வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக குறைப்பு, வங்கிக்கடன் உண்மையில் குறையுமா ?
Repo Rate cut to 5.15 Percent – RBI Policy – Does the bank cut the rates for its Customers ?
2019-20ம் நிதியாண்டின் மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee) சார்பிலான நான்காவது கூட்டம் நேற்று நிறைவுபெற்றது. மூன்று நாட்களாக நடந்த கூட்டத்தில், வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து 5.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) நேற்று 5.15 சதவீதமாக சொல்லப்பட்டது.
மத்திய நிதிக்கொள்கை குழுவில் பங்கேற்ற ஆறு உறுப்பினர்களும் வட்டி விகித குறைப்புக்கு ஆதரித்து வாக்களித்தனர். நாட்டின் பணவீக்கம் மத்திய ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதம் என்ற அளவிற்குள் உள்ளதால், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) விகிதம் 4.90 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது. வங்கி வட்டி விகிதம்(Bank Rate) 5.40 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவும் மற்றும் எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18.75 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.
வங்கி கடன் மற்றும் வைப்புக்கான அடிப்படை விகிதம் 8.95 சதவீதத்திலிருந்து 9.40 சதவீதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு மேலான டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 6.25 % – 7.00 % என்ற அளவில் உள்ளது. சேமிப்புக்கணக்குக்கான வட்டி 3.25 % – 3.50 % இருக்கிறது.
பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) முன்னர் சொல்லப்பட்ட 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகும். ஆனால் தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 6.1 சதவீதமாக குறைத்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாகவும், இரண்டாம் அரையாண்டில் இது 6.6 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதத்திற்குள் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் குறைந்திருப்பினும், இதனை வங்கிகள் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு அளித்தால் மட்டுமே, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும். நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிய வளர்ச்சியை பெறாவிட்டாலும், மூன்றாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலம் பண்டிகை காலம் என்பதால், நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்க கூடும். நிறுவனங்களுக்கான வருமான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் லாபம் மற்றும் தொழில் விரிவாக்கமும் நடைபெறும். தற்போது சொல்லப்பட்ட ரெப்போ வட்டி விகித குறைப்பு, வாடிக்கையாளர்களிடம் சரியாக செல்லும் போது நுகர்வு தன்மையும்(Consumption) அதிகரிக்கும். நிறுவனம் கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டி விகிதமும் குறையும் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமானது.
டெக் மஹிந்திரா(Tech Mahindra) நிறுவன தலைவர் குர்னானி கூறும் போது, ‘ பல நாடுகளில் மிகக்குறைந்த வட்டி விகிதம் அல்லது வட்டியில்லா கடன் எனும் இலக்கை நோக்கி செல்லும் நிலையில், தற்போது சொல்லப்பட்ட ரெப்போ விகித குறைப்பு போதுமானதாக தெரியவில்லை ‘ என கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகித பலனை அளிப்பதில்லை. சமீபத்தில் ரெப்போ விகித இணைப்பிலான வங்கி வட்டி(Repo Rate Linked Loans) விகிதத்தை அளிக்கும் படி, பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை அனைத்து வங்கிகளும் நடைமுறையில் கொண்டு வரும் பட்சத்தில், அது வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை