ஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா ?

ஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா ?

Can I invest in Initial Public Offering ?

பொதுவெளியில் ஒரு நிறுவனம் தனக்கு தேவையான முதலீட்டை பெறுவதற்கு இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று தனியார் நிறுவனத்திலிருந்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றி கொள்வது, மற்றொன்று பங்குச்சந்தையில் பட்டியலிட தேவையான விவரங்களை வெளியிடுவது.

முதலீட்டை பெற விரும்பும் நிறுவனம் பங்குச்சந்தை அமைப்பிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் தனது நிறுவன பங்குகளை பட்டியலிடும். துவக்கத்தில் முதன்மை சந்தையில்(Primary Market) மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த பங்குகள் விண்ணப்பம் செய்யும் பங்குதாரர்களுக்கு, கணினி வரிசையில் மட்டுமே கிடைக்கப்பெறும். பின்னர் அவை இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) வாங்க மற்றும் விற்பதற்கு வெளியிடப்படும்.

முதன்மை சந்தையை தான் நாம் ஐ.பி.ஓ(IPO) என்கிறோம். இங்கே ஒரு நிறுவன பங்குகளுக்கான தேவையை உறுதி செய்யும். முதலீட்டாளர்களிடையே இந்த பங்கு வரவேற்பை பெறுகிறதா, எத்தனை மடங்கில் இந்த நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்ற விவரங்களை காணலாம். இதற்கான காலம் ஓரிரு நாட்கள் இருக்கலாம். பின்னர் எப்படியும் இந்த பங்குகள் வர்த்தகமாக இரண்டாம் நிலை சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும்.

முதன்மை சந்தையில் நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க மட்டுமே செய்வோம். இரண்டாம் நிலை சந்தையில் தான் வாங்கும் மற்றும் விற்கும் என முழு வர்த்தகம் நடைபெறும். பொதுவாக ஐ.பி.ஓ. முறையில் முதலீடு செய்வது நல்லதா என சிலர் கேட்கிறார்கள். குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கலாமே  என கேட்பதுண்டு. உண்மையில் ஐ.பி.ஓ என்பது ஒரு நிறுவனம் தன்னை சந்தையில் அறிமுகப்படுத்தி கொள்ளும் காலம் தானே தவிர, வேறொன்றும் இல்லை.

  • ஐ.பி.ஓ வெளியீட்டில் கிடைக்கப்பெறும் பங்கு விலை தான் உண்மையான விலை என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் முதன்மை சந்தையில் ஒரு நிறுவனம் தன்னை நிலைநிறுத்த மற்றும் தனது முதலீட்டை பெற குறிப்பிட்ட பங்குதாரர்களிடம் பங்குகளை விற்றுவிட்டு செல்கிறது. இதற்கு பங்குச்சந்தை அமைப்புகள் ஒரு தளத்தை(Platform) ஏற்படுத்தி கொடுக்கிறது. இங்கே ஏற்ற-இறக்கம் காணப்படாததால், நிறுவனத்திற்கு தேவையான நிதியை சுலபமாக பெற்று விடும். அதே வேளையில் இது முதலீட்டாளர் பார்வையில் லாபமா ?
  • உலகின் மிகப்பெரிய ஐ.பி.ஓ. முதலீடு, கடந்த 2019ம் ஆண்டில் சவூதி ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்தில் நடந்தது. இதன் மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இரண்டாவதாக அலிபாபா குழுமத்தின் 25 பில்லியன் டாலர்களும்,மூன்றாவது இடத்தில் சாப்ட்பேங்க் குழுமத்தின் 24 பில்லியன் டாலர்களும் உள்ளன.
  • ஐ.பி.ஓ. வில் வெளியிடப்படும் நிறுவனங்கள் சில சமயங்களில் மக்களிடம் பெயர்போன நிறுவனமாக இருக்கக்கூடும். உண்மையில் சந்தைக்கு வரும் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை முழுமையாக கிடைக்க பெறாது. ஐந்து வருடங்களுக்கான நிதி நிலை அறிக்கை மட்டுமே, முதன்மை சந்தைக்கு வரும் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும்.
  • முதன்மை சந்தைக்கு வரும் ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை நம்மால் அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது. ஐந்து வருட நிதி அறிக்கையை கொண்டு, ஒரு நிறுவனம் நன்றாக செயல்படும் என எதிர்பார்ப்பது நம்மை ஏமாற்ற செய்யும். தனியார் நிறுவனத்திலிருந்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் ஒரு நிறுவனத்தின் ஜாதகத்தை நம்மால் முழுமையாக காண முடியாது. அப்படியிருக்க நிதிநிலை அறிக்கைகளில் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
  • ஆட்டுமந்தை கூட்டம் போல எல்லோரும் பங்கு வாங்குகிறார்கள் என நாமும் வாங்கி லாபம் பார்த்து விடலாம் என நீங்கள் ஐ.பி.ஓ முறையில் சென்றால், உண்மையில் அதன் பெயர் சூதாட்டமே, அவை முதலீடு அல்ல. நிறுவனத்தை பொறுத்தவரை தனது முதலீட்டை முதன்மை சந்தையில் தான் திரட்ட முடியும். அவ்வளவே. அவர்களுக்காக தான் அந்த தளம் உருவாக்கப்பட்டதே தவிர நீண்டகாலத்தில் முதலீடு செய்பவர்களுக்காக அல்ல.

புகையிலையை சிறிது நேரம் நுகர்ந்து கொள்கிறேன், நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால், வாழ்நாள் முழுவதும் அது உங்களை தொற்றி கொள்ளும். அது போல தான் ஐ.பி.ஓ. குறுகிய கால லாப ஆசையும்.

  • ஒரு நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்காலத்தில் பெறுமா, அவை வெளிப்படையாக தகவலை சந்தைக்கு அளிக்குமா, முதலீட்டாளர்களான நமக்கு நீண்டகாலத்தில் என்ன பயனை அளிக்கப்போகிறது என்பதனை நாம் நீண்டகாலத்தில் தான் காண முடியும். வெறும், முதன்மை சந்தையில் பங்குகளை வாங்குவதால் அல்ல.
  • துவக்கத்தில் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மட்டுமே முதன்மை சந்தையில் பங்குகளை வாங்கலாம் என்ற நிலை இன்று மாறி, சிறு முதலீட்டாளர்களும் களம் இறங்குகின்றனர். நினைவில் கொள்ளவும், முதலீட்டு நிறுவனங்கள் வாங்கும் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை எப்போது விற்க கூடும் என உங்களுக்கு உடனடியாக தெரிவதில்லை. அவர்கள் வாங்கும் மற்றும் விற்பதற்கான காரணமும், காலமும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வாங்குவது, விற்பது  என அனைத்தும் மற்றவர்களின் பண முதலீடு தான். ஆனால், சிறு முதலீட்டாளரான நமக்கு ?

ஆசியாவின் மிகப்பெரிய நகை தொழிலை கொண்ட நிறுவனம் என கீதாஞ்சலி ஜெம்ஸ்(Gitanjali Gems) முதன்மை சந்தையில் பட்டியலிடப்பட்டது. தொடர்ச்சியான விற்பனை மற்றும் லாப வளர்ச்சி, இந்தியாவில் உள்ள நகை தொழிலில் 50 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது என சொல்லப்பட்டது. பங்குகளுக்கான முதலீடும் அமோகமாக வந்தது.

இந்த பங்கின் விலை 600 ரூபாய்க்கு மேல் சென்ற காலமும் உண்டு. ஒரு ரூபாய்க்கு வந்து, பின்னர் பங்குச்சந்தையிலிருந்து தூக்கி வீசப்பட்டதும் மற்றொரு கதை. சொல்லப்பட்ட நிதி அறிக்கைகள் அத்தனையும் பொய் எனவும், அந்த நிறுவனம் எந்த தொழிலையும் மேற்கொள்ளாமல், பல போலி நிறுவனங்களை உருவாக்கியதும் மிகவும் தாமதமாக தான் வெளிவந்தது. ஐ.பி.ஒ. வில் முதலீடு செய்து விட்டு இந்த நிறுவனத்தில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. கடந்த 2008ம் ஆண்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியில் இந்த நிறுவன பங்கின் விலை மிகவும் மலிவாக கிடைத்தது என முதலீடு செய்தவர்களும் இன்று முழு முதலீட்டை இழந்துள்ளனர்.

உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களில் ஒருவர் என போற்றப்பட்டவர், 1996-2006 காலங்களில் நாட்டின் மிக சிறந்த தொழில்முனைவோர், தொழிலதிபர் என பல விருதுகளை வாங்கியுள்ளார் இவர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், பங்கு ஒன்றுக்கு 800 ரூபாய்  விலையிலிருந்து 80 பைசா வரை சென்றுள்ளதை பார்த்திருக்கலாம். குழும நிறுவனங்கள் அனைத்தும் கடனில் தத்தளித்து திவால் நிலைக்கு சென்று விட்டது. ஆம், அனில் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் குழும நிறுவனங்கள் தான். இது போல எண்ணற்ற நிறுவனங்களை சொல்லலாம்.

வெறும் பிராண்டுகளை மட்டுமே கொண்டு முதன்மை சந்தையில் ஒரு நிறுவனம் சாதித்து விட முடியாது. பின்னர் போலி நிறுவனங்களை பற்றியும், மோசடி பேர்வழிகளை பற்றியும் நாம் கவலைப்பட கூடாது. சந்தையில் நாம் முதலீடு செய்ய வந்திருக்கிறோம். லாபம் மட்டுமே நமது குறிக்கோளாக இருந்தாலும், நஷ்டத்தை தவிர்ப்பது அவசியமான ஒன்றாகும். நீங்கள் சந்தையில் நீண்டகாலத்தில் சம்பாதிக்க, முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடு மிகவும் முக்கியமாகும்.

குறைந்தது பத்து ஆண்டு கால நிதிநிலை அறிக்கைகள் தேவை. அதனை விட தேவையான ஒன்று, நிறுவனத்திற்கு கடன் எதுவும் உள்ளதா, நிறுவனர்களின் மதிப்பு மற்றும் செயல்பாடு எவ்வாறு உள்ளது, நிர்வாக திறன் எப்படி மற்றும் இந்த நிறுவனம் அதன் துறையில் உள்ள எதிர்கால சவாலை எப்படி கையாள போகிறது என்பதனை அறிவது அவசியமாகும்.

ஐ.பி.ஓ முறையில் வெளிவந்துள்ள நிறுவனங்களில் சுமார் 50 சதவீத நிறுவனங்கள், இரண்டாம் நிலை சந்தைக்கு வந்த அடுத்த ஐந்து வருடங்களில் தங்கள் மதிப்பை இழக்கின்றன என்று தரவுகள் சொல்கிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பங்கு விலைக்கு தகுந்தாற் போல நிறுவனத்தின் வளர்ச்சி இல்லாமை, கடனில் சிக்கி தவிப்பது மற்றும் நிர்வாக திறன் குறைபாடு என மூன்று காரணிகளை முன்னிலைப்படுத்துகிறது.

கடந்த 20 வருடங்களில் பொதுவெளியில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள், தங்கள் முதன்மை சந்தை விலையை காட்டிலும் குறைவாக தான் தற்போது உள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஐ.பி.ஓ முறையில் வெளிவரும் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப்(Startup) நிறுவனங்களும் பெரும்பாலும் தங்கள் இரண்டாவது முதலீட்டை பெறுவதில் தோல்வியடைகின்றன. இதன் காரணமாக அதன் மதிப்பும் பின்னாளில் விலை போவதில்லை.

நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது, கடனில்லா நிறுவனங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நிர்வாகம் மற்றும் சீரான வருவாய் வளர்ச்சி இருக்கும்பட்சத்தில் அது சிறு முதலீட்டாளர்களின் நலனையும் பாதுகாக்கும்.

இன்று நிர்வாக குறைபாடு காரணமாக இரண்டாம் கட்ட முதலீட்டையும் பெறுவதில் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது யெஸ் வங்கி(Yes Bank). பங்கு விலையும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய லாபம் என சொல்லப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் இன்று தின வர்த்தகர்களால் பந்தாடப்பட்டு, பங்குச்சந்தையிலிருந்து வெளியேறி வருகின்றன. அவற்றின் ஐ.பி.ஓ. வரலாற்றை பார்த்தால் நமக்கு தெரியும், அது ஏன் சோபிக்க தவறி விட்டனவென்று !

ஐ.பி.ஓ, இரண்டாம் கட்ட முதலீடு, மூலதனத்தை உயர்த்துவது, கடன்களை மறுசீராய்வு செய்ய முதலீட்டை பெறுவது, உரிமை பங்குகள், நிறுவனங்களை பிரித்தல் மற்றும் புதிய நிறுவனங்களை உருவாக்குதல் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். இதெல்லாம் உங்களுக்கு புரியவில்லையா ? காலங்காலமாக தொழில் செய்து வரும் நல்ல மற்றும் சுமாரான நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு நிம்மதியாக அமருங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை

மே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை 

Declining Industrial Production growth in May 2020 – No Proper data released

கொரோனா ஊரடங்கிற்கு பிறகான பொருளாதார எண்கள் கிடைக்கப்பெறுவதும், அதனை வெளியிடுவதிலும் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறியீடு(GDP) சார்ந்த தகவல் சரிவர கிடைக்கப்பெறாமல், பின்னர் முழு நிதியாண்டுக்கும் திருத்தம் செய்யப்பட்டது.

ஜனவரி-மார்ச் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாகவும், 2019-20ம் நிதியாண்டில் இது 4.2 சதவீதமாகவும் திருத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத தொழிற்துறை உற்பத்தி(IIP) 55 சதவீத வீழ்ச்சி என சொல்லப்பட்டிருந்தாலும், அப்போதைய நிலையிலும் முழு தகவல் கிடைக்கப்பெறவில்லை.

நாட்டின் முக்கிய துறைகளாக சுரங்க தொழில்(Mining), உற்பத்தி(Manufacturing) மற்றும் மின்சாரம்(Electricity) ஆகியவை சொல்லப்படுகின்றன. 2020-21ம் ஆண்டின் மே மாத முடிவில் சுரங்க தொழிலின் குறியீடு 87 புள்ளிகளாக சொல்லப்பட்டுள்ளன. இதனை கடந்த வருட மே மாதத்துடன் ஒப்பிடும் போது 21 சதவீத குறைவாக உள்ளது. இது போல உற்பத்தி துறை 39 சதவீத வீழ்ச்சியும், மின்சார துறை 15 சதவீத வீழ்ச்சியும் அடைந்துள்ளது.

இருப்பினும் மத்திய அரசின் புள்ளிவிவர அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த தகவல் முழுமையாக இல்லை. எனவே இதனை கடந்த காலத்துடன் ஒப்பிட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் காணும் போதும் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 35 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

உட்கட்டமைப்புக்கான(Infrastructure – Use Based) நுகர்வில் மே மாத உற்பத்தி 42 சதவீதம் குறைந்துள்ளது. இது போல மூலப்பொருட்கள் 64 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 68 சதவீதமும் குறைந்து காணப்படுகிறது. நடப்பு ஜூன் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி குறியீடு சார்ந்த தகவல் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியிடப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

Mutual Funds Investment declined in the month of June 2020

மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை விறு விறுவென ஏற்றம் பெற்று வருகிறது. பெரும்பாலான பங்குகள் மார்ச் கடைசி வாரம் அதலபாதாளத்திற்கு சென்ற நிலையில், தற்போது விலையேற்றத்தில் சுமார் 30-80 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளன.

பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், பங்குச்சந்தை குறியீடுகள் எதிர்பாராத விதமாக ஏற்றமடைந்துள்ளன. பொதுவாக இது போன்ற நிகழ்வு பங்குச்சந்தையில் இயல்பான ஒன்று தான். பின்னொரு நாளில் வேறொரு காரணத்திற்காக இறங்குவதும் நடக்கும். அதே வேளையில் நீண்டகாலத்தில் முதலீடு செய்து பொறுமையாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை பெரும் செல்வத்தை அளிக்கும் வாய்ப்பாக அமையும்.

இந்திய பரஸ்பர நிதி துறையில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்(Asset Management Companies) முதலீட்டு சேவையை செய்து வருகின்றன. செபி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பரஸ்பர நிதி துறையை ஆம்பய்(AMFI) அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. பரஸ்பர நிதி முதலீடுகள் சார்ந்த தகவல்களை ஆம்பய் அமைப்பு ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாத முடிவின் படி, இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு(AUM) 25.5 லட்சம் கோடி ரூபாயாகும். ஜூன் மாதத்தில் பரஸ்பர முதலீடுகள் 95 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் மூன்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதலீடு ரூ.195 கோடி. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் பெறப்பட்ட முதலீடு ரூ. 240 கோடி என சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது 95 சதவீத குறைவாகும்.

ரிஸ்க் குறைந்த லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) இருந்து பெரும்பாலான முதலீடுகள் கடந்த மாதத்தில் வெளியேறியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 44,220 கோடி ரூபாய். கடன் பத்திரம் மற்றும் வருவாய் சார்ந்த பண்டுகளில் ஈர்க்கப்பட்ட ஜூன் மாத முதலீடு ரூ. 2,862 கோடி. கலவை திட்டம் என அழைக்கப்படும் ஹைபிரிட்(Hybrid) திட்டத்தில் 356 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது.

ஓய்வு கால நிதி மற்றும் குழுந்தைகளுக்கான திட்டங்களில் பெறப்பட்ட தொகை ரூ. 108 கோடி ஆகும். வரி சலுகை சார்ந்த திட்டங்கள் வாயிலாக கடந்த மாதத்தில் முதலீடுகள்  ஈர்க்கப்படவில்லை. இந்த திட்டத்திலிருந்து 15 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. தங்கம் சார்ந்த ஈ.டி.எப்.(Gold ETF) திட்டத்தின் மூலம் 494 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் இரண்டிலும் முதலீட்டு வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது வேலையிழப்பு, குறைவான நாட்களுக்கு மட்டுமே பெறப்பட்ட ஊதியம், மந்தநிலையை காரணம் காட்டி முதலீடு செய்யாமல் இருந்ததாகும். மேலும் பங்குச்சந்தை மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் உச்சத்தில் இருப்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர்.

சந்தை இறக்கத்தில் அதிகமாக பெறப்பட்ட முதலீடு, தற்போது எச்சரிக்கை உணர்வாக பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை எனலாம். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில், நீண்டகால வருவாய் வளர்ச்சியை பெறலாம். சந்தை ஏற்ற-இறக்கத்தை கணிப்பதை விட, நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை திரட்டுவது அவசியமாகும்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்

இந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்  

Acquisition & Demerger, Merger and Amalgamation – Webinar Meet

சமீப காலங்களாக பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்கள், மற்றொரு நிறுவனத்துடன் இணைக்கப்படுவதும், சிறிய நிறுவனங்களை பெரு நிறுவனமொன்று கையகப்படுத்துதலும் நடந்த வண்ணம் உள்ளன. இது புதிதான ஒரு செயலா என கேட்டால், பல வருடங்களாக நடைபெற்று வரும் ஒரு செயல்பாடாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

ஜப்பானை சேர்ந்த சுசூகி(Suzuki) நிறுவனமும், நம் நாட்டை சேர்ந்த மாருதியும்(Maruti) இணைந்து புதிய நிறுவனமாக – மாருதி சுசூகி என்றொரு நிறுவனத்தை ஏற்படுத்தியிருந்தது. இது போல ஹீரோ ஹோண்டா நிறுவனத்தை சொல்லலாம். பின்னர் இவை இரண்டும் பிரிக்கப்பட்டு சந்தையில் தனித்தனியாக தொழிலை நடத்தி வருகின்றன.

நிறுவனங்கள் சேர்க்கப்படுவதாலும் மற்றும் இணைந்த இரு நிறுவனங்கள் விலக்கப்படுவதாலும் சிறு முதலீட்டாளராக ஒருவருக்கு என்ன லாபம் ? நுகர்வோர் சந்தையில் கொடிகட்டி பறக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர்(HUL), ஐ.டி.சி.(ITC), டாட்டா குழுமம்(Tata) போன்ற நிறுவனங்கள் ஏன் சிறு தொழில் நிறுவனங்களை கையகப்படுத்துகின்றன ?

பெரு நிறுவனங்கள் தாங்களாகவே புதிய தொழிலை துவங்கும் வலிமை உள்ள போது, அந்த துறையில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களை நல்ல விலை கொடுத்து கையகப்படுத்தி வருகின்றன. இதற்கான காரணம் என்னவாக இருக்கும், நீங்கள் வாங்கிய பங்குகளில் இது போன்ற நிகழ்வு நடந்திருந்தால் அல்லது நடக்க போவதாக இருப்பின், உங்களுக்கு என்ன ஆதாயம் மற்றும் இழப்பு ?

வாருங்கள், இந்த வார சனிக்கிழமை (11-07-2020) நிகழ்ச்சி நிரலில் மாலை 05:30 மணிக்கு மேல் பேச உள்ளோம். பதிவுக்கு பின், இணைய வழி தொடர்பு சார்ந்த தகவல்கள் உங்கள் கைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Register your spot – Merger & Amalgamation

Merger and Amalgamation

பங்குகள் வெறும் எண்கள் அல்ல !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

அடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

அடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

5 Precautions to do in the Market Crash – Recession 2020

நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு உலக பங்குச்சந்தை குறியீடுகள் மிக வேகமாக எழுந்து வந்துள்ளது. உள்நாட்டில் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த மூன்று மாதங்களில் 20 சதவீத ஏற்றத்தை அடைந்துள்ளது. அதே வேளையில் 2020ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து காணும் போது இன்னும் 13 சதவீத இறக்கத்தில் உள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தை நடப்பாண்டில் இரண்டாவது முறையாக அடைந்தது. கடந்த இரண்டு வருடங்களாக காணப்பட்ட பொருளாதார மந்தநிலை என்ற செய்தி வலுவடைந்து தற்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விரைவாக மீட்டெடுக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நடப்பு வருடத்தில் முக்கியமாக கருதப்படும் நிகழ்வாக கொரோனா வைரஸ் தாக்கம்(Covid-19), வர்த்தக போர்(Trade war), எண்ணெய் நாடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் விலை மாற்றம், அமெரிக்க தேர்தல், நாடுகளிடையே காணப்படும் போர் பதற்ற சூழ்நிலை(War Panic) தான் உள்ளது. பொருளாதார மந்தநிலையால் அடுத்து வரவிருக்கும் காலாண்டுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டிருக்காது.

ஆனால், உலக பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்தில் மட்டும் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது சந்தையில் நிலவுவது காளையா அல்லது கரடியா என்ற ஐயத்தில் வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் அணுகுகின்றனர். மார்ச் மாத வீழ்ச்சி போன்று மறுபடியும் நடப்பு வருடத்தில் ஏற்பட வாய்ப்புண்டா என கேள்வி எழுப்பினால், நடப்பதற்கான சாத்திய கூறு அதிகம் தான்.

கடந்த இரண்டு வருடத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதும், அதற்கு மாறாக பங்குச்சந்தை குறியீடுகள் மேலே சென்றதும் தான் மார்ச் மாத வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு பின்னால் உள்ள பொருளாதார எண்கள் தான் உண்மை நிலவரத்தை விவரிக்கும். அமெரிக்க சந்தைகள் போல, இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றமடைவதற்கான கூறுகள் உள்ளன.

இருப்பினும், இது சந்தை நிலவரம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதனையே காட்டுகிறது. கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலையால் ஊரடங்கு ஏற்படாவிட்டாலும், இயல்பு வாழ்க்கை என்பது சாதாரண நிகழ்வாக இருக்காது. இது சந்தை சங்கிலியை(Supply Chain) பாதிக்க கூடும். எனவே மற்றொரு சந்தை வீழ்ச்சி நாம் மேலே சொன்ன சில காரணிகளால் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இங்கே யூகிப்பதற்கு எதுவுமில்லை. அதே வேளையில் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். எனவே பங்குச்சந்தை வீழ்ச்சியை கணிப்பதை தவிர்த்து, அதற்கான முன்னெச்சரிக்கை விஷயங்களை நாம் பின்பற்றினால், சந்தையில் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை ஈட்டலாம்.

  • சரியான நிதி திட்டமிடல் எப்போதும் அவசியம்:

தற்போது உள்ள சூழ்நிலை அடிக்கடி நிகழும் நிகழ்வாக வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முன்னர், உங்களையும், உங்கள் குடும்ப நிதி பாதுகாப்பை உறுதி செய்ய டேர்ம் பாலிசி, மருத்துவ காப்பீடு மற்றும் அவசர கால நிதி ஆகியவற்றை ஏற்படுத்துவது அவசியம்.

அதற்கு பின்னர் தான் உங்கள் உபரி தொகையை சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற காலங்களில் சந்தையில் குறுகிய காலத்தில் விரைவாக பணம் பண்ணுகிறேன் என மொத்த பணத்தையும் இழக்க வேண்டாம். நீண்ட காலத்திற்கு நல்ல நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்து முதலீடு செய்க.

  • உங்கள் நிதி இலக்குகளுக்கு நேரிடையாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்:

நிதி இலக்குகளுக்காக சந்தையில் முதலீடு செய்ய உள்ளவர்கள், நீண்டகால இலக்கை மட்டும் கொண்டிருத்தல் நலம். குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்கிற்கு தற்போதைய நிலையில் நேரடி பங்குகளை அணுக வேண்டாம். அதற்கு மாறாக பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds Schemes) பயன்படுத்தி கொள்ளலாம்.

நல்லதொரு செல்வத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் பங்குச்சந்தை முதலீட்டை நீண்டகால நோக்கில் அணுகலாம். நடப்பில் உள்ள சந்தை வீழ்ச்சிகளில் முதலீடு செய்யும் பட்சத்தில், அடுத்த சில வருடங்களில் நல்ல வருவாயினை சந்தையில் ஈட்டலாம்.

