சன் பார்மா மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 400 கோடி

சன் பார்மா மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 400 கோடி

Sun Pharma’s Net profit falls 37 Percent to Rs. 400 Crore – Q4FY20

நாட்டின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா(Sun Pharmaceutical) மருந்து உற்பத்தி, விற்பனை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 1983ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் 2014ம் வருடம் ரான்பாக்ஸி மருந்து தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் மூலம் உலகின் ஐந்தாவது பெரிய நிறுவனமாக வலம் வந்தது.

சன் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,10,160 கோடி. நிறுவனத்தின் புத்தக மதிப்பு 173 ரூபாயாக உள்ளது. கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.25 என்ற அளவிலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 14 மடங்கிலும் இருக்கிறது. நிறுவனர்களின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 14 சதவீத பங்குகள் அடமானமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

தற்போதைய பங்கின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் மூன்று மடங்காக உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 8,185 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 6,822 கோடியாகவும் இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 577 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 400 கோடியாகவும் உள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய லாபம் 37 சதவீதம் குறைந்துள்ளது. மார்ச் 2019 காலாண்டில்(quarterly results) நிறுவனத்தின் வருவாய் ரூ. 7,164 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 636 கோடி. ஒரு முறை வழக்கு செலவாக(Litigation cost) ஒதுக்கிய தொகை காரணமாக லாபம் குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 30 சதவீதமும், லாப வளர்ச்சி 102 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதே வேளையில், பங்கு மீதான வருவாய்(ROE) எதிர்மறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்புநிலை அறிக்கையில் கையிருப்பு தொகை ரூ. 23,353 கோடியாக சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்கான பணவரத்து அறிக்கை(Cash Flow) சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடந்த நான்கு நிதியாண்டுகளாக பணவரத்து எதிர்மறையாக தான் உள்ளது. அதே வேளையில் நிலையான சொத்துக்களின் மதிப்பு குறிப்பிடும் அளவில் உள்ளது. கடனாளர் நாட்கள்(Debtor Days) அதிகரித்து வருவது நிறுவனத்திற்கு பாதகமாக அமையும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

Don’t invest without doing these Five Commitments – Financial Planning

‘ நீங்கள் பங்குச்சந்தையில் நித்தமும் பணம் சம்பாதிக்கலாம், வாருங்கள் ‘ 

‘ பங்குச்சந்தையின் மூலம் ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக மாறலாம் ‘

‘ எங்களிடம் முதலீடு செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு மாதாமாதம் வட்டி தருகிறோம்,உங்கள் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது ‘

‘ பங்குச்சந்தையில் பகுதி நேரமாக வர்த்தகம் செய்து சம்பாதியுங்கள் ‘

‘ பிட்காயின் முதலீடு, உங்களை கோடீஸ்வரராக்கும் பொன்னான முதலீடு ‘

  • இவ்வாறான வாசகங்கள் உங்களுக்கு பூரிப்பை ஏற்படுத்துகிறதா, இல்லையெனில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறதா ?

நான் எப்போதும் சொல்வது தான், பொருளாதார உலகில் கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதற்கும், செல்வ வளத்தை குவிப்பதற்கும் ஒரு குறுக்கு வழி கிடைக்கப்பெற்றால், அதனை முதலில் அடைய போவது நீங்கள் அல்ல. இவ்வுலகின் முதல் 100 பணக்காரர்கள் தான். ஒரு லட்ச ரூபாய் முதலீட்டை கொண்டு சில மாதங்களில் கோடிகளை அள்ளலாம் என்றால் ஏன் அமேசான் நிறுவனரும், அம்பானியும் தொழில் செய்ய வேண்டும் ? ஏன் பல கிளைகளையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் ?  பல தலைமுறை கோடீஸ்வரர்களுக்கும் இங்கே குறுக்கு வழி கண்டுபிடிக்கப்படவில்லை.

மாறாக முதலீடு செய்யும் காலமும், முதலீட்டு சாதனமும் தான் அவர்களை அந்த நிலையில் வைத்துள்ளது. ஒரு முதலீட்டு சாதனத்தை பற்றிய முறையான கல்வி வேண்டும், இல்லையெனில் கற்றவரை நாம் வேலைக்கு வைத்திருக்க வேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் மட்டுமே, எந்தவொரு பண முதலீடும் உங்களுக்காக உழைக்கும்.

பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள், பிட் காயின் சார்ந்த புத்தகங்கள் சந்தையில் ஏராளம். ஆனால், எந்த புத்தகத்திலும் உங்களுக்கு குறுக்கு வழியை பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை. மாறாக அடிப்படை கற்றலை தான் உங்களுக்கு அந்த புத்தகத்தின்  ஆசிரியர் சொல்ல வருகிறார். பணம் சம்பாதிக்க, அந்த அடிப்படை கற்றலை கொண்டு நீங்கள் தான் சிந்திக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் மற்றும் செல்வத்தை ஏற்படுத்த காத்திருக்க வேண்டும்.

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் ஐந்து:

  • ஆயுள் காப்பீடு (Term Insurance)
  • மருத்துவ காப்பீடு
  • அவசர கால நிதி திட்டமிடல்
  • கடன்களை குறைத்தல்
  • ஓய்வுக்கால நிதி திட்டமிடல்

மேலே சொன்னவற்றை நீங்கள் செய்து விட்டு தான், உங்கள் முதலீட்டை தொடங்க வேண்டும். ஐந்து முன்னெடுப்புகளும் உங்களை பாதுகாக்கும் நிதி காப்பு ஆகும். உங்களுடைய நிதி ஆலோசகர் இதனை பற்றி உங்களிடம் சொல்லவில்லை என்றால் அவர் உங்கள் நிதி நலனில் அக்கறை கொள்பவரா என்பது சந்தேகமே. நிதி ஆலோசகர்(Personal Financial Advisor) என்பவர் பங்கு தரகர் அல்ல. இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவரும் முழுமையான நிதி ஆலோசகர் அல்ல. உங்களிடம் பரஸ்பர நிதிகளை மட்டும் விற்கும் விநியோகஸ்தரா, அவரும் நிதி ஆலோசகர் என்ற முழு நிலைக்கு வர மாட்டார்.

நிதி ஆலோசகர் என்பவர் உங்களது குடும்ப மருத்துவர் போன்று. மேலே சொன்ன ஐந்தையும் உங்களுக்காக அவர் திட்டமிட வேண்டும். உங்கள் குடும்ப நிதி நிலைமைகளை சரியாக புரிந்து கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பவராக இருக்க வேண்டும். முடிந்தால், உங்கள் குடும்ப உறவுகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை நபர்களுக்கும் நிதி திட்டமிடலை செய்பவராக இருக்க வேண்டும். உயில், நாமினியை நியமிப்பது, உங்களுக்கான சொத்துக்களை வாரிசு தாரர்களுக்கு பகிர்ந்தளிப்பது போன்றவற்றிலும் அவருடைய உண்மையான அக்கறை இருக்க வேண்டும்.

ஆம், அவர் உங்களிடம் ஒரு கணிசமான கட்டணத்தை பெறுபவராக இருக்க வேண்டும். இலவசமாக அவர் செய்திட முடியாது. ஒருவர் உங்களிடம் நிதி சார்ந்த ஒரு பொருளை அல்லது சேவையை விற்கும் போது இலவசமாக (பொருளுக்கான விலை தவிர்த்து) விற்பவராக இருந்தால், அவர் உங்களிடம் தவறான பொருளை அல்லது உங்களுக்கு தேவையில்லாத ஒரு சேவையை விற்று விட்டு செல்கிறார் என அர்த்தம். இது தான் காப்பீடுகளில் பெரும்பாலும் நடைபெறுகிறது. நீங்கள் தவறான சேவையை தேர்ந்தெடுத்து, அதற்காக ஒரு ஏஜென்ட் கமிஷன் பெறுவதற்கு பதிலாக, அவரிடம் சேவை சார்ந்த ஆலோசனை கேளுங்கள். வெளிப்படைத்தன்மையை அறியுங்கள். பின்பு நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்கு அவருக்கு ஒரு கட்டணத்தையும் அளியுங்கள்.

நீண்ட காலத்திற்கான நிதி ஆலோசகரை கொண்டிருங்கள். அவரது ஆலோசனைகள் உங்களுக்கு புரியவில்லை என்றால், பலமுறை கேட்பதற்கு தயங்காதீர்கள். ஆலோசனை பலனளிக்கவில்லை என்றால், வேறு ஒரு ஆலோசகரை பெறுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதே வேளையில் அடிக்கடி குடும்ப நிதி ஆலோசகரை மாற்றுவதும் ஆரோக்கியமாக இருக்காது.

உங்கள் குடும்ப நிதி நிலையை பாதுகாக்க டேர்ம் பாலிசி(Term Plan) மற்றும் மருத்துவ காப்பீடு(Health Insurance) பெறுவது அவசியம். இன்றைய காலத்தில் எதிர்பாராது நிகழும் பாதிப்புகளால் தான் நமது சேமிப்பு குறைகிறது. சில சமயங்களில் அது நம்மை கடனாளியாக்கி விடும். அதனால் நமது வருவாய்க்கு தகுந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு மேலே சொன்ன காப்பீடுகளை பெற வேண்டும்.

அவசர கால நிதியை(Emergency Fund) திட்டமிடுவது உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பஞ்ச காலங்களில் நமது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக கோயில் கோபுரங்களில் கலசங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். கலசத்தில் சில உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அதனை போல தான் நமது அவசர கால நிதியும் இருக்க வேண்டும்.

கடனை அதிகமாக வைத்து கொண்டு, பங்குச்சந்தையில் சம்பாதித்து கடனை அடைத்து விடுவேன் என ஆர்வமாக செயல்பட கூடாது. பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க் கொண்ட, அதே வேளையில் செல்வ வளத்தை ஏற்படுத்தும் ஒரு முதலீட்டு சாதனமாகும். கடன் வாங்கி பங்குகளை வாங்குவது, கடனை குறைக்க பங்குகளில் முதலீடு செய்வதால் நமக்கு சுமையே அதிகம்.

‘ உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு கல்வியை விட, உங்களது ஓய்வுக்காலம் மிக முக்கியம் ‘ என நிதி திட்டமிடலில் சொல்வது உண்டு. குழந்தைகளுக்கான வாழும் காலமும், அவர்கள் கற்க வேண்டிய கல்வியும் எப்போதும் இங்கு உள்ளது. ஆனால் உங்கள் ஓய்வுக்காலத்திற்கு அவர்களை நம்பி நீங்கள் இருத்தல் சரி வராது. அந்த ரிஸ்க்கை தான் நம்மில் பெரும்பாலோர் எடுத்து வருகின்றனர். உங்களது ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பை(Retirement Savings) நீங்கள் தான் உருவாக்க வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு கைமாறாக அவர்கள் உங்களை பார்க்க வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுத்தாதீர்கள்.

உங்களுக்கான நிதி இலக்கை நீங்கள் தான் திட்டமிட வேண்டும். வயதான காலத்தில் அவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது உறவுகளாக(அன்பு) மட்டுமே இருக்க வேண்டும், நிதி அல்ல. உங்கள் குழந்தைகளுக்கான இலக்கு அடுத்த தலைமுறையில் தான் உள்ளது, நீங்கள் மட்டுமே அல்ல.

மேலே சொன்ன ஐந்து முன்னெடுப்புகளை திறம்பட செய்து விட்டு, பின்னர் பங்குச்சந்தைக்கு வாருங்கள்… உங்களுக்காக காத்திருக்கிறது செல்வ வளம்.

குறிப்பு:

என்னிடம், எனது ஆண்டு வருவாயினை போல 50-80 மடங்கு பணம் ரொக்கமாக உள்ளது என சொல்பவரா நீங்கள் ? உங்களுக்கு இந்த ஐந்து வேலைகளும் தேவையில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamdurai.com

தைரோகேர் நிறுவன காலாண்டு முடிவுகள் – ரூ. 18 கோடி நிகர நஷ்டம்

தைரோகேர் நிறுவன காலாண்டு முடிவுகள் – ரூ. 18 கோடி நிகர நஷ்டம் 

Rs. 18 Crore Net loss of Q4FY20 – Thyrocare Quarterly results

இன்று உலக தைராய்டு தினம் – மே 25. சுகாதார பிரிவில் இயங்கும் நிறுவனம் தைரோகேர் டெக்னாலஜிஸ்(Thyrocare Technologies) நிறுவனம். 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆய்வகங்களை மேற்கொண்டு வருகிறது. இந்திய தைராய்டு பரிசோதனையில் முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிறுவனமாக தைரோகேர் விளங்குகிறது.

இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,800 கோடி. புத்தக மதிப்பு 75 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.03 என்ற அளவிலும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 66 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

வட்டி பாதுகாப்பு விகிதம் 120 மடங்கில் உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 15 சதவீதமாகவும் உள்ளது. பங்கு முதலீடு மீதான வருமானம்(ROE) கடந்த 5 வருடங்களில் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 94 கோடி ரூபாயாகவும், செலவினம் 64 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்(Covid-19) தாக்குதலால், துணை நிறுவனமான நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட்டில் முதலீடுகளை குறைப்பதற்கான ஏற்பாடாக, 44.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை தைரோகேர் நிறுவனத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக நிறுவனத்திற்கு நான்காம் காலாண்டில் 18 கோடி ரூபாய் நிகர நஷ்டமாக காட்டப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட ரூ. 44.33 கோடி ஒரு குறைபாட்டு கட்டணமாக(Exceptional charge) நிறுவனத்தின் நிதி அறிக்கையில் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் வருவாய் 400 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 79.45 கோடியாகவும் இருந்துள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 370 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 95 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. இருப்புநிலை கையிருப்பு ரூ. 344 கோடி. ஹெல்த் கேர் பிரிவில் இருக்கும் இந்நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 500 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. 10-20 சதவீதம் வீழ்ச்சியடையும் போது, இந்த பங்கின் உண்மையான விலைக்கு அருகில் வர்த்தகமாக கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள்

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள் 

The next Four Big challenges await for the Global Market 

2020ம் ஆண்டு உலக சந்தையின் மற்றொரு பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது கோவிட்-19. வரலாற்றில் Great Depression, Great Recession என்ற நிலையை தாண்டி இப்போது Great Shutdown (Lockdown) என்ற நிலைக்கு வந்துள்ளது உலக நாடுகள்.

பொதுவாக பொருளாதார வீழ்ச்சிக்கான(Recession) காலங்கள் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கலாம். நடப்பில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தான் ஊரடங்கு காலம் அதிகமாக இருந்துள்ளது. இதன் தாக்கம் வரும் காலாண்டுகளின் பொருளாதார எண்களில் தெரிய வரும்.

கடந்த 2007ம் ஆண்டு நிகழ்ந்த சப் பிரைம் அடமான நெருக்கடியால் உலக சந்தை ஆட்டம் கண்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மீண்டு வருவதற்கு 18 மாதங்கள் எடுத்து கொண்டன. 2001ம் ஆண்டு ஏற்பட்ட டாட் காம் குமிழி(Dotcom Bubble) பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமெரிக்க சந்தை 75 சதவீதம் வீழ்ச்சியை கண்டது. சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை எடுத்து கொண்ட காலம் வெறும் 8 மாதங்களே.

1929ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை சுமார் நான்கு ஆண்டுகள்  இருந்தது. 1929 முதல் 1933 வரை இருந்த இந்த மந்தநிலை, பொருளாதார உலகில் மிகப்பெரிய சரிவாக(Great Depression) சொல்லப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு தயாரான நிலையில், இந்த பொருளாதார மந்தநிலை மீண்டு வர காரணமாக இருந்தது என பொருளாதார வல்லுனர்களும் அக்காலத்தில் கூறியிருந்தனர்.

நடப்பில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை எப்போது சரியாகும் என்பதற்கான அறிகுறி தற்போதைய நிலையில் கிடைக்க  பெறவில்லை. இருப்பினும் அடுத்த இரு வருடங்கள் இந்த நிலை நீடிக்கலாம் எனவும், அதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் பொருளாதார வல்லுநர்களால் சொல்லப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மெல்ல மெல்ல தளர்வின் மூலம் விடுவிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் பெரிய வீழ்ச்சி கண்ட உலக பங்குச்சந்தை குறியீடுகள் ஏப்ரல் மாதத்தில் நல்ல ஒரு ஏற்றத்தை சந்தித்தன. இருப்பினும் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் தவிர மற்ற நாடுகளில் உள்ள சந்தைகள் பெரியளவில் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

நடப்பு மாதத்தின் இறுதியில் நாட்டின் ஜனவரி – மார்ச் காலத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சியை அறிவிக்க உள்ளது ரிசர்வ் வங்கி. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும் நாட்களில் பெரும்பாலானவை வெளிவர உள்ளது. இதன் காரணமாக சந்தை போக்கு மாறலாம்.

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த சவாலாக சில முக்கிய காரணிகள் நடப்பு 2020ம் ஆண்டில் உள்ளது. ஊரடங்குக்கு பிறகான தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின் நிலைமை முக்கியத்துவம் பெறுகிறது. இதனை ஒட்டியே வரக்கூடிய காலாண்டுகளில் பொருளாதார மாற்றம் நிகழும்.

இரண்டாவதாக ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த அமெரிக்க – சீன வர்த்தக போர் எவ்வாறு சூடுபிடிக்க உள்ளது என்பதனையும் உலக சந்தைகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனங்களின் நிலை என்ன என்பதும் அவசியமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சம்மந்தமாக அமெரிக்கா மற்ற நாடுகளை கூட்டு சேர்த்துள்ளது. இது சீனாவுக்கு எதிராக செயல்படும் நிலையில், உலகின் முக்கிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, அதனை எப்படி கையாள போகிறது என்பதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதுவரை தொற்றுநோய் என்றாலே மூன்று நிலைகளுக்கு மேல் இருந்ததாக வரலாற்று தகவல்கள் சொல்கின்றன. ஆனால் சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற தொற்றுகளில் அவ்வாறான பாதிப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை. ஒரு வேளை கோவிட்-19 மனிதர்களின் உடலுக்குள் மாற்றமடைந்து(Mutation) விட்டால், அது இரண்டாவது அலைக்கு வித்திடலாம். இன்றைய அறிவியல் வளர்ச்சி, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பதும் சவாலான விஷயம் தான்.

வைரஸ்களின் வரலாற்றில் இதுவரை பெரும்பான்மையான மற்றும் முக்கிய தொற்றுநோய்களுக்கு மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது ஆராய்ச்சியில் உள்ளது எனலாம். தொற்றுநோய்களின் தன்மை தானாக வந்து, மறைவதாக தான் உள்ளது. இரண்டாம் அலை வந்தால், ஊரடங்கை அமல்படுத்த போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. இது திட்டமிட்டபடி நடக்குமா, நடக்கும் பட்சத்தில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியை பிடித்தால், அமெரிக்காவின் புதிய கொள்கைகள் எப்படி இருக்கும் என்பதனையும் சந்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஆக, 2020ம் ஆண்டு பங்குச்சந்தைக்கு பண்டிகை காலமாக மாறியுள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. உலக பங்குச்சந்தை பல வீழ்ச்சிகளையும், பிரமாண்டமான ஏற்றங்களையும் பார்த்த வரலாறு உண்டு.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி 

Repo rate cut 40 basis points to 4 Percent – RBI

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான இன்று பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் கூறிய அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) 40 புள்ளிகள் குறைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. முன்னர் 4.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இப்போது 4 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

இது போல ரிவர்ஸ் ரெப்போ விகிதமும்(Reverse Repo) 3.75 சதவீதத்திலிருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதமும்(Bank Rate) 4.65 சதவீதத்திலிருந்து 4.25 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி விகிதத்தை குறைப்பது சம்மந்தமாக இம்முறை நிதி கொள்கை குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களும் குறைக்க வேண்டுமென தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மார்ச் 2020 முதல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான தொழில்கள்  சுணக்கம் அடைந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. பணவீக்க விகிதத்தை அறிய முறையான தகவல்களை தற்போது சேகரிக்க முடியவில்லை எனவும், வரும் மாதங்களில் பணவீக்க விகிதங்களில் எதிர்பாராத மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மத்திய வங்கியின் இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற அளவை ஒட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கக்கூடும். ஜனவரி – மார்ச் காலாண்டில் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் சீனாவின் வளர்ச்சி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளில் தங்கள் முதலீட்டை பரவலாக்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள் ஓரளவு ஏற்றம் பெற்றிருந்தாலும், நடப்பாண்டில் முதல் இரு காலாண்டுகளில் வளர்ச்சி எதுவும் பெரும்பாலும் இருக்காது என சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக(Negative GDP) இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், எந்த மதிப்பை கொண்டிருக்கும் என சொல்லப்படவில்லை.

வங்கிகளில் கடன் பெறுபவர்களை ஊக்குவிக்கவும், நிதி சந்தைகளை வலுப்படுத்தவும் வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வட்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு இது சாதகமாக இருக்கும். அதே வேளையில், இது வங்கிகளின் வருவாய்க்கு நன்மையாக அமையாது. கடனுக்கான மாத தவணையை செலுத்துவதில் மீண்டும் மூன்று மாத கால அவகாசம்(Moratorium) வழங்கப்பட்டுள்ளது.

இது அடுத்த மாதம் ஜூன் முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலத்திற்கு பொருந்தும். இருப்பினும், இது வட்டிக்கு வட்டி என்ற விகிதத்தின் அடிப்படையிலும், மூன்று மாதங்களுக்கான தவணையை அதிக தொகையுடன் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். வங்கி வட்டி தள்ளுபடி அல்லது கடன்களை மறுசீராய்வு செய்வதால் மட்டுமே அது வங்கிகளுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் பலன் அளிக்கும்.

இன்று வங்கி துறையில் உள்ள பங்குகள் அதிக சரிவையும், நிப்டி வங்கி குறியீடு 2.57 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சி கண்டது. நடப்பில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் பணப்புழக்கம் சார்ந்த நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.

வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் சூழ்நிலையில், முதலீட்டாளர்களின் பார்வையில் கடன் பத்திரங்கள்(Bonds) மீதான ஆர்வம் ஏற்படும். வட்டி விகிதம் குறையும் போது, கடன் பண்டுகளின் வருவாய் அதிகரிக்கும். எனவே இது போன்ற நிலையில், முதலீடு செய்வோர் சற்று ரிஸ்க் குறைந்த கடன் பத்திர பரஸ்பர நிதிகளில்(Debt Mutual Funds) முதலீடு செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன – 2020 ?

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன – 2020 ?

India’s GDP share in the Global Economy – 2020

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) என சொல்லப்படும் பொருளாதார குறியீட்டில் வரும் 2024ம் ஆண்டு ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு கடந்த ஆண்டு நிர்ணயித்திருந்தது. இதனை அடைவதற்கான சில திட்டங்களும், அதனை சார்ந்த இலக்கு வரைபடங்களும் சொல்லப்பட்டது.

2019ம் ஆண்டில் சர்வேதச நாணய நிதியம்(IMF) வெளியிட்ட பொருளாதார பார்வையின் படி, நாட்டின் பொருளாதாரம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்பட்டுள்ளது. தற்போது உலக பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. அந்நாட்டின் பொருளாதாரம் சுமார் 22 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவின் மதிப்பு 14 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். மூன்றாம் இடத்தில் ஜப்பானும், நான்காம் இடத்தில் ஜெர்மனியும் உள்ளது.

நம் நாடு உலக பொருளாதாரத்தில் ஐந்தாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியத்துவமானது. வாங்கும் திறன் சமநிலை(Purchasing Power Parity) அடிப்படையில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது.

நுகர்வு தன்மையை அதிகமாக கொண்டிருக்கும் நம் நாட்டில் விவசாயம் மற்றும் உற்பத்தி துறையை காட்டிலும், சேவை துறையின் பங்கு அதிகமாக உள்ளது. இன்றைய தேதியில் நம் நாட்டின் வளர்ச்சிக்கு சேவை துறையின் மூலம் 60 சதவீத பங்களிப்பும், 28 சதவீத வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருவாய் எனும் போது, குறைவாக தான் காணப்படுகிறது.

நம் நாட்டில் விவசாயத்தின் பங்கு குறைந்திருந்தாலும், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது, கணிசமாக விவசாய உற்பத்தி மற்றும் சேவை இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக துணைபுரிவது உள்நாட்டில் காணப்படும் நுகர்வு சந்தை, அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைப்பாடு, அதிகப்படியான சேமிப்பு ஆகியவை. இருப்பினும் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை.

பெட்ரோலிய பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கற்கள், மின் இயந்திரங்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவை நமது நாட்டின் முக்கிய ஏற்றுமதியாக உள்ளது. இறக்குமதியில் கச்சா எண்ணெய், தங்கம், முத்துக்கள், பெட்ரோலிய பொருட்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மின்னணு பாகங்கள், எண்ணெய், மெழுகு, பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ இயந்திரங்கள் ஆகியவை உள்ளன.

நாம் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ஐக்கிய அரபு நாடும் உள்ளது. நம் நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களை வாங்கும் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு மற்றும் சீனா முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனாவுடனான வர்த்தகத்தில் நமக்கு வர்த்தக பற்றாக்குறை இருந்து வருகிறது. அதே வேளையில் 2018-19ம் நிதியாண்டில் அமெரிக்காவுடன் நமது வர்த்தகத்தில் உபரியாக உள்ளது.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 23.6 சதவீதமாக உள்ளது. சீனாவின் பங்களிப்பு 15.50 சதவீதமும், ஜப்பான் 5.7 சதவீதமும், ஜெர்மனி 4.6 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. இந்தியா உலகளவில் உள்ள மொத்த பொருளாதார உற்பத்தியில் 2.31 சதவீத பங்களிப்புடன் உள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சியில் முதல் 20 இடங்களில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மொத்த பங்களிப்பு மட்டும் 78.8 சதவீதமாகும். மீதமுள்ள வெறும் 21.2 சதவீதத்தை 173 நாடுகள் பகிர்ந்துள்ளன.

வேகமாக வளரும் நாடுகளை தவிர்த்து, ஏனைய நாடுகளில் அத்தியாவசிய தேவை கூட பூர்த்தி செய்ய முடியாமல், உலக பொருளாதாரம் திணறி கொண்டிருக்கிறது. பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்களுக்கு அருகில் உள்ள சிறு மற்றும் குறு நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நடந்த வண்ணம் தான் உள்ளது. பெரும்பாலும் வளரும் நாடுகளின் எல்லை பதற்றத்துடன் தான் காணப்படுகிறது.

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் மூலதன சந்தையை(Capital Market) நோக்கி தான் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததும் இது போன்ற நாடுகளில் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. நாட்டின் நுகர்வு தன்மைக்கு ஏற்ப அதன் கடன் தன்மையும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் அன்னிய முதலீடு மற்றும் மத்திய வங்கியின் பண அச்சடிப்பு நடவடிக்கைகளில் தான் பொருளாதாரத்தை ஊக்குவிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

நடப்பில் காணப்படும் உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்-19 பெரும்பாலும் மேலை நாடுகளை தான் அதிகமாக பாதித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு முதலீடாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் துணைபுரிகிறது. உலகளவில் வேகமாக வளரும் நாடுகளில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி எண்கள் எதிர்மறையாக தான் உள்ளது.

வியட்நாம் மட்டும் ஜனவரி-மார்ச் காலாண்டில் நேர்மறையான வளர்ச்சியை கொண்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் வியட்நாம், இந்தோனேஷியா, தென் கொரியா, ஹாங்காங், சீனா மற்றும் இந்தியாவின் பங்கு முக்கியத்துவமானது.

இருப்பினும், நடப்பில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சி அடுத்த சில காலாண்டுகள் தொடரும் நிலையில், வேகமாக வளரும் நாடுகளில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதான செயல்பாடு அல்ல. பொருளாதார ஊக்குவிப்பு சார்ந்த அறிவிப்புகள் பல நாடுகளில் சொல்லப்பட்டிருந்தாலும், உண்மையில் நுகர்வு தேவையை ஏற்படுத்தினால் மட்டுமே அது வளர்ச்சிக்கு துணைபுரியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவதற்கான படிநிலைகள்

சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவதற்கான படிநிலைகள்

Quick Steps to create a better Investment Portfolio

எந்தவொரு முதலீட்டு சாதனத்திலும் பணத்தை முதலீடு செய்யும் முன்னர், சொல்லக்கூடிய நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை தான் ஒரு முதலீட்டு வாய்ப்பின் சாராம்சங்களை தெளிவாக்கும்.

  • தேவைகள் மற்றும் விருப்பங்கள்
  • நிதி இலக்குகள்
  • முதலீட்டு காலம்
  • எதிர்பார்க்கும் வருமானம் அல்லது வட்டி விகிதம்

வெறுமென வங்கி டெபாசிட்டில் பணத்தை போடுவதோ அல்லது பங்குச்சந்தையில் ஆழம் தெரியாமல் காலை விடுவதோ – இரண்டும் ஒரு முதலீட்டாளரின் முதலீட்டு நலனை பாதுகாக்காது. மேலே சொன்ன நான்கு அடிப்படை விஷயங்களை சிந்தித்து விட்டு, பிறகு முதலீட்டு சாதனத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக ராமு என்பவருக்கு ஐந்து வருடத்திற்கு பிறகு ஒரு வீடு வாங்க வேண்டுமென்ற நிதி இலக்கு இருந்தால், இவற்றில் அவருடைய தேவை அல்லது விருப்பமாக புதிய வீடு வாங்குவதை சொல்லலாம். ‘வீடு வாங்குதல்’ என்பது அவரின் நிதி இலக்குக்கான வாசகமாகும். ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் அவர் வாங்க வேண்டுமெனும் போது, 5 வருடங்கள் ஒரு முதலீட்டு காலமாக எடுத்து கொள்ளப்படும். மாதாமாதம் அவர் எவ்வளவு தொகையை, எந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், அவருக்கான இலக்கை அடைய முடியும். இல்லையெனில், ஒரு முறை மட்டுமே அவர் முதலீடு செய்யும் பட்சத்தில், அவரது வீட்டின் மதிப்பை பெற, எதிர்பார்க்கும் வருவாய் எவ்வளவு என்பதனை ஆராய வேண்டும்.

முதலீட்டிற்கான காலம் குறைவாக இருக்கும் நிலையில், ஒன்று அவர் தனது மாத முதலீட்டை அதிகரித்து முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ரிஸ்க் தன்மையுடன் கூடிய அதிக வட்டி வருவாய் முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதே வேளையில், முதிர்வு காலத்தில் அவரது முதலீட்டிற்கே மோசம் வந்துவிட கூடாது.

இதனை சார்ந்து தான் நமது முதலீட்டு சாதனம்(Investment Avenue) இருக்க வேண்டும். பொதுவாக குறுகிய கால இலக்குகளுக்கு ரிஸ்க் குறைவான முதலீட்டு சாதனத்தில் முதலீடு செய்ய வேண்டும். காலங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் ரிஸ்க் அதிகம் எடுத்தாலும், நீண்ட காலத்தில் முதலீட்டின் மீது நல்ல வருவாயை பெறலாம்.

நல்ல முதலீட்டு போர்ட்போலியோ(Investment Portfolio) தயார் செய்ய 6 படிநிலைகள்:

  • நிதி இலக்குகள்(Financial Goals) இருப்பது அவசியம்
  • நிதி இலக்குகளுக்கு தகுந்தாற் போல், முதலீட்டு சாதனத்தை(Investment Product or avenue) தேர்வு செய்ய வேண்டும்
  • முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்த வேண்டும்
  • ஒவ்வொரு கால இடைவெளியில், செய்த முதலீட்டு சாதனத்தை மறுஆய்வு(Periodic Review) செய்வது அவசியமாகும்
  • தேவைப்பட்டால், ஏற்கனவே செய்த முதலீட்டு சாதனத்தில் மாற்றத்தை(Make Changes on Existing investments) ஏற்படுத்தலாம். அதே வேளையில், உங்களது இலக்குகளை அடைவது முக்கியம்.
  • முதிர்வு காலத்தின் போது அல்லது முன்னரே இலக்குக்கான தொகையை (Exit on or before Maturity) பரிமாற்றம் செய்தல்.

முதல் படிநிலையில் நாம் ஏற்கனவே சொன்னது போல நிதி இலக்கிற்கான பெயர், அடைய வேண்டிய காலம் மற்றும் எதிர்பார்க்கும் வட்டி(Expected returns %) ஆகியவை முக்கியம். இரண்டாவது படிநிலையில், நாம் எதிர்பார்க்கும் வட்டி வருவாய்க்கு தகுந்தாற் போல, முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். ஐந்து வருட கால இலக்கு மற்றும் எதிர்பார்க்கும் வட்டி வருவாய் ஆண்டுக்கு 8 சதவீதம் எனில், பங்குச்சந்தை நமக்கு தேவையா… இல்லையெனில் வங்கி டெபாசிட் அல்லது குறைந்த ரிஸ்க் தன்மை கொண்ட கடன் பத்திர பண்டுகள்(Debt Mutual Funds) போதுமா என்பதனை அலசி முடிவெடுக்க வேண்டும்.

நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது, ஒரே முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுக்க கூடாது. முதலீட்டு பரவலாக்கம்(Asset Allocation) அவசியம். நீங்கள் மாதாமாதம் 10,000 ரூபாயை எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய உள்ளீர்கள் என்றால், பங்குகள் கொஞ்சம், கடன் பத்திரங்கள் கொஞ்சம், தங்கம் சிறிதளவு மற்றும் இதர முதலீடுகள் என பிரித்து முதலீடு செய்யலாம். பொதுவாக பங்குகள் சரியும் போது, தங்கம் ஏற்றம் பெறும். வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக காணப்படும் போது, கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் சற்று அதிகமாக கிடைக்கும்.

உங்கள் இலக்கு 15 வருடங்கள் எனில், ஒவ்வொரு வருடமும் நீங்கள் செய்துள்ள முதலீட்டு சாதனத்தை பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும். செய்யப்படும் முதலீட்டை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் நன்றாக இருக்குமா அல்லது முதலீட்டு சாதனத்தை பொறுத்து குறைத்து கொள்ளலாமா என அலசுவது அவசியமாகும்.

தேவைப்பட்டால், ஏற்கனவே செய்துள்ள முதலீட்டில் மாற்றத்தை செய்வது இலக்கை அடைவதற்கு உதவக்கூடும். எனவே, சரியான நேரத்தில் மாற்றம் செய்வதற்கும் தயாராக வேண்டும். உங்கள் இலக்குக்கான தொகை, இலக்கு காலத்திற்கு முன்பே அடைந்து விட்டால் அதனை பாதுகாப்பாக வங்கிக்கோ அல்லது பாதுகாப்பான முதலீட்டு சாதனத்தில் முழுவதுமாக மாற்றுவது அவசியம். இலக்கின் கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக ராமு தனது மகனின் மேற்படிப்பு செலவிற்காக 15 வருடங்கள் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்து வருகிறார் என வைத்து கொள்வோம். இலக்கிற்கான தொகை 13ம் வருடமே அடையும் பட்சத்தில், அடுத்த இரண்டு வருடங்கள் அதே முதலீட்டில் தொடர வேண்டுமென்ற அவசியமில்லை. அதனை பாதுகாப்பான வங்கி டெபாசிட்டாக மாற்றி கொள்ளலாம். மாறாக அவர் பங்கு சார்ந்த திட்டத்தில் தொடரும் நிலையில், எதிர்பாராத பங்குச்சந்தை சரிவு அல்லது பொருளாதார மந்தநிலை ஏற்படுமாயின், அவருடைய முதலீட்டின் மீதான வருவாய் குறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் முதலீடு நஷ்டமடைய வாய்ப்புண்டு. எனவே சரியான திட்டமிடலை கொண்டிருப்பது அவசியமாகும்.

சொல்லப்பட்ட ஆறு படிநிலைகளையும் கொண்டு உங்களுக்கான சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – புத்தக அறிமுகம்

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – புத்தக அறிமுகம் 

How to pick the right stock in the Share Market ?  Amazon Kindle Edition – Free ebook

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-05-2020) மாலையில் பங்குச்சந்தை அடிப்படை சார்ந்த புத்தகம் ஒன்று இணைய வழியாக வெளியிடப்பட்டது. வாசகர்கள் மற்றும் பங்குச்சந்தை ஆர்வலர்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கிணங்க, பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு சிறந்த கையேடாக இந்த புத்தகம் இருக்கும் என நம்பிக்கை கொள்கிறோம்.

பங்குசந்தை சார்ந்த புத்தகங்களை நீங்கள் வலைத்தளங்களில் தேடுவீர்களானால், பெரும்பாலும் அமெரிக்க பங்குச்சந்தை சார்ந்த புத்தகங்களை தான் அதிகமாக காண முடியும். இந்திய பங்குச்சந்தை பற்றி மிகக்குறைவான புத்தகங்கள் தான் இருக்கின்றன. நமது தாய்மொழி தமிழில் அதுவும் மிக குறைவு. பங்குச்சந்தை துறையில் உள்ள புத்தகங்களை அளித்த நமது முந்தைய எழுத்தாளர்களின் அறிவும், அனுபவமும் அளப்பரியது. ஆனால், அவர்கள் எழுதிய காலங்கள் மிகவும் பின்னோக்கியதாகும். நமது எழுத்தாளர் விவரிக்கும் பங்குச்சந்தையின் அடிப்படை , நிகழ்கால சந்தையுடன் ஒப்பிட முடியும். அவரின் எழுத்துக்கள் வாசகர்கள் படிப்பதையும், அவர்களின் முதலீட்டு சிந்தனையையும் தூண்டுகிறது. பங்குச்சந்தையில் அ முதல் ஃ வரை விளக்குகிறார்.

பங்குச்சந்தையில் அடிப்படை கல்வி இல்லையென்றால், முதலீடு என்பது தண்ணீரில் போட்ட உப்புக்கு சமமாகும். உதாரணமாக, மற்ற மொழிகளை  நாம் கற்க வேண்டுமென்றால், அந்த மொழியின் உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து ஆகியவற்றிலிருந்து தான் தொடங்க வேண்டும்.

இவ்வுலகில் பங்குச்சந்தை மூலம் மிகப்பெரிய செல்வந்தர்களான அனைவரும் பொதுவாக அடிப்படைவாதிகளே(Fundamentals and Value Investors). மற்ற முறைகளில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. முதலீடு மற்றும் அதன் மூலம் பணத்தை பெருக்குவதற்கான அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றியவர்களில் மாபெரும் செல்வந்தரான திரு. வாரன் பப்பெட்டும்(Warren Buffet) ஒருவராவார்.

பங்குச்சந்தை வரலாறு ஆரம்பிக்கப்பட்டது சுமார் 400 வருடங்களுக்கு முன்னால்… முதன்முதலில் டச்சு நாட்டில் தான் ஒருமிக்கப்படாத பங்குச்சந்தை தோற்றம் பெற்றது. பின்னர் அது மற்ற நாடுகளுக்கு பரவியது, கடன் பத்திரங்கள் தான் முதன்முதலில் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் மாற்றமடைந்து, பொருள் சந்தை வர்த்தகம் தான் அதிகமாக நடைபெற்றது. அதாவது டிம்பர், சோயா பீன்ஸ் மற்ற பல பொருட்கள் இச்சந்தையில் வர்த்தகமானது. இவ்வாறாக சென்று கொண்டிருந்த சந்தை இன்று மிகப்பெரிய அளவில் மாற்றம் பெற்றுள்ளது.

அனைவரும் பங்குச்சந்தையில் ஈடுபட்டு முதலீட்டை மேற்கொள்ளலாம். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும், நல்ல நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் இது துணை புரியும். நல்லதொரு முதலீட்டை மேற்கொள்ள, அடிப்படை கல்வி அவசியம். அதுவே இந்த அறிமுக புத்தகத்தின் வழியாக கிடைக்கப்பெறும்.

மின்னணு புத்தகத்தை அமேசான் கிண்டில்(Amazon Kindle) பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நடப்பில் இந்த புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. படித்து பயன் பெறுங்கள்.

நீங்களும் பங்ச்சந்தை ராஜா தான் – புத்தகம் 

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனியார் மற்றும் அன்னிய முதலீட்டை வேகப்படுத்தும் மேக் இன் இந்தியா

தனியார் மற்றும் அன்னிய முதலீட்டை வேகப்படுத்தும் மேக் இன் இந்தியா 

Speeds up on Private and Foreign Investments – Stimulus for Make in India

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை கடந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கியுள்ளது, 33,000 க்கு மேற்பட்டோர் குணமடைந்தவர்கள். நடப்பில் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார வீழ்ச்சியில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கான பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் அதிகரித்துள்ளது. இது நம்முடைய நாட்டில் மட்டுமில்லாமல், வல்லரசான அமெரிக்காவிலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அதற்கான பொருளாதார ஊக்குவிப்புகளும் நடந்த வண்ணம் உள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் அறிவிப்பாக கடந்த நான்கு நாட்களாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தொழில், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த அறிவிப்புகள் இரு தினங்களாக அறிவிக்கப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வழங்குவதில் சில மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தில்(16-05-2020) நிலக்கரி, தாதுக்கள், விமான சேவை, மின் துறை, விண்வெளி மற்றும் அணுசக்தி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டது. சொல்லப்பட்ட துறையில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டமும் மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி துறையில் ரூ. 50,000 கோடி செலவிடப்படும் எனவும், பாதுகாப்பு துறையில் முன்னர் இருந்த 49 சதவீத அன்னிய முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. விமானத்துறையில் அரசு-தனியார் பங்களிப்பை துரிதப்படுத்தவும் அரசு முனைந்துள்ளது. புதிய விமான நிலையங்களை தொடங்குவது சார்பாகவும் பேசப்பட்டது.

விமான சேவையில் நேரத்தை குறைக்க புதிய வழித்தடங்கள், விண்வெளி ஆராய்ச்சியில் அரசுடன் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து செயல்படுதல் மற்றும் அணுசக்தியில் அரசு-தனியார் ஒப்பந்தம் ஆகியவற்றை பற்றியும் நிதி அமைச்சர் கூறினார்.

நடப்பில் பேசப்பட்டு வரும் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஒரு நடுத்தர பட்ஜெட் தாக்கல்(Interim Budget) போன்று நடைபெற்று வருகிறது. பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் 2024-25ம் ஆண்டுக்கான இலக்கிற்காகவே திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உடனடி தீர்வு சொல்லப்படவில்லை. மேலும் விமானத்துறை ஏற்கனவே நட்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இதற்கான நேரடி உதவி விஷயங்கள் அறிவிக்கப்படவில்லை என்பதும் ஒரு குறையாக உள்ளது.

தற்போது சொல்லப்பட்டுள்ள அறிவிப்புகள் பெரும்பாலும் அரசின் கடன்களாகவும், தனியார் மற்றும் அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்துள்ளது. தனியார் பங்களிப்பு ஒவ்வொரு தொழிலுக்கும் முக்கியம் தான் எனினும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கியமான துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது சாதகமாக அமையாது.

மேக் இன் இந்தியா(Make in India) என நாம் சொல்லிக்கொண்டாலும் நமது நுகர்வு தேவை பெரும்பாலும் இறக்குமதியின் மூலம் தான் கிடைக்கப்பெறுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள், மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாகவும், அதே வேளையில் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதும் தான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். மாறாக அன்னிய நிறுவனங்கள் உள்நாட்டில் முதலீடு செய்து விட்டு, தங்களது உற்பத்தியை மக்களிடம் விற்பதால் அது மேக் இன் இந்தியா வாசகத்திற்கு பொருந்தாது. மேலும் இதனால் வர்த்தக பற்றாக்குறையில் நமக்கு சாதகமாக எதுவும் நிகழப்போவதில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உங்களுக்கான சரியான பங்கு அல்லது முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவது எப்படி ? இந்த வார நிகழ்ச்சி நிரல்

உங்களுக்கான சரியான பங்கு அல்லது முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவது எப்படி ? இந்த வார நிகழ்ச்சி நிரல் 

How to design a Stock / Investment Portfolio ? Webinar

நீங்கள் செய்யும் எந்த முதலீடாக இருந்தாலும், முதலீட்டு பரவலாக்கம் மற்றும் அதனை பல்வகைப்படுத்துதல் அவசியம். உதாரணமாக பங்குச்சந்தையில் உள்ள ரிஸ்க் தன்மையை தவிர்க்க, ஒரே துறையில் முதலீடு செய்வதை காட்டிலும் பல துறைகளில் நமது முதலீட்டை பல்வகைப்படுத்துதல் செய்யலாம்.

இது போல முதலீட்டிலும் பரவலாக்கம் அவசியம். பங்குச்சந்தை என மட்டுமில்லாமல் சிறிதளவு வீட்டுமனை முதலீடு, அதனை சார்ந்த வாடகை வருவாய், தங்கம் மற்றும் பிற முதலீட்டு வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அதற்காக புரியாத முதலீட்டு சாதனத்தை எடுத்து கொண்டு முதலுக்கே மோசம் செய்து விட கூடாது.

உங்களது முதலீடு பங்குச்சந்தையானாலும், தங்கம் மற்றும் வீட்டு மனையாக இருப்பினும், இல்லையெனில் வங்கி டெபாசிட்கள் மற்றும் அஞ்சலக சேமிப்பாக இருந்தாலும் சரி, வாருங்கள் முதலீட்டு பரவலாக்கம் செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் பணம் பண்ணுவது எப்படி என்பதனை நாங்கள் சொல்லி தருகிறோம்.

முதலீட்டை பொறுத்தவரை, லாபத்தை பெற நம்முடைய நஷ்டத்தினை குறைக்கும் திறன் தான் முக்கியம். அதனை பற்றிய ஒரு மணிநேர பயிற்சி தான் இந்த வார ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நிரல். சரியான பங்குகளை தேர்வு செய்வது எப்படி, சந்தையில் நல்ல வருவாய் ஈட்டும் குறிப்பிட்ட 5 பங்குகளின் அடிப்படை அலசல் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

டேர்ம் பாலிசி மற்றும் மருத்துவ காப்பீடு – தற்போதைய காலத்தில் அதன் அவசியம் ஆகியவற்றையும் பேச உள்ளோம். மேலும், உங்களுக்கான பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான மின்னணு புத்தகத்தை வழங்க உள்ளோம்.

Designing Investment Portfolio

நிகழ்ச்சி நிரலுக்கு பதிவு செய்ய…

https://imjo.in/8fAZWM

பதிவுக்கு பின்னர், உங்களுக்கான நிரலின் இணைப்பு, கைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாருங்கள், முதலீட்டு சூத்திரத்தை கற்று கொண்டு பயன் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil