All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

மீட்கப்பட்ட நிறுவனங்கள், துணிச்சலான பங்குகள் – இந்த வார நிகழ்ச்சி நிரல்

மீட்கப்பட்ட நிறுவனங்கள், துணிச்சலான பங்குகள் – இந்த வார நிகழ்ச்சி நிரல் 

Rising up from the Ashes – Bankruptcy to Brave – Webinar Meet

பங்குச்சந்தையில் பணம் பண்ணுவது எளிமையாக தெரிந்தாலும், தொழிலுக்கான அடிப்படை தன்மைகளை அறியாமல் ஒரு நிறுவனத்தை அவ்வளவு எளிதாக எடை போட்டு விட முடியாது. நூறு வருட அனுபவம் கொண்ட நிறுவனங்கள், தங்களை புதிய தொழில்நுட்பம் மற்றும் மாற்றத்திற்கு உட்படுத்தாத நிலையில் இன்று காணாமல் போயுள்ளன.

2008ம் ஆண்டு வாக்கில் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்த திரு. அனில் அம்பானி, இன்று தனது பெரும்பாலான நிறுவனங்களை அடகு வைத்து திவால் நிலைக்கு சென்று விட்டார்(உங்கள் செல்வத்தை அழிக்கும் பங்குச்சந்தையின் கதை)

. சொல்லப்பட்ட வருடத்தில் பங்கு ஒன்று 800 ரூபாய்க்கு மேலாக வர்த்தகமாகியிருந்த நிலையில், நடப்பு 2021ம் வருடத்தில் இந்த பங்கு 2 ரூபாய்க்கு குறைவாக வர்த்தகமாகி வருகிறது.

இதற்கு காரணமாக சொல்லப்படுவது தொழிலில் அடைந்த தோல்வி – நிர்வாக குறைபாடு, அதிக கடன், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, தொழில்நுட்பத்தில் தவறான அணுகுமுறை ஆகியவை தான். இது போன்ற ஏராளமான நிறுவனங்களை நாம் உதாரணமாக சொல்லலாம். அரசு பொதுத்துறை நிறுவனங்கள் திவாலானால், அதனை களைய அரசு செயல்படும். ஆனால் தனியார் நிறுவனங்களின் செயல்பாடு அவ்வாறு இருப்பதில்லை. யாரேனும் அந்த நிறுவனத்தின் தொழிலை கையகப்படுத்த வேண்டும்.

அதே 2008ம் வருடத்தில் பெரிதும் பிரபலமாகாத மற்றொரு சகோதரர் திரு. முகேஷ் அம்பானி, இன்று நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடமும், உலகளவில் முதல் பத்து இடங்களுக்குள் அங்கம் வகிக்கிறார். எப்படி இருப்பினும், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் சரிவர தொழில் புரியவில்லை என்றால், அது முதலீட்டாளர்களுக்கு தான் நட்டம்.

இன்னும் சில நிறுவனங்கள் திவால் நிலைக்கு அருகில் சென்றிருந்தும், பின்பு துணிச்சலாக மீட்கப்பட்டு இன்று முதலீட்டாளர்கள் வரவேற்கும் பங்குகளாக மாறியுள்ளன. அதன் அடிப்படை பகுப்பாய்வு காரணிகளும்(Fundamental Parameters) சிறப்பாக உள்ளன. ஆனால் இது போன்ற நிறுவனங்களை நாம் எளிமையாக கண்டுபிடித்து விட முடியாது.

மீட்கப்பட்ட நிறுவனங்களை பற்றியும், துணிச்சலான அந்த காரணத்தையும் அறிவோம், வாங்க…

இணைய வழியிலான நிகழ்ச்சி நிரல்(Webinar):

  • 3 நிறுவன பங்குகள் & மூன்று வெவ்வேறு துறைகள்
  • பங்கு முதலீட்டு போர்ட்போலியோ(Stock Portfolio) எவ்வாறு இருக்க வேண்டும் ?
  • முதலீட்டாளர்களுக்கான ஆறு முதலீட்டு ரகசியங்கள்
  • மீட்கப்பட்ட நிறுவனங்களை கண்டறிவது எப்படி ?
  • புதிய திட்டங்களும், முதலீட்டு கற்றலும்
பதிவுக்கு:  https://imjo.in/N3sGmA

பதிவுக்கு பின், நிகழ்ச்சிக்கான இணைப்பு உங்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பொறுப்பு-துறப்பு:

இந்த நிகழ்ச்சி நிரல் பங்குச்சந்தை அடிப்படை கற்றலுக்கான இணைப்பு மட்டுமே. இங்கே எந்தவொரு பங்குகளும் பரிந்துரைக்கப்படாது, அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) கொண்டு அலசப்படும் பங்குகள் விளக்கத்திற்கு மட்டுமே. முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உயர்ந்து வரும் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – மார்ச் 2021

உயர்ந்து வரும் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – மார்ச் 2021

Rising Retail Inflation – Consumer Price Index India – March 2021

கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் பணவீக்கம், சில்லரை பணவீக்க விகித அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இதற்கு முன்பு மொத்த விலை பணவீக்க(Wholesale Price Index – WPI) அளவுகளை கொண்டு கணக்கிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சில்லரை விலை பணவீக்கம் 2012ம் ஆண்டில் 100 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் துவங்கப்பட்டது.

சில்லரை விலை பணவீக்க அளவு மார்ச் 2021 முடிவில் 156.8 புள்ளிகளாக இருந்துள்ளது. அதாவது நாட்டின் சில்லரை அல்லது நுகர்வோர் விலை பணவீக்க விகிதம்(CPI) கடந்த மாத இறுதியில் 5.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு ஜனவரி மாதத்தில் இது 4.06 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

சந்தை எதிர்பார்த்த அளவுக்கு மேலாக தற்போதைய விலைவாசி விகிதம் இருந்துள்ளது. உணவுப்பொருட்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலையேற்றத்தால் மார்ச் மாதத்தில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. உணவு பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.87 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் முடிவில் 4.94 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

பருப்பு வகைகளின் விலை 13 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்து 4.83 சதவீதமாக உள்ளது. எரிபொருட்களின் விலை 3.53 சதவீதத்திலிருந்து 4.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது போல துணிமணிகள் மற்றும் காலணிகள் 4.21 சதவீதத்திலிருந்து 4.41 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டுமனை மற்றும் இதர பிரிவுகளின் சேவைகள் சற்று உயர்ந்திருந்தாலும், புகையிலை பொருட்களின் விலை மார்ச் மாத முடிவில் 10.70 சதவீதத்திலிருந்து 9.81 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டுள்ளது. எனினும் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 2-6 சதவீதம் என்ற இலக்கிற்குள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சில்லரை பணவீக்கத்தில் இடம் பெற்றிருக்கும் பொருட்கள் மற்றும் சேவையில், பெரும்பாலும் உணவுப்பொருட்களின் பங்களிப்பு தான் அதிகமாக உள்ளது. உணவுப்பொருட்கள் 45.86 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.6 சதவீதமும், சுகாதாரம் 5.89 சதவீதம் மற்றும் வீட்டுமனை 10 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.9,246 கோடி

டி.சி.எஸ். நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.9,246 கோடி 

TCS reported a Net profit of Rs. 9,246 Crore in Q4FY21

தகவல் தொழில்நுட்ப துறையில் நாட்டின் முதன்மை நிறுவனமாக விளங்கும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்டது. இதன் முக்கிய வாடிக்கையாளர்களாக உலகின் தலைசிறந்த நிறுவனங்களான கூகுள், அமேசான், அடோப், ஆரக்கிள், இன்டெல், ஆப்பிள், போஸ்ச், ஐ.பி.எம். போன்றவை உள்ளன.

நிறுவனத்தின் முதல் 50 வாடிக்கையாளர்கள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டுகிறது டி.சி.எஸ். டாட்டா குழுமத்தை சேர்ந்த டி.சி.எஸ். நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 4.7 லட்சம். இவற்றில் பெண்களின் பங்களிப்பு 37 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் வங்கிகள், நிதி சேவை மற்றும் காப்பீட்டு துறையின்(BFSI) மூலம் பெறப்படுகிறது. டி.சி.எஸ். நேற்று(12-04-2021) தனது 2020-21ம் நிதியாண்டுக்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. மார்ச் 2021 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 43,705 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 30,904 கோடியாகவும் இருந்துள்ளது.

இயக்க லாபம்(Operating Profit) ரூ.12,801 கோடியாகவும், இதர வருமானம் 931 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 12,527 கோடி ரூபாயாக உள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில்(Quarterly results) நிகர லாபம் ரூ.9,246 கோடி. அதாவது பங்கு ஒன்றின் மீதான வருவாய்(EPS) 25 ரூபாயாக இருந்துள்ளது.

முந்தைய மார்ச் 2020 காலாண்டுடன் ஒப்பிடும் போது தற்போதைய வருவாய் 9.5 சதவீதமும், நிகர லாபம் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக காணும் போது நிறுவனத்தின் வருவாய் ரூ.1,64,177 கோடியாகவும், நிகர லாபம் ரூ.32,430 கோடியாகவும் உள்ளது. கடந்த 2019-20ம் வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த வருவாய் 4.6 சதவீத ஏற்றமடைந்துள்ளது. அதே வேளையில் நிகர லாபத்தில் பெரிதான மாற்றமில்லை.

மார்ச் 2021ம் நிதியாண்டு முடிவில் இருப்புநிலை கையிருப்பு(Balance sheet Reserves) 86,063 கோடி ரூபாய். பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஒரு வருடத்தில் 39 சதவீதமாக உள்ளது. வருவாய் வளர்ச்சியை காணும் போது, கடந்த பத்து வருட காலத்தில் 16 சதவீதமாக இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான மூன்று முதலீட்டு உத்திகள்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான மூன்று முதலீட்டு உத்திகள் 

Investing Strategies for the Equity Investors

பங்குச்சந்தையில் குறுகிய கால முதலீட்டாளர்களை விட நீண்ட கால முதலீட்டாளராக இருப்பது அப்படி ஒன்றும் கடினமான வேலையல்ல. அதனால் தான் திருவாளர் வாரன் பப்பெட் அவர்கள், ‘யாரும் மெதுவாக அல்லது பொறுமையாக பணக்காரராக விரும்புவதில்லை’ என்கிறார். நீண்ட காலத்தில் காத்திருந்து செல்வத்தை ஏற்படுத்த சந்தையில் காணப்படும் இரைச்சல்களை(Daily News noise) கண்டுகொள்ளாமல் இருப்பதும், சற்று பொறுமையும் இருந்தால் போதும். பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamentals) பூர்த்தி செய்யும் நல்ல நிறுவன பங்குகள் குறுகிய காலத்தில் ஏற்றம் பெறாவிட்டாலும், நீண்டகாலத்தில் ஒரு முதலீட்டாளர் எதிர்பார்ப்பதை காட்டிலும் நல்ல வருவாயை அளித்துள்ளது வரலாற்று சான்று.

உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., விப்ரோ போன்ற பெரு நிறுவனங்கள் சில வருடங்கள் பக்கவாட்டு விலையில் மட்டுமே நகர்ந்ததை சொல்லலாம். அந்த சமயத்தில் மற்ற நிறுவன பங்குகள் பெரிய ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டாலும், நாம் சொன்ன பெரு நிறுவன பங்குகள் தொழிலில் வளர்ச்சி கண்டிருந்தும், பங்கு விலையில் அதிகம் ஏற்றம் பெறாமல் இருந்தன. இருப்பினும் அதற்கான சுழற்சி கால முறை வந்த சமயங்களில் அவை இன்று முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தை அளித்துள்ளன.

முதலீட்டுக்கான உத்தி(Investing Strategy) எனும் போது நீண்டகால முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று…

  • இரைச்சல்களுக்கு செவி சாய்க்காதீர்கள் – சந்தையில் அவ்வப்போது நிகழும் சலசலப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நீண்டகால நோக்கில் முதலீடு செய்து வருவது நிதி இலக்கு சார்ந்த நன்மையை அளிக்கும். நிறுவனத்திற்கு ஒரு ஆர்டர் வந்துள்ளது என அவசரமாக ஒரு நிறுவன பங்கில் முதலீடு செய்து வருவது, பிரபலமான பெரு முதலீட்டாளர் ஒருவர் இந்த பங்கில் முதலீடு செய்கிறார் என நாமும் முந்தி கொள்வது, கடந்த சில வாரங்களாக ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை நாள்தோறும் விலையேற்றம் பெறுகிறது என முதலீடு செய்வது, அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யாத சிறு மற்றும் குறு நிறுவன பங்குகளில்(Penny Stocks) விலை குறைவாக இருக்கிறதே, வாங்கிய சில நாட்களில் இரட்டிப்பு லாபம் பார்த்து விடலாம் என சூதாடுவது போன்ற வேலைகளை நாம் செய்ய வேண்டாம்.
  •  உங்களது ரிஸ்க் தன்மையை புரிந்து கொள்ளுங்கள் – நம்மால் எந்தளவு ரிஸ்க் தன்மையை எடுக்க  முடியுமோ அந்தளவு தான் நமது முதலீட்டு போர்ட்போலியோ முறையும் இருக்க வேண்டும். இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் திரு. ராகேஷ் ஜூன்ஜூன்வாலா என்னென்ன பங்குகளை தனது போர்ட்போலியோவில் வைத்திருக்கிறாரோ அதனையே நாமும் வாங்கி வைத்திருக்க நினைப்பது, பெருத்த இழப்பை தான் நமக்கு தரும். அவரது முதலீட்டு முடிவையும், ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அவர் பங்கேற்கும் உத்தியையும் நாம் பின்பற்ற முடியாது. ஒரே நாளில் ரூ.5,000 கோடியை இழப்பதற்கு அவர் தயாராக இருப்பார். ஆனால், நாம் ?
  • அடிப்படை கற்றலை எப்போதும் மேற்கொள்ள வேண்டும் –  எந்த துறையை அல்லது பங்குகளை நம்மால் புரிந்து கொள்ள முடியுமோ அவற்றில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். புரிந்து கொள்ள முடியவில்லை எனில், கற்று கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு பங்குகளை அலச நேரமில்லா விட்டால், பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் பங்கு சார்ந்த முதலீடு செய்து வருவது போதுமானது. நீண்ட கால முதலீட்டில் நட்டம் அல்லது இழப்பு என்ற நிலை எப்போதும் இல்லை. (நீங்களாகவே தவறான பங்குகளை, தவறான விலையில் வாங்கி  பின்னர் விற்றால் மட்டுமே அது நட்டம் ). எனவே கற்றலுக்கு முக்கியத்துவம் தாருங்கள். உங்களுக்கு அருகில் ஏதேனும் நிதி அல்லது பங்குச்சந்தை சார்ந்த கூட்டம் நடைபெற்றால், அவற்றில் கலந்து கொண்டு அடிப்படை கல்வியை கற்று கொள்ளலாம். இணையம் வழியாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று நமது பங்குச்சந்தை சார்ந்த அறிவை பெருக்கி கொள்ளலாம். (எச்சரிக்கை: அதற்காக சிறு முதலீட்டை கொண்டு லட்சங்களாகவும், கோடிகளாகவும் மாற்றி தருகிறேன் என்ற மோசடி பேர்வழிகளிடம் மாட்டி கொள்ளாதீர்கள்) 

நீண்ட கால முதலீட்டாளர் என சொல்லும் போது அது பங்குச்சந்தைக்கு மட்டுமே இல்லை. பொருளாதார மந்தநிலை காலங்களை சமாளிக்க மற்ற முதலீட்டு சாதனங்களை தேர்ந்தெடுக்கும் அஸெட் அலோகேஷன்(Asset Allocation) முறையை பின்பற்றுவதும் அவசியம். நிதி சார்ந்த பாதுகாப்பு முறையை(டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, அவசர கால நிதி, கடனில்லா தன்மை, உடல்நலம்), சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு உறுதி செய்திருந்தால் நல்லது. பங்குகள், கடன் பத்திரங்கள், வீட்டுமனை, தங்கம், ரொக்கம் மற்றும் பிற முதலீட்டு சாதனங்கள் என முதலீட்டு பரவலாக்கத்தை கொண்டிருப்பது நல்லது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதாரத்தில் அடுத்தகட்ட நிலை என்ன ? மத்திய ரிசர்வ் வங்கி

நாட்டின் பொருளாதாரத்தில் அடுத்தகட்ட நிலை என்ன ? மத்திய ரிசர்வ் வங்கி 

REPO Rate unchanged, the next step on Nation’s Growth – RBI Monetary Policy

 

கடந்த திங்கட்கிழமை(05-04-2021) மத்திய நிதிக்கொள்கை குழு சார்பில் நடைபெற்ற கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. கூட்டத்தின் முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் சார்ந்த தகவலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த அறிக்கைகளும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்டது.

 

தொடர்ச்சியாக ஐந்தாவது முறை வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. நடப்பில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. இது போல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும்(Reverse REPO) எந்த மாற்றமுமின்றி 3.35 சதவீதமாக தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.

