வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021
Income Tax Return Filing for AY 2021-22 Deadline: 31st December, 2021
2020-21ம் நிதியாண்டுக்கான (2021-22 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 2021 என்றிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் புதிய மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றால் டிசம்பர் 31, 2021 ஆக நீட்டிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், டிசம்பர் 3, 2021 தேதியின் படி, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான(Assessment Year) வருமான வரி தாக்கலை இதுவரை மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் செய்துள்ளதாகவும், தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
நடப்பில் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வரி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 52 சதவீதம் பேர் இணையம் வழியாக வரி தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 59 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 1 (ITR – 1) படிவத்தையும், 9 சதவீதம் ஐ.டி.ஆர் – 3 படிவத்தையும், 8 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 2 படிவத்தையும் பயன்படுத்தி வரி தாக்கல் செய்துள்ளனர்.
இதர படிவங்களான ITR-4, 5, 6, 7 ஆகியவற்றை சுமார் 23 சதவீதம் பேர் வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தி உள்ளனர். மூன்று கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல் நடைபெற்றிருந்தாலும், E-Verification என்ற முழுமையான வரி தாக்கல் நிறைவை இதுவரை 2.69 கோடி பேர் மட்டுமே செய்துள்ளதாக வருமான வரி துறை கூறியுள்ளது.
வரி தாக்கலை Verification மூலம் உறுதி செய்வது, பான் – ஆதார் இணைப்பை ஏற்படுத்துதல், ஆதார் கார்டு தகவலில் கைபேசி எண்ணை பதிவு செய்தல், வங்கிக்கணக்கை சரியான முறையில் இணைப்பது ஆகியவற்றை செய்வதால் வருமான வரி தாக்கல் செய்யும் போது சிரமம் ஏற்படாமல் இருக்கும். வருமான வரி தாக்கல் செய்யும் முன் படிவம் 16(Form 16), படிவம் – 26 ஏ.எஸ். (Form 26AS & AIS, TIS) மற்றும் வருடாந்திர வரித்தகவல் அறிக்கையை சரி பார்த்து கொள்வது அவசியம்.
நீங்கள் வாங்கிய மற்றும் விற்ற பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி சேமிப்பு மற்றும் டெபாசிட்டுக்கான வட்டி வருவாய், வீட்டுமனை பண பரிவர்த்தனை மற்றும் இதர நிதி சார்ந்த தகவல்கள் மேலே சொல்லப்பட்ட படிவங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை சரி பார்த்து மற்றும் உறுதி செய்து தாக்கல் செய்யும் போது, பின்னாளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். வரக்கூடிய காலக்கட்டங்களில் கடன்கள், காப்பீடுகள், புதிய நிதி சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகள் ஆகிய விவரங்களும் இது போன்ற படிவங்களில் புதுப்பிக்கப்படலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை