ஏப்ரல் மாத தொழில்துறை உற்பத்தி 55 சதவீத வீழ்ச்சி – முழு தகவலும் வெளியிடப்படவில்லை
India’s IIP number falls 55.5 Percent in the month of April 2020
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிட அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவர். மொத்த உள்நாட்டு உற்பத்தியை(GDP) பெற பல்வேறு துறைகளில் உள்ள தொழில்களின் உற்பத்தி அளவை எடுத்து கொள்வது அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொழில்துறை உற்பத்தியின் அளவு எவ்வளவு நடந்துள்ளது என்ற தரவுகளை சேகரிக்க வேண்டும். இதனை ஒரு குறியீட்டின் மூலம் சந்தைக்கு தெரியப்படுத்துவது ஐ.ஐ.பி. என்று சொல்லக்கூடிய தொழில்துறை உற்பத்தி குறியீடாகும்(Index of Industrial Production).
தொழிற்துறை குறியீட்டில் கச்சா எண்ணெய், மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட், எஃகு, சுத்திகரிப்பு, எரிவாயு பொருட்கள் மற்றும் உரங்கள் ஆகிய தொழில்களின் உற்பத்தி அளவு சொல்லப்பட்டிருக்கும். நாம் மேலே சொன்ன எட்டு தொழில்களும், நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டில் நாற்பது சதவீத இடத்தை பிடித்துள்ளன.
இது போன்ற தரவுகளை சேகரித்து நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டை வெளியிடுவது மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமாகும். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட முதல் ஊரடங்கின் போது(Covid-19 Lock down), பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் இயங்கவில்லை.
வாகனத்துறையை சார்ந்த நிறுவனங்களும் எந்தவித தயாரிப்பு மற்றும் விற்பனையை செய்ய முடியவில்லை. நுகர்வோர் நீடித்த பொருட்கள்(Consumer Durables), உட்கட்டமைப்பு, கட்டுமான பொருட்கள் மற்றும் மூலதன பொருட்களின் உற்பத்தி மிகவும் சரிந்துள்ளது.
ஏப்ரல் மாத நாட்டின் தொழிற்துறை உற்பத்தி சார்ந்த தகவல் மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 55.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஓரளவு எதிர்பார்த்த தகவல்கள் தான் எனினும் முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
உற்பத்தி துறை குறியீடு 64 சதவீதமும், சுரங்க தொழிலில் 27 சதவீதமும், மின்சார உற்பத்தியில் 22.5 சதவீதமும் ஏப்ரல் மாத காலத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தொழிலை சொல்லப்பட்ட காலத்தில் செய்யவில்லை என்பதனையும் அரசு தரவுகள் தெரிவித்துள்ளது. முழுமையான தகவல்கள் வெளிவராததால், இதற்கு முந்தைய காலத்துடன் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை ஒப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வரக்கூடிய காலங்களில் இது சார்ந்த தகவல்கள் முழுமையாக தெரியக்கூடும் எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட தரவுகள் மூலம் உண்மையில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டி காட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 10 சதவீதம் வீழ்ச்சியை கண்டிருந்தது. முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 126.5 புள்ளிகளாக இருந்த தொழிற்துறை உற்பத்தி குறியீட்டு அளவு தற்போது 56.3 புள்ளிகளாக உள்ளது. முழுமை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை