2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

Best 5 Funds for you to invest in 2022 – Mutual Fund investments

கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் அபரிதமாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பு இருந்ததென்றால், அது 2020ம் ஆண்டின் கொரோனா கால துவக்கம் தான். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகளவில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார வீழ்ச்சி, பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை தந்தது எனலாம்.

மீண்டும் ஒரு பெருத்த வீழ்ச்சி உடனடியாக ஏற்படுமா என்றால், உலக சந்தையை கணிக்க பெரும் பணக்காரரர்களாலும், ஆகச்சிறந்த பொருளாதார வல்லுனர்களாலும் முடியாது. அதே வேளையில், அவர்களால் அடிப்படை பொருளாதார காரணிகளை புரிந்து எச்சரிக்கை செய்ய முடியும். அதிக ஏற்றமிருந்தால் இறக்கம் ஏற்படுவது உறுதி, இது போல இறக்கம் என ஒன்றிருந்தால் ஏற்றமும் சாத்தியமே.

பங்கு முதலீட்டில் பெரும்பாலோர் தோற்பது இரண்டு காரணிகளால் தான் – குறுகிய காலத்தில் பேராசை மற்றும் சந்தையை கணிக்கிறேன் என தவறான முதலீட்டு முடிவை எடுப்பது. எந்தவித சலனமும் இல்லாமல் நீண்ட காலத்தில் தொடர் முதலீடு செய்து வருபவர்களே எப்போதும் வெற்றி வாகை சூடுகின்றனர்.

‘ பங்கு முதலீட்டை என்னால் சரிவர கையாள முடியவில்லை’ என்பவர்கள் அதற்கென துறை சார்ந்த ஆலோசகர்களை வைத்து கொள்ளலாம். இதற்கான கட்டணமும் உண்டு. இலவசமாக உங்களுக்கு யாரும் பெரும் செல்வத்தை அளித்து விட முடியாது. எனவே ஆலோசனை பெறுபவர்களிடமும் கவனம் வேண்டும்.

சந்தையில் நேரடியாக முதலீடு செய்து கண்காணிக்க நேரமில்லை என்பவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) செய்யப்படும் முதலீடு உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு துணை புரிய கால அளவுகளை(Goal Period) ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்கு லிக்விட் மற்றும் கடன் பண்டுகள்(Liquid and Debt Mutual Funds), நடுத்தர கால தேவைகளுக்கு ஹைபிரிட் மற்றும் மல்டி அஸெட் பண்டுகள்(Hybrid and Multi Asset), நீண்ட காலத்திற்கு பங்கு சார்ந்த பண்டுகள்(Equity oriented) என பிரித்து முதலீடு செய்யலாம்.

அஸெட் அலோகேஷன் முறையில் பிரித்து முதலீடு செய்யும் போது சந்தை ஏற்ற-இறக்கத்தை பற்றிய கவலையில்லை. தங்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் நமது முதலீட்டை பெரிதாக பாதிக்காது. அது போன்ற கலவையுடன் உள்ள ஐந்து பண்டுகள் உங்களுக்காக. கடந்த காலங்களில் இந்த பண்டுகள் அளித்த வருவாய், பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் ரிஸ்க் தன்மை ஆகியவை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் குறிப்பிடப்பட்ட கடந்த கால வருவாய், எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் இவை பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்கும். சொல்லப்பட்ட பண்டுகள் அனைத்தும் பணப்புழக்கம்(Liquidity), முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification & Asset Allocation), வரி சேமிப்பு, உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்பு(Global Equity exposure) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

  • Aditya Birla Sun Life(ABSL) Gold Fund

  • HDFC Multi Asset Fund

  • PGIM India Midcap Opportunities Fund

  • Mirae Asset Tax Saver Fund

  • Parag Parikh(PPFAS) Flexi Cap Fund

Mutual funds 2022

வரக்கூடிய 2022ம் வருடம் நமக்கு எப்படியிருக்கும் என நம்மால் கணிக்க இயலாது. நாமும் ஒவ்வொரு வருடமும் புதிய இலக்குகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். 2022ம் ஆண்டுக்கான உங்கள் நிதி இலக்குகளுக்கு சொல்லப்பட்ட பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். பின்னாளில் இந்த முதலீட்டு பெருக்கம் உங்களை நிதி சார்ந்து பாதுகாக்கும்.

குறிப்பு: மேலே உள்ள பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர் முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

How to track the Stocks(Shares) fundamentally ?

பங்குச்சந்தையில் நாம் காணும் அனைத்து பங்குகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் வர்த்தகமாகும் என சொல்லிவிட முடியாது. பொதுவாக லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் நிறுவன பங்குகள் பெரும்பாலும் அனைத்து நாட்களிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கும். அதே வேளையில் ஸ்மால் கேப் பங்குகள் அப்படியல்ல. அவற்றில் வர்த்தக புழக்கம்(Liquidity) பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) அதிகமாக இருத்தல், பெரு நிறுவன முதலீட்டாளர்களிடம்(Institutional Investors) கைவசம் இல்லாதது மற்றும் பொதுவெளியில் மிகவும் குறைவான பங்குகளே அமைந்திருப்பது அதன் வர்த்தக புழக்கத்திற்கு காரணமாக அமையும். இருப்பினும் ‘மல்டி பேக்கர்(Multibagger)’ என சொல்லக்கூடிய பல மடங்கு லாபத்தை அளிக்கவல்லது இந்த ஸ்மால் கேப் நிறுவன பங்குகள்.

அதிக பங்குகளை கொண்டு வர்த்தகமாகும் அல்லது ஒரே நாளில் வர்த்தக அளவை அதிகமாக கொண்டிருக்கும் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்தில் வருவாயை அளிக்கும் என நாம் சொல்ல இயலாது. இதற்கு உதாரணமாக யூனிடெக், ஜே.பி.அசோசியேட்ஸ், யெஸ் பேங்க்,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வோடபோன், ஜெட் ஏர்வேஸ் போன்ற பங்குகளை சொல்லலாம். நாள் வணிகத்துக்கு(Day Trading) இவை ஏற்றவையாக தெரிந்தாலும், உண்மையில் முதலீடு செய்பவர்களுக்கு நட்டத்தை மட்டும் தான் கொடுத்துள்ளன.

“A stock is not just a ticker symbol or an electronic blip; it is an ownership interest in an actual business, with an underlying value that does not depend on its share price.” – Benjamin Graham(Father of Value Investing), The Intelligent Investor

“ பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் என்பது வெறும் எண்கள் அல்ல. அவை ஒரு நிறுவனத்தின் தொழிலில் உங்களுக்கான உரிமையாகும். உண்மையான தொழிலின் மதிப்பு என்பது அதன் பங்கு விலையை சார்ந்திருக்க  வேண்டும் என்று அவசியமில்லை “ என முதலீட்டின் தந்தை என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் கூறுகிறார்.

நீண்டகாலத்தில் பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் செல்வத்தை ஏற்படுத்த வெறுமனே பங்குகளை வாங்கி விட்டால் மட்டும் போதாது. அதனை நமது சொந்த தொழிலை போல கண்காணிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • காலாண்டு முடிவுகளும், ஆண்டு பொதுக்கூட்டமும்:

சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் தனது தொழிலுக்கான காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை வெளியிட வேண்டியது அவசியம். இது அவர்களுக்கானதல்ல, நம்மை போன்ற முதலீட்டாளர்கள், நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் நிதிநிலை  அறிக்கைகளை(Financial Statements) அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. நிறுவனம் பின்னொரு காலத்தில் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாம் இது போன்ற முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் விற்பனையும், லாபமும் ஒவ்வொரு காலாண்டிலும் எப்படி உள்ளது, இதர வருமானம்(Other income) மட்டுமே அதிகரித்து வருகிறதா, நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு, நிறுவனர்களின் பங்கு அடமானம், பங்குதாரர்களின் பங்களிப்பு(Shareholding Pattern), டிவிடெண்ட் அறிவிக்கப்படும் தேதி என அனைத்து தகவல்களையும் ஒருசேர காலாண்டு முடிவுகளில் பெற்று விடலாம். இதன் வாயிலாக பிற்காலத்தில் நமது முதலீட்டு முடிவை பரிசீலிக்க இவை உதவும்.

காலாண்டு முடிவுகளும், நிதியாண்டுக்கான நிதி அறிக்கைகளும் இணையத்தில்(BSE, NSE, Company website) எப்போதும் கிடைக்கப்பெறுகிறது. அதனை சரியான காலத்தில் வாசிப்பது முதலீட்டாளரான நமது கடமை. நிறுவனம் சார்பாக ஆண்டுக்கொரு முறை பங்குதாரர்கள் கூட்டமும்(Annual General Meeting – AGM) நடைபெறுகிறது. இணையவழி மற்றும் நேரடியாக சென்றும் இது போன்ற நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டு, நிறுவனத்தின் மீது நமக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தொழில் சார்ந்த பொதுவான கேள்விகளையும் நாம் அங்கே கேட்கலாம்.

  • வாக்களிப்பதுஉங்கள் கடமை, பங்குச்சந்தையிலும்: 

ஒரு பங்குதாரராக நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கும், தொழில் கொள்கைகளை தீர்மானிக்கவும் நமக்கான வாக்களிக்கும் உரிமை பங்குச்சந்தையில் உண்டு. “ என்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் “ என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) மற்றும் தொழில் ஆதிக்கம் பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவன பங்குகளில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.

இயக்குனர் குழு மற்றும் நிறுவன பொறுப்புகளில் ஒருவரை நியமனம் செய்தல், நீக்குதல், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றிற்கு உங்களது வாக்கு ஒரு நிறுவனத்திற்கு அவசியமானது. நீங்கள் வாக்களிக்க தவறும் நிலையில், முடிவுகளும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் டாட்டா குழுமத்தில் மிஸ்திரி குடும்ப பங்குகளின் தாக்கம், வேதாந்தா நிறுவனம் பங்குச்சந்தையை விட்டு வெளியேற முடியாமல் சென்ற தருணம், யெஸ் வங்கி பங்குகளின் முடக்கம், நிறுவனங்களின் பங்குகளை திரும்ப பெறும்(Buyback of Shares) முறை, போனஸ் பங்குகள், புதிய பங்கு வெளியீடு என பல்வேறு செயல்பாடுகளுக்கு வாக்களிப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும்.

வாக்குகளை நேரடியாக அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இணைய வழியிலான(E-Voting) வாக்களிக்கும் வசதியும் இன்று நடைமுறையில் உண்டு. இது போன்ற சேவையை NSDL மற்றும் CDSL தளங்கள் நமக்காக செய்து கொடுக்கிறது. இதற்கான சேவை கட்டணத்தை(Brokerage & DP Charges) நாம் ஏற்கனவே பங்குகளை வாங்கும் போதே அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட்டோம் என்பதனை நினைவில் கொள்ளவும்.

  • நிறுவனங்களை நேரடியாக காணுங்கள், தொழிற்சாலைக்கு செல்லுங்கள்:

ஒரு நிறுவன பங்கை நாம் இணையம் வழியாக வாங்கி விட்டால், அதனோடு பங்கு முதலீடு முடிந்து விடப்போவதில்லை. இணையம் மட்டும் பங்கு முதலீட்டுக்கான வாழ்க்கையல்ல. அவை நமக்கான எளிய கட்டமைப்பு. நீங்கள் குடியிருக்கும் அல்லது வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில், நீங்கள் வாங்கிய பங்கு நிறுவன அலுவலகம் அல்லது தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கே சென்று பாருங்கள்.

நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவை எப்படி என நேரடியாக கண்காணியுங்கள். முடிந்தால், நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவிடம் அனுமதி பெற்று அவர்களது தொழிற்சாலையை சுற்றி பாருங்கள். இதற்கான வசதியை ஒரு நிறுவனத்தின் கம்பெனி செயலாளர்(Company Secretary) பொதுவாக செய்து கொடுப்பார். நிறுவனம் சார்ந்த ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் அவருக்கு மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் எந்த தொழிலையும், அலுவலகத்தையும் கொண்டிருக்காமல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஷெல் நிறுவனங்களும்(Shell companies) உண்டு என்பது சந்தை வரலாறு. சந்தையில் அவற்றின் பங்கு விலை நாள்தோறும் ஏற்றமடைகிறது என்ற ஒற்றை காரணத்திற்காக பங்குகளை வாங்காமல், நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளை கண்காணிப்பதும் அவசியம்.

நண்பர்களோடு சுற்றுலா செல்வது போல, ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு நிறுவனத்தை நேரடியாக சுற்றி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் சேவைகள்:

நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகள் எப்.எம்.சி.ஜி.(FMCG) பொருட்களை விற்கும்(Retail & Super Market) கடைகளாக தான் இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை எப்.எம்.சி.ஜி. துறையில் காணப்படும் பிரபலமான பொருட்கள் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பொருட்களாக தான் இருக்கும். உதாரணமாக இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., டாபர், கோத்ரேஜ், மாரிகோ, கோல்கேட், பஜாஜ், டி-மார்ட் போன்ற நிறுவனங்கள் தான். நமது நகரில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் தென்படும் பிராண்டுகளின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். பேச்சுவாக்கில் கடை உரிமையாளர் அல்லது விற்பனை மேலாளரிடம் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை எப்படி உள்ளதென அறிய முற்படலாம். இதற்கெல்லாம் நாம் நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ரியல் எஸ்டேட் முதலீட்டில் விசாரிக்கிறோமே !).

  • துறை சார்ந்த நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்:

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பல துறைகளை சார்ந்தவை. வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், வாகனம், நுகர்வோர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள்(Consumer Durables), எண்ணெய் சுத்திகரிப்பு, எரிசக்தி, விவசாயம், கல்வி, மின்னணு பொருட்கள், பொழுதுபோக்கு, மருத்துவம், கட்டுமானம்,காப்பீடு, காலணிகள், ஏற்றுமதி, ஜவுளி, தொலைத்தொடர்பு என பல துறைகளை உள்ளடக்கியவை.

நீங்கள் தொழில் செய்யும் நபராக இருந்தால், உங்களது துறையில் உள்ள சாதக-பாதகங்கள் உங்களுக்கு பொதுவாக தெரிந்திருக்கும். பொருளாதார மந்தநிலை காலங்களில் உங்களது தொழில் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும், அரசு கொள்கைகள் உங்கள் தொழிலுக்கு சாதகமாக உள்ளதா எனும் விஷயங்கள் உங்களது முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள். இதனை நீங்கள் பங்குச்சந்தையிலும் பயன்படுத்தலாம்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்கள் துறையில் உள்ள சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் துறை சார்ந்த ஆலோசனைகள், விவாதங்களை முன் வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் உங்களது பங்கு முதலீட்டுக்கு உதவும்.

நண்பர் ஒருவர் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) துறையின் முக்கிய பதவியில் வேலை பார்த்து வந்தால் அவரிடம் துறை சார்ந்த வளர்ச்சியையும், எதிர்காலத்தில் இவற்றின் தாக்கம் எப்படி உள்ளதென கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இன்று பங்கு முதலீடு சார்ந்த கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் வாயிலாக கிளப் ஹவுஸ், முகநூல்(Facebook Events), வலைப்பக்க நிரல்கள்(Webinars) நாள்தோறும் நடைபெறுகின்றன. இவற்றில் கலந்து கொண்டு பங்கு சார்ந்த தொழில் புரிதலை ஏற்படுத்தி கொள்ளலாம். அதே வேளையில் நாம் அதிகாரபூர்வ மற்றும் அரசு அங்கீகரிக்கும் நிறுவன தளம் மற்றும் ஆலோசகர்களிடம் தகவல்களை பெறுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்சப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் பரிந்துரைத்தார் என பங்குகளை வாங்கி பின்னர் நட்டமடைவதை தவிர்க்க மேலே சொன்ன விஷயங்கள் நமக்கு நீண்டகாலத்தில் பயனளிக்கும். வெறுமென ஊக விஷயங்களுக்கு பின்னால் நகர்வதை விட, நாமே நமது தொழிலுக்கான(பங்கு முதலீடு) அக்கறையை கொண்டிருப்பது நலம்.

பங்குகளை கண்காணிக்க நேரமில்லை என சொல்பவர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Mutual Funds) உள்ளது. உங்களுக்காக ஒரு பண்ட் மேனேஜர் அங்கே நிர்வகிக்க தயாராக உள்ளார். நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு செல்வமீட்டலாம்.

பங்குகள் உங்களின் செல்ல(செல்வ) குழந்தைகள், அவற்றை வளரும் போது நீங்கள் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தால், பின்னொரு காலத்தில் அவை உங்களை கவனித்து கொள்ளும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

REPO rate unchanged – RBI – Monetary Policy Committee(MPC)

பாரத ரிசர்வ் வங்கி சார்பாக மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த டிசம்பர் 6 முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டுக்கு ஆறு முறை நடக்கும் இக்கூட்டத்தில் நாட்டின் வட்டி விகித மாற்றம் சார்ந்த அறிக்கைகள் வெளியிடப்படும். கூட்டத்தில் ரிசர்வ் வங்கி சார்பாக மூன்று அதிகாரிகளும், அரசு சார்பில் மூன்று உறுப்பினர்களும் கலந்து கொள்வர்.

வங்கிகளுக்கான வட்டி விகிதம், பணவீக்க நிலவரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதி சந்தை மற்றும் பொது நிதி போன்றவற்றை ஆலோசித்து பின்பு வாக்களிக்கும் முறையில் முடிவுகள் அறிவிக்கப்படும். இம்முறை கூட்டத்தில் எடுக்க முடிவின் படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி(REPO) விகிதத்தில் மாற்றமில்லை எனவும், இதற்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 5.3 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டு முழுவதுமான மதிப்பீட்டில் 9.5 சதவீதமாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் 6.6 சதவீதமும், ஜனவரி – மார்ச் நான்காம் காலாண்டில் 6 சதவீதமுமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நாட்டின் வட்டி விகிதம் கடந்த இரண்டு வருடங்களாக 6 சதவீதத்திற்கும் கீழ் இருந்து வருகிறது. இது பாரத ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்குகளை சார்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021

Income Tax Return Filing for AY 2021-22 Deadline: 31st December, 2021

2020-21ம் நிதியாண்டுக்கான (2021-22 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 2021 என்றிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் புதிய மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றால் டிசம்பர் 31, 2021 ஆக நீட்டிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், டிசம்பர் 3, 2021 தேதியின் படி, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான(Assessment Year) வருமான வரி தாக்கலை இதுவரை மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் செய்துள்ளதாகவும், தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நடப்பில் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வரி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 52 சதவீதம் பேர் இணையம் வழியாக வரி தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 59 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 1 (ITR – 1) படிவத்தையும், 9 சதவீதம் ஐ.டி.ஆர் – 3 படிவத்தையும், 8 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 2 படிவத்தையும் பயன்படுத்தி வரி தாக்கல் செய்துள்ளனர்.

இதர படிவங்களான ITR-4, 5, 6, 7 ஆகியவற்றை சுமார் 23 சதவீதம் பேர் வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தி உள்ளனர். மூன்று கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல் நடைபெற்றிருந்தாலும், E-Verification என்ற முழுமையான வரி தாக்கல் நிறைவை இதுவரை 2.69 கோடி பேர் மட்டுமே செய்துள்ளதாக வருமான வரி துறை கூறியுள்ளது.

வரி தாக்கலை Verification மூலம் உறுதி செய்வது, பான் – ஆதார் இணைப்பை ஏற்படுத்துதல், ஆதார் கார்டு தகவலில் கைபேசி எண்ணை பதிவு செய்தல், வங்கிக்கணக்கை சரியான முறையில் இணைப்பது ஆகியவற்றை செய்வதால் வருமான வரி தாக்கல் செய்யும் போது சிரமம் ஏற்படாமல் இருக்கும். வருமான வரி தாக்கல் செய்யும் முன் படிவம் 16(Form 16),  படிவம் – 26 ஏ.எஸ். (Form 26AS & AIS, TIS) மற்றும் வருடாந்திர வரித்தகவல் அறிக்கையை சரி பார்த்து கொள்வது அவசியம்.

நீங்கள் வாங்கிய மற்றும் விற்ற பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி சேமிப்பு மற்றும் டெபாசிட்டுக்கான வட்டி வருவாய், வீட்டுமனை பண பரிவர்த்தனை மற்றும் இதர நிதி சார்ந்த தகவல்கள் மேலே சொல்லப்பட்ட படிவங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை சரி பார்த்து மற்றும் உறுதி செய்து தாக்கல் செய்யும் போது, பின்னாளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். வரக்கூடிய காலக்கட்டங்களில் கடன்கள், காப்பீடுகள், புதிய நிதி சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகள் ஆகிய விவரங்களும் இது போன்ற படிவங்களில் புதுப்பிக்கப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம்

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் 

India’s GDP of 8.4 Percent in September Quarter – Q2FY22

கடந்த 2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் பெருத்த சரிவை கண்டிருந்தது. 2021ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் (-24.4) சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த காலாண்டிலும் (-7.4) சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

பெரும்பாலான வளர்ச்சியடைந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் இது போன்ற தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு குறைய குறைய பொருளாதாரமும் மீண்டெழுந்தது. கடந்தாண்டின் டிசம்பர் காலாண்டில் 0.5 சதவீதமும், மார்ச் காலாண்டில் 1.6 சதவீதமுமாக வளர்ச்சி இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல்-ஜூன் காலத்தில் 20.1 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது ஜூலை-செப்டம்பர் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி 8.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த 8.4 சதவீத வளர்ச்சி என்பது கடந்தாண்டு செப்டம்பர் 2020 காலத்துடன் ஒப்பிடப்பட்ட வளர்ச்சியாகும்.

சேவைத்துறை, நிதி மற்றும் வீட்டுமனை, அரசு நிர்வாகம், உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சியால் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது. 2021-22ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

1950ம் ஆண்டு காலகட்டங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பங்களிப்பில் விவசாய துறை 52 சதவீதத்தை கொண்டிருந்த நிலையில், இன்றைக்கு 12 சதவீதமாக உள்ளது. 2021ம் ஆண்டின் பொருளாதார பங்களிப்பில் சேவைத்துறை 60 சதவீதமும், உற்பத்தி 15 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், கட்டுமானம் 8 சதவீதம், குடிநீர் மற்றும் எரிசக்தி 5 சதவீதமுமாக உள்ளது.

விவசாயத்தின் பங்களிப்பு குறைந்திருந்தாலும், தற்போது நாட்டின் 50 சதவீத வேலைவாய்ப்பை விவசாயத்துறை உருவாக்கி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையின் கீழ் விவசாயம், வனவியல் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவை உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டைம் லூப்(Time loop): மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரிப்பு, டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க உள்ளது – என்ன செய்ய போகிறீர்கள் ?

டைம் லூப்(Time loop): மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரிப்பு, டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க உள்ளது – என்ன செய்ய போகிறீர்கள் ?

Learn the Time loop insights for the Personal Finance

உலகளவில் டைம் லூப், டைம் மெஷின் அல்லது கால பயணம்(Time Travel – Sci-fi) சார்ந்த திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், நம் நாட்டில் சற்று குறைவு தான். சமீப காலத்தில் கால பயணம் குறித்த படங்கள் இங்கே வந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற கதைகள் பொதுவாக கற்பனையாவையாக இருந்தாலும், உளவியல் சார்ந்த விஷயங்களை இவை பேசும்.

வீட்டிலிருந்து கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும் நிலையில், வீட்டு நுழைவாயிலில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டு விட்டால், அம்மா சிறிது தண்ணீர் அருந்தி விட்டு செல்லும்படி கூறுவதுண்டு. இதனை அலட்சியப்படுத்தலாம் அல்லது பயத்தினாலோ, பணிவின் காரணமாகவோ அவர் சொன்னதை செய்து விட்டு போகலாம். பலருக்கு அன்றைய தினம் டைம் லூப் தான் (கற்பனை தான்)

முக்கிய நிறுவனம் ஒன்றிற்கு இன்டெர்வியூ செல்லுகையில் பூனை குறுக்கே வந்து விட்டது, இரு சக்கர வாகனம் பஞ்சர், பஸ் பிரேக் டவுன் – 12 பி படத்தின் டைம் லூப் ஆக தான் தோன்றும்.

‘நான் தான் அப்பவே சொன்னேனே அங்கே போகாதன்னு”

“எனக்கு தெரியும் இப்படி தான் நடக்கும்முன்னு”

“அவங்க சொன்னதை நான் தான் கேட்கல”

இது போன்ற கண்ணுல வந்து போகும் டயலாக்குகள் எல்லாம் Decision Making S(K)ills தான்.

#maanaadu

மீண்டும் ஒரு ஊரடங்கு வருமா எனும் அச்சம் உங்களுக்கு ஏற்பட்டால், உங்களது டைம் லூப்பில் கடந்த கால சிந்தனைகள் தென்படும். இவை வருத்தம் தரக்கூடியதாகவோ, இல்லையெனில் வாய்ப்பளித்த மகிழ்ச்சியாகவோ உங்களுக்கு இருந்திருக்கலாம்.

சரி, நிதி சார்ந்த கால பயணத்திற்கு வருவோம். நாமும் ஒவ்வொரு வருடமும் இலக்குகளை குறித்து வைத்து தான் வருகிறோம். கம்யூனிசத்துக்கும், கேபிடலிசத்திற்கும் இடையே அல்லல்பட்டு வருகிறோம். ஆனால் நமது தனிநபர் நிதி திட்டமிடலை சரியாக நிறைவு செய்தோமா என்றால் அது நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

கொரோனா காலத்தில் நமது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்களில் சில உயிர்களை இழந்திருப்போம். பிரபலமானவர்களின் இரங்கலை செய்தியாக கேட்டிருப்போம். ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தநிலையில் பலர் வேலை இழந்தனர், தங்களது தொழிலை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர், சிலர் இணைய வழி வருமானத்தை வாய்ப்பாக உருவாக்கினர், பெருந்தொற்று காரணமாக எதிர்பாராத வகையில் அதிக மருத்துவ செலவு, வருமானம் ஈட்டும் நபரின் இழப்பால் குடும்பத்தின் நிதி பாதிப்பு ஆகியவற்றை நாம் அறிந்திருப்போம். இவையெல்லாம் நமது நினைவலைகளாக எப்போதும் இருக்கும். சரியான நிதி பாதுகாப்பை உறுதி செய்தவர்களுக்கு ஓரளவு சிரமம் ஏற்பட்டிருக்காது. அது போன்ற குடும்பத்தில் நிதிச்சிக்கலும் குறைவு தான். டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு மற்றும் அவசர கால நிதி(Emergency Fund) ஓரளவு நமக்கு புரிந்திருக்கும்.

ஒவ்வொரு வருடமும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதை காலம் தாழ்த்தி வருகிறோம். அவசர கால நிதிக்கு பெரும்பாலும் நாம் மற்றவர்களை சார்ந்து  தான்(Parents, Neighborhood, Loans, Credit cards) இருக்கிறோம். ‘நான் நன்றாக தான் இருக்கிறேன், நமக்கு எதுக்கு மருத்துவ காப்பீடு – வீண் செலவு’ என்று அலட்சியம் செய்கிறோம். இருப்பினும் நமது கால பயணத்தில்(Time Travel) மீண்டும் மீண்டும் ஒரு நெருங்கிய உறவுகளின் இழப்பு, பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பம், காப்பீடு எடுக்காமல் லட்சங்களில் மருத்துவ செலவு.

இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரித்து விட்டது என புலம்புகிறோம். ‘5ஜி தொழில்நுட்பம் வந்த பிறகு என்ன செய்வது, விலை ஏறுமா அல்லது குறையுமா ?’

டேர்ம் காப்பீடுக்கான பிரீமியம் தொகையும் அதிகரிக்க போகிறது. கொரோனா காலத்திற்கு முந்தைய பிரீமியம் ஓரளவு பரவாயில்லை. புதிய நோய்கள் கண்டறிய கண்டறிய ரிஸ்க்குக்கான பிரீமியமும் அதிகமாக உள்ளது. முன்னொரு காலத்தில் தேவையும் பெரிதாக இல்லை, தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையவில்லை. வரவுக்குள் செலவு எளிதாக அமைந்தது. இப்போது அப்படியல்ல, நமது தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்துள்ளது. நிதி சார்ந்த விழிப்புணர்வு இனிவரும் காலங்களில் நமக்கு நிறைய தேவைப்படுகிறது.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மற்றும் டேர்ம் பிரீமியம் அதிகரித்தாலும் நமக்கு கவலையில்லை, அதிகமாக சம்பாதித்தால் ! தேவைகளும், விருப்பங்களும் அதிகரிக்கும் போது பெரும்பாலும் விலைவாசி உயர்வு நம் கையில் இல்லை.

ஆனால், நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்யாமல் காலம் தாழ்த்துவது நமது டைம் லூப்பை உண்மை நிலையாக மாற்ற செய்யும். அவற்றில் நமது கவனம் எப்போதும் தேவை. ‘ ஓய்வு காலத்திற்கு இன்னும் 30 வருடங்கள் உள்ளது, நமக்கு என்ன அவசரம்’ என 30 வயது இளைஞன் எண்ணினால் நமது பெற்றோருக்கு கிடைத்த வாழ்க்கை(உடல் மற்றும் மன நலமும்) கூட நமக்கு பின்னாளில் கிடைக்கப்பெறாது.

‘வரும் முன் காப்பது நலம்’

‘பருவத்தே பயிர் செய்’

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’

இவையனைத்தும் டைம் லூப்பை சார்ந்தவை தான்.

இப்போதே நீங்கள் செய்ய வேண்டிய நிதி திட்டமிடல்:

  • டேர்ம் காப்பீடு (Term Insurance)
  • விபத்து காப்பீடு (Accident care) 
  • மருத்துவ காப்பீடு (Health Insurance)
  • அவசர கால நிதி (Emergency Fund)
  • நிதி இலக்குகளுக்கான முதலீடு (Invest for Financial Goals) 
  • நாமினியை நியமிப்பது மற்றும் உயில் எழுதுவது (Nomination & Will)
  • உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி சார்ந்த கல்வி மற்றும் தேவையை உணர வைப்பது (Financial Literacy)

மேலே சொன்னவற்றை நாம் செய்யாவிட்டால், நமக்கு மட்டும் இழப்பல்ல… நம்மை நேசித்தவர்களுக்கு, நம்மை பொருளாதாரம் சார்ந்து நம்பியவர்களுக்கும் தான். விளைவை தெரிந்தும் காலம் தாழ்த்துவது தான் கால பயணத்தின் கிளைமாக்ஸ்.

டைம் மெஷினில் மீண்டும் வருவோம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம்

தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம் 

Anuh Pharma will be listed soon in NSE(National Stock Exchange)

எஸ்.கே. குழுமத்தின் அங்கமான அனுக் பார்மா நிறுவனம் மருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 61 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்நிறுவனம் காசநோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. அனுக் பார்மா பாக்டீரியா, மலேரியா, கார்டிகோஸ்டீராய்டுகள் ஆகியவற்றை எதிர்க்க தேவையான மருந்து பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இது போல பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

530 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட ஸ்மால் கேப் நிறுவனமாக இருந்தாலும், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.23 என்ற விகிதத்திலும், நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது.

செப்டம்பர் 2021 காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 172 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது சந்தை மூலதன மதிப்பில் மூன்றில் ஒரு பங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அனுக் பார்மா நிறுவனத்தின் முக மதிப்பு(Face value) 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டது.

2006ம் வருடத்தின் ஜனவரி மாதத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஆக வர்த்தகமான நிலையில், நாம் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீட்டு மதிப்பு அப்போது 20,000 ரூபாயாக இருந்திருக்கும். முகமதிப்பு மாற்றியமைக்கப்பட்ட பின்பு நமது கையிருப்பு பங்குகள் 2,000 (முதலீட்டு மதிப்பில் மாற்றமில்லை).

அதே வருடத்தில் ஒன்றுக்கு ஒன்று போனஸ்(1:1 Bonus issue) பங்குகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நமது கையில் உள்ள 2,000 பங்குகள் 4,000 பங்குகளாக மாறியிருக்கும். பின்பு 2010ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள்(2:1 Bonus issue) என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது நமது கையிருப்பு 12,000 பங்குகள்.

மீண்டும் 2015ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற அடிப்படையில்  போனஸ் பங்குகள். இந்த நிகழ்வுக்கு பின்பு நம்மிடம் 36,000 பங்குகளாக சொல்லப்பட்டிருக்கும். கடந்தாண்டு (செப்டம்பர் 2020) கொரோனா காலத்திலும் 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டது. இதனையும் நாம் கணக்கில் கொண்டால் இப்போது 72,000 பங்குகள் நம் கைவசம் இருந்திருக்கும். நடப்பில்(03-08-2021) அனுக் பார்மா நிறுவனத்தின் பங்கு ஒன்று அதிகபட்சமாக 150 ரூபாய்க்கு வர்த்தகமானது. 15 வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீடு அப்போதைய நிலையில் ரூ.20,000 ஆக இருந்திருக்கும். சொல்லப்பட்ட ஆகஸ்ட் 2021 விலையில் நம்மிடம் ரூ.1.08 கோடியும், 72000 பங்குகளும் கைவசம் இருக்கும்(பங்குகளை இதுவரை விற்காமல் இருந்திருந்தால் !). தற்போது இந்த பங்கு ரூ.105 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் இந்நிறுவன பங்கு, கடந்த நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிறுவனத்தை பட்டியலிடுவதற்கான முடிவை பங்குதாரர்களிடம் இருந்து பெற்றது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு(Q2FY22 results) முடிவுகளின் நிகழ்விலும் உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரு மாதங்களுக்குள் அனுக் பார்மா நிறுவனம், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என நிறுவனமும் கூறியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,  வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

Trading activity of Foreign Institutional Investors(FII) in the Indian Equity Market 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதமும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி(Nifty50) குறியீடு 52 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நடப்பு வருடத்தில் சொல்லப்பட்ட இரண்டு குறியீடுகளும் இதுவரை 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றமடைந்துள்ளது. சமீபத்தில் இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான நிப்டி மற்றும் சென்செக்ஸ் தனது வாழ்நாள் உச்சபட்ச விலையில் வர்த்தகமானது.

தற்போது உச்சநிலையிலிருந்து, இந்த இரண்டு குறியீடுகளும் 5 சதவீதம் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. எனினும் இதனை மிகப்பெரிய இறக்கம் என நாம் சொல்லிவிட முடியாது. நடப்பு அக்டோபர் மாதம் 29ம் தேதியுடன் முடிவடைந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 59,307 புள்ளிகளுடனும், நிப்டி 17,672 புள்ளிகளுடனும் உள்ளது.

கடந்தாண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு(Covid-19) பிறகான காலத்தில் பங்குச்சந்தை முதலீடும், டீமேட் கணக்கு துவங்கும் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலமான 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் காணப்பட்ட உலக பொருளாதார மந்தநிலை, நாடுகளிடையேயான வர்த்தக போர், போர் பதற்றம், காலநிலை மாற்றங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வங்கிகளில் காணப்படும் வட்டி விகித குறைவு, பணவீக்க விகிதம் மற்றும் வீட்டுமனை துறையில் உள்ள சுணக்க நிலை ஆகியவற்றால் பங்குச்சந்தை மற்றும் மெய்நிகர் நாணய(அரசு அங்கீகரிக்கப்படாத – Unregulated) முதலீடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், இது போன்ற முதலீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தை இறக்கம் காணும் போது தங்கம் போன்ற முதலீடுகளின் வருவாய் அதிகரிக்க கூடும்.

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை பெரும்பாலும் அன்னிய முதலீட்டாளர்களின் கை ஓங்கி தான் இருக்கும். பங்குச்சந்தைக்கும், கடன் பத்திரங்களுக்கும் அன்னிய முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் முதலீடு கணிசமாக இருக்கும். கடந்த ஒன்றரை வருடத்தில் காணப்பட்ட பங்குச்சந்தை ஏற்றத்தால், தற்போது அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை(அக்டோபர் மாத முடிவில்) ரூ.68,500 கோடி என்ற அளவில் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை விற்றுள்ளனர். இதற்கு நேர்மாறாக உள்நாட்டு முதலீடு(Domestic Institutional Investors) 56,179 கோடி ரூபாய் சந்தைக்கு வந்துள்ளது. சமீபத்தில் மதிப்பீட்டு மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் சில, இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய மதிப்பு ஏற்றக்கொள்ளக்கூடியாத இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FII & DII Trading Activity

அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த ஏழு மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்கள் 11.75 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், ரூ.12.43 லட்சம் கோடி மதிப்பில் பங்குகளை விற்றும் உள்ளனர். நிகர விற்பனையாக 68,500 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில், உள்ளூர் முதலீட்டாளர்கள் 8.62 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், 8.06 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். இதன் காரணமாக அவர்களது நிகர கொள்முதல்(Net Purchase) ரூ.56,179 கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 25,572 கோடி ரூபாயை நிகர விற்பனையாக கொண்டுள்ளனர். இதே மாதத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் 4,470 கோடி ரூபாயை நிகர கொள்முதலாக கொண்டுள்ளனர். சந்தையில் உள்ள பல நிறுவன பங்குகளின் விலை, அதன் வருவாயுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) நிறைவு செய்யும் நல்ல நிறுவன பங்குகள் மலிவான விலையில் கிடைக்கப்பெறுவதும் தற்சமயம் உள்ளது.

சந்தை புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், தரமான நிறுவனங்களை தள்ளுபடி விலையில்(Discounted Value) வாங்கவில்லையென்றால், முதலீட்டில் அதிகப்படியான சரிவை சந்திக்கும் காலமாக தற்போது நிலவுகிறது. சந்தையில் புதிதாக பட்டியலிடப்படும் நிறுவனங்கள் தங்களுக்கான முதலீட்டை விரைவாக பெற வேண்டிய நிலையில், புதிய முதலீட்டாளர்கள் சற்று பொறுமை காத்து, பங்குகளை ஆராய்ந்து நீண்டகால முதலீட்டிற்கு தயாராக வேண்டியது அவசியம். முதலீட்டை எப்போதும் பரவலாக்கம்(Asset Allocation & Diversification) செய்வதன் காரணமாக, நட்டத்தை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி

ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி

ITC reported a Net Profit of Rs.3,714 Crore – Q2FY22 results

பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம், புகையிலையை தனது முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும், இன்று நுகர்வோர் பொருட்கள், ஆடைகள், நட்சத்திர விடுதிகள், பேப்பர் பொருட்கள், பேக்கேஜிங்(Packaging), விவசாயம் சார்ந்த பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை என தனது தொழிலை விரிவடைய செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் சுமார் 2.94 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டிருக்கும் இந்நிறுவனம் கடனில்லா நிறுவனமாகவும்(Debt Free) இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 564 மடங்குகளில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது.

2020-21ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 49,257 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.13,161 கோடியாகவும் இருந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு மார்ச் 2021 முடிவில் ரூ.59,100 கோடி.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு(ஜூலை – செப்டம்பர் Quarterly results) முடிவுகளை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.13,751 கோடியாகவும், செலவினம் 8,740 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 469 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபமாக ரூ.3,714 கோடி இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,055 கோடி. கடந்த ஜூலை 2021 காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 4 சதவீதமும், நிகர லாபம் 13 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

முந்தைய வருடத்தின்(2020-21) இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் வருவாய் தற்போது 14 சதவீதமும், நிகர லாபம் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது. எனினும் கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய், கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பில் அதிகரித்து காணப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 3,259 கோடி

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 3,259 கோடி 

HCL Technologies reported a net profit of Rs.3,259 Crore – Q2FY22 results

3.40 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்ட எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவையை தனது தொழிலாக கொண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திரு. சிவ நாடார் அவர்களால், கடந்த 1976ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகும்.

2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் லாபம் மட்டுமே 1.5 பில்லியன் டாலர். சுமார் இரண்டு லட்சம் பணியாளர்களை கொண்டு 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை பரவியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய தலைவராக சிவ நாடார் அவர்களின் புதல்வி திருமதி. ரோஷ்ணி உள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தை(Listed Company) வழிநடத்தும் நாட்டின் முதல் பெண் தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளில்(நடப்பு 2021) ரோஷ்ணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மொத்த வருவாய் பங்களிப்பில் அமெரிக்கா 58 சதவீதமும், ஐரோப்பா 27 சதவீதமும் கொண்டுள்ளது. உள்நாட்டில் ஈட்டப்படும் வருவாய் மூன்று சதவீதம் மட்டுமே.

நிதிச்சேவை, உற்பத்தி, சில்லறை வணிகம், தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், வாழ்வியல் மற்றும் ஆரோக்கியம் என பல துறைகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) எச்.சி.எல். நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. செப்டம்பர் 2021 காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 20,655 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.15,633 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,259 கோடி.

இயக்க லாப விகிதம்(OPM) சராசரியாக ஒவ்வொரு காலாண்டிலும் 25 சதவீதம் என்ற அளவை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.60,133 கோடியாகவும், விற்பனை வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் 20 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், கடன்-பங்கு விகிதம் 0.10 ஆகவும் இருக்கிறது.

நிறுவனர் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம் 42 மடங்குகளிலும், பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 10 வருடங்களில் 25 சதவீதம் வளர்ந்துள்ளது. 2020ம் ஆண்டின் ஏப்ரல் மாத துவக்கத்தில் பங்கு ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில்(உள்ளார்ந்த மதிப்புக்கு கீழ் – Undervalued), தற்போது 1,250 ரூபாய் என்ற விலையில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil