மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி
Repo rate cut 40 basis points to 4 Percent – RBI
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான இன்று பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் கூறிய அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) 40 புள்ளிகள் குறைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. முன்னர் 4.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இப்போது 4 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
இது போல ரிவர்ஸ் ரெப்போ விகிதமும்(Reverse Repo) 3.75 சதவீதத்திலிருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதமும்(Bank Rate) 4.65 சதவீதத்திலிருந்து 4.25 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி விகிதத்தை குறைப்பது சம்மந்தமாக இம்முறை நிதி கொள்கை குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களும் குறைக்க வேண்டுமென தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
மார்ச் 2020 முதல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான தொழில்கள் சுணக்கம் அடைந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. பணவீக்க விகிதத்தை அறிய முறையான தகவல்களை தற்போது சேகரிக்க முடியவில்லை எனவும், வரும் மாதங்களில் பணவீக்க விகிதங்களில் எதிர்பாராத மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், மத்திய வங்கியின் இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற அளவை ஒட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கக்கூடும். ஜனவரி – மார்ச் காலாண்டில் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் சீனாவின் வளர்ச்சி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளில் தங்கள் முதலீட்டை பரவலாக்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள் ஓரளவு ஏற்றம் பெற்றிருந்தாலும், நடப்பாண்டில் முதல் இரு காலாண்டுகளில் வளர்ச்சி எதுவும் பெரும்பாலும் இருக்காது என சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக(Negative GDP) இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், எந்த மதிப்பை கொண்டிருக்கும் என சொல்லப்படவில்லை.
வங்கிகளில் கடன் பெறுபவர்களை ஊக்குவிக்கவும், நிதி சந்தைகளை வலுப்படுத்தவும் வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வட்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு இது சாதகமாக இருக்கும். அதே வேளையில், இது வங்கிகளின் வருவாய்க்கு நன்மையாக அமையாது. கடனுக்கான மாத தவணையை செலுத்துவதில் மீண்டும் மூன்று மாத கால அவகாசம்(Moratorium) வழங்கப்பட்டுள்ளது.
இது அடுத்த மாதம் ஜூன் முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலத்திற்கு பொருந்தும். இருப்பினும், இது வட்டிக்கு வட்டி என்ற விகிதத்தின் அடிப்படையிலும், மூன்று மாதங்களுக்கான தவணையை அதிக தொகையுடன் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். வங்கி வட்டி தள்ளுபடி அல்லது கடன்களை மறுசீராய்வு செய்வதால் மட்டுமே அது வங்கிகளுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் பலன் அளிக்கும்.
இன்று வங்கி துறையில் உள்ள பங்குகள் அதிக சரிவையும், நிப்டி வங்கி குறியீடு 2.57 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சி கண்டது. நடப்பில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் பணப்புழக்கம் சார்ந்த நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.
வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் சூழ்நிலையில், முதலீட்டாளர்களின் பார்வையில் கடன் பத்திரங்கள்(Bonds) மீதான ஆர்வம் ஏற்படும். வட்டி விகிதம் குறையும் போது, கடன் பண்டுகளின் வருவாய் அதிகரிக்கும். எனவே இது போன்ற நிலையில், முதலீடு செய்வோர் சற்று ரிஸ்க் குறைந்த கடன் பத்திர பரஸ்பர நிதிகளில்(Debt Mutual Funds) முதலீடு செய்யலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை