All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

எகிறும் விலைவாசி உயர்வு – நாட்டின் மார்ச் மாத பணவீக்கம் 6.95 சதவீதம்

எகிறும் விலைவாசி உயர்வு – நாட்டின் மார்ச் மாத பணவீக்கம் 6.95 சதவீதம்

India’s Retail Inflation to 6.95 Percent – March 2022

உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டுறவில் உள்ள நாடுகள், மார்ச் மாதம் முதல் தான் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் 8.5 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

தற்போது சொல்லப்பட்ட அமெரிக்க பணவீக்க விகிதம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வாகும். எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களில் ஏற்பட்ட விலை மாற்றமும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

ஏற்கனவே 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, உலக நாடுகளிடையே பொருட்கள் மற்றும் சேவை விநியோக சங்கிலியில் இடையூறு(Supply chain Disruption) ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் தீர்க்கப்படவில்லை.

இன்று(12-04-2022) இந்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால்(MOSPI) வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டின் சில்லரை விலை (நுகர்வோர்) பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக சொல்லப்படுகிறது.

மார்ச் மாதத்தில் சொல்லப்பட்ட பணவீக்கம், சந்தை மதிப்பீட்டை தாண்டிய அளவாக தற்போது உள்ளது. 6.35 சதவீதமாக சில்லரை விலை பணவீக்கம் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், மார்ச் மாத முடிவில் 6.95 சதவீதமாக இருந்துள்ளது.

உணவு பொருட்களின் விலை தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக உயர்ந்து வந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 18.79 சதவீதமும், காய்கறிகள் 11.64 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் வகைகள் 9.63 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 7.52 சதவீதமாகவும் விலை உயர்ந்துள்ளது. 

பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால பணவீக்க இலக்கு 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையில் இருக்கும் போது, தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேலாக இருப்பது கவனிக்கத்தக்கது.

உயர்ந்து வரும் எரிபொருட்களின் விலையால் ஏப்ரல் மாத பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. நாட்டின் பணவீக்க விகிதத்தில் உணவுப்பொருட்களின்(Food and Beverages) பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக உள்ளது. 

எகிறும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வரக்கூடிய காலங்களில் பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

No change in Repo Rate for the Eleventh Time – RBI Monetary Policy 

நடப்பு நிதியாண்டின் முதல் கூட்டமாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் வங்கி ரெப்போ வட்டி விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் சார்ந்த அறிக்கை இன்று பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) வெளியிடப்பட்டது. 

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் இம்முறை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் எனவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம், எந்த மாற்றமுமின்றி 3.35 சதவீதத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு கடந்த 2020ம்  ஆண்டு முதல் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் பெரியளவில் மாற்றமில்லை.

தற்போது சொல்லப்பட்ட அறிவிப்புடன் சேர்த்து, பதினொன்றாவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வரக்கூடிய மாதங்களில் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம். 

நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.2 சதவீதமாக இருக்கும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதுவே கடந்த முறை, பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாகவும், பணவீக்கம் 5.3 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கப்பட வேண்டியவை.

பணவீக்க மதிப்பீட்டில் அதிகபட்சமாக 2022-23ம் நிதியாண்டின் முதல் காலாண்டில்(April – June 2022) 6.3 சதவீதமாக பணவீக்கம் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் விலைவாசி உயர்வை(Inflation) கட்டுப்படுத்துவதே தற்போதைய நோக்கம் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நடப்பாண்டில் உயர்ந்து வரும் நுகர்வோர் விலை பணவீக்கம் – 2022

நடப்பாண்டில் உயர்ந்து வரும் நுகர்வோர் விலை பணவீக்கம் – 2022

India’s rising Retail inflation – Consumer Price Index 2022

கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் உலகளவில் பொருட்கள் மற்றும் சேவை விநியோக சங்கிலியில்(Supply Chain Disruption) இடையூறு ஏற்பட்டிருந்தது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவு மீட்கப்பட்டிருந்தாலும், சரக்கு போக்குவரத்து சேவையில் இன்றளவும் சுணக்கம் காணப்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு வருடங்களாக அரசின் பொருளாதார ஊக்குவிப்பு இருந்திருந்தாலும், தேவை மற்றும் உற்பத்தியில் அதிகமாக இடைவெளி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பணவீக்க விகிதத்திலும் மாற்றம் நிகழந்து வருவது கவனிக்கத்தக்கது.

நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் சில்லரை விலை என்ற நுகர்வோர் விலை(Consumer Price Index) பணவீக்கம் 6.07 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த எட்டு மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். இதற்கு முன்பு 2021ம் வருடத்தின் மே மாதத்தில் 6.30 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் அன்றைய ஆண்டின் அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டிருந்தது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் சில்லறை விலை பணவீக்க விகிதம் குறைந்தபட்ச அளவாக 2019ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும், அதிகபட்ச அளவாக 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 7.61 சதவீதமாகவும் இருந்துள்ளது. 

நடப்பு பிப்ரவரி மாத பணவீக்கம் அதிகரித்ததற்கான காரணமாக காய்கறி, உணவுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வகைகளின் விலை இருந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 16.5 சதவீதமும், இறைச்சி மற்றும் மீன் வகைகள் 7.5 சதவீதமும், காய்கறிகள் 6 சதவீதமும் சொல்லப்பட்ட மாதத்தில் அதிகரித்துள்ளது. 

இது போல ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) விலை 8 சதவீதமும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 8.86 சதவீதமும், வீட்டுமனை 4 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ரிசர்வ் வங்கியின் சில்லறை விலை பணவீக்கத்திற்கான குறுகிய கால இலக்கு 2 சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம்(WPI) 13.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதும், 2020ம் ஆண்டின் மே மாதம் முதல் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

வரக்கூடிய வாரங்களில் உயர்ந்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும். நடப்பு போர் பதற்ற சூழ்நிலையும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையின் விலையை பெருமளவில் மாற்றக்கூடும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

Things to do as an Investor in the Economic or War Crisis 

2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உலக பொருளாதார வீழ்ச்சி, தேவைக்கும்-உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல், பொருட்கள் மற்றும் சேவையை பெறுவதில் இடையூறு, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டது. இதன் மூலம் நாம் புதியதொரு இயல்பு வாழ்க்கையை(New Normal) தொடர வேண்டிய மாற்றம் நிகழ்ந்தது.

கடந்த ஓராண்டாக பொருளாதார நிலை ஓரளவு மேம்பட்டு வந்திருந்தாலும், 2020ம் ஆண்டு உலகளவில் வீழ்ந்த உலக பங்குச்சந்தை குறியீடுகள் வேகமாக மீண்டெழுந்தது. வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட சந்தை காலமாக இவை சொல்லப்படுகிறது. புதிய உச்சத்தை அடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அதிக ஏற்ற-இறக்கத்துடன் பக்கவாட்டில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை குறியீடுகள் பணவீக்க விகிதம் மற்றும் வங்கி வட்டி விகித மாற்றத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது உக்ரைன்-ரஷ்ய போர் நிலையும் தொற்றி கொண்டன. ஒவ்வொரு நாள் வர்த்தகத்தின் ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக ஒவ்வொரு தகவலும் சொல்லப்படுவதுண்டு. நடப்பு சந்தை இறக்கத்திற்கு உக்ரைன்-ரஷ்ய போர் மட்டுமே இப்போது காரணமாக அமைந்து விட்டது.

பொதுவாக நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருப்பதற்கான குறியீடாக அந்நாட்டின் பங்குச்சந்தை, தொழிற்துறை மற்றும் வீட்டுமனை(Realty) வளர்ச்சியை கொண்டிருக்கும். இதுவே பொருளாதார மந்தநிலையில் இருக்கும் போது, மேலே சொல்லப்பட்டவை இறக்கத்திலும், இதற்கு மாறாக தங்கம் மற்றும் கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்கும். அதாவது சுருக்கமாக சந்தை வீழும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது கடன் பத்திரங்களின் தேவை அதிகரிப்பதும் பொருளாதார உலகின் இயல்பு.

எனவே பொருளாதாரத்தில் தேவைக்கும்-இருப்புக்குமான இடைவெளியே பெரும்பாலும் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கிறது. முதலாம் உலக போருக்கு பின்பு, அடுத்தவொரு நிகழ்வு இது போன்று நடைபெறாது என நினைத்திருந்த நிலையில் இரண்டாம் உலகப்போரை இவ்வுலகம் சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. ஜெர்மனி மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலைக்கு(Recession) செல்ல உள்ளதாக அந்நாட்டின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கிறது. உக்ரைன்-ரஷ்ய போர் ஒரு வாரத்தில் முடியுமா, இல்லையெனில் இன்னும் பல காலம் எடுத்து கொள்ளுமா என்பதனை நம்மால் கணிக்க இயலாத ஒன்று.

அதே வேளையில், ஒவ்வொரு நாட்டில் ஏற்பட்டுள்ள கடன் அதிகரிப்பும் அதனை சார்ந்த பணவீக்க விகிதமும் தான் வரக்கூடிய நாட்களில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றையும் நாம் எதுவும் செய்து விட முடியாது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வேலை மத்திய வங்கிக்கும், அரசுக்கும் தான்.

வரக்கூடிய காலகட்டங்கள் நமக்கு மீண்டும் புதியதொரு இயல்பு நிலையை அறிவுறுத்தலாம். குறுகிய காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையின் விலை அதிகரிக்கலாம். பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படலாம். நீண்டகாலத்தில் பொருளாதாரம் ஏற்றமடைய கூடிய வாய்ப்பு தென்பட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகமாக உள்ளது.

இருப்பினும், முதலீட்டாளராக நாம் நம்மால் முடிந்த சில முன்னெடுப்புகளை செய்ய முடியும். 

  • எதிர்வரும் சவால்களை சந்திக்க: உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்குமான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் பேரில் போதுமான டேர்ம் காப்பீடு தொகை, விபத்து காப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மருத்துவ காப்பீட்டை உறுதி செய்துள்ளீர்களா ?
  • வேலையிழப்பு அல்லது தொழிலில் மந்தநிலை ஏற்படக்கூடிய காலத்தை சமாளிக்க குறைந்தது ஆறு மாதம் முதல் இரண்டு வருடத்திற்கு தேவையான அவசர கால நிதியை(உங்களது மாத வருமானத்தின் மடங்குகளில்) தயார் செய்து விட்டீர்களா ?
  • நிதி இலக்குகளுக்கான(Financial Goals) சேமிப்பு மற்றும் முதலீட்டு தொகை தடையேதும் இல்லாமல் செல்கின்றனவா ?
  • பொதுவாக உங்களது நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds) பயன்படுத்துங்கள். அடுத்த தலைமுறைக்கு தேவையான செல்வவளத்தை ஏற்படுத்த நேரடி பங்குகளை(Direct Equity) கவனியுங்கள். குறுகிய கால தேவைகளுக்கு பங்குச்சந்தையை பயன்படுத்த வேண்டாம்.
  • பங்குச்சந்தை இறங்கினால் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதே வேளையில் சிறு துளி பெரு வெள்ளம் போல, சிறுக சிறுக முதலீடு செய்து வாருங்கள். ஒரே நாளில் பணக்காரராக வேண்டும் என்று பங்குச்சந்தையில் உங்களது கைவிரல்களை சுட்டு கொள்ள வேண்டாம்.
  •  எதனையும் நாம் நேர்மறையாக அணுக வேண்டுமென்றாலும், பங்குச்சந்தையில் மட்டும் பங்கு நிறுவனங்களை கண்டறியும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். பைசாவில் இருந்து பத்து ரூபாய்க்கும், நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கும் குறுகிய காலத்தில் ஏற்றமடையும் பங்குகள் அனைத்தும் நல்ல நிறுவன பங்குகள் என்று சொல்லி விட முடியாது.
  • பங்குச்சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறக்கம் கண்டிருக்கும் நாட்களில் பெரும்பாலும் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடைபெற்றுள்ளது. எனவே நாம் இதனை ஒரு வாய்ப்பாக அமைத்து கொள்ள, நல்ல நிறுவன பங்குகளை அலசி ஆராய்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • பங்குகளை அவசரமாக வாங்க வேண்டும் என்ற நிலையை எப்போதும் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதற்கென கிடைக்கும் உள்ளார்ந்த விலையை(Intrinsic or Fair Value) எப்போதும் பரிந்துரையுங்கள். சில நேரங்களில் நல்ல நிறுவன பங்குகள் நாம் நினைக்கக்கூடிய விலையில் கிடைக்கப்பெறாது.
  • இனிவரும் காலங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் என்பதனை மனதில் நிறுத்தி, அஸெட் அலோகேஷன் முறையை கடைபிடியுங்கள். வருடத்தின் எல்லா நாட்களிலும் பங்குச்சந்தை மட்டுமே ஏற்றம் பெறும், தங்கம் எப்போதும் விலையேறும் என எண்ணி விட வேண்டாம். பல முதலீட்டு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்வது, நட்டத்தை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தும்.
  •  சந்தை உச்சத்தில் இருக்கும் போது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு, இறக்கத்தில் வாங்கி வைக்கிறேன் என உங்களால் எப்போதும் சரியாக கணிக்க இயலாது. அஸெட் அலோகேஷன்(Asset Allocation) செய்வதன் மூலம் மட்டுமே, நீங்கள் பெரும்பாலான வாய்ப்புகளை பயன்படுத்த முடியும்.
  • பங்குச்சந்தை அடுத்த சில வருடங்களுக்கு பெரும் வீழ்ச்சியை கண்டால் உங்களது முதலீட்டு உத்தி என்ன ? (நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தும்)
  • போன்சி(Ponzi) போன்ற ஏமாற்று வழிகளின் மூலம் நீங்கள் மிக விரைவாக பணம் சேர்த்து விட முடியும் என நம்புகிறீர்களா, மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தவிர்த்து விட முடியமா என்ன  ?
  • இறுதியாக உங்களது உயிலை(Will) தயார் செய்ய மறவாதீர்கள். இதற்கு வயது வரம்பு பெரிதாக இல்லை. 18 வயது நிரம்பியிருந்து சுயநிலையில் உங்களது உயிலை எழுதலாம். உங்களது காலத்திற்கு பின்பு ஏற்படும் நிதிச்சிக்கலை உயில் எழுதுவதன் மூலம் தவிர்க்கலாம். உலக பொருளாதார மந்தநிலையையோ, பணவீக்கத்தையோ நம்மால் கணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால் நமக்கான பாதுகாப்பையும், நிதி மேம்பாட்டையும் செய்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.01 சதவீதம்

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.01 சதவீதம் 

India’s CPI Retail Inflation in January 2022 – 6.01 Percent

 

சில்லறை விலை பணவீக்கம் என சொல்லப்படும் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம், கடந்த சில மாதங்களாக குறைந்து வந்திருந்த நிலையில் ஜனவரி மாதத்தில் 6 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் முதல் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் 6.01 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

 

அதே வேளையில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(|Unemployment rate) சற்று குறைந்துள்ளது. ஜனவரி மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் நகர்புறத்தில் 8.16 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.84 சதவீதமாகவும் இருந்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.57 சதவீதமாக ஜனவரி மாதத்தில் இருந்துள்ளது. 

 

கடந்த சில மாதங்களாக கிராமப்புறங்களை காட்டிலும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் அதிகரித்ததற்கான காரணமாக உணவுப்பொருட்களின் விலை இருந்துள்ளது. 

 

பருப்பு வகைகள் 3 சதவீதமும், காய்கறிகள் 5.19 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கு பிறகான காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக ஜனவரி மாத விலைவாசி உள்ளது. ஒளி மற்றும் எரிபொருட்களின் விலையும் 9.32 சதவீதமாக அதிகரித்து வந்துள்ளது.

 

துணிமணிகள் மற்றும் காலணிகள் 8.84 சதவீதம், வீட்டுமனை 3.52 சதவீதம் மற்றும் புகையிலை பொருட்கள் 2.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க(Consumer price index) குறியீட்டில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டுமனை 10.7 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு 8.6 சதவீதமும், சுகாதாரம் 5.9 சதவீதம் மற்றும் கல்வி 4.46 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

 

பாரத ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்திற்கான குறுகிய கால இலக்கு 2% முதல் 6% வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட நுகர்வோர் விலை பணவீக்கம் இலக்கை தாண்டியுள்ள நிலையில், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே சொல்லப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் –  ரூ.4,156 கோடி

ஐ.டி.சி. காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் –  ரூ.4,156 கோடி 

ITC reported a Net Profit of Rs.4,156 Crore – Q3FY22 Results

2.89 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம் தனது 2021-22ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மூன்றாம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 16,634 கோடி ரூபாயாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,492 கோடியாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.4,156 கோடியை ஈட்டியுள்ளது. 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வருவாய் 31 சதவீதமும், நிகர லாபம் 12.7 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. சிகரெட்டு, நுகர்வோர் உணவு பொருட்கள், விவசாயம் சார்ந்த தொழில், பேப்பர் பொருட்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் காணப்பட்ட வருவாய் வளர்ச்சி இதன் ஒட்டுமொத்த வருவாயை அதிகரித்துள்ளது.

எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையின் கீழ் சுமார் 45 பிரிவுகளில் 700க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது ஐ.டி.சி. நிறுவனம். உணவுப்பொருட்களில் ஆசிர்வாத் கோதுமை, ITC Master Chef, Sunfeast, Bingo, Yippee, Fabelle, Candyman, சன்ரைஸ் மசாலா, டார்க் பேண்டஸி ஆகியவை இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டுகள்.

Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Mom;s Magic, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique, Savlon ஆகியவை நிறுவனத்தின் மற்ற துறை சார்ந்த பிராண்டுகள். ஐ.டி.சி. நிறுவனத்தின் ஹோட்டல் பிரிவில் கிராண்ட் சோழா, விண்ட்சார், கார்டெனியா மிகவும் பிரபலமானவை.

நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆகியவற்றில் நிறுவனம் திறம்பட நிர்வகித்து வருவதாக தெரிவித்துள்ளது. கார்பன் இல்லாத சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கில் நிறுவனத்தின் தொழில் மேம்பட்டு வருகிறது.

நிறுவனத்திற்கு கடன் எதுவும்(Debt to Equity) பெரிதாக இல்லை. செப்டம்பர் 2021 காலாண்டு முடிவின் படி நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.57,955 கோடி. நிறுவனர்கள்(Promoter Holding) சார்பாக பங்குகள் எதுவும் நேரடியாக இல்லை. இருப்பினும் பொதுவெளியில் அவர்களிடம் குறிப்பிடத்தக்க பங்குகள் இருப்பது கவனிக்கத்தக்கது. அந்நிய முதலீட்டாளர்கள் சார்பில் சுமார் 44 சதவீத பங்குகள் உள்ளது. எல்.ஐ.சி. காப்பீட்டு(LIC India) நிறுவனத்திடம் சுமார் 16 சதவீத பங்குகளும் உள்ளன.

நூறு வருடத்திற்கு மேலான தொழில் அனுபவம் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. சஞ்சீவ் பூரி உள்ளார். 1910ம் ஆண்டு W.D & H.O. Wills நிறுவனத்தால் துவங்கப்பட்ட இம்பீரியல் டொபாகோ கம்பெனி(Imperial Tobacco Company of India) தான் பின்னொரு காலத்தில் ஐ.டி.சி. லிமிடெட் என மாற்றம் பெற்றுள்ளது. புகையிலை தொழிலை ஆரம்ப நிலையாக கொண்டிருந்தாலும், தற்போது நுகர்வோர் உணவுப்பொருட்கள் துறையில் நாட்டின் தவிர்க்க முடியாத நிறுவனமாக ஐ.டி.சி. உருவாகியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிரைமா பிளாஸ்டிக்ஸ் – பங்குச்சந்தை அலசல்

பிரைமா பிளாஸ்டிக்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

Prima Plastics Ltd – Fundamental Analysis – Stocks

பிளாஸ்டிக் நாற்காலிகள் என சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது சுப்ரீம் மற்றும் நீல்கமல்(இந்தியாவில்) சேர்கள் தான். இதற்கு அடுத்தாற் போல நாற்காலி பிராண்டுகளில் பெயர் போன நிறுவனம் பிரைமா பிளாஸ்டிக்ஸ். பிளாஸ்டிக் வார்ப்பட பர்னிச்சர்கள்(Moulded Furniture) தயாரிப்பு பிரிவில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

கடந்த 1993ம் ஆண்டு திரு. மன்கர்லால் பரேக் அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் பிரைமா பிளாஸ்டிக்ஸ். டாமன் நகரத்தை தலைமையிடமாக கொண்டு, தனது முதல் உற்பத்தி பிரிவை துவக்கியது இந்நிறுவனம். பிளாஸ்டிக் சேர்கள், தட்டுகள், காப்பிடப்பட்ட பெட்டி(Insulated Box), காய்கறி மற்றும் பழங்களை வைப்பதற்கான பெட்டிகள், சாலை பாதுகாப்புக்கு தேவையான பிளாஸ்டிக் உபகரணங்கள், குப்பை தொட்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், விடுதிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான இதர பிளாஸ்டிக் வகைகளை உற்பத்தி செய்து வருகிறது.

வெறுமென உற்பத்தியை மட்டும் கொண்டிருக்காமல் விற்பனையில் 20 நாடுகளுக்கும் மேலாக ஏற்றமதியும் செய்து வருகிறது பிரைமா பிளாஸ்டிக்ஸ் நிறுவனம். தனது தொழிலை ஆரம்பித்து 28 வருடங்கள் தான் எனினும், இன்று உலகளவில் ஏழு உற்பத்தி மையங்களையும், 450 விநியோகஸ்தர்கள் மற்றும் 5,500 டீலர்களையும் கொண்டுள்ளது.

மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தனது உற்பத்தி கிளைகளை பரவியுள்ளது இந்நிறுவனம். Firstcry, Pepperfry மற்றும் அமேசான் போன்ற பிரபல இணைய பிராண்டுகளுடன் கைகோர்த்து தனது விற்பனையை செய்து வருகிறது. நிறுவனத்தின் பொருட்கள் பெரும்பாலும், ‘Prima’ என்ற பிராண்டின் கீழ் விற்பனையாகிறது.

1995ம் ஆண்டு பிரைமா பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தனது பொது பங்கு வெளியீட்டை துவங்கியுள்ளது. தற்போது சந்தையில் உள்ள இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 118 கோடி ரூபாய். பங்கு ஒன்றின் விலை 107 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 104 ரூபாயாகவும், முக மதிப்பு(Face value) 10 ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 58 சதவீதமாகவும், கடன்-பங்கு விகிதம் 0.28 ஆகவும் இருக்கிறது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. 2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 119 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் ரூ.15 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 15 கோடி ரூபாய். அதாவது பங்கு ஒன்றுக்கான லாபம் ரூ.13.63(Earning per share).

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த பத்து வருடங்களில் 6 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 19 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு 103 கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.

2002ம் ஆண்டு நிறுவனர் காலமான பிறகு, திரு. பாஸ்கர் மன்கர்லால் பரேக், நிறுவனத்தின் தலைவராகவும், முழுநேர இயக்குனராகவும் உள்ளார். நிறுவனம் துவங்கிய காலத்திலிருந்து நிர்வாக இயக்குனராக திரு. திலீப் மன்கர்லால் பரேக் வகிக்கிறார். மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் தற்போது 13 மடங்குகளில் உள்ளது. பங்கு மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 14 சதவீதமாக இருக்கிறது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு – வெள்ளியில் முதலீடு செய்ய புதிய வாய்ப்பு

India’s First Silver ETF Fund to invest – Investment opportunity 2022

பொதுவாக தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் பங்களிப்பு உற்பத்தி சார்ந்த துறையில் அதிகமாக உள்ளது. தங்கம் அணிகலன்களாக வலம் வந்தால், வெள்ளி தொழிற்துறைக்கு தேவையான முக்கிய மூலப்பொருளாக அமைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருவது பல நூற்றாண்டுகளை கடந்து வந்துள்ளது. வெள்ளியின் பங்களிப்பு தொழிற்துறையில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பங்கு சந்தைகள் சரியும். இதனை சரிக்கட்டும் ஆயுதமாக தங்கமும், வெள்ளியும் உதவும். நிதி சொத்துக்கள்(Financial Assets) வரிசையில் ஏற்கனவே தங்கம் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெள்ளி முதலீட்டிலும் இது சாத்தியப்பட்டுள்ளது.

நடைமுறையில் தங்கம் – அரசு பத்திரமாகவும், சந்தையில் இ.டி.எப். வடிவிலும் மற்றும் பரஸ்பர நிதியின் ஒரு திட்டமாகவும்(SGB, Gold ETF, Gold Fund) கிடைக்கப்பெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வெள்ளி இ.டி.எப். முதலீடு சார்ந்த விதிமுறைகளை செபி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளி மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத முதலீடு இருக்க வேண்டுமென்றும், முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் முதலீடு 99.9 சதவீதம் தூய வெள்ளியாக வாங்குவதற்கு பயன்பட வேண்டும் என விதிமுறை சொல்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரு மியூச்சுவல் பண்டு நிறுவனம் நாட்டின் முதல் சில்வர் இ.டி.எப். பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தாலும், மேலும் இரண்டு நிறுவனங்கள்(Aditya Birla Sun life, Nippon India Mutual Funds) வெள்ளி சார்ந்த இ.டி.எப். திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.

புதிய பண்டு வகையாக(NFO) வரும் ஐ.சி.ஐ.சி.ஐ. சில்வர் இ.டி.எப். திட்டம் ஜனவரி 5 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பதிவுக்கு உள்ளது. பிறகு இதனை நாம் வெளிச்சந்தையிலும் வாங்கி கொள்ளலாம். உள்நாட்டு விலையில் உள்ள வெள்ளியின் செயல்திறனுக்கு ஏற்ப, Silver ETF விலையும் மாறுபடும்.

வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு இது புதிய மற்றும் எளிமையான வாய்ப்பாக காணப்படுகிறது. சில்வர் ETF மூலம் தர தூய்மை, பாதுகாப்பு மற்றும் விலை ஆகியவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ.100 (NFO) மட்டுமே.

இனி, வெள்ளியை நாம் பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு திட்டங்கள் வாயிலாகவும் வாங்கி கொள்ளலாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

Best 5 Funds for you to invest in 2022 – Mutual Fund investments

கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் அபரிதமாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பு இருந்ததென்றால், அது 2020ம் ஆண்டின் கொரோனா கால துவக்கம் தான். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகளவில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார வீழ்ச்சி, பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை தந்தது எனலாம்.

மீண்டும் ஒரு பெருத்த வீழ்ச்சி உடனடியாக ஏற்படுமா என்றால், உலக சந்தையை கணிக்க பெரும் பணக்காரரர்களாலும், ஆகச்சிறந்த பொருளாதார வல்லுனர்களாலும் முடியாது. அதே வேளையில், அவர்களால் அடிப்படை பொருளாதார காரணிகளை புரிந்து எச்சரிக்கை செய்ய முடியும். அதிக ஏற்றமிருந்தால் இறக்கம் ஏற்படுவது உறுதி, இது போல இறக்கம் என ஒன்றிருந்தால் ஏற்றமும் சாத்தியமே.

பங்கு முதலீட்டில் பெரும்பாலோர் தோற்பது இரண்டு காரணிகளால் தான் – குறுகிய காலத்தில் பேராசை மற்றும் சந்தையை கணிக்கிறேன் என தவறான முதலீட்டு முடிவை எடுப்பது. எந்தவித சலனமும் இல்லாமல் நீண்ட காலத்தில் தொடர் முதலீடு செய்து வருபவர்களே எப்போதும் வெற்றி வாகை சூடுகின்றனர்.

‘ பங்கு முதலீட்டை என்னால் சரிவர கையாள முடியவில்லை’ என்பவர்கள் அதற்கென துறை சார்ந்த ஆலோசகர்களை வைத்து கொள்ளலாம். இதற்கான கட்டணமும் உண்டு. இலவசமாக உங்களுக்கு யாரும் பெரும் செல்வத்தை அளித்து விட முடியாது. எனவே ஆலோசனை பெறுபவர்களிடமும் கவனம் வேண்டும்.

சந்தையில் நேரடியாக முதலீடு செய்து கண்காணிக்க நேரமில்லை என்பவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) செய்யப்படும் முதலீடு உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு துணை புரிய கால அளவுகளை(Goal Period) ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்கு லிக்விட் மற்றும் கடன் பண்டுகள்(Liquid and Debt Mutual Funds), நடுத்தர கால தேவைகளுக்கு ஹைபிரிட் மற்றும் மல்டி அஸெட் பண்டுகள்(Hybrid and Multi Asset), நீண்ட காலத்திற்கு பங்கு சார்ந்த பண்டுகள்(Equity oriented) என பிரித்து முதலீடு செய்யலாம்.

அஸெட் அலோகேஷன் முறையில் பிரித்து முதலீடு செய்யும் போது சந்தை ஏற்ற-இறக்கத்தை பற்றிய கவலையில்லை. தங்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் நமது முதலீட்டை பெரிதாக பாதிக்காது. அது போன்ற கலவையுடன் உள்ள ஐந்து பண்டுகள் உங்களுக்காக. கடந்த காலங்களில் இந்த பண்டுகள் அளித்த வருவாய், பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் ரிஸ்க் தன்மை ஆகியவை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் குறிப்பிடப்பட்ட கடந்த கால வருவாய், எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் இவை பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்கும். சொல்லப்பட்ட பண்டுகள் அனைத்தும் பணப்புழக்கம்(Liquidity), முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification & Asset Allocation), வரி சேமிப்பு, உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்பு(Global Equity exposure) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

  • Aditya Birla Sun Life(ABSL) Gold Fund

  • HDFC Multi Asset Fund

  • PGIM India Midcap Opportunities Fund

  • Mirae Asset Tax Saver Fund

  • Parag Parikh(PPFAS) Flexi Cap Fund

Mutual funds 2022

வரக்கூடிய 2022ம் வருடம் நமக்கு எப்படியிருக்கும் என நம்மால் கணிக்க இயலாது. நாமும் ஒவ்வொரு வருடமும் புதிய இலக்குகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். 2022ம் ஆண்டுக்கான உங்கள் நிதி இலக்குகளுக்கு சொல்லப்பட்ட பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். பின்னாளில் இந்த முதலீட்டு பெருக்கம் உங்களை நிதி சார்ந்து பாதுகாக்கும்.

குறிப்பு: மேலே உள்ள பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர் முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

How to track the Stocks(Shares) fundamentally ?

பங்குச்சந்தையில் நாம் காணும் அனைத்து பங்குகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் வர்த்தகமாகும் என சொல்லிவிட முடியாது. பொதுவாக லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் நிறுவன பங்குகள் பெரும்பாலும் அனைத்து நாட்களிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கும். அதே வேளையில் ஸ்மால் கேப் பங்குகள் அப்படியல்ல. அவற்றில் வர்த்தக புழக்கம்(Liquidity) பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) அதிகமாக இருத்தல், பெரு நிறுவன முதலீட்டாளர்களிடம்(Institutional Investors) கைவசம் இல்லாதது மற்றும் பொதுவெளியில் மிகவும் குறைவான பங்குகளே அமைந்திருப்பது அதன் வர்த்தக புழக்கத்திற்கு காரணமாக அமையும். இருப்பினும் ‘மல்டி பேக்கர்(Multibagger)’ என சொல்லக்கூடிய பல மடங்கு லாபத்தை அளிக்கவல்லது இந்த ஸ்மால் கேப் நிறுவன பங்குகள்.

அதிக பங்குகளை கொண்டு வர்த்தகமாகும் அல்லது ஒரே நாளில் வர்த்தக அளவை அதிகமாக கொண்டிருக்கும் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்தில் வருவாயை அளிக்கும் என நாம் சொல்ல இயலாது. இதற்கு உதாரணமாக யூனிடெக், ஜே.பி.அசோசியேட்ஸ், யெஸ் பேங்க்,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வோடபோன், ஜெட் ஏர்வேஸ் போன்ற பங்குகளை சொல்லலாம். நாள் வணிகத்துக்கு(Day Trading) இவை ஏற்றவையாக தெரிந்தாலும், உண்மையில் முதலீடு செய்பவர்களுக்கு நட்டத்தை மட்டும் தான் கொடுத்துள்ளன.

“A stock is not just a ticker symbol or an electronic blip; it is an ownership interest in an actual business, with an underlying value that does not depend on its share price.” – Benjamin Graham(Father of Value Investing), The Intelligent Investor

“ பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் என்பது வெறும் எண்கள் அல்ல. அவை ஒரு நிறுவனத்தின் தொழிலில் உங்களுக்கான உரிமையாகும். உண்மையான தொழிலின் மதிப்பு என்பது அதன் பங்கு விலையை சார்ந்திருக்க  வேண்டும் என்று அவசியமில்லை “ என முதலீட்டின் தந்தை என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் கூறுகிறார்.

நீண்டகாலத்தில் பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் செல்வத்தை ஏற்படுத்த வெறுமனே பங்குகளை வாங்கி விட்டால் மட்டும் போதாது. அதனை நமது சொந்த தொழிலை போல கண்காணிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • காலாண்டு முடிவுகளும், ஆண்டு பொதுக்கூட்டமும்:

சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் தனது தொழிலுக்கான காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை வெளியிட வேண்டியது அவசியம். இது அவர்களுக்கானதல்ல, நம்மை போன்ற முதலீட்டாளர்கள், நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் நிதிநிலை  அறிக்கைகளை(Financial Statements) அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. நிறுவனம் பின்னொரு காலத்தில் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாம் இது போன்ற முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் விற்பனையும், லாபமும் ஒவ்வொரு காலாண்டிலும் எப்படி உள்ளது, இதர வருமானம்(Other income) மட்டுமே அதிகரித்து வருகிறதா, நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு, நிறுவனர்களின் பங்கு அடமானம், பங்குதாரர்களின் பங்களிப்பு(Shareholding Pattern), டிவிடெண்ட் அறிவிக்கப்படும் தேதி என அனைத்து தகவல்களையும் ஒருசேர காலாண்டு முடிவுகளில் பெற்று விடலாம். இதன் வாயிலாக பிற்காலத்தில் நமது முதலீட்டு முடிவை பரிசீலிக்க இவை உதவும்.

காலாண்டு முடிவுகளும், நிதியாண்டுக்கான நிதி அறிக்கைகளும் இணையத்தில்(BSE, NSE, Company website) எப்போதும் கிடைக்கப்பெறுகிறது. அதனை சரியான காலத்தில் வாசிப்பது முதலீட்டாளரான நமது கடமை. நிறுவனம் சார்பாக ஆண்டுக்கொரு முறை பங்குதாரர்கள் கூட்டமும்(Annual General Meeting – AGM) நடைபெறுகிறது. இணையவழி மற்றும் நேரடியாக சென்றும் இது போன்ற நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டு, நிறுவனத்தின் மீது நமக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தொழில் சார்ந்த பொதுவான கேள்விகளையும் நாம் அங்கே கேட்கலாம்.

  • வாக்களிப்பதுஉங்கள் கடமை, பங்குச்சந்தையிலும்: 

ஒரு பங்குதாரராக நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கும், தொழில் கொள்கைகளை தீர்மானிக்கவும் நமக்கான வாக்களிக்கும் உரிமை பங்குச்சந்தையில் உண்டு. “ என்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் “ என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) மற்றும் தொழில் ஆதிக்கம் பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவன பங்குகளில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.

இயக்குனர் குழு மற்றும் நிறுவன பொறுப்புகளில் ஒருவரை நியமனம் செய்தல், நீக்குதல், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றிற்கு உங்களது வாக்கு ஒரு நிறுவனத்திற்கு அவசியமானது. நீங்கள் வாக்களிக்க தவறும் நிலையில், முடிவுகளும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் டாட்டா குழுமத்தில் மிஸ்திரி குடும்ப பங்குகளின் தாக்கம், வேதாந்தா நிறுவனம் பங்குச்சந்தையை விட்டு வெளியேற முடியாமல் சென்ற தருணம், யெஸ் வங்கி பங்குகளின் முடக்கம், நிறுவனங்களின் பங்குகளை திரும்ப பெறும்(Buyback of Shares) முறை, போனஸ் பங்குகள், புதிய பங்கு வெளியீடு என பல்வேறு செயல்பாடுகளுக்கு வாக்களிப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும்.

வாக்குகளை நேரடியாக அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இணைய வழியிலான(E-Voting) வாக்களிக்கும் வசதியும் இன்று நடைமுறையில் உண்டு. இது போன்ற சேவையை NSDL மற்றும் CDSL தளங்கள் நமக்காக செய்து கொடுக்கிறது. இதற்கான சேவை கட்டணத்தை(Brokerage & DP Charges) நாம் ஏற்கனவே பங்குகளை வாங்கும் போதே அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட்டோம் என்பதனை நினைவில் கொள்ளவும்.

  • நிறுவனங்களை நேரடியாக காணுங்கள், தொழிற்சாலைக்கு செல்லுங்கள்:

ஒரு நிறுவன பங்கை நாம் இணையம் வழியாக வாங்கி விட்டால், அதனோடு பங்கு முதலீடு முடிந்து விடப்போவதில்லை. இணையம் மட்டும் பங்கு முதலீட்டுக்கான வாழ்க்கையல்ல. அவை நமக்கான எளிய கட்டமைப்பு. நீங்கள் குடியிருக்கும் அல்லது வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில், நீங்கள் வாங்கிய பங்கு நிறுவன அலுவலகம் அல்லது தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கே சென்று பாருங்கள்.

நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவை எப்படி என நேரடியாக கண்காணியுங்கள். முடிந்தால், நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவிடம் அனுமதி பெற்று அவர்களது தொழிற்சாலையை சுற்றி பாருங்கள். இதற்கான வசதியை ஒரு நிறுவனத்தின் கம்பெனி செயலாளர்(Company Secretary) பொதுவாக செய்து கொடுப்பார். நிறுவனம் சார்ந்த ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் அவருக்கு மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் எந்த தொழிலையும், அலுவலகத்தையும் கொண்டிருக்காமல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஷெல் நிறுவனங்களும்(Shell companies) உண்டு என்பது சந்தை வரலாறு. சந்தையில் அவற்றின் பங்கு விலை நாள்தோறும் ஏற்றமடைகிறது என்ற ஒற்றை காரணத்திற்காக பங்குகளை வாங்காமல், நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளை கண்காணிப்பதும் அவசியம்.

நண்பர்களோடு சுற்றுலா செல்வது போல, ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு நிறுவனத்தை நேரடியாக சுற்றி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் சேவைகள்:

நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகள் எப்.எம்.சி.ஜி.(FMCG) பொருட்களை விற்கும்(Retail & Super Market) கடைகளாக தான் இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை எப்.எம்.சி.ஜி. துறையில் காணப்படும் பிரபலமான பொருட்கள் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பொருட்களாக தான் இருக்கும். உதாரணமாக இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., டாபர், கோத்ரேஜ், மாரிகோ, கோல்கேட், பஜாஜ், டி-மார்ட் போன்ற நிறுவனங்கள் தான். நமது நகரில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் தென்படும் பிராண்டுகளின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். பேச்சுவாக்கில் கடை உரிமையாளர் அல்லது விற்பனை மேலாளரிடம் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை எப்படி உள்ளதென அறிய முற்படலாம். இதற்கெல்லாம் நாம் நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ரியல் எஸ்டேட் முதலீட்டில் விசாரிக்கிறோமே !).

  • துறை சார்ந்த நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்:

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பல துறைகளை சார்ந்தவை. வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், வாகனம், நுகர்வோர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள்(Consumer Durables), எண்ணெய் சுத்திகரிப்பு, எரிசக்தி, விவசாயம், கல்வி, மின்னணு பொருட்கள், பொழுதுபோக்கு, மருத்துவம், கட்டுமானம்,காப்பீடு, காலணிகள், ஏற்றுமதி, ஜவுளி, தொலைத்தொடர்பு என பல துறைகளை உள்ளடக்கியவை.

நீங்கள் தொழில் செய்யும் நபராக இருந்தால், உங்களது துறையில் உள்ள சாதக-பாதகங்கள் உங்களுக்கு பொதுவாக தெரிந்திருக்கும். பொருளாதார மந்தநிலை காலங்களில் உங்களது தொழில் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும், அரசு கொள்கைகள் உங்கள் தொழிலுக்கு சாதகமாக உள்ளதா எனும் விஷயங்கள் உங்களது முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள். இதனை நீங்கள் பங்குச்சந்தையிலும் பயன்படுத்தலாம்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்கள் துறையில் உள்ள சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் துறை சார்ந்த ஆலோசனைகள், விவாதங்களை முன் வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் உங்களது பங்கு முதலீட்டுக்கு உதவும்.

நண்பர் ஒருவர் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) துறையின் முக்கிய பதவியில் வேலை பார்த்து வந்தால் அவரிடம் துறை சார்ந்த வளர்ச்சியையும், எதிர்காலத்தில் இவற்றின் தாக்கம் எப்படி உள்ளதென கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இன்று பங்கு முதலீடு சார்ந்த கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் வாயிலாக கிளப் ஹவுஸ், முகநூல்(Facebook Events), வலைப்பக்க நிரல்கள்(Webinars) நாள்தோறும் நடைபெறுகின்றன. இவற்றில் கலந்து கொண்டு பங்கு சார்ந்த தொழில் புரிதலை ஏற்படுத்தி கொள்ளலாம். அதே வேளையில் நாம் அதிகாரபூர்வ மற்றும் அரசு அங்கீகரிக்கும் நிறுவன தளம் மற்றும் ஆலோசகர்களிடம் தகவல்களை பெறுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்சப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் பரிந்துரைத்தார் என பங்குகளை வாங்கி பின்னர் நட்டமடைவதை தவிர்க்க மேலே சொன்ன விஷயங்கள் நமக்கு நீண்டகாலத்தில் பயனளிக்கும். வெறுமென ஊக விஷயங்களுக்கு பின்னால் நகர்வதை விட, நாமே நமது தொழிலுக்கான(பங்கு முதலீடு) அக்கறையை கொண்டிருப்பது நலம்.

பங்குகளை கண்காணிக்க நேரமில்லை என சொல்பவர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Mutual Funds) உள்ளது. உங்களுக்காக ஒரு பண்ட் மேனேஜர் அங்கே நிர்வகிக்க தயாராக உள்ளார். நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு செல்வமீட்டலாம்.

பங்குகள் உங்களின் செல்ல(செல்வ) குழந்தைகள், அவற்றை வளரும் போது நீங்கள் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தால், பின்னொரு காலத்தில் அவை உங்களை கவனித்து கொள்ளும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com