வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக குறைப்பு, வங்கிக்கடன் உண்மையில் குறையுமா ?

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக குறைப்பு, வங்கிக்கடன் உண்மையில் குறையுமா ?

Repo Rate cut to 5.15 Percent – RBI Policy – Does the bank cut the rates for its Customers ?

2019-20ம் நிதியாண்டின் மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee) சார்பிலான நான்காவது கூட்டம் நேற்று நிறைவுபெற்றது. மூன்று நாட்களாக நடந்த கூட்டத்தில், வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து 5.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) நேற்று 5.15 சதவீதமாக சொல்லப்பட்டது.

மத்திய நிதிக்கொள்கை குழுவில் பங்கேற்ற ஆறு உறுப்பினர்களும் வட்டி விகித குறைப்புக்கு ஆதரித்து வாக்களித்தனர். நாட்டின் பணவீக்கம் மத்திய ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதம் என்ற அளவிற்குள் உள்ளதால், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) விகிதம் 4.90 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது. வங்கி வட்டி விகிதம்(Bank Rate) 5.40 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவும் மற்றும் எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18.75 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

வங்கி கடன் மற்றும் வைப்புக்கான அடிப்படை விகிதம் 8.95 சதவீதத்திலிருந்து 9.40 சதவீதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு மேலான டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 6.25 % – 7.00 % என்ற அளவில் உள்ளது. சேமிப்புக்கணக்குக்கான வட்டி 3.25 % – 3.50 % இருக்கிறது.

பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) முன்னர் சொல்லப்பட்ட 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகும். ஆனால் தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 6.1 சதவீதமாக குறைத்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாகவும், இரண்டாம் அரையாண்டில் இது 6.6 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதத்திற்குள் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைந்திருப்பினும், இதனை வங்கிகள் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு அளித்தால் மட்டுமே, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும். நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிய வளர்ச்சியை பெறாவிட்டாலும், மூன்றாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலம் பண்டிகை காலம் என்பதால், நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்க கூடும். நிறுவனங்களுக்கான வருமான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் லாபம் மற்றும் தொழில் விரிவாக்கமும் நடைபெறும். தற்போது சொல்லப்பட்ட ரெப்போ வட்டி விகித குறைப்பு, வாடிக்கையாளர்களிடம் சரியாக செல்லும் போது நுகர்வு தன்மையும்(Consumption) அதிகரிக்கும். நிறுவனம் கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டி விகிதமும் குறையும் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமானது.

டெக் மஹிந்திரா(Tech Mahindra) நிறுவன தலைவர் குர்னானி கூறும் போது, ‘ பல நாடுகளில் மிகக்குறைந்த வட்டி விகிதம் அல்லது வட்டியில்லா கடன் எனும் இலக்கை நோக்கி செல்லும் நிலையில், தற்போது சொல்லப்பட்ட ரெப்போ விகித குறைப்பு போதுமானதாக தெரியவில்லை ‘ என கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகித பலனை அளிப்பதில்லை. சமீபத்தில் ரெப்போ விகித இணைப்பிலான வங்கி வட்டி(Repo Rate Linked Loans) விகிதத்தை அளிக்கும் படி, பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை அனைத்து வங்கிகளும் நடைமுறையில் கொண்டு வரும் பட்சத்தில், அது வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019

Small Savings Scheme Interest rates for the Period – October to December 2019

அஞ்சலக மற்றும் வங்கிகளின் அக்டோபர் முதல் டிசம்பர் வரை காலத்திற்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைந்திருப்பினும், குறைந்த பணவீக்கம் காணப்படும் நிலையில், பி.எப்.(Provident Fund) போன்ற சேமிப்புக்கு வட்டி விகிதம் நன்றாக உள்ளன.

கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்கு சொல்லப்பட்ட வட்டி விகிதம் தான் தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அக்டோபர் – டிசம்பர் காலாண்டிற்கு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், தற்போதைய பொருளாதார மந்த நிலையில் இது ஒரு நல்ல வட்டி விகிதமே.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின்(Bond Yield) வட்டி விகிதம் அதிகரிக்கும். இதே போல, வங்கிகளின் வட்டி விகிதம் அதிகமாகும் போது கடன் பத்திரங்களில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். இப்போதைய சூழ்நிலையில், வங்கி வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Debt Funds) மூலம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதன் வாயிலாக பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாயை பெறலாம்.

வங்கிகள் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும், சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் சற்று சாதகமாக உள்ளன. அஞ்சலக மற்றும் வங்கி சேமிப்பு 5 வருட டேர்ம் டெபாசிட் திட்டத்திற்கு 7.70 சதவீதமும், 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.60 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

Small Savings Interest rate October 2019

தேசிய சேமிப்பு பத்திரம்(National Savings Certificate) ஐந்து வருட கால அளவிற்கு 7.90 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.90 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பி.எப். பிடித்தம் உள்ளது. இதனை போன்ற சேமிப்பு வாய்ப்பு இல்லாதவர்கள், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

பி.பி.எப்.(Public Provident Fund) திட்டத்தில் முதலீடு செய்யும் போது, வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வருமான வரி சலுகையும் உண்டு. அதே போல், இதன் மூலம் கிடைக்கக்கூடிய வட்டி வருவாய் மற்றும் முதிர்வு தொகைக்கும் வரி இல்லை என்பது சாதகமான விஷயம். 

செல்வமகள் சேமிப்பு(Sukanya Samriddhi) திட்டத்தில் 8.40 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.60 சதவீத வட்டியும் கூறப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு தேவையான ஒரு வருட டெபாசிட் செய்யும் பட்சத்தில், அதற்கான வட்டி விகிதம் 6.90 சதவீதமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

செப்டம்பர் மாதத்திலும் வெளியேறிய அந்நிய முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கிய உள்ளூர் முதலீட்டாளர்கள்

செப்டம்பர் மாதத்திலும் வெளியேறிய அந்நிய முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கிய உள்ளூர் முதலீட்டாளர்கள்

FII / DII Trading Activity – September 2019

கடந்த செப்டம்பர் மாதத்தின் இரண்டு வர்த்தக நாட்களில் இந்திய பங்குச்சந்தை பெரிய ஏற்றத்தை கண்டிருந்தது. நிதி அமைச்சரின் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அறிவிப்பை அடுத்து, சந்தை ஏற்றம் பெற்றது நினைவிருக்கலாம். இருப்பினும், பொருளாதாரம் சார்ந்த காரணிகள் இன்னும் வளர்ச்சி பாதைக்கு திரும்பாததால் அந்நிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ. 1.03 லட்சம் கோடிக்கு பங்குகளை வாங்கியும், ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பிற்கு பங்குகளை விற்றும் உள்ளனர். அவர்களது நிகர விற்பனை கடந்த மாதத்தின் முடிவில் 6,624 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

அதே வேளையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ. 84,873 கோடி மதிப்பில் பங்குகளை வாங்கியும், 72,382 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். எனவே உள்ளூர் முதலீட்டாளர்களின் நிகர கொள்முதல் 12,490 கோடி ரூபாயாக இருந்தது. உள்ளூர் முதலீட்டாளர்கள் கடந்த 5 மாதங்களாக பங்குகளை வாங்கி குவித்துள்ளனர்.

சொல்லப்பட்ட மாதத்தில் 19 நாட்கள் வர்த்தகம் நடைபெற்றது. இவற்றில் அந்நிய முதலீட்டாளர்கள் 14 நாட்கள் பங்குகளை விற்றுள்ளனர். அதே சமயம் உள்ளூர் முதலீட்டாளர்கள் 17 நாட்கள் பங்குகளை வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் நடப்பாண்டு மே மாதம் முதல் பங்குகளை விற்று வருகின்றனர். இந்திய சந்தையில் நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களின் பங்குகள் விலை பெருவாரியான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே நேரத்தில் லார்ஜ் கேப்(Large Cap) என சொல்லப்படும் பெரு நிறுவன பங்குகளின் விலை அதிக மதிப்பில் காணப்படுகின்றன.

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை தீர்வு பெறாமல் உள்ளது. இரு நாடுகளிடையேயான வர்த்தக போர், கச்சா எண்ணெய் நாடுகளில் காணப்படும் எல்லை பதற்றம், உள்நாட்டில் நிலவும் பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகியவை சந்தைக்கு பாதகமாக உள்ளன.

வரவிருக்கும் நாட்களில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு(GDP) மற்றும் வங்கி வட்டி விகிதம் போன்றவை சந்தையை நகர்த்தும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பங்குதாரர் – ஆண்டு பொதுக்கூட்டம்

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பங்குதாரர் – ஆண்டு பொதுக்கூட்டம்

Shareholder of Reliance Group Companies warned the Promoter – Annual General Meeting

ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (30-09-2019) மும்பையில் நடைபெற்றது. திரு. அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் நிப்பான் லைப், ரிலையன்ஸ் பவர், இன்ப்ரா(Reliance Infra) மற்றும் ரிலையன்ஸ் நேவல்(Reliance Naval & Engg) ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.

அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் அனைத்தும் கடன் சிக்கலில் உள்ளன. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதன் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பெருவாரியான பணத்தை இழந்துள்ளனர்.

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திற்கு கடனாக ரூ. 46,160 கோடியும், ரிலையன்ஸ் பவர்(Reliance Power) ரூ. 30,450 கோடி, ரிலையன்ஸ் இன்ப்ரா ரூ. 17,770 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ரூ. 47,600 கோடி கடனாகவும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கும் ரூ. 10,905 கோடி கடனாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் நிறுவனர்களின் பங்கு அடமானத்தில்(Pledging) உள்ளது கவனிக்கத்தக்கது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அனில் அம்பானி பேசுகையில், நிறுவனத்தின் கடன்களை குறைத்து வருவதாகவும், அடுத்த 18 மாதங்களில் மேலும் சில கடன்களை அடைப்பதற்கான தீர்வுகளை கண்டுள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் நேவல் நிறுவனமும் பெரும் நிதிச்சிக்கலில் உள்ளது.

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வரும் கடன் சேவை, வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த சேவையை நிறுத்த உள்ளதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார். ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிறுவனத்தின்(Reliance ADAG) மீது பல குறைகள் எழுப்பப்பட்டன. பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் பரிசீலிக்கப்படுவதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சமயத்தில், கூட்டத்தில் இருந்த பங்குதாரர் ஒருவர், சொல்லப்பட்ட பிரச்சனைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படவில்லை எனில், நிறுவனத்தின் மீது வழக்கு தொடர போவதாக எச்சரித்தார். அந்த பங்குதாரர் ரிலையன்ஸ் குழும நிறுவனத்தில் இதுவரை 3 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், தற்போதைய நிலையில் தான் 90 சதவீத முதலீட்டை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சொல்லப்பட்ட இழப்பிற்கு நிறுவனமே பொறுப்பாகும் எனவும், நிறுவனத்தில் முதலீடு செய்த பல முதலீட்டாளர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டதற்கு நிறுவனத்தின் நிர்வாக திறமையின்மை தான் காரணம் எனவும் கூறினார். இதுவரை கம்பெனி சட்டம் 2013ன் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மீது பங்குதாரர்கள் சார்பில் முதல் வகுப்பு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு சொல்லப்பட்ட பங்குதாரர் வழக்கை பதிவு செய்யும்பட்சத்தில், நம் நாட்டில் இதுவே முதன்முறையாக இருக்கும்.

ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 380 ரூபாய் என்ற விலையிலிருந்து 28 ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதே போல ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு விலை 32 ரூபாயிலிருந்து 2 ரூபாய்க்கும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கு விலை 18 ரூபாயிலிருந்து 65 பைசாவிற்கும் வந்துள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு ஒரு வருடத்திற்கு முன்பு 300 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த பங்கின் விலை 24 ரூபாயாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உங்கள் வங்கி திவாலானால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ?

உங்கள் வங்கி திவாலானால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ?

How much amount you can get, if your Bank goes Bankrupt or Default ?

வங்கிகளின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதும், அதனை சரி செய்ய பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மூலம் எண்ணிக்கை குறைந்து வருவதும் சமீபத்திய செய்திகளாக உள்ளன. கடந்த வாரம் பி.எம்.சி. வங்கி(PMC Bank) சார்ந்த செய்திகள் அதன் வாடிக்கையாளர்களை கலக்கமடைய செய்தது.

நம் நாட்டில் உள்ள தனியார் வங்கிகளின் மேல் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதே வேளையில் பொதுத்துறை வங்கிகள் மீது நமது நம்பிக்கை தளர்வதில்லை. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, அது போன்ற திவால் நிலையை நாம் கடந்த பல வருடங்களாக கண்டதில்லை. இருப்பினும், நாம் கணக்கு வைத்திருக்கும் ஒரு வங்கி திவால் நிலைக்கு சென்றால், நம்முடைய பணம் அல்லது சேமிப்பு நமக்கு முழுவதும் கிடைக்குமா என்பதே கேள்வி.

 //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பாரத ரிசர்வ் வங்கி(RBI) அறிவுறுத்தலின் படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கியும் அதன் வாடிக்கையாளர்கள் சார்பில், வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தில்(DICGC) காப்பீடு செய்ய வேண்டியது அவசியம். டி.ஐ.சி.ஜி.சி.(Deposit Insurance & Credit Guarantee Corporation) காப்பீட்டின் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு, வைப்பு மற்றும் தொடர் சேமிப்பு கணக்கு ஆகியவை அடங்கும்.

இவற்றில் வெளிநாட்டு அரசாங்கங்களின் வைப்பு தொகை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வைப்பு நிதி, நில மேம்பாட்டு வங்கிகள், வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட வைப்பு தொகை மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் நிறுவனத்தால் விலக்கு அளிக்கப்பட்ட தொகை ஆகியவை காப்பீட்டு தொகைக்கு எடுத்து கொள்ளப்படும்.

ஒரு வங்கியில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரின் கணக்கிற்கும்  அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை வங்கிகளால் காப்பீடு செய்யப்படும். இவற்றில் ஒருவருடைய அசல் தொகை மற்றும் வட்டி பணம் அனைத்தும் சேர்த்து தான் ரூ. 1 லட்சம் வரம்பு தொகை நிர்ணயிக்கப்படும்.

உதாரணமாக உங்களுடைய வங்கி கணக்கில் அசல் தொகை 95,000 ரூபாயும், அதற்கான வட்டி தொகை ரூ. 8000 என இருக்கும் நிலையில், வங்கி திவால் நிலைக்கு சென்றால், காப்பீடு உரிமையின் படி உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ. 1 லட்சம் மட்டுமே. அவ்வாறான சமயங்களில் நீங்கள் உங்கள் முழுத்தொகையை வட்டியுடன் கோர முடியாது.

உங்களுக்கு ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு(Current Account), வைப்பு நிதி கணக்கு(Fixed Deposit) மற்றும் தொடர் சேமிப்பு(RD) கணக்கு ஆகியவை இருந்தாலும், அனைத்து கணக்குகளின் கூட்டுத்தொகை ரூ. 1 லட்சத்தை தாண்டினால், உங்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகை என்னவோ, ஒரு லட்ச ரூபாய் தான். வங்கி திவால் நிலைக்கு சென்றால் அல்லது மூடப்பட்டால், நீங்கள் உங்களது முழுத்தொகையையும் பெற முடியாது. இது தான் வங்கிகளின் சட்டம்.

வங்கிக்கணக்குக்கான காப்பீட்டு தொகை, நீங்கள் வங்கியின் பல கிளைகளில் கணக்கு வைத்திருந்தாலும், அனைத்து கிளை கணக்குகளையும் சேர்த்து, ரூ. 1 லட்சம் என்ற காப்பீடு தொகை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதே வேளையில், வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு வங்கிக்கும் ரூ. 1 லட்சம் காப்பீடு தொகை பதிவு செய்யப்படும்.

ஆக, நீங்கள் ஒரே வங்கியின் கீழ் பல கிளைகளில் டெபாசிட் செய்திருந்தால், காப்பீடு தொகை அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மட்டுமே. பல வங்கிகளில் கணக்கு தொடங்கி டெபாசிட் செய்திருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு வங்கிக்கும் ரூ. 1 லட்சம் காப்பீடு தொகை கோரப்படும்.

நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதுமிருந்தாலும், வங்கி திவால் நிலைக்கு செல்லும் போது அவை காப்பீட்டு தொகையில் கழித்து கொள்ளப்படும். வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு தொகையை அந்தந்த வங்கியே செலுத்த வேண்டும். பொதுவாக அனைத்து வங்கிகளும் காப்பீட்டு வரம்புக்குள் இருந்தாலும், சில தனியார் கூட்டுறவு வங்கிகள் காப்பீடு செய்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ரூ.1 லட்சம் காப்பீடு என்பது கடந்த 1993ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமாகும். அதற்கு முன்பு காப்பீடு தொகை ரூ. 30,000 /- ஆக இருந்தது. வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டு தொகை வரம்பில் கடந்த 26 வருடங்களாக எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நமது வங்கிகளின் காப்பீடு தொகை மிகக்குறைவே.

இருப்பினும், நமது பொதுத்துறை வங்கிகளின் மீதான நம்பிக்கையும், அதனை சார்ந்த சேமிப்பும் தான் அவற்றை பாதுகாக்கிறது. இன்று டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என சொல்லப்பட்டாலும், இணையவழி திருட்டு நடைபெற தான் செய்கிறது. இதனை வங்கிகள் முழுமையாக தடுத்து வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு பாதுகாப்பு தருகிறதா என்பது சந்தேகமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு – டிசம்பர் 31, 2019

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு – டிசம்பர் 31, 2019

PAN – Aadhaar Linking extended to 31, December, 2019

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நாளையுடன் (30-09-2019) முடிவடையும் நிலையில், தற்போது அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பிற்கான கடைசி தேதியாக 2019ம் ஆண்டின் டிசம்பர் 31ம் தேதியாக சொல்லப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான்(PAN) எண் இல்லையென்றாலும், ஆதார் எண்ணை கொண்டு வரி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வருமான வரி தாக்கல் செயல்முறையில் பான் எண்ணுக்கு மாற்றாக ஆதார்(Aadhaar) எண் சொல்லப்பட்டிருந்தது.

இருப்பினும், பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதில் எந்த மாற்றமும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் காலக்கெடுவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(Central Board of Direct Taxes) சார்பில் ஏழாவது முறையாக பான்-ஆதார் எண் காலக்கெடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள், தாக்கல் செய்த பின் மின்னணு சரிபார்ப்பு(E-verify Return) செய்தால் மட்டுமே, அது முழுமையான வரி தாக்கல் செய்ததாக கருதப்படும். தற்போதைய நிலையில் மின்னணு சரிபார்ப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது.

தணிக்கைக்கு(Audited) உட்பட்ட வருவாய்க்கு, வருமான வரி தாக்கல் செய்ய உள்ளவர்களின் காலக்கெடுவும் செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து, அடுத்த மாதம் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்தை தாண்டும் பட்சத்தில், வரிப்பிடித்தம் இல்லையெனினும், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் வருமானத்தை வரி தாக்கல் செய்யும் போது, ரூ. 5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி தள்ளுபடி உண்டு(Only Tax Rebate). அதே வேளையில் வரி தாக்கல் செய்தால் மட்டுமே, வரி தள்ளுபடி என்பதை மறக்க வேண்டாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த 3 விஷயங்கள் இல்லையென்றால் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்காதீர்கள் !

இந்த 3 விஷயங்கள் இல்லையென்றால் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்காதீர்கள் !

Don’t buy a Stock or Share, before Considering these 3 Factors

பங்குகளில் முதலீடு செய்வது சிலருக்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும். சிலருக்கோ அது கவலை கொள்ளும் நிகழ்வாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், பங்குகளில் முதலீடு செய்வது என்பது நமது குடும்பத்திற்கான பொருளாதார வளத்தை சேர்ப்பதாகும்.

சிறு முதலீட்டாளர்களால் ஒரு நிறுவனத்தை நடத்த முடியாமல் இருக்கலாம். பட்டியலிடப்பட்ட நிறுவனத்தினை(Listed Companies) நிர்வகிக்கும் பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறுவனத்தின் சிறு பங்குகளும் நீண்ட காலத்தில் வளம் சேர்க்கும்.

வேகமாக வளர்ச்சியடைவதை விட, நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து நீண்ட காலத்தில் கூட்டு வட்டியின் பலனை பெறுவதே சிறு முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும். எனவே நாம் பெரிய விஷயத்தை செய்வதை விட்டு விட்டு, நமக்கு தெரிந்த மற்றும் நம்மால்  கண்டறிய முடியும் காரணிகளை கொண்டு முதலீட்டினை மட்டும் மேற்கொண்டால் போதும். நிறுவன வளர்ச்சியை அந்த நிறுவனமே பார்த்து கொள்ளட்டும்.

நல்ல நிறுவன பங்குகளை கண்டறிய ஏராளமான அடிப்படை காரணிகள் இருப்பினும், நாம் இங்கே சொல்ல வருகிற மூன்று அடிப்படை காரணிகள் எந்தவொரு தொழிலுக்கும் பொருந்தும். ஆகையால் முதலீட்டாளர்கள் இதனை மட்டும் கருத்தில் கொள்வது அவசியம். மற்ற காரணிகள் எல்லாம், பின்பு தான் செயல்பட கூடும்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்:

  • Promoters (நிறுவனர்கள்)
  • Management & Corporate Governance (நிர்வாகம்)
  • Financial Statements (நிதி அறிக்கைகள்)

ஒரு நிறுவனத்தின் நிறுவனர் அல்லது நிறுவனர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களுடைய நிறுவனத்தின் மீதான அக்கறையே ஒரு முதலீட்டாளருக்கு  தேவைப்படுகிறது. நிறுவனர்கள் தங்களது நிறுவனத்தை நியாயமாக நடத்துவதும், ஊழியர்கள் மற்றும் பங்குதார்களின்(Employees & Shareholders) அடிப்படை உரிமைகளை பேணிக்காப்பது தான் அவர்களது முதல் கடமை.

நிறுவனர்கள் தங்களது பங்குகளை கொண்டு என்ன செய்கின்றனர் என்பது நாம் பார்க்க வேண்டிய விஷயம். அதே போல, பொதுவாக நிறுவனர்களின் பங்குகள் மீதான பங்களிப்பு அதிகமாக இருக்கும் போது, அது அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குறிக்கும்.

நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக கையாளப்படுகிறது என்பது இரண்டாவது முக்கிய விஷயம். நிறுவன ஊழியர்களின் திறன் மற்றும் அவர்களுக்கு நிறுவனம் மூலம் கிடைக்கும் மதிப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. நிறுவனத்தை ஊக்குவிக்க கூடியவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தான். அதே போல அதன் பொருட்களும், வாடிக்கையாளர் நலனும் பாதுகாக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஊழியர்கள்  மற்றும் பங்குதாரர்கள் நலனில் நிறுவனம் அக்கறைப்படுகிறதா என்பது அவசியமாகும். இவர்களை அலட்சியப்படுத்தும் நிலையில், அவை நிறுவனத்தின் வளர்ச்சியிலும், பங்குகளின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக, முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கில் செயல்படுகிறதா என்பதனை அறிவது அவசியம்.

மூன்றாவதாக நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை(Financial Statements) எளிமையான முறையில் அலசுவது அவசியமாகும். நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி லாபத்தில் எவ்வாறு காண்பிக்கப்பட்டுள்ளது, லாபம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரிகிறதா என்பதை கவனிக்க வேண்டும். நிறுவனம் காலாண்டு முடிவுகளில் சொன்ன லாபம் உண்மையில் லாபம் தானா, அவை முதலீட்டாளர்களுக்கு பயன் தரக்கூடியதாக உள்ளதா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பொதுவாக நிறுவனத்தின் லாபம் பங்குகளின் விலையிலும், முதலீட்டாளர்கள் பெறக்கூடிய போனஸ்(Bonus), Buyback மற்றும் டிவிடெண்ட்(Dividend) தொகையில் தெரிய வரும். எனவே நாம் சொன்ன மூன்று அடிப்படை விஷயங்களை எந்த சமரசமும் இல்லாமல் கண்டறிந்து பங்குகளை தேர்வு செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனியார் வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி இல்லை – நிதி அமைச்சர்

தனியார் வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி இல்லை – நிதி அமைச்சர் 

No Liquidity Crisis in Private Banks – FM Nirmala Sitharaman

நேற்று (26-09-2019) நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தனியார் வங்கிகளுடான சந்திப்பில் கலந்துரையாடினார். தனியார் வங்கிகள் போக வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள்(NBFC) மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களும் கலந்து கொண்டன. 

 

இந்த சந்திப்பு முடிவுக்கு பின் பேசிய நிதி அமைச்சர், தனியார் வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி இல்லை எனவும், வரும் பண்டிகை காலங்களில் வங்கிகளின் கடன் வழங்கும் தன்மை அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் எனவும் கூறினார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனியார் வங்கிகளை சந்தித்த பின் சந்தையில் வாங்கும் தன்மை(Demand) இருப்பதை தாம் அறிவதாகவும், சமீபத்திய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை(Corporate Tax) சந்தையில் அடுத்த சில காலாண்டுகளில் வளர்ச்சியை கொடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

வரக்கூடிய பண்டிகை காலங்களில் வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள்(Micro Finance) சார்பில் 400 மாவட்டங்களில் கடன் வழங்குதலை மேம்படுத்தும் நோக்கில் திட்டங்கள் போடப்பட்டுள்ளதாக கூறினார். இத்திட்டத்தில் அனைத்து வங்கிகளும் சேர முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

கடந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 5 சதவீதம் என்ற குறைந்த அளவை எட்டியிருப்பினும், அடுத்த இரண்டு காலாண்டுகளில் வளர்ச்சியை பெறும் என நம்பிக்கையை அளித்தார். 

 

நுண் நிதி நிறுவனங்களின் சேவை சுமூகமாக இருப்பதாகவும், சேவைத்துறைக்கான கடன் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் எனவும், வாகனத்துறையில் காணப்படும் விற்பனை சரிவு ஒரு சுழற்சி முறை சரிவு(Cycle) எனவும் கூறினார். இந்த சுழற்சியானது அடுத்த இரு காலாண்டுகளில் சரிசெய்யப்பட வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளார்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் வரும் நாட்களில் அதிகரிக்குமா ?

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் வரும் நாட்களில் அதிகரிக்குமா ?

Will the Unemployment Rate in India increase in the coming days ?

 

நாம் முன்னொரு முறை, ‘ வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? ‘ என்ற தலைப்பில் வர்த்தக மதுரை இணைய பக்கத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சார்ந்த பதிவை எழுதியிருந்தோம். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 30 வருடங்களில் தற்போது தான் அதிகளவாக காணப்படுகிறது. இதற்கு முன்பு, கடந்த 1983ம் ஆண்டில் காணப்பட்ட 8.30 சதவீதம் தான் நாட்டின் அதிகபட்ச அளவாக சொல்லப்படுகிறது. குறைந்த விகிதமாக கடந்த 2011ம் ஆண்டில் 3.53 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதம் நிலவியுள்ளது.

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.19 சதவீதமாக உள்ளது. நகர்புறத்தில் 9.71 சதவீதம் எனவும், கிராமப்புறங்களில் 7.48 சதவீதம் எனவும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு(CMIE) சொல்கிறது. 1983ம் ஆண்டு முதல் கணக்கிடும் போது, இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சராசரியாக 4.32 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

 

தற்போது நடைமுறையில் வேகமாக வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டின் அளவு சற்று அதிகமே. வெறும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை மட்டுமே நாம் கருத்தில் எடுத்து கொள்ள முடியாது. பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP), நிதி மற்றும் வர்த்தக பற்றாக்குறை ஆகியவற்றையும் நாம் கவனிப்பது அவசியமாகும். 

 //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment Rate) ஒருபுறம் சொல்லப்பட்டாலும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை மற்றும் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் சரியான அளவில் தென்படவில்லை. இந்த தகவல்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அவை நாட்டின் பொருளாதாரத்திற்கு துணைபுரிகிறதா அல்லது உண்மையில் வேலைவாய்ப்பின்மை ஐயம் ஏற்பட்டுள்ளதாக என்பதனை அறியலாம். 

 

உள்நாட்டில் வட மாநிலங்களை காட்டிலும், தென் மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவாகவே காணப்படுகிறது. குறைந்தபட்ச அளவாக கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 0.7 சதவீதம் உள்ளது. இது தான் இந்தியாவின் குறைந்தபட்ச மாநில அளவாகும். ஆந்திராவில் 3.7 சதவீதமும், தமிழகத்தில் 5.8 சதவீதமும் மற்றும் கேரளாவில் 9.1 சதவீதமும் உள்ளது. தெலுங்கானாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

 

அதே போல தென் மாநிலங்கள் தவிர்த்து, குஜராத்தில் 3.9 சதவீதமும், கோவாவில் 3.7 சதவீதமும், ஒடிசாவில் 3.6 சதவீதமும், மேற்கு வங்காளம் 6.1 சதவீதம் மற்றும் சிக்கிமில் 2.1 சதவீதம் என்ற அளவிலும் வேலைவாய்ப்பின்மை குறைந்த விகிதமாக அமைந்துள்ளது.

 

உ.பி.(U.P) யில் 12.3 சதவீதமும், ராஜஸ்தானில் 13.1 சதவீதம், பீகார் 11.8 சதவீதம், ஜார்கண்ட் 14.3 சதவீதம், ஹரியானாவில் 28.7 சதவீதம், டெல்லியில் 13.6 சதவீதம் மற்றும் திரிபுராவில் 27.9 சதவீதம் என்பது அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டுள்ளது. 

 

வரும் நாட்களிலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்கலாம் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் பெறும் நிலையில், இது சிறிதளவு மாறுபடலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

இனி ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது – பி.எம்.சி. வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை

இனி ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது – பி.எம்.சி. வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை 

No more than Rs.1000 on withdrawal amount for the next Six Months – RBI’s restriction for PMC Bank

வங்கியில் முறைகேடு நடைபெற்றதாகவும், வங்கி ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளை மீறியதாகவும் நாட்டில் உள்ள ஒரு வங்கிக்கு பாரத ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சமீப வருடங்களாக வங்கியின் நிதிநிலைமை மோசமடைந்து வருவதும், அதனை மீட்டெடுக்க மத்திய அரசு பணத்தை வாரி இறைப்பதும் நடந்த வண்ணம் உள்ளது.

பொதுவாக வங்கிகளில் ஏற்பட்ட பிழைக்கு, வங்கி வாடிக்கையாளர்களே பொறுப்பெடுக்கும் நிலை உள்ளது. நாட்டின் முக்கியமான கூட்டுறவு வங்கியாக பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி( PMC) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியுள்ளதாக சில தடைகளை சந்திக்க உள்ளது.

அதன் படி, இனி இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 1000 ரூபாய்க்கு மேல் தங்கள் பணத்தை எடுக்க முடியாது. இந்த நடவடிக்கை அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் எனவும், பி.எம்.சி. வங்கி இனி மேல் புதிய கடன்களை அளிக்க கூடாது எனவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெறக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு விதிக்கப்பட்ட கெடுபிடியால் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிகழ்வு. இதனை சார்ந்து பல கிளைகளில் போராட்டமும் ஏற்பட்டுள்ளது.

1984ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட சிறு நிதி நிறுவனம் தான் பி.எம்.சி. வங்கி (Punjab & Maharashtra Co-operative Bank). பின்பு இந்த வங்கி படிப்படியாக வளர்ந்து இன்று 137 கிளைகளுடன் பல மாநிலங்களில் இயங்கி வருகிறது. நாட்டின் சிறந்த கூட்டுறவு வங்கிகளில் முதல் பத்து இடங்களில் பி.எம்.சி. வங்கியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ம் ஆண்டு ரூ.2000 கோடிக்கும் மேலான டெபாசிட் பெறும் பிரிவில் நாட்டின் சிறந்த கூட்டுறவு வங்கியாக விருதும் பெற்றது. தற்போது இந்த கூட்டுறவு வங்கியில் மொத்த வைப்பு தொகை ரூ. 9,938 கோடியாகவும், கொடுக்கப்பட்ட கடன்கள் 7,457 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.

வங்கிக்கு மொத்த வாராக்கடன் 2018-19ம் நிதியாண்டின் முடிவில் 3.76 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.19 சதவீதமாகவும் இருக்கிறது. வங்கிக்கு பாரத ரிசர்வ் வங்கி விதித்த கெடுபிடிக்கு வாராக்கடனும் ஒரு காரணமாக இருக்கலாம் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். 

தற்போது வங்கிகள் சட்ட பிரிவு 35ஏ ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் இந்த கூட்டுறவு வங்கி, மற்றொரு வங்கியுடன் இணைக்கப்படலாம் என தெரிகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil