Tag Archives: fii trading

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

Trading activity of Foreign Institutional Investors(FII) in the Indian Equity Market 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதமும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி(Nifty50) குறியீடு 52 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நடப்பு வருடத்தில் சொல்லப்பட்ட இரண்டு குறியீடுகளும் இதுவரை 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றமடைந்துள்ளது. சமீபத்தில் இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான நிப்டி மற்றும் சென்செக்ஸ் தனது வாழ்நாள் உச்சபட்ச விலையில் வர்த்தகமானது.

தற்போது உச்சநிலையிலிருந்து, இந்த இரண்டு குறியீடுகளும் 5 சதவீதம் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. எனினும் இதனை மிகப்பெரிய இறக்கம் என நாம் சொல்லிவிட முடியாது. நடப்பு அக்டோபர் மாதம் 29ம் தேதியுடன் முடிவடைந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 59,307 புள்ளிகளுடனும், நிப்டி 17,672 புள்ளிகளுடனும் உள்ளது.

கடந்தாண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு(Covid-19) பிறகான காலத்தில் பங்குச்சந்தை முதலீடும், டீமேட் கணக்கு துவங்கும் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலமான 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் காணப்பட்ட உலக பொருளாதார மந்தநிலை, நாடுகளிடையேயான வர்த்தக போர், போர் பதற்றம், காலநிலை மாற்றங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வங்கிகளில் காணப்படும் வட்டி விகித குறைவு, பணவீக்க விகிதம் மற்றும் வீட்டுமனை துறையில் உள்ள சுணக்க நிலை ஆகியவற்றால் பங்குச்சந்தை மற்றும் மெய்நிகர் நாணய(அரசு அங்கீகரிக்கப்படாத – Unregulated) முதலீடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், இது போன்ற முதலீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தை இறக்கம் காணும் போது தங்கம் போன்ற முதலீடுகளின் வருவாய் அதிகரிக்க கூடும்.

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை பெரும்பாலும் அன்னிய முதலீட்டாளர்களின் கை ஓங்கி தான் இருக்கும். பங்குச்சந்தைக்கும், கடன் பத்திரங்களுக்கும் அன்னிய முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் முதலீடு கணிசமாக இருக்கும். கடந்த ஒன்றரை வருடத்தில் காணப்பட்ட பங்குச்சந்தை ஏற்றத்தால், தற்போது அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை(அக்டோபர் மாத முடிவில்) ரூ.68,500 கோடி என்ற அளவில் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை விற்றுள்ளனர். இதற்கு நேர்மாறாக உள்நாட்டு முதலீடு(Domestic Institutional Investors) 56,179 கோடி ரூபாய் சந்தைக்கு வந்துள்ளது. சமீபத்தில் மதிப்பீட்டு மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் சில, இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய மதிப்பு ஏற்றக்கொள்ளக்கூடியாத இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FII & DII Trading Activity

அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த ஏழு மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்கள் 11.75 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், ரூ.12.43 லட்சம் கோடி மதிப்பில் பங்குகளை விற்றும் உள்ளனர். நிகர விற்பனையாக 68,500 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில், உள்ளூர் முதலீட்டாளர்கள் 8.62 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், 8.06 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். இதன் காரணமாக அவர்களது நிகர கொள்முதல்(Net Purchase) ரூ.56,179 கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 25,572 கோடி ரூபாயை நிகர விற்பனையாக கொண்டுள்ளனர். இதே மாதத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் 4,470 கோடி ரூபாயை நிகர கொள்முதலாக கொண்டுள்ளனர். சந்தையில் உள்ள பல நிறுவன பங்குகளின் விலை, அதன் வருவாயுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) நிறைவு செய்யும் நல்ல நிறுவன பங்குகள் மலிவான விலையில் கிடைக்கப்பெறுவதும் தற்சமயம் உள்ளது.

சந்தை புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், தரமான நிறுவனங்களை தள்ளுபடி விலையில்(Discounted Value) வாங்கவில்லையென்றால், முதலீட்டில் அதிகப்படியான சரிவை சந்திக்கும் காலமாக தற்போது நிலவுகிறது. சந்தையில் புதிதாக பட்டியலிடப்படும் நிறுவனங்கள் தங்களுக்கான முதலீட்டை விரைவாக பெற வேண்டிய நிலையில், புதிய முதலீட்டாளர்கள் சற்று பொறுமை காத்து, பங்குகளை ஆராய்ந்து நீண்டகால முதலீட்டிற்கு தயாராக வேண்டியது அவசியம். முதலீட்டை எப்போதும் பரவலாக்கம்(Asset Allocation & Diversification) செய்வதன் காரணமாக, நட்டத்தை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement