ரிஸ்க் தன்மைக்கான மதிப்பீடு(Risk Profiling)

ரிஸ்க் தன்மைக்கான மதிப்பீடு(Risk Profiling)

எந்தவொரு முதலீட்டை துவக்கும் முன், உங்களை நீங்களே பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ரிஸ்க் புரொபைலிங்(Risk Profiling) என்று சொல்லக்கூடிய சுய பரிசோதனை மூன்று நிலையை கொண்டது.

  • தேவை(Risk Required)
  • திறன்(Risk Capacity)
  • சகிப்புத்தன்மை(Risk Tolerance)

உதாரணமாக நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்ளீர்கள் என வைத்து கொள்வோம். பங்குச்சந்தை என்பது ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட முதலீட்டு சாதனம் என்பதனை நாம் அறிவோம். சந்தையில் ஏற்ற-இறக்கம் என்பது குறுகிய காலத்தில் அதிகமாகவும், நடுத்தர காலத்தில் மிதமாகவும் மற்றும் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் நிலையில் குறைவாகவும் இருக்கும். இதனை நாம் தவிர்க்க இயலாது. இதனை தான் நாம் சந்தைக்கான ரிஸ்க் தேவை என்கிறோம். இந்த தேவையை புரிந்து கொண்டு தான் பங்குச்சந்தை முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக சொல்லப்படுவது உங்களது ரிஸ்க் திறன். சந்தையில் முதலீடு செய்யும் போது ஏற்படும் ரிஸ்க் அல்லது ஆபத்தை கையாள உங்களிடம் போதுமான திறன் உள்ளதா என்பதனை இந்த நிலை கூறும். உங்களுடைய வருவாய் எவ்வளவு, சந்தையில் நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய உள்ளீர்கள், சந்தையில் நட்டம் ஏற்பட்டால், நீங்கள் மற்றும் உங்களது குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுமா என்ற விஷயங்களை நாம் இங்கே கண்டறியலாம்.

ரிஸ்க் சகிப்புத்தன்மை என்பது நீங்கள் சந்தைக்கு தேவையான ரிஸ்க் தன்மையை அறிவீர்கள், உங்களிடம் போதுமான ரிஸ்க் திறனும் உள்ளது. அதே வேளையில் உங்களது ரிஸ்க் திறனுக்கு ஏற்றாற் போல முதலீடு செய்கிறீர்களா என்பதனை அறிவது. உதாரணமாக சிலருக்கு போதுமான திறன் இல்லாத போதும், அதிக ரிஸ்க் எடுத்து முதலீட்டை மேற்கொண்டு பின்னர் பணம் முழுவதையும் இழந்து விடுவதுண்டு. இன்னும் சிலர் பணமிருந்தும், போதுமான ரிஸ்க் திறன் அறிந்தும் பயத்தின் காரணமாக குறைந்த அளவிலான ரிஸ்க் தன்மையை கொண்டிருப்பர். அதன் விளைவாக ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்பவர்களும் உண்டு. மேற்சொன்ன இரண்டு நபர்களும் தங்களுக்கான ரிஸ்க் திறனை சரியாக அளவிடாமல் தவறான முதலீட்டு முடிவை எடுப்பர். இதனை தான் அவர்களது சகிப்புத்தன்மை அல்லது விருப்பம்(Risk Tolerance) என்கிறோம்.

பொதுவாக இளம்வயது உடையவர் பங்குச்சந்தையில் ரிஸ்க் அதிகம் எடுத்தாலும், நீண்ட காலத்தில் அவர் வருவாய் ஈட்டக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சந்தையில் பணம் பண்ணும் வாய்ப்பு அதிகம். ஓய்வுகாலத்தை நெருங்கக்கூடியவர் பங்குச்சந்தை முதலீட்டை குறைத்து பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது(வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளின் ரிஸ்க் குறைந்த திட்டங்கள்). ஆனால் நடைமுறையில் இளம்தலைமுறையினர் சிறு சேமிப்பு திட்டங்களை நோக்கி செல்வதும், ஓய்வு பெற்றவர்கள் தங்களது ஓய்வூதிய பணபலன்களை கொண்டு பங்குச்சந்தையில் அதிக ரிஸ்க் கொண்ட வர்த்தகத்தில் ஈடுபடுவதும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. (அதிக பணமிருந்து, ஓய்வூதிய காலத்தை சமாளிக்கக்கூடிய செல்வவளம் உள்ளவர்கள் எந்த வயதிலும் பங்குச்சந்தை போன்ற ரிஸ்க் தன்மை கொண்ட முதலீட்டை மேற்கொள்ளலாம்).

ரிஸ்க் புரொபைலிங் சார்ந்த சில கேள்விகள் உங்களுக்காக:
  • உங்களது முதலீட்டு நோக்கம்(Primary Investment Objective):  நீங்கள் ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்ளீர்கள் ? (பணப்பாதுகாப்பு, நீண்ட  காலத்தில் செல்வவளத்தை  ஏற்படுத்துதல், விரைவாக பணம் பண்ண வேண்டும், பணத்தை இழப்பது, பணவீக்கத்தை தாண்டிய நிதி இலக்குகளுக்கான தொகையை பெற, பகுதிநேர வருவாய்) – ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுங்கள்
  • சந்தையில் நீங்கள் எதிர்பார்க்கும் வருவாய் அல்லது லாபம் (ஆண்டுக்கு சதவீதத்தில்) ?
  •   உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. உங்களது ஒரு கோடி ரூபாய்க்கான திட்டம் என்ன ?
  • உங்களுக்கு ரூ.10 லட்சம் வங்கிக்கடனாக  உள்ளது. இப்போது உங்களுக்கு நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடமிருந்து இந்த வருடத்திற்கான போனஸ் தொகை ரூ.5 லட்சம் கிடைக்கிறது என கொள்வோம். நீங்கள் உங்கள் கடனை குறைக்க உள்ளீர்களா, இல்லையெனில் ஏதேனும் ஒரு முதலீட்டு திட்டத்தில் இந்த பணத்தை போட போகிறீர்களா ?
  • பங்குச்சந்தையில் நீங்கள் பணத்தை இழந்தால் அதற்கு யார் காரணம் ? (என் நண்பர், தரகர், ஊடகம், என் மனைவி அல்லது கணவர், எனது இன்டர்நெட் இணைப்பு, நான் மட்டுமே)
  • நீங்கள் வாங்கிய பங்கு ஒன்று, இப்போது 20 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. இப்போது உங்களது முடிவு என்ன ?
  • உங்களுக்கு பிடித்த மற்றும் ஆராய்ந்த நிறுவன பங்கு ஒன்று நடப்பாண்டில் மட்டும் 40 சதவீத வீழ்ச்சி கண்டுள்ளது. நீங்கள் இதுவரை அந்த பங்கினை வாங்கியதில்லை. இப்போது உங்களது முதலீட்டு முடிவு என்ன ? (உடனே வாங்குவேன், விலை இறங்கியதால் வாங்க மாட்டேன், பங்கினை மறு ஆய்வுக்கு உட்படுத்தி முதலீட்டு முடிவை எடுப்பேன்)

ரிஸ்க் புரொபைலிங் முறையை சரியாக பரிசோதனை செய்து கொள்ள தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s