Several gold bars and various gold coins arranged on a wooden desk with a notepad and laptop showing a financial graph

முதலீட்டில் தங்கத்தின் பங்களிப்பு எவ்வளவு இருக்கலாம் ?  – உலக தங்க கவுன்சில் பரிந்துரை 

முதலீட்டில் தங்கத்தின் பங்களிப்பு எவ்வளவு இருக்கலாம் ?  – உலக தங்க கவுன்சில் பரிந்துரை 

Share of Gold in your Investment Portfolio – World Gold Council 2026

 

நேற்று(17-07-2026) மாலை வேளையில், மதுரை மாநகரத்தின் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்டெர்லிங் வி கிராண்ட் ஹோட்டலில் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட் இந்தியா(AAFM) மற்றும் உலக தங்க கவுன்சில்(World Gold Council) சார்பாக, ‘ஒரு சொத்து வகையாக தங்கத்தில் முதலீடு’ என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

இவற்றில் சொல்லப்பட்டவை இங்கே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1990 களில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது பெரும்பாலும், நகைகளாக தான் இருந்துள்ளது. இதற்கான காரணம், இந்தியப் பெண்களுக்கான சேமிப்பு என்பது பெரும்பாலும் தங்க நகைகளை சிறுகச்சிறுக வாங்குவது தான். ஆனால் இந்த நிலை, 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மாறி உள்ளது. அதாவது தங்கத்தினை மக்கள் நகைகளாக மட்டும் வாங்காமல், தங்கப் பத்திர திட்டம்(Sovereign Gold Bond – SGB), தங்கத்தின் மீதான மியூச்சுவல் பண்டுகள் மற்றும் இ.டி.எப். திட்டங்கள் வரவேற்பை பெற்று, அவை ஒரு முதலீடாக வாங்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக தங்கத்தின் மீதான மதிப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் சார்ந்திருக்காமல் உலகெங்கிலும் பரவி உள்ளது. அதாவது, நாம் வாங்கிய தங்கத்தினை நமது நாட்டில் மட்டுமில்லாமல், உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் விற்று பணமாக்கக்கூடிய நிலை, தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு சாதகமாக உள்ளது. பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு இருப்பது போல, தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு பெரும்பாலும் எதிர் தரப்பு இடர்(Zero counterparty risk – Physical Gold ) என்ற ஒன்றில்லை எனலாம். 

தங்கத்தின் மீதான முதலீட்டில் பொதுவாக அதிக ஏற்ற-இறக்கம் இருப்பதில்லை(பங்குச்சந்தையை போல). அதே வேளையில் கடந்த சில வருடங்களாக உலக பொருளாதார காரணிகள் விரைவாக மாற்றம் பெற்று வருவதன் காரணமாக, பங்குச்சந்தையை போல தங்கத்திலும் ஏற்ற-இறக்கத்தை காணலாம். தங்கத்தில் நீர்மை நிறை(Liquidity) கிடைக்கப்பெறுவது அதன் சாதகமான அம்சம். அதாவது, நாம் வாங்கிய தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் அடமானம் வைத்துக் கொள்ளலாம், விற்று விடலாம். அதே வேளையில், ஊரடங்கு காலத்தில் அவ்வளவு எளிதாக இது அமையவில்லை.

தங்கத்தின் மீதான உண்மையான முதலீடு என்பது பொதுவாக தங்கக் கட்டிகள், நாணயங்கள், மியூச்சுவல் பண்டுகள்(Gold Funds) மற்றும் இ.டி.எப்.(Gold ETF) என்ற வடிவங்களில் கிடைக்கப்பெறுகிறது. நகைகளாக வாங்குவது என்பது ஒரு தங்கத்தின் மீதான முதலீடல்ல. அதனை சொத்தாகவும் கருத முடியாது. அதன் காரணமாக தான் அதன் செலவினமே(நகைகளை உருவாக்க), மதிப்பையும் குறைத்து விடுகிறது. நடப்பில், சில தனியார் நிறுவனங்களால்  ‘டிஜிட்டல் கோல்டு (Digital Gold)’ என்ற பெயரில் வெளியிடப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் எனவும், அவை ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் உலக தங்க கவுன்சில் கூறுகிறது. 

உலக தங்க கவுன்சில் பரிந்துரையின் படி,  தங்கக் கட்டிகள், நாணயங்கள், தங்கக் கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்டுகள் மற்றும் இ.டி.எப். போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். தங்க நகைகளாக வாங்க விரும்புவோர், தங்களுக்கு அருகே உள்ள நம்பிக்கைக்குரிய மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு பெற்ற நகை கடைகளில் வாங்கி கொள்ளலாம்.

ஒருவரது முதலீட்டில் தங்கம், பங்குகள், வங்கி வைப்புத்தொகை, நிலம், பரஸ்பர நிதிகள்(Mutual Funds) என பரவலாக்கம் செய்வது அவசியம். இதன் மூலம், நாம் முதலீட்டில் உள்ள ரிஸ்க் தன்மையை குறைத்து, நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெற முடியும். உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது பொதுவாக 7.5 % முதல் 15% வரை இருக்கலாம் என உலக தங்க கவுன்சில் பரிந்துரைக்கிறது. முதலீட்டுத் தொகுப்பை சீரமைத்தலில்(Portfolio Rebalancing) தங்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 16.85% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முந்தைய இலக்கான சுமார் 15%-ஐ ஏற்கனவே கடந்துவிட்டது. நேரடித் தங்கம் சேகரிப்பு மற்றும் உலகளவில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை ஆகியவற்றால் இந்த நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2026ம் ஆண்டின் காலாண்டு முடிவில், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு சுமார் 34,600 டன்கள் (3.7 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்) என சொல்லப்படுகிறது. இவற்றில் ரிசர்வ் வங்கியிடம் இருப்பது மட்டும் 880 டன்கள். மியூச்சுவல் பண்டு மற்றும் இ.டி.எப். முறையில் தங்கத்தில் முதலீடு செய்யும் போது 99.5% + சுத்தமான தங்கம் மற்றும் 24 காரட் மதிப்பு  கிடைப்பதுடன், அதன் செலவினமும் குறைவு. கோல்டு இ.டி.எப். முறையில் முதலீடு செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய்க்கு மேலாக இருந்தால், நாம் அதனை தங்கமாகவும்(கட்டிகள் அல்லது நாணயங்கள்) பெற்றுக் கொள்ளலாம்.   

நன்றி:  ஷீலா குல்கர்னி

உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) இந்தியப் பிரிவு சந்தை மேம்பாடு (முதலீடு) மற்றும் நிறுவன முதலீட்டாளர் உறவுகள் பிரிவின் தலைவர்.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.