Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காவது மிகப்பெரிய நாடு – இந்தியா

அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காவது மிகப்பெரிய நாடு – இந்தியா 

India’s Foreign Exchange Reserves – Billion Dollar Currency Holding

வளரும் நாடு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நாடொன்றுக்கு அன்னிய செலாவணி கையிருப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதனை அந்த நாட்டின் மத்திய வங்கி கவனித்து கொள்ளும். பொதுவாக அன்னிய செலாவணி கையிருப்பு(Foreign Exchange Reserves) என்பது மற்றொரு நாட்டின் பணத்தை அல்லது பண மதிப்பை வாங்கி கையிருப்பாக வைப்பது. சொல்லப்பட்ட பணம், உலகளாவிய நாணயமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ‘அமெரிக்க டாலர்’ தான் தற்போதைய பொது நாணயமாக சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலரை தான் பாரத ரிசர்வ் வங்கி என சொல்லப்படும் மத்திய வங்கி(Reserve Bank of India) தனது கையிருப்பாக வைத்து கொள்ளும். இதற்கான காரணங்கள் பல – ஒரு நாட்டினுடைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் காணப்படும் இரு நாடுகளின் வேறுபட்ட பண மதிப்பை கட்டுப்படுத்த, அன்னிய செலாவணி கையிருப்பு உதவும். உதாரணமாக நம் நாட்டிலிருந்து ஒரு பொருள் அல்லது சேவை பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்து கொள்வோம். இப்போது இந்த இரு நாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தகம், பொது நாணயமான டாலர் மதிப்பில் தான் நடந்திருக்கும். சில சமயங்களில் அவை யூரோ அல்லது வேறொரு அங்கீகரிக்கப்பட்ட பொது நாணயமாக இருந்திருக்கலாம்.

வர்த்தகத்தை ஏற்றுமதி செய்த நாடு, தனது வருவாயினை டாலர் மதிப்பில் தான் பெறக்கூடும். வர்த்தகத்தை ஏற்படுத்தியவர்(தனிநபர் அல்லது நிறுவனம்) இதற்கான டாலர் வருவாயை அவரது வங்கி கணக்கில் தான் பெறுவார். டாலர் பணத்தை உள்ளூர் ரூபாய் மதிப்பிற்கு மாற்றுவதற்கு வங்கிகள் சில கட்டணங்களை எடுத்து கொள்ளும். அதே வேளையில் டாலர் பணத்தை அந்நாட்டின் மத்திய வங்கியிடம், வங்கிகள் பரிமாற்றம் செய்து கொள்ளும். பொதுவாக வங்கிகள், மத்திய வங்கியிடமிருந்து அரசு கடன் பத்திரங்களை வாங்குவதற்கு இது போன்ற ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட டாலர் பணத்தை செலவழிக்கும்.

வங்கிகளை பொறுத்தவரை அரசு கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் வட்டி வருவாயை பெறும். ஆனால் மத்திய வங்கி இதனை(டாலர்) அன்னிய செலாவணி கையிருப்பாக கொண்டு, பல பொருளாதார நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை, அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி தனது கையிருப்பை எச்சரிக்கையாக கையாளும். பொருளாதார வீழ்ச்சி, போர் பதற்றம், வெளிநாட்டு கடன், அதிக இறக்குமதியின் மூலம் ஏற்படும் நிதி பற்றாக்குறை போன்ற காலங்களை சமாளிக்க அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பது ஒரு நாட்டிற்கு சாதகமான தன்மையாகும்.

அன்னிய செலாவணி கையிருப்பு எனும் போது, ‘டாலர் பண ரொக்கமாக’ மட்டுமே இருந்து விடாது. அவை ரொக்கம், பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு, தங்கம், கடன் பத்திரங்கள், சர்வேதச நாணய நிதியம்(IMF) அனுமதிக்கும் வைப்பு தொகை என பல்வேறு சாதனங்களில் வைக்கப்படும்.

1991ம் ஆண்டு வாக்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, நாட்டின் இறக்குமதி அதிக சிக்கலை சந்தித்தது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அடுத்த மூன்று வாரங்களுக்கு தேவையான இறக்குமதி அளவை மட்டுமே பெற்றிருக்கும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது. உலக தர குறியீட்டு நிறுவனங்கள், நாட்டின் கடன் பத்திரங்களின் தன்மையை குறைந்து மதிப்பிட்டிருந்தன. குறைவான அன்னிய செலாவணி கையிருப்பு காரணமாக, உலக வர்த்தகத்தில் இந்தியா திவால் நிலைக்கு செல்லும் நிலை உருவானது.

அன்றைய தேதியில், வளைகுடா போரும்(Gulf War) சேர்ந்து கொண்டது. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கு போதிய தொகை இல்லாமல், அரசு சார்பில் இருந்த தங்க கையிருப்பு அடகு வைக்கப்பட்டன. பின்னர் நிதி பற்றாக்குறையிலிருந்து மீண்ட நாடு, பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு வித்திட அந்த நிகழ்வே காரணமாக அமைந்தது.

இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம், அன்னிய செலாவணி கையிருப்பு வளரும் நாடொன்றுக்கு எவ்வளவு முக்கியமென்று. 1991ம் ஆண்டு ஜனவரி மாத முடிவில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது அதே வருடத்தின் ஜூன் மாத முடிவில் 0.6 பில்லியனுக்கு குறைவாக சென்றது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தை மீட்க, சர்வேதச நாணய நிதியத்திடம் 67 டன் தங்கத்தை அடமானம் வைத்தது இந்தியா. இதன் வாயிலாக சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடமான கடனாக பெற்றது இந்தியா. அவை இங்கிலாந்து மற்றும் ஸ்விட்ஸர்லாந்து நாடுகளின் மத்திய வங்கிகள் மூலம் பெறப்பட்டன.

அந்தவொரு நிகழ்வுக்கு பிறகு, தனது அன்னிய செலாவணி கையிருப்பை நமது நாடு கவனமாக கையாண்டு வருகிறது. 2009ம் ஆண்டு வாக்கில் சர்வேதச நாணய நிதியத்திடமிருந்து 200 டன் மதிப்பிலான தங்கத்தை வாங்க பாரத ரிசர்வ் வங்கி முடிவு செய்ததும் அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியே. இன்று (12, மார்ச் 2021) நம் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 580.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (1991ம் ஆண்டு ஜனவரி – 1.2 பில்லியன் டாலர்கள் !)   

சில வாரங்களுக்கு முன்பு, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, உலகளவில் அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காம் இடத்திற்கு நகர்ந்தது இந்தியா. முதலிடத்தில் சீனா(3,336 பில்லியன் டாலர்கள்), இரண்டாம் இடத்தில் ஜப்பான்(1,379 பில்லியன் டாலர்கள்) மற்றும் மூன்றாமிடத்தில் சுவிட்ஸர்லாந்து(1,080 பில்லியன் டாலர்கள்) உள்ளன. உலக அன்னிய செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பான் யென், பிரிட்டன் பவுண்ட் மற்றும் சீன பண மதிப்புகள் முன்னிலையில் உள்ளன.

கடந்த 30 வருட காலத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 10,000 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளது. இது போல நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – GDP மதிப்பு 266 பில்லியன் டாலர்(1991ம் ஆண்டு) மதிப்பிலிருந்து 3 டிரில்லியன் டாலர்(2019) மதிப்பளவில் வளர்ந்துள்ளது. இது 1100 சதவீத வளர்ச்சியாகும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் அதிகரித்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – பிப்ரவரி 2021

மீண்டும் அதிகரித்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – பிப்ரவரி 2021

India’s Retail Inflation to 5.03 Percent in February 2021 – CPI

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 4.06 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்க தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2021 மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer price index) 5.03 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சந்தை எதிர்பார்த்த 4.83 சதவீதம் என்ற அளவை காட்டிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு பொருட்களில் காணப்பட்ட விலை உயர்வால் கடந்த மாத பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் மே மாதத்தில் 1.89 சதவீதம் என்ற அளவை கொண்டிருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம், தற்போது 3.87 சதவீதமாக உள்ளது.

இது போல பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. அதே வேளையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்து 6.24 சதவீதமாக பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெற்றுள்ளது. துணிமணிகள் மற்றும் காலணிகள் 3.82 சதவீதத்திலிருந்து 4.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புகையிலை பொருட்கள் மற்றும் வீட்டுமனை பணவீக்க விகிதங்களில் பெரிதான ஏற்ற-இறக்கம் இல்லை எனலாம். ஒளி மற்றும் எரிபொருட்களின் விலைவாசி 3.87 சதவீதத்திலிருந்து 3.53 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் பணவீக்க விகிதம் பெரும்பாலும் ஆறு சதவீதத்திற்கு மேலாக தான் இருந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால பணவீக்க விகித இலக்கு 2-6 சதவீதம் என்ற அளவிற்குள் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்க விகித அளவீட்டில் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் 45.86 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கின்றன. பால் பொருட்கள் 6.6 சதவீதமும், காய்கறிகள் 6.04 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் வகைகள் 3.6 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

வீட்டுமனை 10 சதவீதத்தையும், கல்வி 4.46 சதவீதம் மற்றும் சுகாதாரம் 5.9 சதவீதத்தையும் பங்களிப்பாக பெற்றுள்ளது. எரிசக்தியில் பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருத்தல், பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, மோசமான சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பில் மேம்பாடு இல்லாதது, அதிக நிதி பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் ஆகியவை சில்லரை விலை பணவீக்க ஏற்ற-இறக்கத்திற்கு பெரும்பாலும் காரணமாக உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் கடந்த 50 வருட பொருளாதார வளர்ச்சி – இந்தியா 2021

நாட்டின் கடந்த 50 வருட பொருளாதார வளர்ச்சி – இந்தியா 2021

India’s 50 years of Economic Growth – GDP India 2021

2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP growth) வளர்ச்சி 0.4 சதவீதமாக சொல்லப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்குக்கு பின்னர் நேர்மறையான வளர்ச்சி சொல்லப்பட்டது இந்த முறை தான். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (-24.4) சதவீதமும், இரண்டாம் காலாண்டில் (-7.3) சதவீதமும் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.

2013ம் ஆண்டுக்கு பிறகான மிகப்பெரிய தொய்வு நிலை மற்றும் வீழ்ச்சியாகவும் இது கூறப்பட்டது. பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் தற்காலிகமாக ஏற்பட்ட பெரும் நுகர்வு தன்மையால் அக்டோபர் – டிசம்பர் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 0.4 சதவீதமாக நிறைவு பெற்றுள்ளது. எனினும், நடப்பு நிதியாண்டில் ஒட்டு மொத்தமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறை மதிப்பில் முடிவடையும்.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகான காலத்தில் விலைவாசி அதிகரித்து கொண்டிருந்தாலும், ஜனவரி மாத பணவீக்கம் 4.06 சதவீதம் என்ற குறைந்த அளவில் இருந்தது. இது கடந்த 16 மாதங்களில் காணப்படாத குறைவான அளவாக உள்ளது. நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6-8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation – CPI) 2-6 சதவீதம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

பொதுவாக பொருளாதார வீழ்ச்சி(Economic Recession) என்பது ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொடர்ச்சியாக இரு காலாண்டுகள் எதிர்மறை வளர்ச்சியை(Negative growth) கொண்டிருந்தால் அது பொருளாதார வீழ்ச்சியாக உறுதி செய்யப்படும். அப்படி காணும் போது 2020-21ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டும் எதிர்மறை பொருளாதார சதவீதத்தை அடைந்தது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக சொல்லப்பட்டிருந்தது.

எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தகவலில் அக்டோபர் முதல் டிசம்பர் 2020 வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் நேர்மறை வளர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் சந்தை எதிர்பார்த்த அளவை இது எட்டவில்லை. கடந்த 50 வருட காலத்தில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக கொரோனா கால ஊரடங்கு பொருளாதாரம் சொல்லப்படுகிறது. 1951-2020 வரையிலான காலத்தை கணக்கில் கொள்ளும் போது, இந்திய பொருளாதாரம் அதிகபட்சமாக 11.40 சதவீத பொருளாதார உயர்வும்(மார்ச் 2010 காலாண்டு), மிகப்பெரிய வீழ்ச்சியாக (-24.40 ஜூன் 2020) சதவீதமும் இருந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று(04-03-2021) அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(10 Years Govt Bond yield) 6.21 சதவீதமாக உள்ளது. 2024-25ம் ஆண்டில் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய மத்திய அரசு ஏற்கனவே நிர்ணயித்துள்ளது. இதனை அடையக்கூடிய நிலையில், உலகின் மிகப்பெரிய மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா திகழும்.

உலக பொருளாதாரத்தில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த இரு நாடுகளையும் அடுத்த 25 வருடங்களில் முந்த முடியவில்லை என்றாலும், நுகர்வு தன்மை அடிப்படையில் இந்தியா அடுத்த 10-20 வருடங்களில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கும்.

நடப்பில் நமது நாடு, பெரும்பாலும் சேவை துறை சார்ந்த நாடாகவே உள்ளது. கொரோனாவுக்கு பிறகான காலத்தில், உற்பத்தியை பெருக்க அரசு திட்டம் கொண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறை 54.77 சதவீதமும், தொழிற்துறை  27.47 சதவீதமும் மற்றும் விவசாய துறை 17.76 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

சேவைத்துறையில் அரசு நிர்வாகம், ராணுவம் மற்றும் பிற துறைகள் 15.74 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. நிதி, வீட்டுமனை மற்றும் தொழில்முறை 20.95 சதவீத பங்களிப்பையும், வர்த்தகம், உணவக விடுதிகள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆகியவை 18.08 சதவீத பங்களிப்பையும் சேவை துறையின் கீழ் பெற்றுள்ளது.

விவசாய துறையில் விவசாயம், வனவியல் மற்றும் மீன் பிடித்தல் 17.76 சதவீத பங்களிப்பை அளித்து வருகின்றன. தொழிற்துறையில் உற்பத்தி 15.13 சதவீதமும், சுரங்கம் மற்றும் குவாரி 2.14 சதவீதமும், மின்சாரம், எரிவாயு, குடிநீர் மற்றும் இதர பயன்பாடு 2.65 சதவீதமும், கட்டுமானம் 7.55 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

கடந்த 1950-51ம் ஆண்டில் இந்தியா 52 சதவீதம் விவசாயத்தை சார்ந்தும், சேவையில் 33 சதவீதத்தையும் மற்றும் தொழில்துறையில் 15 சதவீதத்தையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக சொன்னால், இந்தியா நடுத்தர வருமானத்தை அதிகமாக கொண்ட வேகமாக வளரும் சந்தை பொருளாதார நாடாகும்(Middle income Developing market economy).

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு

தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு 

NSE Shut down – Suspected FII Trading activity – No Business for the Govt

நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம். எப்போதும் போல காலை ஒன்பது மணிக்கு துவங்கிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் காலை 11:40 மணி வேளை தேசிய பங்குச்சந்தை அமைப்பிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகிறது. தொலைத்தொடர்பு இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் காலை 10:08 மணி முதல் சந்தை குறியீடுகள் மற்றும் நிறுவனங்களின் விலை மதிப்புகள் சரியான நேரத்திற்கு புதுப்பிக்கப்படவில்லை(Update) எனவும், இதன் காரணமாக 11:40 மணி முதல் தேசிய பங்குச்சந்தை குறியீடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது.

பின்னர் மதியம் ஒரு மணிக்கு செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடக்கம் மீண்டும் மூன்று மணி வரை நீட்டிக்கப்பட்டது. பொதுவாக சந்தை மாலை 03:30 மணிக்கு முடியும். ஆனால் நேற்றைய தற்காலிக முடக்கத்தால் தேசிய பங்குச்சந்தை மாலை 03:45 மணிக்கு மீண்டும் துவங்கியது. மாலை ஐந்து மணி வரை வர்த்தகமான தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) 274 புள்ளிகள் உயர்ந்து, 14982 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் சுமார் 1030 புள்ளிகள் உயர்ந்து, 50781 புள்ளிகள் என்ற அளவில் தனது வர்த்தகத்தை முடித்து கொண்டது.

தொழில்நுட்ப கோளாறு என சொல்லப்பட்டிருந்தாலும், ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) இது சார்ந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தேசிய பங்குச்சந்தையிடம் கேட்டு கொண்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் பங்குச்சந்தை வர்த்தக நேரம் அதிகரிக்கப்படலாம், அதனை ஒட்டியே இது போன்ற நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சலசலப்பும் சந்தை வர்த்தகர்களிடையே பேசப்பட்டது. ஆனால் இது சார்ந்த விவரங்கள் பங்குச்சந்தை அமைப்பிடம் தற்போது சொல்லப்படவில்லை.

நேற்றைய பங்குச்சந்தை நேரத்தில், மற்றொரு கூடுதல் தகவலாக அன்னிய முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 28,739 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவாக அன்னிய முதலீட்டாளர்களின் வர்த்தக மதிப்பு சொல்லப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறின் காரணமாக, ஊக(Futures & Options trading) வணிகத்தில் பங்கு விற்பனையை மேற்கொண்டிருந்த பலர் தங்கள் பணத்தை நேற்று இழந்திருக்கலாம்.

நேற்றைய தேசிய பங்குச்சந்தையின் வர்த்தக மதிப்பு(Cash Turnover) ரூ.45,837 கோடி. கடந்த ஆறு மாதங்களின் சராசரி வர்த்தக மதிப்பு ரூ.64,796 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஊக வணிகத்தின் ஆறு மாத சராசரி வர்த்தக மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்றைய ஊக வணிகத்தின் வர்த்தக மதிப்பு மட்டும் 30.6 லட்சம் கோடி ரூபாயாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு, உலகளாவிய மத்திய வங்கிகளின் அடுத்தகட்ட வட்டி விகித அணுகுமுறை, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு, அதனை சார்ந்த கடன் தன்மை அதிகரிப்பு ஆகியவை உலக பங்குச்சந்தை குறியீடுகளில் வரும் நாட்களில் தெரிய வரும்.

உலக சந்தையில் டாலர் மதிப்பு கடந்த மூன்று வருடங்களில் காணப்படாத குறைந்த அளவில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதே வேளையில் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட மற்றும் புரிந்து கொள்ள முடியாத பரிவர்த்தனைகளிலும்  நடப்பு கால முதலீடுகள் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி கூறியுள்ளது. வரும் நாட்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

நாட்டில் உள்ள தனியார் வங்கிகள், அரசின் அனைத்து விதமான தொழில்களிலும் பங்கேற்கலாம். மத்திய அரசு நிறுவனங்களையும், தொழில்களையும் நடத்த தேவையில்லை எனவும், இனி தனியார் நிறுவனங்கள், நாட்டில் உள்ள தொழில்களையும், அது சார்ந்த நிறுவனங்களையும் நடத்தலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூறுகையில், அரசு நிறுவனங்களில் அரசு மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டுமென்ற அவசியம் இனி இல்லை எனவும், அரசின் கவனம் மக்களின் நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் மட்டுமே இனி இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. நேற்றைய பங்குச்சந்தை ஏற்றத்திற்கு இந்த செய்தியும் சாதகமாக அமைந்திருந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை

மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை 

Recent Bank Interest rates – RBI Policy review

நாட்டின் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 4.06 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 7.61 சதவீதமாக பணவீக்க விகிதம் இருந்தது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற அளவில் சில்லரை விலை பணவீக்கம் சொல்லப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றமும் அறிவிக்கப்படுகிறது. சமீபத்திய மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம்(RBI Monetary Policy) இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமுமில்லை எனவும், அதற்கு முந்தைய காலத்தில்  சொல்லப்பட்ட வட்டி விகிதங்கள் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டிருந்தது.

வங்கிகளுக்கான ரெப்போ(REPO) வட்டி விகிதம் தற்போது 4 சதவீதமாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து, நாட்டில் உள்ள வணிக வங்கிகள் கடன் பெறும் விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதமாக சொல்லப்படுகிறது. பொதுவாக நாட்டில் நிலவும் பணவீக்கத்தை(விலைவாசி) கட்டுப்படுத்த, ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய வங்கி ஒரு கருவியாக பயன்படுத்தும்.

ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதமாக உள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளிடம்  இருந்து மத்திய வங்கி கடன் வாங்கும் விகிதத்தை, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்கிறோம். விளிம்பு நிலை விகிதம்(Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீதமாகவும் உள்ளது.

வங்கிகள், மத்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம்(Cash Reserve Ratio – CRR) 3 சதவீதமாகவும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18 சதவீதமாகவும் உள்ளது. ரொக்கம், தங்கம், பத்திரங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வடிவில் வங்கிகள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்புத்தொகை விகிதம் தான் எஸ்.எல்.ஆர். விகிதம்.

இது வங்கிகளின் செயல்பாட்டை மட்டுமில்லாமல், நாட்டின் கடன் வளர்ச்சியை ஒழுங்குபடுத்த உதவும். வங்கிகளின் அடிப்படை வட்டி விகிதம்(Base Rate – Lending / Deposit) 7.30% – 8.80% என்ற அளவில் சொல்லப்பட்டுள்ளது. வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 2.70% – 3.00% என்ற அளவில் உள்ளது. ஒரு வருடத்திற்கு மேலான வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 4.90 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதம் வரை சொல்லப்பட்டிருக்கிறது.

2030ம் ஆண்டுடன் முடிவடையும் அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(5.85% GS 2030) ஆறு சதவீதத்திற்கு அருகாமையில் வர்த்தகமாகி வருகிறது. பணவீக்கம் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு முடிவின் அடிப்படையில் தான் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும், வங்கிகளின் வட்டி விகிதமும் மாறுபடும். பணவீக்கம் உயர்ந்தால் வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படும். எனவே, மத்திய வங்கி இதனை எச்சரிக்கையாக கையாளும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார குறியீடுகள் எவ்வாறு இருந்தது ?

2020ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார குறியீடுகள் எவ்வாறு இருந்தது ?

Economic Indicators in India – 2020 Review

கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் உலக பொருளாதாரம்  வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக அத்தியாவசிய உணவு பொருட்களின் தேவை தவிர்த்து மற்ற துறைகள் அனைத்தும் பெரும்பாலும் எதிர்மறை நிலையை தான் சந்தித்தன. மார்ச் மாத(2020) ஊரடங்கு துவக்கத்தில் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தை குறியீடுகள் மட்டும், வருடத்தின் முடிவில் எதிர்பாராத அளவில் ஏற்றத்தில் முடிவடைந்தன.

சமீபத்திய பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வு, எதிர்வரும் காலத்தில் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் அதிகமாகவே உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளை உண்மையில் பொருளாதாரம் மீண்டெழுந்ததா ? இல்லையெனில் அதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதனை அறிய கடந்த வருடத்தின் முழுமையான பொருளாதார குறியீடுகளை பார்த்தாக வேண்டும்.

நாட்டின் ஏற்றுமதி(Exports) கடந்த வருடத்தின் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் வீழ்ச்சியை மட்டுமே சந்தித்துள்ளன. ஏற்றுமதியில் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 6 சதவீதமாக இருந்துள்ளது. வீழ்ச்சியின் பக்கம் காணும் பொழுது, ஏப்ரல் மாதத்தில் (-61) சதவீதமும், மே மாதத்தில் (-35.7) சதவீதமும் மற்றும் ஜூன் மாதத்தில் (-12.2) சதவீதமாகவும் உள்ளது. இது போல இறக்குமதி(Imports) அளவு 12 மாத காலத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே நேர்மறையாக இருந்துள்ளது. பிப்ரவரி மற்றும் டிசம்பர் 2020 காலத்தில் மட்டுமே இறக்குமதி அளவு வீழ்ச்சியை சந்திக்கவில்லை.

வாகனத்துறை:

உள்நாட்டு டிராக்டர் விற்பனை பிரிவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஜூன் மாதத்திற்கு பிறகான தேவையின் காரணமாக இதன் விற்பனை அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 74 சதவீதமாக காணப்பட்டுள்ளது.

வாகனத்துறை பிரிவில் அதிகம் பாதிக்கப்பட்ட துறை என்றால், அது உள்ளூர் விமான போக்குவரத்தும், மூன்று சக்கர வாகன விற்பனையும் தான். மூன்று சக்கர வாகன விற்பனை அளவு ஜனவரி மாதம் தவிர்த்து, மற்ற அனைத்து மாதங்களிலும் எதிர்மறையாக தான் இருந்துள்ளது. விமான போக்குவரத்து ஏப்ரல் மாதத்தில் முழுமையாக இயங்கவில்லை.

Economic indicators India 2020

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த 2020ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலே சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டில் காணப்பட்ட வாகனத்துறை மந்தநிலை தான் காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் 2020 பிறகான காலத்தில், பொது போக்குவரத்து செயல்படாத நிலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் தேவை அதிகரித்தது. நான்கு சக்கர வாகனம் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 29 சதவீதமும், இரு சக்கர வாகன விற்பனை அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 17 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளது.

ரயில் சரக்கு(Freight Traffic) போக்குவரத்து மார்ச் முதல் ஜூலை வரையிலான காலத்தில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், பின்னர் அத்தியாவசிய தேவையின் காரணமாக உயர்ந்து வந்தது கவனிக்கத்தக்கது.

வரி வருவாய்:

ஜி.எஸ்.டி.(GST) வருவாய் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் எதிர்மறை அளவாக இருந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 72 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 2020க்கு பின்னர் இதன் வருவாய் ஓரளவு அதிகரித்து வந்துள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வருவாய் அளவு 10 சதவீதத்திற்கு மேல் இருந்துள்ளது.

தொழிற்துறை உற்பத்தி குறியீடு(IIP):

தொழில் துறையில் உள்ள நுகர்வோர் சாதனங்களின் விற்பனை கொரோனா ஊரடங்கு காலத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் நுகர்வோர் அல்லாத சாதனங்கள் பிரிவில் பெரிய அளவில் சரிவு ஏற்படவில்லை. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே அதிகபட்சமாக 36 சதவீதம் குறைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஸ்டீல்(எஃகு) உற்பத்தி 83 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 85 சதவீதமும் இழப்பாக சந்தித்துள்ளது. ஸ்டீல் மற்றும் சிமெண்ட் துறைகள் பெரும்பாலும் மந்தநிலையில் தான் 2020ம் ஆண்டு முழுவதும் இருந்துள்ளது.

நிலக்கரி மற்றும் உரங்கள் ஓரளவு ஏற்ற-இறக்கத்தில் தான் வர்த்தகமாகியுள்ளது. ஜூன் காலாண்டு தவிர்த்து நிலக்கரி தேவை ஓரளவு அதிகரித்து வந்துள்ளது. அதே நேரத்தில் உரங்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது.

சொல்லப்பட்ட வருடம் முழுவதும் இயற்கை எரிவாயு துறை இறக்கத்தில் மட்டுமே இருந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக எரிவாயு 20 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பணவீக்க விகிதம்:

2020ம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்க(Retail Inflation) விகிதம் சராசரியாக 6-8 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. அதிகபட்சமாக ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் 7.6 சதவீதமும், குறைந்த அளவாக டிசம்பர் மாதத்தில் 4.6 சதவீதமும் உள்ளது. உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலைவாசி கணிசமாக உயர்ந்து காணப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தேவையால் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் அளவு சராசரியாக 8 சதவீதத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மயூர் யூனிகோட்டர்ஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.35 கோடி

மயூர் யூனிகோட்டர்ஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.35 கோடி  

Mayur Uniquoters reported a net profit of Rs.35 Crore – Q3FY21

கடந்த 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் மயூர் யூனிகோட்டர்ஸ். செயற்கை தோல்(Artificial Leather) மற்றும் பி.வி.சி. வினைல்(PVC Vinyl) உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தோல் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் குறிப்பாக காலணி, அலங்கார பொருட்கள், வாகனத்துறைக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனையை கொண்டிருக்கிறது.

நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக டாட்டா, போர்டு(Ford), மாருதி சுசூகி, ஹோண்டா, பாட்டா(BATA), வி.கே.சி.(VKC), ரிலாக்சோ, பாராகான், ஸ்வராஜ்(Swaraj), இந்திய ரயில்வே, லான்சர் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்திய செயற்கை தோல் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை மயூர் யூனிகோட்டர்ஸ் கொண்டுள்ளது.

மயூர் யூனிகோட்டர்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1700 கோடி. புத்தக மதிப்பு 134 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.09 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 45 மடங்குகளிலும், நிறுவனர்களின் பங்களிப்பு 62 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

நேற்று(12-02-2021) நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 170 கோடி ரூபாயாகவும், செலவினம் 124 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ.6 கோடி சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.35 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய 10 காலாண்டுகளில் இல்லாத வருவாயும், நிகர லாபமும் தற்போது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 528 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 80 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் பங்குகளை திரும்ப பெறும் முறை(Buyback of Shares) அறிவிக்கப்பட்டிருந்தது. பங்கு ஒன்றுக்கு ரூ.400 என்ற விலையில் பங்குதாரர்களிடம் இருந்து, நிறுவனம் பங்குகளை வாங்கியிருந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தை விலை பங்கு ஒன்றுக்கு ரூ.275 க்கு கீழ் வர்த்தகமாகி கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.571 கோடி(செப்டம்பர் 2020). நிறுவனத்தின் கடந்த மூன்று வருட பணவரத்து(Free Cash Flow) சராசரியாக 37 கோடி ரூபாயாக உள்ளது. தற்போதைய சந்தை விலை, விற்பனை மதிப்பில்(Price to sales) 4 மடங்குகளில் உள்ளது.

முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இனி வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் சாத்தியமா, தொழில்முனைவு இனி அவசியமா ?

இனி வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் சாத்தியமா, தொழில்முனைவு இனி அவசியமா ?

4 Day work Week – Necessity of Entrepreneurship in the New Normal

கடந்த 2020ம் வருட ஏப்ரல் மாதத்தின் 18ம் தேதியன்று எனது வாடிக்கையாளர்கள் மற்றும் வாசகர்களுக்கான இணைய வழி சந்திப்பு(Webinar) ஒன்றை ஏற்படுத்தியிருந்தேன். சரியாக அது கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு காலமாகும்.

அதற்கு சில வாரங்களுக்கு முன்பு, நானும் சில தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களின் உரையாடல் மூலம் சில சிந்தனைகளை பெற்றிருந்தேன். இதன் பின்பு, எனது வாடிக்கையாளர்களிடம் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலம் மனித வாழ்வில் புதிய நகர்வாக இருக்கக்கூடும் என சொல்லியிருந்தேன்.

நான் சந்திப்பை ஏற்படுத்திய நிகழ்விலும் அதனை தான் கூறியிருந்தேன். வாசகர்கள் சிலர், ‘அப்படியெல்லாம் நடந்து விடாது சார், கொரோனாவுக்கு பின்னர், நாம் முன்னர் இருந்த சாதாரண வாழ்க்கை திரும்ப வந்து விடும்’ என கூறினார்கள். ஆனால் நான் குறிப்பிடத்தக்க தொழிலதிபர்களிடம்(வல்லரசு நாடு உட்பட அயல்நாட்டில் தொழில்புரிந்தவர்களும்)  அவர்களின் சிந்தனையில் அறிந்த போது, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலம் உறுதியாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பினேன். பலருடைய வாழ்வில் மிகப்பெரிய ஏற்ற-இறக்கத்தை இனிவரும் காலங்கள் ஏற்படுத்தும் என்ற புரிதலுக்குள் முனைந்தேன். முக்கியமாக, அமெரிக்காவில் வாரத்திற்கு 40 மணிநேரம் மட்டுமே(5 நாட்கள் X 8 மணிநேரம்) இருந்த பணியாளர் வேலை நேரம் இனி வாரத்திற்கு 30 மணிநேரத்திற்கு குறைவாகவோ அல்லது வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை இருக்கலாம் என அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் கூறியிருந்தார். இந்த நிலை இந்தியாவிலும் வரக்கூடும், ஆனால் அதற்கான காலம் தாமதமாகலாம் என கூறினார். இதற்கான காரணமாக தொழில்நுட்பங்களும், அதனை சார்ந்த செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்ட வளர்ச்சியும் தான் சொல்லப்பட்டன.

இதன் வாயிலாக நானும் சில விவரங்களை தொகுத்த ஆரம்பித்தேன். அதனை  வாடிக்கையாளர் சந்திப்பின் தொகுப்பாகவும் இணைத்தேன். அவற்றின் சுருக்கம்…

2020ம் ஆண்டுக்கு பிறகான சவால்கள்:
  • சமூக இடைவெளி என்பது இனி புதிய வாழ்வியல் நிலையாக இருக்கும்.
  • பல துறைகளில் இடையூறு மற்றும் வெற்றிடம் – புதுமை புகுதல்
  • ஆட்டோமேஷன் – செயற்கை நுண்ணறிவு
  • வரி விதிப்புகள்
  • சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கான தேவை
  • சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
வாய்ப்புகள்: 
  • மினிமலிசம் – குறைவாக செலவழித்தல் மற்றும் நிறைவான வாழ்வு
  • பல்வேறு வேலைவாய்ப்புகள் (தற்சார்பு வாழ்வு, தொழில்முனைவு)
  • புதிய மற்றும் பல முதலீட்டு சாதனங்களும், வாய்ப்புகளும்
  • உணவுக்கான புரட்சி (விவசாயத்தின் தேவை)
  • நிலைத்தன்மை வாழ்க்கை(Sustainability Living)
புதிய உதயம்:
  • பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை நகர்வு
  • போதுமான நேரம் இருத்தல் (உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்தல், குடும்பத்துடன் நேரம் செலவழித்தல்)
  • சிந்தனைக்கு உணவு
  • தொழில்முனைவோர் வாழ்க்கை – இனி வழக்கமான வேலை இல்லை.

மேலே சொன்னவற்றை கண்டு நாம் பயப்படவோ, நகைப்புக்குரியதாகவோ எடுத்து கொள்ள வேண்டாம். இவை கணிப்புகள் அல்ல… பெரும்பாலான உலக பொருளாதாரத்தின் நகர்வுகள் !

அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லும் முன்னர் பொருளாதாரம் சார்ந்த பாதுகாப்பை பெற போதுமான டேர்ம் காப்பீடு, குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு, அவசரகால நிதி, ஓய்வு காலத்திற்கான கார்பஸ் தொகை மற்றும் ஏற்கனவே உள்ள கடன்களை பெரும்பாலும் குறைத்தல் அல்லது கடனில்லா நிலை – இவ்வைந்தையும் உங்கள் வாழ்வில் உறுதி செய்து கொள்ளுங்கள்.

வரும் நாட்களில் தொழில்முனைவுக்கான தேவை அதிகமாக இருக்கும். நீங்கள் காப்பீடு ஏஜெண்டாக இருந்தாலும் பரவாயில்லை, இணைய வழி பொருட்களை விற்கும் தொழிலை கொண்டிருந்தாலும் பரவாயில்லை. வரும் நாட்கள், புதிய மாற்றத்தை கொண்டிருக்கும்.

குறிப்பு:

வாரத்திற்கு 48 மணிநேரமாக இருந்த தொழிலாளர்களுக்கான வேலை நேர வரம்பு, இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும். அதாவது வாரத்தில் ஊதியத்துடன் கூடிய மூன்று நாட்கள் கட்டாய விடுப்பு. நாளொன்றுக்கு 12 மணிநேர வேலை என்பது இனி ஊழியர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் அனைத்து நாட்களிலும் இனி வேலை செய்ய முடியாது – மத்திய தொழிலாளர் அமைச்சகம் விரைவில் சட்டமாக்க உள்ள தகவல்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சன் டி.வி. மூன்றாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.446 கோடி

சன் டி.வி. மூன்றாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.446 கோடி 

Sun TV reported a net profit of Rs.446 Crore in Q3FY21 results

22,000 கோடி ரூபாயை சந்தை மூலதனமாக கொண்டிருக்கும் சன் டி.வி. நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய செயற்கைக்கோள் தொலைக்காட்சி மற்றும் ஊடக நிறுவனமாக உள்ளது. நாளிதழ் வெளியீடு, ஒளிபரப்பு, படம், கேபிள் தொலைக்காட்சி, விளையாட்டு உரிமம் ஆகிய துறைகளில் தொழில் புரிந்து வருகிறது.

தென்னிந்திய மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட சேனல்களையும், பல துணை நிறுவனங்களையும் உள்ளடக்கியுள்ளது சன் டி.வி. குழுமம். கடனில்லா நிறுவனமாக வலம் வரும் இந்நிறுவனத்தின் நிறுவனர்களின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.

வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 150 மடங்குகளில் உள்ளது கவனிக்கத்தக்கது. 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 994 கோடி ரூபாயாகவும், செலவினம் 387 கோடி ரூபாயாகவும் உள்ளது. இயக்க லாபம் 608 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம் 61 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதர வருமானமாக மூன்றாம் காலாண்டில் 65 கோடி ரூபாய் உள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.446 கோடியாக உள்ளது. இது கடந்த டிசம்பர் 2019-20 காலாண்டை காட்டிலும் 16 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

பங்கு ஒன்றுக்கு டிவிடெண்ட் தொகையாக ரூ.5 அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்களின் மூலமான வருவாய் டிசம்பர் காலாண்டில் மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 424 கோடி ரூபாய்.

2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 3,520 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.1,385 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் 2020 காலாண்டின் படி, இருப்புநிலை கையிருப்பு(Reserves) 6,120 கோடி ரூபாயாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

போர்ட்ஃபோலியோ இன்சூரன்ஸ் – ஏன், எதற்கு ?

போர்ட்ஃபோலியோ இன்சூரன்ஸ் – ஏன், எதற்கு ?

Portfolio Insurance – why is it necessary ?

இன்றைய நாளில் ரிஸ்க் இல்லாத முதலீடு என்று எதுவுமில்லை. பொதுவாக முதலீட்டில் ரிஸ்க் இருக்கிறது என்று அதனை தவிர்ப்பதை காட்டிலும், ரிஸ்க்கை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். முதலீட்டில் காணப்படும் ரிஸ்க் தன்மையை பரவலாக்குதல்(Asset allocation) மற்றும் துறை சார்ந்த பல்வகைப்படுத்துதல்(Diversification) மூலம் குறைக்கலாம். பரவலாக்குதல் என்பது உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் நிலையில் உள்ளதென்றால், வெறுமென வங்கியிலோ அல்லது பங்குச்சந்தையிலோ முழுவதுமாக முதலீடு செய்யாமல், வங்கியில் கொஞ்சம், பங்குகளில் கொஞ்சம், தங்கம் மற்றும் கடன் பத்திரங்கள் என இன்னும் சில முதலீட்டு சாதனங்களை சேர்த்து கலவையாக செய்வது.

இதன் மூலம் பங்குச்சந்தை முதலீடு இறங்கினாலும், உங்களது மற்ற முதலீட்டு சாதனங்கள் அதற்குரிய வருவாய் மற்றும் முதலீட்டு பாதுகாப்பை அளிக்கும். அதே சமயத்தில் மற்ற முதலீடுகள் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை எட்ட முடியாத நிலையில், பங்குச்சந்தை ஏற்றம் உங்களது முதலீட்டு பெருக்கத்தை அதிகப்படுத்தும். பொதுவாக வங்கியில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் போது கடன் பத்திரங்களில்(Bonds) வட்டி விகிதம் சற்று அதிகமாக காணப்படும். இது போல பங்குச்சந்தை இறக்கத்தில் தங்கத்தின்(Gold) மீதான வருவாய் அதிகரிக்கும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் ஒரே துறையில் மட்டுமே முதலீடு செய்யாமல் பல துறைகள் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யும் போது, துறை சார்ந்த ரிஸ்க் தன்மையை குறைக்கலாம். சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாட்டை நாம் தெரிந்து கொண்டால், நீண்டகாலத்தில் செல்வவளத்தை ஏற்படுத்தலாம். சேமிப்பு என கூறும் போது பாதுகாப்பு இருந்தாலும், பணவீக்கம் தான் பாதகமாக அமையும். ஆனால் முதலீடு எனும் போது பலவித ரிஸ்க் தன்மைகளை நாம் கையாள வேண்டும். எதிர்பாராமல் வரக்கூடிய இழப்பீடுகளை தவிர்க்க நாம் முதலீட்டு காப்பு செய்வது அவசியமாகும்.

முதலீட்டு காப்பு என்பது உங்கள் முதலீட்டின் மீதான விளைவுகளிலிருந்து உங்கள் அன்றாட (நிதி) வாழ்க்கையை பாதுகாக்க உதவுவது; நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு வருமானம் ஏதும் தராமலோ அல்லது நஷ்டத்தையோ ஏற்படுத்தலாம்; அந்த சமயத்தில் உங்களது தினசரி பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் காப்பது அவசியம். இதை தான் நாம் முதலீட்டு காப்பு(Investment insurance or insulation) என்கிறோம்.

தனிநபர் ஒருவர் சிறு முதலீட்டாளராக வலம் வரும் போது போதுமான தொகைக்கு டேர்ம் பாலிசி, மருத்துவ மற்றும் விபத்து காப்பீடு பெறுவது அவசியம். ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு தேவையான அவசரகால நிதி, கடன் இருந்தால் அதனை முழுவதுமாக அடைத்து விடுதல், எதிர்கால இலக்கிற்கு தேவையான தொடர் முதலீடு ஆகியவற்றை சரியாக கையாள்வது நல்லது. நிதி சொத்துக்கள்(Stocks, Bonds, Deposits, Mutual Funds, Cash) மற்றும் அசையா சொத்துக்கள்(Real Estate, Commodity, Machinery) என முதலீட்டை கலவையாக கொண்டிருக்கும் நிலையை போர்ட்ஃபோலியோ முதலீடு எனலாம்.

குடும்பத்தில் வருவாய் ஈட்டும் ஒருவர், தனது குடும்பத்திற்கு தேவையான நிதி பாதுகாப்பை உறுதி செய்ய டேர்ம் பாலிசி மற்றும் மருத்துவ காப்பீடு எடுப்பது அவசியமென சொல்லியிருந்தோம். அது போல நமது வாகனம், வீடு, கைபேசி, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த உபகரணங்களுக்கும் காப்பீடு எடுத்து வைக்கலாம். ஆனால் நீங்கள் செய்த முதலீட்டிற்கு ?

முதலீட்டிற்கு காப்பீடு செய்வது அவசியமா என்ன ?

ஆம், அவசியம் தான். உங்களது முதலீடு சிறிய அளவில் செய்யப்பட்டிருந்தால், சந்தை இறக்கத்தில் ஏற்படும் இழப்பை தவிர்க்க நாம் முதலீட்டை பரவலாக்கலாம். இல்லையெனில் தங்கத்தை ஒரு இழப்பு காப்பு சாதனமாக(Hedging) பயன்படுத்தலாம். பங்குச்சந்தை இறக்கத்தில் தங்கத்தின் செயல்பாடு இதுவரை வரலாற்றில் சாதகமாக தான் இருந்துள்ளது.

உங்களது முதலீட்டு போர்ட்ஃபோலியோ மதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், அதனை பொருளாதார மந்தநிலை காலங்களில் ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாக்க முறையான காப்பு செய்ய வேண்டியது அவசியம். உதாரணமாக ஒருவரது போர்ட்ஃபோலியோ மதிப்பு ரூ.50 லட்சம் என கொள்வோம். பங்குகளில் அவரது முதலீடு 20 சதவீதமாக உள்ளது. அதாவது 50 லட்சம் ரூபாயில் 10 லட்ச ரூபாய் பங்குகளில்.

ஏதோ ஒரு காரணத்தால் சந்தை பெரும் வீழ்ச்சியை காணும் போது, இவரது பங்குகளின் மதிப்பு 10 சதவீத இழப்பை சந்திக்கிறது. 10 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு லட்ச ரூபாய் மதிப்பு இழப்பு(அவர் உண்மையில் பங்குகளை விற்கவில்லை, இழப்பு மதிப்பில் மட்டுமே). இதனை தவிர்க்கும் வகையில், அவர் முன்னரே இழப்பு ஏற்படுவதற்கான காப்பு முறையை செய்திருந்தால், அவரது இழப்பு மதிப்பு குறையும். இதற்கு இழப்புகளை கட்டுப்படுத்த பயன்படும் ஹெட்ஜிங் உத்தி(Hedging Strategy) துணைபுரியும். அவரது போர்ட்ஃபோலியோ மதிப்புக்கு ஈடாக, ஊக வணிகத்தில்(Derivatives) ரூ.5000 க்கு காப்பீடு செய்திருந்தால், அவருக்கு ஏற்படும் இழப்பு ரூ.10,000 மட்டுமே. காப்பீட்டு பிரீமியத்தொகை  மற்றும் ஏற்படக்கூடிய இழப்பும் சேர்த்து ரூ.15,000 மட்டுமே செலவாகும். இதனை அவர் செய்யாமல் விட்டால், அவருக்கு போர்ட்ஃபோலியோ மதிப்பில் ரூ. 1 லட்சம் இழப்பாக காணப்படும். (காப்பீடு செய்ய வேண்டிய தொகையான ரூ.5,000 ஒரு உதாரணமாகவே சொல்லப்பட்டுள்ளது. சந்தையில் இந்த தொகை வேறுபடலாம். எனவே, தகுந்த நிதி ஆலோசகர் அல்லது தரகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்)

காப்பீடு செய்ய வேண்டிய தொகை, பொதுவாக உங்களது மொத்த முதலீட்டு மதிப்பில் 5 சதவீதத்திற்கு மிகாமல் இருக்குமாறு பார்த்து கொள்வது நல்லது. உதாரணமாக உங்களது பங்கு முதலீட்டு மதிப்பு ரூ.10 லட்சம் என்றால், நீங்கள் அதற்குரிய இழப்பு காப்பு தொகையாக அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை செலவழிக்கலாம். அதற்கு மேல் செலவு செய்வது உங்களது முதலீட்டிற்கே விரயத்தை ஏற்படுத்தி விடும். சந்தையில் ஏற்படும் சிறிய அளவிலான ஏற்ற-இறக்கத்திற்கு தேவைப்பட்டால் மட்டுமே காப்பு செய்ய வேண்டும். பெரும்பாலும் உலக பொருளாதார மந்தநிலை, போர் பதற்றம், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் ஊரடங்கு சமயங்களில் மட்டுமே பங்குச்சந்தை அதிக வீழ்ச்சியை காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அதனை கருத்தில் கொண்டு நாம் முடிவு செய்யலாம்.

பங்குகளில் மட்டுமில்லாமல், நாம் மற்ற முதலீடுகளின் மீது ஏற்படும் ரிஸ்க் தன்மையையும் அதற்கேற்ற உத்திகளை பயன்படுத்தி குறைக்கலாம். வெறுமெனே போர்ட்ஃபோலியோ காப்பு(Portfolio Insurance) மட்டும் செய்யாமல், பங்குச்சந்தை வீழ்ச்சியில் தங்கத்தின் மூலம் கிடைத்த பெருத்த லாபத்தை, மீண்டும் பங்குகளில் விலை குறைவாக இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முதலீடு செய்வதும் சிறந்த உத்தி தான்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com