பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எப்.) – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எப்.) – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

Public Provident Fund (PPF) – Postal Savings Scheme

முன்னொரு காலத்தில் அரசு வேலை அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியமும், கூடுதலாக வருங்கால வைப்பு நிதி என சொல்லப்படும் பி.எப்.(Provident Fund) சேமிப்பும் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. ஆனால் 2004ம் ஆண்டிற்கு பின், அரசு மற்றும் பொதுத்துறையில் ஓய்வூதிய முறை நிறுத்தப்பட்டு புதிய பென்ஷன் திட்டம் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டது.

புதிய பென்ஷன் திட்டம்(NPS), பழைய ஓய்வூதிய முறையை போல பாதுகாப்பான பலனை கொடுக்கும் என அரசு சார்பில் சொல்லப்படவில்லை. அது போக, இன்று அரசு வேலையில் பி.எப். சேமிப்பும் பிடிக்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமே தற்போது பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்பு முறை இல்லாதவர்கள், பொது வருங்கால வைப்பு நிதி(PPF) முறையை பயன்படுத்தி கொள்ளலாம். இன்று அஞ்சலகம் மற்றும் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கப்பெறும் சேமிப்பு சாதனமாக பி.பி.எப். நிதி உள்ளது.

இந்திய குடிமக்களாக உள்ள தனிநபர் ஒருவர் பி.பி.எப். கணக்கை தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்திலோ அல்லது வங்கி கிளையிலோ துவங்கலாம். கணக்கு துவங்கும் போது 100 ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் சேமிப்பது அவசியம். அதிகபட்ச முதலீடு ரூ. 1,50,000.

பி.பி.எப். கணக்கில் ஒரு முறை முதலீடு அல்லது மாதாமாதம் தவணை முறையிலும் சேமிக்கலாம். கூட்டு கணக்கை(Joint Account) பி.பி.எப். நிதியில் துவங்க இயலாது. நாமினியை எப்போது வேண்டுமானாலும் நியமித்து கொள்ளலாம். இருப்பினும், கணக்கு துவங்கும் போது நாமினியை நியமிக்கும் பட்சத்தில், பின்னாளில் எந்த சிக்கலும் வராது.

பொது வருங்கால வைப்பு நிதி ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம்(Long term Savings Plan). இதன் முதலீட்டு காலம் 15 வருடங்கள். தேவைப்பட்டால், கூடுதலாக ஐந்து வருடங்கள் நீட்டித்து கொள்ளும் வசதியும் உண்டு. பி.பி.எப். நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் உண்டு.

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

வரி சலுகை என்பது பி.பி.எப். நிதியில் மூன்று விதமான நிலையில்(EEE – Exempt) பலனை தருகிறது. முதலீடு செய்யும் போதும், கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் மற்றும் முதிர்வில் பெறப்படும் மொத்த தொகை என மூன்று நிலையிலும் வரி செலுத்த தேவையில்லை.

பி.பி.எப். கணக்கை துவங்கிய மூன்றாவது நிதியாண்டிலிருந்து கடன் வசதியும் உண்டு. கணக்கில் உள்ள தொகைக்கு ஏற்ப, நமது கடன் தொகையும் மாறுபடும். அவசர காலத்திற்கு பணம் தேவைப்படும் நிலையில், கணக்கு துவங்கிய ஏழாவது நிதியாண்டிலிருந்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் வசதி உண்டு.

நடப்பில் பி.பி.எப். நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.9 சதவீதம். பொது வருங்கால வைப்பு நிதி ஒரு ஓய்வூதிய திட்டமாக(Retirment Plan) நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நன்மையை அளிக்கும். நீண்ட காலத்தில் சேமிக்கப்படும் போது, நமது ஓய்வு காலத்திற்கான கார்பஸ் தொகையை பெறலாம். இதனை கொண்டு மாதாமாதம் வருமானத்தை தரும் ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தில் போட்டு வைக்கலாம்.

பி.பி.எப். கணக்கை இணைய வாயிலாகவும் தொடங்கும் வசதி உண்டு. தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பி.எப்.(PF, VPF) கணக்கு இல்லாதவர்கள் பொது வருங்கால வைப்பு நிதியை பயன்படுத்தி கொள்வது சிறப்பம்சம்.

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் – 2019

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்ட் துறையில் இறங்கவிருக்கும் முத்தூட் பைனான்ஸ்

மியூச்சுவல் பண்ட் துறையில் இறங்கவிருக்கும் முத்தூட் பைனான்ஸ் 

Muthoot Finance to entering into Mutual Fund Industry – Acquisition of IDBI’s Mutual Fund

சந்தை மதிப்பில் 27,500 கோடி ரூபாயை கொண்டுள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் நிதிச்சேவை, கல்வி, மருத்துவம், வீட்டு மனை, அந்நிய செலவாணி, காப்பீடு என பல சேவைகளில் தொழில் செய்து வருகிறது. நகை கடனில் பிரபலமடைந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆறு வருடங்களில் பத்து மடங்காக பெருகியுள்ளது.

கடனில் தத்தளித்து வந்த ஐ.டி.பி.ஐ. வங்கியை(IDBI) பொது துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தியது. எல்.ஐ.சி. நிறுவனம் ஏற்கனவே மியூச்சுவல் பண்ட் (பரஸ்பர நிதி) துறையில் உள்ளதால், தனது சேவையை ஐ.டி.பி.ஐ. வங்கி கிளைகளில் வழங்க முடிவு செய்திருந்தது. இதனையடுத்து ஐ.டி.பி.ஐ. வங்கியின் கீழ் இருந்த பரஸ்பர நிதி தொழிலை விற்கும் முடிவையும் எல்.ஐ.சி. நிறுவனம் எடுத்திருந்தது.

இந்நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் மியூச்சுவல் பண்ட் தொழிலை முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. இதன் மதிப்பு சுமார் 215 கோடி ரூபாய் எனவும், இந்த கையகப்படுத்தல் வரும் 2020ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் முடிவில் நிறைவு பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐ.டி.பி.ஐ. பரஸ்பர நிதி(Mutual Fund AMC) சேவையில் மொத்தம் 22 திட்டங்கள் மூலமாக முதலீட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது. ஐ.டி.பி.ஐ. மியூச்சுவல் பண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சுமார் 5,300 கோடி ரூபாய்.

சொல்லப்பட்ட கையகப்படுத்தல் முடிந்தவுடன், முத்தூட் பைனான்ஸ் மற்றுமொரு சேவையில் களம் இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பரஸ்பர நிதி துறையில் இதன் சேவை சிறிய அளவில் இருந்தாலும், இனி பரஸ்பர நிதி சேவையை முழுவதுமாக வழங்குவதிலும், அதன் சொத்தை நிர்வகிப்பதிலும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு அமையலாம்.

தற்போதைய நிலையில் இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு 26 லட்சம் கோடி ரூபாய். பொருளாதார மந்த நிலையிலும், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வருவது சந்தைக்கு சாதகமான விஷயமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

Senior Citizen Savings Scheme (SCSS) – Postal Savings Scheme

அஞ்சலக சிறு சேமிப்பின் கீழ் பல திட்டங்கள் வலம் வந்தாலும், அதன் சிறப்பம்சமே மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் தான். இளம் தலைமுறையினருக்கும், வருமான வரி வரம்பில் உள்ளோருக்கும் பல சேமிப்பு திட்டங்களும், பல்வேறு முதலீட்டு சாதனங்கள் இருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சேமிப்பு திட்டங்கள் இருப்பது அவசியமாகும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(SCSS) என்பது ஐந்து வருட கால வைப்பு திட்டம் போன்றது. ஒரு முறை மட்டும் வைப்பு தொகையாக சேமிக்கும் இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1000. அதற்கு மேற்பட்ட முதலீடு 1000 ரூபாய் மடங்கில் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் உண்டு. திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை ரூ. 1 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் ரொக்கமாக செலுத்தலாம். ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையாக இருந்தால், காசோலை(Cheque) மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதே வேளையில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் அல்லது சில துறைகளில் 60 வயதுக்கு முன்பு ஓய்வு பெறக்கூடிய நிலையில், 55 வயது தளர்வு என்ற சலுகை அளிக்கப்படுகிறது. எனவே, இது போன்ற சமயங்களில் 55 வயது நிரம்பியவர்கள் முதலீடு செய்யலாம். அதற்கான ஆவணங்களை கணக்கு ஆரம்பிக்கும் நிலையில் சமர்பிக்க நேரிடும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்(NRI), இந்து கூட்டு குடும்பம்(HUF) ஆகியோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் முதிர்வு காலத்தை அடுத்த மூன்று ஆண்டுகள் வரை கணக்கை நீட்டித்து கொள்ளலாம். கணக்கை முதிர்வு காலத்திற்கு முன்னரே மூட முடிவு செய்தால், கணக்கு துவங்கிய ஒரு வருடத்திற்கு பின்னர் மூடலாம். அதற்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கை தனிநபர் ஒருவரின் பெயரில் அல்லது கூட்டு கணக்காகவும் (Joint Account கணவன் – மனைவி மட்டும்) தொடங்கலாம். நாமினியை எந்தவொரு சமயத்திலும் நிர்ணயிக்கலாம். தனிநபர் ஒருவர், ஒரு நேரத்தில் ஒரு கணக்கை மட்டுமே துவங்க முடியும். நடப்பில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது.

திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு வரி சலுகை உண்டு. அதே வேளையில் கிடைக்க கூடிய வட்டி வருவாய் ஒரு நிதியாண்டில்(2019-20) ரூ. 50,000 க்கு மிகும் போது, டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். இன்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலகத்தில் மட்டுமில்லாமல் வங்கிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

கணக்கு துவங்க அடையாள மற்றும் முகவரிக்கான நகல், பான் எண், நாமினி விவரங்கள் மற்றும் முதலீட்டு தொகைக்கான காசோலை ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் இத்திட்டம் குறுகிய கால இலக்கிற்கு பயன்படும்படி அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்கு விலக்கல் கொள்கை – அடுத்து விற்பனைக்கு வரும் பொதுத்துறை நிறுவனங்கள் என்ன ?

பங்கு விலக்கல் கொள்கை – அடுத்து விற்பனைக்கு வரும் பொதுத்துறை  நிறுவனங்கள் என்ன ?

Govt’s Disinvestment Policy – What are the next PSUs ?

கடந்த 2018-19ம் நிதியாண்டின் முடிவில் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின்(Air India) கடன் ரூ. 58,351 கோடி. சமீப வருடங்களாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் பங்கு விலக்கல் அடிப்படையில் விற்பனைக்கு தயாராக உள்ளன. தற்போது நிறுவன பங்கை வாங்க வரும் முதலீட்டாளர்களுக்காக அரசு காத்திருக்கிறது.

1932ம் ஆண்டில் டாட்டா குழுமத்தின் ஜே.ஆர்.டி. டாட்டா(JRD Tata) அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நாட்டின் முதல் விமான சேவையாக, ‘டாட்டா ஏர்லைன்ஸ்’ இருந்தது. இரண்டாம் உலக போருக்கு பின், இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனமாக(Tata Airlines) மாற்றப்பட்டது. பின்னர் அதன் பெயரும், ‘ஏர் இந்தியா’ என மாற்றம் பெற்றது.

சுதந்திரத்திற்கு பின், ஆரம்ப நிலையில் மத்திய அரசு 49 சதவீத பங்குகளை மட்டுமே கொண்டிருந்த நிலையில், பின்னர் ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமாகியது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் பங்கு விலக்கல் தொகைக்கான இலக்கு 1.05 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் படி, பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனத்தின் 53 சதவீத பங்கு விற்பனைக்கு வர உள்ளது. இது போல ஜெனரல் இன்சூரன்ஸ்(GIC) நிறுவனத்தின் 35 சதவீத பங்குகள் மற்றும் கோல் இந்தியாவின்(Coal India) 18 சதவீத பங்குகளும் விற்பனைக்கு வர உள்ளன.

இது போல ஓ.என்.ஜி.சி.(ONGC) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் குறிப்பிட்ட பங்குகளும், பங்கு விலக்கல் அடிப்படையில் விற்பனைக்கு தயாராக உள்ளன. இதன் வாயிலாக அரசு தனக்கு தேவையான நிதியை திரட்டுவதுடன், இலக்கை அடைய முற்படலாம்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை பொறுத்தவரை, அரசின் அனைத்து பங்குகளையும் விற்க உள்ளன. அரசின் 53 சதவீத பங்குகளை விற்கும் நிலையில், கிடைக்கக்கூடிய தொகை சுமார் 32,000 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

கடந்த சில வருடங்களாக அதிக கடன் மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் அரசும் பங்கு விலக்கல் கொள்கையின் அடிப்படையில் நிறுவனத்தினை விற்க முடிவு செய்துள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

செல்வமகள் (சுகன்யா சம்ரிதி) சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு

செல்வமகள் (சுகன்யா சம்ரிதி) சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு 

Sukanya Samriddhi Yojana – Postal Small Savings Scheme

 

அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களில் நல்ல வட்டி வருவாயை கொண்டிருப்பது மூத்த குடிமக்கள் திட்டம் எனலாம். இதற்கு அடுத்தாற் போல் இருப்பது பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம்(Sukanya Samriddhi). நடப்பில் இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.40 சதவீதம்.

 

செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தங்கள் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க உள்ள பெற்றோர், விரைவாக கணக்கை துவங்கினால் தான் குறிப்பிட்ட பலனை சரியாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

திட்டத்தில் சேர 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையாக(Girl Child) இருக்க வேண்டும். எனவே குழந்தை பிறந்த சில நாட்கள் அல்லது வாரங்களில் திட்டமிடுவது சிறந்தது. கணக்கு முடியும் தருணம் குழந்தையின் 21வது வயதில் முடிவடையும். அதாவது ஒரு வயதுக்குள் ஆரம்பிக்கப்பட்ட கணக்கு 21வது வருடத்தில் முடிவு பெறும். நாம் தாமதமாக கணக்கை ஆரம்பிக்கும் போது, முதிர்வு காலமும் மாறுபடும்.

 

பெண் குழந்தையின் பெயரில் அதன் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கை துவங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச ஆரம்ப முதலீடு(Minimum Investment) ரூ. 250. அதிகபட்சமாக முதலீட்டிற்கு வரம்பு எதுவுமில்லை. ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை முதலீடு செய்யும் ஒருவருக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகை உண்டு (வருமான வரி செலுத்தக்கூடியவராக இருந்தால்). 

 

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறும் பட்சத்தில் கணக்கு செயல்பாடு நிறுத்தி வைக்கப்படும். இருப்பினும் அபராத கட்டணத்தை செலுத்தி கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

 

பெண் குழந்தை தனது 18 வயதை அடையும் போது, மேற்படிப்பு செலவுக்காக முதலீடு செய்த தொகையில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை பணமாக பெற்று கொள்ளலாம். மீதமிருக்கும் தொகையை 21 வருட முடிவில் திரும்ப பெறலாம். 18வயது நிரம்பியவுடன் பெண் திருமணம் செய்வதற்கு தயாராகி விட்டால், கணக்கை முன்னரே முடித்து கொள்ளும் சலுகையும் அளிக்கப்படுகிறது.

 

செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கை உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது வங்கியில் துவங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கை மட்டுமே துவங்க முடியும். அதே வேளையில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு கணக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும் (இரு பெண் குழந்தைகள்).

இரட்டை பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ஒரு குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகளுக்கு கணக்கு துவங்க அனுமதி அளிக்கப்படும். இருப்பினும் அதற்கான பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தத்து எடுக்கப்படும் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து செல்வமகள் கணக்கை தொடங்கலாம்.

 

திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு வருமான வரி சட்டம் 80சி கீழ் முழு வரி சலுகையும் உள்ளது. அதாவது முதலீடு செய்யும் பணத்திற்கு, கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் மற்றும் முதிர்வில் கிடைக்க கூடிய மொத்த தொகை என மூன்று விதமான வரி சலுகை அளிக்கப்படுகிறது. 

 

செல்வமகள் திட்டத்தின் கணக்கை ஆரம்பிப்பதற்கு பெற்றோர் அல்லது காப்பாளரின் அடையாள நகல்(ID Proof), முகவரி நகல், பான் எண்(PAN), பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் குழந்தையின் புகைப்படம் அவசியம். 

 

பரஸ்பர நிதி முதலீட்டை புரிந்து கொண்டு, முதலீடு செய்ய உள்ளோர் செல்வமகள் திட்டத்திற்கு மாற்றாக பரஸ்பர நிதி முதலீட்டு திட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய நல்ல வருமானத்தை பெறலாம். வரி சலுகைக்காக மட்டுமே செல்வமகள் திட்டத்தை பயன்படுத்தாமல், தங்கள் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவையை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது நலம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

   

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு

India’s Balance of Trade (Trade Deficit) to USD 11.01 Billion in October 2019

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த அக்டோபர் மாதத்தின் முடிவில் 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டின் அக்டோபர் காலத்தில் வர்த்தக பற்றாக்குறை 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது.

தற்போது சொல்லப்பட்ட வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) சந்தை எதிர்பார்த்த 12.05 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதனை விட குறைவாக தான் உள்ளது. பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு குறைந்ததை அடுத்து நாட்டின் அக்டோபர் மாத இறக்குமதி விகிதம் 16 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் இறக்குமதி அளவு 31 சதவீத வீழ்ச்சியும், மின்னணு பொருட்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் முறையே 8.5 சதவீதம் மற்றும் 14.70 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி அக்டோபர் மாதத்தில் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியை பொறுத்தவரையில் அக்டோபர் மாத முடிவில் ஒரு சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி 14.60 சதவீதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் 11 சதவீதமும் சரிவை கண்டுள்ளது. இது போல ஜவுளி மற்றும் பருத்தி வகை பொருட்களின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

மருந்துகள் மற்றும் மின்னணு பொருட்களும் ஏற்றுமதியில் பெருமளவிலான சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் தேவை பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்தே உள்ளதால் வர்த்தக பற்றாக்குறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவின் பெரும்பாலான வர்த்தக பற்றாக்குறை சீனா, சுவிஸ், சவூதி அரேபியா, ஈராக் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன் தான் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இறக்குமதியில் அதிக இடத்தை தக்க வைத்திருப்பது கனிம எரிபொருட்கள்(Mineral Fuels), எண்ணெய் வகைகள், முத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவை ஆகும்.

நாட்டின் அதிகபட்ச பற்றாக்குறையாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 20,210 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. வர்த்தக உபரியாக(Trade Surplus) கடந்த 1977ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 258 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

தேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்  

National Savings Certificate (NSC) – Postal Savings Scheme

வருமான வரி சேமிப்பு(Tax Savings) என்றவுடன் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருவது காப்பீடு திட்டம் தான். இதற்கு அடுத்ததாக நம்மில் பலருக்கு தோன்றுவது அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் தான். அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் பல வரி சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன.

ஐந்து வருட வைப்பு நிதி, செல்வ மகள் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி(PPF), கிசான் விகாஸ் பத்திரம்(KVP), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) என வரி சேமிப்பு திட்டங்களை அஞ்சலகத்தில் காணலாம். இங்கு நாம் காணப்போவது தேசிய சேமிப்பு பத்திரம் சார்ந்து.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டம் எனலாம். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.

அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான  வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் பொதுவாக 5 வருட கால அளவை கொண்டிருக்கும். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதம் (October 2019). வட்டி விகித முறை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும். அதாவது தற்போது முதலீடு செய்யப்படும் 100 ரூபாய், ஐந்து வருட முடிவில் ரூ. 146.25 ஐ பெற்று தரும்.

5 வருடம் மற்றும் 10 வருடம் என இரு வகைகளில் திட்டம் உள்ளதால், இதனை வங்கிகளில் அடமானம் வைத்து கடனும் பெறலாம் என்பது கூடுதல் அம்சம். வரி சேமிப்பிற்கு அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரை (u/s 80C) முதலீடு செய்யலாம். அதற்கு மேற்பட்ட முதலீட்டு தொகைக்கு வரி சலுகை பெற இயலாது.

பொதுவாக இது போன்ற வரி சேமிப்பு திட்டங்களில் கால அளவுகள் (5 அல்லது 10 வருடங்கள்) முடிவதற்கு முன்னர், பணத்தை திரும்ப பெற முடியாது. இருப்பினும், திட்டத்தில் முதலீடு செய்த சந்தாதாரர் ஒருவர் எதிர்பாராத நிகழ்வால் உயிரிழக்க நேரிட்டால் அவரது நாமினி கணக்கை முடித்து கொண்டு பணத்தை உடனே பெறலாம்.

தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தின் முடிவில் கிடைக்கப்பெறும் தொகைக்கு டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படாது. முழுத்தொகையும் சந்தாதாரர்களின் கையில் கிடைக்கப்பெறும். இருப்பினும் ஒருவர் தனது வருமான வரம்பை கணக்கில் கொண்டு, முதலீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும்.

வரி சேமிப்பு திட்டத்தினை பொறுத்தவரை லாக்-இன்(Lock-in) எனப்படும் விதிமுறை உண்டு. தற்போதைய நிலையில் குறைந்த லாக்-இன் வசதி, பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் செயல்படும் வரி சேமிப்பு பண்டுகளுக்கு (Tax Savings Funds – ELSS – 3 Years) மட்டுமே உண்டு. மற்ற முதலீடுகள் 5 வருடம், 10 வருடம், 15 வருடங்களுக்கு மேலாக என லாக்-இன் விதிமுறைகள் மாறுபடும்.

வருமான வரி சேமிக்கிறேன் என நமக்கு பயன்படாத திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லதல்ல. நமது வருமான வரியை நேர்மையான முறையில் சேமிக்க வேண்டும், அதே வேளையில் நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தையும் அது தர வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

Anil Dhirubhai Ambani resigns – Director of Reliance Communications

ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் திரு. அனில் திருபாய் அம்பானி. கடந்த 2006ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து பிரிந்த ரிலையன்ஸ் குழும நிறுவனம் அனில் அம்பானியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் இன்ப்ரா(Reliance Infra), ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகியவை ரிலையன்ஸ் குழும நிறுவனங்களாக உள்ளது. செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்ததை ஒட்டி, அதன் நிறுவனர் அனில் அம்பானி இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ஏற்கனவே திவால் நிலைக்கு தள்ளப்பட்டு, அதற்கான தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் அதன் முதலீட்டாளர்களுக்கு 96 சதவீத முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

தொடர்ச்சியாக பத்து காலாண்டுகளுக்கும் மேலாக  நஷ்டத்தை சந்தித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் சுமார் 47,600 கோடி ரூபாய் கடன் சுமையையும் கொண்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பங்கு ஒன்றின் விலை 100 ரூபாய்க்கு மேலாக இருந்த நிலையில், தற்போது வெறும் 60 பைசாவில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ. 7,767 கோடியாகும். கடந்த 2008ம் ஆண்டில் இந்நிறுவனம் 5400 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

நீண்டகால முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னர், நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) ஆராய்ந்த பின்னரே முதலீட்டு முடிவை எடுப்பது பாதுகாப்பானது. பொதுவாக கடனில்லாத(Debt Free) நிறுவனங்கள், தொடர்ச்சியான விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை கொண்டிருக்கும் நிறுவனங்கள், நல்ல நிர்வாக திறனை கொண்டிருப்பவை முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் எனலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா !

ஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா !

Alert – Q2FY20 – Bharti Airtel reports 23,000 Crore Loss in Quarterly Results

 

1984ம் ஆண்டு வாக்கில் அழுத்தக்கூடிய பட்டன் தொலைபேசிகளை அமைத்து, நாட்டில் அறிமுகப்படுத்தியவர் சுனில் மிட்டல். பின்னர் 1990ம் ஆண்டுகளில் தொலைநகல் இயந்திரங்கள்(Fax), கம்பியில்லா தொலைபேசி(Cordless Phones) என தொலைத்தொடர்பு சாதனங்களை இந்திய சந்தைக்கு வரவழைத்தார்.

 

1995ம் வருடத்தின் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் ஏர்டெல் என்னும் பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனம். 15 வருடங்களுக்கு முன்பு ஏர்டெல்லின் சேவையும், அதன் பின்னணி இசையுமே ஒவ்வொரு வாடிக்கையாளரை கவர்ந்திழுத்தது. அதிகமான சந்தாதாரர்களை கொண்டு நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் ஏர்டெல் நிறுவனம் விளங்கியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரிலையன்ஸ் ஜியோ(JIO) வருகைக்கு பின் இவையனைத்தும் தலைகீழாக மாறின. அதிக கட்டணம் வசூலிக்கிறது என குறை சொல்லும் அளவிற்கு ஏர்டெல் பெயரெடுக்க, ஜியோவின் கட்டணங்கள் மலிவாகின. பேசுவதற்கும், இணைய பயன்பாட்டிற்கும் தனித்தனியாக அதிகபட்ச கட்டணங்களை செலுத்தி வந்த நிலையில், ஜியோவின் இணைய புரட்சி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் கட்டண சலுகையை அறிவிக்க வைத்தது.

 

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.86 லட்சம் கோடி. அதன் புத்தக மதிப்பு 139 ரூபாய். கடன்-பங்கு(Debt-Equity Ratio) விகிதம் 1.75 என்ற அளவில் அதிகமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 1.25 லட்சம் கோடி சொல்லப்பட்டுள்ளது.

 

நிறுவனம் கடன் அதிகமாக பெற்றாலும், அதனை செலுத்தக்கூடிய அளவில் வட்டி பாதுகாப்பு விகிதமும்(ICR) இல்லை. தற்போதைய வட்டி பாதுகாப்பு விகிதம் ஒன்றுக்கு குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 62 சதவீதமாக உள்ளது.

 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுவாக தங்களது வாடிக்கையாளர்களின் முன்கூட்டிய செலுத்தும் கட்டணத்தை கொண்டே வளர்ச்சியை பெறும் நிலையில் உள்ளன. ஆகவே விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை தக்க வைப்பது அவசியமாகும். செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாயாக ரூ. 21,131 கோடியை பெற்றுள்ளது. 

 

கடந்த 2018ம் வருடம் செப்டம்பர் காலாண்டில் இது 20,147 கோடி ரூபாயாக இருந்தது. எனவே கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 23,045 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக கொண்டுள்ளது. கடந்த 2018 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக 118 கோடி ரூபாய் உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, தற்போது லாபத்தில் 19,500 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

 

சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக செலுத்தப்பட வேண்டிய நிலுவை தொகையை, பெறப்பட்ட மொத்த வருவாயில் சரி செய்துள்ளது. இதன் காரணமாகவே செப்டம்பர் காலாண்டில் நிகர இழப்பை நிறுவனம் சந்தித்துள்ளது.

 

கடந்த பத்து வருடங்களில் தொலைத்தொடர்பு துறையில் வேகமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். வீழ்ச்சி, ஏர் செல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால், வோடபோன்-ஐடியா இணைப்பு, ஜியோ வருகைக்கு பின்னான ஏர்டெல் நிறுவனத்தின் பின்னடைவு மற்றும் இணைய மாற்றங்கள் என பல கட்டங்களை சந்தித்து வருகிறது.

 

தற்போது வோடபோன் நிறுவனமும் தனது சேவையை இந்தியாவில் நிறுத்தி கொள்வதற்கான நிலையில் உள்ளது. வோடபோன்-ஐடியா நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டில் 50,897 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் இது ரூ. 4,908 கோடி நஷ்டமாகவும், 2018ம்  ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 4,950 கோடியை நஷ்டமாகவும் கொண்டுள்ளது.

 

தற்போது இந்த துறையில் அரசின் கொள்கைகளும் மற்றும் விதிமுறைகளும் மாற்றம் பெற்று வருகின்றன. எனவே முதலீட்டாளர்கள் தொலைத்தொடர்பு துறையில் உள்ள பங்குகளில் முதலீடு செய்வதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். புதிய முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில், இந்த துறையை தவிர்ப்பது நலம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

  

நாட்டின் அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு

நாட்டின் அக்டோபர்  மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு 

India’s Retail Inflation rose to 4.62 Percent – October 2019

சந்தை எதிர்பாராத வகையில் நாட்டின் அக்டோபர் மாத நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) என்று அழைக்கப்படும் சில்லரை விலை பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 3.99 சதவீதமாகவும், 2018ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 3.38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சொல்லப்பட்ட சில்லரை பணவீக்க விகிதம் முதன்முறையாக பாரத ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்கை தாண்டியுள்ளது.

நடப்பு சந்தையில் பெரும்பாலும் 4.25 சதவீதம் என்ற அளவில் பணவீக்கம் இருக்கலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், உணவு பொருட்களின் விலை உயர்வால் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.

நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த ஏழு வருட காலத்தில், அதிகபட்சமாக 2012ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 12 சதவீதமும், குறைந்த அளவாக 2017ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 1.54 சதவீதமாகவும் இருந்துள்ளது. உணவு பொருட்களின் விலை அக்டோபர் மாதத்தில் சுமார் 8 சதவீதம் உயர்ந்து காணப்பட்டுள்ளது.

காய்கறிகளின் விலை 26 சதவீதமும், எதிர்பாராத மழை பொழிவால் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் 11.72 சதவீதம், மாமிசம் மற்றும் மீன் 9.75 சதவீதம் மற்றும் முட்டை 6 சதவீதம் என விலை உயர்ந்துள்ளது.

இது போல பழங்கள், மசாலா பொருட்கள் மற்றும் பால் பொருட்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டுள்ளது. துணிமணிகள் மற்றும் காலணிகள் விலை சிறிதளவு ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால் எரிபொருட்களின் பணவீக்கம் 2 சதவீதம் குறைந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் கிராமப்புற பணவீக்க(Rural Inflation) விகிதம் 4.29 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் (Urban Inflation) 5.11 சதவீதமாகவும் உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது. இதனை சார்ந்து அடுத்து வரவிருக்கும் மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் வட்டி விகித மாற்றம் ஏற்படுத்தப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil