மந்தமடைந்த வாகனத்துறை விற்பனை நிலவரம் – மே 2020
Weak Auto Sales Data in the month of May 2020 – SIAM
கொரோனா தாக்கத்தின் விளைவாக நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஒன்றரை வருடமாக மந்தநிலையில் இருந்த வாகனத்துறையின் விற்பனை மேலும் பாதித்தது. துறையில் உள்ள முக்கிய நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனத்தை கூட விற்க முடியாத நிலைக்கு சென்றன.
வாகனத்துறையின் மே மாதத்திற்கான விற்பனை நிலவரம் நேற்று வெளிவந்தது. மே மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு பிறகு ஊரடங்கு நிலை சற்று தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் தங்களது தொழிலை புரிய அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த மாதத்தில் மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவனம் 18,539 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் உள்ளூர் விற்பனையாக 13,888 வாகனங்களும், 4,651 வாகனங்கள் ஏற்றுமதியாக செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் மே மாதத்தில் விற்பனையான மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1,34,640 ஆகும். எனவே தற்போது சொல்லப்பட்ட வாகன விற்பனை கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, 86 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மே மாதம் இரண்டாம் வாரத்திற்கு பிறகு தான் தங்களது சேவை துவங்கப்பட்டதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது போல மஹிந்திரா நிறுவனம் மே மாத நிலவரமாக 9,560 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உள்ளூர் விற்பனையாக 9,076 வாகனங்களும், ஏற்றுமதியில் 484 வாகனங்களும் விற்கப்பட்டுள்ளன.
எனினும் கடந்த மாத விற்பனை வளர்ச்சி 79 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இரு சக்கர வாகன பிரிவில் உள்ள ஹீரோ மோட்டார் நிறுவனம்(Hero Motocorp) 1,12,682 வாகனங்களை மே மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் இதே காலத்தில் நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 6,52,028. ஆக தற்போதைய விற்பனை 83 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது.
சொல்லப்பட்ட வாகனங்களில் 3,834 வாகனங்களை ஹீரோ மோட்டார் நிறுவனம் ஏற்றுமதி(Exports) செய்துள்ளது. ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் பிரிவு 69 சதவீத விற்பனை வீழ்ச்சியை மே மாதத்தில் சந்தித்துள்ளது. இந்த இரு சக்கர வாகனம் மே மாதத்தில் 19,113 எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளது.
இது கடந்த 2019ம் ஆண்டின் இதே காலத்தில் நடந்த விற்பனையின் எண்ணிக்கை 62,371. அசோக் லேலண்ட் நிறுவனம் மே மாத விற்பனையாக 1,420 வாகனங்களை மட்டுமே கொண்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் சொல்லப்பட்ட காலத்தில் 13,172 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எனவே, தற்போதைய விற்பனை 89 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. அதே வேளையில் மஹிந்திரா டிராக்டர் விற்பனை 2 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. வரக்கூடிய மாதங்களில் வாகன விற்பனை ஊக்குவிக்கப்படுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமூக இடைவெளி காரணமாக பொது போக்குவரத்தை தவிர்க்கும் பட்சத்தில் வாகன விற்பனை சிறிதளவு அதிகரிக்கலாம். ஆனால், வாகனத்துறை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சவாலான விஷயங்களை எதிர்கொண்டு வருகிறது. நாட்டில் நுகர்வு தன்மையை அதிகப்படுத்தினால் மட்டுமே, இதன் விற்பனை வளர்ச்சி வரும் நாட்களில் அதிகரிக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை