Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

டி.வி.எஸ். மோட்டார்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ.180 கோடி

டி.வி.எஸ். மோட்டார்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ.180 கோடி 

TVS Motors reported a net profit of Rs.180 Crore – Q2FY21

தமிழகத்தை தலைமையிடமாக கொண்ட இந்திய பன்னாட்டு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார்ஸ் கடந்த 1978ம் ஆண்டு துவங்கப்பட்டது. நாட்டின் 2வது மிகப்பெரிய வாகன ஏற்றுமதி நிறுவனமாக டி.வி.எஸ். மோட்டார்ஸ் உள்ளது. பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்நிறுவனம் 2019-20ம் நிதியாண்டு முடிவில் 18,849 கோடி ரூபாயை விற்பனையாகவும், 625 கோடி ரூபாயை நிகர லாபமாகவும் கொண்டிருந்தது.

சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்நிறுவனம் பல பிராண்டுகளை சந்தையில் உருவாக்கியுள்ளது. வியாழக்கிழமை(29-10-2020) அன்று நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) வெளியிட்டிருந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,254 கோடியாகவும், செலவினம் 5,010 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக 15 கோடி ரூபாயும், நிகர லாபம் 180 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20,100 கோடி ரூபாய். புத்தக மதிப்பு 69 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 3.50 ஆகவும் உள்ளது. நிறுவனத்தின் கடன் ரூ.11,350 கோடி, அதன் கடன்-பங்கு(Debt to Equity) தன்மை மோசமாக உள்ளது கவனிக்கத்தக்கது. வட்டி பாதுகாப்பு விகிதமும் 1.5 மடங்குகளில் இருப்பது போதுமானதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 57 சதவீதமாகவும், அவர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 13 சதவீதமாகவும், 10 வருடங்களில் 15 சதவீதமாகவும் இருந்துள்ளது. லாபம், கடந்த ஐந்து வருட காலத்தில் 18 சதவீதமாகவும், 10 வருடங்களில் 34 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE), ஐந்து வருட காலத்தில் 25 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.3,235 கோடி என சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கான பணவரத்து(Free Cash Flow) எதிர்மறையாக உள்ளது. இருப்பினும் நிலையான சொத்துக்களை வாங்குவதில் கணிசமான அளவு முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேஸ்ட்ரால் இந்தியா(Castrol India) காலாண்டு நிகர லாபம் ரூ.205 கோடி

கேஸ்ட்ரால் இந்தியா(Castrol India) காலாண்டு நிகர லாபம் ரூ.205 கோடி 

Castrol India reported a net profit of Rs.205 Crore – Q3CY21

லண்டனை தலைமையிடமாக கொண்ட பிரிட்டிஷ் பெட்ரோலிய(BP) நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் கேஸ்ட்ரால் இந்தியா. வாகன மற்றும் தொழிற்துறைக்கு தேவையான மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக(Lubricant Industry) சொல்லப்படுகிறது. நாட்டில் 70,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களை கொண்டிருக்கும் கேஸ்ட்ரால் இந்தியா கடந்த 1982ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10,800 கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 13 ரூபாய் மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதம் 237 மடங்குகளில் உள்ளது. கடனில்லா நிறுவனமாக(Debt Free) வலம் வரும் கேஸ்ட்ரால் இந்தியாவின் நிறுவனர்கள் பங்களிப்பு 51 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

இதன் கடந்த கால ஈவுத்தொகை விகிதம்(Dividend yield) 5 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. நேற்று வெளியிடப்பட்ட காலாண்டு முடிவில் இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 என சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 883 கோடி ரூபாயாகவும், செலவினம் 595 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதர வருமானமாக 12 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 205 கோடியாக உள்ளது.

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிகர லாபம் 68 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. முந்தைய வருடத்தின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2019ம் முழு ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 3,877 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 827 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 3 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 5 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாபம் கடந்த 5 வருடங்களில் 12 சதவீதமும், 10 வருட காலத்தில் 8 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 770 கோடியாக உள்ளது. பணவரத்தும்(Cash Flow) நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு மீண்டும் தள்ளிவைப்பு – 31, டிசம்பர் 2020

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு மீண்டும் தள்ளிவைப்பு – 31, டிசம்பர் 2020

Income Tax Return Filing last date extended to 31st December, 2020 – AY 2020-21

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கின் போது, வருமான வரி தாக்கல் செய்வதில் உள்ள சிக்கலை தவிர்க்கும் பொருட்டு, வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை கடந்த சில மாதங்களாக மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் தள்ளி வைக்கப்பட்டது. 2013-14ம் நிதியாண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்திருந்தும், மின்னணு முறையில் சரிபார்ப்பை(E verification) உறுதி செய்யாதவர்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் வரை மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில் 2018-19ம் நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு AY 2019-20) வருமானத்திற்கு வரி தாக்கல் செய்யாதவர்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, நவம்பர் 30, 2020 வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

தற்போது மேலும் ஒரு அறிவிப்பில், 2019-20ம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய்க்கான வரி தாக்கல் காலக்கெடு நடப்பு நவம்பர் மாதம் 30ம் தேதியாக இருந்த நிலையில் வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் (FY 2019-20) டிசம்பர் 31, 2020 வரை உள்ள காலக்கெடுவை பயன்படுத்தி கொள்ளலாம்.

தனிநபர் ஒருவர் முந்தைய ஆண்டுக்கான வருவாய்க்கு, வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும் மின்னணு முறையில் சரிபார்ப்பு செய்தால் மட்டுமே, அது முழுமையாக முடிவடைந்த வரி தாக்கலாக ஏற்றுக்கொள்ளப்படும். சொல்லப்பட்ட ஒரு நிதியாண்டில் உங்களுடைய மொத்த வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.

உங்கள் வருமானத்தில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்தை தாண்டிய நிலையில் வரி தாக்கல் செய்ய வேண்டும். இரு வகையான வருமானத்தை கொண்டிருப்பவர்களும்(Pensioner cum Employee) தங்களது வருவாய் சரிபார்த்து விட்டு, தேவைப்பட்டால் வரி தாக்கல் செய்வது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 830 கோடி

ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 830 கோடி 

Asian Paints reported a Net Profit of Rs. 830 Crore in Q2FY21

இந்திய பன்னாட்டு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் கடந்த 1942ம் வருடம் துவங்கப்பட்டது. பெயிண்ட் துறையில் உள்ள இந்நிறுவனம் பெயிண்ட் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகம், பூச்சு, வீட்டு அலங்காரம் போன்ற சேவைகளை அளித்து வருகிறது. நாட்டின் பெயிண்ட் சந்தையில் 50 சதவீதத்திற்கு மேல் தனது பங்காக வைத்திருக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம், பிரபல பெர்கர் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும் கணிசமான பங்குகளை வைத்துள்ளது.

நிறுவனர்கள் சார்பில் அதிக பங்குதாரர்களை வைத்திருக்கும் நிறுவனமாகவும் ஏசியன் பெயிண்ட்ஸ் காணப்படுகிறது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பில்லியன் டாலர் வருவாயை ஏற்படுத்தும் நிறுவனமாக ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.03 லட்சம் கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 53 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 12 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.10 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 30 மடங்குகளிலும் இருக்கிறது. 2019-20ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 20,211 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 2,705 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நடப்பு வாரத்தில் 2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,350 கோடியாகவும், செலவினம் ரூ.4,085 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 94 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட காலாண்டு முடிவில் நிகர லாபம் 830 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

இரண்டாம் காலாண்டு முடிவுக்கு பிறகு, இடைக்கால ஈவுத்தொகையாக(Interim Dividend), பங்கு ஒன்றுக்கு ரூ. 3.35 ஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவின் படி, இருப்புநிலை கையிருப்பு 10,934 கோடி ரூபாயாக இருந்துள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) சொல்லக்கூடிய நேர்மறை மதிப்பில் உள்ளது.

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 8 சதவீதமாகவும், 10 வருட காலத்தில் 12 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாபம் கடந்த ஐந்து வருடங்களில் 14 சதவீதமும், 10 வருட கால அளவில் 13 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 18 சதவீதம் ஏற்றமடைந்துள்ளது. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 28 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அமெரிக்க தேர்தல் 2020 – முதலீட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அமெரிக்க தேர்தல் 2020 – முதலீட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

US Presidential Election 2020 – Precautions on Investing

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த மார்ச் மாத வீழ்ச்சிக்கு பிறகு உலக பங்குச்சந்தை குறியீடுகள் பெருத்த ஏற்றத்தை பெற்றுள்ளன. அமெரிக்க சந்தை குறியீடுகள் வாழ்நாள் உச்சத்தில் வர்த்தகமானதும், மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு தான். அதே வேளையில் பங்குச்சந்தை ஏற்றம், உலக பொருளாதார வளர்ச்சியில் தென்படவில்லை.

பெரும்பாலான நாடுகள் இரண்டாம் அலை(Covid-19) காரணமாக  ஊரடங்குக்கு தயாராகி கொண்டிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போதைய நிலையில் உயிரிழப்புகள் குறைந்திருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவ மழை சற்று தாமதமாக வருவதால், வரும் நாட்களில் மழை மற்றும் குளிர் சார்ந்த தொற்றுக்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நாடுகளிடையே காணப்படும் வர்த்தக போர், எல்லை பதற்றம், கச்சா எண்ணெய் விலை மாற்றம், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை கடந்து பங்குச்சந்தைகள் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்க தேர்தல் நடைபெற இருப்பதால், வரும் வாரங்களில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் அதிக ஏற்ற-இறக்கத்துடன் காணப்படலாம்.

முதலீட்டாளராக ஒருவர் இது போன்ற ஏற்ற-இறக்க சமயங்களில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றலாம். இதன் மூலம் சந்தை இறக்கத்தில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியும்.

  • பொதுவாக பங்குச்சந்தை என்பது குறுகிய காலத்தில் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது. ஆனால் நீண்டகாலத்தில் செல்வத்தை அளிக்கும் நல்ல ஒரு முதலீட்டு சாதனமாக அமையும். வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் தேர்தல் என்றால், ஏற்ற-இறக்கத்திற்கு பஞ்சமிருக்காது. இதனை சார்ந்து தான் மற்ற நாடுகளின் பங்குச்சந்தை குறியீடுகள் நகர்வு பெறும்.
  •  சமீபத்திய சந்தை ஏற்றத்தில், அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யாத நிறுவன பங்குகளும் 100 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டுள்ளன. எனவே வரும் நாட்களில் சந்தை ஏற்ற-இறக்கம் அதிகம் தென்பட வாய்ப்புள்ளதால், நல்ல நிறுவன பங்குகளை தேர்ந்தெடுப்பது அவசியமானது. கடனில்லா நிறுவன பங்குகள், நல்ல நிர்வாக திறமை மற்றும் பொருளாதார மந்தநிலையை சமாளித்து தொழில் செய்யும் நிறுவனங்களில் கவனம் செலுத்துங்கள்.
  • ஒரு முறை முதலீடாக(Lumpsum investing) மேற்கொள்ளாமல், சந்தை இறக்கத்தில் நல்ல நிறுவன பங்குகள் இறங்கினால் மட்டும் சிறுகச்சிறுக முதலீடு செய்வது சிறந்தது. சந்தை பெருத்த வீழ்ச்சியை கண்டாலும், நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்த நல்ல நிறுவன பங்குகளில் மீண்டும் முதலீடு செய்வதற்கான பணத்தை கையிருப்பாக வைத்து கொள்ளுங்கள்.
  • பங்குச்சந்தை முதலீட்டில் அதிகம் சஞ்சலப்படும் காலமாக தற்போதைய நிலையை கூறலாம். தற்காலிக ஏற்றத்தை கண்டு, குறுகிய காலத்தில் லாபம் பார்க்கிறேன் என சூதாட வேண்டாம். பொருளாதார மந்தநிலை காலங்களில் போதுமான சேமிப்பும், நிம்மிதியான தூக்கமும் தான் தேவை. தூக்கத்தை இழக்கும் நிலையை தற்போதைய சந்தையில் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம்.
  • முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்தல்(Asset Allocation & Diversification) எப்போதும் அவசியமான ஒன்று. பங்கு முதலீட்டில் கொஞ்சம், கடன் பத்திரங்களில் சிறிய முதலீடு, தங்கம் மற்றும் சேமிப்பு கணக்கில் என உங்கள் முதலீட்டை பரவலாக்குவது நன்று.
  • வல்லரசு நாட்டின் தேர்தல் என கூறினாலும், அமெரிக்கா… அமெரிக்கா தான் ! அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அந்நாட்டின் கொள்கைகள் பொதுவாக மாறுபடுவதில்லை. வல்லரசு நாட்டிற்கே உரித்தான விஷயங்களை அமெரிக்கா கொண்டிருக்கும்.
  • என்ன தான் பங்குச்சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் சம்மந்தமில்லை என சிலர் கூறினாலும், உண்மையில் திருவாளர் பங்குச்சந்தையின்(Mr. Market) நெருங்கிய நண்பன் தான் பொருளாதாரம். சந்தை சில காலம் பொருளாதாரத்தை விட்டு பிரிந்து காணப்பட்டாலும், பின்னொரு நாட்களில் பொருளாதாரமும், சந்தையும் சந்தித்து கொண்டு பேசி கொள்ளும். அப்போது சந்தையின் சரியான நிலவரம் தெரிய கூடும்.

வேலைவாய்ப்பும், தொழில்களும் நன்றாக நடைபெற்று நாட்டின் பொருளாதாரமும் உயர்ந்தால் தானே நம் சந்தைக்கு மகிழ்ச்சி !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, எஸ்.பி.ஐ. வங்கி வட்டி விகிதங்கள் எப்படி ?

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, எஸ்.பி.ஐ. வங்கி வட்டி விகிதங்கள்  எப்படி ?

No Change in REPO Rate, Deposit Interest Rates in State Bank of India

கடந்த வாரம் நடைபெற்ற மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(MPC)  வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், முந்தைய 4 சதவீத ரெப்போ வட்டி விகிதமே தொடரும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், விளிம்பு நிலை விகிதம் (Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

எதிர்பாராத நிலையில் செல்லும் சில்லரை விலை பணவீக்கம், 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக (-9.5) இருக்கும் எனவும் மத்திய வங்கி சுட்டி காட்டியுள்ளது. அதே நேரத்தில் 2021-22ம் நிதியாண்டில் நல்லதொரு வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக சொல்லியுள்ளது.

ரெப்போ விகிதத்தில்(REPO rate) மாற்றம் எதுவுமில்லை என சொல்லப்பட்ட நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிலவும் வட்டி விகிதங்களை பார்ப்போம். ஏற்கனவே சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாக (ஆண்டுக்கு) உள்ளது.

சிறு சேமிப்பு கணக்கின் கீழ் 4 வழங்கப்படும் வட்டி 4 சதவீதமாகவும், பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் லிக்விட் பண்டுகளின் வட்டி விகிதம் 4 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் நிலையில், வங்கி சேமிப்பு கணக்கில் சொல்லப்பட்ட விகிதம் மிக குறைவே. இருப்பினும், பண பரிமாற்றத்திற்கு பெரும்பாலும் வங்கி சேமிப்பு கணக்கை சார்ந்து தான் இருக்க வேண்டியுள்ளது.

டெபாசிட் முறையில் 45 நாட்களுக்கு (7 Days to 45 Days) குறைவான காலத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 2.90 சதவீதமாக உள்ளது. மூத்த குடிமக்களாக இருப்பின், 3.40 சதவீதமாக இருக்கிறது. 46 நாட்கள் முதல் 180 நாட்களுக்கு குறைவான காலத்திற்கு 3.90 சதவீதமும், மூத்த குடிமக்கள் எனில் 4.40 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு குறைவான டெபாசிட் காலத்திற்கு 4.40 சதவீதமாக உள்ளது. இது மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதமாக கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மேலான, அதே வேளையில் இரண்டு வருடத்திற்கு குறைவான காலத்திற்கு 4.90 சதவீதமும், 2-3 வருடங்களுக்கு 5.10 சதவீதமும் மற்றும் 3 முதல் 5 வருடங்களுக்கான வட்டி விகிதம் 5.30 சதவீதமாகவும் உள்ளது.

ஸ்டேட் வங்கியில்(SBI) ஐந்து வருடம் முதல் 10 வருடங்கள்  வரையிலான காலத்திற்கு 5.40 சதவீதம் டெபாசிட் வட்டி விகிதமாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு இது 6.20 சதவீதமாக உள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில், டெபாசிட் தாரர்களுக்கு கிடைக்கப்பெறும் வட்டி போதுமானதாக இருப்பதில்லை. நடப்பில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வங்கி டெபாசிட் வட்டி விகிதம் சாதகமான அம்சமாக இல்லை. ஒரு வருடத்திற்கு மேலான டெபாசிட்களுக்கு, ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு மியூச்சுவல் பண்டுகளில் காணப்படும் கடன் சார்ந்து பண்டுகளில் முதலீடு செய்யும் போது, கணிசமான வட்டி வருவாயை பெறலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நிறுவன பங்குகளை திரும்பப்பெறும் விலை ரூ.3000, டிவிடெண்ட் 12 ரூபாய்

டி.சி.எஸ். நிறுவன பங்குகளை திரும்பப்பெறும் விலை ரூ.3000, டிவிடெண்ட் 12 ரூபாய் 

Buyback Price of Rs.3000 and Rs.12 Dividend per Share – TCS Q2FY21 Results

இந்திய தொழில்நுட்ப துறையில் முதன்மையாக விளங்கும் நிறுவனம், டாட்டா குழுமத்தை சேர்ந்த டி.சி.எஸ்.(TCS) நிறுவனம். இதன் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி. பில்லியன் டாலர் வருமானத்தை கொண்டிருக்கும் இந்நிறுவனம் சுமார் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்டு 46 நாடுகளில் தனது சேவையை அளித்து வருகிறது.

சந்தை மதிப்பிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் மிகப்பெரிய இந்திய நிறுவனமாக டி.சி.எஸ். உள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான டாட்டா சன்ஸ் 72 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) நான்கு சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 40,135 கோடி ரூபாயாகவும், செலவினம் 28,622 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 10,037 கோடியாகவும், இரண்டாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ.7,475 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.

முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டின் வருவாய் 5 சதவீதமும், நிகர லாபம் 6 சதவீதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் முந்தைய செப்டம்பர் (2019-20) காலாண்டுடன் ஒப்பிடும் போது, வருவாய் 3 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், நிகர லாப அடிப்படையில் 7 சதவீத வளர்ச்சி குறைந்துள்ளது.

நேற்றைய காலாண்டு முடிவு அறிவிப்பில் முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை திரும்பப்பெறும் முறையில்(Buyback of Shares) 16,000 கோடி ரூபாயை டி.சி.எஸ். நிறுவனம் செலவிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 5.33 கோடி பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.3000 என்ற விலையில் நிறுவனம் திரும்பப்பெற உள்ளது. இதன் மதிப்பு ரூ.16,000 கோடி எனவும், மொத்த பங்குகளில் இதன் பங்களிப்பு 1.42 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

டி.சி.எஸ். நிறுவன பங்களிப்பில், 72 சதவீத பங்குகள் நிறுவனர்களிடம் உள்ளது. 16 சதவீத பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமும், 8 சதவீத பங்குகள் உள்நாட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமும் உள்ளது. சிறு முதலீட்டாளர்களிடம்(Resident individual and others) வெறும் 3.3 சதவீத பங்குகள் தான் கையிருப்பாக உள்ளது. அதாவது 8.98 லட்சம் சிறு முதலீட்டாளர்களிடம் 12.5 கோடி பங்குகள் உள்ளது.

மேலும் இரண்டாம் காலாண்டுக்கான டிவிடெண்ட் தொகையையும் நிறுவனம் அறிவித்துள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.12 என ஈவுத்தொகையை சொல்லியுள்ளது. அதற்கான பதிவு நாள்: அக்டோபர் 15,2020.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – அக்டோபர் 2020

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – அக்டோபர் 2020

Small Savings Scheme interest rate for the Period – October to December 2020

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு அறிவித்து வருகிறது. பரஸ்பர நிதி திட்டங்கள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றின் முதலீடு அதிகரித்து வரும் நிலையில், இன்றளவும் நம் நாட்டில் சிறு சேமிப்புக்கான மதிப்பு குறையவில்லை எனலாம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அஞ்சலக மற்றும் வங்கி சிறு சேமிப்பு திட்டங்கள் ஒரு வரப்பிரசாதமாக உள்ளன.

சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதங்கள் வங்கியில் குறைந்து வரும் நிலையில், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் அடிப்படை சேமிப்பு கணக்குக்கு 4 சதவீதம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிறு சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் செல்வ மகள் திட்டத்திற்கு(Sukanya Samriddhi), மற்ற திட்டங்களை காட்டிலும் வட்டி விகிதம் சற்று அதிகமாக காணப்படும்.

நடப்பு 2020-21ம் நிதியாண்டின் தொடக்கத்தில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தது. ஜனவரி-மார்ச் 2020 காலாண்டில் வழங்கப்பட்டிருந்த வட்டி விகிதத்தை விட குறைவான வட்டி விகிதமே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் காணப்பட்டது. இது கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும் மாற்றமின்றி தொடர்ந்தது.

அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகித அறிக்கையை கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்குக்கு 4 சதவீதம் வட்டி எனவும், ஒரு வருட, இரண்டு வருட மற்றும் மூன்று வருட வைப்பு தொகைக்கான(Time Deposit) வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வருட டெபாசிட் தொகைக்கு 6.7 சதவீதமும், ஐந்து வருட தொடர் வைப்பு (RD) தொகைக்கு 5.80 சதவீதமும் சொல்லப்பட்டுள்ளது.

small saving scheme interest rate oct 2020

மூத்த குடிமக்களுக்கான(Senior Citizen Savings Scheme) 5 வருட திட்டத்தில் எந்த மாற்றமுமின்றி 7.40 சதவீதமும், 5 வருட மாத வருவாய்(MIS) திட்டத்தில் 6.6 சதவீதமுமாக உள்ளது. வரி சலுகை அளிக்கும் தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான வட்டி விகிதம் 6.80 சதவீதம். இதன் முதிர்வு காலம் ஐந்து வருடமாகும்.

பொது வருங்கால வைப்பு (PPF) நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.10 சதவீதம் மற்றும் கிசான் விகாஸ் பத்திர(KVP) வட்டி 6.90 சதவீதம். பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக 7.60 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட வட்டி விகிதம் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையுள்ள காலத்திற்கு பொருந்தும். நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6 சதவீதமாக இருக்கும் நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் நீண்ட கால இலக்குகளுக்கு பயன் தராது. சேமிப்பு பாதுகாப்பாக இருப்பது அவசியம். எனினும் பணவீக்கத்தை தாண்டிய வருவாய் ஈட்டவில்லை எனில், பிற்காலத்தில் பெறப்படும் முதிர்வு தொகையால் தேவைக்கு பெருமளவில் பயன்தராமல் போகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி சரிபார்ப்பு தளர்வு – செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவு

வருமான வரி சரிபார்ப்பு தளர்வு – செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவு 

One time relaxation for verification of ITR – Deadline by 30 September, 2020

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 2019-20ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு வரி தாக்கல்(AY 2020-21) செய்ய வேண்டிய காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது. பொதுவாக இதற்கான காலக்கெடு ஜூலை 31ம் தேதி வரை இருக்கும் நிலையில், இம்முறை செப்டம்பர் 30 வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி வரம்பில் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக உள்ள வருமானத்திற்கு வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், ஆண்டு வருவாய் (நிதியாண்டு) ரூ. 2.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் வரி தாக்கல் செய்வது அவசியமாகும். தவறும் போது, அதற்கான அபராத கட்டணம் விதிக்கப்படும்.

மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான (Assessment Year) 2015-16, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய வருடங்களுக்கான வருமான வரி தாக்கலை ஒருவர் செய்திருந்தாலும், அதனை சரி பார்த்தல்(Verification of ITR) மூலம் நிறைவு செய்வதற்கு, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை சலுகை காலம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் ஒருவர், அதனை Verification of ITR – EVC என சொல்லப்படும் சரிபார்ப்பு முறையை நிறைவு செய்வது அவசியம். இதனை செய்தால் மட்டுமே, அது முழுமை பெற்றதாக வருமான வரி அலுவலகத்தால் கருதப்படும்.

அதாவது 2014-15ம் நிதியாண்டு(AY 2015-16) முதல் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்திருந்தும், சரிபார்ப்பு செய்யாத நிலையில் தற்போது ஒரு முறை சலுகையாக செப்டம்பர் 30 வரை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. வரி தாக்கல் சரிபார்ப்பு செய்திருந்தால் மட்டுமே, நீங்கள் கோரிக்கை விடுத்த தொகை(Refund amount) திரும்ப கிடைக்கப்பெறும்.

சரிபார்ப்பு முறையை நிறைவு செய்ய கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தலாம்:

வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் உங்கள் பயனர்(Login Credentials) விவரங்களை கொண்டு உள்நுழைந்த பிறகு,

  • ஆதார் எண்ணுடன் இணைத்திருக்கும் கைபேசி எண்ணை பயன்படுத்தி OTP முறையில் சரிபார்ப்பு முறையை நிறைவு செய்யலாம். 
  • உங்களது வங்கி கணக்கு மூலம் (Net banking)
  • EVC முறை மூலம்
  • வருமான வரி அலுவலகத்திற்கு தபால் மூலம்(By Post), நீங்கள் தாக்கல் செய்த ஐ.டி.ஆர். படிவத்தை அனுப்பலாம்.

நம் நாட்டில் இருவகையான வரி விதிக்கப்படுகிறது. தனிநபர் வருமானத்திற்கான வரி, நேரடி வரி பிரிவில்(Direct Tax) உள்ளது. நீங்கள் ஈட்டிய வருமானத்திற்கு நேரடியாக அரசுக்கு வரி செலுத்தும் நிலையில், அவையனைத்தும் நேரடி வரி பிரிவில் வரும். மற்றவை மறைமுக வரி பிரிவில் உள்ளவை. உதாரணமாக நீங்கள் நுகரும் பொருட்கள் மற்றும் சேவை மூலம் வருபவை மறைமுக வரிகளாகும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

   

பொதுத்துறை வங்கிகளில் சுமார் 20,000 கோடி ரூபாய் மோசடி

பொதுத்துறை வங்கிகளில் சுமார் 20,000 கோடி ரூபாய் மோசடி 

About 20K Crore rupees Fraud in Public Sector Banks – RTI query

வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களில் அவ்வப்போது மோசடிகள் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19,964 கோடி ரூபாய் அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட 19,964 கோடி ரூபாய் முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காணப்பட்ட மோசடி எனவும், இது தனிநபர் வாயிலாக வங்கிகளில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வங்கிகளில் ஏற்பட்ட அனைத்து மோசடி சார்ந்த தகவலை இது தெரிவிக்கவில்லை.

2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொதுத்துறை வங்கிகளில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2,867 மற்றும் அதன் மூலம் 19,964 கோடி ரூபாய் அளவில்  மோசடி நடந்துள்ளது. எஸ்.பி.ஐ.(SBI) வங்கியில் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை 2,050. அதன் மதிப்பு சுமார் 2,300 கோடி ரூபாய்.

மோசடி மதிப்பளவில், பேங்க் ஆப் இந்தியாவில் 5,124 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. ஆனால் இந்த மதிப்பு வெறும் 47 வழக்குகளில் வந்துள்ளது. மோசடியில் சிக்கி தவித்த பஞ்சாப் தேசிய வங்கியில்(PNB) இம்முறை 240 வழக்குகளும், 270 கோடி ரூபாய் அளவில் மோசடியும் நடந்துள்ளது. இது கடந்த காலத்தை விட குறைவான மதிப்பாக சொல்லப்படுகிறது.

முதல் காலாண்டில் நடைபெற்றிருந்த மோசடியில்(Fraud in Banks) 12 பொதுத்துறை வங்கிகளின் தகவல்கள், ஆர்.டி.ஐ.(RTI act) சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தகவல் வங்கிகளில் ஏற்பட்ட மொத்த மோசடிகள் பற்றியோ அல்லது கடன் பெற்றவர்களின் நிலை பற்றியோ சொல்லவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com