Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

No change in Repo Rate for the Eleventh Time – RBI Monetary Policy 

நடப்பு நிதியாண்டின் முதல் கூட்டமாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் வங்கி ரெப்போ வட்டி விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் சார்ந்த அறிக்கை இன்று பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) வெளியிடப்பட்டது. 

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் இம்முறை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் எனவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம், எந்த மாற்றமுமின்றி 3.35 சதவீதத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு கடந்த 2020ம்  ஆண்டு முதல் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் பெரியளவில் மாற்றமில்லை.

தற்போது சொல்லப்பட்ட அறிவிப்புடன் சேர்த்து, பதினொன்றாவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வரக்கூடிய மாதங்களில் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம். 

நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.2 சதவீதமாக இருக்கும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதுவே கடந்த முறை, பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாகவும், பணவீக்கம் 5.3 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கப்பட வேண்டியவை.

பணவீக்க மதிப்பீட்டில் அதிகபட்சமாக 2022-23ம் நிதியாண்டின் முதல் காலாண்டில்(April – June 2022) 6.3 சதவீதமாக பணவீக்கம் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் விலைவாசி உயர்வை(Inflation) கட்டுப்படுத்துவதே தற்போதைய நோக்கம் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நடப்பாண்டில் உயர்ந்து வரும் நுகர்வோர் விலை பணவீக்கம் – 2022

நடப்பாண்டில் உயர்ந்து வரும் நுகர்வோர் விலை பணவீக்கம் – 2022

India’s rising Retail inflation – Consumer Price Index 2022

கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் உலகளவில் பொருட்கள் மற்றும் சேவை விநியோக சங்கிலியில்(Supply Chain Disruption) இடையூறு ஏற்பட்டிருந்தது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவு மீட்கப்பட்டிருந்தாலும், சரக்கு போக்குவரத்து சேவையில் இன்றளவும் சுணக்கம் காணப்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு வருடங்களாக அரசின் பொருளாதார ஊக்குவிப்பு இருந்திருந்தாலும், தேவை மற்றும் உற்பத்தியில் அதிகமாக இடைவெளி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பணவீக்க விகிதத்திலும் மாற்றம் நிகழந்து வருவது கவனிக்கத்தக்கது.

நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் சில்லரை விலை என்ற நுகர்வோர் விலை(Consumer Price Index) பணவீக்கம் 6.07 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த எட்டு மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். இதற்கு முன்பு 2021ம் வருடத்தின் மே மாதத்தில் 6.30 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் அன்றைய ஆண்டின் அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டிருந்தது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் சில்லறை விலை பணவீக்க விகிதம் குறைந்தபட்ச அளவாக 2019ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும், அதிகபட்ச அளவாக 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 7.61 சதவீதமாகவும் இருந்துள்ளது. 

நடப்பு பிப்ரவரி மாத பணவீக்கம் அதிகரித்ததற்கான காரணமாக காய்கறி, உணவுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வகைகளின் விலை இருந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 16.5 சதவீதமும், இறைச்சி மற்றும் மீன் வகைகள் 7.5 சதவீதமும், காய்கறிகள் 6 சதவீதமும் சொல்லப்பட்ட மாதத்தில் அதிகரித்துள்ளது. 

இது போல ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) விலை 8 சதவீதமும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 8.86 சதவீதமும், வீட்டுமனை 4 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ரிசர்வ் வங்கியின் சில்லறை விலை பணவீக்கத்திற்கான குறுகிய கால இலக்கு 2 சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம்(WPI) 13.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதும், 2020ம் ஆண்டின் மே மாதம் முதல் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

வரக்கூடிய வாரங்களில் உயர்ந்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும். நடப்பு போர் பதற்ற சூழ்நிலையும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையின் விலையை பெருமளவில் மாற்றக்கூடும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

Things to do as an Investor in the Economic or War Crisis 

2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உலக பொருளாதார வீழ்ச்சி, தேவைக்கும்-உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல், பொருட்கள் மற்றும் சேவையை பெறுவதில் இடையூறு, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டது. இதன் மூலம் நாம் புதியதொரு இயல்பு வாழ்க்கையை(New Normal) தொடர வேண்டிய மாற்றம் நிகழ்ந்தது.

கடந்த ஓராண்டாக பொருளாதார நிலை ஓரளவு மேம்பட்டு வந்திருந்தாலும், 2020ம் ஆண்டு உலகளவில் வீழ்ந்த உலக பங்குச்சந்தை குறியீடுகள் வேகமாக மீண்டெழுந்தது. வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட சந்தை காலமாக இவை சொல்லப்படுகிறது. புதிய உச்சத்தை அடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அதிக ஏற்ற-இறக்கத்துடன் பக்கவாட்டில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை குறியீடுகள் பணவீக்க விகிதம் மற்றும் வங்கி வட்டி விகித மாற்றத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது உக்ரைன்-ரஷ்ய போர் நிலையும் தொற்றி கொண்டன. ஒவ்வொரு நாள் வர்த்தகத்தின் ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக ஒவ்வொரு தகவலும் சொல்லப்படுவதுண்டு. நடப்பு சந்தை இறக்கத்திற்கு உக்ரைன்-ரஷ்ய போர் மட்டுமே இப்போது காரணமாக அமைந்து விட்டது.

பொதுவாக நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருப்பதற்கான குறியீடாக அந்நாட்டின் பங்குச்சந்தை, தொழிற்துறை மற்றும் வீட்டுமனை(Realty) வளர்ச்சியை கொண்டிருக்கும். இதுவே பொருளாதார மந்தநிலையில் இருக்கும் போது, மேலே சொல்லப்பட்டவை இறக்கத்திலும், இதற்கு மாறாக தங்கம் மற்றும் கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்கும். அதாவது சுருக்கமாக சந்தை வீழும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது கடன் பத்திரங்களின் தேவை அதிகரிப்பதும் பொருளாதார உலகின் இயல்பு.

எனவே பொருளாதாரத்தில் தேவைக்கும்-இருப்புக்குமான இடைவெளியே பெரும்பாலும் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கிறது. முதலாம் உலக போருக்கு பின்பு, அடுத்தவொரு நிகழ்வு இது போன்று நடைபெறாது என நினைத்திருந்த நிலையில் இரண்டாம் உலகப்போரை இவ்வுலகம் சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. ஜெர்மனி மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலைக்கு(Recession) செல்ல உள்ளதாக அந்நாட்டின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கிறது. உக்ரைன்-ரஷ்ய போர் ஒரு வாரத்தில் முடியுமா, இல்லையெனில் இன்னும் பல காலம் எடுத்து கொள்ளுமா என்பதனை நம்மால் கணிக்க இயலாத ஒன்று.

அதே வேளையில், ஒவ்வொரு நாட்டில் ஏற்பட்டுள்ள கடன் அதிகரிப்பும் அதனை சார்ந்த பணவீக்க விகிதமும் தான் வரக்கூடிய நாட்களில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றையும் நாம் எதுவும் செய்து விட முடியாது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வேலை மத்திய வங்கிக்கும், அரசுக்கும் தான்.

வரக்கூடிய காலகட்டங்கள் நமக்கு மீண்டும் புதியதொரு இயல்பு நிலையை அறிவுறுத்தலாம். குறுகிய காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையின் விலை அதிகரிக்கலாம். பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படலாம். நீண்டகாலத்தில் பொருளாதாரம் ஏற்றமடைய கூடிய வாய்ப்பு தென்பட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகமாக உள்ளது.

இருப்பினும், முதலீட்டாளராக நாம் நம்மால் முடிந்த சில முன்னெடுப்புகளை செய்ய முடியும். 

  • எதிர்வரும் சவால்களை சந்திக்க: உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்குமான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் பேரில் போதுமான டேர்ம் காப்பீடு தொகை, விபத்து காப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மருத்துவ காப்பீட்டை உறுதி செய்துள்ளீர்களா ?
  • வேலையிழப்பு அல்லது தொழிலில் மந்தநிலை ஏற்படக்கூடிய காலத்தை சமாளிக்க குறைந்தது ஆறு மாதம் முதல் இரண்டு வருடத்திற்கு தேவையான அவசர கால நிதியை(உங்களது மாத வருமானத்தின் மடங்குகளில்) தயார் செய்து விட்டீர்களா ?
  • நிதி இலக்குகளுக்கான(Financial Goals) சேமிப்பு மற்றும் முதலீட்டு தொகை தடையேதும் இல்லாமல் செல்கின்றனவா ?
  • பொதுவாக உங்களது நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds) பயன்படுத்துங்கள். அடுத்த தலைமுறைக்கு தேவையான செல்வவளத்தை ஏற்படுத்த நேரடி பங்குகளை(Direct Equity) கவனியுங்கள். குறுகிய கால தேவைகளுக்கு பங்குச்சந்தையை பயன்படுத்த வேண்டாம்.
  • பங்குச்சந்தை இறங்கினால் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதே வேளையில் சிறு துளி பெரு வெள்ளம் போல, சிறுக சிறுக முதலீடு செய்து வாருங்கள். ஒரே நாளில் பணக்காரராக வேண்டும் என்று பங்குச்சந்தையில் உங்களது கைவிரல்களை சுட்டு கொள்ள வேண்டாம்.
  •  எதனையும் நாம் நேர்மறையாக அணுக வேண்டுமென்றாலும், பங்குச்சந்தையில் மட்டும் பங்கு நிறுவனங்களை கண்டறியும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். பைசாவில் இருந்து பத்து ரூபாய்க்கும், நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கும் குறுகிய காலத்தில் ஏற்றமடையும் பங்குகள் அனைத்தும் நல்ல நிறுவன பங்குகள் என்று சொல்லி விட முடியாது.
  • பங்குச்சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறக்கம் கண்டிருக்கும் நாட்களில் பெரும்பாலும் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடைபெற்றுள்ளது. எனவே நாம் இதனை ஒரு வாய்ப்பாக அமைத்து கொள்ள, நல்ல நிறுவன பங்குகளை அலசி ஆராய்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • பங்குகளை அவசரமாக வாங்க வேண்டும் என்ற நிலையை எப்போதும் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதற்கென கிடைக்கும் உள்ளார்ந்த விலையை(Intrinsic or Fair Value) எப்போதும் பரிந்துரையுங்கள். சில நேரங்களில் நல்ல நிறுவன பங்குகள் நாம் நினைக்கக்கூடிய விலையில் கிடைக்கப்பெறாது.
  • இனிவரும் காலங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் என்பதனை மனதில் நிறுத்தி, அஸெட் அலோகேஷன் முறையை கடைபிடியுங்கள். வருடத்தின் எல்லா நாட்களிலும் பங்குச்சந்தை மட்டுமே ஏற்றம் பெறும், தங்கம் எப்போதும் விலையேறும் என எண்ணி விட வேண்டாம். பல முதலீட்டு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்வது, நட்டத்தை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தும்.
  •  சந்தை உச்சத்தில் இருக்கும் போது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு, இறக்கத்தில் வாங்கி வைக்கிறேன் என உங்களால் எப்போதும் சரியாக கணிக்க இயலாது. அஸெட் அலோகேஷன்(Asset Allocation) செய்வதன் மூலம் மட்டுமே, நீங்கள் பெரும்பாலான வாய்ப்புகளை பயன்படுத்த முடியும்.
  • பங்குச்சந்தை அடுத்த சில வருடங்களுக்கு பெரும் வீழ்ச்சியை கண்டால் உங்களது முதலீட்டு உத்தி என்ன ? (நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தும்)
  • போன்சி(Ponzi) போன்ற ஏமாற்று வழிகளின் மூலம் நீங்கள் மிக விரைவாக பணம் சேர்த்து விட முடியும் என நம்புகிறீர்களா, மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தவிர்த்து விட முடியமா என்ன  ?
  • இறுதியாக உங்களது உயிலை(Will) தயார் செய்ய மறவாதீர்கள். இதற்கு வயது வரம்பு பெரிதாக இல்லை. 18 வயது நிரம்பியிருந்து சுயநிலையில் உங்களது உயிலை எழுதலாம். உங்களது காலத்திற்கு பின்பு ஏற்படும் நிதிச்சிக்கலை உயில் எழுதுவதன் மூலம் தவிர்க்கலாம். உலக பொருளாதார மந்தநிலையையோ, பணவீக்கத்தையோ நம்மால் கணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால் நமக்கான பாதுகாப்பையும், நிதி மேம்பாட்டையும் செய்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.01 சதவீதம்

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.01 சதவீதம் 

India’s CPI Retail Inflation in January 2022 – 6.01 Percent

 

சில்லறை விலை பணவீக்கம் என சொல்லப்படும் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம், கடந்த சில மாதங்களாக குறைந்து வந்திருந்த நிலையில் ஜனவரி மாதத்தில் 6 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் முதல் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் 6.01 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

 

அதே வேளையில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(|Unemployment rate) சற்று குறைந்துள்ளது. ஜனவரி மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் நகர்புறத்தில் 8.16 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.84 சதவீதமாகவும் இருந்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.57 சதவீதமாக ஜனவரி மாதத்தில் இருந்துள்ளது. 

 

கடந்த சில மாதங்களாக கிராமப்புறங்களை காட்டிலும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் அதிகரித்ததற்கான காரணமாக உணவுப்பொருட்களின் விலை இருந்துள்ளது. 

 

பருப்பு வகைகள் 3 சதவீதமும், காய்கறிகள் 5.19 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கு பிறகான காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக ஜனவரி மாத விலைவாசி உள்ளது. ஒளி மற்றும் எரிபொருட்களின் விலையும் 9.32 சதவீதமாக அதிகரித்து வந்துள்ளது.

 

துணிமணிகள் மற்றும் காலணிகள் 8.84 சதவீதம், வீட்டுமனை 3.52 சதவீதம் மற்றும் புகையிலை பொருட்கள் 2.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க(Consumer price index) குறியீட்டில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டுமனை 10.7 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு 8.6 சதவீதமும், சுகாதாரம் 5.9 சதவீதம் மற்றும் கல்வி 4.46 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

 

பாரத ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்திற்கான குறுகிய கால இலக்கு 2% முதல் 6% வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட நுகர்வோர் விலை பணவீக்கம் இலக்கை தாண்டியுள்ள நிலையில், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே சொல்லப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

REPO rate unchanged – RBI – Monetary Policy Committee(MPC)

பாரத ரிசர்வ் வங்கி சார்பாக மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த டிசம்பர் 6 முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டுக்கு ஆறு முறை நடக்கும் இக்கூட்டத்தில் நாட்டின் வட்டி விகித மாற்றம் சார்ந்த அறிக்கைகள் வெளியிடப்படும். கூட்டத்தில் ரிசர்வ் வங்கி சார்பாக மூன்று அதிகாரிகளும், அரசு சார்பில் மூன்று உறுப்பினர்களும் கலந்து கொள்வர்.

வங்கிகளுக்கான வட்டி விகிதம், பணவீக்க நிலவரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதி சந்தை மற்றும் பொது நிதி போன்றவற்றை ஆலோசித்து பின்பு வாக்களிக்கும் முறையில் முடிவுகள் அறிவிக்கப்படும். இம்முறை கூட்டத்தில் எடுக்க முடிவின் படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி(REPO) விகிதத்தில் மாற்றமில்லை எனவும், இதற்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 5.3 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டு முழுவதுமான மதிப்பீட்டில் 9.5 சதவீதமாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் 6.6 சதவீதமும், ஜனவரி – மார்ச் நான்காம் காலாண்டில் 6 சதவீதமுமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நாட்டின் வட்டி விகிதம் கடந்த இரண்டு வருடங்களாக 6 சதவீதத்திற்கும் கீழ் இருந்து வருகிறது. இது பாரத ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்குகளை சார்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021

Income Tax Return Filing for AY 2021-22 Deadline: 31st December, 2021

2020-21ம் நிதியாண்டுக்கான (2021-22 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 2021 என்றிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் புதிய மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றால் டிசம்பர் 31, 2021 ஆக நீட்டிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், டிசம்பர் 3, 2021 தேதியின் படி, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான(Assessment Year) வருமான வரி தாக்கலை இதுவரை மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் செய்துள்ளதாகவும், தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நடப்பில் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வரி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 52 சதவீதம் பேர் இணையம் வழியாக வரி தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 59 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 1 (ITR – 1) படிவத்தையும், 9 சதவீதம் ஐ.டி.ஆர் – 3 படிவத்தையும், 8 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 2 படிவத்தையும் பயன்படுத்தி வரி தாக்கல் செய்துள்ளனர்.

இதர படிவங்களான ITR-4, 5, 6, 7 ஆகியவற்றை சுமார் 23 சதவீதம் பேர் வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தி உள்ளனர். மூன்று கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல் நடைபெற்றிருந்தாலும், E-Verification என்ற முழுமையான வரி தாக்கல் நிறைவை இதுவரை 2.69 கோடி பேர் மட்டுமே செய்துள்ளதாக வருமான வரி துறை கூறியுள்ளது.

வரி தாக்கலை Verification மூலம் உறுதி செய்வது, பான் – ஆதார் இணைப்பை ஏற்படுத்துதல், ஆதார் கார்டு தகவலில் கைபேசி எண்ணை பதிவு செய்தல், வங்கிக்கணக்கை சரியான முறையில் இணைப்பது ஆகியவற்றை செய்வதால் வருமான வரி தாக்கல் செய்யும் போது சிரமம் ஏற்படாமல் இருக்கும். வருமான வரி தாக்கல் செய்யும் முன் படிவம் 16(Form 16),  படிவம் – 26 ஏ.எஸ். (Form 26AS & AIS, TIS) மற்றும் வருடாந்திர வரித்தகவல் அறிக்கையை சரி பார்த்து கொள்வது அவசியம்.

நீங்கள் வாங்கிய மற்றும் விற்ற பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி சேமிப்பு மற்றும் டெபாசிட்டுக்கான வட்டி வருவாய், வீட்டுமனை பண பரிவர்த்தனை மற்றும் இதர நிதி சார்ந்த தகவல்கள் மேலே சொல்லப்பட்ட படிவங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை சரி பார்த்து மற்றும் உறுதி செய்து தாக்கல் செய்யும் போது, பின்னாளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். வரக்கூடிய காலக்கட்டங்களில் கடன்கள், காப்பீடுகள், புதிய நிதி சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகள் ஆகிய விவரங்களும் இது போன்ற படிவங்களில் புதுப்பிக்கப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம்

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் 

India’s GDP of 8.4 Percent in September Quarter – Q2FY22

கடந்த 2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் பெருத்த சரிவை கண்டிருந்தது. 2021ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் (-24.4) சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த காலாண்டிலும் (-7.4) சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

பெரும்பாலான வளர்ச்சியடைந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் இது போன்ற தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு குறைய குறைய பொருளாதாரமும் மீண்டெழுந்தது. கடந்தாண்டின் டிசம்பர் காலாண்டில் 0.5 சதவீதமும், மார்ச் காலாண்டில் 1.6 சதவீதமுமாக வளர்ச்சி இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல்-ஜூன் காலத்தில் 20.1 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது ஜூலை-செப்டம்பர் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி 8.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த 8.4 சதவீத வளர்ச்சி என்பது கடந்தாண்டு செப்டம்பர் 2020 காலத்துடன் ஒப்பிடப்பட்ட வளர்ச்சியாகும்.

சேவைத்துறை, நிதி மற்றும் வீட்டுமனை, அரசு நிர்வாகம், உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சியால் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது. 2021-22ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

1950ம் ஆண்டு காலகட்டங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பங்களிப்பில் விவசாய துறை 52 சதவீதத்தை கொண்டிருந்த நிலையில், இன்றைக்கு 12 சதவீதமாக உள்ளது. 2021ம் ஆண்டின் பொருளாதார பங்களிப்பில் சேவைத்துறை 60 சதவீதமும், உற்பத்தி 15 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், கட்டுமானம் 8 சதவீதம், குடிநீர் மற்றும் எரிசக்தி 5 சதவீதமுமாக உள்ளது.

விவசாயத்தின் பங்களிப்பு குறைந்திருந்தாலும், தற்போது நாட்டின் 50 சதவீத வேலைவாய்ப்பை விவசாயத்துறை உருவாக்கி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையின் கீழ் விவசாயம், வனவியல் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவை உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம்

தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம் 

Anuh Pharma will be listed soon in NSE(National Stock Exchange)

எஸ்.கே. குழுமத்தின் அங்கமான அனுக் பார்மா நிறுவனம் மருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 61 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்நிறுவனம் காசநோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. அனுக் பார்மா பாக்டீரியா, மலேரியா, கார்டிகோஸ்டீராய்டுகள் ஆகியவற்றை எதிர்க்க தேவையான மருந்து பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இது போல பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

530 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட ஸ்மால் கேப் நிறுவனமாக இருந்தாலும், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.23 என்ற விகிதத்திலும், நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது.

செப்டம்பர் 2021 காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 172 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது சந்தை மூலதன மதிப்பில் மூன்றில் ஒரு பங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அனுக் பார்மா நிறுவனத்தின் முக மதிப்பு(Face value) 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டது.

2006ம் வருடத்தின் ஜனவரி மாதத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஆக வர்த்தகமான நிலையில், நாம் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீட்டு மதிப்பு அப்போது 20,000 ரூபாயாக இருந்திருக்கும். முகமதிப்பு மாற்றியமைக்கப்பட்ட பின்பு நமது கையிருப்பு பங்குகள் 2,000 (முதலீட்டு மதிப்பில் மாற்றமில்லை).

அதே வருடத்தில் ஒன்றுக்கு ஒன்று போனஸ்(1:1 Bonus issue) பங்குகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நமது கையில் உள்ள 2,000 பங்குகள் 4,000 பங்குகளாக மாறியிருக்கும். பின்பு 2010ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள்(2:1 Bonus issue) என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது நமது கையிருப்பு 12,000 பங்குகள்.

மீண்டும் 2015ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற அடிப்படையில்  போனஸ் பங்குகள். இந்த நிகழ்வுக்கு பின்பு நம்மிடம் 36,000 பங்குகளாக சொல்லப்பட்டிருக்கும். கடந்தாண்டு (செப்டம்பர் 2020) கொரோனா காலத்திலும் 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டது. இதனையும் நாம் கணக்கில் கொண்டால் இப்போது 72,000 பங்குகள் நம் கைவசம் இருந்திருக்கும். நடப்பில்(03-08-2021) அனுக் பார்மா நிறுவனத்தின் பங்கு ஒன்று அதிகபட்சமாக 150 ரூபாய்க்கு வர்த்தகமானது. 15 வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீடு அப்போதைய நிலையில் ரூ.20,000 ஆக இருந்திருக்கும். சொல்லப்பட்ட ஆகஸ்ட் 2021 விலையில் நம்மிடம் ரூ.1.08 கோடியும், 72000 பங்குகளும் கைவசம் இருக்கும்(பங்குகளை இதுவரை விற்காமல் இருந்திருந்தால் !). தற்போது இந்த பங்கு ரூ.105 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் இந்நிறுவன பங்கு, கடந்த நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிறுவனத்தை பட்டியலிடுவதற்கான முடிவை பங்குதாரர்களிடம் இருந்து பெற்றது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு(Q2FY22 results) முடிவுகளின் நிகழ்விலும் உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரு மாதங்களுக்குள் அனுக் பார்மா நிறுவனம், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என நிறுவனமும் கூறியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,  வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

Trading activity of Foreign Institutional Investors(FII) in the Indian Equity Market 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதமும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி(Nifty50) குறியீடு 52 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நடப்பு வருடத்தில் சொல்லப்பட்ட இரண்டு குறியீடுகளும் இதுவரை 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றமடைந்துள்ளது. சமீபத்தில் இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான நிப்டி மற்றும் சென்செக்ஸ் தனது வாழ்நாள் உச்சபட்ச விலையில் வர்த்தகமானது.

தற்போது உச்சநிலையிலிருந்து, இந்த இரண்டு குறியீடுகளும் 5 சதவீதம் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. எனினும் இதனை மிகப்பெரிய இறக்கம் என நாம் சொல்லிவிட முடியாது. நடப்பு அக்டோபர் மாதம் 29ம் தேதியுடன் முடிவடைந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 59,307 புள்ளிகளுடனும், நிப்டி 17,672 புள்ளிகளுடனும் உள்ளது.

கடந்தாண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு(Covid-19) பிறகான காலத்தில் பங்குச்சந்தை முதலீடும், டீமேட் கணக்கு துவங்கும் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலமான 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் காணப்பட்ட உலக பொருளாதார மந்தநிலை, நாடுகளிடையேயான வர்த்தக போர், போர் பதற்றம், காலநிலை மாற்றங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வங்கிகளில் காணப்படும் வட்டி விகித குறைவு, பணவீக்க விகிதம் மற்றும் வீட்டுமனை துறையில் உள்ள சுணக்க நிலை ஆகியவற்றால் பங்குச்சந்தை மற்றும் மெய்நிகர் நாணய(அரசு அங்கீகரிக்கப்படாத – Unregulated) முதலீடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், இது போன்ற முதலீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தை இறக்கம் காணும் போது தங்கம் போன்ற முதலீடுகளின் வருவாய் அதிகரிக்க கூடும்.

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை பெரும்பாலும் அன்னிய முதலீட்டாளர்களின் கை ஓங்கி தான் இருக்கும். பங்குச்சந்தைக்கும், கடன் பத்திரங்களுக்கும் அன்னிய முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் முதலீடு கணிசமாக இருக்கும். கடந்த ஒன்றரை வருடத்தில் காணப்பட்ட பங்குச்சந்தை ஏற்றத்தால், தற்போது அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை(அக்டோபர் மாத முடிவில்) ரூ.68,500 கோடி என்ற அளவில் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை விற்றுள்ளனர். இதற்கு நேர்மாறாக உள்நாட்டு முதலீடு(Domestic Institutional Investors) 56,179 கோடி ரூபாய் சந்தைக்கு வந்துள்ளது. சமீபத்தில் மதிப்பீட்டு மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் சில, இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய மதிப்பு ஏற்றக்கொள்ளக்கூடியாத இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FII & DII Trading Activity

அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த ஏழு மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்கள் 11.75 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், ரூ.12.43 லட்சம் கோடி மதிப்பில் பங்குகளை விற்றும் உள்ளனர். நிகர விற்பனையாக 68,500 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில், உள்ளூர் முதலீட்டாளர்கள் 8.62 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், 8.06 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். இதன் காரணமாக அவர்களது நிகர கொள்முதல்(Net Purchase) ரூ.56,179 கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 25,572 கோடி ரூபாயை நிகர விற்பனையாக கொண்டுள்ளனர். இதே மாதத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் 4,470 கோடி ரூபாயை நிகர கொள்முதலாக கொண்டுள்ளனர். சந்தையில் உள்ள பல நிறுவன பங்குகளின் விலை, அதன் வருவாயுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) நிறைவு செய்யும் நல்ல நிறுவன பங்குகள் மலிவான விலையில் கிடைக்கப்பெறுவதும் தற்சமயம் உள்ளது.

சந்தை புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், தரமான நிறுவனங்களை தள்ளுபடி விலையில்(Discounted Value) வாங்கவில்லையென்றால், முதலீட்டில் அதிகப்படியான சரிவை சந்திக்கும் காலமாக தற்போது நிலவுகிறது. சந்தையில் புதிதாக பட்டியலிடப்படும் நிறுவனங்கள் தங்களுக்கான முதலீட்டை விரைவாக பெற வேண்டிய நிலையில், புதிய முதலீட்டாளர்கள் சற்று பொறுமை காத்து, பங்குகளை ஆராய்ந்து நீண்டகால முதலீட்டிற்கு தயாராக வேண்டியது அவசியம். முதலீட்டை எப்போதும் பரவலாக்கம்(Asset Allocation & Diversification) செய்வதன் காரணமாக, நட்டத்தை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி

ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி

ITC reported a Net Profit of Rs.3,714 Crore – Q2FY22 results

பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம், புகையிலையை தனது முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும், இன்று நுகர்வோர் பொருட்கள், ஆடைகள், நட்சத்திர விடுதிகள், பேப்பர் பொருட்கள், பேக்கேஜிங்(Packaging), விவசாயம் சார்ந்த பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை என தனது தொழிலை விரிவடைய செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் சுமார் 2.94 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டிருக்கும் இந்நிறுவனம் கடனில்லா நிறுவனமாகவும்(Debt Free) இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 564 மடங்குகளில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது.

2020-21ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 49,257 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.13,161 கோடியாகவும் இருந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு மார்ச் 2021 முடிவில் ரூ.59,100 கோடி.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு(ஜூலை – செப்டம்பர் Quarterly results) முடிவுகளை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.13,751 கோடியாகவும், செலவினம் 8,740 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 469 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபமாக ரூ.3,714 கோடி இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,055 கோடி. கடந்த ஜூலை 2021 காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 4 சதவீதமும், நிகர லாபம் 13 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

முந்தைய வருடத்தின்(2020-21) இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் வருவாய் தற்போது 14 சதவீதமும், நிகர லாபம் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது. எனினும் கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய், கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பில் அதிகரித்து காணப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com