மீண்டும் எச்சரிக்கை மணி – உலக பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை சந்திக்கும்

மீண்டும் எச்சரிக்கை மணி – உலக பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை சந்திக்கும் 

Warning – The Global economy will suffer the worst – World Bank

இன்றைய தின தரவுகளின் படி, உலக மக்கள் தொகை 779 கோடி. உலக பொருளாதார உற்பத்தியில்(World GDP) சுகாதாரத்திற்கு செலவிடப்படக்கூடிய தொகை 9 சதவீதம். கல்விக்காக உலக பொருளாதாரத்தில் சுமார் 5 சதவீதம் செலவிடப்படுகிறது. உலக பொருளாதாரத்தின் மதிப்பு 85.93 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (2018ம் ஆண்டு கணக்கின் படி).

வல்லரசு நாடான அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.50 டிரில்லியன் டாலர்கள். உலக பொருளாதாரத்தில் 24 சதவீத பங்களிப்பை அமெரிக்கா கொண்டுள்ளது. இரண்டாவதாக சீனாவின் பங்களிப்பு 15.86 சதவீதமாக உள்ளது – 13.60 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். நம் நாட்டின் பொருளாதாரம் 2.73 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது உலக பொருளாதாரத்தில் 3.2 சதவீதம்.

சர்வதேச நாணய நிதியம்(IMF) உலகின் முக்கிய பொருளாதாரமாக 20 நாடுகளை கொண்டிருக்கிறது. மிகவும் மேம்பட்ட பொருளாதார நாடுகளாக அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம்(United Kingdom), ஜப்பான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி உள்ளன. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து உள்ளன. இந்த பிரிவில் சுமார் 30 நாடுகள் உள்ளது.

ஜி-7 நாடுகளை தவிர்த்து இதர மேம்பட்ட பொருளாதாரமாக தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற நாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் உலக பொருளாதார வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சோவியத் யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் இருந்து வந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தை சீனா தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக பொருளாதார தரவரிசையில் கடந்த 10 வருடங்களாக முதல் 10 தர பட்டியலில் ஒரு நாடாக இந்தியா இருப்பது கவனிக்கத்தக்கது. 1980களில் நாம் 13வது இடத்தில் இருந்து வந்துள்ளோம். கொரோனா தாக்கத்தின் போது ஏற்பட்ட ஊரடங்குக்கு பிறகான பொருளாதார கணிப்பில் பல மதிப்பீடு நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தையும், வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் மந்தநிலை பற்றியும் பேசி வருகின்றன.

இது சார்ந்த தகவல்கள் உலக வங்கி சார்பிலும் தற்போது சொல்லப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் அதிக நாட்களை ஊரடங்காக அறிவித்த நாடுகள் தற்போது தான் எனவும், இவற்றில் பெரும்பாலான நாடுகள் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் எனவும் கூறியுள்ளது. இதன் விளைவாக நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதம் எதிர்மறையாக(Contract – Negative GDP) செல்லும் என உலக வங்கி கணித்துள்ளது. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-21ம் நிதியாண்டில் 3.2 சதவீதம் வரை எதிர்மறையாக செல்லும் என கூறியுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்பான மோசமான பொருளாதார வீழ்ச்சியாக இது இருக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட பொருளாதாரம் மற்றும் வளர்ந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை அதிகமாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எனினும் 2021க்கு பிறகான உலக பொருளாதார வளர்ச்சி மீண்டெழும் எனவும், இவற்றில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் வளர்ச்சி, வளர்ந்த நாடுகளை காட்டிலும் அதிகமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தற்போது சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை, கடந்த 60 வருடங்களில் காணப்பட்ட முதல் முறை வீழ்ச்சி என சொல்லப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு தேவை, வர்த்தகம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என உலக வங்கி கூறியுள்ளது.

சமீபத்திய வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு, புலம் பெயர்ந்தோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை, எதிர்பாராத பங்குச்சந்தை ஏற்றம், பலவீனமான தேவை நுகர்வு ஆகியவை வரும் நாட்களில் இதனை உணர்த்தும். வரக்கூடிய காலங்களில் சிக்கன நடவடிக்கையை கடைபிடிப்பது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நஷ்டமடைந்த வேதாந்தா நிறுவனம் – ரூ. 12,521 கோடி நிகர நஷ்டம்

நஷ்டமடைந்த வேதாந்தா நிறுவனம் – ரூ. 12,521 கோடி நிகர நஷ்டம் 

Vedanta’s Net loss of Rs. 12,521 Crore in Q4FY20 – Quarterly Results

1979ம் ஆண்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம் வேதாந்தா. சுரங்க தொழிலில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் தங்கம், அலுமினியம் மற்றும் இரும்பு தாதுக்களை எடுத்து விற்பனை செய்து வருகிறது. முன்னர் சேஷா கோவா(Sesa Goa) என்றிருந்த நிறுவனமே பின்னாளில் வேதாந்தா நிறுவனமாக மாறியது.

வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனங்களாக பாரத் அலுமினியம், ஸ்டெர்லைட் காப்பர், எலெக்ட்ரோ ஸ்டீல் மற்றும் இந்துஸ்தான் ஜிங்க் ஆகியவை உள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் நிறுவனராக தற்போது அனில் அகர்வால் உள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக சீனிவாசன் வெங்கட்ராமன் உள்ளார்.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 39,140 கோடி. புத்தக மதிப்பு 147 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.91 ஆகவும் இருக்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 3 மடங்கில் உள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 49,800 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 19,755 கோடியாகவும், செலவினம் ரூ.15,203 கோடியாகவும் உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக சொல்லப்பட்ட காலாண்டில் ரூ. 12,521 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது.

கொரோனா தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய ஒரு முறை குறைபாட்டு செலவாக ரூ. 17,132 கோடியை வருவாயில் ஒதுக்கியுள்ளது. இதன் காரணமாக தான் தற்போது நிகர நஷ்டத்தை கூறியுள்ளது. துத்தநாகம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் வருவாய் நான்காம் காலாண்டில் குறைந்துள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் இந்திய பங்குச்சந்தையிலிருந்து தன்னார்வமாக நீக்கி விட்டு(Delist), தனியார் நிறுவனமாக செயல்பட விண்ணப்பித்திருந்தது. இது சார்ந்து பங்குதாரர்களின் ஒப்புதலை பெற வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நிறுவனத்தின் வருவாய் கடந்த 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 15 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த பத்து வருட கால அளவில், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 33 சதவீதமாகவும், லாபம் 13 சதவீதமாகவும் உள்ளது. ஒரு வருட காலத்தில் இந்த பங்கின் விலை 36 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ. 54,263 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. பணவரத்து(Cash flow) நிறுவனத்திற்கு குறிப்பிடும்படியாக வந்து கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த வார நாணயம் விகடனில் – சிறந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி ?

இந்த வார நாணயம் விகடனில் – சிறந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது  எப்படி ?

Article Published in Nanayam Vikatan – About creating the best investment portfolio

நீண்டகாலத்தில் முதலீடு செய்யும் ஒருவர், ஒரு முதலீட்டு சாதனத்தை மட்டும் தேர்ந்தெடுப்பது சாதகமாக இருக்காது.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தைப் போட்டுவிட்டு அக்கடா என்று கிடப்பதோ, பங்குச் சந்தையில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு பிறகு `குய்யோ… முய்யோ…’ என்று கூப்பாடு போடுவதோ ஒரு நல்ல முதலீட்டாளருக்கு அழகல்ல. அப்படிச் செய்வது ஒரு நல்ல முதலீட்டாளரின் நலனைப் பாதுகாக்காது.

சிறந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோ(Investment Portfolio) உருவாக்குவதற்கான முக்கிய ஆறு படி நிலைகளை பற்றி இந்த வார நாணயம் விகடன் இதழில் வெளிவந்துள்ளது. நமது பதிவை வெளியிட்ட நாணயம் விகடன் பொறுப்பாசிரியருக்கு வர்த்தக மதுரை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

முதலீட்டு கலையை சுவாசிக்க ஒவ்வொரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய படிநிலைகளாக சொல்லப்பட்ட ஆறு முத்துக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் முதலீட்டின் மூலம் ஏற்படக்கூடிய அதிகமான நஷ்டத்தையும் இந்த நிலைகள் மூலம் தவிர்க்கலாம்.

பொதுவாக, பங்குகள் விலை சரியும்போது, தங்கம் ஏற்றம் பெறும். இதனால் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் சற்று அதிகமாக இருக்கும். வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்போது, கடன் பத்திரங்கள் / கடன் ஃபண்டுகளின் வருவாய் சற்று அதிகமாகக் கிடைக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள, நாணயம் விகடன் இதழை வாங்கி படியுங்கள்.

இணைய வழி தொடர்பின் மூலம் படிக்க…

சிறந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோ – உருவாக்குவதற்கான படிநிலைகள்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

நாட்டின் மே மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் – 23.50 சதவீதம்

நாட்டின் மே மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் – 23.50 சதவீதம் 

India’s Unemployment rate to 23.50 Percent in May 2020 – CMIE

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்(CMIE) சார்பில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை சார்ந்த தகவல்கள் வெளியிடப்படும். கோவிட்-19 தாக்கத்தால் கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை சரிவர கணக்கிடப்படாதது நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். மேலே சொல்லப்பட்ட கண்காணிக்கும் மையம் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளும். கடந்த மார்ச் மாத முடிவில் 8.75 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) ஏப்ரல் மாதத்தில் 23.52 சதவீதம் என்ற உச்சகட்ட விகிதத்தை அடைந்தது.

புலம் பெயர்ந்தோர் தங்களது வாழ்வாதாரத்திற்காக சொந்த மாநிலத்தை தேடி சென்ற நிலையில், சிறு மற்றும் குறு தொழில்களில் பெரும்பான்மையான வேலையாட்கள் இல்லாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. மே மாத முடிவிலும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.48 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் காணப்படும் விகிதம் 25.80 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 22.50 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்புறங்களில் தான் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மாநிலங்களின் வாரியாக காணும் போது, மே மாதத்தில் தமிழகம் 33 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதத்தை கொண்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 50 சதவீதத்திற்கு அருகாமையில் இருந்தது கவனிக்கத்தக்கது. நாட்டில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 59 சதவீதமும், புதுச்சேரியில் 58.2 சதவீதமாகவும் மற்றும் பீகாரில் 46.2 சதவீதமாகவும் உள்ளது.

குறைந்த அளவாக ஜம்மு & காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5 சதவீதமாகவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 8 சதவீதம் மற்றும் ஒடிசாவில் 9.6 சதவீதமாக உள்ளது. வார அடிப்படையில்(Weekly jobless) காணும் போது, கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 20.19 சதவீதமாக உள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது 4 சதவீத குறைவாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2019-20ம் நிதியாண்டில் ரூ. 16,594 கோடி நிகர லாபம் – இன்போசிஸ்

2019-20ம் நிதியாண்டில் ரூ. 16,594 கோடி நிகர லாபம் – இன்போசிஸ் 

Infosys Net profit of Rs. 16,594 Crore in FY2019-20

இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் கடந்த 1981ம் ஆண்டு துவங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் நாட்டின் 2வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வலம் வருகிறது. முதலிடத்தில் டி.சி.எஸ்.(TCS) நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சில இந்திய நிறுவனங்களில் இன்போசிஸ் உள்ளது.

சுமார் 2.42 லட்சம் பணியாளர்களை கொண்டு உலகெங்கிலும் 120 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கும் இன்போசிஸ் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகள், அவுட்சோர்சிங் மற்றும் அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. இவற்றில் முக்கியத்துவம் என்னவென்றால், சொல்லப்பட்ட பணியாளர்களில் மகளிரின் எண்ணிக்கை மட்டும் மூன்றில் ஒரு பங்கு – 37 சதவீத பெண் பணியாளர்கள். இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 3.01 லட்சம் கோடி. 250 அமெரிக்க டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.

1993ம் ஆண்டு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 95 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த பங்கு பெரியளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை. பின்னாளில் இந்த பங்கு ஒருவரை கோடீஸ்வரராக்கும் என பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு தெரியவில்லை. கடந்த 36 வருடங்களில் இந்த பங்கு 3000 மடங்கு அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதாவது 1993ம் வருடம் ஒருவர் இன்போசிஸ் பங்குகளில் ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், இன்று சுமார் 3.2 கோடி ரூபாயை பெறும். ஆண்டுக்கு 40 சதவீத வருவாய் வளர்ச்சியில் இந்த பங்கு முதலீட்டாளரை செழிக்க வைத்திருக்கும்.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கூட்டாளிகளுடன் துவங்கப்பட்ட நிறுவனம் என்பதால், இந்நிறுவனத்தின் நிறுவனர்களின் பங்களிப்பு 13 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) சுமார் 130 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 90,791 கோடியாகவும், செலவினம் ரூ. 68,524 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ. 2,803 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிகர லாபம் ரூ. 16,594 கோடியாக இருக்கிறது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டை காட்டிலும் 7 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

கடந்த 5 வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) 11 சதவீதமும், லாப வளர்ச்சி(Profit Growth) 6 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) ஐந்து வருடஙக்ளில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 63,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

இன்போசிஸ் இதுவரை 8 முறை போனஸ் பங்குகளை(Bonus issue) தனது முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. நடப்பு டிவிடெண்ட் தொகை(Dividend yield) 3 சதவீதமாக உள்ளது. இது வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இன்போசிஸ் நிறுவனத்தின் பணவரத்து அறிக்கையும் சாதகமாக இருந்து வருகிறது.

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது. எனினும் தற்போது இதன் பங்கு விலை ஏற்றத்தில் உள்ளது. வரக்கூடிய நாட்களில் சுமார் 10-20 சதவீதம் என்ற அளவில் இந்த பங்கு இறக்கம் பெறக்கூடிய நிலையில், நீண்ட கால முதலீட்டிற்கு வாங்கி வைக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை சமீபத்திய ஏற்றம் – எச்சரிக்கை தேவை

பங்குச்சந்தை சமீபத்திய ஏற்றம் – எச்சரிக்கை தேவை 

Bear Market Rally – Recession 2020 – Caution is needed

பொதுவாக பொருளாதாரத்தில் வாய்ப்பை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த விடுபடும் என்ற பயம் அல்லது சமூக பதற்றம்(Fear of Missing out – FOMO) பங்குச்சந்தைக்கு மிகவும் பொருந்தும். நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு வருடங்களாக மந்தநிலையில் இருந்து வந்த சமயம், கொரோனா வைரஸ் தொற்று அலைக்கு பின், கடந்த மார்ச் மாத இறுதியில் பங்குச்சந்தை பலத்த அடி வாங்கியது.

நடப்பு வருடத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி(Nifty50) வாழ்நாள் உச்சபட்சமாக 12,430 புள்ளிகள் வரை சென்றது. இது போல மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(Sensex) அதிகபட்சமாக 42,274 புள்ளிகள் வரை ஏற்றமடைந்தது. மார்ச் இறுதி வாரத்தில் உலகளவில் பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் குறியீடு 52 வார குறைவாக 25,638 புள்ளிகளும், நிப்டி 7,511 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாத பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டாளர்களின் ஐந்து வருட முதலீட்டை பதம் பார்த்தது. அந்நிய முதலீட்டாளர்களும் பொருளாதார பின்னடைவை கருத்தில் கொண்டு, தங்களது முதலீட்டை வெளியே எடுக்க துவங்கினர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகெங்கிலும் அதிகரிக்க தொடங்கியது.

ஏப்ரல் மாத முடிவில் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றம் பெற்றது. இது பொருளாதார மீட்டெடுப்பின் ஒரு அங்கமாக முதலீட்டாளர்களிடம் காணப்பட்டது. பின்னர் மே மாதத்திலும் இந்த ஏற்றம் தொடர்ந்தது. மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின், இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சுமார் 25 சதவீதத்திற்கு மேலாக ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த ஒரு வார வர்த்தகத்தில் பங்குச்சந்தை 11 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. புதன்கிழமை (03-06-2020) அன்று நிப்டி 10,061 புள்ளிகளிலும், சென்செக்ஸ்(BSE Sensex) 34,109 புள்ளிகளிலும் தனது வர்த்தகத்தை முடித்து கொண்டது. இருப்பினும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி குறியீடு கடந்த ஒரு வருட காலத்தில் 17.50 சதவீத இறக்கத்தையும், மூன்று வருட கால அளவில் 3.50 சதவீத ஏற்றத்தையும் பெற்றுள்ளது.

அமெரிக்க சந்தை குறியீடுகளும் கிடுகிடுவென ஏறி கொண்டிருக்கிறது. பங்குச்சந்தை குறியீடுகள் பழைய நிலைக்கு மேல் சென்று விடும். இனி, காளை ஆட்டம் தொடங்கி விட்டது என்ற வாசகமும் சந்தையில் அடிபட்டு கொண்டு தான் இருக்கின்றன. பொதுவாக பங்குச்சந்தை எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒரு பொருளாதார காரணிக்கு சந்தையில் முன்னரே பிரதிபலிக்க செய்யும் இயல்பு உண்டு. சில வேளைகளில் எதிர்பாராத ஏற்றத்தை ஜீரணிக்க முடியாமல் இறக்கத்தையும் மெதுவாக காட்டுவதுண்டு.

அதனால் தான், சந்தையின் போக்கை கணிக்காதீர்கள், பங்குகளை கவனியுங்கள் என சந்தை வல்லுநர்கள் சொல்வதுண்டு. மார்ச் மாத இறக்கத்தில் பங்குகளை அலசி ஆராய்ந்து வாங்கியவர்கள், இன்று குறிப்பிடத்தக்க லாபத்தை பார்த்திருப்பார்கள். அதே வேளையில் சந்தை இன்னும் இறங்கும் என காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைவதுண்டு. இதன் விளைவாக சந்தையில் வாய்ப்பை விட்டு விடுவோமோ என்ற பதட்டத்தில் இப்போது பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுவதுண்டு.

பலர் கடந்த மே மாத ஏற்றத்தில் முதலீடு செய்திருக்கலாம். அவர்களின் பங்குகள் மீதான லாபம் தற்போது பெரிதாக ஏறி இருக்க வாய்ப்பில்லை. இப்போது நிப்டி 10,060 புள்ளிகள் தானே இருக்கிறது. விரைவாக முதலீடு செய்து விடலாம் என சமீபத்தில் ஏறக்கூடிய பங்குகளை எல்லாம் வாங்குவர். இது தான் இங்கு பிரச்சனையே. நினைவில் கொள்ளுங்கள், இது கரடி ஆட்டம் மற்றும் பொருளாதார மந்தநிலை காலம். தற்போது நிகழ்வது காளை சந்தையல்ல.

காளை-கரடியில் உங்களுக்கு முரண்பாடு இருந்தாலும், உண்மையில் உலக பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை என்பதே உண்மை. கடந்த இரண்டு வருட பொருளாதார மந்தநிலை பங்குச்சந்தை குறியீடுகளில் பெரிதாக பிரதிபலிக்கவில்லை என்றாலும், பெரும்பாலான பங்குகளில் அதன் விளைவு காணப்பட்டது. வங்கிகளில் ஏற்பட்ட குறைபாடு வங்கி சார்ந்த பங்குகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவன பங்குகளில் தென்பட்டது. சொல்லப்பட்ட துறையின் பங்குகள் இப்போதும் ஐந்து வருட குறைவாக தான் வர்த்தகமாகி வருகிறது. இது மெட்டல் மற்றும் வாகனத்துறைக்கும் பொருந்தும்.

மார்ச் மாத இறக்கம், கொரோனா கால ஊரடங்கை சந்தையில் காண்பித்து விட்டது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி(Q4FY20 GDP) எண்களும் பெரிதாக வளர்ச்சியில் இல்லை. ஆனால், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனங்கள் உண்மையில் வருவாயை பெறுமா, அதன் நஷ்ட அளவுகள் எவ்வளவு தூரம் செல்லும், கடன் மற்றும் திவால் நிலைக்கு செல்லும் நிறுவனங்கள் எத்தனை என்பதெல்லாம் வரக்கூடிய காலங்களில் மட்டுமே தெரியும். அப்போது தான் பங்குச்சந்தையின் உண்மையான போக்கை நாம் அறிய முடியும்.

பொதுவாக பங்குச்சந்தை வீழ்ச்சி ஏற்படும் சமயங்களில், நல்ல நிறுவன பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) ஆராய்ந்து மலிவான விலையில் பங்குகளை வாங்குவதே சிறந்தது. இந்த வாய்ப்பு எப்போதும் சந்தையில் உள்ளது. ஆனால், பங்குச்சந்தை வீழ்ச்சி காலங்களில் இது அதிக வாய்ப்பை ஏற்படுத்தும், அவ்வளவே. நமக்கான வாய்ப்பு மார்ச் மாத வீழ்ச்சியில் தென்பட்டது. இப்போதைய ஏற்றத்தில் லாபம் பார்த்திருக்கலாம். பெரும்பாலான பங்குகள் 80-100 சதவீத ஏற்றத்தை கடந்த 50 நாட்களில் அடைந்துள்ளன. இது எதிர்பாராத அபரிதமான முதலீட்டு வளர்ச்சி.

நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை பதிவு செய்யும் பட்சத்தில், செய்த முதலீட்டு தொகையை திரும்ப பெறலாம். மீதமிருக்கும் பங்குகளை அப்படியே சில வருடங்களுக்கு விட்டு விடுவது நன்று. அவை தான் உங்களுக்கான செல்வ வளத்தை ஏற்படுத்தும். கையில் இருக்கும் தொகைக்கு அடுத்த வீழ்ச்சியில் மலிவான விலைக்கு பங்குகளை வாங்கலாம். இதனையெல்லாம் விடுத்து, சந்தை இன்னும் பெரியளவில் ஏறி விடுமோ என அதன் போக்கை பின்தொடர வேண்டாம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை(Quarterly Earnings) அடுத்தடுத்து பின் தொடருங்கள். பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றி, தற்போது மலிவான விலையில் பங்குகள் கிடைக்க பெற்றிருந்தால் மட்டும் வாங்குங்கள். இல்லையெனில், அவசரம் வேண்டாம்.

அந்நிய முதலீட்டாளர்கள்(FII) வாங்குகிறார்கள் என நீங்கள் வாங்க வேண்டாம். அந்நிய முதலீட்டாளர்கள் என்பவர் நம்மூர் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களை போல தான். அவர்கள் வேறு யாருமல்ல. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் அரசு அவர்களின் மக்களுக்கு பண உதவி செய்து வருகிறது. பணம் தேவைப்பட்டால் தான் அவர்கள் நம் சந்தையிலிருந்து முழுவதுமாக முதலீட்டை எடுப்பதுண்டு. அரசு உதவி செய்யும் போது, சந்தையிலும் பணம் புழங்க தான் செய்யும். அது தான் இப்போது நடந்து வருகிறது. நமது நாட்டிலும், பரஸ்பர நிதி முதலீடுகள்(Mutual Funds – DII) அதிகமாக உள்ளது.

நீங்கள் மாதாமாதம் எஸ்.ஐ.பி. முதலீட்டை தொடரும் பட்சத்தில் சந்தைக்கு உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors) மூலம் முதலீடு வர தான் செய்யும். எனவே தற்போதைய சந்தை ஏற்றத்தில் மிகவும் கவனமாக இருங்கள். கடன் அதிகம் கொண்ட நிறுவனங்களை தவிர்ப்பது நலம். உங்கள் நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதிகளை(SIP Investing for Goals) எப்போதும் போல தொடருங்கள். ஆனால், நேரடி சந்தை முதலீட்டில் இப்போது எச்சரிக்கை தேவை.

நினைவில் கொள்க:

பங்குகளில் குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கு(STCG Tax) 15 சதவீத வரி செலுத்த வேண்டும். அதே வேளையில் சொல்லப்பட்ட நிதியாண்டில் ஒருவருக்கு ஏற்பட்ட குறுகிய கால மூலதன இழப்பை சரி செய்து கொள்ள இந்த லாபத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

வருமான வரி வரம்பில் இல்லாதோருக்கு குறுகிய கால மூலதன ஆதாயத்தில் வரி விலக்கு உண்டு. எனவே தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

குறுகிய காலத்தில் பங்கு விற்பனை மூலம் 50 முதல் 100 சதவீதத்திற்கு மேல் லாபம் பெறுபவர்களுக்கு வரி செலுத்துவதில் பெரிய இழப்பு எதுவும் இருக்காது. இந்த முறையை தற்போதைய பொருளாதார மந்தநிலை ஆதாயமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மந்தமடைந்த வாகனத்துறை விற்பனை நிலவரம் – மே 2020

மந்தமடைந்த வாகனத்துறை விற்பனை நிலவரம் – மே 2020

Weak Auto Sales Data in the month of May 2020 – SIAM

கொரோனா தாக்கத்தின் விளைவாக நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஒன்றரை வருடமாக மந்தநிலையில் இருந்த வாகனத்துறையின் விற்பனை மேலும் பாதித்தது. துறையில் உள்ள முக்கிய நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனத்தை கூட விற்க முடியாத நிலைக்கு சென்றன.

வாகனத்துறையின் மே மாதத்திற்கான விற்பனை நிலவரம் நேற்று வெளிவந்தது. மே மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு பிறகு ஊரடங்கு நிலை சற்று தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் தங்களது தொழிலை புரிய அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த மாதத்தில் மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவனம் 18,539 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் உள்ளூர் விற்பனையாக 13,888 வாகனங்களும், 4,651 வாகனங்கள் ஏற்றுமதியாக செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் மே மாதத்தில் விற்பனையான மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1,34,640 ஆகும். எனவே தற்போது சொல்லப்பட்ட வாகன விற்பனை கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, 86 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மே மாதம் இரண்டாம் வாரத்திற்கு பிறகு தான் தங்களது சேவை துவங்கப்பட்டதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது போல மஹிந்திரா நிறுவனம் மே மாத நிலவரமாக 9,560 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உள்ளூர் விற்பனையாக 9,076 வாகனங்களும், ஏற்றுமதியில் 484 வாகனங்களும் விற்கப்பட்டுள்ளன.

எனினும் கடந்த மாத விற்பனை வளர்ச்சி 79 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இரு சக்கர வாகன பிரிவில் உள்ள ஹீரோ மோட்டார் நிறுவனம்(Hero Motocorp) 1,12,682 வாகனங்களை மே மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் இதே காலத்தில் நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 6,52,028. ஆக தற்போதைய விற்பனை 83 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது.

சொல்லப்பட்ட வாகனங்களில் 3,834 வாகனங்களை ஹீரோ மோட்டார் நிறுவனம் ஏற்றுமதி(Exports) செய்துள்ளது. ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் பிரிவு 69 சதவீத விற்பனை வீழ்ச்சியை மே மாதத்தில் சந்தித்துள்ளது. இந்த இரு சக்கர வாகனம் மே மாதத்தில் 19,113 எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளது.

Automobile sales may 2020

இது கடந்த 2019ம் ஆண்டின் இதே காலத்தில் நடந்த விற்பனையின் எண்ணிக்கை 62,371. அசோக் லேலண்ட் நிறுவனம் மே மாத விற்பனையாக 1,420 வாகனங்களை மட்டுமே கொண்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் சொல்லப்பட்ட காலத்தில் 13,172 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எனவே, தற்போதைய விற்பனை 89 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. அதே வேளையில் மஹிந்திரா டிராக்டர் விற்பனை 2 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. வரக்கூடிய மாதங்களில் வாகன விற்பனை ஊக்குவிக்கப்படுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமூக இடைவெளி காரணமாக பொது போக்குவரத்தை தவிர்க்கும் பட்சத்தில் வாகன விற்பனை சிறிதளவு அதிகரிக்கலாம். ஆனால், வாகனத்துறை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சவாலான விஷயங்களை எதிர்கொண்டு வருகிறது. நாட்டில் நுகர்வு தன்மையை அதிகப்படுத்தினால் மட்டுமே, இதன் விற்பனை வளர்ச்சி வரும் நாட்களில் அதிகரிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள்

எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள் 

Esvin Group of Companies and its Shares – Listed Domestic Stock Valuation

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் எஸ்வின் குழுமம். 1960ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்ப காலத்தில் சேஷசாயி பேப்பர்(Seshasayee Paper & Boards) மற்றும் அதனை சார்ந்த பலகைகள் தயாரிக்கும் தொழிலை கொண்டிருந்தது. நிறுவனத்தின் நிறுவனரான திரு. எஸ். விஸ்வநாதன் அவர்கள் எஸ்வின் குழுமத்தை பல நிறுவனங்கள் கொண்ட ஒரு அங்கமாக உருவாக்கினார்.

செராமிக்(Ceramic), பேட்டரிகள், உயிரி தொழில்நுட்பவியல், சர்க்கரை மற்றும் ரசாயனம் போன்ற தொழில்களில் குழும நிறுவனங்கள் செயல்பட்டன. 1984ம் ஆண்டு துவங்கப்பட்ட பொன்னி சுகர்ஸ்(Ponni Sugars) நிறுவனம் சர்க்கரை மற்றும் அதனை சார்ந்த ரசாயனங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் 3000 டி.சி.டி. கொள்ளளவு கொண்ட கலனை ஈரோட்டில் நிறுவியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்கு தேவையான உற்பத்தி பொருட்கள் கரும்பு  சக்கையில் 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

பேட்டரி தயாரிக்கும் தொழிலில் உள்ள எச்.இ.பி.(High Energy Batteries) நிறுவனம், திறன்மிக்க துத்தநாகம் மற்றும் நிக்கல் காட்மியம் வகை பேட்டரிகளை தயாரித்து வருகிறது. உற்பத்தியாகும் பொருட்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆகவே, இந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.

காகித அச்சடிப்பில் உள்ள பொதுத்துறை நிறுவனமான டி.என்.பி.எல்.(Tamilnadu Newsprint and Papers Limited) வெற்றிகரமாக செயல்படுவதற்கு சேஷசாயி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியத்துவமானது. உலகின் முதல் கரும்பு சக்கையிலான செய்தித்தாள் பிரிவும் இது தான்.

உயிரி தொழில்நுட்பவியலில்(Bio Technology) செயல்படும் நிறுவனம் எஸ்வின் அட்வான்ஸடு டெக்னாலஜிஸ். இந்த துறையில் உயிர் கழிவு மற்றும் எரிபொருளின் வாயுவாக்க வேலைகளை செய்து வருகிறது இந்நிறுவனம். எஸ்வின் குழுமத்தின் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

சேஷசாயி நிறுவனம் பேப்பர் தயாரிப்புக்கென இரு பிரிவுகளை கொண்டுள்ளது. ஈரோடு(Erode) மற்றும் திருநெல்வேலியில் இயங்கும் ஆலைகளில் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் பேப்பர்களை உற்பத்தி செய்யலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 780 கோடி. கடன்கள் எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.

கடந்த ஒரு வருடமாக இந்த பங்கின் விலை 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கடந்த பத்து வருட காலத்தில் நன்றாகவே இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பும், பணவரத்தும் சாதகமாக உள்ளது.

மற்றொரு நிறுவனமான பொன்னி சுகர்ஸ் நாளொன்றுக்கு 3500 டன் கரும்புகளை(Sugarcane) நசுக்கி 19 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 120 கோடி ரூபாய். கடன் எதுவும் பெரிதாக இல்லை. அது போல அடமான பங்குகளும் நிறுவனர் சார்பில் இல்லை. விற்பனை மற்றும் லாப வளர்ச்சி பெரும்பாலும் ஏற்ற-இறக்கமாக இருந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது இந்த துறையும்(Sugar Segment), அதனை சார்ந்த அரசு கொள்கைகளும் தான்.

இருப்பினும் நிறுவனம், பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை ஓரளவு பூர்த்தி செய்கிறது பேட்டரி தயாரிப்பில் இருக்கும் நிறுவனம் ஹை எனர்ஜி பேட்டரிஸ்(HEB). இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 35 கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் ஒன்றுக்கு மேலாக உள்ளது. எனவே இந்த பங்கு பொதுவாக பரிசீலிக்கக்கூடியதாக இல்லை. இதன் வாடிக்கையாளர்கள் இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை என இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தான் இந்நிறுவனம் லாபத்தை ஈட்டி வருகிறது எனலாம்.

பங்குச்சந்தையில் ஈடுபடும் நீண்டகால முதலீட்டாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள், பிரபல பிராண்டுகள் மற்றும் பெயர் அதிகம் தெரியாத மற்ற மாநிலங்களின் நிறுவன பங்குகளை வாங்குவதை விட, நமது ஊரில் உள்ள ஒரு நிறுவனத்தின் தொழிலை கண்டறிந்து முதலீடு செய்வது நமக்கும், நமது மாநிலத்தின் நலனுக்கும் சாதகமாக அமையும்.

மதுரை மாவட்ட தியாகராஜர் மில்ஸ் (Virudhunagar Textile Mills – VTM Ltd), டி.வி.எஸ். குழும நிறுவனங்கள், ராஜபாளையம் ராம்கோ குழும நிறுவனங்கள், முருகப்பா குழும நிறுவனங்கள், கோவை சாந்தி கியர்ஸ், சென்னையை தலைமையிடமாக கொண்ட வாகனத்துறை தயாரிப்பு மற்றும் உபகரணங்களில் உள்ள தமிழக நிறுவனங்களை அலசலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதம் – மார்ச் 2020

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதம் – மார்ச் 2020

India’s Q4FY20 GDP to 3.1 Percent and 4.2 Percent in FY2019-20

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த வளர்ச்சி அறிக்கை, தேசிய புள்ளியியல் மையத்தால் இன்று அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் (Jan – Mar 2020) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக அறிவித்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் 4.7 சதவீதமாக இருந்த நிலையில், நான்காம் காலாண்டான மார்ச் காலத்தில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு அதிகரித்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட ஊரடங்கு காலம் ஒரு வாரமாக இருந்ததால், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படவில்லை.

உலகின் மொத்த பொருளாதார உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 2.31 சதவீதமாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி எண்களும் மற்றும் அதன் மதிப்பீடுகளும் திருத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்த வளர்ச்சி தற்போது 5.2 சதவீதமாக குறைத்து திருத்தப்பட்டுள்ளது.

இது போல இரண்டாம் காலாண்டில் 5.1 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகவும், மூன்றாம் காலாண்டில் இருந்த 4.7 சதவீதத்தை 4.1 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது. பொருளாதார மொத்த மதிப்பு (GVA) 2019-20ம் நிதியாண்டில் 3.9 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஏப்ரல் மாத துறை சார்ந்த(Core Sector) தகவல்களும் வெளியிடப்பட்டன. நாட்டின் முக்கிய எட்டு துறைகள் சார்ந்த குறியீடு ஏப்ரல் மாதத்தில் (-38) சதவீதமாக உள்ளது. இது மார்ச் மாதத்தில் (-9) சதவீதமாக இருந்துள்ளது. நிலக்கரி துறை 15.50 சதவீதமும், எஃகு துறை(Steel) 84 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. சிமெண்ட் துறை அதிகபட்சமாக 86 சதவீதமும், இயற்கை எரிவாயு 20 சதவீதமும் வீழ்ச்சி பெற்றுள்ளது. உரம் மற்றும் கச்சா எண்ணெய்யும் 5 சதவீதத்திற்கு மேல் ஏப்ரல் மாதத்தில் இறக்கமடைந்துள்ளது.

சொல்லப்பட்ட மார்ச் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP growth) 16 வருட குறைவான அளவாக சொல்லப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி எண்களில் திருத்தம் செய்யப்படாத பட்சத்தில், அது இருபது வருடங்களுக்கு மேலான குறைவாக காணப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2019-20ம் நிதியாண்டில் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை(Revenue & Fiscal Deficit) அதிகமாக ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பில் 122 சதவீதம் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.59 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த இலக்கு 3.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல வருவாய் பற்றாக்குறை மூன்று சதவீதத்திற்கு மேலாக இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

.

கதை சொல்லி – பாகம் 2 – பங்குகளும், அதன் மதிப்பீடுகளும்

கதை சொல்லி – பாகம் 2 – பங்குகளும், அதன் மதிப்பீடுகளும் 

Story Teller 2 – Stocks & Valuation – Webinar Meet

பங்குச்சந்தையின் வரலாற்றை படிப்பதை விட, பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனத்தின் கதையை ஒரு மணிநேரம் படித்தாலே போதும், நாம் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கும் சூட்சுமத்தை அறிந்து கொள்ளலாம். பங்குகள் வெறும் எண்கள் அல்ல, அவை தொழிலின் மூலதனம்.

நம்மை சுற்றி, நாம் தினம் தினம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவையினை அளிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை. மக்களின் மூலதனம் மற்றும் நுகர்வு தன்மையால் அந்த நிறுவனங்கள் லாபம் காண்கின்றன. அதே வேளையில் நுகர்வோராக மட்டுமே இருப்பதில் நமக்கு என்ன பலன் பெரிதாக இருக்க போகிறது ?

இந்த வார ஞாயிற்றுக்கிழமை(31-05-2020) அன்று பங்குகளின் கதைகளை பற்றி பேச உள்ளோம். வாருங்கள், பங்குகளின் தரத்தை எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும், பங்குகளில் சூதாட நினைத்தால் அதன் விளைவு என்ன, பங்குச்சந்தையில் அடிப்படை கற்றலை பெறுவது எப்படி, நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை பற்றி விவாதிக்க உள்ளோம்.

Story Teller II Online Meet

நடப்பில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி எந்தவிதமான சாதகம் மற்றும் பாதகங்களை ஏற்படுத்தும், பங்குச்சந்தை எண்களின் அடுத்த இரண்டு வருட முன்னெடுப்பு என்ன ஆகியவற்றை பற்றியும் பேச உள்ளோம்.

பண முதலீட்டை கொண்டு பணம் பண்ணும் கலை எவ்வாறு வெற்றி பெறுகிறது, புதிய பங்கு தொகுப்புகள்(Stock Portfolio) சார்ந்த செய்தியும் வெளியிடப்பட உள்ளது. நிகழ்ச்சி நிரலுக்கான பதிவுக்கு…

Registration – Stocks & Valuation (Story Teller II)  

பதிவுக்கு பின்பு, நிகழ்ச்சி நிரலுக்கான இணைப்பு உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil