Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம்

நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம் 

India’s economic growth in the third quarter of the current year was 7.6 Percent

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான மற்றும் வேகமாக வளரும் துறைகளாக சேவைகள், வர்த்தகம், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, நிதி, காப்பீடு மற்றும் வீட்டுமனை ஆகியவை உள்ளன. 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின்(Services Sector) பங்களிப்பு மட்டும் 60 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. உற்பத்தித் துறை 15 சதவீத பங்களிப்பையும், விவசாயத் துறை(விவசாயம், மீன் மற்றும் வனவியல்) 12 சதவீதமும், கட்டுமானம் 8 சதவீத பங்களிப்பையும் நாட்டின் உற்பத்தியில் கொண்டிருக்கிறது. விவசாயத் துறை 12 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தாலும், நாட்டின் மொத்த தொழிலாளர்களின் சக்தியில்(Employment) 50 சதவீத பங்களிப்பை இத்துறை தான் வழங்கி வருகிறது.

நடப்பாண்டின் மூன்றாம் காலண்டான ஜூலை முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி 7.6 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. முன்னர் மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி சொல்லப்பட்ட காலத்தில் 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தை வல்லுநர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக அமையலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது இது 7.6 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. உற்பத்தித் துறை சுமார் 13.9 சதவீதம் உயர்ந்தும், கட்டுமானம் 13.3 சதவீதமாகவும், பயன்பாடுகள் 10.1% ஆகவும், நிதி, வீட்டுமனை மற்றும் தொழில்முறை சேவைகள் 6 சதவீதம் என அதிகரித்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்த்துள்ளது.

அதே வேளையில் பருவ மழை மற்றும் காலநிலை மாற்றங்களால், விவசாயத் துறை சொல்லப்பட்ட காலத்தில் 1.2 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. செலவுகளை பொறுத்தவரை ஜூலை – செப்டம்பர் 2023 காலாண்டில் அரசின் செலவினம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு செலவுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் நிதி பங்களிப்பின் மூலதன உருவாக்கம்(Gross Fixed Capital Formation) 8 சதவீதத்திலிருந்து தற்போது 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

மூன்றாம் காலாண்டில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 4.3 சதவீதமாகவும், இறக்குமதி 16.7 சதவீதமாக அதிகரித்தும் காணப்படுகிறது. அதே வேளையில் தனியார் நிறுவனங்களின் செலவு பங்களிப்பு 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல்

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல் 

Layman’s Personal Financial Planning – Invest & Breathe

“மனதைத் தெளிவுபடுத்துவதற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்கும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியே அடிப்படை” என மருத்துவம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. 

“A Deep breathing exercise to clear the mind and relieve stress”

மூச்சுப்பயிற்சியினால் மனித உடலின் இரத்த அழுத்தம் குறைவதும், மற்ற உடலுறுப்புக்கள் சீராக இயங்குவது மட்டுமில்லாமல், அமைதி மற்றும் நல்வாழ்வு வாழ்வதற்கான புது தெம்பும் நமக்கு கிடைக்கப்பெறுகிறது.    

நவீன உலகத்தில் உடல்நலனும், செல்வமும் இரு நண்பர்களாக தான் வலம் வருகிறது. பொருள் ஆதாரமற்ற மனித வாழ்க்கையை இன்று நாம் இவ்வுலகில் காண இயலாது. அதே போல சுவர் இருந்தால் தான் சித்திரமும். 

அதற்காக நாம் கடினமாக உழைப்பதோ, உடல்நலத்தை பேணுகிறேன், உடல் எடையை இத்தனை நாட்களில் குறைக்கிறேன் என நாள்தோறும் ‘ஜிம்(Gym)’ பேர்வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண நடைப்பயிற்சியும், மூச்சுப்பயிற்சியும் மற்றும் உணவில் கவனம் – அவரவர் வயது சார்ந்து மற்றும் தொழிலுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் அறிவை பயன்படுத்தி மற்றும் அதனை மேம்படுத்துதல் மூலம் நாம் செல்வத்தை எளிமையாக ஈட்டலாம். ஈட்டிய செல்வத்தை சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் பெருஞ்செல்வமாக மாற்றலாம். 

நமது உடல்நலனை நாம் எப்படி பொறுமையாக கருத்தில் கொண்டு பேணுகிறோமோ, அதனை போல செல்வம் சேர்ப்பதிலும் கற்றல் மற்றும் பொறுமையும் அவசியம். ‘அதிகரித்த உடல் எடையை, சில நாட்களில் மிக விரைவாக குறைக்கிறேன்’ என நாம் எடுக்கும் ரிஸ்க் தன்மையும், ‘குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை அள்ளி விட வேண்டும்’ என முதலீட்டில் நாம் விளையாடும் ஊக வணிகமும்(Speculation) – இரண்டும் பக்கவிளைவை தரக்கூடியவையே !

பல வருடங்களாக நமது உடலில் இருக்கும் நோய்த்தன்மையை ஓரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விட்டால், பின்னாளில் நமது உடல் இயக்கங்கள் அடுத்து வரும் நாட்களில் தடுமாறும். இதன் காரணமாக மீண்டுமொரு கவனத்தை நாம் நம் உடல் நலன் மீது செலுத்த நேரிடும். இதற்கான காலமும், பணச்செலவும் அதிகமே. இதனை போல பல ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு பங்குச்சந்தையில் ஒரே நாளில் பல லட்சங்களையும், கோடிகளையும் ஈட்ட வேண்டுமென்ற ஆசை(பேராசை) எல்லோருக்கும் தான். ஆனால் அது அனைவருக்கும், எல்லா நேரங்களிலும் சாத்தியமா !    

கடந்த 2022-23ம் நிதியாண்டில் செபி|(SEBI) வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, இந்திய பங்குச்சந்தையில் ஈடுபடும் 10 நபர்களில் ஒன்பது பேர் (Futures & Options Traders) தங்களது முதலீட்டு பணத்தை இழக்கின்றனர் என கூறுகிறது. சந்தையில் பணத்தை இழக்கும் நபர்களின் சராசரி இழப்பு ரூ.50,000 வரை உள்ளதாகவும், 28 சதவீதம் பேர் தங்களது முதலீட்டு இழப்பை, வெறும் பரிவர்த்தனை கட்டணங்கள் செலுத்துவதில் சந்திக்கின்றனர் எனவும் இந்த தரவு அறிக்கை கூறுகிறது. 

அப்படியிருக்க நாம் எதனை நோக்கி நாம் உழைத்த பணத்தை கொண்டு சென்றிருக்கிறோம் ? பங்குச்சந்தை முதலீடு நீண்ட காலத்தில் பலன் தரும் என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கமே இதனை வெளிப்படையாய் சொன்னாலும்(சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதும்) நாம் என்னவோ குறுகிய காலத்தில் பணக்காரனாக ஆசைப்படுவதே. உண்மையில் பங்குச்சந்தையில் எளிமையாகவும், மிக விரைவாகவும் லாபமீட்ட முடிந்தால், ஏற்கனவே சந்தையில் லட்சம் கோடி ரூபாய்களில் மூலதன மதிப்பை கொண்ட டாட்டா, அம்பானி, பஜாஜ், கோத்ரேஜ், இன்னபிற குழுமங்கள் எங்கே ? அவர்களிடம் இல்லாத பணமா, நிர்வாகமா அல்லது அவர்களுக்கு தெரியாத பங்குச்சந்தை ரகசியமா. சொல்லப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை தங்களது தொழில்களை தான் நம்பியுள்ளன. அவர்களது தொழிற் திறனும், வாடிக்கையாளர்களும் தான் பின்னாளில் முதலீட்டாளர்களால் பங்கு விலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

சாமானியனின் நிதித்திட்டமிடலில் முதல் படி:

தனது குடும்பத்திற்கு தேவையான நிதிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது தான் –  வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு போதுமான டேர்ம் காப்பீடு(Term Insurance), குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்ந்தாற் போல மருத்துவ காப்பீடு(Mediclaim), அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்யும் நபராக இருக்கும் நிலையில், அவருக்கு தேவையான விபத்துக் காப்பீடு(Accidental Coverage).

இது போக அவசர கால நிதியை(Emergency Fund) உருவாக்குதல், குடும்ப நபர்களுக்கான நிதித்தேவையை இலக்குகளாக மாற்றுதல்(Creating Financial Goals). மேலே சொன்ன ஐந்து நிலைகளுக்கும் தனிநபர் ஒருவரின் வருமானம் மற்றும் குடும்ப நபர்களின் தேவையை கருத்தில் கொண்டு திட்டமிடலாம். இந்த ஐந்தும் தவிர்க்க இயலாத நிலைகளாக மற்றும் அவசியமான ஒன்றாக உள்ளது.

நிதித்திட்டமிடலின் இரண்டாவது படியில்,

உங்களது நிதி இலக்குகளுக்கான சரியான சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது(Identifying Suitable Investment schemes). பொதுவாக சேமிப்பு எனும் போது அரசு சார்ந்த அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, பி.எப். பிடித்தம், சிறியளவில் நகை சேமிப்பு, சீட்டு(அரசு பதிவு பெற்ற மற்றும் நம்பகமான) ஆகியவை நமக்கு நினைவில் வரும். 

இவை பெரும்பாலும் குறைந்த வட்டி வருவாயை(பணவீக்கத்தை விட குறைவு) கொண்டிருந்தாலும், குறுகிய கால இலக்குகளுக்கு சிறந்தது. இதனை விடுத்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொன்சி(Ponzi Scam) மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை அரசாங்கம் வெளியிடும் அல்லது அரசு நிர்வாகம் செய்யும் சேமிப்பு திட்டங்களை மட்டுமே நாடுவது நல்லது.

நடுத்தர மற்றும் நீண்டகால நிதி இலக்குகளுக்கு மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இந்த திட்டங்களில் ஏற்ற-இறக்க ரிஸ்க் தன்மை இருப்பதால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஏற்படுத்தலாம. இதன் காரணமாக நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை சரியான காலத்தில் பெற முடியும். பரஸ்பர நிதிகளில் நீண்டகாலத்திற்கு என முதலீட்டு செய்து விட்டு, இலக்குகளை அடையும் முன்னர் அல்லது இடைவெளி காலத்தில் முடிந்தளவு பணத்தை வெளியில் எடுக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு எடுக்கும் நிலையில், நாம் கூட்டு வட்டியின் முழுமையான பலனை(Power of Compounding) அடைய முடியாமல் போகலாம்.

பரஸ்பர நிதி முதலீட்டின் வாயிலாக நாம் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான திட்டங்களில்(Asset Allocation) நமது முதலீட்டை பரவலாக்க முடியும். 

மூன்றாவது மற்றும் இறுதிப்படியாக,

பெருஞ்செல்வத்தை ஈட்டுவது இன்றைய காலத்தில் தேவையான ஒன்றாகி விட்டது. முன்னொரு காலத்தில் மனித உடற்சக்தியை மட்டுமே நம்பியிருந்த குடும்பச் சமூகம், இன்று நிதிச் சொத்துக்களை தான் குடும்பத்திற்கான ஆதாரமாக வைத்துள்ளது. எனவே நாம் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான மற்றும் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை சேர்ப்பதிலும், அவற்றினை கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய நிலையுள்ளது. செல்வம் சேர்ப்பது என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானதல்ல.

பெருஞ்செல்வம் ஈட்ட நாம் தொழில் திறனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நமக்கான தொழில் ஏதுமில்லை அல்லது அவற்றை செய்ய நமது மனம் விரும்பாத போது, மற்றவர்களின் தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்(அதற்காக மீண்டும் பொன்சி மோசடியிடம் மாட்டி கொள்ளாதீர்கள் !). முதலீடு செய்யப்படும் தொழில் நிறுவனம் அரசு அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவும், நிர்வாகத்திறன் படைத்ததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கா விட்டாலும், நமது முதலீட்டு பணம் நமக்காக திறம்பட வேலை செய்யும்.  

மற்றவர்களது தொழிலில் ஒரு சாமானியனும் முதலீடு செய்யலாம் என்பதே, இன்றைய பங்குச்சந்தை வாய்ப்பு(Public & Private Equity – Listed & Unlisted). பங்குச்சந்தை முதலீடு பற்றிய அடிப்படை கற்றலை கற்றுக் கொண்ட பின்னர் தான், சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை கொண்டிருந்தால் சிறப்பு. இல்லையென்றால்,பதிவு பெற்ற மற்றும் நம்பகத்தனமான நிறுவனங்களின் மூலம் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பங்குச்சந்தையிலும் பேராசை காட்டி மோசடி செய்யும் பேர்வழிகள் ஏராளம் ! 

உங்களால் பங்குச்சந்தையை புரிந்து கொள்ள முடியவில்லை எனில், முதலிரண்டு படிநிலைகளோடு இருந்து விடுவது நல்லது. 

மூச்சுப்பயிற்சியை மெதுவாக கவனித்தால் தான் மெருகும், நிதி முதலீடும் சாமானியனுக்கு அப்படித்தான் 🙂

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 5.02 சதவீதம்

நாட்டின் செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 5.02 சதவீதம்  

India’s Retail Inflation rate in the month of September 2023 – 5.02 Percent

நாட்டின் சில்லறை விலை(நுகர்வோர்) பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 6.83 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாத முடிவில் 5.02 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட செப்டம்பர் மாத பணவீக்க விகிதம், கடந்த மூன்று மாதங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் சற்று குறைந்து 6.56 சதவீதமாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.94 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையும் 4.61 சதவீதமாக குறைந்துள்ளது.

வீட்டுமனை, ஒளி மற்றும் எரிபொருட்கள், புகையிலை பொருட்களின் விலையும் செப்டம்பர் மாதத்தில் குறைந்து காணப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலிருந்து காணுகையில், இரு மாதங்களுக்கு இடையிலான நுகர்வோர் விலை வீழ்ச்சி தற்போதைய ஆகஸ்ட் – செப்டம்பர் 2023 காலத்தில் தான் காணப்படுகிறது.

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க(Consumer Price Index – CPI) கணக்கீட்டில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் சுமார் 46 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. செப்டம்பர் மாத பணவீக்க விகிதம், சந்தை மதிப்பீட்டை(5.5 சதவீதம்) காட்டிலும் குறைவாக காணப்படுகிறது. 

இந்தியாவில் பணவீக்க விலைக் குறியீடு இரு வகைகளில் கணக்கிடப்படுகிறது – சில்லரை(நுகர்வோர்) விலை மற்றும் மொத்த விலை பணவீக்க விகிதம். நாட்டின் நுகர்வோர் விலை அதிக ஏற்ற – இறக்கமாக இருப்பதற்கு காரணமாக பெரும்பாலும் நாம் எரிசக்தி இறக்குமதியை சார்ந்திருப்பது தான். 

இது போக பருவமழையின் நிச்சயமற்ற தாக்கம், மேம்படுத்தப்படாத சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், அதிக நிதிப் பற்றாக்குறையும் பணவீக்க விகித மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

International Coffee Day – October 1, 2023 – Industry Insights

காபி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நியாயமான வர்த்தக காபியை ஊக்குவிக்கவும், 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ம் நாளில் சர்வதேச காபி தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. தேசிய காபி தினம் என ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தாலும், கடந்த 1963ம் ஆண்டில் லண்டனை தலைமையிடமாக கொண்டு சர்வதேச காபி அமைப்பு(International Coffee Organization) ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பில் இந்தியா உள்பட 42 நாடுகள் காபி உற்பத்தி உறுப்பினர்களாகவும், 7 நாடுகள் காபி இறக்குமதி செய்யும் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இறக்குமதி செய்யும் உறுப்பினர் நாடுகளாக ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய ராச்சியம் மற்றும் துனிசியா ஆகியவை உள்ளன. 

சர்வதேச காபி தினத்தில் சில காபி உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள், அன்றைய நாளில் காபியை இலவசமாகவோ அல்லது தள்ளுபடி விலையிலோ வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ‘காபி’, ஒரு பிரபலமான பானமாகவும், பொருட்சந்தையில் முக்கிய பொருளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் காபியை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்குகிறார்கள். 

உலகில் நாள்தோறும் சுமார் 225 கோடி கப் அளவிலான காபி, 100 கோடி நபர்களால் உட்கொள்ளப்படுகிறது. உலகின் 90 சதவீதத்திற்கும் அதிகமான காபி உற்பத்தி பெரும்பாலும் வளரும் நாடுகளில் தான் உற்பத்தியாகிறது. உலகம் முழுவதும் காபியை உற்பத்தி செய்யும் சிறு வணிகர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2.50 கோடி. தென் அமெரிக்காவில் தான் காபியை உட்கொள்ளும் அல்லது நுகரும் தன்மை அதிகமாக உள்ளது.

சர்வதேச காபி சந்தையின் மதிப்பு சுமார் 127 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய காபி சந்தையின் மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலக காபி விற்பனையின் வளர்ச்சி ஆண்டுக்கு 4 முதல் 5 சதவீதமாக(CAGR 2023-2028) மதிப்பிடப்படுகிறது. உலகின் காபி விற்பனை மூலமான பெரும்பாலான வருவாய் அமெரிக்காவிலிருந்து தான் கிடைக்கப்பெறுகிறது. உலக காபி சந்தையில் ஒரு தனிநபரின் சராசரி நுகரும் அளவு நாளொன்றுக்கு 700 முதல் 800 கிராம்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

காபி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது பிரேசில். வியட்நாம், கொலம்பியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஏழாவது மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இறக்குமதி செய்யும் நாடுகளாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக காபி விற்பனை சந்தையின் நாயகனாக மற்றும் பிராண்டாக, ‘ஸ்டார் பக்ஸ்(Starbucks)’ உள்ளது. இந்நிறுவனம் காபி விற்பனை மூலம் சுமார் 32.25 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. அதாவது அமெரிக்காவின் மொத்த காபி விற்பனை வருவாயில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 37 சதவீதம். ஸ்டார் பக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல Panera Bread, McCafe, Lavazza, Tim Hortons, Dunkin’s Brands ஆகிய நிறுவனங்கள்(பிராண்டுகள்) உள்ளன.      

2022-2023ம் ஆண்டின் முடிவில் உலக காபி தொழிற்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 495 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவின் காபி உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை கர்நாடக மாநிலம் மட்டும் கொண்டுள்ளது. இதற்கடுத்தாற் போல கேரளா 23 சதவீதத்தையும், தமிழ்நாடு 6 சதவீதத்தையும் பங்களிப்பாக கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஆண்டுக்கு சுமார் 2.33 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான காபியை உற்பத்தி செய்கிறது. 

இந்திய உள்ளூர் சந்தையில் காபி நுகரும் தன்மை 73 சதவீதம் நகரங்களிலிருந்து தான் வருகிறது. இந்திய காபியை அதிகம் நுகரும்(இறக்குமதி) நாடுகளாக இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா, லிபியா, போலந்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உள்ளது. இந்தியாவின் காபி ஏற்றுமதியில் இத்தாலியின் பங்களிப்பு மட்டும் சுமார் 45 சதவீதம். அடுத்த ஐந்து வருடங்களில்(2023-2028) இந்திய காபி சந்தையின் விற்பனை வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதத்தை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

இந்திய பங்குச்சந்தையில் தோட்டத்துறை பிரிவில்(Plantation) சுமார் 44 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் உட்பிரிவான தேநீர் மற்றும் காபி(Tea & Coffee) துறையில் 26 நிறுவனங்கள் உள்ளன. இச்சந்தையின் முதன்மை இடத்தை, ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ்’ தக்க வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.81,400 கோடி. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேயிலை நிறுவனமாகவும் ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.83 சதவீதம்

நாட்டின் ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.83 சதவீதம்  

India’s Retail Inflation rate in the month of August 2023 – 6.83 Percent

நாட்டின் நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் காணப்படும் ஒழுங்கற்ற மற்றும் தாமதமான பருவ மழை காரணமாக வரக்கூடிய மாதங்களில் உணவுப்பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 7 சதவீதமாக இருக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணித்த நிலையில், இது 6.83 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 11.51 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது 9.94 சதவீதமாக குறைந்துள்ளது.

இருப்பினும் கடந்த ஜனவரி 2020 காலத்தை ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் அதிகரித்து தான் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் காய்கறிகளின் பணவீக்க விகிதம் 26.14 சதவீதமாகவும், பால் பொருட்களின் விலை 7.73 சதவீதமாகவும் மற்றும் தானியங்களின் விலை 11.85 சதவீதமாகவும் உள்ளது.

பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் பெரியளவில் மாற்றம் பெறவில்லை. அதே வேளையில் மசாலா பொருட்களின் விலை 23.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீட்டுமனை 4.38 சதவீதமாகவும், ஒளி மற்றும் எரிபொருட்களின் பணவீக்க விகிதம் 4.31 சதவீதமாகவும் அதிகரித்து காணப்படுகிறது.

எல் நினோ(El Nino) காரணமாக பருவமழை இயல்பு நிலையை காட்டிலும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி, உணவுப்பொருட்களின் விலை வரக்கூடிய காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக உணவுப்பொருட்களின் விலை உயரக்கூடும் என கருதி அரசும் சர்க்கரை மற்றும் அரிசி உள்ளிட்ட தானியங்களின் ஏற்றுமதியை தடை செய்து வருவது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(பொருளாதார) வளர்ச்சி – 7.8 சதவீதம்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(பொருளாதார) வளர்ச்சி – 7.8 சதவீதம்

India’s Gross Domestic Product(GDP) growth in the April-June Quarter – 7.8%

2022ம் ஆண்டின் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.385 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட வருட கணக்கின் படி, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 1.51 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார பங்களிப்பு 11.20 சதவீதமாகவும் (25.46 டிரில்லியன் டாலர்கள்), சீனாவின் பங்களிப்பு 7.97 சதவீதமாகவும் (17.96 டிரில்லியன் டாலர்கள்) இருக்கிறது. 

ஜூலை 2023 மாத முடிவில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 20.67 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளிகளாக அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி மற்றும் ரசியா ஆகிய நாடுகள் உள்ளன. 2022ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவிற்கு சுமார் 80.23 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதியையும், சீனாவிலிருந்து சுமார் 102.25 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதியையும் மேற்கொண்டிருக்கிறோம். 

உலக வர்த்தகத்தில் நாம் பெரும்பாலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யக்கூடிய பிரிவுகளாக கனிம எரிபொருள்கள், எண்ணெய்கள், முத்துக்கள் மற்றும் விலையுர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், இயந்திரங்கள், அணு உலைகள் மற்றும் கொதிகலன்கள், மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் ஆகியவை உள்ளன.

கடந்த ஜூலை மாத முடிவில் நாட்டின் ஏற்றுமதி 32.25 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 52.92 பில்லியன் டாலர்களாவும் இருந்துள்ளது. தங்கத்தின் கையிருப்பு(Gold Reserves) 797.44 டன்களாக உள்ளது. 2022-23ம் நிதியாண்டின் முடிவில் வெளிநாட்டு கடன் 624.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. சந்தை எதிர்பார்த்த வளர்ச்சி மதிப்பீட்டை காட்டிலும், தற்போது சொல்லப்பட்ட வளர்ச்சி சற்று கூடுதலாகும். இதற்கு முந்தைய காலண்டான ஜனவரி – மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாகவும், கடந்தாண்டின்(2022-23) ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இது 13.1 சதவீதமாகவும் இருந்துள்ளது.

சேவைத்துறையில் ஏற்பட்ட வலுவான செயல்திறன், நுகர்வோர் தேவை அதிகரிப்பு, அரசு மற்றும் தனியார் ஆகியவற்றின் மூலதன செலவு ஆகியவற்றால், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் வளர்ச்சி சாத்தியமானது. அதே வேளையில் உற்பத்தி துறை எதிர்பார்த்த வளர்ச்சியை கண்டிருக்கவில்லை. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் – 7.44 சதவீதம்

நாட்டின் ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் – 7.44 சதவீதம் 

India’s Retail Inflation Rate in the month of July 2023 – 7.44%

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை எகிறுவதும், பின் சரிவதும் அடிப்படை பொருளாதாரத்தில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளியின் காரணமாக தான். நாட்டின் நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) என்றழைக்கப்படும் சில்லரை விலை பணவீக்கம் ஜூலை மாத முடிவில் 7.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

ஜூன் மாத முடிவில் இது 4.87 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப்பொருட்களின் பணவீக்க விலை 11.51 சதவீதம் என்ற அளவில் அதிகரித்ததால், ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. இது கடந்த 15 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். 

உணவுப்பொருட்களின் பணவீக்கத்தில் காய்கறிகளின் விலை 37.30 சதவீதமும், மசாலா பொருட்களின் விலை 21.60 சதவீதமும் மற்றும் பருப்பு வகைகளின் விலை 13.30 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இது போல தானியங்களின் விலை 13 சதவீதமாகவும், பால் பொருட்களின் விலை 8.3 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.

ஒளி மற்றும் எரிபொருட்களின்(Fuel and Light) விலை 3.7 சதவீதமும், வீட்டுமனை 4.5 சதவீதமும் ஜூலை மாதத்தில் உயர்ந்து காணப்படுகிறது. துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையும் 5.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த சில்லரை விலை பணவீக்க கணக்கீட்டில் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது.

india-inflation-cpi-Since 2012-2023

நடப்பு 2023-24ம் நிதியாண்டில் முதன்முறையாக ஜூலை மாத பணவீக்கம், மத்திய ரிசர்வ் வங்கியின் இலக்கினை கடந்து காணப்பட்டுள்ளது. நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதத்திற்குள்ளாக வைத்திருக்க மத்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் ஒழுங்கற்ற மற்றும் தாமதமான பருவமழை முறை, உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு – ஜூலை 31, 2023

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு – ஜூலை 31, 2023

Income Tax Returns – Filing Deadline – July 31, 2023

கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு நடப்பு மதிப்பீட்டு ஆண்டு 2023-24 காலத்தில் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். பொதுவாக ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கப்படும் வரி தாக்கல், இம்முறை தாமதமாக துவங்கியது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. 

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு இம்முறை பெரும்பாலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சிரமத்தை சமாளிக்க வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இது ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே இருந்தது.

வருமான வரி தாக்கலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யாத நிலையில், அபராத கட்டணம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 60 வயதுக்குட்பட்ட தனிநபர் ஒருவர், ஒரு நிதியாண்டில் அவரது மொத்த வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். அவருக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், வரி தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

நடப்பு ஜூலை 26ம் தேதி வரை, நாட்டில் சுமார் 4.75 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதே வேளையில் வருமான வரி தளத்தில்(IT Portal) தங்களது பான் எண் கணக்கை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 11.44 கோடி (தனி நபர்). சொல்லப்பட்ட 4.75 கோடி வருமான வரி தாக்கலில் இதுவரை 4.24 கோடி பேர் மட்டுமே மின்னணு சரிபார்ப்பை(E-Verification) முடித்துள்ளனர்.

பொதுவாக வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும், மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்தால் மட்டுமே அது முழுமையான வரி தாக்கலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தனிநபர் வருமான வரி தாக்கலை செய்துள்ளவர்களில் பெரும்பாலும் ஐ.டி.ஆர் – 1 படிவத்தை பயன்படுத்தியுள்ளவர்களே அதிகம். 

2022-23 மதிப்பீட்டு ஆண்டில்(Assessment year) ஐ.டி.ஆர் – 1 படிவத்தை பயன்படுத்தி வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சமாக இருந்த நிலையில் நடப்பு 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டில் இது 72.95 லட்சமாக(ஜூன் மாத முடிவில்) இருக்கிறது. அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை சுமார் 95.50 சதவீதம் அதிகமான வரி தாக்கல் நடைபெற்றுள்ளது. 

மாநிலங்கள் வாரியாக காணும் போது, மகாராஷ்டிராவில் சுமார் 18.52 லட்சம் வரி தாக்கலும், குஜராத்தில் 14.02 லட்சமும் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் 11.92 லட்சமும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் ஜூன் மாத முடிவின் படி, 8.19 லட்சம் வரி தாக்கல் பதிவாகியுள்ளன. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி 

Infosys reported a net profit of Rs.5,945 Crore in Q1FY24

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் தனது 2023-24ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டிருந்தது. சொல்லப்பட்ட ஏப்ரல்-ஜூன்  காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,933 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,869 கோடியாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாபம் 9,064 கோடி ரூபாய் மற்றும் இயக்க லாப விகிதம்(OPM) 24 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக ஜூன் காலாண்டில் 561 கோடி ரூபாயை நிறுவனம் ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.8,362 கோடியாகவும், நிகர லாபம் ரூ.5,945 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட வருவாய் 10 சதவீதமும், நிகர லாபம் 11 சதவீதமுமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஜூன் 2022ல் ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) ரூ. 12.74 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.14.32 ஆக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6.01 லட்சம் கோடி. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. மார்ச் 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 73,338 கோடி ரூபாய். இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் நிதித்துறை சார்ந்த சேவைகளிலிருந்து பெறப்படுகிறது. 

இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஜூன் காலாண்டின் படி 1,883 வாடிக்கையாளர்கள்(நிறுவனங்கள்) உள்ளனர். நூறு மில்லியன் டாலர்களுக்கு மேலாக வருவாய் அளிக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் 38 பேர். 940 நிறுவன வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலான வருவாயை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

முதல் 25 நிறுவன வாடிக்கையாளர்கள்(Top 25 Clients) மட்டும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 35 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஜூன் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3.36 லட்சம். இவற்றில் 3.17 லட்சம் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், மற்றவர்கள் விற்பனை மற்றும் அதற்கு பிறகான சேவையை வழங்குவதிலும் உள்ளனர். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23 – சிறு பார்வை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23 – சிறு பார்வை 

India’s Gross Domestic Product(GDP) growth – 2022-23 Insights

முன்னொரு காலத்தில் இந்திய பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாக சொல்லப்பட்டிருந்தாலும், இன்றளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும்பாலும் சேவைத்துறையை சார்ந்து தான் உள்ளது. நாட்டின் பொருளாதார உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு மட்டும் 50 சதவீதத்திற்கும் மேலாக  உள்ளது. விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடி துறையின் ஒட்டுமொத்த பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளது. எனினும் இத்துறை தான் நாட்டின் வேலைவாய்ப்பினை வழங்குவதில் 50 சதவீதத்திற்கு மேலாக காணப்படுகிறது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சந்தை எதிர்பார்த்த அளவினை காட்டிலும் அதிகமாக தான் வளர்ச்சியடைந்துள்ளது. நடப்பு 2023-24ம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கடந்த பத்து வருட காலத்தில் பொருளாதார வளர்ச்சியை காணுகையில், 2021-22ம் நிதியாண்டில் அதிகபட்சமாக 9.1 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இது 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலமாகும். அதாவது கொரோனா ஊரடங்கு காலத்தில்(2020-21) நாட்டின் பொருளாதாரம் 5.8 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது. 

குறைவான வளர்ச்சி அளவாக 2019-20ம் நிதியாண்டில் 3.9 சதவீதமாக இருந்துள்ளது. மற்றைய அனைத்து நிதியாண்டுகளிலும்(2010க்கு பிறகு) நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 5 சதவீதத்திற்கு அதிகமாக தான் இருந்துள்ளது. 2023ம் நிதியாண்டின் முடிவில் நாட்டின் பொருளாதார மதிப்பு 3.75 அமெரிக்க டிரில்லியன் டாலர்கள். 2014ம் ஆண்டில் உலகளவில் பத்தாவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

india-full-year-gdp-growth- Since 2006

உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில்(GDP Contribution) இந்தியாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 3.2 சதவீதமாகும். முதலிடத்தில் அமெரிக்கா(26.8 டிரில்லியன் டாலர்கள்) 25 சதவீத பங்களிப்புடனும், இரண்டாவது இடத்தில் சீனா(19.3 டிரில்லியன் டாலர்கள்) 17.50 சதவீத பங்களிப்புடனும் உள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இடம் முறையே ஜப்பான்(4.4 டிரில்லியன் டாலர்கள்) மற்றும் ஜெர்மனி(4.30 டிரில்லியன் டாலர்கள்) ஆகிய நாடுகள் உள்ளன.

நாட்டின் வரி வருவாய் வளர்ச்சியடைந்து வருவதும், உலகளவில் கடன்-பொருளாதாரத்திற்கான(Debt to GDP) இடைவெளி குறைந்து காணப்படுவதும் இந்தியாவிற்கு சாதகமான நிலையாக இருந்து வருகிறது. பணவீக்கம், உலகளாவிய தேவையில் பலவீனம் காணப்படுதல், தனிநபர் வருவாயில் அதிக ஏற்ற-தாழ்வு, வேலைவாய்ப்பின்மை விகித மாறுபாடு ஆகியவை பாதகமான நிலையாக உள்ளது.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் கடன்-பொருளாதார தன்மை முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனை ஒப்பிடுகையில் இந்தியாவின் கடன்-பொருளாதார தன்மை 81 சதவீதமாக தான் உள்ளது. குறைந்த கடன் மலிவு தன்மை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டை ஈர்ப்பதற்கும் சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

நாடு சுதந்திரம்(1947) பெறப்பட்ட நிலையிலிருந்து 1991ம் ஆண்டு வரை பெரும்பாலும் நாம் சோவியத் யூனியனின் பாணியில் தான் பொருளாதாரத்தை திட்டமிட்டு வந்துள்ளோம். அதற்கு பிறகான காலக்கட்டத்தில் புதிய பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டு, பொருளாதார ஒழுங்குமுறையுடன் பாதுகாப்புவாத பொருளாதார திட்டமிடல்கள் ஊக்குவிக்கப்பட்டன. 

2022ம் ஆண்டு தரவின் படி, உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும், ஆறாம் மிகப்பெரிய இறக்குமதியாளாராகவும் இந்தியா உள்ளது. உலகின் ஆறாவது மிகப்பெரிய நுகர்வு சந்தையாகவும் இந்தியா இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக தான் வெளிநாட்டு நிறுவனங்களும், அன்னிய முதலீடுகளும் இங்கே கவனம் செலுத்துகின்றன. 

நாட்டின் முக்கிய வர்த்தக பங்காளிகளாக அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு, சவுதி, ரசியா, ஜெர்மனி, இந்தோனேசியா, ஹாங்காங், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. 2021-22ம் ஆண்டின் முடிவில் அன்னிய நேரடி முதலீட்டின் பங்கு மட்டும் சுமார் 82 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 

உலகின் முதல் பத்து பங்குச்சந்தையில்(தரவரிசை) மும்பை பங்குச்சந்தையும், தேசிய பங்குச்சந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு இடங்களில் அமெரிக்க சந்தைகளான நியூயார்க் மற்றும் நாஷ்டாக் சந்தைகளும், மூன்றாமிடத்தில் சீனாவின் ஷாங்காய் சந்தையும் உள்ளன. 

147 வருட பழமையான மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு சுமார் 280 லட்சம் கோடி ரூபாய். இச்சந்தையில் 5000க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. 1992ம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையின் மதிப்பு 269 லட்சம் கோடி ரூபாய். இங்கே சுமார் 2000 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com