பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு 

The Peon to Pidilite Industries – Fevicol Branding

1925ம் ஆண்டு குஜராத் மாநிலம் மகுவாவில் பிறந்த பல்வந்த் தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்து விட்டு, பம்பாயில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றார். படித்தது என்னவோ சட்டக்கல்வி, ஆனால் வேலைக்கு சென்றது சாயமிடுதல் மற்றும் அச்சக தொழிற்சாலைக்கு தான். சட்டம் சார்ந்த தனது படிப்பு வேலையை அவர் தனது வாழ்நாளில் ஒரு முறை கூட செயல்படுத்தவில்லை.

அச்சக துறையில் சலித்து போன அவர், மும்பையிலுள்ள மரச்சாமான்கள் செய்யும் ஒரு அலுவலகத்தில் பியூனாக வேலைக்கு சேர்ந்தார். அந்த அலுவலகத்தின் பட்டறையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பல்வந்துக்கு(Balvant Parekh) தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை அவ்வப்போது ஏற்பட்டது. தொழில் செய்ய வேண்டுமென்றால் என்ன தொழில் செய்யலாம் மற்றும் தொழிலுக்கான முதலீட்டை தயார் செய்ய வேண்டுமே என்ற சிந்தனையும் அவரது மனதில் ஓடியது.

ஒரு முறை தனது நண்பர் ஒருவரின் மூலம் தொழில் செய்வதற்கான முதலீட்டை பெற முனைந்தார். பின்பு அவருடைய உதவியில் மோகன் என்பவர் அறிமுகமானார். மோகன் முதலீடு செய்ய தயாராக, பல்வந்த் தனது வேலையை விட்டு விட்டு சொந்த தொழிலில் களம் இறங்கினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து காகித சாயங்கள்(Paper Dye), பாக்கு கொட்டைகள், சைக்கிள் போன்றவற்றை இறக்குமதி செய்து, விற்பனை செய்வது – இது தான் பல்வந்தின் தொழில். தொழிலில் சக்கை போடு போட்டார். தொழில் சார்ந்த புதிய மனிதர்களுடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.

இறக்குமதி தொழிலில் இருந்ததால், ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெட்கோ(Fedco) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு பல்வந்த்துக்கு கிடைத்தது. 50 சதவீத பங்களிப்புடன் கூட்டாளியாக பெட்கோ நிறுவனத்தில் இணைந்தார். பெட்கோ நிறுவனத்தின் வாயிலாக மற்றொரு ஜெர்மன் நிறுவனத்தை கண்டறிந்தார் பல்வந்த், உடனடியாக அங்கும் சென்றார். ஹோஸ்ட்(Hoechst) என்ற ஜெர்மன் நிறுவனம் ரசாயன தொழிலில் இருந்து வந்தது. இது தற்போதைய சனோபி பார்மா(Sanofi Pharma) நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது.

ஹோஸ்ட் நிறுவனத்தில் இவரது தொழில் பங்களிப்பு இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் மறைவுக்கு பின், நிறுவனம் நேரடி விற்பனைக்கு தயாரானது. பின்னர் 1954ம் ஆண்டு உள்நாட்டுக்கு வந்த பல்வந்த் தொழில் அனுபவத்தை கொண்டு தனது சகோதரர்களுடன் மும்பையில், ‘பரேக் டை கெமிக்கல்’ நிறுவனத்தை துவங்கினார். ஜெர்மனியிலிருந்து தொழில்துறைக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் நிறமிகளை இறக்குமதி செய்து அதற்கான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

பசை போன்ற ஒரு பொருளை தயாரித்து அதற்கு, ‘பெவிகால் -Fevicol’ என பெயர் சூட்டினார். ‘Col – கால்’ என்றால் ஜெர்மனி மொழியில் இரு விஷயங்களை இணைப்பதன் பொருளாம். பரேக் டை கெமிக்கல் நிறுவனமே(Parekh Dyechem) பின்னர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பல்வந்த் மறைவுக்கு பின் தற்போது அவரது மகன் மதுக்கர் பரேக் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். வினைல் கெமிக்கல் நிறுவனத்தின் தலைவராகவும், இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார். நாட்டின் 16வது பணக்காரராக மதுக்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.71,000 கோடி. நிறுவனத்திற்கான கடன் பெரிதாக எதுவுமில்லை. இந்த துறையில் சந்தை முன்னணியாகவும் நிறுவனம் திகழ்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம் 47 மடங்கில் உள்ளது. பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 16 மடங்காக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதம் மற்றும் நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் குறைந்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 158 கோடி ரூபாயாக சொல்லப்பட்ட நிலையில், இது 33 சதவீத குறைவாகும். எனினும் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் நீண்டகாலத்தில் நன்றாக உள்ளது.

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், லாபம் 24 சதவீதமாகவும் உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் 5 வருடங்களில் 26 சதவீதமும், பத்து வருட கால அளவில் 27 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,400 கோடியாக உள்ளது. 2010ம் ஆண்டு பிடிலைட் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.100 ஆக இருந்த நிலையில் இன்று 1400 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதுவரை மூன்று முறை போனஸ் பங்குகள் பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் இந்த நிறுவனம் பங்கு விலையில் மட்டும் அதிகமாக காணப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் இந்த பங்கு இறங்கும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் குறைவான அளவில் முதலீட்டிற்கு வாங்கி வைத்து கொள்ளலாம். பங்குகளை வாங்குவதற்கு அடிப்படை அலசல் அவசியம். எனவே தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முடிவு எடுப்பது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமா ? – உங்களுக்காக 3 பரஸ்பர நிதி திட்டங்கள்

உலகின் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமா ? –  உங்களுக்காக 3 பரஸ்பர நிதி திட்டங்கள் 

Best 3 Global Funds to Invest – Mutual Funds in 2020

நான் எப்போதும் சொல்லும் வாசகம் இது தான், ‘ நேரிடையாக பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு தங்கள் உபரி பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஊக வணிகம் மற்றும் சூதாடுவதை தவிர்க்க வேண்டும். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்கப்பெறும் எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீட்டின் மூலம் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெறலாம். இதன் மூலம் ஒருவரின் நிதி இலக்கை நிறைவு செய்யலாம். உங்கள் நிதி இலக்குகளுக்காக நேரிடையாக பங்குச்சந்தைக்கு வராதீர்கள்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது உங்களது உபரி பணத்தில் தான். செல்வ வளத்தை சேர்க்கவும், சமூகத்தில் தொண்டு செய்வதற்கான நிதியை பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் பெறுங்கள். ஆனால் உங்கள் நிதி இலக்குகளில் அதனை பரிசோதனை செய்ய வேண்டாம். பங்குகள் மூலம் சில வருடங்களில் நீங்கள் குட்டி அம்பானியாகி விட முடியாது. அதற்கு இரண்டு தலைமுறைகள் கஷ்டப்பட வேண்டும். நீண்டகால தன்மையும், பொறுமையும் அவசியம்.‘

வங்கிகளில் வட்டி விகிதங்கள் கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. இதற்கு இரண்டு விஷயங்களை காரணமாக எடுத்து கொள்ளலாம். ஒன்று பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இல்லையெனில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இது போல வேகமாக வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் பொதுவாக வட்டி விகிதம் குறைவாக தான் காணப்படும். அப்படியிருக்கும் போது வருங்காலங்களில் வங்கிகள் மூலம் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் அதிகமாக இருக்காது (அதிக பணவீக்க காலத்தை தவிர்த்து). எனவே அவற்றுக்கு மாற்றாக பார்க்கும் போது, இன்று பரஸ்பர நிதிகள்(Mutual Funds) பிரபலமடைந்து வருகிறது.

அதே வேளையில் பரஸ்பர நிதிகள் என்றாலே பங்குச்சந்தை தான் எனவும் எடுத்து கொள்ளக்கூடாது மற்றும் வருவாய் நன்றாக உள்ளது என அலட்சியத்துடனும் இருந்து விட கூடாது. பரஸ்பர நிதிகள் பல கலவை திட்டங்களை கொண்டவை. நீங்கள் பார்க்கும் சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், பத்திரங்களில் முதலீடு, வீட்டுமனை, தங்கம், பங்குகள் என பல பரிணாமங்களை பரஸ்பர நிதிகளில் ஒரு சேர காணலாம்.

இருப்பினும் ஒருவருடைய தேவை மற்றும் காலத்திற்கு ஏற்ப தான் பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ரிஸ்க் என்பது எந்த முதலீட்டிலும் உண்டு. குறைந்த ரிஸ்க்(No Risk or Low Risk) கொண்ட லிக்விட் பண்டுகள் முதல் அதிக ரிஸ்க் கொண்ட பங்கு சார்ந்த பண்டுகள்(High Risk) வரை இங்கு கிடைக்கப்பெறுகிறது. திட்ட ஆவணங்களை சரியாக படிப்பதும், தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

உலக பங்குச்சந்தை முதலீட்டில் நமது நாட்டின் சந்தை மதிப்பு மூன்று சதவீதமே. நம் நாட்டில் பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் மூன்று சதவீதத்திற்கு குறைவே. சமீபத்தில் பங்குச்சந்தையில் புதிய கணக்குகள் அதிகமாக துவங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவை கொரோனா காலத்தில் பங்குச்சந்தை மூலம் ஊக வணிகம் மற்றும் தினசரி வர்த்தகத்தில் பகுதி நேரமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தினால் தான். உண்மை புள்ளிவிவரம் என்னவெனில் நாட்டில் ஏப்ரல் மாதம் வரை சுமார் 4 கோடி டீமேட் கணக்குகள் உள்ளதாகவும், இவற்றில் ஒரு கோடிக்கும் குறைவாகவே செயல்பாட்டில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது தொடங்கப்பட்ட பங்குச்சந்தை கணக்குகளில் 75 சதவீதம் செயல்படாமல் இருந்துள்ளன. மீதம் சொல்லப்பட்ட ஒரு கோடிக்கும் குறைவான கணக்குகளில் முதலீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை பாதியை கூட பெறாது. இவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம், யார் உண்மையில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று… ஆம், பங்கு தரகர்களும், நீண்டகால முதலீட்டாளர்களும்.

வெளிநாட்டு நிறுவன பங்குகளில் நாம் நேரிடையாக முதலீடு செய்வதற்கான சாதனம் நமது பங்குச்சந்தை அமைப்புகளில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் வெளிநாட்டு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம். அப்படி காணும் போது, நாம் சிறந்த மூன்று திட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

  • பிராங்க்ளின் பீடர் அமெரிக்க முதலீட்டு வாய்ப்பு (Franklin India Feeder US Opportunities)
  • டி.எஸ்.பி. ப்ளாக்ராக் அமெரிக்க முதலீடு (DSP Blackrock US Flexible Equity)

மேலே சொல்லப்பட்ட மூன்று பரஸ்பர நிதிகளில் பராக் பரிக் உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மதிப்புமிக்க முதலீட்டாளர்களில் ஒருவராவார். இன்றும் மூன்று திட்டங்களை மட்டுமே கொண்டு செயல்படும் இந்த பரஸ்பர நிதி நிறுவனம் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறது.

வெறுமென உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல், முதலீட்டாளர்களுக்கு உலக நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் வாய்ப்பை பராக் பரிக் தருகிறது. இந்த பண்டுகளில் குறைந்தபட்ச முதலீடாக மாதாமாதம் ரூ. 1000 ஐ முதலீடு செய்யலாம். பராக் பரிக் நீண்டகால பங்கு திட்டம் தொடங்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகும். இதுவரை 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ. 3,200 கோடி.

கூகுள் (Alphabet), அமேசான், முகநூல்(Facebook), சுசூகி, மைக்ரோசாப்ட், எச்.டி.எப்.சி., ஐ.டி.சி., ஆரக்கிள், கேடிலா ஹெல்த்கேர் என பல முக்கிய நிறுவனங்களில் இந்த திட்டம் முதலீடு செய்யும். முதலீடு பரவலாக்கத்தில் 55 சதவீதம் பெரு நிறுவனங்களிலும்(Giant), லார்ஜ் கேப் 13 சதவீதம், மிட் கேப் 12 சதவீதம் மற்றும் மீதம் உள்ளவை சிறு நிறுவனங்களில்(Small cap) முதலீடு செய்யப்படும். அதிக ரிஸ்க் கொண்ட இந்த திட்டம் மல்டி கேப் முதலீட்டு பிரிவில் வருகிறது. நீண்டகால முதலீட்டிற்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

மற்ற பண்டுகளை பற்றி வரவிருக்கும் பதிவுகளில் காணலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

உலக நாடுகளின் போட்டி தரவரிசை: சிங்கப்பூருக்கு முதலிடம், சரிந்த அமெரிக்கா

உலக நாடுகளின் போட்டி தரவரிசை: சிங்கப்பூருக்கு முதலிடம், சரிந்த அமெரிக்கா 

World Competitiveness Ranking 2020 – Singapore tops in the list

ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மேலாண்மை மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம்(IMD) வணிகம் சார்ந்த கல்வி மையத்தை நடத்தி வருகிறது. உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் மற்றும் போட்டி திறனை கொண்ட நாடுகளின் பட்டியலையும் ஆராய்ந்து வெளியிடுகிறது.

ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும் இந்த பட்டியல் தற்போது 2020ம் ஆண்டுக்கான தர வரிசையை தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் போட்டி தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்திலும், ஹாங்காங் இரண்டாம் இடத்திலும்  இருந்தது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை பட்டியல் சார்ந்த தரவுகள் நான்கு முக்கிய பொருளாதார காரணிகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது. பொருளாதார செயல்பாடு(Economic Performance), அரசு செயல்திறன்(Government Efficiency), வணிக திறன்(Business Efficiency) மற்றும் உட்கட்டமைப்பு(Infrastructure) ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஆய்வுகள் நடைபெறுகிறது. 2020ம் ஆண்டின் இரண்டாம் இடத்தில் டென்மார்க், மூன்றாம் இடத்தில் ஸ்விட்சர்லாந்து உள்ளன.

நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் முறையே நெதர்லாந்து, ஹாங்காங் நாடுகள் உள்ளன. கடந்த முறை மூன்றாம் இடத்தில் இருந்த ஸ்வீடன் இம்முறை ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. நார்வே, கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் 7,8 மற்றும் ஒன்பதாவது இடத்தை அடைந்துள்ளன.

2019ம் ஆண்டு(World Competitiveness Ranking) மூன்றாம் இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சீன குடியரசில் உள்ள தைவான் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் சீன நாடு 14வது இடத்திலிருந்து 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா 43வது இடத்தில் உள்ளது. கடந்த வருடமும் இதே இடத்தில் இருந்தது, அதே நேரம் 2016ம் ஆண்டு 41வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகளவிலான நாடுகளின் பொருளாதார செயல்பாட்டில் இந்தியாவிற்கு 37வது இடமும், அரசு செயல்திறனில் 50வது இடமும் கிடைத்துள்ளது. தொழில்புரியும் திறனில் 32வது இடமும், உட்கட்டமைப்பில் 49வது இடமும் 2020ம் ஆண்டுக்கான பட்டியலில் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்த தரவுகளில் 63 நாடுகள் உள்ளன. 63வது இடத்தில் வெனிசுலா நாடு உள்ளது. முன்னணி பொருளாதார நாடுகளில் தற்போது அமெரிக்க மற்றும் சீன நாடுகள் தான் பின்னுக்கு சென்றுள்ளது. பொருளாதார செயல்பாட்டு காரணியை பொறுத்தவரை உள்நாட்டு பொருளாதார நிலவரம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, அந்நிய முதலீடு, வேலைவாய்ப்புகள் மற்றும் விலைவாசி ஆகியவைகளை கொண்டு அளவிடப்படுகிறது.

அரசு செயல்திறனை காணும் போது நிதி ஆதாரம், வரி சார்ந்த கொள்கைகள், நிறுவன கட்டமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு, வணிக சட்டங்கள் ஆகியவை முக்கிய புள்ளிவிவரங்களாக பெறப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா மோட்டார்ஸ் – நான்காம் காலாண்டில் ரூ.9,894 கோடி நிகர நஷ்டம்

டாட்டா மோட்டார்ஸ் – நான்காம் காலாண்டில் ரூ.9,894 கோடி நிகர நஷ்டம் 

Net Loss of Rs.9,894 Crore in Q4FY20 – Tata Motors

வாகனத்துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம். டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமாக விளங்கும் இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 3.07 லட்சம் கோடி ரூபாய். நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 82,800.

1945ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் உலகின் முக்கிய 500 நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. ரயில் இன்ஜின்கள், பயணிகளுக்கான பிரிவில் பெரு வாகனங்கள், லாரிகள், வேன்கள், பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள், கட்டுமான துறைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இங்கிலாந்தின் ஜாக்குவார் லேண்ட் ரோவர்(Jaguar Land Rover) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, டாட்டா நிறுவனத்திற்கு உலகளவில் பல சவால்கள் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட அரசு கொள்கைகளில் மாற்றம் ஜாக்குவார் விற்பனையை பதம் பார்த்தது. உள்நாட்டில் டாட்டா மோட்டார்ஸ் நல்ல விற்பனை வளர்ச்சியை கொண்டிருந்தாலும், ஜாக்குவார்(JLR) இழப்பை மட்டுமே சந்தித்து வருகிறது.

மின்னணு வாகன பிரிவில் டாட்டா மோட்டார்ஸ் முக்கிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் துறைக்கான ஆராய்ச்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் வெளிப்பாடு வரவிருக்கும் காலங்களில் தெரிய வரும். அதே வேளையில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி கடந்த நான்கு வருடங்களாக பெரிதும் பாதித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் வருவாய் ரூ. 62,493 கோடியாகவும், செலவினம் 61,806 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு பிந்தைய வருவாய் ரூ.9,894 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நான்காம் காலாண்டில் விற்பனையும் 30 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த நிதியாண்டிலும் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 12 சதவீதம் குறைவாக இருந்துள்ளது. இருப்பினும் 2018-19ம் நிதியாண்டை காட்டிலும் சென்ற நிதியாண்டில் நிகர நஷ்டம் குறைந்துள்ளது. ஆனால் லாப பாதைக்கு நிறுவனம் எப்போது திரும்பும் என்பது தான் முதலீட்டாளர்களின் கேள்வி.

கடந்த ஐந்து வருட காலத்தில் விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாகவும், லாப வளர்ச்சி எதிர்மறையாகவும் உள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் 40 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) மூன்று வருட காலத்தில் 6 சதவீதமாகவும், 5 வருடங்களில் 11 சதவீதமாகவும் உள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.33,300 கோடி. கடன்-பங்கு விகிதம் 1.83 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் ஒரு மடங்கு அளவிலும் உள்ளது. நிறுவனத்தின் கடன் மட்டும் ரூ. 95,465 கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும், 4 சதவீத பங்குகள் அடமானமாகவும் உள்ளது. அன்னிய முதலீட்டாளர்களின்(FII Holding) பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு

பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு 

Stock Market – Fundamental Analysis – 30 Hrs Sweet Spot Course

இந்திய பங்குச்சந்தையின் வரலாறு நீண்ட காலமானது. மும்பை பங்குச்சந்தையின்  வயது சுமார் 140 வருடங்களுக்கு மேல். வணிகத்தை பிரதானமாக கொண்டது தமிழகமும், நமது நாடும். நாம் இன்று பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தாலும், முன்னர் பார்த்திருந்தாலும் அடிப்படையில் நாம் ஒரு தொழில்முனைவோர்களே.

வேகமாக வளரும் நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியதுமானது. அதனை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட நம்மை போன்ற நாடுகளில் வேலை தேடுவதை காட்டிலும் தொழில்முனைவு புரிவதே அவசியம். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகும். அது போல தான் பங்குச்சந்தையிலும். ஊக வணிகத்தில் பணம் பண்ணுகிறேன் என கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பது ஆரோக்கியமானதல்ல.

பங்குச்சந்தைக்கும், நாட்டில் உள்ள தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் பெருமளவிலான தொடர்பு உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டில் காணும் ஒவ்வொரு பொருட்களிலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை காணலாம். தொட்டுணர கூடியதல்ல, பங்குச்சந்தை முதலீடு. ஆனால் நீங்கள் தொட்டுணர்ந்து பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்கள் மற்றும் சேவைகளிலும் பங்குச்சந்தை நிறுவனங்கள் தான் உள்ளது.

பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களை நமது தொழில் போல பாவித்து, அதன் அடிப்படை திறன்களை அலசி ஆராய்ந்து நீண்டகால நோக்கில் முதலீடு செய்வதே சிறந்தது. நல்ல நிறுவனங்களை கண்டறிவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்கு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை கற்றலுடன், நிறுவனங்களின் நிதி அறிக்கைகள்(Financial Reports) மற்றும் நிர்வாகத்தை(Management) மதிப்பிடுவது அவசியமாகும்.

இதற்கு ஒரு முதலீட்டாளராக நமக்கு தேவைப்படுவது பண்டமென்டல் அனாலிசிஸ்(Fundamental Analysis) என சொல்லப்படும் அடிப்படை பகுப்பாய்வு தான். பங்குச்சந்தையின் வர்த்தக ஏற்ற – இறக்கத்திற்கு அனைத்துமான மூதாதை தான் அடிப்படை பகுப்பாய்வு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர் ஒருவர் நம்மிடம் சிறிதளவு பண உதவி கேட்டாலே யோசிக்கும் நாம், பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதனை சிந்திக்க வேண்டும்.

வெறுமென பங்குகளை வாங்கி வைத்தால், லாபமோ அல்லது செல்வத்தையோ ஏற்படுத்த முடியாது. அதற்கான விதை சரியாக இருப்பது அவசியமாகும். வர்த்தக மதுரை சார்பாக பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு வகுப்பை துவங்க உள்ளோம். பங்குச்சந்தையில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் ? அப்படி  செய்யாவிட்டால் நாம் சம்பாதிக்கும் பணம் யாரோ ஒருவரால் முதலீடு செய்யப்பட்டு, அவர் பணக்காரராக மாறுவதற்கான வாய்ப்பு ஏன் ஏற்பட்டது ?

சரியான விலையில் பங்குகளை வாங்குவது எப்படி ?

சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வேறுபாடு என்ன ?

பங்கு முதலீட்டில் நஷ்டத்தை எவ்வாறு தவிர்க்கலாம் ?

மதிப்புமிக்க முதலீட்டாளர்களின்(Value Investors) செல்வத்தை நாமும் பெறுவது எப்படி ?

பங்குகள் மூலம் எவ்வாறு சொத்துக்களை(Financial Assets) ஏற்படுத்தலாம் ?

மோசமான நிர்வாகத்தையும், நஷ்டத்தை ஏற்படுத்தும் பங்குகளையும் கண்டறிவது எப்படி ?

பங்குச்சந்தையில் கூட்டு வட்டியின் மகிமை(Power of Compounding) என்ன ?

பணத்தின் மூலம் பணம் பண்ணும்(Money works for you) உண்மை சூத்திரம் என்ன ?

வாருங்கள், இது போன்ற கேள்விகளுக்கான விடையாக பங்குச்சந்தை அடிப்படை கற்றலை ஏற்படுத்துவோம்.

பதிவு செய்ய…

Stock Market – Fundamental Analysis Course – Registration 

கட்டணம்: ரூ. 4,500/- 

இணைய வகுப்பு சலுகை(Online Course):  ரூ. 2250/- மட்டுமே 

பதிவுக்கு பின் வகுப்புக்கான நாள் மற்றும் நேரம், இணைப்பு ஆகியவை உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Fundamental Analysis Course

புத்தகத்தின் வாயிலாக மட்டுமே கற்க விரும்புபவர்களுக்கு…

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – How to pick the right stock in the Share market ?

புத்தக  விலை: ரூ. 228/- மட்டுமே

உரிமை துறப்பு(Disclaimer):

மேலே சொல்லப்பட்ட நிகழ்வு (வகுப்புக்கள்) பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கற்றலுக்கு மட்டுமே. வகுப்புக்களில் சொல்லப்படும் பங்குகள் யாவும் மாதிரியாகவே(Examples) சொல்லப்படும். அவை வாங்க கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய பங்குகள் அல்ல. வர்த்தக மதுரை ஒரு நிதி சேவை(Financial Advisory Services) சார்ந்த நிறுவனம் ஆகும். நடத்தப்படும் வகுப்புகளுக்கு சான்றிதழ்கள், தரவரிசைகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது.

இது ஒரு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை வகுப்பு, தகவல் மற்றும் கற்றலுக்கு மட்டுமே.

பங்குகளில் உங்களுக்கு ஏற்படக்கூடிய லாப, நஷ்டங்களுக்கு இந்த தளம் பொறுப்பல்ல. பங்குகளில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகரை அணுகுவது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

திருச்சி பெல் நிறுவனம் – நான்காம் காலாண்டில் ரூ.1,533 கோடி நஷ்டம்

திருச்சி பெல் நிறுவனம் – நான்காம் காலாண்டில் ரூ.1,533 கோடி நஷ்டம் 

BHEL’s Net loss of Rs.1533 Crore in Q4FY20 – Quarterly Results

1964ம் ஆண்டு புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட அரசு பொதுத்துறை நிறுவனம் பெல் (Bharat Heavy Electricals Ltd – BHEL). நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமாக பெல் உள்ளது. உபகரணங்கள் வடிவமைப்பு, பொறியியல், கட்டுமானம், மின் பரிமாற்றம், போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எரிவாயு மற்றும் பாதுகாப்பு சார்ந்த சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் சுமார் 40,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பெல் நிறுவனத்தின் முக்கிய பொருட்களாக கொதிகலன்கள்(Boilers), மின்னணு மோட்டார்கள், நீராவி விசையாழிகள்(Turbines), ஜெனரேட்டர்கள், சுவிட்ச் கியர் மற்றும் சென்சார்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள், வெப்ப பரிமாற்றிகள்(Heat Exchangers) என பலவகைகளில் உள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றப்பட்டது. இந்திய ரயில்வே ஆயிரத்துக்கும் மேலான எலக்ட்ரிக் இன்ஜின்களை பெல் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. இந்திய ராணுவத்திற்கு தேவையான முக்கிய சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கி வந்துள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.11,000 கோடி. புத்தக மதிப்பு 82 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.18 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் எதிர்மறையாக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாகவும், நிகர சொத்து மதிப்பு ரூ.28,660 கோடியாக உள்ளது.

விற்பனை மற்றும் லாப வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி வளரவில்லை. கடந்த பத்து வருடங்களில் விற்பனை வளர்ச்சி ஒரு சதவீதமாகவும், லாப வளர்ச்சி (-11 %) எதுவுமில்லாமல் உள்ளது. இந்த பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் 55 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) பத்து வருடங்களில் 11 சதவீதமாக உள்ளது.

2018-19ம் நிதியாண்டில் வருவாய் 30,368 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் ரூ. 1,012 கோடி. ஆனால் 2019-20ம் நிதியாண்டில் நிறுவனம் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,050 கோடியாகவும், செலவினம் ரூ.5,609 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. எனவே இயக்க லாபமே(Operating Loss) நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ.1,533 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ.27,964 கோடியாக உள்ளது. நிறுவனத்திற்கு தேவையான பணவரத்து சரிவர இல்லை. மின்சார வாகனங்கள் மற்றும் அதற்கு தேவையான பேட்டரி ஆய்வில் இந்த நிறுவனம் ஈடுபட போவதாக உள்ள செய்திகள் மட்டுமே சாதகமாக உள்ளது. எனினும் அதற்கான ஊக்குவிப்பு தற்போதைய நிலையில் தாமதமாகலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஏப்ரல் மாத தொழில்துறை உற்பத்தி 55 சதவீத வீழ்ச்சி – முழு தகவலும் வெளியிடப்படவில்லை

ஏப்ரல் மாத தொழில்துறை உற்பத்தி 55 சதவீத வீழ்ச்சி – முழு தகவலும் வெளியிடப்படவில்லை  

India’s IIP number falls 55.5 Percent in the month of April 2020

பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிட அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவர். மொத்த உள்நாட்டு உற்பத்தியை(GDP) பெற பல்வேறு துறைகளில் உள்ள தொழில்களின் உற்பத்தி அளவை எடுத்து கொள்வது அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொழில்துறை உற்பத்தியின் அளவு எவ்வளவு நடந்துள்ளது என்ற தரவுகளை சேகரிக்க வேண்டும். இதனை ஒரு குறியீட்டின் மூலம் சந்தைக்கு தெரியப்படுத்துவது ஐ.ஐ.பி. என்று சொல்லக்கூடிய தொழில்துறை உற்பத்தி குறியீடாகும்(Index of Industrial Production).

தொழிற்துறை குறியீட்டில் கச்சா எண்ணெய், மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட், எஃகு, சுத்திகரிப்பு, எரிவாயு பொருட்கள் மற்றும் உரங்கள் ஆகிய தொழில்களின் உற்பத்தி அளவு சொல்லப்பட்டிருக்கும். நாம் மேலே சொன்ன எட்டு தொழில்களும், நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டில் நாற்பது சதவீத இடத்தை பிடித்துள்ளன.

இது போன்ற தரவுகளை சேகரித்து நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டை வெளியிடுவது மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமாகும். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட முதல் ஊரடங்கின் போது(Covid-19 Lock down), பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் இயங்கவில்லை.

வாகனத்துறையை சார்ந்த நிறுவனங்களும் எந்தவித தயாரிப்பு மற்றும் விற்பனையை செய்ய முடியவில்லை. நுகர்வோர் நீடித்த பொருட்கள்(Consumer Durables), உட்கட்டமைப்பு, கட்டுமான பொருட்கள் மற்றும் மூலதன பொருட்களின் உற்பத்தி மிகவும் சரிந்துள்ளது.

ஏப்ரல் மாத நாட்டின் தொழிற்துறை உற்பத்தி சார்ந்த தகவல் மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 55.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஓரளவு எதிர்பார்த்த தகவல்கள் தான் எனினும் முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உற்பத்தி துறை குறியீடு 64 சதவீதமும், சுரங்க தொழிலில் 27 சதவீதமும், மின்சார உற்பத்தியில் 22.5 சதவீதமும் ஏப்ரல் மாத காலத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தொழிலை சொல்லப்பட்ட காலத்தில் செய்யவில்லை என்பதனையும் அரசு தரவுகள் தெரிவித்துள்ளது. முழுமையான தகவல்கள் வெளிவராததால், இதற்கு முந்தைய காலத்துடன் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை ஒப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வரக்கூடிய காலங்களில் இது சார்ந்த தகவல்கள் முழுமையாக தெரியக்கூடும் எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட தரவுகள் மூலம் உண்மையில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டி காட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 10 சதவீதம் வீழ்ச்சியை கண்டிருந்தது. முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 126.5 புள்ளிகளாக இருந்த தொழிற்துறை உற்பத்தி குறியீட்டு அளவு தற்போது 56.3 புள்ளிகளாக உள்ளது. முழுமை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பேங்கோ புரொடக்ட்ஸ்(Banco Products) – காலாண்டு நிகர லாபம் ரூ. 17 கோடி

பேங்கோ புரொடக்ட்ஸ்(Banco Products) – காலாண்டு நிகர லாபம் ரூ. 17 கோடி 

Banco Product’s Net profit of Rs.17 Crore as Consolidated – Q4FY20

குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் பேங்கோ புரொடக்ட்ஸ்(Banco Products). கடந்த 1961ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ரயில் இன்ஜின்களுக்கான இயந்திர குளிரூட்டும் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.

நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள், பேருந்துகள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு தேவையான இயந்திர குளிரூட்டும் சாதனங்களையும்(Engine Cooling & Sealing Systems, Radiators) தயாரித்து வந்தது. இதன் முக்கிய வாடிக்கையாளர்களாக இந்திய ரயில்வே, டாட்டா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மாருதி, ஹீரோ, ஹோண்டா, டி.வி.எஸ். குழுமம், டாப்பே(Tafe) மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் உள்ளது.

ரேடியட்டர் மற்றும் கேஸ்கெட் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் பேங்கோ புரொடக்ட்ஸ் திகழ்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. கடந்த 1987ம் ஆண்டு பங்குச்சந்தையில் நிறுவனம் பட்டியலிடப்பட்டது.

2010ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டை சேர்ந்த முன்னணி நிறுவனமான என்.ஆர்.எப்.(NRF B.V) ஐ 100 சதவீத பங்குகளுடன் கையகப்படுத்தியது. மின்னணு வாகனங்கள் சார்ந்த தொழிலிலும் இந்நிறுவனம் அங்கம் வகிக்கிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.500 கோடி. புத்தக மதிப்பு 120 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.10 ஆகவும் உள்ளது.

வட்டி பாதுகாப்பு விகிதம் 37 மடங்கிலும், நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 68 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் அடமான பங்குகள் எதுவுமில்லை. நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ. 855 கோடி. இருப்புநிலை கையிருப்பு 696 கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 332 கோடி ரூபாயாகவும், செலவினம் 298 கோடி ரூபாயாக உள்ளது. இதர வருமானமாக 7 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.17 கோடி. கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய லாபம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே வேளையில் நிதியாண்டு முழுவதையும் ஒப்பிடும் போது, 2019-20ம் நிதியாண்டில் லாபம் 43 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 10 சதவீதமாகவும், லாபம் 11 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் 47 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) ஐந்து வருடங்களில் 18 சதவீதமாகவும், 10 வருடங்களில் 19 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்திற்கான பணவரத்து(Positive Cash Flow) நேர்மறையாக உள்ளது. சென்ற நிதியாண்டில் பங்கு ஒன்றுக்கு 23 ரூபாய் டிவிடெண்ட் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் ஆண்டு வரை வட்டி விகிதத்தை உயர்த்த போவதில்லை – அமெரிக்க மத்திய வங்கி

2022ம் ஆண்டு வரை வட்டி விகிதத்தை உயர்த்த போவதில்லை – அமெரிக்க மத்திய வங்கி 

US Fed Rate Policy – No interest hike till 2022 – Recession

வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் சுமார் 21.2 லட்சம் கோடி டாலர்கள். அதாவது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காட்டிலும் 8 மடங்கில் அமெரிக்காவின் பொருளாதாரம் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்படைந்தது அமெரிக்கா தான் – தொற்று எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அங்கு தான் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த நாட்டில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் அதனை சார்ந்த பொருளாதார சரிவும் அதிகமாக உள்ளது.

நடப்பில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை உறுதி செய்துள்ளன. இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் நாட்டில் நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் முதல் பொருளாதார மந்தநிலை(Official Recession) இருப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் முன்னெடுப்பாக சுமார் 2 டிரில்லியன் டாலர்களை  கொண்ட பொருளாதார ஊக்குவிப்பை ஏற்படுத்தின. குடும்பத்தில் உள்ள தனிநபர் ஒருவருக்கு மாதாமாதம் 1000 டாலர்கள் என்ற அளவில் நேரிடையாக பணத்தை வழங்கவும் செய்தன.

அடுத்து வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கை இருக்கும் எனவும், கூடுதலான தொகை மக்களிடம் அளிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இவற்றில் அமெரிக்காவின் பெடரல்(US Fed) என சொல்லப்படும் மத்திய வங்கியின் செயல்பாடு முக்கியமானது. தன்னிச்சையாக செயல்படும் பெடரல் அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய வட்டி விகிதத்தையும் அதிரடியாக குறைத்தது.

நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்வதை சற்று சரிசெய்ய வட்டி விகித குறைப்பு பலனளிக்கும். நடப்பில் அமெரிக்காவின் வட்டி விகிதம்(Interest rate) 0-0.25 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நேற்று நடந்த நிகழ்வில் வட்டி விகிதத்தை 2022ம் ஆண்டு வரை உயர்த்தும் எண்ணம் இல்லை எனவும், தற்போது நிலவும் பூஜ்யத்துக்கு அருகில் உள்ள வட்டி விகிதம் தான் தொடரும் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

இப்போது ஏற்படுத்தியிருக்கும் அவசரகால கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும், அடுத்த சில மாதங்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும் எனவும் சொல்லியுள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்காவை கவலையடைய செய்வது வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பதும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவதும் தான்.

அடுத்து வரும் நாட்களில் தனிநபர் ஒருவருக்கு 1200 டாலர்கள் வீதம் பணம் வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. அதே நேரம் இது போன்ற சூழல் வெகு நாட்கள் தொடரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை நீண்டகால மந்தநிலைக்கு கொண்டு செல்லும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

2020-21ம் நிதியாண்டில் வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகள் விரைவாக பொருளாதாரத்தில் மீண்டெழும் என பல மதிப்பீட்டு நிறுவனங்கள் கூறியுள்ளன. எது எப்படியோ இருக்க, அமெரிக்காவின் இயல்பு பொருளாதாரத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவது தான். அதே வேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் கடன் விகிதமும் முக்கியத்துவம் பெறுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஊரடங்கு காலத்தில் குறைந்த சரக்கு வருவாய் – இந்திய ரயில்வே

ஊரடங்கு காலத்தில் குறைந்த சரக்கு வருவாய் – இந்திய ரயில்வே 

Revenue declined during the Nationwide Lock down – Indian Railways

நாட்டின் மிகப்பெரிய மத்திய அரசு நிறுவனமாகவும், உலகின் 4வது மிகப்பெரிய ரயில் தடங்களை கொண்ட நிறுவனமாகவும் இந்திய ரயில்வே வலம் வருகிறது. சுமார் 96,000 கிலோமீட்டர் பாதை நீளத்தை கொண்ட இந்நிறுவனம் நாளொன்றுக்கு 20,000 பயணிகள் ரயில் போக்குவரத்தை இயக்கி வருகிறது.

இந்திய ரயில்வேயின் வருவாய் 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 12.3 லட்சம். மத்திய ரயில்வே அமைச்சராக தற்போது திரு. பியூஸ் கோயல் பதவி வகிக்கிறார். 175 வருடங்கள் பழமையான நிறுவனமாக இருக்கும் இந்திய ரயில்வே முதன்முறையாக தனது ரயில் சேவையை கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தியது.

மார்ச் 24ம் தேதி துவங்கிய ஊரடங்கு காலத்தில், சுமார் 48 நாட்கள் தனது பயணிகள் ரயில் போக்குவரத்தை நிறுத்தியது. நிறுத்தப்பட்ட பயணிகள் சேவை ரயில்களின் எண்ணிக்கை மட்டும் 13,523. இந்த ஊரடங்கு காலத்தின் போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்வதற்கான சிறப்பு பயணிகள் ரயில்களையும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான சரக்கு ரயில்களையும் இந்திய ரயில்வே இயக்கியது.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்த 2019ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த பங்கின் விலை ஆரம்பநிலையில் சுமார் 112 மடங்கு அளவில் பங்குதாரர்களிடம் கேட்கப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி. 2019-20ம் நிதியாண்டில் ரூ.1506 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு, உணவு விநியோகித்தல் மற்றும் சுற்றுலா சார்ந்த சேவைகளை ஐ.ஆர்.சி.டி.சி. வழங்குகிறது. 2019ம் ஆண்டு கணக்கின் படி, சுமார் 2 கோடி பயனாளர்கள் இதன் இணையதளத்தை பயன்படுத்தி ரயில் பயண முன்பதிவை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே நிறுவனத்தை பொறுத்தவரை மூன்று விதங்களில் வருவாய் ஈட்ட பெறுவதாக சொல்லப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில், சரக்கு ரயில் மூலமான வருவாய் மற்றும் இதர வருவாயாக மூன்று வருவாய்களை கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ரயில்வே வருவாய் வளர்ச்சி சீராக வந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலத்தில், பயணிகள் ரயில் சேவை பெரிதாக எதுவுமில்லை. நாடு முழுவதும் இயங்கிய சில சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போதைய கணக்கில் உள்ளன.

சரக்கு ரயில்களை(Frieght Earnings) பொறுத்தவரையில் உணவு தானியங்கள், உரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்படும். ஆனால் இம்முறை சொல்லப்பட்ட காலத்தின் சரக்கு வருவாய் சுமார் 38 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சரக்கு கையாளப்படும் அளவிலும் 28 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.

ஏப்ரல்-மே காலத்தில் நிலக்கரி போக்குவரத்து ரூ. 5,778 கோடிக்கு நடந்துள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலத்தில் ரூ.11,030 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக நிலக்கரி மூலமான வருவாய் 90 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இது போல சிமெண்ட் வருவாயும் 100 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. கடந்த வருடம் ரூ.1,630 கோடியாக இருந்த சிமெண்ட் மூலமான வருவாய் இம்முறை 730 கோடி ரூபாயாக உள்ளது.

அதே வேளையில் உணவு தேவை அதிகரித்ததால், உணவு தானியங்களின் வருவாய் 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. வடக்கு ரயில்வேயின் அம்பாலா பிரிவில்(Ambala Division) சரக்கு வருவாய் ஏப்ரல்-மே காலத்தில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் ரூ.130 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருவாய் இம்முறை 235 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட உணவு தானியங்கள் மூலமான வருவாய் தான்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil