பங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா

பங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா 

Anuh Pharma – Fundamental Analysis – Value Investing

மருந்து துறையில் 80 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை கொண்டிருக்கும் எஸ்.கே. குழும(SK Group) நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான மருந்து தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக அனுக் பார்மா நிறுவனம் திகழ்கிறது.

மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஏற்றுமதியிலும் தனது சேவையை கொண்டுள்ளது இந்த நிறுவனம். நடப்பாண்டில் இதுவரை 483 அவதானிப்புகளுக்கு(USFDA Observations) அமெரிக்க மருந்து மற்றும் நிர்வாக ஆணையத்திடம் இருந்து ஆய்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த 1960ம் ஆண்டு முதல் மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிட்டிருக்கும் அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 370 கோடி ரூபாய். சிறு நிறுவனமாக இருந்தாலும், தனது சிறப்பான செயல்பாட்டால் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை தந்துள்ளது.

நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt-Equity Ratio) விகிதம் தற்போது 0.03 புள்ளிகளாக உள்ளது. எனவே கடன் என்று பெரிதாக எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 130 மடங்காக உள்ளது நிறுவனத்திற்கு சாதகமானது. நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை என்பதும் முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயம்.

காலாண்டு விற்பனை மற்றும் நிகர லாபம் சராசரியான வளர்ச்சியை பெற்றுள்ளது எனலாம். கடந்த மூன்று வருட கால அளவில் இதன் விற்பனை மற்றும் லாப வளர்ச்சி குறைந்துள்ளது. பத்து வருடங்களில் விற்பனையும், லாபமும் 10 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கின்றன.

பங்கின் மீதான வருவாய்(ROE) கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீதமும், ஐந்து வருட கால அளவில் இது 15 சதவீதமாகவும், 10 வருடங்களில் 17 சதவீதமாகவும் உள்ளது. பங்கின் விலை கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. பத்து வருட கால அளவில் 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளன.

2018-19ம் நிதியாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் கையிருப்பு 152 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. ஸ்மால் கேப்(Small Cap) குறியீட்டில் காணப்படும் இந்த நிறுவனத்தின் அடுத்த சில காலாண்டு முடிவுகளை ஆராய்ந்து பங்கு விலையின் மீது கவனம் செலுத்தலாம்.

நிறுவனம் சார்பாக இதுவரை ஐந்து முறை போனஸ் பங்குகள்(Bonus Issue) வழங்கப்பட்டுள்ளன. சமீப போனஸ் பங்குகளாக கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் போனஸாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஆறு வருடங்களில் இல்லாத வணிக நம்பிக்கை குறைவு

நாட்டின் ஆறு வருடங்களில் இல்லாத வணிக நம்பிக்கை குறைவு 

India’s Business Confidence Index lowest in Six Years – October 2019

தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழு(NCAER) கடந்த 1956ம் ஆண்டு பொருளாதாரத்தில் லாப நோக்கமற்ற சிந்தனை குழுவாக உருவாக்கப்பட்டது. டெல்லியை தலைமையிடமாக கொண்டிருக்கும் இந்த குழுவின் தலைவராக திரு. நந்தன் நிலேகனி உள்ளார். இவர் தான் இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சேர்மனும் ஆவார்.

காலாண்டு அடிப்படையில் வணிகம் சார்ந்த கணக்கெடுப்புகளை நடத்தி, சில வணிக புள்ளிவிவரங்களை வெளியிடுவது தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழுவின் வேலையாகும். நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட இந்திய வணிக நிறுவனங்களிடம் கேள்விகளை எழுப்பி, அதன் மூலம் பெறப்படும் பதில்களின் அடிப்படையில் வணிகம் சார்ந்த புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது.

நாட்டில் உள்ள தற்போதைய வணிக சூழல் மற்றும் குறுகிய கால வாய்ப்புகள் குறித்த மதிப்பீட்டையும் இக்குழு வழங்குகிறது. இதற்காக நாட்டில் உள்ள முக்கிய ஆறு பெரு நகரங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, காலாண்டுக்கு ஒரு முறை தகவல்கள் வெளியாகும்.

வணிக நிறுவனங்களில் காணப்படும் உறுதியான பண்புகள், வணிகம் எதிர்பார்க்கும் உள்ளீடு மற்றும் வெளியீடு செலவுகள், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிலைமை, ஊதிய நிலை, விற்பனைக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய தகவல்களும் இவற்றில் அடங்கும்.

இதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகள், முதலீட்டு காலநிலை, நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் திறன் பயன்பாடு(Capacity Utilization) ஆகியவை சார்ந்த புள்ளிவிவரங்கள் கூறப்படும். பொருளாதார கொள்கைகள் சார்ந்த அரசியல் நம்பிக்கை(Political Confidence) பற்றிய குறியீடும் இங்கு சொல்லப்படுகின்றன.

செப்டம்பர் கால வணிக நம்பிக்கை குறியீடு நேற்று(11-11-2019) தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழுவால் வெளியிடப்பட்டது. இவற்றில் நாட்டின் வணிக நம்பிக்கை குறியீடு(Business Confidence Index) கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அளவிற்கு குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் வணிக நம்பிக்கை குறியீடு 15.3 சதவீதம் குறைந்துள்ளது.

வணிக நம்பிக்கை குறியீட்டுக்கான புள்ளிகள் சொல்லப்பட்ட காலத்தில் 103 புள்ளிகளாக உள்ளது. இங்கே வணிக நம்பிக்கையாக குறிப்பிடுவது, ‘ நாட்டின் பொருளாதாரம் அடுத்த ஆறு மாதங்களில் சரியாகும், நிறுவனங்களின் நிதி நிலைமை அடுத்த ஆறு மாதங்களில் சீராகும், தற்போதைய முதலீட்டு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது மற்றும் திறன் பயன்பாடு சாதகமாக உள்ளது ‘ என்பவை வணிக நம்பிக்கையின் அம்சமாக பார்க்கப்படுகின்றன.

ஆனால் மேலே சொல்லப்பட்ட நான்கு தன்மைகளில் இந்திய நிறுவனங்களுக்கு தற்போதைய நிலையில் நம்பிக்கை குறைவாக இருப்பதையே வணிக நம்பிக்கை குறியீடு காட்டுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனியார் ரயில் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ முதல் மாத வருவாய் 3.70 கோடி ரூபாய்

தனியார் ரயில் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ முதல் மாத வருவாய் 3.70 கோடி ரூபாய்

Private Train Tejas Express earns revenue of nearly Rs. 3.70 Crore in First Month

முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்னும் சிறப்பு ரயில் கடந்த 2017ம் ஆண்டு இந்திய ரயில்வே துறையால் துவங்கப்பட்டது. பயணிகளின் பொருட்களை வைப்பதற்கான சிறப்பு வசதி, எல்.இ.டி. டிவி(LED TV), செய்தித்தாள்கள், ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் முன்னுரிமை என பல சிறப்பம்சங்களை கொண்டு இந்த ரயில் இயங்கி வந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆரம்ப கட்டத்தில் மும்பை முதல் கோவா வரை தொடங்கப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ்(Tejas Express) சேவை, பின்னர் சென்னை – மதுரை இடையே இரண்டாவது தேஜஸ் சிறப்பு ரயில் கொண்டு வரப்பட்டது. எல்.எச்.பி.(LHB Rake) என்ற சிறப்பு பேட்டி, 180 கி.மீ. வேகம், தானியங்கி கதவு, சி.சி.டிவி, புகைபிடிப்பதை கண்டறிவதற்கான அலாரங்கள், பயணிகளுக்கான அதிகபட்ச காப்பீடு என பாதுகாப்பிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த ரயில் சேவை வழங்கப்பட்டது.

நாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பிராண்டுடன் கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) நிறுவனத்தால் முதல் தனியார் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை துவங்கப்பட்டது. இந்த ரயில் சேவை லக்னோ – டெல்லி இடையே இருந்தது. இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனம் தான் ஐ.ஆர்.சி.டி.சி. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் கடந்த மாதம் இந்திய பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை வந்து ஒரு மாதத்திற்கு மேலாகி உள்ள நிலையில், இதன் நிதி சார்ந்த தகவலும் தற்போது உத்தேசமாக வெளிவந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் வாரத்திற்கு ஆறு நாட்கள் சேவை என கணக்கில் கொண்டு, மொத்தம் 21 நாட்கள் ரயில் சேவை அளிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் டிக்கெட் விற்பனை மூலம் 3.70 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாகவும், நிறுவனத்தின் செலவினம் 3 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த மாதத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை ஈட்டிய லாபம்(Net Profit) ரூ. 70 லட்சம். நாளொன்றுக்கு டிக்கெட் விற்பனை அடைந்த மதிப்பு சராசரியாக 17.50 லட்சம் ரூபாய். வரவிருக்கும் காலங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் விரிவான அறிக்கைகளை காணலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

தேவைக்கும், விருப்பத்திற்குமான வேறுபாடு – ‘நச்’ புரிதல்கள்

தேவைக்கும், விருப்பத்திற்குமான வேறுபாடு – ‘நச்’ புரிதல்கள்  

Understanding between the Needs and Wants

தேவைக்கும், விருப்பத்திற்குமான இடைவெளியை நம்மால் புரிந்து கொண்டால் மட்டுமே, நிதி சார்ந்த வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லாமல் பயணிக்க முடியும். நமது மனதில் தோன்றியவை எல்லாம் தேவையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

நாம் இன்று உயிர் வாழ தேவையான உணவு, தட்பவெப்ப நிலையை சமாளிக்க தேவையான உடை மற்றும் இருப்பிடம், சுகாதாரம் மற்றும் சுத்தமான காற்று ஆகியவையே நமது இன்றியமையாத தேவையாகும்(Regular Needs). நாம் கற்கும் கல்வி முன்னர் அத்தியாவசியமானதாக சொல்லப்படவில்லை.

இருப்பினும், நாம் மேலே சொன்ன உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அடைய இன்று கல்வி தேவைப்படுகிறது. அதற்கு குறைந்தபட்ச அறிவை பெறுதலே சிறந்தது. தற்சார்பு வாழ்க்கையை நோக்கி பயணிக்கும் தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டாலே, வாழ்வு இனிமையாக அமையும்.

தேவையை பற்றி சொல்லி விட்டோம். தேவையை நாம் எக்காரணத்திற்காகவும் தவிர்க்க இயலாது. விருப்பம் என்பது நமது மனம் கேட்க துவங்கியது, இவற்றில் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது மனம் ஆசைப்பட்ட அனைத்தையும் தேவையாக மாற்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு நான்கு சக்கர வாகனம்(Car) வேண்டுமென்றால் நீங்கள் உடனே அதனை தேவையாக எண்ணி விட கூடாது. உங்களுக்கென்று நிறைய மாற்று வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வசிக்கும் இடம் நகரமாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு அரசு பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி, ரயில் என பல வாய்ப்புகள் இருக்கலாம்.

வாகனம் வாங்குவதை, உங்களின் விருப்பமாக கொண்டு அதன் தினசரி தேவையென்ன மற்றும் அதனை வாங்குவதற்கு நீங்கள் எந்த மாதிரியான நிதித்திட்டமிடலை செய்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். என்னுடன் பணிபுரியும் சக அதிகாரி மற்றும் ஊழியர்கள், நண்பர்கள் இந்தந்த பொருட்களை வாங்கியுள்ளனர். நான் ஏன் வாங்க கூடாது என நிதி சிக்கலில் மாட்டி விட கூடாது.

விருப்பங்களும் விலையேற்றத்துக்கு காரணம்

நாம் சில வருடங்களுக்கு முன்பு, கடைக்கு செல்ல நடந்து சென்றிருப்போம் அல்லது சைக்கிளை பயன்படுத்தியிருப்போம். ஆனால், இப்போது இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம். இதுவும் நமது விருப்பத்தினால் தான். நமக்கு வயதாகி விட்டது, அதனால் நடக்க முடியாது எனில் நாம் வாங்கிய வாகனத்தை நமது குழந்தைகள் ஏன் அதனை உடனே பயன்படுத்த வேண்டும் ? அவர்களையும் சிறிது காலத்திற்கு நடக்க சொல்லி அல்லது சைக்கிளில் பயணம் செய்து கடைக்கு செல்ல அறிவுறுத்தலாமே. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளம், ஆனால் அவற்றால் நாம் உற்சாகத்தை இழந்து விடக்கூடாது.

தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இலவசமாக தண்ணீர் கிடைக்கும் போது, சுத்தமான நீர்(RO Water) வேண்டுமென ஆசைப்பட்டோம். ஆனால் இன்று தண்ணீர் கிடைத்தாலே போதும் என்ற தேவைக்காக தள்ளப்பட்டுள்ளோம்.

உங்களுடைய அனைத்து விருப்பங்களையும் பட்டியலிடுங்கள். அவற்றில் எந்தந்த விருப்பங்கள் முதன்மையாக (உண்மையில்) கருதப்படுகிறதோ, அவற்றை அடைவதற்கான நிதி திட்டமிடலை உருவாக்குங்கள். கடனாக வாங்கி சிரமப்படாதீர்கள்.

நான் எப்போதும் சொல்லும் அந்த கூற்று தான் இங்கேயும், ‘உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்தால் அதனை கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள் ? (அதற்காக அதிர்ஷ்டத்தை நம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாமே).

உங்களுக்கான வாய்ப்புகள்:

  • ஆடம்பரமாக பொருட்களை வாங்கி குவித்து மகிழ்வேன்.
  • எனது கடனை அடைத்து கொள்வேன்.
  • வீட்டிற்குள் பத்திரமாக மறைத்து வைப்பேன்.
  • பாதுகாப்பான வங்கி டெபாசிட்டில் போட்டு வைப்பேன்
  • தொழில் செய்ய பயன்படுத்தி கொள்வேன்
  • நல்ல வருமானம் தரக்கூடிய முதலீட்டை கண்டறிந்து, முதலீடு செய்வேன்.
  • இன்னும் முடிவு செய்யவில்லை / என்ன செய்வதென்று தெரியவில்லை

தேவைகளை ஓரளவு குறைத்து கொள்ளலாம். விருப்பங்களை தேர்ந்தெடுத்து, சரியான நிதி திட்டமிடல் மூலம் அதனை அடைய முயற்சிக்கலாம். தேவைக்கு மட்டும் கடன் பெறுங்கள். அவசியமற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ்

பங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ் 

Berger Paints – Paint your imagination – Fundamental Analysis 

ஜெர்மனியை சேர்ந்த லூயிஸ் ஸ்டெய்கன் பெர்கர்(Louis Steigenberger) என்பவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் பெர்கர் பெயிண்ட்ஸ். முதலில் தனது முழுப்பெயரை நிறுவன பெயராக கொண்டிருந்த நிலையில், பின்னர் அதனை லீவிஸ் பெர்கர்(Lewis Berger) என மாற்றம் செய்தார். பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. நிறுவனத்தின் தற்போதைய சேர்மனாக திரு. குல்தீப் சிங் உள்ளார்.

பெயிண்ட் துறையில் இயங்கி வரும் இந்நிறுவனம் ரஷ்யா, நேபாளம், போலந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் கிளைகளையும், 3500க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. இதன் பிரதான தொழில் பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையே ஆகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 48,000 கோடி மற்றும் புத்தக மதிப்பு 25 ரூபாய். தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக விலையில் 20 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை முதலீட்டாளர்களுக்கு 67 சதவீத வருவாயை தந்துள்ளது.

பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ஒருவர் கடந்த பத்து வருடத்திற்கு முன்பு ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு ரூ. 11.70 லட்சமாகும்(Including One Bonus & One Split). சுமார் 117 மடங்கில் இந்த பங்கின் முதலீடு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்தால், கடன்-பங்கு(Debt-Equity) விகிதம் 0.20 ஆக உள்ளது. 0.5 க்கு கீழ் இந்த விகிதம் இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் கடன் தன்மை குறைவாக உள்ளதாக எடுத்து கொள்ளலாம். இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 75 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் ஏதும் வைக்கவில்லை. விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 15 சதவீதமாகவும் இருக்கிறது. இது போல லாப வளர்ச்சி(Profit Growth) விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் 15 சதவீதமும், பத்து வருடங்களில் 20 சதவீதமாகவும் உள்ளது.

பங்கின் விலை கடந்த பத்து வருடங்களில் 38 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. பங்கின் மீதான வருவாயும் சராசரியாக 20 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது. 2008ம் ஆண்டில் 299 கோடி ரூபாயாக இருந்த நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ. 2,376 கோடியாக உள்ளது.

நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இதுவரை ஆறு முறை போனஸ் பங்குகளையும், இரு முறை பங்கின் முக மதிப்பையும்(Facevalue Split) மாற்றியுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனத்தின் இயக்க லாபம் சராசரியாக 15 சதவீத வளர்ச்சியில் உள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான நிகர லாபம் பங்குதாரர்களுக்கு நன்மை தரக்கூடியவையாக அமைந்துள்ளது.

பணப்பாய்வும்(Cash Flow) ஒவ்வொரு நிதியாண்டில் சராசரியாக வரவு வைக்கப்படுகிறது. இது போல நிறுவனம் சார்பாக முதலீடும், சொத்துக்களை வாங்குவதும் நடைபெறத்தான் செய்கிறது.

செப்டம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1599 கோடியாகவும், நிகர லாபம் 195 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,062 கோடி மற்றும் செலவினங்கள் ரூ. 5,181 கோடி. நிகர லாபமாக ரூ. 498 கோடி. இதர வருமானமாக 69 கோடி ரூபாய் உள்ளது.

சமீபத்திய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு(Corporate Tax), பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாபத்தை தக்க வைக்க உதவியுள்ளது. அதே வேளையில் விற்பனை வளர்ச்சியில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது பெர்கர் பெயிண்ட்ஸ் உச்சத்தில் இருப்பதால், விலை குறைவதற்கான வாய்ப்பு இருந்தால் இந்த பங்குகளை கவனிக்கலாம். போனஸ் பங்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு தெரிந்தாலும், அந்த நடவடிக்கைக்கு பின்னர் இந்த பங்கின் செயல்பாட்டை தேர்ந்தெடுக்கலாம்.

சந்தையில் பங்குகளை வாங்க தயாராகும் ஒருவர், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் ரிஸ்க் தன்மையை(Risk Management) அறிந்த பின்னரே, முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ஒரு சிறந்த நிதி ஆலோசகரை அணுகுவது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வீட்டுமனை துறை ஊக்குவிக்கப்படும் – நிதி அமைச்சர்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வீட்டுமனை துறை ஊக்குவிக்கப்படும் – நிதி அமைச்சர் 

Realty Sector will be prompted to improve Economy – Finance Minister

நேற்று (05-11-2019) தேசிய பங்குச்சந்தை அமைப்பு சார்பாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்(Nirmala Sitharaman) கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக வீட்டுமனை துறைக்கான ஊக்குவிப்பு ஏற்படுத்தப்படும் ‘ என்றார்.

மேலும் கூறுகையில், வீட்டு மனை துறையில் கடந்த காலங்களில் காணப்பட்ட பொருளாதார சுணக்கம் வரும் நாட்களில் சரி செய்யப்படும் எனவும், இதற்கு மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் ஒத்துழைப்பு தரப்படும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக வீட்டு மனைகள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வீடு விற்பனை மற்றும் கட்டுமான பணிகள் குறைவாக உள்ளன. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டை காட்டிலும், இரண்டாம் காலாண்டில் அடுக்குமாடி இல்லங்களின் விற்பனையும் குறைந்துள்ளது.

இது போல வீட்டு மனை(Real Estate) மற்றும் கட்டுமான துறையில் உள்ள நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படுவதும் அதிகரித்து வந்துள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும், நடப்பு வருடத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திவால் நிலை இரு மடங்காகி உள்ளது கவனிக்கத்தக்கது.

நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறையின்(Infrastructure) பங்கு மிக அவசியமானது. இதனை சார்ந்து வரும் 2022ம் ஆண்டுக்குள் கட்டுமான துறையை ஊக்குவிக்க 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவையாக உள்ளது. இதுவரை தேசிய நெடுஞ்சாலை இணைப்பில் 24 சதவீதம் நிறைவு என்ற நிலையில் தான் உள்ளது.

கட்டுமான துறையில் வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், அதற்கான முதலீடு மற்றும் நிலங்களை கையகப்படுத்தல்(Land Acquisition) ஆகியவற்றில் அரசு பின்னடைவை சந்தித்து வருகிறது. அனைவருக்கும் வீடு(Housing for All) மற்றும் ஸ்மார்ட் சிட்டி(Smart City), 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு ஆகியவை வளர்ச்சிக்கு துணைபுரியும் பட்சத்தில், மீண்டும் வீடு மற்றும் கட்டுமான துறை ஏற்றம் பெறலாம்.

தற்போதைய நிலையில், இந்த துறைக்கான முதலீட்டு தேவை அதிகமாகியுள்ளது. அது போல வங்கிகள் சார்பிலும் கடன் வழங்கும் தன்மை எளிதாக்கப்பட வேண்டும் என்பதே இந்த துறையில் உள்ள நிறுவனங்களின் எதிர்பார்ப்பு.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை  

www.varthagamadurai.com

யெஸ் வங்கியில் முதலீடு செய்த ஆர்.ஜே

யெஸ் வங்கியில் முதலீடு செய்த ஆர்.ஜே 

India’s Warren Buffet bought 1.29 Crore of Yes Bank Shares

இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் திரு. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக்(Aptech) கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் ஜுன்ஜுன்வாலா(Rakesh Jhunjhunwala).

கடந்த 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை புள்ளிவிவரங்களின் படி, நாட்டின் 54வது பணக்காரராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உள்ளார். பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய். தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்துள்ள ஜுன்ஜுன்வாலா பெரிய நிறுவனங்களிலும் முதலீட்டை பரவலாக்கி உள்ளார்.

டைட்டன்(Titan), லூபின்(Lupin), ஸ்பைஸ் ஜெட், ராலிஸ் இந்தியா, பெடரல் வங்கி, கரூர் வைசியா, டெல்டா கார்ப்(Delta Corp) என இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அமெரிக்க முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் திரு. வாரன் பப்பெட்டை போன்று ஜுன்ஜுன்வாலா முதலீட்டு உத்திகளை பயன்படுத்தி செல்வம் சேர்த்துள்ளார் என்றும், அதனால் இவர் இந்தியாவின் வாரன் பப்பெட் எனவும் சொல்லப்படுகிறார்.

வங்கி செயல்பாடுகளுக்கு தேவையான முதலீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் யெஸ் வங்கி கடந்த வாரம் 8500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று (04-11-2019) யெஸ் வங்கியின் பங்குகளை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வாங்கியுள்ளார். நேற்றைய சந்தை வர்த்தகத்தில் சுமார் 87 கோடி ரூபாய் மதிப்பிலான 1.29 கோடி யெஸ் வங்கி(YES Bank) பங்குகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் பங்குச்சந்தையில் வாங்கிய விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 67.10 எனவும், யெஸ் வங்கியின் மொத்த சந்தை மதிப்பில், ஜுன்ஜுன்வாலா வாங்கிய பங்குகளின் பங்களிப்பு 0.5 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக பங்குச்சந்தையிலும், மற்ற செயல்பாடுகளிலும் வெற்றி பெற்றவர்களை நகல் எடுப்பது இயல்பு தான். இருப்பினும் முதலீடு சார்ந்த உத்தியில் இது பெரும்பாலும் வெற்றியடையாது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்தந்த பங்குகளில் முதலீடு செய்துள்ளார். நாமும் அவ்வாறு முதலீடு செய்தால் அவரை போன்று பணக்காரர் ஆகலாம் என பங்குகளை ஆராயாமல் முதலீடு செய்ய கூடாது. அவருடைய பங்கு அணுகுமுறை மற்றும் பங்குகளை வைத்திருக்கும் காலம் மாறுபடலாம்.

உதாரணத்திற்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அடுத்த 10-20 வருடங்களுக்கு யெஸ் வங்கி பங்குகளை வைத்திருந்து காத்திருக்க தயாராகலாம். பங்கு விலை பெரும்  வீழ்ச்சியடைந்தாலோ அல்லது நிறுவனமே காணாமல் போனாலோ, அவருக்கு முதலீட்டு இழப்பை தாங்கக்கூடிய பலம் உள்ளது. ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியுமா என்பதே முதலீட்டு கேள்வி.

பொதுவாக எந்தவொரு முதலீட்டை பொறுத்தவரை, முதலீட்டு உத்திகள்(Investment Strategy) மற்றும் ரிஸ்க் தன்மை(Risk) அறிந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள், ஊடகங்களில் பங்கு பரிந்துரை வருகிறது என்பதற்காக வெறுமென நமது பணத்தை வீணடிக்க கூடாது.

நாம் வாங்கப்போகும் பங்குகளின் தொழில் என்ன, அந்த தொழில் நமக்கு எளிய வகையில் புரிகிறதா, நிறுவனத்தின் லாப-நட்ட மற்றும் இருப்பு நிலை நிதி அறிக்கைகள் என்ன சொல்கிறது, நிர்வாக திறன், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி, எதிர்காலத்தில் நிறுவனத்திற்கான வாய்ப்புகள்(SWOT analysis) போன்றவற்றை தெரிந்து வைத்திருப்பது நல்லது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

8500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் யெஸ் வங்கி

8500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் யெஸ் வங்கி 

YES Bank had received a Binding offer of Rs. 8500 Crore

தனியார் வங்கியான யெஸ் வங்கியின் சந்தை மதிப்பு தற்போது 18,000 கோடி ரூபாயாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதன் மதிப்பு ரூ. 70,000 கோடிக்கு மேலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குடும்ப பிரச்னையாக ஆரம்பித்து பின்னர் நிறுவனர்களிடையே சலசலப்பு, இயக்குனர் குழுவிலும், தலைமை பதவியிலும் முரண்பாடு என நிர்வாக குறைபாட்டால் யெஸ் வங்கியின் பங்கு கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தையில் ஆட்டம் கண்டது.

 

கடந்த வருடத்தின் இரண்டாம் அரையாண்டில் இந்த பங்கின் விலை 400 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி இருந்தது. 2017ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 10 ரூபாய் முக மதிப்பை(Face Value) கொண்டிருந்த யெஸ் வங்கி 2 ரூபாய் முக மதிப்பாக பிரிக்கப்பட்டது. அப்படியெனில், அதன் பங்கு விலை சொல்லப்பட்ட காலத்தில் 2000 ரூபாய்  பெறுமானம் என சொல்லலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

யெஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர வாராக்கடன் விகிதம் 3 சதவீதத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த வங்கியின் விற்பனை வளர்ச்சி கடந்த காலங்களில் நன்றாக இருந்தாலும், வாராக்கடன் அளவு மற்றும் போதிய நிதி இல்லாததும் வங்கியின் லாப வளர்ச்சியை பாதித்துள்ளது. 

 

நிறுவனர் ராணா கபூர் தனது பெரும்பாலான பங்குகளை விற்று விட்டார் என்றே சொல்லலாம். தற்போது தலைமையில் உள்ள திரு. ரவ்நீத் கில்லின்(Ravneet Gill) இலக்கு வங்கிக்கான முதலீட்டை பெறுவது மட்டுமே. மிக வேகமாக வளர்ந்து வரும் வங்கியாகவும், தனியார் வங்கிகளில் எச்.டி.எப்.சி. வங்கிக்கு அடுத்ததாகவும் சொல்லப்பட்ட யெஸ் வங்கி முதலீடுகளை பெற்று, சரியான நிர்வாகத்தை கொண்டு வருமா என்பதே முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு.

 

நேற்று (31-10-2019) சந்தைக்கு யெஸ் வங்கியினால் தெரிவிக்கப்பட்ட தகவல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (8500 கோடி) எனவும் கூறியுள்ளது.

 

செபியிடம்(SEBI) இதற்கான ஒப்புதலை யெஸ் வங்கி பெறும்பட்சத்தில், அதற்கான வளர்ச்சி பாதைக்கு வங்கி செல்லக்கூடும். யெஸ் வங்கியின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகள் இன்று (01-11-2019) வெளிவர உள்ள நிலையில், இந்த பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படும்.

 

யெஸ் வங்கியின் பங்கு விலை கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 120 சதவீதம் விலையேற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 63 சதவீத முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. முதலீட்டை ஈர்க்க(Global Investment) உள்ள செய்தியால், நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கின் விலை 24 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தைக்கு வரும் திட்டம் தற்போது இல்லை : எல்.ஐ.சி.

பங்குச்சந்தைக்கு வரும் திட்டம் தற்போது இல்லை : எல்.ஐ.சி.

Currently not planning to go for IPO – Life Insurance Corporation of India (LIC)

 

நாட்டில் உள்ள ஒரே பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. இந்தியா(LIC India) ஆகும். 245 சிறு மற்றும் குறு காப்பீடு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பே, 1956ம் ஆண்டு எல்.ஐ.சி. நிறுவனமாக தொடங்கப்பட்டது. 29 கோடி பாலிசிதாரர்களை கொண்டிருக்கும் இந்நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த காப்பீடு மதிப்பு ரூ. 30 லட்சம் கோடி.

 

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்யும் ஒரே நிறுவனம் எல்.ஐ.சி யாக உள்ளது. நடப்பு வருடத்தில் இதுவரை பங்குச்சந்தை முதலீடாக 33,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி50(Nifty50) குறியீட்டில் உள்ள 50 நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் 27 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 2.30 லட்சம் கோடி ரூபாய்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடனில் தத்தளித்து கொண்டிருந்த ஐ.டி.பி.ஐ.(IDBI Bank) வங்கியின் முக்கிய பங்குதாரராக இருந்த இந்த காப்பீடு நிறுவனம், வங்கியையும் கையகப்படுத்தியது. மேலும் எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி.(ITC), டாட்டா மோட்டார்ஸ், விப்ரோ, எஸ்.பி.ஐ.(SBI), மாருதி, பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா, எல் & டி(L&T) மற்றும் பல பெரு நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தை முதலீடு செய்துள்ளது.

 

இதன் அதிகபட்ச பங்களிப்பு ஐ.டி.சி. மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஒ.என்.ஜி.சி.(ONGC) நிறுவனங்களில் உள்ளது. வெகு நாட்களாக பங்குச்சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம், தற்போதைய நிலையில் இந்த செயல்பாட்டை தாமதப்படுத்தியுள்ளது.

 

மத்திய அரசும் இதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டு தான் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ரிஸ்க் எடுக்கா விட்டாலும், இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் காப்பீடாக பெற்ற பணத்தை கொண்டு சந்தையில் தனது முதலீட்டை பரவலாக்கி உள்ளது. நடப்பு ஆண்டில் எல்.ஐ.சி. பங்குச்சந்தையில் கண்ட லாபம்(Equity Profit) ரூ. 13,000 கோடி. இது கடந்த வருடம் 23,000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் பேசிய எல்.ஐ.சி. சேர்மன் திரு. குமார் அவர்கள், ‘ பங்குச்சந்தைக்கு வருவதற்கான திட்டம்(Initial Public Offer – IPO) தற்போது முடிவெடுக்கப்படவில்லை. பொருளாதார மந்த நிலையிலும், காப்பீடு தொழில் வளர்ச்சியில் தான் உள்ளது. எல்.ஐ.சி. யின் மியூச்சுவல் பண்டு தொழிலிலும் நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறது ‘ என்றார்.

 

வருங்காலத்தில் எல்.ஐ.சி. கிளைகளை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையெனவும், ஏற்கனவே இருக்கும் சிறு கிளைகளை ஐ.டி.பி.ஐ. வங்கி கிளைகளுடன் இணைக்கும் செயல்பாடு நடைபெற்று கொண்டிருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. 

 

எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு தற்போதைய கடனாக(Debt) ரூ. 2.72 லட்சம் கோடி உள்ளது. இந்த வங்கி கடந்த 10 காலாண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. மொத்த வாரக்கடனும்(Gross NPA) மிக அதிகமாக 30 சதவீதத்திற்கு அருகாமையில் உள்ளது. 

 

நிகர வாராக்கடன் 8 சதவீதம் என்ற அளவிலும், இந்த பங்கு கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு 50 சதவீத முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ?

வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ?

How to repay your Housing loan Smartly ?

 

இன்றைய காலத்தில் வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ ஒரு கனவு என்றால், அதனை வீட்டுக்கடனாக பெற்று மாத வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த 20-30 வருடங்களுக்கு தவணையாக செலுத்துவது பெரும்பாடாக உள்ளது. நீங்கள் கடனாக வாங்கிய வீடு, அதாவது வீட்டுக்கடன் மூலம் அடைந்த வீடு உங்களுக்கு 30 வருடங்களுக்கு பின்பு தான் சொந்தமாக கருதப்படும். அதுவரை அந்த வீடு ஒரு கடனாக(Liability) தான் வங்கியால் அங்கீகரிக்கப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேவைக்கு ஒரு வீடு இருப்பது நல்லது, அதே வேளையில் நன்றாக சம்பாதிக்கிறேன், வரி சேமிப்புக்காக(Tax Savings) வீட்டுக்கடன் வாங்குகிறேன் என இரண்டு, மூன்று வீடுகளை வாங்க முயன்றால் அது நமக்கு ஒரு செலவினத்தை தான் தரும். அதுவும் ஒரு நீண்டகால கடனை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம். 

 

உங்களிடம் அதிகப்படியான பணம் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, வீடுகளை வாங்கி விற்பனை செய்தல் மற்றும் வீடுகளை பெருமளவில் வாடகைக்கு விட்டு, அதிகப்படியான வருமானத்தை ஈட்டுபவராக இருந்தால் நீங்கள் இந்த பதிவை படிக்க தேவையில்லை. உங்கள் நேரத்தை தொழிலில் செலுத்தலாம்.

 

நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலானோர் நிதிச்சிக்கலில் மாட்டிக்கொள்வது வருவாயில் 50 சதவீதத்திற்கும் மேல் கடனை கொண்டிருப்பது தான். வீட்டுக்கடன்(Home Loan), தனி நபர் கடன்(Personal Loan), வாகன கடன் என கடன் பட்டியல் நீளும். இருப்பினும், கடனை நாம் சாமர்த்தியமாக அடைப்பதே நமக்கான கட்டாய இலக்காகும். 

 

உதாரணமாக ஒருவர் வீட்டுக்கடனாக(Housing Loan) ரூ. 25 லட்சத்தை பெற்றுள்ளார் என வைத்து கொள்வோம். வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 9.60 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. நமது தவணைக்காலம் 30 ஆண்டுகள். அப்படியெனில், நமது மாத தவணைத்தொகை ரூ. 21,204 (அடுத்த 30 வருடங்களுக்கு).

 

இப்போது நமது கடன் மதிப்பீட்டை பார்ப்போம். ரூ. 25 லட்சத்தை 9.60 சதவீத வட்டியில் நாம் கடனாக பெற்றுள்ள போது, 30 வருடங்களில் நமது வட்டி தொகை மட்டும் (அசலை தவிர்த்து) 51,33,440 ரூபாய். அதாவது நமது மொத்த தவணை தொகை (ரூ. 21,204 X 30 வருடங்கள் அல்லது 360 மாதங்கள்) – ரூ. 76,33,440. வீட்டுக்கடனில் நாம் கட்ட வேண்டிய வட்டி தொகை மட்டும் 67 சதவீதமாகும். 

 

இதுவே நாம் வாங்கிய வீட்டுக்கடனை அதே வட்டி விகிதத்தில், 20 வருடங்களில் கட்டி முடிக்க நினைத்தால், மாத தவணை தொகை ரூ. 23,467. செலுத்த வேண்டிய வட்டி தொகை ரூ. 31,32,080. அதாவது மொத்த தொகையில் வட்டியின் பங்களிப்பு 55 சதவீதமாகும். ஆக, தவணை காலத்தை அதிகரிக்கும் போது, நமது தவணை தொகை குறைவாக இருப்பினும், செலுத்த வேண்டிய வட்டி தொகை அதிகரிக்கும். கடனை விரைவாக செலுத்த வேண்டிய நிலையில், நமக்கான தவணை தொகை அதிகமாகி, வட்டி தொகை குறையும்.

repaying home loan

இங்கு நாம் இரு நண்பர்களை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். ராமன்(X), ரவி(Y) இருவரும் நண்பர்கள். இருவரும் ஒரே காலத்தில், தங்களுக்கான வீட்டுக்கடனை பெறுகிறார்கள். அவர்களது வீட்டுக்கடன் தொகையும், வட்டி விகிதமும் ஒன்று தான். ஆனால், தவணை காலம் மட்டும் மாறுபடுகிறது. ராமன் தனது 25 லட்சம் ரூபாய் வீட்டுக்கடனை 9.60 சதவீத வட்டியில் 20 வருடங்களில் செலுத்த உள்ளார். அதே சமயத்தில், ரவி தனக்கான தவணை காலத்தை 30 வருடங்களாக திட்டமிட்டுள்ளார்.

 

ராமனின் வீட்டுக்கடனுக்கான மாத தவணை தொகை ரூ. 23,467 மற்றும் ரவியின் தவணை தொகை ரூ. 21,204. இருவருக்கும் மத்தியில் உள்ள இடைவெளி தொகை ரூ. 2263 ( 23,467 – 21,204). அதாவது, ராமனை காட்டிலும் மாத தவணையில் ரூ. 2263 ஐ குறைவாக ரவி செலுத்துகிறார். தவணை காலத்தை கவனத்தில் கொண்டிருப்பதும் அவசியம். சொல்லப்பட்ட ரூ. 2263 இடைவெளி தொகையை ரவி ஒரு பரஸ்பர நிதி திட்டத்தில்(SIP – Equity Mutual Funds) மாத முதலீடாக செலுத்துகிறார் என கொள்வோம். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருவரும் தங்களது மாத தவணையை செலுத்தி வரும் நிலையில், 17 வருட முடிவின் போது ராமன் கட்டிய மொத்த தவணை தொகை ரூ. 47,87,222 (23,467 X 17 வருடங்கள் அல்லது 204 மாதங்கள்) ஆக இருக்கும். அதே காலத்தில் ரவி கட்டிய மொத்த தவணை தொகை ரூ. 43,25,616 (21,204 X 204 மாதங்கள்). 

 

நாம் சொன்ன ரவியின் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை 17 வருட முடிவில், 4,61,606 ரூபாயாக இருக்கும். ரவியின் 17 வருட முடிவின் தவணை தொகை மற்றும் முதலீட்டு தொகையை சேர்த்தால்(SIP Corpus), ரூ. 47,87,222 ஆக இருக்கும். ராமனுக்கு தவணை செலுத்த கூடிய காலம் இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. அதே போல ரவிக்கு அது 13 வருடங்களாகும். 

 

இந்த சமயத்தில் ரவியின் மாத முதலீடான 2263 ரூபாய், 15 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கும் பட்சத்தில் 17 வருட முடிவில் 21,27,253 ரூபாயாக இருக்கும். ராமன் அடுத்த 13 வருடங்களில் செலுத்த வேண்டிய அசல் தொகை 18,85,811 ரூபாய். இதனை தனது பரஸ்பர நிதி முதலீடு திட்டத்தில் உள்ள பணத்தை கொண்டு 17 வருட முடிவில் அடைத்தால், அவருக்கு மீதமிருக்கும் தொகை ரூ. 2.41 லட்சம். இதன் மூலம் ரவி தனது கடனையும் அடைத்து விட்டு, பரஸ்பர நிதி முதலீட்டின் மூலம் சிறிய தொகையையும் (ரூ. 2.41 லட்சம்) மீதம் பெற்றுள்ளார்.

 

மறுபுறத்தில், ராமன் அடுத்த 3 வருடங்களில் அடைக்க வேண்டிய அசல் தொகை ரூ. 7,31,514. ராமன் தனது வீட்டுக்கடனை 20 வருடங்கள் கட்டி முடிக்க வேண்டிய சூழ்நிலையில், ரவி சாமர்த்தியமாக ஒரு முதலீடு திட்டத்தின் மூலம் 17 வருடங்களில் தனது கடனை அடைத்து விட்டார். ராமனை விட ரவிக்கு கிடைத்த மொத்த சலுகையின் மதிப்பு  10.86 லட்சம் ரூபாய் ( பரஸ்பர நிதி முதலீட்டின் எஞ்சிய தொகை மற்றும் அடுத்த 3 வருடங்களில் செலுத்த வேண்டிய தவணை தொகை).

 

ராமனும், ரவியை போன்று சாமர்த்தியமாக செயல்பட வேண்டுமென்றால் கூடுதலாக ஒரு முதலீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் வீட்டுக்கடனுக்கான வட்டி(Bank Interest Rate) விகிதம் குறைவாக இருப்பதும், முதலீட்டின் மூலம் பெறக்கூடிய வருவாய் (SIP Returns) அதிகமாக அமைவதும் தான் வாய்ப்பாக கருதப்படும். முதலீடு செய்யும் ஒருவர் பணவீக்கத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதி திட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் 15 சதவீத வருவாயை ஏற்படுத்த முடியாது. நீண்ட காலத்தில் ஒருவர் முதலீடு செய்யும் பட்சத்தில், நல்ல வட்டி வருவாயை ஈட்டலாம். வீட்டுக்கடனை அடைக்கும் போது, முதலீடு செய்கிறேன் என ஒருவர் வட்டி குறைவான முதலீட்டு சாதனத்தை எடுத்து கொண்டு சாமர்த்தியமாக செயல்பட முடியாது. 

 

நாம் பெறக்கூடிய முதலீட்டின் மீதான வருவாய்(Return on Investment), வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகமாக இருந்தால் மட்டுமே இந்த திட்ட முறை செயல்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு ஒருவர் தனது கடனை அடைப்பதில் திட்டமிடலாம்.

(கணக்கீடு தரவுகள்: எச்.டி.எப்.சி.(HDFC MF) மியூச்சுவல் பண்டு பயன்பாடு)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

  

Financial Blog in Tamil