ஒரு சிறுகதை. முக்கிய பதிவுகள். உங்கள் செல்வத்தை அழிக்கும் பங்குச்சந்தையின் கதை
A Short Story. Key Points. Wealth Destroyer – Stocks
பொதுவாக பங்குச்சந்தையில் சில நிறுவன பங்குகளை நீங்கள் வாங்கியிருந்தால் கோடீஸ்வரராக மாறலாம் என சொல்வதை கேட்டிருப்போம். 20 வருடங்களுக்கு முன்பு நீங்கள் இந்த பங்கில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தால் இன்று அது 5 கோடி ரூபாய் பெறுமானம் பெறும் என்பதனையும் சிலர் சொல்வதுண்டு.
நடைமுறையில் உள்ள முதலீட்டு சாதனங்களில் தொழில்களை கொண்டு நல்ல வருவாயை ஈட்ட முடியும் எனில், அது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதனால் மட்டுமே. அதே வேளையில் உங்கள் பணம் மற்றும் செல்வத்தை பதம் பார்க்கும் ஒரு முதலீட்டு சாதனமும் உண்டு. அதுவும் பங்குச்சந்தை தான்.
அப்படிப்பட்ட முதலீட்டு இழப்புகளை ஏற்படுத்திய நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் பல உண்டு. அவற்றின் சிறுகதைகளை இங்கே பார்ப்போம். சிறுகதைகளுக்கு இருக்கும் அழகே தனி தான். பங்குகளை அலசி ஆராய்வதில் சிறிய கதைகளாக சொல்லும் போது அதன் தன்மை ஆழமான வாசிப்பை ஏற்படுத்தும்.
சொல்லப்பட உள்ள பங்கின் நிறுவன பெயரை கதையின் முடிவில் நீங்களே அறிந்து கொள்ளலாம். பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டு முதலீட்டாளர்களின் பணத்தை பதம் பார்க்கும் பங்கு ஒன்று இதோ…
தற்போது இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்த பங்கு 60 சதவீத ஏற்றத்தை அடைந்துள்ளது. நல்ல பங்கு தானே, வாருங்கள் கதைக்கு.
- சொல்லப்பட்ட உள்ள நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் இந்திய பணக்காரர்களில் ஒருவராவார். முதலீடுகளை பெறுவதில் அவர் வல்லவரும் கூட.
- தொலைத்தொடர்பு சேவையில் மேம்பட்ட CDMA தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. சிறிது வருடங்கள் கழிந்ததும், நிறுவனம் மற்றொருவரிடம் கைமாறியது. அவரும் இந்த நிறுவனத்தை தொடங்கியவருக்கு உறவுக்காரர் தான்.
- நான்கு முறை சிறந்த விருதுகளை பெற்றவர் நமது புதிய ஓனர். ஆம், நாட்டின் மிக சிறந்த தொழிலதிபருக்கான விருதுகளை அவர் பெற்றார்.
- 2008ம் ஆண்டில் மற்றொரு தொழில்நுட்ப சேவையில் அவர் நுழைந்தார். 3ஜி தொழில்நுட்பத்தை 2011ம் ஆண்டு கொண்டு வந்தார். 58,640 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலத்தில் எடுத்தார்.
- எம்.டி.எஸ். கேபிள்(MTS Cable) என்ற நிறுவனத்தையும், டிஜி கேபிள்(Digicable) என்ற மற்றொரு நிறுவனத்தையும் கையகப்படுத்தினார். சில காரணங்களால் அவரால் 4ஜி தொழில்நுட்பத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.
- தொழில் போட்டி மற்றும் அதிக கடனால் தள்ளாடினார். ஏர்செல்(Aircel) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் தனது நிறுவனத்தை இணைக்க முயற்சி செய்தார். ஆனால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
- எரிக்சன்(Ericsson) என்ற நிறுவனத்துடன் இவருக்கு முதலீடு சார்ந்த மோதல் ஏற்பட்டது. எரிக்சன் இவருடைய நிறுவனத்தின் மீது வழக்கும் தொடுத்தது.
- 12 வருடங்களுக்கு முன்பு உலகின் 6வது பணக்காரராக இருந்தவர் இப்போது அதிக கடனை மட்டும் கொண்டு நிறுவனத்தை திவால் நிலைக்கு அறிவித்து விட்டார். 42 பில்லியன் டாலர்கள் (இன்றைய மதிப்பில் 3.15 லட்சம் கோடி ரூபாய்) சாம்ராஜ்யத்தை கொண்டிருந்தவர் இன்று தன்னிடம் எதுவுமில்லை என கூறியுள்ளார்.
- 2008ம் ஆண்டில் 800 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருந்த அவருடைய நிறுவனத்தின் பங்கு விலை 2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 80 பைசாவுக்கு வந்தடைந்தது. போனஸ் பங்குகள் எதுவும் தரப்படவில்லை என்பதனை கவனிக்கவும்.
எந்த நிறுவனம் என்று உங்களால் அறிய முடிகிறதா ?
பங்குச்சந்தையில் வெறும் விலைகளை மட்டுமே பார்க்காமல், நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு உள்ளது, நிர்வாகம் நன்றாக செயல்பட்டு வருகிறதா மற்றும் வருவாய் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதனையும் ஆராய வேண்டும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை