மறவாதீர்கள்: ஆதார் – பான் எண் இணைப்புக்கான காலக்கெடு – மார்ச் 31, 2021
Deadline for Aadhaar – PAN Linking – 31st March, 2021
ஆதார்-பான் இணைப்புக்கான காலக்கெடு, கடந்த இரண்டு வருடங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆதார்-பான் எண் இணைப்புக்கான கடைசி தேதி வரும் மார்ச் 31,2021 தேதியுடன் முடிவடைகிறது. இந்த இரண்டையும் இணைக்காத நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என வருமான வரி அலுவலகம் ஏற்கனவே சொல்லியிருந்தது.
தனிநபர் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்யாத நிலையிலும், ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயமாகும். எனவே, உங்கள் வீட்டில் உள்ள நபர் ஒருவர் பான் மற்றும் ஆதார் எண்ணை வைத்திருக்கும் நிலையில், அதனை இணைத்து விடுவது வரும் நாட்களில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க உதவும்.
மார்ச் 31, 2021 காலக்கெடுவுக்கு பிறகான பான் எண் செயல்படாது எனவும் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றைய சமயத்தில் புதிய வங்கிக்கணக்கு துவக்கம்(பெரும்பாலான வங்கிகளில்), ரூ.50,000க்கும் மேலான ரொக்க பரிவர்த்தனை மற்றும் பிற நிதி சார்ந்த கணக்கு, பரிமாற்றங்களுக்கு பான் எண் அவசியமாகிறது.
பான் மற்றும் ஆதார் எண்களை காலக்கெடு தேதிக்கு முன்பு இணைக்காமல், பின்னொரு நாளில் இணைக்க முற்பட்டு வருமான வரி தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டால், வருமான வரிச்சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
பங்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு, காப்பீடு பெறுவதற்கு மற்றும் வங்கியில் கடனுக்கான விண்ணப்பத்திற்கு பான் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம். சில திட்டங்களில் மட்டும் ரூ.50,000க்கு குறைவான முதலீட்டிற்கு பான் எண்ணிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் கே.ஒய்.சி.(KYC) முறையில் பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயமாகும்.
ஆதார – பான் எண் இணைப்பது எளிமையான நடைமுறையில் தான் உள்ளது. அதற்கான இணைப்பு இங்கே,
PAN – Aadhaar Linking – Income Tax Website
உங்களுடைய பான் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள தகவல்(பெயர், பிறந்த காலம், முகவரி, கைபேசி எண்) சரியான பொருந்துகிறதா என பார்த்து கொள்ளுங்கள். சரியான தகவல் இல்லையெனில் சில சமயம் பான் – ஆதார் எண் இணைப்பு சாத்தியமாகாது. ஆதார் அட்டையில் உள்ள தகவல் சரிவர இல்லையென்றால், உங்களுக்கு அருகில் உள்ள இ – சேவை மையத்தை தொடர்பு கொண்டு அதனை திருத்தம் செய்யலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை