இனி ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது – பி.எம்.சி. வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை
No more than Rs.1000 on withdrawal amount for the next Six Months – RBI’s restriction for PMC Bank
வங்கியில் முறைகேடு நடைபெற்றதாகவும், வங்கி ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளை மீறியதாகவும் நாட்டில் உள்ள ஒரு வங்கிக்கு பாரத ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சமீப வருடங்களாக வங்கியின் நிதிநிலைமை மோசமடைந்து வருவதும், அதனை மீட்டெடுக்க மத்திய அரசு பணத்தை வாரி இறைப்பதும் நடந்த வண்ணம் உள்ளது.
பொதுவாக வங்கிகளில் ஏற்பட்ட பிழைக்கு, வங்கி வாடிக்கையாளர்களே பொறுப்பெடுக்கும் நிலை உள்ளது. நாட்டின் முக்கியமான கூட்டுறவு வங்கியாக பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி( PMC) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியுள்ளதாக சில தடைகளை சந்திக்க உள்ளது.
அதன் படி, இனி இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 1000 ரூபாய்க்கு மேல் தங்கள் பணத்தை எடுக்க முடியாது. இந்த நடவடிக்கை அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் எனவும், பி.எம்.சி. வங்கி இனி மேல் புதிய கடன்களை அளிக்க கூடாது எனவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெறக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு விதிக்கப்பட்ட கெடுபிடியால் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிகழ்வு. இதனை சார்ந்து பல கிளைகளில் போராட்டமும் ஏற்பட்டுள்ளது.
1984ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட சிறு நிதி நிறுவனம் தான் பி.எம்.சி. வங்கி (Punjab & Maharashtra Co-operative Bank). பின்பு இந்த வங்கி படிப்படியாக வளர்ந்து இன்று 137 கிளைகளுடன் பல மாநிலங்களில் இயங்கி வருகிறது. நாட்டின் சிறந்த கூட்டுறவு வங்கிகளில் முதல் பத்து இடங்களில் பி.எம்.சி. வங்கியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ம் ஆண்டு ரூ.2000 கோடிக்கும் மேலான டெபாசிட் பெறும் பிரிவில் நாட்டின் சிறந்த கூட்டுறவு வங்கியாக விருதும் பெற்றது. தற்போது இந்த கூட்டுறவு வங்கியில் மொத்த வைப்பு தொகை ரூ. 9,938 கோடியாகவும், கொடுக்கப்பட்ட கடன்கள் 7,457 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.
வங்கிக்கு மொத்த வாராக்கடன் 2018-19ம் நிதியாண்டின் முடிவில் 3.76 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.19 சதவீதமாகவும் இருக்கிறது. வங்கிக்கு பாரத ரிசர்வ் வங்கி விதித்த கெடுபிடிக்கு வாராக்கடனும் ஒரு காரணமாக இருக்கலாம் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
தற்போது வங்கிகள் சட்ட பிரிவு 35ஏ ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் இந்த கூட்டுறவு வங்கி, மற்றொரு வங்கியுடன் இணைக்கப்படலாம் என தெரிகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை