ஐடியா ஒரு சதவீதம், செயல்படுத்துதல் 99 சதவீதம் – தொழில்முனைவின் ரகசியம்
IDEA & Execution connects the Secret of Entrepreneurship
சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஊடக நிகழ்வில் நம் மண்ணின் தொழில் தூதுவர் என அழைக்கப்படும், நேட்டிவ் லீட்(Native Lead) முதலீடு நிறுவனத்தின் நிறுவனர் திரு. சிவராஜா ராமநாதன் அவர்கள் பேசினார். தொழிலுக்கும், தொழில்முனைவுக்கும் இடையேயான புரிதலே ஒருவரை சிறந்த வெற்றியாளராக மாற்றுகிறது. முன்னர், ஒருவர் தொழிலில் தோல்வியடைந்தால் அவர் தொழில் செய்வதற்கு தகுதியில்லை என்ற நிலை இன்று மாறி, கற்றல் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஒரு நல்ல யோசனை, அதே வேளையில் அதனை சரியாக திட்டமிட்டு செயல்படுத்துதல் இருந்தாலே தொழில்முனைவில் வெற்றி சாத்தியம் தான். திரு. சிவராஜா அவர்கள் பேசிய சில தொழில்முனைவு சிந்தனைகள், ‘ இரண்டாம் உலகப்போருக்கு பின் ஏற்பட்ட தொழில் புரட்சிகள் இந்த உலகத்தை மாற்றி யோசிக்க வைத்தன. ஆரம்ப காலத்தில் விவசாயம் சார்ந்த நிலை ஏற்பட்டாலும், பின்னாளில் இயந்திரவியல் சார்ந்த தொழில் புரட்சி உருவானது.
பின்பு, அந்த நிலை அறிவுசார் புரட்சியாக மாற்றப்பட்டது. தற்போதைய காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் தகவல் பரிமாற்றம் எளிதானது. இதன் வெளிப்பாடாக புதுயுக தொழில்முனைவு(New Age Entrepreneurship) ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கும், தொழில் புரிதலுக்கும் எப்போதும் ஒரு பந்தம் இருந்து வருகிறது. இதற்கு சிறந்த சான்றாக பூம்புகாரை சொல்லலாம்.
உலகளவில் தமிழர்கள் வர்த்தகம் புரிந்து கொண்டதற்கு பல காலகட்டங்கள் சான்றுகளாக இன்றும் இருந்து வருகின்றன. அவற்றில் கீழடியும் ஒன்று தான். நூறு பேர் ஒரே தொழிலை செய்து கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், அதே தொழிலில் புதுமையை புகுத்தி அதனை தொழில்முனைவாக மாற்றுவது தான் ஆக்கபூர்வமான சமூகத்தை உருவாக்கும்.
இன்றளவிலும் மதுரை நகரை பற்றி சினிமா துறையிலும், ஊடகங்களிலும் அதீத கற்பனைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. உண்மையில் மதுரை ஒரு தொழில் சார்ந்த நகரம். தமிழ் வரலாற்றை பிரதிபலிக்கும் பல விஷயங்கள் மதுரையில் இருந்து தான் துவங்கியுள்ளன. தொழில் புரிவது என்பது சமூக – பொருளாதார (Socio-economic) என்ற இரு நிலைகளை இணைப்பதாக இருக்க வேண்டும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளோர் இன்றும் தங்கள் தொழில் யோசனைகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ், ஜெப் பெஸோஸ் போன்றோரை கொண்டாடுவது ஒன்றும் பெரிதல்ல, நம்மூரில் சிறு தொழில் செய்து வந்தாலும், புதுமையான யோசனைகளை வரவேற்று அவர்களை நாம் சிறந்த தொழில்முனைவோராக கொண்டாடுவதே நமக்கான மகிழ்வாக இருக்கும் ‘ என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ‘ தொழில்முனைவில் ஒரு யோசனையை வெளிப்படுத்த ஆங்கிலம் தான் தேவை என்றில்லை. தனது தாய்மொழியிலும் அந்த கருத்தை வெளிப்படுத்தும் போது, அதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகும். தொழிலுக்கான முதலீடு என இருக்காமல், தொழில்முனைவின் யோசனைகளை ஏற்று அவற்றில் இருக்கும் நேர்-எதிர்மறை தன்மைகளை கண்டறிந்து நீண்டகாலத்தில் உறவுகளை பேணுவதே எங்களின் இலக்கு ‘ என்றார்.
இன்றைய தொழில்முனைவில் மிகவும் அவசியமானது, வழிகாட்டுதல் மற்றும் அடைகாத்தல் (Mentorship & Incubation). ஒரு சதவீத யோசனையாக இருந்தாலும், அதனை சரியாக செயல்படுத்த திட்டமிடல் அவசியம். ஒரு தொழிலில் கிடைக்கப்பெறுவது வெறும் லாபமாக மட்டுமில்லாமல், சமூகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அந்த பெரு நகரத்துக்கு சென்றால் தான் தொழில் புரிய முடியும் என்ற கட்டமைப்பு உடைத்து, நாம் இருக்கும் இடத்திலும் நம்மால் தொழில்முனைவை ஏற்படுத்த முடியும். ஒரு தொழில் யோசனையை சரியாக செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றால், அதனை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்ற விவாதத்துக்கும் தயாராக வேண்டும்.
ஒரு தொழில்முனைவோர் என்பவர் சுயமரியாதை(Self Esteem), உள்ளுணர்வு(Intuition) மற்றும் தேடல்(Exploring) இந்த மூன்றையும் கலவையாக கொண்டவராகவே இருப்பார். ‘ ஆயிரம் பூக்கள் மலரட்டும் ‘ என்ற இலக்கை தனது நிறுவனத்தின் இலக்காக கொண்டு செயல்படுகிறார் இந்த மண்ணின் தொழில் தோழன்(Sivarajah Ramanathan). அதாவது அடுத்த 10 வருடங்களில் தமிழகத்தில் ஆயிரம் தொழில்முனைவோர்களை உருவாக்குவதே தங்களின் இலக்கு என கூறியுள்ளார்.
படித்து விட்டு, வேலை கிடைத்தால் நிம்மதி என்ற நிலையை தாண்டி, புது யோசனைகளை கொண்டு தொழில்முனைவில் ஈடுபடும் போது, நல்ல சமூக மதிப்பை ஏற்படுத்த முடியும். வேலைவாய்ப்புகளும் பெருகும், அது நாட்டின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை