All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் – அடுத்து என்ன ?

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் – அடுத்து என்ன ?

India’s GDP of 4.7 Percent in December Quarter – What Next ?

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 4.7 சதவீதமாக இருந்துள்ளது என கடந்த வாரம் அரசு சார்பில் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி கடந்த ஏழு வருடங்களில் காணப்படாத குறைந்த அளவாகும். 2018ம் வருடத்தின் ஆரம்ப நிலையில் 7.7 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்பு குறைய தொடங்கியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொடர்ச்சியாக 7 காலாண்டுகளாக இந்த வளர்ச்சி குறைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2019 கால பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த வளர்ச்சி குறைவு தான் எனினும், அடுத்து வரும் காலகட்டங்களில் அதன் மாற்றம் தான் சந்தை எதிர்பார்த்து வருவது. பெரும்பாலான வல்லுநர்கள் இது தான் அடிப்பாக பொருளாதார வளர்ச்சியாக(Bottomed out) இருக்கும், அடுத்த காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டு எழும் என கூறியுள்ளனர்.

அதே வேளையில், நடப்பு ஜனவரி – மார்ச் காலத்தில் உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் சாதகமாக இல்லை என்பதே உண்மை. டிசம்பர் 2019 காலாண்டை காட்டிலும், மார்ச் 2020 காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாக தான் இருக்கும். வாகனத்துறையில் உள்ள பெரும்பாலான பெரு நிறுவனங்கள் தங்கள் பிப்ரவரி மாத விற்பனையில் சுணக்கத்தை சந்தித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பங்குவிலக்கல்(Disinvestment) நிகழ்வும் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக முடிந்து, அரசின் இலக்கிற்கு உதவினால் தான் சந்தையில் நுகர்வை வேகப்படுத்த முடியும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, நிதி மற்றும் காப்பீடு, வீட்டு மனை, உணவகங்கள், சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. வேளாண்மை, காடுகள் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை நாட்டின் பொருளாதார உற்பத்தியில் 12 சதவீத பங்கை தான் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பிரிவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டதாக உள்ளது கவனிக்கத்தக்கது.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை, உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை தான் அரசுக்கு முன் இருக்கும் சவாலாக உள்ளது. தற்போதைய நிலையில் முதலீடுகளை பெற்று, சரியான முறையில் கையாண்டால் மட்டுமே அது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் வருவாய் பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நுகர்வு தன்மையும் சுமுகமாக அமையும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது முடியக்கூடும் என்பது குறித்து தற்சமயம் தெரியாது. அதே நேரத்தில், இதன் பாதிப்பு அடுத்து வரும் இரு காலாண்டுகளில் நிறுவனங்களின் நிதி அறிக்கையில் தெரிய வரும். அமெரிக்க – சீன வர்த்தக போர் இன்னும் முடிவை எட்டவில்லை. 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு எதிர்பார்த்த அளவை பெறாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, பொருளாதார மந்தநிலை காலங்களில் சந்தையில் பங்குபெறும் முதலீட்டாளர்கள் சரியான நிறுவனங்களை அலசி ஆராய்ந்து, அதன் உண்மையான விலையில் பங்குகளை வாங்குவது நலம். ஆறு மாதத்திற்கு முன்னர் காணப்பட்ட விலையே பெரும்பாலான பங்குகளில் தற்போது நிலவி கொண்டிருக்கிறது. சில பங்குகளின் விலை மூன்று வருட மற்றும் ஐந்து வருட விலை குறைவில் இருந்தாலும், அவற்றின் மற்ற காரணிகளை கண்டறிவது அவசியம். வெறும் பங்கு விலை எண்களை கொண்டு பங்குகளை வாங்காதீர்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வீழ்ச்சியடைந்த இந்திய கார் விற்பனை – பிப்ரவரி மாத புள்ளிவிவரங்கள்

வீழ்ச்சியடைந்த இந்திய கார் விற்பனை – பிப்ரவரி மாத புள்ளிவிவரங்கள் 

Falling Auto Sales Numbers in February 2020 – Indian Automobile Manufacturers

நம் நாடு விவசாயம் சார்ந்த நாடு என்று முகமதிப்பை கடந்து, இன்று சேவைத்துறையை மட்டுமே முக்கிய நிலையாக கொண்டிருக்கிறது. மொத்த மதிப்பு(GVA) அடிப்படையில் சேவை துறை சுமார் 54.40 சதவீதத்தையும், விவசாயம் 16 சதவீதத்தையும், தொழிற்துறை சுமார் 29.5 சதவீத்தையும் உள்ளடக்கியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொழிற்துறையை உற்று நோக்கும் போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாகனத்துறை 12 சதவீதத்தை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக காணப்பட்டு வரும் பொருளாதார மந்தநிலை இந்திய வாகனத்துறையின் விற்பனையையும் பாதித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை, இரு நாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தக போர், உள்நாட்டில் அரசின் வாகனத்துறைக்கான புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை வாகன விற்பனையில் தொய்வு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய கொரோனா வைரஸ் பாதிப்பும் இந்திய வாகனத்துறைக்கு பாதகமாக அமைந்துள்ளது எனலாம். பிப்ரவரி மாத புள்ளிவிவரங்களின் படி, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது வாகன விற்பனையில் 42 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியிலும் 40 சதவீதத்திற்கு மேல் குறைந்து காணப்படுகிறது.

இது போல மாருதி(Maruti Suzuki) நிறுவனம் தனது பிப்ரவரி மாத மொத்த விற்பனையில் ஒரு சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனையிலும் சுமார் 4 சதவீத அளவு குறைவாக இருந்துள்ளது. இருப்பினும், தனது ஏற்றுமதியில் 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்த விற்பனையில் 32 சதவீதமும், உள்நாட்டில் 34 சதவீதமும் வீழ்ச்சியை கண்டுள்ளது. வணிக வாகன(Commercial Vehicles) விற்பனையில் இம்முறை 35 சதவீத விற்பனை குறைவை ஏற்படுத்தியுள்ளது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம். இது போல பயணிகள் வாகன விற்பனையும் 31 சதவீதம் குறைந்துள்ளது.

எய்ச்சர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தின் பிப்ரவரி மாத மொத்த விற்பனை 29 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டு விற்பனை சுமார் 27 சதவீதமும், ஏற்றுமதியில் 39 சதவீதமும் வீழ்ச்சியை கண்டுள்ளது எய்ச்சர். கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமில்லாமல், பி.எஸ்.6 இடம் பெயர்வுக்கான நிகழ்வும் விற்பனையில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டின் வாகன உற்பத்தி தேவைக்கான உதிரி பாகங்கள் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. எதிர்பாராத நிகழ்வுகளால் சரியான நேரத்தில் வாகனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2018ம் நிதியாண்டில் மட்டும், சீனா நம் நாட்டிற்கு சுமார் 4.3 பில்லியன் டாலர்கள் அளவிலான பொருட்கள் மற்றும் சேவையினை ஏற்றுமதி செய்துள்ளது. சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மின் மற்றும் மின்னணு சார்ந்த பொருட்கள்(Electrical & Electronic) தான் பெரும்பங்கு வகிக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொரோனா வைரஸ் உலக சந்தையை நெருக்குகிறதா ?

கொரோனா வைரஸ் உலக சந்தையை நெருக்குகிறதா ?

Is Coronavirus hitting the Global Stock Market Indices ?

கடந்த இரண்டு வருடமாக இந்திய பங்குச்சந்தையில் பெருவாரியான பங்குகளின் ஏற்றம் என பெரிதாக எதுவும் நடைபெறவில்லை. குறிப்பிட்ட சில பெருநிறுவன பங்குகளின் விலை ஏற்றதால், ஒட்டுமொத்த சந்தை குறியீடு (Nifty50, BSE Sensex 30) உயர்ந்துள்ளது. மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை எனலாம். இது போன்ற பங்குகளில் முதலீட்டு வாய்ப்பு உள்ளதா என கேட்டால், முழுமையான அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) தான் தீர்வாக அமையும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏனெனில், பொருளாதார தேக்கம் மற்றும் வீழ்ச்சி போன்ற சமயங்களில் பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்து தான் காணப்படும். ஆனால் அனைத்து பங்குகளும் அதன் உண்மையான விலையில் வர்த்தகமாகாது. எனவே, சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது அவசியம். இல்லையெனில், நம் முதலீடு நமது கையை சுட்டு கொள்ளும்.

கடந்த இரு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் பல உயிர்கள் மடிந்து விட்டன. இதன் தாக்கம் மற்ற நாடுகளிலும் வெகு வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிற்கும், பங்குச்சந்தைக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பலாம். கொரோனா வைரஸ் பரவி வருவது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், அடுத்த வல்லரசாக அமையும் சீனாவில் பரவி வருவது தான் சந்தைக்கு பாதகமாக உள்ளது.

சீன பொருளாதாரம் விழுந்தால், அது இந்திய சந்தைக்கு லாபம் என பலர் சொல்லிக்கொள்கின்றனர். உண்மையில், உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்காவில் ஒன்று நடந்தால் அது இந்தியாவையும் பாதிக்கும். நமது நாட்டின் அரசு கொள்கை மாறும் போது, எங்கோ இருக்கும் ஒரு குட்டி நாட்டையும் பாதிப்படைய செய்யும். சீனாவில் வைரஸ் தாக்குதல் இருந்து வருவது இந்தியாவிற்கு ஏற்றுமதி சாதகம் என நீங்கள் நினைத்தால் அது தான் தவறு. நாம் பல பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்து வந்தாலும், அதற்கான மூலப்பொருட்களை சீனா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து பெற்று வருகிறோம். அமெரிக்கா – ஈரானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டால், அது நமக்கும் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்.

நமது நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில்(Total Imports) (2018ம் ஆண்டு முடிவு) சீனாவின் பங்களிப்பு 15 சதவீதமும், அமெரிக்கா 6.5 சதவீதம், சவுதி அரேபியா 5.7 சதவீதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5.4 சதவீதம் மற்றும் ஈராக் 4.6 சதவீத அளவிலும் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே வர்த்தகம் உள்ளதை நினைவில் கொள்ளவும். ஏற்றுமதியில்(Exports) நாம் அமெரிக்க நாட்டிற்கு தான் அதிகமாக அனுப்புகிறோம்.

கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கு செல்கின்ற நிலையில், வர்த்தகம் சம்மந்தமாக பல தொழில்புரிபவர்கள் பயணம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இது போல பல நாடுகளில் தற்சமயம் மிகுந்த கட்டுப்பாடுகளும் உள்ளது. நம் நாட்டிற்கு தேவையான உலோகங்கள் மற்றும் மருத்துவ துறைக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து தான் வந்து கொண்டிருக்கிறது. இதன் தேவை அதிகமாக இருந்தும், இறக்குமதி அளவு குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல பொருட்களின் மீது விலையர்வு ஏற்படும்.

இதன் பாதிப்பு அடுத்து வரும் இரு காலாண்டுகளில் நிறுவனத்தின் நிதி அறிக்கையை அலசினால் தெரிய வரும். வைரஸ் தாக்குதல் பதற்றத்தினால் பங்குச்சந்தை விழுந்தாலும், உண்மையில் நிறுவன காலாண்டு முடிவுகள் வரும் போது தான், அந்த பங்குகளின் விலை மாற்றம் தெரிய கூடும்.

கொரோனா வைரஸ் வெடிப்பு ஒரு தொற்று நோயாக(Pandemic) மாற வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால், அது மிகப்பெரிய விளைவை உலகளவில் நிகழ்த்தும். இதன் காரணமாக நடப்பாண்டில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு, உலக பொருளாதாரமும் பலவீனமடைய கூடும் என மூடிஸ் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலகளவில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்க வங்கி வாடிக்கையாளர்கள், ரிஸ்க் அதிகம் கொண்ட முதலீட்டு சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கலாம் என அமெரிக்காவின் பி.என்.ஒய். மெலன் கூறியுள்ளது.

நேற்றைய( இரவு – 28-02-20) சந்தை முடிவில் அமெரிக்காவின் நாஷ்டாக் குறியீடு 4.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த குறியீடு 13 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. லண்டன் புட்சி குறியீடு 3.5 சதவீதமும், பிரான்சின் சி.ஏ.சி. 3.32 சதவீதமும் மற்றும் ஜெர்மனி நாட்டின் டாக்ஸ் குறியீடு 3.20 சதவீத அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினத்தில் தற்போது ஜப்பான் நிக்கி 3.5 சதவீதம், ஹாங்காங் ஹேங் செங் 2.5 சதவீதம், தென்கொரியா கோஸ்பி 2.70 சதவீதம், சிங்கப்பூர் ஸ்ட்ரைட் டைம்ஸ் 2.19 சதவீதம் என இறக்கம் கண்டுள்ளது.

நல்ல நிறுவன பங்குகளை பட்டியலிடுங்கள். உபரி பணத்தை ஒதுக்குங்கள். பங்கு விலை குறைகிறதே என எல்லா பங்குகளையும் வாங்காதீர்கள். அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் பங்குகளை கவனியுங்கள். பணபலமும், நேர்த்தியான நிர்வாகமும் தான் சந்தையில் நிலைத்து நிற்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்கள் வீட்டில் பட்ஜெட் போட்டு செலவழிப்பவரா ? கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நீங்கள் வீட்டில் பட்ஜெட் போட்டு செலவழிப்பவரா ? கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

Things to note while preparing for the Budget Planning 

பொதுவாக, பட்ஜெட் திட்டமிடல் என்பது வரவுக்குள் செலவு என்பதையும் கடந்து அதற்கான தேடுதலில் சில சுவாரசியங்கள் உள்ளன. ‘ உன் பட்ஜெட் திட்டமிடலை என்னிடம் காட்டு, நான் உன் மதிப்பு என்னவென்று சொல்கிறேன் ‘ என்ற மேலைநாட்டு வாசகம் பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நிதி சார்ந்த விஷயங்களில் நாம் எப்போதும் சுதந்திரமாக செயல்பட இந்த திட்டம் உதவுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பட்ஜெட் திட்டமிடலில் எளிதான சில கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்: வரவு – செலவை எழுதி வைக்கப்போகும் குறிப்பேட்டில்(Notebook), நிதி சார்ந்த தகவல் தவிர வேறு எந்த தகவலையும் எழுதி வைக்காதீர்கள். கைபேசி செயலி(Mobile App) மூலம் உங்கள் வரவு-செலவுகளை பதிவு செய்கிறீர்கள் எனில், முறையாக ஒவ்வொரு மாதமும் உங்கள் தரவுகளை மின்னஞ்சலில் சேமித்து வைக்க பழகுங்கள்.

நீங்கள் ஒவ்வொரு நாளில் ஏற்படும் வரவு மற்றும் செலவுகளை சரியாக எழுதுங்கள். முடிந்தவரை பொய் கணக்கு வேண்டாம். நான் செய்த செலவை மனைவி பார்த்து விடுவாள், நான் போட்ட சீட்டுத்தொகை கணவருக்கு தெரியக்கூடாது என்பதெல்லாம் பட்ஜெட் திட்டமிடலில் கூடாது. முடிந்தவரை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நிதி சார்ந்த வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாத முடிவிலும் வரவு மற்றும் செலவுகளில் தனித்தனியாக பிரிவுகளை ஏற்படுத்தி கணக்கிடுங்கள். உதாரணமாக இந்த மாதத்தின் முடிவில் போக்குவரத்து பிரிவில்(Transportation) பெட்ரோல் – ரூ. 2000, பேருந்து கட்டண செலவு – ரூ. 500, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி – ரூ. 800 மற்றும் வாகன பராமரிப்பு செலவு – ரூ. 300. இதை போல பொழுதுபோக்கு செலவு(Entertainment Expenses) பிரிவுகளில் கேபிள் கட்டணம், சினிமா பார்க்க செலவு, குழந்தைகளுடன் பொருட்காட்சிக்கு சென்றது, நெட் பிளிக்ஸ் மாத சந்தா என பிரிவுகளை உருவாக்கி கொள்ளலாம். பொதுவாக ஒரு பிரிவின் கீழ் உட்பிரிவை உருவாக்கி கொள்வது சிறந்தது.

மாத முடிவில் அந்த மாதத்தின் வரவு செலவுகளை மொத்தமாக கணக்கிட்டு கொள்ளுங்கள். இதன் பிறகு காலாண்டு அடிப்படையிலும்(PQFR) மூன்று மாதத்திற்கு ஒரு முறை மொத்த கணக்கீட்டினை ஏற்படுத்துங்கள். வருடத்திற்கு நான்கு காலாண்டுகள் என பிரித்து ஒவ்வொரு காலாண்டிலும் ஏற்பட்ட வரவு-செலவுகளை ஆராயுங்கள். இதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நீண்டகால பலன் பின்னாளில் உங்களுக்கு தெரிய வரும்.

நம்மிடம் உள்ள பிரச்சனையே, நமக்கான வேலைகளுக்கு நேரமில்லை என சொல்வது தான். உண்மையில் நாம் யாரோ ஒருவருக்கு வேலை செய்வதில் அக்கறை கொள்கிறோம், அதுவும் மாத சம்பளத்திற்கு. அதே வேளையில், நமக்கான மற்றும் நமது குடும்பத்திற்கான பட்ஜெட் திட்டமிடலை(Budget Planning) செய்ய நாம் நேரம் ஒதுக்கும் போது, சேமிப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் நம்மை தேடி வரும். புதிய வருவாய்க்கான முயற்சியும் கைகூடும்.

ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் நமது மாத செலவு எந்த காரணத்தால் அதிகரித்துள்ளது அல்லது குறைவாக இருந்துள்ளது என்பதனை அறியுங்கள். சில நேரங்களில் நமக்கு தேவைப்படாத மாத செலவுகள் ஏற்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு நண்பர் சொன்னார் என இணையத்தில் ஒரு சேவைக்கு மாத சந்தாவை செலுத்தி வந்திருப்போம். அதனை நாம் ஒரு முறை கூட பார்த்திருக்க மாட்டோம். இது போன்ற செலவுகளை குறைக்க முயற்சிக்கலாம். நகர்ப்புறங்களில் உள்ளோர் பொது போக்குவரத்து மற்றும் கால் டாக்ஸி சேவையை, தங்கள் சொந்த வாகனத்துக்கு பதில் பயன்படுத்தலாம்.

இன்றைய காலத்தில் நெரிசலான இடங்களில் நமது வாகனமாக இருந்தால் என்ன, கால் டாக்ஸி வாகனமாக இருந்தால் என்ன, மெதுவாக தான் செல்ல முடியும். நமது சொந்த வாகனம் மற்றும் டிரைவர் போல, கால் டாக்ஸி நம் வீட்டின் வாசல் வரை வந்து போகிறது. மாதத்திற்கு சில முறை சென்று, உங்கள் மாத எஸ்.ஐ.பி(SIP).க்கான தொகையை இதன் மூலம் சேமியுங்கள்.

ஒரு பாக்கெட் சிகரெட்டினை தினமும் புகைப்பவர்கள், பாக்கெட் ஒன்றுக்கு ஒரு சிகரெட்டை குறைத்து கொள்ளுங்கள். அதனை அடுத்த நாளுக்கு பயன்படுத்த முயற்சியுங்கள். முப்பது நாட்களில் 30 சிகரெட்டுகளின் செலவுகளை சேமிக்கும் பட்சத்தில், அதனை மற்ற அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். (நான் உங்களின் இன்றைய விருப்பத்தை தடுக்கவில்லை, இருப்பினும் அடுத்து வரவிருக்கும் நாட்களும் அவசியம்)

ஒவ்வொரு காலாண்டிலும் தேவை மற்றும் விருப்பத்திற்கான செலவுகளை பிரித்து பார்க்க பழகுங்கள். மாத முடிவில் உங்கள் பட்ஜெட் திட்டமிடலுக்கு நீங்களே ஒரு மதிப்பை கொடுங்கள், சபாஷ் போடுங்கள் அல்லது எச்சரிக்கை மணியை எழுப்புங்கள். பண்டிகை நாட்களுக்கு தேவையான தொகையை முன்னரே சேமித்து பின்பு செலவு செய்யுங்கள். கடைசி வேளையில் செலவுகளை ஏற்படுத்தி நெருக்கடி நிலைக்கு செல்ல வேண்டாம். இதனால் தான் சிலர் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கி நேரிடுகிறது.

குழந்தைகளின் ஆண்டு கல்விச்செலவு, பண்டிகை கால துணிமணி செலவு, குடும்ப விசேஷங்கள் மற்றும் ஆண்டு காப்பீடு செலவுகள் போன்றவற்றை முன்னரே திட்டமிட்டு அதற்கான தொகையை மாதாமாதம் சேமியுங்கள். பின்பு தேவைப்படும் வேளையில், அதனை பயன்படுத்துவது நல்லது. உதாரணமாக குழந்தையின் ஆண்டு கல்வி கட்டணம் ரூ. 60,000 எனில் மாதாமாதம் உங்கள் வருமானத்தில் ரூ. 5000 ஐ சேமியுங்கள். இதனை நீங்கள் ரிஸ்க் குறைந்த பரஸ்பர நிதி திட்டத்தில்(Liquid Mutual Funds) மாதாமாதம் எஸ்.ஐ.பி. முறையில் செய்தால் 12 மாத முடிவில் (7 சதவீத வட்டி) உங்களுக்கு கிடைப்பது ரூ. 62,300. உங்கள் குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்தியது போக உங்களுக்கு கூடுதலாக 2,300 ரூபாய் உள்ளது. இதனை மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

பட்ஜெட் திட்டமிடலில் உங்கள் அத்தியாவசிய செலவுகளை, வருமானத்தில் 50 சதவீதத்திற்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அது போல உங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால விருப்பங்களுக்கான செலவுகளை மாத வருமானத்தில் 30 சதவீதத்திற்கு மிகாமல் பார்த்து கொள்ளுங்கள். எஞ்சிய 20 சதவீதம் உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடாக இருக்க வேண்டும். சேமிப்பும், முதலீடும் எதிர்காலத்திற்கான செலவுகள் என்பதனை மறக்க வேண்டாம்.

இன்றைய சேமிப்பு நாளைய செலவுக்கானது. பட்ஜெட் திட்டமிடலில் உங்களுக்கு சிரமம் ஏதுமிருப்பின் என்னை போன்ற ஆலோசகரின்(Certified Advisor) உதவியை பெறுங்கள். நான் உங்களுக்கு நிதி சார்ந்த மொழியில் உதவ தயாராக உள்ளேன் (சிறு கட்டணத்துடன்).

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை 2019

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை 2019

World’s Top 10 Countries – Global Wealth Report 2019

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கிரெடிட் சூசி(Credit Suisse) நிறுவனம் நிதி சேவை மற்றும் முதலீட்டு தொழிலை செய்து வருகிறது. உலகளாவிய செல்வ வளத்தை நிர்வகிக்கும் இந்நிறுவனம் 2019ம் ஆண்டுக்கான உலகின் செல்வ வளமுள்ள நாடுகளின் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி உலகில் உள்ள மொத்த செல்வம்(World Wealth) பணத்தின் அடிப்படையில் 360.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது.

உலகின் செல்வ வளம் படைத்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் நீடித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டின் படி, அமெரிக்காவின் வளம் 105.99 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட உலகின் 29.93 சதவீத வளத்தை அமெரிக்கா கொண்டிருக்கிறது கவனிக்கப்படவேண்டியது.

இரண்டாம் இடத்தில் சீனா 63.80 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உள்ளது. உலகின் மொத்த சொத்து மதிப்பில், சீனாவின் பங்கு 18 சதவீதமாகும். கடந்தாண்டு சீனாவிற்கு கடினமான காலமாக இருந்தாலும், தனது வளத்தை அதிகப்படுத்தி கொண்டது. மூன்றாம் இடத்தில் ஜப்பான் 25 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உள்ளது. இதன் பங்களிப்பு 6.93 சதவீதமாகும்.

நான்காம் இடத்தில் உள்ள ஜெர்மனி 14.66 டிரில்லியன் டாலர்களுடனும், ஐந்தாம் இடத்தில் ஐக்கிய ராஜ்ஜியம்(UK) 14.34 டிரில்லியன் டாலர்களுடனும் உள்ளது. ஆறாவது இடத்தில் பிரான்ஸ் 13.73 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை  கொண்டுள்ளது. இந்த நாட்டின் பங்களிப்பு மொத்த செல்வ வளத்தில் 3.80 சதவீதமாக உள்ளது.

உலகின் மொத்த மதிப்பு கடந்த 2018ம் ஆண்டை காட்டிலும் 2019ம் வருடத்தில் 9.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது. அதாவது 2.6 சதவீதம் ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டில் வீட்டுக்கடன் மொத்தமாக 4 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது. அடுத்த ஐந்து வருடங்களில் உலகின் மொத்த செல்வ மதிப்பு 459 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இதன் மதிப்பு 12.60 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். மொத்த செல்வத்தில் நம் நாட்டின் பங்களிப்பு 3.5 சதவீதமாகும். இந்தியாவின் சொத்து மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிக வேகமாக வளரக்கூடும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2000 மற்றும் 2019க்கு இடையேயான காலங்களில் இந்தியாவின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவை விட மொத்த மக்கள் தொகையில் நம் நாடு நான்கு மடங்குகளை கொண்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட இந்திய நாட்டின் செல்வ மதிப்பு, கடந்த 70 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா இருந்த அளவாகும். வரும் 2024ம் ஆண்டின் முடிவில் நாட்டின் சொத்து மதிப்பு சுமார் 16 டிரில்லியன் டாலர்களாக செல்லலாம். அந்த அளவு, அமெரிக்கா கடந்த 1960ம் ஆண்டில் இருந்த அளவாக சொல்லப்படுகிறது.

எட்டாம் இடத்தில் இத்தாலி 11.35 டிரில்லியன் டாலர்கள், ஒன்பதாவது மற்றும் பத்தாம் இடம் முறையே கனடா, ஸ்பெயின் நாடுகள் உள்ளன. கனடா 8.57 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடனும், ஸ்பெயின் 7.77 டிரில்லியன் டாலர்களுடனும் உள்ளது.

இந்தியாவில் தனிநபர் சொத்து மதிப்பு(Personal Wealth) பெரும்பாலும் வீட்டுமனை மற்றும் கட்டிடங்கள் சார்ந்தவையாக உள்ளது. தனிநபர் கடனும், அவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 8 சதவீதமாக உள்ளது. பொதுவாக வளர்ந்த நாடுகளில் சொத்து மதிப்பை காட்டிலும் கடன் மிகக்குறைவாக தான் உள்ளன. அதே வேளையில் சொல்லப்பட்ட சொத்துக்கள் வளர்ந்த நாடுகளில் பரவலாக்கப்படவில்லை.

நம் நாட்டில் செல்வத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் வறுமையின் அளவும் அதிகரித்து வருகிறது. இந்தியாவை போன்ற வளர்ந்த நாடுகளில் வறுமையின் அளவு அதிகரிப்பது, 78 சதவீத மக்களின் செல்வ மதிப்பு சராசரி அளவை கூட தாண்டவில்லை என அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி(Wealth inequality)  நம் நாட்டில் 83 சதவீதம் உள்ளதாக கினி குறியீடு குறிப்பிட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐடியா ஒரு சதவீதம், செயல்படுத்துதல் 99 சதவீதம் – தொழில்முனைவின் ரகசியம்

ஐடியா ஒரு சதவீதம், செயல்படுத்துதல் 99 சதவீதம் – தொழில்முனைவின் ரகசியம்  

IDEA & Execution connects the Secret of Entrepreneurship

சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஊடக நிகழ்வில் நம் மண்ணின் தொழில் தூதுவர் என அழைக்கப்படும், நேட்டிவ் லீட்(Native Lead) முதலீடு நிறுவனத்தின் நிறுவனர் திரு. சிவராஜா ராமநாதன் அவர்கள் பேசினார். தொழிலுக்கும், தொழில்முனைவுக்கும் இடையேயான புரிதலே ஒருவரை சிறந்த வெற்றியாளராக மாற்றுகிறது. முன்னர், ஒருவர் தொழிலில் தோல்வியடைந்தால் அவர் தொழில் செய்வதற்கு தகுதியில்லை என்ற நிலை இன்று மாறி, கற்றல் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஒரு நல்ல யோசனை, அதே வேளையில் அதனை சரியாக திட்டமிட்டு செயல்படுத்துதல் இருந்தாலே தொழில்முனைவில் வெற்றி சாத்தியம் தான். திரு. சிவராஜா அவர்கள் பேசிய சில தொழில்முனைவு சிந்தனைகள், ‘ இரண்டாம் உலகப்போருக்கு பின் ஏற்பட்ட தொழில் புரட்சிகள் இந்த உலகத்தை மாற்றி யோசிக்க வைத்தன. ஆரம்ப காலத்தில் விவசாயம் சார்ந்த நிலை ஏற்பட்டாலும், பின்னாளில் இயந்திரவியல் சார்ந்த தொழில் புரட்சி உருவானது.

பின்பு, அந்த நிலை அறிவுசார் புரட்சியாக மாற்றப்பட்டது. தற்போதைய காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் தகவல் பரிமாற்றம் எளிதானது. இதன் வெளிப்பாடாக புதுயுக தொழில்முனைவு(New Age Entrepreneurship) ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கும், தொழில் புரிதலுக்கும் எப்போதும் ஒரு பந்தம் இருந்து வருகிறது. இதற்கு சிறந்த சான்றாக பூம்புகாரை சொல்லலாம்.

உலகளவில் தமிழர்கள் வர்த்தகம் புரிந்து கொண்டதற்கு பல காலகட்டங்கள் சான்றுகளாக இன்றும் இருந்து வருகின்றன. அவற்றில் கீழடியும் ஒன்று தான். நூறு பேர் ஒரே தொழிலை செய்து கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், அதே தொழிலில் புதுமையை புகுத்தி அதனை தொழில்முனைவாக மாற்றுவது தான் ஆக்கபூர்வமான சமூகத்தை உருவாக்கும்.

இன்றளவிலும் மதுரை நகரை பற்றி சினிமா துறையிலும், ஊடகங்களிலும் அதீத கற்பனைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. உண்மையில் மதுரை ஒரு தொழில் சார்ந்த நகரம். தமிழ் வரலாற்றை பிரதிபலிக்கும் பல விஷயங்கள் மதுரையில் இருந்து தான் துவங்கியுள்ளன. தொழில் புரிவது என்பது சமூக – பொருளாதார (Socio-economic) என்ற இரு நிலைகளை இணைப்பதாக இருக்க வேண்டும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளோர் இன்றும் தங்கள் தொழில் யோசனைகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ், ஜெப் பெஸோஸ் போன்றோரை கொண்டாடுவது ஒன்றும் பெரிதல்ல, நம்மூரில் சிறு தொழில் செய்து வந்தாலும், புதுமையான யோசனைகளை வரவேற்று அவர்களை நாம் சிறந்த தொழில்முனைவோராக கொண்டாடுவதே நமக்கான மகிழ்வாக இருக்கும் ‘ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ‘ தொழில்முனைவில் ஒரு யோசனையை வெளிப்படுத்த ஆங்கிலம் தான் தேவை என்றில்லை. தனது தாய்மொழியிலும் அந்த கருத்தை வெளிப்படுத்தும் போது, அதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகும். தொழிலுக்கான முதலீடு என இருக்காமல், தொழில்முனைவின் யோசனைகளை ஏற்று அவற்றில் இருக்கும் நேர்-எதிர்மறை தன்மைகளை கண்டறிந்து நீண்டகாலத்தில் உறவுகளை பேணுவதே எங்களின் இலக்கு ‘ என்றார்.

இன்றைய தொழில்முனைவில் மிகவும் அவசியமானது, வழிகாட்டுதல் மற்றும் அடைகாத்தல் (Mentorship & Incubation). ஒரு சதவீத யோசனையாக இருந்தாலும், அதனை சரியாக செயல்படுத்த திட்டமிடல் அவசியம். ஒரு தொழிலில் கிடைக்கப்பெறுவது வெறும் லாபமாக மட்டுமில்லாமல், சமூகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அந்த பெரு நகரத்துக்கு சென்றால் தான் தொழில் புரிய முடியும் என்ற கட்டமைப்பு உடைத்து, நாம் இருக்கும் இடத்திலும் நம்மால் தொழில்முனைவை ஏற்படுத்த முடியும். ஒரு தொழில் யோசனையை சரியாக செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றால், அதனை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்ற விவாதத்துக்கும் தயாராக வேண்டும்.

ஒரு தொழில்முனைவோர் என்பவர் சுயமரியாதை(Self Esteem), உள்ளுணர்வு(Intuition) மற்றும் தேடல்(Exploring) இந்த மூன்றையும் கலவையாக கொண்டவராகவே இருப்பார். ‘ ஆயிரம் பூக்கள் மலரட்டும் ‘ என்ற இலக்கை தனது நிறுவனத்தின் இலக்காக கொண்டு செயல்படுகிறார் இந்த மண்ணின் தொழில் தோழன்(Sivarajah Ramanathan). அதாவது அடுத்த 10 வருடங்களில் தமிழகத்தில் ஆயிரம் தொழில்முனைவோர்களை உருவாக்குவதே தங்களின் இலக்கு என கூறியுள்ளார்.

படித்து விட்டு, வேலை கிடைத்தால் நிம்மதி என்ற நிலையை தாண்டி, புது யோசனைகளை கொண்டு தொழில்முனைவில் ஈடுபடும் போது, நல்ல சமூக மதிப்பை ஏற்படுத்த முடியும். வேலைவாய்ப்புகளும் பெருகும், அது நாட்டின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்

அனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல் 

Anuh Pharma – Small Cap – Fundamental Analysis

எஸ்.கே. குழும நிறுவனங்களின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கடந்த 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் இதர பாக்டீரியா எதிர்ப்பு மருந்து தயாரிப்பு, விற்பனை மற்றும் ஏற்றுமதிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. காசநோய் எதிர்ப்பு மற்றும் மேக்ரோலைட்ஸ் ஆகிய தயாரிப்புகளில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எஸ்.கே. குழுமம்(SK Group) மருந்து தயாரிப்பு போக சுகாதாரம், கல்வி, ஏற்றுமதி, கெமிக்கல், சமூக சேவை ஆகியவற்றிலும் பங்காற்றி வருகிறது. அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 370 கோடி. தற்போதைய பங்கு ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 66 ரூபாயாக உள்ளது. எனவே பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் இரண்டு மடங்கில் உள்ளது.

கடன்-பங்கு விகிதம் 0.06 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 91 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடனில்லாத நிறுவனமாக உள்ள அனுக் பார்மா நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 76 கோடியாகவும், செலவினம் 67 கோடி ரூபாயாகவும் உள்ளது.

டிசம்பர் காலாண்டில் நிறுவனம் ரூ. 6.30 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 318 கோடியாகவும், நிகர லாபம் 20.50 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஐந்து வருட காலத்தில் 4 சதவீதமும், பத்து வருடங்களில் 10.3 சதவீதமாகவும் உள்ளது.

லாப வளர்ச்சி ஐந்து வருடங்களில் 6 சதவீதமும், கடந்த பத்து வருட காலத்தில் 10.5 சதவீதமாக உள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 16.5 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலத்தில் 11 சதவீதம் விலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவரை நிறுவனம் ஐந்து முறை போனஸ் பங்குகளை(Bonus Issue) முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. அளிக்கப்பட்ட போனஸ் பங்குகள் அனைத்தும் பங்கு ஒன்றுக்கு, ஒன்றுக்கும் மேலாக தான் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்பு நிலை கையிருப்பு தொகை ரூ. 152 கோடியாகும். பங்கின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஒரு வருடத்தில் 14 சதவீதத்தில் உள்ளது. இதுவே ஐந்து வருட காலத்தில் 16 சதவீதமும், பத்து வருடங்களில் 17 சதவீதமாகவும் இருக்கிறது. சமீப தகவலில், பங்கு ஒன்றுக்கு 2.75 ரூபாயை டிவிடெண்ட் தொகையாக(Dividend) அறிவித்துள்ளது அனுக் பார்மா நிறுவனம்.

மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் அனுக் பார்மா நிறுவனத்தின் உண்மையான விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 160 ஐ மதிப்பாக பெறும். பங்குகளை வாங்க விரும்புவோர் ஒரு நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis – Free Course) கண்டறிந்து, சரியான விலையில் முயற்சி செய்ய வேண்டும். அலசுவதற்கு நேரமில்லாதவர்கள் அல்லது சிரமமாக எண்ணுபவர்கள், தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு பங்குகளில் முதலீடு செய்யலாம். பங்குகளை வாங்கி வைப்பது மட்டுமே வேலையாக இல்லாமல், வருங்காலங்களில் அதன் நிதி அறிக்கையையும் அலசுவது அவசியம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்

நான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட் 

Berkshire is 100 Percent prepared for our Departure – Warren Buffett

உலகின் மிகப்பெரிய முதலீட்டு ஜாம்பவான் என்றால் அது திரு. வாரன் பப்பெட் என்று சொல்வதில் மிகையல்ல. உலகின் நான்காவது கோடீஸ்வரர் ஒருவர் தனது மொத்த சொத்தில் 99 சதவீத தொகையை தானமாக கொடுத்துள்ளார் என்றால் அது வாரன் பப்பெட் அவர்களை தான் சாரும். 90 வயதாகும் வாரன் பப்பெட்டின் தற்போதைய சொத்து மதிப்பு 89.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6.35 லட்சம் கோடி) !

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பள்ளிக்காலத்தில் துவங்கிய இவரது முதலீட்டு திறன் இன்று வரை பல முதலீட்டாளர்களுக்கு கற்றலை தந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை வாரன் பப்பெட், ‘ நான் என் வாழ்வில் 11 வருடங்களை வீணடித்து விட்டேன். எனது 11வது வயதில் தான் நான் பங்குச்சந்தைக்கு சென்று பங்குகளை வாங்க நேரிட்டது ‘ என வேடிக்கையாக சொன்னார். மதிப்புமிக்க முதலீட்டின் தந்தை(Father of Value Investing – The Intelligent Investor) என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் அவர்கள் தான் வாரனின் ஆசிரியர்.

‘ பங்கு முதலீட்டை ஒரு தொழிலாக பாருங்கள். சந்தையின் ஏற்ற-இறக்கத்தை கண்டு கொள்ளாமல், அதனை உங்களது வாய்ப்பாக மாற்றுங்கள். தொழிலின் தன்மையை அறிந்து பங்குகளை அதன் உண்மையான விலையில் வாங்குங்கள். இது தான் எனது ஆசிரியர் கற்று கொடுத்தது ‘ என வாரன் கூறியுள்ளார். கடந்த 55 வருடங்களில் அமெரிக்காவின் பங்குச்சந்தையில் எஸ் & பி 500 குறியீடு 10 சதவீத வருமானத்தை (ஆண்டு கூட்டு வட்டி) தந்துள்ளது. அதே வேளையில், வாரன் பப்பெட்டின் பெர்க்சயர் ஹாத்வே நிறுவனம் 20.30 சதவீத வருவாயை அளித்துள்ளது.

மொத்த லாப அடிப்படையில் கடந்த 55 வருடங்களில் எஸ் & பி500 குறியீடு 19,784 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால், பெர்க்சயர் நிறுவனமோ 27,44,062 சதவீத வருவாயை ஈட்டியுள்ளது. 1839ம் ஆண்டு துவங்கப்பட்ட வேலி பால்ஸ்(Valley Falls) நிறுவனம் தான் பின்னாளில் பெர்க்சயர் ஹாத்வே(Berkshire Hathaway) நிறுவனமாக மாறியது. வாரன் பப்பெட்டும் அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரானார். பெர்க்சயர் ஹாத்வே ஒரு அமெரிக்க பன்னாட்டு குழும நிறுவனமாகும். இந்நிறுவனம் உலகின் மிக முக்கியமான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தில் வாரன் பப்பெட் அவர்களுக்கு 30 சதவீத வாக்களிக்கும் உரிமை உள்ளது கவனிக்கத்தக்கது. இவரது தொழில் கூட்டாளியான சார்லி முங்கரும்(Charlie Munger) முதலீட்டு திறனில் சகலகலா வித்தைகளை அறிந்தவர். திரு. சார்லி முங்கர் அவர்களின் வயது தற்போது 96. பெர்க்சயர் நிறுவனத்தின் 2018-19ம் ஆண்டின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் வாரன் குறிப்பிட்டதாவது, ‘ நானும், முங்கரும் வெகு காலத்திற்கு முன்பே வயது சார்ந்த அவசர நிலைக்கு வந்து விட்டோம். இது எங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்காது. அதே வேளையில், பெர்க்சயர் பங்குதாரர்கள் அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை. நாங்கள் புறப்படுவதற்கு உங்கள் நிறுவனம் நூறு சதவீதம் தயாராக உள்ளது.’ என்றார்.

அடுத்த தலைமை யார் என்பதை பற்றி குறிப்பிடப்படவில்லை. வாரனின் பெர்க்சயர் நிறுவனர் தனது முதலீட்டாளர்களுக்கு சில காலத்தில் நல்ல வருவாயை கொடுக்காமல் இருந்தாலும், நீண்ட காலத்தில் அந்த நிறுவனம் பல முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(Annual General Meeting) செல்ல இந்தியாவிலிருந்து பலர் கனவாக கொண்டு சென்று வருகின்றனர்.

கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்தில் வாரன் மற்றும் சார்லி இருவரும், முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு சுமார் ஆறு மணிநேரம் பதிலளித்துள்ளனர். பங்குகளை வாங்கியிருக்கும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு சென்று வருவது அவசியமாகும் – ஏன் ?

“ நீங்கள் தூங்கும் போதும் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியை கண்டுபிடிக்கவில்லை எனில், நீங்கள் இறக்கும் வரை வேலை செய்தாக வேண்டும் ‘ – வாரன் பப்பெட்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

உலக சந்தைகளுக்கு செல்லும் அரசாங்க பத்திரங்கள் – பாரத ரிசர்வ் வங்கி

உலக சந்தைகளுக்கு செல்லும் அரசாங்க பத்திரங்கள் – பாரத ரிசர்வ் வங்கி 

Government Bonds (G-Secs) in Global Indices Soon – RBI

பொதுவாக அரசாங்க பத்திரங்கள் என்பது மத்திய அரசினால் நமது நாட்டின் நாணயத்தில்(ரூபாய் மதிப்பு) வழங்கப்படும். இந்த பத்திரங்களை வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பில் வெளியிட்டால், அது சவரின் பத்திரங்கள்(Sovereign Bonds) எனப்படும். மத்திய அரசு தனக்கு தேவையான நிதியை (கடன்) முதலீட்டாளர்களிடம் இது போன்ற பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் பெறும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பத்திரங்களை பெறும் முதலீட்டாளர்கள் அதற்கான வட்டி வருமானத்தை அரசாங்கத்திடம் இருந்து பெறுவர். அரசு பத்திரங்களை பெறுவதில் நாட்டில் உள்ள வங்கிகள் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. இது போக வெளிநாட்டு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி சார்ந்த பெரு நிறுவனங்கள் அரசாங்க பத்திரங்களை வாங்கும். அரசாங்க பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் ரிஸ்க் தன்மை மிக குறைவாக உள்ளவை.

பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் தான் அரசாங்க பத்திரங்கள்(Government Bonds) வெளியிடப்படும். ஆரம்ப நிலையில், மத்திய அரசின் நிதி தேவைக்காக வெளியிடப்படும் பத்திரங்கள் முதன்மை சந்தைக்கு வரும். பின்னாளில் அதனை இரண்டாம் சந்தையிலும் நாம் வாங்கி கொள்ளலாம். பொதுவாக அரசு பத்திரங்கள் 5, 10,15, 20, 30 வருடங்கள் என முதிர்வு காலத்தை கொண்டிருக்கும். அரசு பத்திரங்களில் கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் ரிஸ்க் இல்லா விகிதமாக(Risk Free Rate – Bond yield) சொல்லப்படும். ஏனெனில், அரசாங்கம் கடன் வாங்கியிருந்தாலும் அந்த கடனை உறுதியாக அடைத்து விடும் என்ற நம்பிக்கை உலகளவில் உள்ளது. மேலும் கடனை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில், அரசாங்கம் பணத்தை அச்சடிப்பதற்கு உரிமை உள்ளது.

அரசு பத்திரங்களுக்கும், வங்கி வட்டி விகிதங்களுக்கும் நேரெதிர் உறவு உண்டு. அதாவது எப்போதெல்லாம், வங்கியில் வட்டி விகிதம் குறைவாக உள்ளதோ, அப்போது பத்திரங்களுக்கான வட்டி விகிதம்(Bond Prices) அதிகரிக்கும். அதே போன்று வங்கி வட்டி விகிதம் அதிகமாக காணப்படும் போது, அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் குறைய கூடும். இது முதலீட்டாளர்களின் வருவாய் தேவையை சார்ந்து தான் மாறுபடுகிறது.

அதனால் தான் பாரத ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் போது பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் அதிகரிக்கும். இரண்டையும் சாதகமாக பயன்படுத்துவது தான் ஒரு முதலீட்டாளரின் சாமர்த்தியம். தற்போது பத்து வருட அரசு பத்திரங்களின் விலை 6.42 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதுவும் பங்குச்சந்தை போன்றது தான், வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

சில தகவல்கள்: GS2029 – 10 வருட பத்திரங்கள் – 6.45 %, GS2026 – 7.27 %, GS2024 – 7.32 %, GS2024 – 6.18 %, GS2021 – 6.17 %, 91 Day T-bills – 5.05 % (Data: RBI)

கடந்த பட்ஜெட் தாக்கலிலும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சலுகை சம்மந்தமாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். மேலும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுடன் இணைந்து அந்நிய முதலீட்டாளர்களும் நம் நாட்டின் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வசதி செய்யப்பட உள்ளதாக மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்களும் அரசு பத்திரங்களை வாங்கி வைக்கலாம். இதற்கு டீமேட் கணக்கு(Demat Account) துவங்குவது அவசியம். அரசு பத்திரங்களை விற்கும் போது வரி விகிதங்கள் உள்ளது என்பதை மறக்க கூடாது.

வங்கியில் உள்ள நிதி நிலைமையை சரி செய்யவும், அரசுக்கு தேவையான நிதி முதலீடுகளை பெறுவதற்கும் உலக சந்தையில் அரசு பத்திரங்களை வெளியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அமெரிக்க சந்தையில் அதன் பத்திரங்களின் வட்டி விகிதம் 2 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. இங்கிலாந்தில் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், சீனாவில் 2.97 சதவீதம் என்ற வட்டி விகிதத்திலும் அரசு பத்திரங்கள் உள்ளது. ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் பூஜ்யத்திற்கு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில், நம் நாட்டின் அரசு பத்திரங்களின் வருவாய் வளர்ந்த நாடுகளிடையே கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே வேளையில் அரசு கடன் பெறுவதற்காக உலக சந்தைகளில் பத்திரங்களை விற்பது சரியான நடவடிக்கையாக இருக்காது எனவும் சில பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.எது எப்படியோ, வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை, இந்தியா ஒரு முதலீட்டு வாய்ப்பாக தெரிகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வெற்றி பெறுமா எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் ஐ.பி.ஓ. வெளியீடு ?

வெற்றி பெறுமா எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் ஐ.பி.ஓ. வெளியீடு ?

Will the SBI Cards IPO get Success – Initial Public Offering ?

ஒரு தொழிலை துவங்குவது எளிதான விஷயமல்ல, அதே வேளையில் அதனை முடியாத காரியமாக நாம் காண முடியாது. ஒரு புதிய தொழிலை துவங்குவதில் முதலீடு திரட்டுவது என்பது எதிர்பார்க்கும் தன்மையே. தொழில் ஆரம்பிப்பதற்கான முதலீட்டை தனது சேமிப்பிலிருந்தோ, குடும்பம் மற்றும் உற்றார்-உறவினர்களின் மூலம் பெறுவதை சிறுவிதை நிதி(Seed Capital) என கூறலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சில வேளைகளில் கூட்டு நிதியும், சிறு முதலீட்டாளர்களின் நிதியும்(Crowd Funding & Angel Investing) சிறுவிதை நிதியாக அழைக்கப்படலாம். இதற்கடுத்தாற் போல துணிகர முதலீடு(Venture Capital), தனியார் மூலதனம்(Private Equity) என்ற முதலீட்டு முறைகளும் உண்டு. இதனை சார்ந்து தொழில் நிறுவன அமைப்பும் மாறுபடும். ஆரம்ப காலத்தில் தனியுரிமை கொண்ட தொழில்(Proprietorship), பின்னர் கூட்டு முயற்சி, தனியார் நிறுவனம் முதல் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனம் வரை செல்லும்.

பொதுவெளியில் முதலீடு திரட்ட முயற்சிக்கும் நிறுவனம், பொது நிறுவனமாக பதிவு செய்வது அவசியமாகும். முதலீடு செய்யும் நபர்களுக்கு பங்குகளை ஒதுக்குவது நிறுவனத்தின் கடமையாகும். பங்குச்சந்தைக்கு ஒரு நிறுவனம் வருவதால், வட்டியில்லாத கடன் பெறுவது போன்றதாகும். முதலீடு செய்யும் பங்குதாரர்களுக்கு பங்குகளை வழங்குவதால், அவர்களுக்கு நிறுவனத்தின் லாப-நஷ்டத்தில் பங்கு உண்டு.

அதே வேளையில், நிறுவனத்தின் நிறுவனருக்கு நிதி சார்ந்த பொறுப்புகள் மிக குறைவு. நாம் ஏற்கனவே சொல்லியிருந்தது போல, பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட அந்த நிறுவனம் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பங்குகள் முதன்மை சந்தையில் வெளியீடு செய்யப்படும். ஆனால், இரண்டாம் சந்தையில்(Secondary Market) தான் வர்த்தகமாகும். நல்ல நிறுவனங்களின் பங்குகளை முதன்மை சந்தை வெளியீட்டில் பெறுவோர், இரண்டாம் சந்தையில் விற்று விட்டு லாபம் காண்பர். இது சரியில்லாத நிறுவனங்களுக்கும் சில சமயங்களில் லாபத்தில் அமையலாம்.

சமீபத்தில் ஐ.பி.ஓ. வெளியீட்டில் வந்த ஐ.ஆர்.சி.டி.சி(IRCTC). பங்கு ஒன்றின் விலை ரூ. 320 ஆக இருந்தது (வெளியீட்டு தேதி: அக்டோபர் 3, 2019). தற்போது இந்த பங்கின் விலை ரூ. 1900 க்கும் மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதுவும் வெளியீட்டிலிருந்து ஐந்து மாதத்துக்கும் குறைவான காலத்தில், ஆறு மடங்கு விலையில் – 500 சதவீதத்திற்கு மேல் லாபம் !

இது எல்லா பங்குகளிலும் நடைபெற வாய்ப்பில்லை. ஐ.ஆர்.சி.டி.சி. ஒரு மத்திய அரசின் நிறுவனமாக மட்டுமில்லாமல், நாட்டின் ரயில்வே துறையில் உள்ள ஏகபோக(Monopoly) நிறுவனமாகும். இதற்கு ரயில் பயண சீட்டு சேவையில் போட்டியாளர்கள் யாருமில்லை என்பது கவனிக்கத்தக்கது. இனி வருங்காலத்தில், தனியார் நிறுவன ரயில் சேவைகளும், அதனை சார்ந்த வருவாயும் வந்தால் மட்டுமே ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திற்கு போட்டியாக அமைய முடியும்.

கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்ட டி.மார்ட் (Avenue Supermarts – DMart) நிறுவனம், ஐ.ஆர்.சி.டி.சி. வெளியீட்டை போல நடந்தது. அன்று பங்கு ஒன்றுக்கு ரூ. 299 என்ற விலையில் இருந்த டி.மார்ட் நிறுவன பங்கு இன்று ரூ. 2500க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. ஆனால், அதே வருடத்தில் வெளிவந்த மற்ற நிறுவன பங்குகள் அவ்வளவாக ஏற்றம் பெறவில்லை. சில நிறுவனங்கள் அதன் வெளியீட்டு விலையை விட குறைவாக தற்போது வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

பொதுவாக, முதலீட்டு ஜாம்பவான் திரு. வாரன் பப்பெட்(Warren Buffet) ஐ.பி.ஓ. வெளியீட்டில் பங்குகள் வாங்குவதை விரும்புவதில்லை. ஐ.பி.ஓ. வெளியீட்டில் பங்குகளை வாங்கி, இரண்டாம் சந்தையில் உடனடியாக லாபம் பார்த்தாலும், நீண்டகாலத்தில் ஒரு நிறுவனத்தின் நிதி அறிக்கையை அலசுவது முக்கியமாகும்.

வங்கிகள் அல்லாத நிதி சேவை துறையில் பதிவு செய்யப்பட்ட எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் & பேமென்ட் சேவை(SBI Cards & Payments) நிறுவனம் கடந்த 1998ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்தாண்டு எஸ்.பி.ஐ. கார்டு நிறுவனம் ‘ 9 மில்லியன் கார்டுகள் ‘ கிளப்பில் இணைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பாரத ஸ்டேட் வங்கி 74 சதவீத பங்குகளையும், கார்லைல் குழுமம் 26 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கிறது.

2018-19ம் நிதியாண்டில் எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 7,286 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 862 கோடியாக உள்ளது. ஐ.பி.ஓ. வெளியீடு வரும் மார்ச் 2ம் தேதி துவங்கி, மார்ச் 5ம் தேதி முடிவடையும். முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 10 ஆகவும், நிறையளவு(Lot Size) ஒன்றுக்கு 19 பங்குகளும், பங்கு ஒன்றின் விலை ரூ. 755 (750-755) என சொல்லப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை என இரண்டு சந்தைகளிலும் வெளியிடப்படும் இந்த பங்கு இரண்டாம் சந்தைக்கு மார்ச் 13ம் தேதி வெளிவரும். திரட்டப்படும் நிதி ரூ. 8500 கோடி. நாட்டின் மொத்த கிரெடிட் கார்டு சேவையில் இதன் பங்களிப்பு 18 சதவீதமாகும். ஏற்கனவே எஸ்.பி.ஐ. நிறுவன பங்குகளை வைத்திருப்போருக்கு பங்குகளில் சலுகை அறிவிக்கப்படலாம்.

வளர்ந்த நாடாகவும், நுகர்வோர் தன்மையை அதிகமாக கொண்டிருக்கும் இடமாகவும் நம் நாடு இருப்பதால், நிதி சார்ந்த சேவையில் இந்த நிறுவனம் ஐ.பி.ஓ. வெளியீட்டில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். பொருளாதாரம் மந்தமடைந்து கிரெடிட் கார்டு பெற்றவர்கள் முறையாக தவணையை செலுத்த தவறும் பட்சத்தில், இந்த நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com