மூன்று மாத தவணைத்தொகை (EMI) சலுகை – யார் யாருக்கு ?
Moratorium of 3 Months EMI – Who will get this benefit ?
2019-20ம் நிதியாண்டுக்கான ஏழாவது மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம், பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே மந்தநிலையில் சென்று கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரம், கொரோனா வைரஸ்(Covid-19) பாதிப்பால் மேலும் மந்தமடைந்தது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை போன்றவற்றால் கொரோனா பாதிப்பை தடுக்கும் நிலையில், சொல்லப்பட்ட காலத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் மேலும் அதிகரிக்க கூடும்.
நேற்றைய கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ(REPO Rate) வட்டி விகிதத்தை 5.15 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 75 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதனால் வங்கிகளின் கடனுக்கான வட்டி விகிதம் குறையும். அதே வேளையில் வங்கி டெபாசிட் முதலீட்டிற்கு வட்டி வருவாய் குறையும்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின், உலகளாவிய வளர்ச்சியும் பெரிதும் மந்தமடைந்துள்ளது. தொற்று நோய் மற்றும் அதன் பரவலை தொடர்ந்து அதிக காலம் எடுத்து கொள்ளும் நிலையில் இந்த நிலை பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பொருளாதார வீழ்ச்சி சார்ந்த பதற்றத்தால் நிதி சந்தையில் அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க பல பொருளாதார ஊக்குவிப்புகள் சொல்லப்பட்டு வருகிறது. இது போன்ற காலங்களில் ஊக்குவிப்புகள் நடைபெறுவது இயல்பான ஒன்று தான்.
நேற்றைய கூட்டத்தில் முக்கிய அம்சமாக வங்கி வாடிக்கையாளர்களின் கடன் தவணை தொகை(EMI) அடுத்த மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அமல் மார்ச் 1,2020 முதல் நிலுவையில் உள்ள தவணை தொகைக்கு என சொல்லப்பட்டுள்ளது. அனைத்து வணிக வங்கிகளுக்கும் (கிராமப்புற வங்கிகள், நிதி வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள்), கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (வீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் உட்பட) மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் என அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும்.
சொல்லப்பட்ட தவணை சலுகை அனைத்து வங்கிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அளிக்க பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த வங்கிகள் தான் வாடிக்கையாளர்களுக்கு அதன் பலனை அளிக்க வேண்டும். தவணை காலம் மார்ச் 1 முதல் மே 31ம் தேதி வரை உள்ள காலமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. தாமதமாக துவங்கும் தவணை தொகையால் (EMI) வாடிக்கையாளர்களின் சிபில்(CIBIL Score) மதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது எனவும், வங்கிகளின் வாராக்கடன்(NPA) அளவிலும் எந்த மாற்றமுமில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
யார் யாருக்கு தவணை தொகை சலுகை ?
பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து வங்கிகளும் மூன்று மாத தவணை சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் படி, ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது. இது ஒரு அனுமதி கடிதம் தான் தவிர, வங்கிகள் தான் இதனை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பை அறிவித்தால், சில வங்கிகள் மட்டுமே அந்த பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். இதுவும் அது போன்று நடந்து விட கூடாது.
வரவிருக்கும் வாரங்களில் வங்கி வாடிக்கையாளர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்கிகளிடம் செயல்முறையை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் சில வாடிக்கையாளர்கள் தவணைத்தொகையை செலுத்த இருக்கும் பட்சத்தில், அதற்கான வங்கிகளின் முடிவும் மாறுபடலாம். வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை தொகைக்கான(Loan EMI) காலம் தான் தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர, தவணை தொகை கழித்து கொள்ளப்படுகிறது என சொல்லப்படவில்லை. எனவே இது ஒரு கடன் தள்ளுபடி என நினைத்து கொள்ள வேண்டாம்.
தவணை தொகைக்கான காலம் மார்ச் 1, 2020 முதல் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அப்படி இருக்கையில் பெரும்பாலானோர் தங்கள் மார்ச் மாத தவணை தொகையை கட்டியிருக்கலாம். இது சம்மந்தமான சந்தேகங்களை உங்கள் வங்கி மேலாளரிடம் அல்லது அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். தவணைத்தொகை எனும் போது, அசலுடன் வட்டியும் சேர்த்து தான் சொல்லப்பட்டுள்ளது.
வீட்டு கடன், கல்வி கடன், தனிநபர் கடன், விவசாய கடன், வாகன கடன், வீட்டு பொருட்களை தவணை முறையில் பெற்றதற்கான கடன் மற்றும் இதர சில்லறை வகையிலான கடன்களுக்கு சொல்லப்பட்ட மூன்று மாத தவணை தொகை சலுகை பொருந்தும். கிரெடிட் கார்டுகள் என்பது ஒரு சுழலக்கூடிய கடன்(Revolving Credit) என சொல்லப்படுகிறது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி கிரெடிட் கார்டுக்கான நிலுவை தொகைக்கு இந்த சலுகை பொருந்தும்.
பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ள சலுகை அனைத்தும் சில்லறை கடன்களுக்கானது. இவற்றில் வணிக கடன் பற்றி சொல்லப்படவில்லை. எனினும், வணிக நிறுவனங்களால் வாங்கப்பட்ட அனைத்து மூலதன கடன்களுக்கும் வட்டி தொகையை செலுத்துவதற்கு காலத்தை நீட்டித்துள்ளது. இவற்றை செலுத்துவதற்கான காலம் (மார்ச் 1 முதல்) மூன்று மாதம் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் பின்பு வட்டித்தொகை அனைத்தும் சேர்க்கப்பட்டு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாமதமாக செலுத்தப்படும் தவணைத்தொகையால் வாடிக்கையாளர்களின் சிபில் மதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. இதன் காரணமாக வருங்காலங்களில் புதிய கடன் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
நினைவில் கொள்க: உங்கள் வங்கி கிளையை தொடர்பு கொண்டு, முறையான தகவலை பெறுவது அவசியமாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
www.varthagamadurai.com