  • ஒரு  முறை  முதலீடாக மொத்த பணத்தையும் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்(Don’t invest as Lumpsum):

உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டு தொகையை தற்போதைய சந்தையில் ஒரே பங்கில் போட்டு விட்டு, அடுத்த சில வருடங்களில் கோடிகளை அள்ளலாம் என உங்கள் நிதி ஆதாரத்தை மீறி ரிஸ்க் எடுக்க வேண்டாம். குறுகிய காலத்தில் சந்தை மிகவும் ஆபத்தானது. பொருளாதார வீழ்ச்சி காலங்களில் உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டில் 10-20 சதவீதம் என்ற அளவில் ஒவ்வொரு பெரிய இறக்கத்திலும் முதலீடு செய்வது நன்று.

ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்து விட்டு, பின்பு இறக்கத்தில் உங்களால் பங்குகளை வாங்க முடியாவிட்டால், அதற்கான வாய்ப்பு பின்னாளில் கிட்டாது.

  • பரஸ்பர நிதிகளில் பரிமாற்ற திட்டத்தை(STP) பயன்படுத்துங்கள்:

பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர், மொத்த முதலீட்டை பங்குகளில் மேற்கொள்ளாமல், அதனை லிக்விட்(Liquid Fund) அல்லது ரிஸ்க் குறைந்த கடன் பத்திர(Debt Funds) திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, தொடர் பரிமாற்ற திட்டத்தை(Systematic Transfer Plan) தேர்ந்தெடுத்து பங்குகளில் முதலீடு செய்யலாம்.

வார எஸ்.டி.பி. அல்லது மாத எஸ்.டி.பி. திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் சந்தை இறக்கத்தில் அமையும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம். எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்வோர் தங்கள் மாதாந்திர அல்லது வார முதலீட்டு தொகையை அடுத்த ஓரிரு வருடங்களுக்கு அதிகரித்து கொள்ளலாம். வேலையை இழந்தவர்கள் தாங்கள் ஏற்கனவே செய்த மாத முதலீட்டை தொடர முடியவில்லை எனில், கணக்கை முடித்து கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக தற்காலிகமாக மாத முதலீட்டை நிறுத்தி வைக்கலாம்.

  • ரொக்கமாக பணத்தை வைத்திருங்கள், மதிப்பீடுகள் மிக முக்கியம்:

சந்தை எப்போது வீழ்ச்சியடையும் என யாராலும் கணிக்க முடியாது. அதே வேளையில் பொருளாதாரம் சரியில்லாத போது , அதற்கான நகர்வுகள் சந்தையில் நிச்சயமாக நிகழும். குறுகிய காலத்தில் சந்தை வாக்கு இயந்திரமாகவும், நீண்டகாலத்தில் அது எடைபோடும் இயந்திரமாகவும் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சந்தை வீழ்ச்சியின் போது முதலீடு செய்ய ரொக்கமாக பணத்தை(Sitting with a Cash) கொண்டிருக்க வேண்டும். அவற்றுக்காக காத்திருக்காமல் முன்னரே திட்டமிடுங்கள். உலக பொருளாதார வீழ்ச்சியில் நல்ல நிறுவனங்களும் (கடனில்லா, பணவரத்து கொண்டிருக்கும் நிறுவனங்கள்), அதன் மதிப்பீடுகளும் தான் நிலைத்து நிற்கும். மற்றவை திவாலாகி விடும். எனவே பங்குகளை கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம்

ஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம் 

Declining Auto Sales for the month of June 2020 – Automobile India

2020ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இந்திய வாகனத்துறைக்கு ஆறுதலான  இரண்டு விஷயங்கள் – கிராமப்புறங்களுக்கு தேவையான டிராக்டர் விற்பனை வளர்ச்சி  மற்றும் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் 4.5 லட்ச வாகன விற்பனை சாதனை ஆகியவற்றை தவிர்த்து வேறு எதுவுமில்லை.

கடந்த ஏப்ரல் மாத முழு ஊரடங்கின் போது, வாகனத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்கள் எந்த விற்பனையையும் செய்ய முடியாமல் இருந்தன. மே மாதத்தில் வாகன விற்பனை ஓரளவு இருந்தாலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது சுமார் 60-80 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்தன.

இந்த விற்பனை மந்தம் ஜூன் மாதத்திலும் நடந்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட வாகனத்துறை விற்பனை சார்ந்த புள்ளிவிவரத்தில் மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவன உள்நாட்டு விற்பனையில் 54 சதவீத விற்பனை வீழ்ச்சியை கொண்டிருந்தன. 2019ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 1.14 லட்சம் வாகனங்கள் விற்ற நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இது 53,139 ஆக இருந்துள்ளது.

Automobile sales june 2020

ஏற்றுமதியில் கடந்த வருட ஜூன் மாதத்தின் போது 9,847 வாகனங்கள் விற்றிருந்த நிலையில், தற்போது 4,289 வாகனங்களாக சொல்லப்பட்டுள்ளன. ஆக மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும்(Exports) 56 சதவீத விற்பனை வீழ்ச்சியை கொண்டுள்ளது. இது போல ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தை காணும் போது உள்நாட்டு விற்பனையில் 75 சதவீத வீழ்ச்சியையும், ஏற்றுமதியில் 17 சதவீத விற்பனை குறைவையும் அடைந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம்(Mahindra & Mahindra) விவசாய துறை சார்ந்த டிராக்டர் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும் மற்ற பிரிவுகளில் 50 சதவீதத்திற்கு மேலாக விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஏப்ரல் – ஜூன் காலாண்டு விற்பனை புள்ளிவிவரங்களை கூறியிருந்தது. 2019ம் ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 1,31,879 வாகனங்களை விற்றிருந்த நிலையில், நடப்பாண்டின் இதே காலத்தில் 23,845 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. விற்பனை வளர்ச்சியில் 82 சதவீத வீழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் சந்தித்துள்ளது.

எஸ்கார்ட்ஸ்(Escorts) நிறுவனம் தனது ஜூன் மாத டிராக்டர் விற்பனையில் 21 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் அதன் ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது. அசோக் லேலண்ட்(Ashok Leyland) மற்றும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியும் குறைந்துள்ளது. பொது போக்குவரத்து அவ்வப்போது நிறுத்தப்படுவதால், ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனை ஓரளவு வந்துள்ளது. அதே வேளையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 27 சதவீதம் குறைவே. 2019ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 6,16,526 ஆக இருந்த வாகன விற்பனை தற்போது 4,50,744 வாகனங்களாக உள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள்

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள் 

6 Things to Learn on Personal Finance – Escape from the Economic Crisis

தனிநபர் நிதி சார்ந்த கற்றல் என்பது நம் நாட்டை பொறுத்தவரை தற்போதைய நிலையில் குறைவு தான். அதே வேளையில் சேமிப்பு என்ற ஒற்றை வார்த்தை நமக்கு பல காலமாக நம்முடைய குடும்பத்தில் இருந்துள்ளது. நுகர்வோர் சந்தையில் வெறுமென சம்பாதித்த பணத்தை செலவழிப்பது, எதற்கெடுத்தாலும் கடன் வாங்குவது, தேவையில்லாத பொருட்களை வீட்டில் வாங்கி குவிப்பது, எதிர்காலத்தில் இது தேவைப்படும் என உபயோகமில்லாத விஷயங்களை செய்வது என நாம் பொதுவாக நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கி வருகிறோம்.

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் – உணவு, உடை மற்றும் உறைவிடம். நவீன யுகத்தில் அடிப்படை கல்வியும், பொருளாதாரம் சார்ந்த சில நிதி பாதுகாப்புகளும் மட்டுமே கூடுதல் தேவையாக இருக்கும். ஆனால் நாம் நிதி பாதுகாப்புகளை செய்வதை விட்டு விட்டு எண்ணிலடங்கா பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கி குவித்து வருகிறோம். என் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்த சாமான்கள் இன்றும் என் வீட்டில் ஒரு ஓரத்தில் உள்ளது என சொல்வதை கேட்டிருப்போம்.

நம்மை சுற்றிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஒன்றும் கண்காட்சி பொருட்கள் அல்ல. அது பெருமையாக பேசக்கூடிய விஷயமும் அல்ல. தனிநபர் ஒருவர் தனக்கு தேவையில்லாத ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது , தேவைப்படும் ஒருவருக்கு அது கிடைக்காமல் செய்கிறது அல்லது அதன் விலை அதிகமாக கூடும்.

எனவே தேவையறிந்து, வாங்க கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் பயன்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும். அப்படி சொல்லும் போது, தனிநபர் நிதி விஷயத்தில் ஆறு விஷயங்களை அடிப்படை நிகழ்வாக கற்று கொள்ளலாம்.

  • சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் இடையேயான புரிதல் 
  • பணவீக்கம்
  • நிதி இலக்குகளை திட்டமிடுதல்
  • காத்திருக்கும் ரகசியம்
  • கூட்டு வட்டியின் மகிமை – பள்ளிக்கால பணக்கார பாடம்
  • எந்தவொரு முதலீட்டையும் தொழில் போல அணுக கற்று கொள்ளுங்கள் 

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்வதில் சிரமப்படுவர். எல்.ஐ.சி. நிறுவனத்தில் காப்பீடு திட்டத்தை வாங்கி கொண்டு நான் சேமிக்கிறேன் அல்லது முதலீடு செய்கிறேன் என நினைத்து கொள்வர். சேமிப்பு என்பது பெரிதாக வளரும் வாய்ப்பு இல்லாதது. அது பணவீக்கத்தை விட குறைவான வட்டி வருவாயை தான் கொண்டிருக்கும். உதாரணமாக, அஞ்சலகம், வங்கி, சீட்டு, தங்கம், ரொக்கம் ஆகியவற்றை சொல்லலாம். அஞ்சலகத்தில் கிடைப்பதை சிறு சேமிப்பு திட்டம் என்று தான் சொல்வர். அதனை முதலீடு என சொல்லப்படவில்லை.

முதலீடு(Investing) என்பது இரண்டு விஷயங்களை நிறைவு செய்பவை. ஒன்று தொடர் வருமானத்தை(Regular income or Cash Flow) ஏற்படுத்துவது, மற்றொன்று நீண்டகாலத்தில் அதனை வைத்து கொண்டு பின்னர் ஒரு நல்ல விலைக்கு விற்பதன் மூலம் லாபம்(Capital Appreciation) ஏற்படுத்துவது. ரியல் எஸ்டேட், பங்குகள், தொழில்கள் ஆகியவை முதலீடு என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் அவை இரு வகையான வருமானங்களை தர கூடியவை. வெறுமென வீட்டு மனைகளை மட்டும் விற்காமல், வீட்டு வாடகை, வணிக வளாகங்கள் மூலம் கிடைக்க பெறும் தொடர் வருமானம், பங்குகளில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகை, தொழில்களில் கிடைக்கக்கூடிய வருமானம் ஆகியவற்றை சொல்லலாம். எதிர்காலத்தில் இந்த மூன்றையும் விற்றால் அதற்கும் லாபம் கிடைக்கும். எனவே சேமிப்பும், முதலீடும் ஒன்று அல்ல.

நினைவில் கொள்ளுங்கள், தங்கம் என்பது பணவீக்கத்தை ஒட்டியும், எதிர்பாராத பொருளாதார வீழ்ச்சி காலங்களில் மட்டுமே அதன் செயல்பாடுகள். அது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பு என சொல்லமுடியாது. நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் உங்கள் வாழ்நாளில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படும். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில். உங்களுக்கு அது அடிக்கடி பயன்படக்கூடியது என நீங்கள் நினைத்தால், உண்மையில் உங்கள் நிதி நலனில் சில பிரச்சனைகள் உள்ளது என அர்த்தம்.

தங்கத்தின் மூலம் தொடர் வருமானத்தை ஏற்படுத்த முடியாது என்பதனால் தான் அது சேமிப்பு பிரிவில் உள்ளது. தங்கம் கடந்த 20 வருடங்களில் வங்கி டெபாசிட்டுக்கான வட்டி வருவாயை ஒட்டி தான் உள்ளது. டாலர் மதிப்பில் அது வர்த்தகமாவதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரிப்பது போல தோன்றுகிறது. நாணயம் என்ற தொட்டுணரக்கூடிய விஷயம் இல்லையென்றால், தங்கத்திற்கும் மதிப்பு கிடையாது. இது தான் கடந்த வரலாற்றில் அலுமினியத்தில் நடந்தது.

மாத முதலீட்டிற்கும், மாத தவணைக்கும்(SIP vs EMI) உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். மாதாமாதம் சேமித்து அல்லது முதலீடு செய்து, முதிர்வில் ஒரு பொருளை வாங்க வேண்டுமா அல்லது இ.எம்.ஐ.(EMI) என கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா ? நீங்கள் கடன் மூலம் ஒரு பொருளை உடனே வாங்கி விட்டாலும், அந்த கடனை அடைக்கும் வரை அதற்கு நீங்கள் உரிமையாளர் கிடையாது. இது கடன் மூலம் பெற்ற வீடு, வாகனம், கைபேசி, குளிர்சாதனம் என அனைத்துக்கும் பொருந்தும். சேமித்த பணத்தை கொண்டு ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு முழு உரிமையாளர் நீங்களே.

கிரெடிட் கார்டுகளில் கவனம் தேவை. உண்மையில் தொழில் செய்பவர்களுக்காக  அறிமுகப்படுத்தபட்ட கடன் அட்டைகள் தான் அவை. ஆனால் இன்று தொழில் புரிபவர்கள் அதனை தவிர்த்து மாத சம்பளக்காரர்கள் கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது, கடனில்லா வாழ்வும் ஒரு சுகமே. வல்லரசான அமெரிக்காவில் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடன் அட்டையிலும், கடனிலும் தத்தளிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 80 சதவீதத்திற்கு மேல். அமெரிக்காவில் தனிநபர் ஒருவரின் கடன் மட்டும் சராசரியாக 90,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் ரூபாய்) !

பணவீக்கத்தை பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் தேவை. தேவையில்லாத பதுக்கல், எதிர்பாராத கூடுதல் தேவைகள் தான் ஒரு பொருள் அல்லது சேவையின் விலையை நிர்ணயிக்கின்றன. அதிகமான உற்பத்தி இருக்கும் நிலையில், தேவை குறைவாக இருப்பின் அதன் விலை அதிகமாக இருக்காது. நீண்டகாலத்தில் பணவீக்கம் மோசமான விளைவை ஏற்படுத்த கூடிய ஒன்று.

நிதி இலக்குகளை திட்டமிடுதலின்(Financial Goals) அவசியம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. அவை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளாக இருக்கலாம். குடும்பத்திற்கான தேவையான அளவு காப்பீடு, மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு, அவசரகால நிதி போன்றவற்றை ஏற்படுத்தி விட்டு தான் நிதி இலக்குகளை திட்டமிட வேண்டும்.

பணத்தின் மூலம் பணம் பண்ணும் கலை காத்திருத்தல்(Delayed Gratification) மூலமே கிடைக்கும். உலகின் பெரும்பாலான பணக்காரர்கள் எளிமையான வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் தான். தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, நீண்டகாலத்தில் முதலீடு செய்து அதனை அறுவடை செய்வது தான் அவர்களின் வேலை. நீண்டகால முதலீட்டிற்கு மட்டுமே அரசு சார்பில் வரி சலுகையும் கிடைக்கப்பெறுகிறது, குறுகிய கால லாபத்திற்கு அல்ல.

கூட்டு வட்டியின் மகிமை நமது பள்ளிக்கால பாடத்தில் இருந்த ஒரு பக்கம் தான். ஆனால், உண்மையில் நாம் கல்வியை முடித்து விட்டு வேலைக்கு சென்றவுடன் அதனை மறந்து விட்டோம். அதிகமாக சம்பாதிப்பது ஒன்றும் ஒருவரை உயர்த்தி விடாது. கடனில்லாமல், அளவாக சம்பாதித்தாலும் நல்ல ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொண்டு எளிமையாக வாழ பழகினால் அதுவே உயர்வாகும். இதனை தான் பெரும் பணக்காரர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இளமை காலம் முதல் செய்யப்படும் தொடர் முதலீடு தான் ஒருவரின் செல்வத்தை உயர்த்துகிறது.

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

முதலீட்டை மேற்கொள்ளும் முன்னர், ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்த பின்னர் தான் அதற்கான முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். வெறுமென போன்சி  (மோசடி திட்டம் – வட்டிக்கு பெரும் வட்டி) பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு எனக்கு மாதாமாதம் பணம் வருகிறது என சொல்லிக்கொண்டு ஏமாற வேண்டாம். உண்மையில் நம் முதலீட்டை கொண்டு ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதனை அறிவது அவசியமாகும். உங்கள் பணத்தை கொண்டு ஒருவர் நேர்மையாக தொழில் செய்தால் மட்டும் தான், உங்களுக்கான வருவாய் நிச்சயம். இல்லையென்றால், அது திவால் தான்.

சொல்லப்பட்ட கற்றலின் மூலம் நமது நிதி சிந்தனை மேம்படும். அளவான வாழ்க்கையை வாழ இயலும், அளவில்லா மகிழ்ச்சியை பெற முடியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ஐ.டி.சி. நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,857 கோடி

ஐ.டி.சி. நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,857 கோடி 

ITC reported Net Profit of Rs. 3,857 Crore in Q4FY20 – Quarterly results

நாட்டின் வேகமாக நகரும் நுகர்வோர் துறையில்(FMCG) மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது ஐ.டி.சி. நிறுவனம். புகையிலை தொழிலை முதன்மையாக கொண்டிருந்தாலும் உணவு பொருட்கள், விடுதிகள், காகித பலகைகள் மற்றும் பேக்கேஜிங், விவசாயம் சார்ந்த பொருட்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் முக்கிய இடத்தை கொண்டுள்ளது இந்நிறுவனம்.

ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.40 லட்சம் கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 47 ரூபாயாகவும், நடப்பு பங்கு விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 370 மடங்கிலும், நிகர சொத்து மதிப்பு ரூ.58,487 கோடியாகவும் இருக்கிறது.

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 14 சதவீதமாகவும் இருந்துள்ளது. பங்கு மீதான வருவாய்(Return on Equity) 27 சதவீதமாக உள்ளது. எனினும் இந்த பங்கு விலை கடந்த 12 மாதங்களில் 30 வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12,561 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 8,057 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ. 3,857 கோடி. இது கடந்த 2019ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவீத வளர்ச்சியாகும். 2019-2020 ஒட்டுமொத்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 53,991 கோடி ரூபாயும், நிகர லாபம் 15,584 கோடி ரூபாயாகவும் உள்ளது.

காலாண்டு அடிப்படையில் காணும் போது, அனைத்து பிரிவுகளிலும் வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது ஐ.டி.சி. நிறுவனம். அதே வேளையில் வரிக்கு முந்தைய லாபத்தில் குறைந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 2020ம் ஆண்டின் மார்ச் முடிவில் ரூ. 64,044 கோடியாக இருந்துள்ளது.

பங்கு ஒன்றுக்கு 10.15 ரூபாயை ஈவு தொகையாக(Dividend) முதலீட்டாளர்களுக்கு ஐ.டி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. உபரி பணவரத்து(Free Cash Flow) அடிப்படையில் 30 சதவீத வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளது இந்நிறுவனம். வருட அடிப்படையில் வரிக்கு பிந்தைய லாபம் 21 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒரு சிறுகதை. முக்கிய பதிவுகள். உங்கள் செல்வத்தை அழிக்கும் பங்குச்சந்தையின் கதை

ஒரு சிறுகதை. முக்கிய பதிவுகள். உங்கள் செல்வத்தை அழிக்கும்  பங்குச்சந்தையின் கதை 

A Short Story. Key Points. Wealth Destroyer – Stocks

பொதுவாக பங்குச்சந்தையில் சில நிறுவன பங்குகளை நீங்கள் வாங்கியிருந்தால் கோடீஸ்வரராக மாறலாம் என சொல்வதை கேட்டிருப்போம். 20 வருடங்களுக்கு முன்பு நீங்கள் இந்த பங்கில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தால் இன்று அது 5 கோடி ரூபாய் பெறுமானம் பெறும் என்பதனையும் சிலர் சொல்வதுண்டு.

நடைமுறையில் உள்ள முதலீட்டு சாதனங்களில் தொழில்களை கொண்டு நல்ல  வருவாயை ஈட்ட முடியும் எனில், அது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதனால் மட்டுமே. அதே வேளையில் உங்கள் பணம் மற்றும் செல்வத்தை பதம் பார்க்கும் ஒரு முதலீட்டு சாதனமும் உண்டு. அதுவும் பங்குச்சந்தை தான்.

அப்படிப்பட்ட முதலீட்டு இழப்புகளை ஏற்படுத்திய நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் பல உண்டு. அவற்றின் சிறுகதைகளை இங்கே பார்ப்போம். சிறுகதைகளுக்கு இருக்கும் அழகே தனி தான். பங்குகளை அலசி ஆராய்வதில் சிறிய கதைகளாக சொல்லும் போது அதன் தன்மை ஆழமான வாசிப்பை ஏற்படுத்தும்.

சொல்லப்பட உள்ள பங்கின் நிறுவன பெயரை கதையின் முடிவில் நீங்களே அறிந்து கொள்ளலாம். பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டு முதலீட்டாளர்களின் பணத்தை பதம் பார்க்கும் பங்கு ஒன்று இதோ…

தற்போது இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்த பங்கு 60 சதவீத ஏற்றத்தை அடைந்துள்ளது. நல்ல பங்கு தானே, வாருங்கள் கதைக்கு.

  • சொல்லப்பட்ட உள்ள நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் இந்திய பணக்காரர்களில் ஒருவராவார். முதலீடுகளை பெறுவதில் அவர் வல்லவரும் கூட.
  • தொலைத்தொடர்பு சேவையில் மேம்பட்ட CDMA தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. சிறிது வருடங்கள் கழிந்ததும், நிறுவனம் மற்றொருவரிடம் கைமாறியது. அவரும் இந்த நிறுவனத்தை தொடங்கியவருக்கு உறவுக்காரர் தான்.
  • நான்கு முறை சிறந்த விருதுகளை பெற்றவர் நமது புதிய ஓனர். ஆம், நாட்டின் மிக சிறந்த தொழிலதிபருக்கான விருதுகளை அவர் பெற்றார்.
  • 2008ம் ஆண்டில் மற்றொரு தொழில்நுட்ப சேவையில் அவர் நுழைந்தார். 3ஜி தொழில்நுட்பத்தை 2011ம் ஆண்டு கொண்டு வந்தார். 58,640 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலத்தில் எடுத்தார்.
  • எம்.டி.எஸ். கேபிள்(MTS Cable) என்ற நிறுவனத்தையும், டிஜி கேபிள்(Digicable) என்ற மற்றொரு நிறுவனத்தையும் கையகப்படுத்தினார். சில காரணங்களால் அவரால் 4ஜி தொழில்நுட்பத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.
  • தொழில் போட்டி மற்றும் அதிக கடனால் தள்ளாடினார். ஏர்செல்(Aircel) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் தனது நிறுவனத்தை இணைக்க முயற்சி செய்தார். ஆனால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
  • எரிக்சன்(Ericsson) என்ற நிறுவனத்துடன் இவருக்கு முதலீடு சார்ந்த மோதல் ஏற்பட்டது. எரிக்சன் இவருடைய நிறுவனத்தின் மீது வழக்கும் தொடுத்தது.
  • 12 வருடங்களுக்கு முன்பு உலகின் 6வது பணக்காரராக இருந்தவர் இப்போது அதிக கடனை மட்டும் கொண்டு நிறுவனத்தை திவால் நிலைக்கு அறிவித்து விட்டார். 42 பில்லியன் டாலர்கள் (இன்றைய மதிப்பில் 3.15 லட்சம் கோடி ரூபாய்) சாம்ராஜ்யத்தை கொண்டிருந்தவர் இன்று தன்னிடம் எதுவுமில்லை என கூறியுள்ளார்.
  • 2008ம் ஆண்டில் 800 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருந்த அவருடைய நிறுவனத்தின் பங்கு விலை 2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 80 பைசாவுக்கு வந்தடைந்தது. போனஸ் பங்குகள் எதுவும் தரப்படவில்லை என்பதனை கவனிக்கவும்.

எந்த நிறுவனம் என்று உங்களால் அறிய முடிகிறதா ?

பங்குச்சந்தையில் வெறும் விலைகளை மட்டுமே பார்க்காமல், நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு உள்ளது, நிர்வாகம் நன்றாக செயல்பட்டு வருகிறதா மற்றும் வருவாய் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதனையும் ஆராய வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை குமிழியும், அதன் தன்மைகளும் – இந்த வார இணைய வழி நிகழ்வு

பங்குச்சந்தை குமிழியும், அதன் தன்மைகளும் – இந்த வார இணைய வழி நிகழ்வு 

The Big Bubble and Delisting opportunity – Online Meet

நடப்பு 2020ம் வருடத்தின் மார்ச் மாதத்தில் உலக பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. கொரோனா தாக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை குறியீடு சந்தையில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இழப்பை ஏற்படுத்தின. பின்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நல்ல ஒரு ஏற்றத்தில் மீண்டு வந்தன.

பங்குச்சந்தை குறியீடுகள் உயர்ந்து காணப்பட்டாலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நிலவி வரும் பொருளாதார மந்தநிலை மீட்கப்படவில்லை எனலாம். இந்த மந்தநிலை கொரோனா தாக்கத்தால் மேலும் அதிகமாகியுள்ளது. மீண்டும் உலக பங்குச்சந்தைகள் 2020ம் ஆண்டில் வீழ்ச்சியை சந்திக்குமா ?

பொருளாதார மற்றும் பங்குச்சந்தை குமிழிகள் எவ்வாறு நடைபெறும் ? 

பங்குச்சந்தை வீழ்ச்சியின் போது ஒரு முதலீட்டாளராக நாம் கடைபிடிக்க வேண்டியவை  

நல்ல நிறுவன பங்குகளை கண்டறிவதற்கான எளிய உத்திகள் 

உண்மையில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவன தொழில்கள் லாபத்தில் உள்ளதா ?

நீங்கள் வாங்கிய பங்கு, பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்பட உள்ளதா ?

Stock Market Bubble Webinar

வாருங்கள், இந்த வார ஞாயிற்றுக்கிழமை இணைய வழியிலான நிகழ்வில் பேசலாம்.

Registration for Webinar Meet – The Big Bubble & Delisting Opportunity

பதிவுக்கு பின் நிகழ்வுக்கான இணைப்பு உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil