ஊரடங்கு காலத்தில் குறைந்த சரக்கு வருவாய் – இந்திய ரயில்வே
Revenue declined during the Nationwide Lock down – Indian Railways
நாட்டின் மிகப்பெரிய மத்திய அரசு நிறுவனமாகவும், உலகின் 4வது மிகப்பெரிய ரயில் தடங்களை கொண்ட நிறுவனமாகவும் இந்திய ரயில்வே வலம் வருகிறது. சுமார் 96,000 கிலோமீட்டர் பாதை நீளத்தை கொண்ட இந்நிறுவனம் நாளொன்றுக்கு 20,000 பயணிகள் ரயில் போக்குவரத்தை இயக்கி வருகிறது.
இந்திய ரயில்வேயின் வருவாய் 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 12.3 லட்சம். மத்திய ரயில்வே அமைச்சராக தற்போது திரு. பியூஸ் கோயல் பதவி வகிக்கிறார். 175 வருடங்கள் பழமையான நிறுவனமாக இருக்கும் இந்திய ரயில்வே முதன்முறையாக தனது ரயில் சேவையை கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தியது.
மார்ச் 24ம் தேதி துவங்கிய ஊரடங்கு காலத்தில், சுமார் 48 நாட்கள் தனது பயணிகள் ரயில் போக்குவரத்தை நிறுத்தியது. நிறுத்தப்பட்ட பயணிகள் சேவை ரயில்களின் எண்ணிக்கை மட்டும் 13,523. இந்த ஊரடங்கு காலத்தின் போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்வதற்கான சிறப்பு பயணிகள் ரயில்களையும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான சரக்கு ரயில்களையும் இந்திய ரயில்வே இயக்கியது.
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்த 2019ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த பங்கின் விலை ஆரம்பநிலையில் சுமார் 112 மடங்கு அளவில் பங்குதாரர்களிடம் கேட்கப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி. 2019-20ம் நிதியாண்டில் ரூ.1506 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு, உணவு விநியோகித்தல் மற்றும் சுற்றுலா சார்ந்த சேவைகளை ஐ.ஆர்.சி.டி.சி. வழங்குகிறது. 2019ம் ஆண்டு கணக்கின் படி, சுமார் 2 கோடி பயனாளர்கள் இதன் இணையதளத்தை பயன்படுத்தி ரயில் பயண முன்பதிவை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே நிறுவனத்தை பொறுத்தவரை மூன்று விதங்களில் வருவாய் ஈட்ட பெறுவதாக சொல்லப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில், சரக்கு ரயில் மூலமான வருவாய் மற்றும் இதர வருவாயாக மூன்று வருவாய்களை கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ரயில்வே வருவாய் வளர்ச்சி சீராக வந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலத்தில், பயணிகள் ரயில் சேவை பெரிதாக எதுவுமில்லை. நாடு முழுவதும் இயங்கிய சில சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போதைய கணக்கில் உள்ளன.
சரக்கு ரயில்களை(Frieght Earnings) பொறுத்தவரையில் உணவு தானியங்கள், உரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்படும். ஆனால் இம்முறை சொல்லப்பட்ட காலத்தின் சரக்கு வருவாய் சுமார் 38 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சரக்கு கையாளப்படும் அளவிலும் 28 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.
ஏப்ரல்-மே காலத்தில் நிலக்கரி போக்குவரத்து ரூ. 5,778 கோடிக்கு நடந்துள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலத்தில் ரூ.11,030 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக நிலக்கரி மூலமான வருவாய் 90 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இது போல சிமெண்ட் வருவாயும் 100 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. கடந்த வருடம் ரூ.1,630 கோடியாக இருந்த சிமெண்ட் மூலமான வருவாய் இம்முறை 730 கோடி ரூபாயாக உள்ளது.
அதே வேளையில் உணவு தேவை அதிகரித்ததால், உணவு தானியங்களின் வருவாய் 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. வடக்கு ரயில்வேயின் அம்பாலா பிரிவில்(Ambala Division) சரக்கு வருவாய் ஏப்ரல்-மே காலத்தில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் ரூ.130 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருவாய் இம்முறை 235 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட உணவு தானியங்கள் மூலமான வருவாய் தான்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை