக்கே விற்க(Endowment Effect) முனைகிறார். ஆனால் உண்மை நிலவரம் அப்படியில்லை, இடம் மற்றும் காலத்திற்கு தகுந்தாற் போல தான் அந்த மனையின் விலை விற்கப்படும். எனினும் நம் மனம் நமது சொந்த பொருட்களின் மீதான மதிப்பை அதிகரித்தே சொல்லக் கூடும்.

கைக்கடிகாரம் கூட யார் மணிக்கட்டில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கிணங்க அதன் மதிப்பை பெறுகிறது என்பார்கள்.

எனவே நம் பணத்தின் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பை, மற்றவர்களின் பணத்திற்கும்(மனிதத் தன்மைக்கும்) கொடுப்பது நலம். இதன் மூலம் அதீத ஏற்ற-தாழ்வை பொருளாதார நிலையை குறைக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல்

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல் 

Layman’s Personal Financial Planning – Invest & Breathe

“மனதைத் தெளிவுபடுத்துவதற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்கும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியே அடிப்படை” என மருத்துவம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. 

“A Deep breathing exercise to clear the mind and relieve stress”

மூச்சுப்பயிற்சியினால் மனித உடலின் இரத்த அழுத்தம் குறைவதும், மற்ற உடலுறுப்புக்கள் சீராக இயங்குவது மட்டுமில்லாமல், அமைதி மற்றும் நல்வாழ்வு வாழ்வதற்கான புது தெம்பும் நமக்கு கிடைக்கப்பெறுகிறது.    

நவீன உலகத்தில் உடல்நலனும், செல்வமும் இரு நண்பர்களாக தான் வலம் வருகிறது. பொருள் ஆதாரமற்ற மனித வாழ்க்கையை இன்று நாம் இவ்வுலகில் காண இயலாது. அதே போல சுவர் இருந்தால் தான் சித்திரமும். 

அதற்காக நாம் கடினமாக உழைப்பதோ, உடல்நலத்தை பேணுகிறேன், உடல் எடையை இத்தனை நாட்களில் குறைக்கிறேன் என நாள்தோறும் ‘ஜிம்(Gym)’ பேர்வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண நடைப்பயிற்சியும், மூச்சுப்பயிற்சியும் மற்றும் உணவில் கவனம் – அவரவர் வயது சார்ந்து மற்றும் தொழிலுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் அறிவை பயன்படுத்தி மற்றும் அதனை மேம்படுத்துதல் மூலம் நாம் செல்வத்தை எளிமையாக ஈட்டலாம். ஈட்டிய செல்வத்தை சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் பெருஞ்செல்வமாக மாற்றலாம். 

நமது உடல்நலனை நாம் எப்படி பொறுமையாக கருத்தில் கொண்டு பேணுகிறோமோ, அதனை போல செல்வம் சேர்ப்பதிலும் கற்றல் மற்றும் பொறுமையும் அவசியம். ‘அதிகரித்த உடல் எடையை, சில நாட்களில் மிக விரைவாக குறைக்கிறேன்’ என நாம் எடுக்கும் ரிஸ்க் தன்மையும், ‘குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை அள்ளி விட வேண்டும்’ என முதலீட்டில் நாம் விளையாடும் ஊக வணிகமும்(Speculation) – இரண்டும் பக்கவிளைவை தரக்கூடியவையே !

பல வருடங்களாக நமது உடலில் இருக்கும் நோய்த்தன்மையை ஓரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விட்டால், பின்னாளில் நமது உடல் இயக்கங்கள் அடுத்து வரும் நாட்களில் தடுமாறும். இதன் காரணமாக மீண்டுமொரு கவனத்தை நாம் நம் உடல் நலன் மீது செலுத்த நேரிடும். இதற்கான காலமும், பணச்செலவும் அதிகமே. இதனை போல பல ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு பங்குச்சந்தையில் ஒரே நாளில் பல லட்சங்களையும், கோடிகளையும் ஈட்ட வேண்டுமென்ற ஆசை(பேராசை) எல்லோருக்கும் தான். ஆனால் அது அனைவருக்கும், எல்லா நேரங்களிலும் சாத்தியமா !    

கடந்த 2022-23ம் நிதியாண்டில் செபி|(SEBI) வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, இந்திய பங்குச்சந்தையில் ஈடுபடும் 10 நபர்களில் ஒன்பது பேர் (Futures & Options Traders) தங்களது முதலீட்டு பணத்தை இழக்கின்றனர் என கூறுகிறது. சந்தையில் பணத்தை இழக்கும் நபர்களின் சராசரி இழப்பு ரூ.50,000 வரை உள்ளதாகவும், 28 சதவீதம் பேர் தங்களது முதலீட்டு இழப்பை, வெறும் பரிவர்த்தனை கட்டணங்கள் செலுத்துவதில் சந்திக்கின்றனர் எனவும் இந்த தரவு அறிக்கை கூறுகிறது. 

அப்படியிருக்க நாம் எதனை நோக்கி நாம் உழைத்த பணத்தை கொண்டு சென்றிருக்கிறோம் ? பங்குச்சந்தை முதலீடு நீண்ட காலத்தில் பலன் தரும் என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கமே இதனை வெளிப்படையாய் சொன்னாலும்(சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதும்) நாம் என்னவோ குறுகிய காலத்தில் பணக்காரனாக ஆசைப்படுவதே. உண்மையில் பங்குச்சந்தையில் எளிமையாகவும், மிக விரைவாகவும் லாபமீட்ட முடிந்தால், ஏற்கனவே சந்தையில் லட்சம் கோடி ரூபாய்களில் மூலதன மதிப்பை கொண்ட டாட்டா, அம்பானி, பஜாஜ், கோத்ரேஜ், இன்னபிற குழுமங்கள் எங்கே ? அவர்களிடம் இல்லாத பணமா, நிர்வாகமா அல்லது அவர்களுக்கு தெரியாத பங்குச்சந்தை ரகசியமா. சொல்லப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை தங்களது தொழில்களை தான் நம்பியுள்ளன. அவர்களது தொழிற் திறனும், வாடிக்கையாளர்களும் தான் பின்னாளில் முதலீட்டாளர்களால் பங்கு விலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

சாமானியனின் நிதித்திட்டமிடலில் முதல் படி:

தனது குடும்பத்திற்கு தேவையான நிதிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது தான் –  வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு போதுமான டேர்ம் காப்பீடு(Term Insurance), குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்ந்தாற் போல மருத்துவ காப்பீடு(Mediclaim), அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்யும் நபராக இருக்கும் நிலையில், அவருக்கு தேவையான விபத்துக் காப்பீடு(Accidental Coverage).

இது போக அவசர கால நிதியை(Emergency Fund) உருவாக்குதல், குடும்ப நபர்களுக்கான நிதித்தேவையை இலக்குகளாக மாற்றுதல்(Creating Financial Goals). மேலே சொன்ன ஐந்து நிலைகளுக்கும் தனிநபர் ஒருவரின் வருமானம் மற்றும் குடும்ப நபர்களின் தேவையை கருத்தில் கொண்டு திட்டமிடலாம். இந்த ஐந்தும் தவிர்க்க இயலாத நிலைகளாக மற்றும் அவசியமான ஒன்றாக உள்ளது.

நிதித்திட்டமிடலின் இரண்டாவது படியில்,

உங்களது நிதி இலக்குகளுக்கான சரியான சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது(Identifying Suitable Investment schemes). பொதுவாக சேமிப்பு எனும் போது அரசு சார்ந்த அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, பி.எப். பிடித்தம், சிறியளவில் நகை சேமிப்பு, சீட்டு(அரசு பதிவு பெற்ற மற்றும் நம்பகமான) ஆகியவை நமக்கு நினைவில் வரும். 

இவை பெரும்பாலும் குறைந்த வட்டி வருவாயை(பணவீக்கத்தை விட குறைவு) கொண்டிருந்தாலும், குறுகிய கால இலக்குகளுக்கு சிறந்தது. இதனை விடுத்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொன்சி(Ponzi Scam) மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை அரசாங்கம் வெளியிடும் அல்லது அரசு நிர்வாகம் செய்யும் சேமிப்பு திட்டங்களை மட்டுமே நாடுவது நல்லது.

நடுத்தர மற்றும் நீண்டகால நிதி இலக்குகளுக்கு மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இந்த திட்டங்களில் ஏற்ற-இறக்க ரிஸ்க் தன்மை இருப்பதால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஏற்படுத்தலாம. இதன் காரணமாக நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை சரியான காலத்தில் பெற முடியும். பரஸ்பர நிதிகளில் நீண்டகாலத்திற்கு என முதலீட்டு செய்து விட்டு, இலக்குகளை அடையும் முன்னர் அல்லது இடைவெளி காலத்தில் முடிந்தளவு பணத்தை வெளியில் எடுக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு எடுக்கும் நிலையில், நாம் கூட்டு வட்டியின் முழுமையான பலனை(Power of Compounding) அடைய முடியாமல் போகலாம்.

பரஸ்பர நிதி முதலீட்டின் வாயிலாக நாம் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான திட்டங்களில்(Asset Allocation) நமது முதலீட்டை பரவலாக்க முடியும். 

மூன்றாவது மற்றும் இறுதிப்படியாக,

பெருஞ்செல்வத்தை ஈட்டுவது இன்றைய காலத்தில் தேவையான ஒன்றாகி விட்டது. முன்னொரு காலத்தில் மனித உடற்சக்தியை மட்டுமே நம்பியிருந்த குடும்பச் சமூகம், இன்று நிதிச் சொத்துக்களை தான் குடும்பத்திற்கான ஆதாரமாக வைத்துள்ளது. எனவே நாம் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான மற்றும் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை சேர்ப்பதிலும், அவற்றினை கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய நிலையுள்ளது. செல்வம் சேர்ப்பது என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானதல்ல.

பெருஞ்செல்வம் ஈட்ட நாம் தொழில் திறனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நமக்கான தொழில் ஏதுமில்லை அல்லது அவற்றை செய்ய நமது மனம் விரும்பாத போது, மற்றவர்களின் தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்(அதற்காக மீண்டும் பொன்சி மோசடியிடம் மாட்டி கொள்ளாதீர்கள் !). முதலீடு செய்யப்படும் தொழில் நிறுவனம் அரசு அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவும், நிர்வாகத்திறன் படைத்ததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கா விட்டாலும், நமது முதலீட்டு பணம் நமக்காக திறம்பட வேலை செய்யும்.  

மற்றவர்களது தொழிலில் ஒரு சாமானியனும் முதலீடு செய்யலாம் என்பதே, இன்றைய பங்குச்சந்தை வாய்ப்பு(Public & Private Equity – Listed & Unlisted). பங்குச்சந்தை முதலீடு பற்றிய அடிப்படை கற்றலை கற்றுக் கொண்ட பின்னர் தான், சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை கொண்டிருந்தால் சிறப்பு. இல்லையென்றால்,பதிவு பெற்ற மற்றும் நம்பகத்தனமான நிறுவனங்களின் மூலம் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பங்குச்சந்தையிலும் பேராசை காட்டி மோசடி செய்யும் பேர்வழிகள் ஏராளம் ! 

உங்களால் பங்குச்சந்தையை புரிந்து கொள்ள முடியவில்லை எனில், முதலிரண்டு படிநிலைகளோடு இருந்து விடுவது நல்லது. 

மூச்சுப்பயிற்சியை மெதுவாக கவனித்தால் தான் மெருகும், நிதி முதலீடும் சாமானியனுக்கு அப்படித்தான் 🙂

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை பாதிக்கும் இரண்டு காரணிகள்

பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை பாதிக்கும் இரண்டு காரணிகள்

Two factors that affecting the Stock Prices in the Equity Market

பொதுவாக பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவன பங்கின் விலை பல்வேறு காரணிகளால் ஏற்ற-இறக்கத்திற்கு உட்படும். இதன் காரணமாகவே பங்கு முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என சொல்லப்படுகிறது. பங்கு விலையின் மாற்றத்திற்கு முதற்காரணமாக அமைவது தேவைக்கும்-உற்பத்திக்குமான(Demand-Supply) இடைவெளி தான். 

எனினும் இந்த தேவைக்கும், உற்பத்திக்குமான வாய்ப்பை ஏற்படுத்துவது சந்தையில் ஈடுபடும் வணிகர்(வர்த்தகர்) மற்றும் முதலீட்டாளரின் மனநிலையை(Trading Psychology & Behavioural Finance) பொறுத்தது. அதாவது இன்று இந்த பங்கினை இந்த விலையில் வாங்கலாமா வேண்டாமா; இன்று ரிஸ்க் எடுத்து லாபம் பார்க்கலாமா, இல்லையெனில் நீண்டகாலத்திற்கு பங்குகளை தக்கவைத்து கொள்ளலாமா, கிடைத்த லாபத்தை இப்போதே எடுத்து விடுவது, பெருத்த நட்டத்துடன் இத்தோடு சந்தையிலிருந்து வெளியேறி விடுவோமா என ஒவ்வொருக்கும் ஒரு மனப்போக்கு உண்டு.

இங்கே நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர் பெரு முதலீட்டாளர்கள் போன்றோர் நாம் மேலே சொன்ன மனப்போக்கை கொண்டிருந்தாலும் அவர்களின் முதலீட்டு முடிவெடுத்தலுக்கான காரணிகள், சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து சற்று மாறுபடும். இந்த காரணிகள் இரு வகைப்படும். இவை உலகளாவிய மற்றும் பொருளாதார வல்லுநர்களால் நிருபிக்கப்பட்ட சந்தை காரணிகளாகவும் உள்ளது.

நுண்பொருளியலும், பருப்பொருளியலும்:

பொருளாதாரத்தின் இரு பெரும்பிரிவுகளாக நுண்பொருளியலும்(Micro Economics), பருப்பொருளியலும்(Macro Economics) உள்ளது. நுண்பொருளியலை தான் நாம் பெரும்பாலும் சமூக அறிவியலாக காண்கிறோம். பருப்பொருளியல் என்பது ஒரு நாடு சார்ந்தோ அல்லது மண்டலம் சார்ந்த பொருளாதார செயல்பாடுகளை கொண்டிருக்கும். இதற்கும் பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலைக்கும் என்ன சம்மந்தம் என கேட்கிறீர்களா ?

இந்த இரண்டு காரணிகள் தான் பங்குச்சந்தையின் குறியீடுக்கும்(Index), குறிப்பிட்ட நிறுவன பங்கின் விலை மாறுபாட்டுக்கும் காரணம். நாம் என்னவோ பங்குகளை ஒரு ஊகத்தில்(Speculation) வாங்கி விற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கான பணம் நமக்கு எங்கிருந்து வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்க வேண்டிய பங்குகளின் பண முதலீட்டை எங்கிருந்து பெறுகின்றனர், ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்ட தனது பங்குகளின் மூலம் எவ்வாறு தனது மதிப்பீட்டை பிற்காலத்தில் உயர்த்துகிறது(பங்கு விலையும் ஏறும்) – இது போன்ற கேள்விகளுக்கான விடை தான் நாம் மேலே சொன்ன இரண்டு காரணிகளும்.

மைக்ரோ எகானமி(Micro Economy) என சொல்லப்படும் நுண்பொருளியல் பெரும்பாலும் ஒரு நிறுவனத்தின் மீது கவனம் செலுத்துகிறது. நிறுவனத்தின் வணிகம் எவ்வாறு நடைபெறுகிறது, நிதிநிலை(P&L, Balance Sheet and Cash Flow) எப்படி மற்றும் நிர்வாகத்திறன்(Corporate Governance) ஆகியவற்றை பற்றி அலசுகிறது. தனிநபர் வருவாய், உற்பத்தி மற்றும் தேவை, நுகர்வுத்தன்மை, வரி செலுத்துதல் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

மேக்ரோ எகானமி(பருப்பொருளியல்) ஒரு நாட்டின் பணவீக்கம், வட்டி விகித மாற்றம், வேலைவாய்ப்பின்மை விகிதம், உட்கட்டமைப்பு, அரசு சார்ந்த பொருளாதார கொள்கைகள் மற்றும் நிறுவனத்தின் அல்லது ஒரு துறையின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இன்னபிற காரணிகளை கொண்டிருக்கும். 

இவற்றை நாம் பொதுவாக பங்குச்சந்தையின் அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis – கடந்த கால பங்கு விலையை அலசுவதற்கு மட்டும்) ஆகிய இரு படிப்பினைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பங்குச்சந்தையில் பங்குகளின் விலை இறங்குவதற்கு அல்லது ஏறுவதற்கு பெரும்பாலும் இந்த இரண்டு பொருளியல் தான் காரணமாக உள்ளது. மைக்ரோ எகானமியை பொறுத்தவரை, மேக்ரோ எகானமியில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை(Uncertainty) இதனை வெகுவாக பாதித்து விடும். இதன் காரணமாக தான் உலக பொருளாதார மந்தம் அல்லது வீழ்ச்சியில் ஏற்றம் பெற்று வரும் சந்தையும் விழும். ஊரே அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும் சந்தை ஏறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியுமா ?

புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியுமா ?

Listed companies with Zero Promoter Holding – Fundamental Insights

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை குறைந்தபட்ச பொது பங்கு(Minimum Public Shareholding) விதியின் படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகளை ஒரு நிறுவனம் ஒதுக்க வேண்டும். பொது மக்களுக்கு என சொல்லும் போது சிறு முதலீட்டாளர், பெரு முதலீட்டாளர் மற்றும் நிறுவனங்களும் அடங்கும். நிறுவனர்களின்(Founders, Promoters) பங்களிப்பை பொறுத்தவரை, நம் நாட்டில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தில் 75 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்பது சட்ட விதியாக உள்ளது.

75 சதவீதத்திற்கு மேலாக ஒரு நிறுவனம் பங்குகளை தன்வசம் வைத்திருந்தால், அந்த பங்குகளை, பங்கு விலக்கல்(Divestment) முறையில் மற்ற பங்குதாரர்களுக்கு விற்று விட வேண்டும். இது பொதுவாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விலக்கு பெற்ற நிறுவனங்களுக்கு பொருந்தாது. தற்போதைய நிலையில், 75 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்கும் பட்டியலிடப்பட்டவை, சுமார் 64 நிறுவனங்கள் தான். இவற்றில் எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் மற்றும் சில பொதுத்துறை வங்கிகளும் அடங்கும்.

பங்குச்சந்தையில் 50 சதவீதத்திற்கும் மேல் நிறுவனர்களின் பங்களிப்பை(Promoter Holding) கொண்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 2,854 (ஆகஸ்ட் 8, 2023 முடிவில்). இந்த பட்டியலில் ரூ.5,000 கோடிக்கும் மேலான சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனங்கள் 396. 5,000 கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மூலதன மதிப்பு, 50 சதவீதத்திற்கு மேலான நிறுவனர்களின் பங்களிப்பு மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 மடங்குக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 254.

பொதுவாக நிறுவனர்களின் பங்களிப்பு, பொது மக்கள் மற்றும் பிற உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை காட்டிலும் அதிகமாக காணப்படுவது, நீண்டகாலத்தில் ஒரு முதலீட்டாளருக்கு சாதகமான அம்சமாக இருக்கும். ஒரு நிறுவனத்தின் மீது அதன் நிறுவனர்களே பங்களிப்பை கொடுக்காவிட்டால், பொது மக்களாகிய நாம் அந்த நிறுவனத்தின்(பங்குகள்) மீது நம்பிக்கை வைத்து என்ன பயன் ? இன்றும், சில நிறுவனங்களின் லாபத்தில் பெரும்பாலான பங்கு பலனை அனுபவிப்பது அதன் நிறுவனர்கள் தான்.

40 வருடங்களுக்கு முன்பு, இந்த ‘ABC’ மற்றும் ‘XYZ’ பங்குகளை வாங்கியிருந்தால், இன்று அது பல கோடிகள் பெற்றிருக்கும் என வெற்று பெருமை பேசி என்ன பயன். ஒரு கட்டுரையீர்ப்புக்கு(Article, Blogging Posts) வேண்டுமானால், இது போன்ற தகவல்கள் பயன்படலாம். உண்மையில், 40 வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு நிறுவனம், இன்று பல மடங்கு உயர்ந்திருந்தால் அந்த பலனை பெரும்பாலும் அனுபவிப்பது அதன் நிறுவனர்கள் தான். ஏனெனில் அவர்கள் வசம் மட்டும் அந்த பங்குகள் இன்றளவிலும் விற்கப்படாமல் இருந்திருக்கும். பொதுமக்களாகிய நாம் அந்த பங்குகளை எப்பொழுதோ விற்றிருப்போம்.

நிறுவனர்களின் பங்களிப்பு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனினும் சில நிறுவனங்களில் நிறுவனர்கள் சார்பாக எந்த பங்களிப்பும் இல்லாமல் இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட நிறுவனங்கள் நல்ல நிறுவனங்களா  அல்லது சரிப்பட்டு வராதா என கேள்வி கேட்டால், அது அந்த நிறுவனத்தின் தொழில் அனுபவமும், நிர்வாக திறனையும் பொறுத்து தான் உள்ளது. 

இந்திய பங்குச்சந்தையில் புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் சுமார் 110 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முக்கிய நிறுவனங்களான ஐ.டி.சி, எச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல் & டி ஆகியவை அடங்கும். சமீபத்தில் ஜோமாட்டோ மற்றும் பேடிஎம் நிறுவனங்கள். 

நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் இயங்கலாமா ? ஆம், தாராளமாக இயங்கலாம். சில நிறுவனங்கள் தங்கள் தொழிற்துறையின் சாதகத்திற்கு ஏற்ப, நாட்டின் சட்ட விதிகளுக்காக, திறன்மிக்க தொழில் வல்லுநர்களை நியமிப்பதன் மூலம் இது போன்ற நிறுவனங்களை செயல்படுத்துகின்றன. உண்மையில் அவர்களது பங்குகள், நிறுவனர்கள் பட்டியலில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பொதுப்பங்கு நிறுவனங்களின் வாயிலாக பங்குகளை கைவசம் வைத்திருந்து, நேரடியாக இல்லாமல் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை வைத்திருப்பர்.

உதாரணமாக ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் இந்திய காப்பீட்டு நிறுவனங்களிடமும், பிற வெளிநாட்டு நிறுவனங்களிடமும் உள்ளன. அதே வேளையில் மேலே சொல்லப்பட்ட நிறுவனங்களில், குறிப்பிடத்தக்க பங்குகளை மறைமுகமாக நிர்வாகத்தை நடத்தும் நிறுவனத்திற்கு உண்டு. இது போல தான் மற்ற நிறுவனர் பங்களிப்பு அல்லாத நிறுவனத்திலும் நடைபெறுகிறது. குழும நிறுவனங்கள்(Group of Companies) சில காலங்களில் இது போன்ற நடைமுறையை பின்பற்றி தங்களது துணை நிறுவனங்களை நடத்துகின்றனர்.

நிறுவனர்கள் தங்களது பங்குகளை வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ அடமானம் வைத்து, பின்னர் அது மீட்கப்படாமல் போனாலும் இது போன்ற நிலை ஏற்படலாம். நிறுவன கையகப்படுத்துதல், திவால் நிலை போன்ற சமயங்களிலும் நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்கலாம்.

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை ஆராய, கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய அடிப்படை காரணிகள்(Fundamental Analysis – Factors)

பங்குச்சந்தையில் நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாவிட்டாலும், அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தை திறம்பட வைத்திருக்க வேண்டும் என்பது தான் எதார்த்த உண்மை. எனவே, ஒரு நிறுவனத்தை ஆராயும் போது அதன் தொழில் அனுபவம், நிர்வாக திறன், கடனில்லாமை அல்லது கடனை திறம்பட தொழிலில் புகுத்துவது ஆகியவற்றை ஒரு முதலீட்டாளர் கவனிக்க வேண்டியது அவசியம். இல்லையனில் முதலீட்டாளருக்கு, அது ‘விழலுக்கு இறைத்த நீர்’ தான் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

Can you invest in Chennai Super Kings – CSK – Unlisted Equity(Pre-IPO) ?

கடந்த 2007ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் துவங்கப்பட்டது தான் இந்தியன் பிரீமியர் லீக்(IPL). உரிமையாளர்(Franchise) சார்ந்து கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டு 2008ம் ஆண்டு முதல் இன்று வரை வருடந்தோறும் ஐ.பி.எல். போட்டிகள் நடந்து வருகின்றன. 

இதுவரை நடைபெற்ற 15 வருட ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கை அணிகளாக மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல வருடங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப காலங்களில் மாஸ்டர் பிளாஸ்டர்(Master Blaster) என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இருந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் அமைந்தது தான்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இந்தியா வின்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக முன்னாள் ஐ.சி.சி. தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சீனிவாசன் இருக்கிறார். இந்தியா வின்ஸ ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக எம்.எஸ். தோனியே இருந்து வருகிறார். பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாட்டின் முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாகும். 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பை(USD One Billion – Unicorn) கொண்ட நிறுவனத்தை தான் யுனிகார்ன் நிறுவனம் என கூறுவதுண்டு.

கடந்த 15 வருட ஐ.பி.எல். வரலாற்றில் நான்கு முறை கோப்பையை இந்நிறுவனம் வென்றிருந்தாலும், 2013ம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்ட நிகழ்வில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016, 2017 என இரண்டு வருடங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்நிகழ்வில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

2013ம் ஆண்டில் லண்டனை சேர்ந்த பிராண்ட் பினான்ஸ் நிறுவனம், உலகின் மதிப்புமிக்க 150 விளையாட்டு அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்ந்தெடுத்தது இதன் சிறப்பம்சம். ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ்(Mumbai Indians) அணியும் அதிக போட்டிகளை நேருக்கு நேர் எதிர்கொண்ட அணிகளாக உள்ளது. கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்கும் முதலீட்டு செலவிலும் இவ்விரு அணிகள் தான் முன்னிலையில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூட்டாக ஏற்படுத்திய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இரு முறை கோப்பைகளை வென்ற அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே உள்ளன. 

பொதுவாக பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட, இந்திய கம்பனிகள் சட்டப்படி, அந்நிறுவனத்தை பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக(Public Limited / Listed) பதிவு செய்ய வேண்டும். பின்னர் தான் அந்த நிறுவனம் சந்தையில் ஐ.பி.ஓ. முறையில் பங்குகளை வெளியிடும். அப்போது தான் பொதுவெளியில் சாமானிய மக்களும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க இயலும். 

இதே முறையில், பொதுவெளியில் பங்குகளை வெளியிடாமல் ஆனால் குறிப்பிட்ட பங்குதாரர்கள் மட்டும் முதலீடு செய்யும் பொருட்டு வந்த நிறுவனங்கள் தான் இன்று பெரும்பாலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக வலம் வருகின்றன. உதாரணமாக ஜொமாடோ(Zomato), ஒயோ, ஸ்விக்கி, பைஜூ, போட்(boAt) ஆகிய நிறுவனங்கள்.

இது போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமாகவும், தனியார் முதலீட்டை பெறக்கூடிய பங்குகளை கொண்ட நிறுவனமாகவும் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏறக்குறைய அனைவரும் முதலீடும் செய்யலாம். அதே வேளையில் அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை(Unlisted Equity). 

2014ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு சந்தையில் பட்டியலிடப்படாத(Unlisted) பங்கு முதலீட்டை கொண்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அதாவது இந்த பங்கு பொதுவெளி சந்தையில் வர்த்தகமாகாது. ஆனால், இந்த பங்குகளை ஏற்கனவே வைத்திருக்கும் குறிப்பிட்ட முதலீட்டாளர்களிடம் அவர்கள் விற்கும் விலையில் வாங்கி கொள்ளலாம்.

2021-22ம் நிதியாண்டின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 1.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் பங்களிப்பில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்(India Cements Shareholders Trust) 30 சதவீத பங்குகளையும், ஸ்ரீ சாரதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 7 சதவீத பங்குகளையும், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 6 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் டிரஸ்ட் நிறுவனம் 2.50 சதவீத பங்குகளையும், டி மார்ட்(DMart) நிறுவனத்தின் தலைவர் திரு. ராதா கிஷன் தமானி 2.40 சதவீத பங்குகளையும் வைத்துள்ளார். இன்னபிற தனியார் நிறுவனங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வைத்துள்ளது. நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 30.81 கோடி(Equity Shares). நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கல்லிடைக்குறிச்சி விஸ்வநாதன் சுப்பிரமணியம் உள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்படாத சந்தை மதிப்பு சுமார் ரூ. 5,100 கோடி. பங்கு ஒன்றின் விலை 180 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு முதலீட்டாளராக நூறு பங்குகளை வாங்க வேண்டியது அவசியம். 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 341 கோடி ரூபாயாகவும், வருவாய் வளர்ச்சி 38 சதவீதமாகவும் இருந்துள்ளது.

CSK - Profit and loss - FY22

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் செலவினம் 308 கோடி ரூபாயாகவும், நிகர லாபம்(Net Profit) ரூ. 32 கோடியாக உள்ளது. கடன்-பங்கு விகிதம் 0.25 என்ற அளவிலும், ஒரு பங்கு மீதான வருமானம்(EPS) 95 பைசாவாகவும் இருந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் எட்டாம் ஆண்டு பொதுக்கூட்டம் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. மார்ச் 2022 முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves & Surplus) 245 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 130 கோடி (மார்ச் 2022). 2021-22ம் நிதியாண்டில் நிறுவனம் சார்பில் ஈவுத்தொகை(Dividend) எதுவும் அறிவிக்கப்படவில்லை. சொல்லப்பட்ட காலத்தில் பெறப்பட்ட லாபத்திலிருந்து நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்புக்கு தொகை எதுவும் ஒதுக்கப்படவில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம், பங்குச்சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பை பற்றி தற்போது வெளியிடவில்லை. அதே வேளையில் நிறுவனத்தின் வருமான வாய்ப்புகளாக ஊடக உரிமைகள்(Media Rights), ஸ்பான்சர்சிப், விளம்பரங்கள், போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், கடிகாரங்கள், டி-சர்ட்டுகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திற்கு, சூப்பர்கிங்ஸ் வென்ச்சர்ஸ் என்ற துணை நிறுவனமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

CSK நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்யலாமா ?

  • பொதுவாக பங்குச்சந்தையில், பொதுவெளியில் வெளியிடப்படும் நிறுவன பங்குகளில் ரிஸ்க் தன்மை அதிகமாக இருக்கும் நிலையில், பட்டியலிடப்படாத இது போன்ற நிறுவன பங்குகளிலும் ரிஸ்க் தன்மை மிகவும் அதிகமே. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதனை களைய செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது. ஆனால் பட்டியலிடப்படாத பங்குகளில் இதனை நாம் காண முடியாது. 
  • பங்குச்சந்தையில் காணப்படும் அதிக ஏற்ற-இறக்கங்கள், பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் பொதுவாக நடைபெறாது. இதற்கான காரணம் மிகக்குறைந்த பங்குகள் மட்டும் இங்கே வர்த்தகமாகும். சில நேரங்களில்(மாதங்கள் அல்லது வருடங்கள்) பங்கு வர்த்தகமே ஆகாது. வாங்குவதற்கும், விற்பதற்கும் நித்தமும் ஆட்கள் இருக்க வேண்டுமே !
  • பங்குச்சந்தையில் ஏற்கனவே அளப்பரிய அளவில் முதலீடு செய்து விட்டு, தனியார் நிறுவனங்களில், இது போன்ற பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோர் இதனை ஒரு வாய்ப்பாக கருதலாம். ஒரு வேளை, இது போன்ற நிறுவனங்கள் பின்னொரு காலத்தில் பங்குச்சந்தைக்கு(IPO Listed) வரும் போது, ஏற்கனவே முதலீட்டு செய்திருக்கும் நிலையில் அதிக விலையில் பங்குகளை விற்று வெளியேறலாம். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும், திறமையான நிர்வாகமும் இதனை வெளிக்காட்டும்.
  • பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளை, தற்போதைய நிலையில் வெகு சில தளங்களே வாங்கும்-விற்பனை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தளங்களின் நம்பகத்தன்மையையும் நாம் சரிபார்த்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் கைதேர்ந்தவர்களுக்கும்(25 வருடங்களுக்கு மேல் முதலீட்டு அனுபவம்), அச்சந்தையில் அதிக முதலீடு செய்து கோடிகளில் லாபத்தை ஈட்டியவர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பட்டியலிடப்படாத பங்குகள் ஒரு அரிய முதலீட்டு வாய்ப்பாகும். மற்ற கத்துக்குட்டிகளுக்கு இவற்றிலிருந்து விலகியிருப்பதே நன்மை பயக்கும் !

“Unlisted equity is an opportunity to build wealth, but it’s always risky than listed”

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்கு முதலீடு அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com