 

நீடித்த அடிப்படையில் வளர்ச்சியை தக்கவைக்க தேவையான அளவிற்கு நிலைப்பாட்டை தொடரவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் நாட்டின் பணவீக்கம் ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம் எனவும், அதனை சார்ந்து தான் தற்போதைய வங்கி வட்டி விகித முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாரத ரிசர்வ் வங்கி(RBI) கூறியுள்ளது.

 

நடப்பில் காணப்படும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிகமாகி வரும் நிலையில், தடுப்பூசி திட்டம் சற்று சாதகமாக உள்ளது. எனினும் வரும் காலங்களை எச்சரிக்கை தன்மையாக கொண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் சார்ந்த அறிக்கைகள் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

பிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம்(CPI Retail Inflation) 5.03 சதவீதமாக சொல்லப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) 5.2 சதவீதமாக இருக்கும் எனவும், ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும் இதே அளவு தொடரும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

2021-22ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சற்று குறைந்து 4.4 சதவீதமாகவும், நான்காம் காலாண்டில் இது 5.1 சதவீதமாக அதிகரிக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2025-26ம் நிதி ஆண்டின் மார்ச் மாதம் வரை பணவீக்க இலக்கு 2-6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என நிதிக்கொள்கை குழு கூட்ட முடிவில் சொல்லப்பட்டுள்ளது.

 

Consumer Confidence - CI - RBI Policy April 2021

 

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் பணவீக்க விகிதம், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட சற்று அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் காணப்படும் சந்தை பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியதும் இதற்கு காரணமாக உள்ளது. கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது, நடப்பில் உலக பங்குச்சந்தைகளும், அரசு பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. உலகளவில் காணப்படும் ஒருவித நிலையற்ற தன்மையும், சந்தை மதிப்பு ஏற்றமும் தற்போது விற்பனை அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது. 

 

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான பொருளாதார ஊக்குவிப்பு காரணமாக, வரக்கூடிய காலத்தில் நாட்டின் வளர்ச்சி சாதகமான தன்மையை கொண்டிருக்கும் என மத்திய வங்கி கூறியுள்ளது. இரண்டாவது அலை  காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் நுகர்வோர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு, 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அதாவது ஏப்ரல்-ஜூன் 2021 காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP growth) 26.2 சதவீதமாகவும், இது இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகள் முறையே 8.3 சதவீதம் மற்றும் 5.4 சதவீதமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(ஜனவரி-மார்ச் 2022) 6.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஏப்ரல் 2021

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஏப்ரல் 2021

Small savings scheme interest rate for the Period – April to June 2021

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் காணப்படும் சேமிப்பு திட்டங்கள் பெரும்பாலும் சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் தான் வருகிறது. கடந்த சில காலங்களாக சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.

2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான வட்டி விகிதம் நேற்று(31-03-2021) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித அறிவிப்பு நடப்பு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு பொருந்தும்.

சிறு சேமிப்பு கணக்கு, வைப்பு கால நிதி(Term Deposit), மாத வருவாய் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், மாதாந்திர சேமிப்பு திட்டம்(RD), மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி(PPF), கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டம் ஆகியவை மத்திய நிதி அமைச்சக சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வருபவை.

கடந்த புதன் கிழமையன்று பெரும்பாலான திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில்(அட்டவணையில் பார்க்க), மறுநாளே அந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருந்த (ஜனவரி-மார்ச் 2021) வட்டி விகிதமே ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு தொடரும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

small-savings-scheme-interest-rates-apr-2021
Small Saving Scheme Interest Rates

வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டது பலருக்கு அதிசயமூட்டும் நிகழ்வாக இருந்தாலும், மாநில தேர்தலை காரணம் காட்டி இந்த நிகழ்வு நடந்திருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் மொத்த சிறு சேமிப்பு தொகையில்(Gross Collection) தமிழகம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மட்டும் 24 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.

2019-20ம் நிதியாண்டில் சிறு சேமிப்பு திட்டத்தின் மூலம் பெறப்பட்ட தொகை 8.46 லட்சம் கோடி ரூபாய். பெறப்பட்ட தொகையை கணக்கில் கொள்ளும் போது, மேற்கு வங்கத்தில் இருந்து சுமார் 15 சதவீத தொகை பெறப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உத்திர பிரதேசமும் மற்றும் மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரிஸ்க் தன்மைக்கான மதிப்பீடு(Risk Profiling)

ரிஸ்க் தன்மைக்கான மதிப்பீடு(Risk Profiling)

எந்தவொரு முதலீட்டை துவக்கும் முன், உங்களை நீங்களே பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ரிஸ்க் புரொபைலிங்(Risk Profiling) என்று சொல்லக்கூடிய சுய பரிசோதனை மூன்று நிலையை கொண்டது.

  • தேவை(Risk Required)
  • திறன்(Risk Capacity)
  • சகிப்புத்தன்மை(Risk Tolerance)

உதாரணமாக நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்ளீர்கள் என வைத்து கொள்வோம். பங்குச்சந்தை என்பது ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட முதலீட்டு சாதனம் என்பதனை நாம் அறிவோம். சந்தையில் ஏற்ற-இறக்கம் என்பது குறுகிய காலத்தில் அதிகமாகவும், நடுத்தர காலத்தில் மிதமாகவும் மற்றும் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் நிலையில் குறைவாகவும் இருக்கும். இதனை நாம் தவிர்க்க இயலாது. இதனை தான் நாம் சந்தைக்கான ரிஸ்க் தேவை என்கிறோம். இந்த தேவையை புரிந்து கொண்டு தான் பங்குச்சந்தை முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக சொல்லப்படுவது உங்களது ரிஸ்க் திறன். சந்தையில் முதலீடு செய்யும் போது ஏற்படும் ரிஸ்க் அல்லது ஆபத்தை கையாள உங்களிடம் போதுமான திறன் உள்ளதா என்பதனை இந்த நிலை கூறும். உங்களுடைய வருவாய் எவ்வளவு, சந்தையில் நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய உள்ளீர்கள், சந்தையில் நட்டம் ஏற்பட்டால், நீங்கள் மற்றும் உங்களது குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுமா என்ற விஷயங்களை நாம் இங்கே கண்டறியலாம்.

ரிஸ்க் சகிப்புத்தன்மை என்பது நீங்கள் சந்தைக்கு தேவையான ரிஸ்க் தன்மையை அறிவீர்கள், உங்களிடம் போதுமான ரிஸ்க் திறனும் உள்ளது. அதே வேளையில் உங்களது ரிஸ்க் திறனுக்கு ஏற்றாற் போல முதலீடு செய்கிறீர்களா என்பதனை அறிவது. உதாரணமாக சிலருக்கு போதுமான திறன் இல்லாத போதும், அதிக ரிஸ்க் எடுத்து முதலீட்டை மேற்கொண்டு பின்னர் பணம் முழுவதையும் இழந்து விடுவதுண்டு. இன்னும் சிலர் பணமிருந்தும், போதுமான ரிஸ்க் திறன் அறிந்தும் பயத்தின் காரணமாக குறைந்த அளவிலான ரிஸ்க் தன்மையை கொண்டிருப்பர். அதன் விளைவாக ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்பவர்களும் உண்டு. மேற்சொன்ன இரண்டு நபர்களும் தங்களுக்கான ரிஸ்க் திறனை சரியாக அளவிடாமல் தவறான முதலீட்டு முடிவை எடுப்பர். இதனை தான் அவர்களது சகிப்புத்தன்மை அல்லது விருப்பம்(Risk Tolerance) என்கிறோம்.

பொதுவாக இளம்வயது உடையவர் பங்குச்சந்தையில் ரிஸ்க் அதிகம் எடுத்தாலும், நீண்ட காலத்தில் அவர் வருவாய் ஈட்டக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சந்தையில் பணம் பண்ணும் வாய்ப்பு அதிகம். ஓய்வுகாலத்தை நெருங்கக்கூடியவர் பங்குச்சந்தை முதலீட்டை குறைத்து பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது(வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளின் ரிஸ்க் குறைந்த திட்டங்கள்). ஆனால் நடைமுறையில் இளம்தலைமுறையினர் சிறு சேமிப்பு திட்டங்களை நோக்கி செல்வதும், ஓய்வு பெற்றவர்கள் தங்களது ஓய்வூதிய பணபலன்களை கொண்டு பங்குச்சந்தையில் அதிக ரிஸ்க் கொண்ட வர்த்தகத்தில் ஈடுபடுவதும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. (அதிக பணமிருந்து, ஓய்வூதிய காலத்தை சமாளிக்கக்கூடிய செல்வவளம் உள்ளவர்கள் எந்த வயதிலும் பங்குச்சந்தை போன்ற ரிஸ்க் தன்மை கொண்ட முதலீட்டை மேற்கொள்ளலாம்).

ரிஸ்க் புரொபைலிங் சார்ந்த சில கேள்விகள் உங்களுக்காக:
  • உங்களது முதலீட்டு நோக்கம்(Primary Investment Objective):  நீங்கள் ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்ளீர்கள் ? (பணப்பாதுகாப்பு, நீண்ட  காலத்தில் செல்வவளத்தை  ஏற்படுத்துதல், விரைவாக பணம் பண்ண வேண்டும், பணத்தை இழப்பது, பணவீக்கத்தை தாண்டிய நிதி இலக்குகளுக்கான தொகையை பெற, பகுதிநேர வருவாய்) – ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுங்கள்
  • சந்தையில் நீங்கள் எதிர்பார்க்கும் வருவாய் அல்லது லாபம் (ஆண்டுக்கு சதவீதத்தில்) ?
  •   உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. உங்களது ஒரு கோடி ரூபாய்க்கான திட்டம் என்ன ?
  • உங்களுக்கு ரூ.10 லட்சம் வங்கிக்கடனாக  உள்ளது. இப்போது உங்களுக்கு நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடமிருந்து இந்த வருடத்திற்கான போனஸ் தொகை ரூ.5 லட்சம் கிடைக்கிறது என கொள்வோம். நீங்கள் உங்கள் கடனை குறைக்க உள்ளீர்களா, இல்லையெனில் ஏதேனும் ஒரு முதலீட்டு திட்டத்தில் இந்த பணத்தை போட போகிறீர்களா ?
  • பங்குச்சந்தையில் நீங்கள் பணத்தை இழந்தால் அதற்கு யார் காரணம் ? (என் நண்பர், தரகர், ஊடகம், என் மனைவி அல்லது கணவர், எனது இன்டர்நெட் இணைப்பு, நான் மட்டுமே)
  • நீங்கள் வாங்கிய பங்கு ஒன்று, இப்போது 20 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. இப்போது உங்களது முடிவு என்ன ?
  • உங்களுக்கு பிடித்த மற்றும் ஆராய்ந்த நிறுவன பங்கு ஒன்று நடப்பாண்டில் மட்டும் 40 சதவீத வீழ்ச்சி கண்டுள்ளது. நீங்கள் இதுவரை அந்த பங்கினை வாங்கியதில்லை. இப்போது உங்களது முதலீட்டு முடிவு என்ன ? (உடனே வாங்குவேன், விலை இறங்கியதால் வாங்க மாட்டேன், பங்கினை மறு ஆய்வுக்கு உட்படுத்தி முதலீட்டு முடிவை எடுப்பேன்)

ரிஸ்க் புரொபைலிங் முறையை சரியாக பரிசோதனை செய்து கொள்ள தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மெய்நிகர் நாணயங்களின் பரிவர்த்தனைகள் – தகவல்களை கேட்கும் மத்திய அரசு

மெய்நிகர் நாணயங்களின் பரிவர்த்தனைகள் – தகவல்களை கேட்கும் மத்திய அரசு 

Disclosure of Cryptocurrency Holdings and Transactions – India’s Cryptocurrency Regulations

‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயங்களின் மீதான முதலீடு மற்றும் வர்த்தகம், நடப்பு காலத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. டிஜிட்டல் நாணயம் சார்ந்த சிந்தனைகள் பல வருடங்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில், மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் உலகெங்கிலும் பரவலாக காணப்படுகிறது. இதற்கான காரணம், மெய்நிகர் நாணயங்களில் காணப்படும் ‘பிளாக் செயின்(Blockchain)’ தொழில்நுட்பத்தின் பாதுகாக்கப்பட்ட பரிவர்த்தனைகளும், எந்தவொரு நாட்டின் மத்திய வங்கிகளின் தலையீடும் இல்லாமல் நடைபெறும் வர்த்தகம் தான்.

மெய்நிகர் நாணய சந்தையில் முதன்மை நாணயமாக கருதப்படும் ‘பிட்காயின்(Bitcoin)’, கடந்த 2014ம் ஆண்டு வாக்கில் ஒரு பிட்காயினுடைய மதிப்பு 500 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இது அதிகபட்சமாக நடப்பு 2021ம் ஆண்டில் 61,500 அமெரிக்க டாலர்கள் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது வர்த்தகமாகும் ஒரு பிட்காயினின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 38 லட்சம் ரூபாய் (52,190 அமெரிக்க டாலர்கள்). கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 80 சதவீத விலை ஏற்றத்தை பெற்றுள்ளன.

பிட்காயின் 2014ம் ஆண்டிலிருந்து ஏற்றத்தில் மட்டுமே சென்றதா என கேட்டால், அது தான் இல்லை. 2017ம் ஆண்டில் அதிகபட்சமாக 18,000 டாலர்கள் வரை சென்றிருந்த இந்த மெய்நிகர் நாணயம், 2018ம் ஆண்டில் 3,000 டாலருக்கு குறைவாக இறங்கியது கவனிக்கத்தக்கது. பொதுவாக மெய்நிகர் நாணயங்கள் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது. இதற்கான காரணம் மெய்நிகர் நாணயங்களின் எண்ணிக்கை குறைவான நிலையில் இருப்பதும், அதனை சார்ந்த வர்த்தகமும் தான்.

இருப்பினும் தனிநபர் ஒருவர் ஒரு முழு மெய்நிகர் நாணயத்தை வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை. உதாரணமாக ஒரு பிட்காயின் நாணயத்தின் சிறு துண்டுகளையும்(Pieces) வாங்கி கொள்ளலாம். மெய்நிகர் நாணயத்தை பல நாடுகள் வரவேற்றாலும், இன்னும் அதனை ஒழுங்குமுறைப்படுத்த பல நாடுகள் திணறி வருகின்றன. உலகெங்கிலும் நடைபெறும் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் பிற குற்றங்களுக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக அமெரிக்க டாலர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மெய்நிகர் நாணயங்கள் வழியாக சுமார் 5 சதவீதம் என்ற அளவில் நடைபெற்று வருவது கவனத்தில் கொள்ள வேண்டியது.

இதன் காரணமாகவே சில நாடுகள் அதன் பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியாமல், தனியார் சந்தை நிறுவனங்களிடமே விட்டு விட்டன. ஆனால் முன்னேறிய மற்றும் வளரும் நாடுகள் இதனை ஒழுங்குமுறைப்படுத்தி சட்டமாக்க முயற்சி செய்து வருகின்றன. அவற்றில் நம் நாடும் ஒன்று. நடப்பு வருடத்தின் பட்ஜெட் தாக்கலின் போது, மெய்நிகர் நாணயங்களுக்கான ஒழுங்குமுறை மற்றும் அதனை சார்ந்த சட்டங்கள் ஏற்படுத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு மெய்நிகர் நாணயம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என பாரத ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட நிலையில், 2020ம் வருடம் உச்ச நீதிமன்றத்தால் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதற்கான சட்டம் மற்றும் வரி சிக்கல்கள் இன்னும் நீடித்து வருகிறது.

சமீபத்திய அரசு அறிவிப்பின் படி, கம்பெனி சட்டம் 2013ன் கீழ் நாட்டில் உள்ள நிறுவனங்கள், மெய்நிகர் நாணயங்களில் பரிவர்த்தனை மேற்கொண்டிருந்தால் அதற்கான லாப-நட்ட அறிக்கை, முதலீட்டு தொகை மற்றும் கையிருப்பு ஆகிய விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை வரக்கூடிய ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. மெய்நிகர் நாணயங்களில் ஏற்பட்டுள்ள தனிநபர் சார்ந்த பரிவர்த்தனைகளையும் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது.

இதன் மூலம் மெய்நிகர் நாணய வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என அரசு எண்ணுகிறது. இதுவரை மெய்நிகர் நாணயத்தில் இந்தியா சார்பாக(தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சேர்த்து) சுமார் ஒரு கோடி முதலீட்டாளர்களும், 15,000 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடும் ஈர்க்கப்பட்டுள்ளது. மெய்நிகர் நாணயத்தில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வர்த்தகம், ஊக வணிகம் அல்லது முதலீடு எதுவாக இருப்பினும் அதற்கான தெளிவான பரிவர்த்தனை விவரங்களை தற்போது அரசு கேட்டுள்ளது.

இதன் மூலம் அவற்றை மூலதன ஆதாயம் அல்லது இழப்பாக எடுத்து கொள்ளலாமா, இல்லையெனில் வணிக வருவாயாக கணக்கிடுவதா என்பதனை அரசு முடிவெடுக்கும். இதன் பின்பு அதற்கான வருமான வரி வரம்புகளும் ஏற்படுத்தப்படும். தற்போதைய நிலையில், மெய்நிகர் நாணயம் மூலம் கிடைக்கப்பெறும் லாபம் அல்லது நட்டம், கடன் பத்திரங்களின் மூலதன ஆதாய வரியை மேற்கோள் காட்டி செலுத்தப்படுகிறது(சில நிறுவனங்களால்). மெய்நிகர் நாணய பரிவர்த்தனைகளுக்கு அதன் சந்தை நிறுவனங்கள் பரிவர்த்தனை கட்டணங்களை வசூலிக்கின்றன. மெய்நிகர் நாணயம் மூலம் ஈட்டப்படும் லாபம் அல்லது நட்டத்தை தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம்(CBDT) ஏற்கனவே கூறியுள்ளது.

அமெரிக்க டாலர் மற்றும் தங்கத்திற்கு மாற்றாக சொல்லப்படும் மெய்நிகர் நாணயம்(Cryptocurrency), வருங்காலத்தில் ஒரு முதலீட்டு சொத்தாக கருதப்படுமா, இல்லையெனில் வெறும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மட்டுமே மேற்கொள்ளப்படுமா என்பது தெரிய வரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மறவாதீர்கள்: ஆதார் – பான் எண் இணைப்புக்கான காலக்கெடு – மார்ச் 31, 2021

மறவாதீர்கள்: ஆதார் – பான் எண் இணைப்புக்கான காலக்கெடு – மார்ச் 31, 2021

Deadline for Aadhaar – PAN Linking – 31st March, 2021

ஆதார்-பான் இணைப்புக்கான காலக்கெடு, கடந்த இரண்டு வருடங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆதார்-பான் எண் இணைப்புக்கான கடைசி தேதி வரும் மார்ச் 31,2021 தேதியுடன் முடிவடைகிறது. இந்த இரண்டையும் இணைக்காத நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என வருமான வரி அலுவலகம் ஏற்கனவே சொல்லியிருந்தது.

தனிநபர் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்யாத நிலையிலும், ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயமாகும். எனவே, உங்கள் வீட்டில் உள்ள நபர் ஒருவர் பான் மற்றும் ஆதார் எண்ணை வைத்திருக்கும் நிலையில், அதனை இணைத்து விடுவது வரும் நாட்களில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க உதவும்.

மார்ச் 31, 2021 காலக்கெடுவுக்கு பிறகான பான் எண் செயல்படாது எனவும் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றைய சமயத்தில் புதிய வங்கிக்கணக்கு துவக்கம்(பெரும்பாலான வங்கிகளில்), ரூ.50,000க்கும் மேலான ரொக்க பரிவர்த்தனை மற்றும் பிற நிதி சார்ந்த கணக்கு, பரிமாற்றங்களுக்கு பான் எண் அவசியமாகிறது.

பான் மற்றும் ஆதார் எண்களை காலக்கெடு தேதிக்கு முன்பு இணைக்காமல், பின்னொரு நாளில் இணைக்க முற்பட்டு வருமான வரி தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டால், வருமான வரிச்சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பங்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு, காப்பீடு பெறுவதற்கு மற்றும் வங்கியில் கடனுக்கான விண்ணப்பத்திற்கு பான் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம். சில திட்டங்களில் மட்டும் ரூ.50,000க்கு குறைவான முதலீட்டிற்கு பான் எண்ணிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் கே.ஒய்.சி.(KYC) முறையில் பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயமாகும்.

ஆதார – பான் எண் இணைப்பது எளிமையான நடைமுறையில் தான் உள்ளது. அதற்கான இணைப்பு இங்கே,

PAN – Aadhaar Linking – Income Tax Website

உங்களுடைய  பான் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள தகவல்(பெயர், பிறந்த காலம், முகவரி, கைபேசி எண்)  சரியான பொருந்துகிறதா என பார்த்து கொள்ளுங்கள். சரியான தகவல் இல்லையெனில் சில சமயம் பான் – ஆதார் எண் இணைப்பு சாத்தியமாகாது. ஆதார் அட்டையில் உள்ள தகவல் சரிவர இல்லையென்றால், உங்களுக்கு அருகில் உள்ள இ – சேவை மையத்தை தொடர்பு கொண்டு அதனை திருத்தம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காவது மிகப்பெரிய நாடு – இந்தியா

அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காவது மிகப்பெரிய நாடு – இந்தியா 

India’s Foreign Exchange Reserves – Billion Dollar Currency Holding

வளரும் நாடு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நாடொன்றுக்கு அன்னிய செலாவணி கையிருப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதனை அந்த நாட்டின் மத்திய வங்கி கவனித்து கொள்ளும். பொதுவாக அன்னிய செலாவணி கையிருப்பு(Foreign Exchange Reserves) என்பது மற்றொரு நாட்டின் பணத்தை அல்லது பண மதிப்பை வாங்கி கையிருப்பாக வைப்பது. சொல்லப்பட்ட பணம், உலகளாவிய நாணயமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ‘அமெரிக்க டாலர்’ தான் தற்போதைய பொது நாணயமாக சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலரை தான் பாரத ரிசர்வ் வங்கி என சொல்லப்படும் மத்திய வங்கி(Reserve Bank of India) தனது கையிருப்பாக வைத்து கொள்ளும். இதற்கான காரணங்கள் பல – ஒரு நாட்டினுடைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் காணப்படும் இரு நாடுகளின் வேறுபட்ட பண மதிப்பை கட்டுப்படுத்த, அன்னிய செலாவணி கையிருப்பு உதவும். உதாரணமாக நம் நாட்டிலிருந்து ஒரு பொருள் அல்லது சேவை பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்து கொள்வோம். இப்போது இந்த இரு நாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தகம், பொது நாணயமான டாலர் மதிப்பில் தான் நடந்திருக்கும். சில சமயங்களில் அவை யூரோ அல்லது வேறொரு அங்கீகரிக்கப்பட்ட பொது நாணயமாக இருந்திருக்கலாம்.

வர்த்தகத்தை ஏற்றுமதி செய்த நாடு, தனது வருவாயினை டாலர் மதிப்பில் தான் பெறக்கூடும். வர்த்தகத்தை ஏற்படுத்தியவர்(தனிநபர் அல்லது நிறுவனம்) இதற்கான டாலர் வருவாயை அவரது வங்கி கணக்கில் தான் பெறுவார். டாலர் பணத்தை உள்ளூர் ரூபாய் மதிப்பிற்கு மாற்றுவதற்கு வங்கிகள் சில கட்டணங்களை எடுத்து கொள்ளும். அதே வேளையில் டாலர் பணத்தை அந்நாட்டின் மத்திய வங்கியிடம், வங்கிகள் பரிமாற்றம் செய்து கொள்ளும். பொதுவாக வங்கிகள், மத்திய வங்கியிடமிருந்து அரசு கடன் பத்திரங்களை வாங்குவதற்கு இது போன்ற ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட டாலர் பணத்தை செலவழிக்கும்.

வங்கிகளை பொறுத்தவரை அரசு கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் வட்டி வருவாயை பெறும். ஆனால் மத்திய வங்கி இதனை(டாலர்) அன்னிய செலாவணி கையிருப்பாக கொண்டு, பல பொருளாதார நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை, அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி தனது கையிருப்பை எச்சரிக்கையாக கையாளும். பொருளாதார வீழ்ச்சி, போர் பதற்றம், வெளிநாட்டு கடன், அதிக இறக்குமதியின் மூலம் ஏற்படும் நிதி பற்றாக்குறை போன்ற காலங்களை சமாளிக்க அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பது ஒரு நாட்டிற்கு சாதகமான தன்மையாகும்.

அன்னிய செலாவணி கையிருப்பு எனும் போது, ‘டாலர் பண ரொக்கமாக’ மட்டுமே இருந்து விடாது. அவை ரொக்கம், பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு, தங்கம், கடன் பத்திரங்கள், சர்வேதச நாணய நிதியம்(IMF) அனுமதிக்கும் வைப்பு தொகை என பல்வேறு சாதனங்களில் வைக்கப்படும்.

1991ம் ஆண்டு வாக்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, நாட்டின் இறக்குமதி அதிக சிக்கலை சந்தித்தது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அடுத்த மூன்று வாரங்களுக்கு தேவையான இறக்குமதி அளவை மட்டுமே பெற்றிருக்கும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது. உலக தர குறியீட்டு நிறுவனங்கள், நாட்டின் கடன் பத்திரங்களின் தன்மையை குறைந்து மதிப்பிட்டிருந்தன. குறைவான அன்னிய செலாவணி கையிருப்பு காரணமாக, உலக வர்த்தகத்தில் இந்தியா திவால் நிலைக்கு செல்லும் நிலை உருவானது.

அன்றைய தேதியில், வளைகுடா போரும்(Gulf War) சேர்ந்து கொண்டது. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கு போதிய தொகை இல்லாமல், அரசு சார்பில் இருந்த தங்க கையிருப்பு அடகு வைக்கப்பட்டன. பின்னர் நிதி பற்றாக்குறையிலிருந்து மீண்ட நாடு, பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு வித்திட அந்த நிகழ்வே காரணமாக அமைந்தது.

இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம், அன்னிய செலாவணி கையிருப்பு வளரும் நாடொன்றுக்கு எவ்வளவு முக்கியமென்று. 1991ம் ஆண்டு ஜனவரி மாத முடிவில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது அதே வருடத்தின் ஜூன் மாத முடிவில் 0.6 பில்லியனுக்கு குறைவாக சென்றது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தை மீட்க, சர்வேதச நாணய நிதியத்திடம் 67 டன் தங்கத்தை அடமானம் வைத்தது இந்தியா. இதன் வாயிலாக சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடமான கடனாக பெற்றது இந்தியா. அவை இங்கிலாந்து மற்றும் ஸ்விட்ஸர்லாந்து நாடுகளின் மத்திய வங்கிகள் மூலம் பெறப்பட்டன.

அந்தவொரு நிகழ்வுக்கு பிறகு, தனது அன்னிய செலாவணி கையிருப்பை நமது நாடு கவனமாக கையாண்டு வருகிறது. 2009ம் ஆண்டு வாக்கில் சர்வேதச நாணய நிதியத்திடமிருந்து 200 டன் மதிப்பிலான தங்கத்தை வாங்க பாரத ரிசர்வ் வங்கி முடிவு செய்ததும் அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியே. இன்று (12, மார்ச் 2021) நம் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 580.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (1991ம் ஆண்டு ஜனவரி – 1.2 பில்லியன் டாலர்கள் !)   

சில வாரங்களுக்கு முன்பு, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, உலகளவில் அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காம் இடத்திற்கு நகர்ந்தது இந்தியா. முதலிடத்தில் சீனா(3,336 பில்லியன் டாலர்கள்), இரண்டாம் இடத்தில் ஜப்பான்(1,379 பில்லியன் டாலர்கள்) மற்றும் மூன்றாமிடத்தில் சுவிட்ஸர்லாந்து(1,080 பில்லியன் டாலர்கள்) உள்ளன. உலக அன்னிய செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பான் யென், பிரிட்டன் பவுண்ட் மற்றும் சீன பண மதிப்புகள் முன்னிலையில் உள்ளன.

கடந்த 30 வருட காலத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 10,000 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளது. இது போல நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – GDP மதிப்பு 266 பில்லியன் டாலர்(1991ம் ஆண்டு) மதிப்பிலிருந்து 3 டிரில்லியன் டாலர்(2019) மதிப்பளவில் வளர்ந்துள்ளது. இது 1100 சதவீத வளர்ச்சியாகும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com