கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு – முதலீடு செய்யலாமா ?
Should you Invest in Gold ETF & Gold Funds ?
நாம் கடந்த சில காலங்களாக வர்த்தக மதுரை தளத்தில் சில காரணிகளை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வருகிறோம். அவை அமெரிக்க – சீன வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை, எல்லை பதற்றம் மற்றும் வாகனத்துறை வளர்ச்சி குறைவு. இதன் வெளிப்பாடு உலக பொருளாதார மந்த நிலையாக ஏற்பட்டுள்ளது.
வாகனத்துறை வளர்ச்சி பொதுவாக சுழற்சி முறையில் செயல்பட கூடியவை. சில வருடங்கள் விரைவாக வளர்ச்சியை நோக்கி செல்வதும், மற்றொரு காலங்களில் மந்தமடைவதும் இயல்பு. ஆனால் தற்போது மற்ற சிக்கல்களும் சேர்ந்துள்ளதால், நடப்பில் காணப்படும் பொருளாதார மந்த நிலை எப்போது சரி செய்யப்படலாம் என்பது சொல்லப்படாதது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நடப்பு காலத்தில் பங்குச்சந்தை அடுத்தடுத்த சரிவை நோக்கி காத்திருக்கின்றன. இது தற்காலிகமானது தான் எனினும் முதலீட்டு நோக்கில் காணும் போது, மற்ற முதலீட்டு சாதனங்களின் ஏற்றத்தை நாம் பரவலாக(Diversification & Asset Allocation) ஏற்படுத்தலாம். அவ்வாறு காணும் போது பங்குச்சந்தை வீழ்ச்சி சமயத்தில் தங்கத்தின் விலை ஏறுவதும், வங்கிகள் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின்(Bond) விலை அதிகரிப்பதும் இயல்பு.
நமது வாசகர்கள் சிலர் தற்போது தங்கத்தை அடிப்படையாக கொண்ட கோல்டு இ.டி.எப். அல்லது கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யலாமா என கேட்டிருந்தனர். அதே போல இரண்டுக்குமான வித்தியாசம் என்ன என்பது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர். தங்கத்தை ஆபரணங்களாக வாங்க விரும்பாதவர்கள் மற்றும் இதனை ஒரு முதலீடாக கருதுபவர்கள் கோல்டு இ.டி.எப்., கோல்டு பண்டு அல்லது அரசு வழங்கும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இது போன்ற முதலீடுகளில் ஆபரணங்களை போல திருட்டு பயம் என்பது இல்லை. முதலில் கோல்டு இ.டி.எப். என்பதனை பற்றி பார்ப்போம்.
Gold ETF என்பது பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Fund Scheme) ஒரு அங்கமாகும். தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யப்படும் இந்த பரஸ்பர நிதி திட்டம், பங்குச்சந்தையில் பட்டியிலடப்பட்டு(Exchange Traded fund) வர்த்தகமாகும். கோல்டு இ.டி.எப். பொதுவாக தங்கத்தின் விலையை பிரதிபலிக்கும். பரஸ்பர நிதி திட்டமாக இருப்பதால், முதலீட்டாளர்களின் முதலீடு யூனிட்களாக வழங்கப்படும். அதாவது ஒரு கிராம் என்பது ஒரு யூனிட்(Unit) என கொள்ளப்படும்.
இந்த திட்டத்தில் உள்ள சாதகமான அம்சமே, நாம் இணையதளத்தின் வாயிலாக கோல்டு இ.டி.எப். யூனிட்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம். இதற்கு டீமேட் கணக்கு(Demat Account) வைத்திருப்பது அவசியம். தங்கத்தின் விலை மதிப்பு ஒவ்வொரு நாள் வர்த்தகத்திலும் பிரதிபலிக்கும். இவற்றில் முதலீடு செய்வதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்:
- ஒரு கிராம் (யூனிட்) முதல் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் (வர்த்தக அளவை பொறுத்து)
- நாம் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மற்றும் விற்கலாம் (பொதுவாக வர்த்தகம் நடைபெறும் நேரங்களில்)
- 99.5 சதவீத சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு.
- செய்கூலி மற்றும் சேதார செலவுகள் எதுவுமில்லை. குறைந்த தரகு கட்டணம்(Brokerage).
- பாதுகாப்பான முதலீடு மற்றும் வரி சலுகைகள்(Tax Benefits) உண்டு.
- யூனிட்களை அடமானம் வைக்கலாம் மற்றும் பின்னாளில் யூனிட்களை தங்கமாக வாங்கி கொள்ளலாம்.
கோல்டு இ.டி.எப். திட்டத்தில் எளிதாக முதலீடு செய்யமுடிந்தாலும், பங்குச்சந்தையில் வர்த்தகமாவதால் இதற்கு டீமேட் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும். இதனை களையவே கோல்டு பண்டுகள் உள்ளன. கோல்டு இ.டி.எப். ஐ போலவே இந்த பண்டுகளும், ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது இல்லை. இதனால் இங்கும் எளிமையாக முதலீடு செய்யலாம்.
கோல்டு இ.டி.எப். திட்டத்திற்கும், கோல்டு பண்டுக்கும் வேறுபாடு பெரிதாக எதுவுமில்லை. இ.டி.எப். திட்டம் பங்குச்சந்தையில் வர்த்தகமாவதால், தரகு கட்டணம் வசூலிக்கப்படும். கோல்டு பண்டுகளில் தரகு கட்டணத்திற்கு பதிலாக நிர்வாக செலவு கட்டணங்கள்(Expenses) வசூலிக்கப்படும். அதே வேளையில் தங்க ஆபரணங்கள் வாங்கும் போது செலுத்தப்படும் செய்கூலி மற்றும் சேதாரத்தை விட மிக குறைவான செலவுகள் தான் இங்கு காணப்படுகிறது.
தற்போது பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனங்கள் கோல்டு பண்டு திட்டங்களை(Gold BeEs) அளித்து வருகின்றன. ஒரு கிராம் ஒரு யூனிட்களாக கணக்கிடப்பட்டாலும், சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் 10ல் ஒரு பங்காக யூனிட் அளவை கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு யூனிட் (1 கிராம்) ரூ. 3200/- என்று ஒரு நிறுவனம் கொண்டிருக்கும் போது, மற்றொரு நிறுவனம் ஒரு யூனிட் 320 ரூபாய்க்கு (10ல் ஒரு பங்கு) வழங்கி வருகிறது.
நடப்பில் பங்குச்சந்தை சரிவடையும் நேரத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இருப்பினும் தங்கத்தில் மட்டுமே அதிகமாக முதலீடு செய்யாமல், சிறுக சிறுக முதலீட்டை மேற்கொள்ளலாம். தங்கம் கடந்த ஒரு வருடத்தில் 25 சதவீத வருவாயை தந்துள்ளது. நீண்ட காலத்தில் பங்குச்சந்தையை காட்டிலும் குறைந்த வருமானத்தை கொண்டிருந்தாலும், குறைந்த ரிஸ்க் திறன்(Low risk) கொண்ட முதலீடாக கருதப்படுகிறது. கோல்டு திட்டத்தில் மாதாமாதம் சிறிய அளவில் முதலீடு செய்வது சிறந்தது. தங்கத்தில் முதலீடு செய்வதை முதலீட்டு பரவலாக்கலாக(Asset Allocation) அமைக்க வேண்டும்.
பங்குச்சந்தையில் 50 சதவீத முதலீடு மேற்கொண்டால், 20-30 சதவீதத்தை தங்கத்திலும், மீதமுள்ளதை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். இது ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்க இ.டி.எப். திட்டம் அல்லது கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யும் அதே வேளையில், தற்போதைய பங்குச்சந்தை சரிவில் நல்ல நிறுவன பங்குகள்(Value based Stocks) விலை குறைந்து காணப்படுவதும் கவனிக்கத்தக்கது.
கோல்டு இ.டி.எப். மற்றும் கோல்டு பண்டுகளில் செய்யப்படும் முதலீடு தங்கத்தின் விலை ஏற்ற-இறக்கத்தை அடிப்படையாக கொண்டது. பின்னாளில் இது போன்ற முதலீட்டை தங்கமாக பெற்று கொள்ள பரஸ்பர நிதி நிறுவனங்கள் சேவையை அளிக்கின்றன. இருப்பினும் சில நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க கிராம் அளவை கொண்டிருந்தால் மட்டுமே தங்கமாக மாற்றி வழங்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
www.varthagamadurai.com