அடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?
5 Precautions to do in the Market Crash – Recession 2020
நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு உலக பங்குச்சந்தை குறியீடுகள் மிக வேகமாக எழுந்து வந்துள்ளது. உள்நாட்டில் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த மூன்று மாதங்களில் 20 சதவீத ஏற்றத்தை அடைந்துள்ளது. அதே வேளையில் 2020ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து காணும் போது இன்னும் 13 சதவீத இறக்கத்தில் உள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தை நடப்பாண்டில் இரண்டாவது முறையாக அடைந்தது. கடந்த இரண்டு வருடங்களாக காணப்பட்ட பொருளாதார மந்தநிலை என்ற செய்தி வலுவடைந்து தற்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விரைவாக மீட்டெடுக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
நடப்பு வருடத்தில் முக்கியமாக கருதப்படும் நிகழ்வாக கொரோனா வைரஸ் தாக்கம்(Covid-19), வர்த்தக போர்(Trade war), எண்ணெய் நாடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் விலை மாற்றம், அமெரிக்க தேர்தல், நாடுகளிடையே காணப்படும் போர் பதற்ற சூழ்நிலை(War Panic) தான் உள்ளது. பொருளாதார மந்தநிலையால் அடுத்து வரவிருக்கும் காலாண்டுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டிருக்காது.
ஆனால், உலக பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்தில் மட்டும் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது சந்தையில் நிலவுவது காளையா அல்லது கரடியா என்ற ஐயத்தில் வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் அணுகுகின்றனர். மார்ச் மாத வீழ்ச்சி போன்று மறுபடியும் நடப்பு வருடத்தில் ஏற்பட வாய்ப்புண்டா என கேள்வி எழுப்பினால், நடப்பதற்கான சாத்திய கூறு அதிகம் தான்.
கடந்த இரண்டு வருடத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதும், அதற்கு மாறாக பங்குச்சந்தை குறியீடுகள் மேலே சென்றதும் தான் மார்ச் மாத வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு பின்னால் உள்ள பொருளாதார எண்கள் தான் உண்மை நிலவரத்தை விவரிக்கும். அமெரிக்க சந்தைகள் போல, இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றமடைவதற்கான கூறுகள் உள்ளன.
இருப்பினும், இது சந்தை நிலவரம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதனையே காட்டுகிறது. கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலையால் ஊரடங்கு ஏற்படாவிட்டாலும், இயல்பு வாழ்க்கை என்பது சாதாரண நிகழ்வாக இருக்காது. இது சந்தை சங்கிலியை(Supply Chain) பாதிக்க கூடும். எனவே மற்றொரு சந்தை வீழ்ச்சி நாம் மேலே சொன்ன சில காரணிகளால் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இங்கே யூகிப்பதற்கு எதுவுமில்லை. அதே வேளையில் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். எனவே பங்குச்சந்தை வீழ்ச்சியை கணிப்பதை தவிர்த்து, அதற்கான முன்னெச்சரிக்கை விஷயங்களை நாம் பின்பற்றினால், சந்தையில் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை ஈட்டலாம்.
-
சரியான நிதி திட்டமிடல் எப்போதும் அவசியம்:
தற்போது உள்ள சூழ்நிலை அடிக்கடி நிகழும் நிகழ்வாக வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முன்னர், உங்களையும், உங்கள் குடும்ப நிதி பாதுகாப்பை உறுதி செய்ய டேர்ம் பாலிசி, மருத்துவ காப்பீடு மற்றும் அவசர கால நிதி ஆகியவற்றை ஏற்படுத்துவது அவசியம்.
அதற்கு பின்னர் தான் உங்கள் உபரி தொகையை சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற காலங்களில் சந்தையில் குறுகிய காலத்தில் விரைவாக பணம் பண்ணுகிறேன் என மொத்த பணத்தையும் இழக்க வேண்டாம். நீண்ட காலத்திற்கு நல்ல நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்து முதலீடு செய்க.
-
உங்கள் நிதி இலக்குகளுக்கு நேரிடையாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்:
நிதி இலக்குகளுக்காக சந்தையில் முதலீடு செய்ய உள்ளவர்கள், நீண்டகால இலக்கை மட்டும் கொண்டிருத்தல் நலம். குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்கிற்கு தற்போதைய நிலையில் நேரடி பங்குகளை அணுக வேண்டாம். அதற்கு மாறாக பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds Schemes) பயன்படுத்தி கொள்ளலாம்.
நல்லதொரு செல்வத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் பங்குச்சந்தை முதலீட்டை நீண்டகால நோக்கில் அணுகலாம். நடப்பில் உள்ள சந்தை வீழ்ச்சிகளில் முதலீடு செய்யும் பட்சத்தில், அடுத்த சில வருடங்களில் நல்ல வருவாயினை சந்தையில் ஈட்டலாம்.
-
ஒரு முறை முதலீடாக மொத்த பணத்தையும் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்(Don’t invest as Lumpsum):
உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டு தொகையை தற்போதைய சந்தையில் ஒரே பங்கில் போட்டு விட்டு, அடுத்த சில வருடங்களில் கோடிகளை அள்ளலாம் என உங்கள் நிதி ஆதாரத்தை மீறி ரிஸ்க் எடுக்க வேண்டாம். குறுகிய காலத்தில் சந்தை மிகவும் ஆபத்தானது. பொருளாதார வீழ்ச்சி காலங்களில் உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டில் 10-20 சதவீதம் என்ற அளவில் ஒவ்வொரு பெரிய இறக்கத்திலும் முதலீடு செய்வது நன்று.
ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்து விட்டு, பின்பு இறக்கத்தில் உங்களால் பங்குகளை வாங்க முடியாவிட்டால், அதற்கான வாய்ப்பு பின்னாளில் கிட்டாது.
-
பரஸ்பர நிதிகளில் பரிமாற்ற திட்டத்தை(STP) பயன்படுத்துங்கள்:
பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர், மொத்த முதலீட்டை பங்குகளில் மேற்கொள்ளாமல், அதனை லிக்விட்(Liquid Fund) அல்லது ரிஸ்க் குறைந்த கடன் பத்திர(Debt Funds) திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, தொடர் பரிமாற்ற திட்டத்தை(Systematic Transfer Plan) தேர்ந்தெடுத்து பங்குகளில் முதலீடு செய்யலாம்.
வார எஸ்.டி.பி. அல்லது மாத எஸ்.டி.பி. திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் சந்தை இறக்கத்தில் அமையும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம். எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்வோர் தங்கள் மாதாந்திர அல்லது வார முதலீட்டு தொகையை அடுத்த ஓரிரு வருடங்களுக்கு அதிகரித்து கொள்ளலாம். வேலையை இழந்தவர்கள் தாங்கள் ஏற்கனவே செய்த மாத முதலீட்டை தொடர முடியவில்லை எனில், கணக்கை முடித்து கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக தற்காலிகமாக மாத முதலீட்டை நிறுத்தி வைக்கலாம்.
-
ரொக்கமாக பணத்தை வைத்திருங்கள், மதிப்பீடுகள் மிக முக்கியம்:
சந்தை எப்போது வீழ்ச்சியடையும் என யாராலும் கணிக்க முடியாது. அதே வேளையில் பொருளாதாரம் சரியில்லாத போது , அதற்கான நகர்வுகள் சந்தையில் நிச்சயமாக நிகழும். குறுகிய காலத்தில் சந்தை வாக்கு இயந்திரமாகவும், நீண்டகாலத்தில் அது எடைபோடும் இயந்திரமாகவும் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சந்தை வீழ்ச்சியின் போது முதலீடு செய்ய ரொக்கமாக பணத்தை(Sitting with a Cash) கொண்டிருக்க வேண்டும். அவற்றுக்காக காத்திருக்காமல் முன்னரே திட்டமிடுங்கள். உலக பொருளாதார வீழ்ச்சியில் நல்ல நிறுவனங்களும் (கடனில்லா, பணவரத்து கொண்டிருக்கும் நிறுவனங்கள்), அதன் மதிப்பீடுகளும் தான் நிலைத்து நிற்கும். மற்றவை திவாலாகி விடும். எனவே பங்குகளை கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை