அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காவது மிகப்பெரிய நாடு – இந்தியா
India’s Foreign Exchange Reserves – Billion Dollar Currency Holding
வளரும் நாடு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நாடொன்றுக்கு அன்னிய செலாவணி கையிருப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதனை அந்த நாட்டின் மத்திய வங்கி கவனித்து கொள்ளும். பொதுவாக அன்னிய செலாவணி கையிருப்பு(Foreign Exchange Reserves) என்பது மற்றொரு நாட்டின் பணத்தை அல்லது பண மதிப்பை வாங்கி கையிருப்பாக வைப்பது. சொல்லப்பட்ட பணம், உலகளாவிய நாணயமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ‘அமெரிக்க டாலர்’ தான் தற்போதைய பொது நாணயமாக சொல்லப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலரை தான் பாரத ரிசர்வ் வங்கி என சொல்லப்படும் மத்திய வங்கி(Reserve Bank of India) தனது கையிருப்பாக வைத்து கொள்ளும். இதற்கான காரணங்கள் பல – ஒரு நாட்டினுடைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் காணப்படும் இரு நாடுகளின் வேறுபட்ட பண மதிப்பை கட்டுப்படுத்த, அன்னிய செலாவணி கையிருப்பு உதவும். உதாரணமாக நம் நாட்டிலிருந்து ஒரு பொருள் அல்லது சேவை பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்து கொள்வோம். இப்போது இந்த இரு நாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தகம், பொது நாணயமான டாலர் மதிப்பில் தான் நடந்திருக்கும். சில சமயங்களில் அவை யூரோ அல்லது வேறொரு அங்கீகரிக்கப்பட்ட பொது நாணயமாக இருந்திருக்கலாம்.
வர்த்தகத்தை ஏற்றுமதி செய்த நாடு, தனது வருவாயினை டாலர் மதிப்பில் தான் பெறக்கூடும். வர்த்தகத்தை ஏற்படுத்தியவர்(தனிநபர் அல்லது நிறுவனம்) இதற்கான டாலர் வருவாயை அவரது வங்கி கணக்கில் தான் பெறுவார். டாலர் பணத்தை உள்ளூர் ரூபாய் மதிப்பிற்கு மாற்றுவதற்கு வங்கிகள் சில கட்டணங்களை எடுத்து கொள்ளும். அதே வேளையில் டாலர் பணத்தை அந்நாட்டின் மத்திய வங்கியிடம், வங்கிகள் பரிமாற்றம் செய்து கொள்ளும். பொதுவாக வங்கிகள், மத்திய வங்கியிடமிருந்து அரசு கடன் பத்திரங்களை வாங்குவதற்கு இது போன்ற ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட டாலர் பணத்தை செலவழிக்கும்.
வங்கிகளை பொறுத்தவரை அரசு கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் வட்டி வருவாயை பெறும். ஆனால் மத்திய வங்கி இதனை(டாலர்) அன்னிய செலாவணி கையிருப்பாக கொண்டு, பல பொருளாதார நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை, அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி தனது கையிருப்பை எச்சரிக்கையாக கையாளும். பொருளாதார வீழ்ச்சி, போர் பதற்றம், வெளிநாட்டு கடன், அதிக இறக்குமதியின் மூலம் ஏற்படும் நிதி பற்றாக்குறை போன்ற காலங்களை சமாளிக்க அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பது ஒரு நாட்டிற்கு சாதகமான தன்மையாகும்.
அன்னிய செலாவணி கையிருப்பு எனும் போது, ‘டாலர் பண ரொக்கமாக’ மட்டுமே இருந்து விடாது. அவை ரொக்கம், பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு, தங்கம், கடன் பத்திரங்கள், சர்வேதச நாணய நிதியம்(IMF) அனுமதிக்கும் வைப்பு தொகை என பல்வேறு சாதனங்களில் வைக்கப்படும்.
1991ம் ஆண்டு வாக்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, நாட்டின் இறக்குமதி அதிக சிக்கலை சந்தித்தது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அடுத்த மூன்று வாரங்களுக்கு தேவையான இறக்குமதி அளவை மட்டுமே பெற்றிருக்கும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது. உலக தர குறியீட்டு நிறுவனங்கள், நாட்டின் கடன் பத்திரங்களின் தன்மையை குறைந்து மதிப்பிட்டிருந்தன. குறைவான அன்னிய செலாவணி கையிருப்பு காரணமாக, உலக வர்த்தகத்தில் இந்தியா திவால் நிலைக்கு செல்லும் நிலை உருவானது.
அன்றைய தேதியில், வளைகுடா போரும்(Gulf War) சேர்ந்து கொண்டது. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கு போதிய தொகை இல்லாமல், அரசு சார்பில் இருந்த தங்க கையிருப்பு அடகு வைக்கப்பட்டன. பின்னர் நிதி பற்றாக்குறையிலிருந்து மீண்ட நாடு, பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு வித்திட அந்த நிகழ்வே காரணமாக அமைந்தது.
இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம், அன்னிய செலாவணி கையிருப்பு வளரும் நாடொன்றுக்கு எவ்வளவு முக்கியமென்று. 1991ம் ஆண்டு ஜனவரி மாத முடிவில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது அதே வருடத்தின் ஜூன் மாத முடிவில் 0.6 பில்லியனுக்கு குறைவாக சென்றது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தை மீட்க, சர்வேதச நாணய நிதியத்திடம் 67 டன் தங்கத்தை அடமானம் வைத்தது இந்தியா. இதன் வாயிலாக சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடமான கடனாக பெற்றது இந்தியா. அவை இங்கிலாந்து மற்றும் ஸ்விட்ஸர்லாந்து நாடுகளின் மத்திய வங்கிகள் மூலம் பெறப்பட்டன.
அந்தவொரு நிகழ்வுக்கு பிறகு, தனது அன்னிய செலாவணி கையிருப்பை நமது நாடு கவனமாக கையாண்டு வருகிறது. 2009ம் ஆண்டு வாக்கில் சர்வேதச நாணய நிதியத்திடமிருந்து 200 டன் மதிப்பிலான தங்கத்தை வாங்க பாரத ரிசர்வ் வங்கி முடிவு செய்ததும் அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியே. இன்று (12, மார்ச் 2021) நம் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 580.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (1991ம் ஆண்டு ஜனவரி – 1.2 பில்லியன் டாலர்கள் !)
சில வாரங்களுக்கு முன்பு, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, உலகளவில் அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காம் இடத்திற்கு நகர்ந்தது இந்தியா. முதலிடத்தில் சீனா(3,336 பில்லியன் டாலர்கள்), இரண்டாம் இடத்தில் ஜப்பான்(1,379 பில்லியன் டாலர்கள்) மற்றும் மூன்றாமிடத்தில் சுவிட்ஸர்லாந்து(1,080 பில்லியன் டாலர்கள்) உள்ளன. உலக அன்னிய செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பான் யென், பிரிட்டன் பவுண்ட் மற்றும் சீன பண மதிப்புகள் முன்னிலையில் உள்ளன.
கடந்த 30 வருட காலத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 10,000 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளது. இது போல நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – GDP மதிப்பு 266 பில்லியன் டாலர்(1991ம் ஆண்டு) மதிப்பிலிருந்து 3 டிரில்லியன் டாலர்(2019) மதிப்பளவில் வளர்ந்துள்ளது. இது 1100 சதவீத வளர்ச்சியாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை