தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம்
Anuh Pharma will be listed soon in NSE(National Stock Exchange)
எஸ்.கே. குழுமத்தின் அங்கமான அனுக் பார்மா நிறுவனம் மருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 61 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்நிறுவனம் காசநோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. அனுக் பார்மா பாக்டீரியா, மலேரியா, கார்டிகோஸ்டீராய்டுகள் ஆகியவற்றை எதிர்க்க தேவையான மருந்து பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இது போல பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
530 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட ஸ்மால் கேப் நிறுவனமாக இருந்தாலும், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.23 என்ற விகிதத்திலும், நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது.
செப்டம்பர் 2021 காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 172 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது சந்தை மூலதன மதிப்பில் மூன்றில் ஒரு பங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அனுக் பார்மா நிறுவனத்தின் முக மதிப்பு(Face value) 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டது.
2006ம் வருடத்தின் ஜனவரி மாதத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஆக வர்த்தகமான நிலையில், நாம் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீட்டு மதிப்பு அப்போது 20,000 ரூபாயாக இருந்திருக்கும். முகமதிப்பு மாற்றியமைக்கப்பட்ட பின்பு நமது கையிருப்பு பங்குகள் 2,000 (முதலீட்டு மதிப்பில் மாற்றமில்லை).
அதே வருடத்தில் ஒன்றுக்கு ஒன்று போனஸ்(1:1 Bonus issue) பங்குகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நமது கையில் உள்ள 2,000 பங்குகள் 4,000 பங்குகளாக மாறியிருக்கும். பின்பு 2010ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள்(2:1 Bonus issue) என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது நமது கையிருப்பு 12,000 பங்குகள்.
மீண்டும் 2015ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற அடிப்படையில் போனஸ் பங்குகள். இந்த நிகழ்வுக்கு பின்பு நம்மிடம் 36,000 பங்குகளாக சொல்லப்பட்டிருக்கும். கடந்தாண்டு (செப்டம்பர் 2020) கொரோனா காலத்திலும் 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டது. இதனையும் நாம் கணக்கில் கொண்டால் இப்போது 72,000 பங்குகள் நம் கைவசம் இருந்திருக்கும். நடப்பில்(03-08-2021) அனுக் பார்மா நிறுவனத்தின் பங்கு ஒன்று அதிகபட்சமாக 150 ரூபாய்க்கு வர்த்தகமானது. 15 வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீடு அப்போதைய நிலையில் ரூ.20,000 ஆக இருந்திருக்கும். சொல்லப்பட்ட ஆகஸ்ட் 2021 விலையில் நம்மிடம் ரூ.1.08 கோடியும், 72000 பங்குகளும் கைவசம் இருக்கும்(பங்குகளை இதுவரை விற்காமல் இருந்திருந்தால் !). தற்போது இந்த பங்கு ரூ.105 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் இந்நிறுவன பங்கு, கடந்த நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிறுவனத்தை பட்டியலிடுவதற்கான முடிவை பங்குதாரர்களிடம் இருந்து பெற்றது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு(Q2FY22 results) முடிவுகளின் நிகழ்விலும் உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரு மாதங்களுக்குள் அனுக் பார்மா நிறுவனம், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என நிறுவனமும் கூறியுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை